Tuesday, January 27, 2026
Homeஇதழ்கள்2025 இதழ்கள்கண்டேன் சீதையை

கண்டேன் சீதையை

நாகேந்திர காசி
தமிழில் : ஸ்ரீநிவாஸ் தெப்பல

நேரம் காலை பத்துமணி ஆகின்றது. தினம்தோறும் சுமார் இரண்டாயிரம் வெளிப்புற நோயாளிகளுடன் காக்கிநாடா அரசு மருத்துவமனை நெரிசலாக இருக்கும். வெளிப்புற நோயாளிகளின் பகுதியை ஒட்டி இருக்கின்ற கட்டிடத்தின் இரண்டாவது தளத்தில்தான் பயோ மெடிக்கல் பிரிவு உள்ளது. பழுதுபார்க்க வந்திருக்கும் இரத்த அழுத்த இயந்திரங்கள், சேதமடைந்த நெபுலைசர்கள், மூலைமுடுக்குகளில் துருப்பிடித்த ஆக்சிஜன் சிலிண்டர்கள், சில பாகங்கள் உதிர்ந்து செல்லப்பட்ட ECG இயந்திரங்கள் என அந்த அறை ஒரு பெரிய பழுதுபார்க்கும் இடம் போல் காட்சியளித்தது. வெங்கட் அந்த அறைக்கு வந்து, மின்விசிறியைப் போட்டு, மேசை மீது வைத்திருந்த இரண்டு மெமோக்களை எடுத்துக்கொண்டு உட்கார்ந்தான்.

எமர்ஜென்சி ஆபரேஷன் தியேட்டரில் ஒன்று பெட் மூமெண்ட் பொறுத்தவில்லை என்றும், மற்றொன்று ஆக்ஸிஜன் முகமூடிகள் இண்டெண்ட் வைக்கவில்லை என்றும், பார்த்து இரண்டையும் வெறுப்பாக மேசையின் மீது வீசி எறிந்தான்.

சமீபகாலமாக, துயரப்படுபவர்களை கண்டாலும், துயரத்தை அளவிடும் இந்த உபகரணங்களைக் கண்டாலும் வெறுப்பு மேலும் அதிகரிக்கின்றது. ஏதோ இனம்புரியாத, வாட்டி வதைக்கின்ற ஒரு வலி. எதையும் சாதிக்காத கோபம். மிகவும் பொலிவு இழந்து நகர்கின்ற பொழுதுகள். எப்பொழுதும் நோய்களையும், அழுகைகளையும், துயரங்களையும் கண்டு அவன் வெறுப்படைந்தான். விஷக் காய்ச்சலை விடவும், கண்டுபிடிக்கவே முடியாத நோயை விடவும் நாம் நினைத்தபடி வாழ முடியாமல் போவதே பெரிய தண்டனை என்ற நம்பிக்கையில் நிலைபெற்று இருந்தான். 

இரத்த்ததை டயாலிசிஸ் செய்வது போல மனித எண்ணங்களையும், மனதையும் சுத்தப்படுத்தி, பழைய காயங்களையும், கற்பனை செய்து வைத்திருந்த விரகத்தையும் நீக்கி, மீண்டும் மூளைக்குள் செலுத்தும் உபகரணம் ஏதும் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்துக்கொண்டு இருப்பான்.

வெங்கட்டிற்கு நாற்பது வயது.

திருமணமாகி பன்னிரண்டு ஆண்டுகள் ஆகின்றன. தான் காதலித்த பெண்ணை திருமணம் செய்திருந்தால் தன் வாழ்க்கையே வேறுவிதமாக இருந்திருக்கக் கூடும் என்று நேற்று முந்தினம் தன் மகளின் பத்தாவது பிறந்த நாளன்று இரவு சட்டென் நினைவுக்கு வந்தது.

இரத்த அழுத்த இயந்திரத்தை பழுது பார்த்துகொண்டு இருந்த வெங்கட்டிடம் நர்ஸ் வந்து நின்று, “முடிஞ்சுதா சார்?” என்று கேட்டாள். அவளது போனில் ஏதோ மெசேஜை சரி பார்த்தவாறு.

வால்வை சரிசெய்து இயந்திரத்தை அவளிடம் கொடுத்துவிட்டு, “OP கிட்ட கூட்டம் இருக்கா?” என்று கேட்டான்.

சியாமளா சிரித்துக்கொண்டே, “எங்கிருந்துதான் வந்துடுறாங்களோ சார், இந்த மக்கள் திருவிழக்கு வர மாறி  கூடிட்டாங்க” என்று இயந்திரத்தை எடுத்துக் கொண்டு கிளம்பினாள்.

டாக்டரிடம் ஒரு இண்டெண்ட் எழுத கீழே செல்லுகையில்,

இன்டர்ன்ஷிப் செய்கின்ற ரங்கராய மருத்துவக் கல்லூரி பெண்கள் திடிரென எதிரே வந்தனர். ஜெனரல் ஓபிக்கு அருகில் நிற்கின்ற வரிசை, மருத்துவமனையின் தூண்களைச் சுற்றி இருக்கின்ற மலைப்பாம்பு போல் உள்ளது. மலைப்பாம்பு தலையை கடந்து செல்லுகையில், ​​உலர்ந்த பனையோலை நிற புடவையை அணிந்திருந்த ஒரு பெண்ணைக் கண்டு சட்டென நின்றான்.

சீதா.

குரஜாபலங்க சீதா.

அது “சீதா” தானா என மூன்று ரீடிங்குகளை எடுத்து சராசரியை அளவிட்டு உறுதி செய்துகொண்டான். கர்ப்பமாக இருக்கக் கூடுமோ என்று வயிற்றைப் பார்த்து உறுதி செய்துகொண்டான். முகம் கொஞ்சம் பொலிவு இழந்து, சோர்வாக தெரிந்தது. சாதாரண செருப்புகள், ஒரு கையில் கோகோ கோலாவை பயன்படுத்திய பாட்டிலில் குடிநீர், மறு கையில் கோப்பை வைத்துக்கொண்டு, வரிசையை நோக்கினாள். கழுத்தில் நிறம் மங்கிய மஞ்சள் சரடு மட்டுமே இருந்தது. அதன் விளிம்பில் மங்கள சூத்திரம் இருக்காது, வெறும் மஞ்சள் கொம்பு மட்டும் தான் இருக்குமென அந்த பெண்ணை யார் கண்டாலும் உடனே கண்டுபிடித்துவிடுவார்கள்.

இடைநிலை பள்ளி படிக்கும் நாட்களில் சீதாவைப் பார்க்க இதைவிடப் பெரிதாகவே வரிசை இருக்கும். அந்த வரிசையில் வெங்கட் தான் முன்னால் இருப்பான்.

சீதா பார்த்துவிடுவாளோ என ஒருபுறம், அவள் பார்க்க வேண்டுமென மற்றொருபுறம் மனம் வாட்டி எடுத்தது.

சீதா அவனைப் பார்த்தாள். ஒரு கணம் அவள் பார்த்தாள், ஒரு நோயைப் பார்த்தவாறு.

வெங்கட் எதிர்பார்த்த ஆச்சரியமும், மகிழ்ச்சியும் அவள் முகத்தில் எங்கேயும் தென்படவில்லை. ‘எனக்குத் தெரியும் உன்னை’ என்கின்ற சிறு புன்னகையைத் தவிர. தன் வாழ்வில் அதிக டிராமா எதிர்பார்த்திருந்த வெங்கட்க்கு சட்டென அவமானம் நிகழ்ந்தது.

“நல்லா இருக்கீயா?” எனக் கேட்டு அழைப்பில் பெரும்போக்குடன் நடந்துகொண்டாள் தன்னை காட்டிலும் வயதில் சிறியவளான சீதா.

தலை அசைத்து ” நீ எப்படி இருக்க? ரொம்ப நாளாச்சு! இப்ப எங்க இருக்கீங்க? ஒங்க வீட்டுக்காரர் கூட வந்திருக்காரா? ” என பதிலுக்காக காத்திருக்காமல் கேட்டான்.

“ஆ…வந்திருக்காரு. அதோ அங்க படிக்கட்டு மேல உக்காந்துட்டு இருக்காரு. “

அவன் அங்கு பார்த்தான். புச்சிபாபு படிக்கட்டுகளின் மீது அமர்ந்து, இரு கைகளையும் கக்கத்தில் வைத்துக் கொண்டு வெறித்து அங்கும் இங்கும் பார்த்துக்கொண்டே இருந்தான். அழுக்கு சட்டைக்கு பொருத்தமாக இருக்கின்றது அவனது தாடி. தூரத்திலிருந்தே கழுத்திலும், முகத்திலும் தெரிகின்ற காயங்கள்.

“என்னாச்சு?” எனக் கேட்டான்.

“நான் செஞ்ச தப்பு. ஆமா நீ என்ன இங்க?” என்றாள்.

“நான் இங்கு சேர்ந்து ரெண்டு வருஷம் கிட்ட ஆகுது, அதோட அர்த்தம் நோயாளின்னுக் கிடையாது” என ஏதோ கேளிக்கையாக சொல்ல முயன்றான்.

“சரி, ஒரு நிமிஷம்” என்று சென்று முன் அறையில் இருக்கின்ற ஹெட் நர்சை அழைத்து வந்தான்.

“சீதா! இவங்க எல்லாமே பார்த்துப்பாங்க. இவங்கள கூப்பிட்டு போங்க” என்று சொன்னான். சீதா இரு கைகளுடனும் அவளது கணவனை எழுப்ப முற்படுகையில் அவனும் உதவிக்கு சென்றான். புச்சிபாபு முகத்திலும், மார்பு பகுதியிலும் வெள்ளை மச்சங்கள் கொப்பளித்து மேல் எழுந்த படி தெரிந்தன. முழங்கை அடிபாகத்தில், கொஞ்சம் நீர்த்துப்போய் கொப்பளித்து, சீழ் போல் வடிகின்றது.

புச்சிபாபு வெங்கட்டைக் கண்டு சன்னமாக புன்னகைத்தான், அவ்வளவு துயரத்திலேயும். இந்த வலி ஒன்றும் பெரிய வலி கிடையாது என்பது போல் சிரித்தபடி செல்கின்ற புச்சிபாபுவைக் கண்டால் அவனது புன்னகைக்கு மருத்துவமனையில் இருக்கின்ற அனைத்து நோயாளிகளின் நோய்களையும் குணமடையச் செய்யும் வல்லமை இருப்பதாக தோன்றியது. பொதுவாக மருத்துவமனைகளில் ஒரு புன்னகையைப் பார்ப்பது என்பது வெறும் டெலிவரி வார்டுகளில் ஆண் பிள்ளை பிறக்கின்ற போது மட்டும் தான் நிகழும்.

வெங்கட் தனது அறைக்குள் வந்து அமர்ந்தான். மனம் சோர்ந்து போனது.

‘சீதா கண்ணில் படாமல் இருந்திருந்தால் நல்லா இருந்திருக்கும்’ என்று நினைத்தான்.

சீதா எதுவும் பேசாமல் ஏதோ, ஒரு புதிய நபரைப் பார்த்தவாறு, முகம் சுளிச்சுக்கிட்டாலும் நல்லா இருந்திருக்கும் போல.

இவை இரண்டும் நடைபெறாமல் இருந்ததினால் மகிழ்ந்தான்.

எப்போதோ இருபது வருடங்களுக்கு முன்பு நிகழ்ந்த அறிமுகம். சீதாவினுடைய ஊர் வெங்கட்டின் பாட்டியின் ஊர் தான். எப்போதாவது ஊருக்கு செல்லும் போது ஒருமுறை அவளைப் பார்ப்பான். அதன்பின் அவ்வப்போது செல்வான். அந்த சுற்றுப்புறத்து ஊர்களில் பேரழகி என்பதால் அந்த ஊரில் இளசுகளின் போட்டியைத் தாள முடியவில்லை. அதன்பின் இடைநிலை பள்ளியில் கண்டான். அவன் இரண்டு ஆண்டுகள் பின் தொடர்ந்து காதலித்தான், பின்பு யாரையோ மனம் முடிக்க இருப்பதாக தெரிந்து, உன்னை விரும்புகிறேன் என்று சொல்லாமலேயே நிறுத்திக் கொண்டான். அதன்பின்னர் ஊரில் யாருடனோ நெருக்கமாக திரிகிறாள் எனத் தெரிந்தது. சில ஆண்டுகளுக்கு பின் வேறொருவரை திருமணம் செய்துகொண்டாள் என்றும், அவன் மனவளர்ச்சி இல்லாதவன் என்றும், அவனை அழைத்து எங்கேயோ தூரமாக சென்றுவிட்டதாகவும் தகவல் தெரிந்தது.

அதன்பின், எப்போதும் சீதாவைப் பற்றிய விஷயங்களை தெரிந்து கொள்ளவில்லை. பாட்டி இறந்தபின் அவன் அந்த ஊருக்கு செல்லவில்லை.

மேசையின் மீது சீனாவில் இருந்து கொண்டு வரபட்ட எந்திரத்தின் கையேடு இருந்தது. மேலே ஆங்கிலம், அதன் கீழ் சீன மொழியில் இருந்த எழுத்துகள் அவன் மனம் போலவே எதுவும் புரியாத வண்ணமாக இருந்தது. மறுபடியும் வெளிப்புற நோயாளிகளின் பிரிவிற்கு சென்று சீதாவைப் பார்த்து வரலாம் என்று நினைத்து, திடிரென அந்த முயற்சியை கைவிட்டான்.

ஒரு மணி நேரம் கழித்து, சீதா வெங்கட்டின் அறைக்கு அருகில் வந்து நின்றாள்.

எழுந்து அந்தப் பக்கமாக பார்த்து “ஒன் கணவர் எங்கே?” என்று கேட்டான்.

“நர்ஸ் ஏதோ இன்ஜெக்ஷன் கொடுத்தாங்க. மயக்கமா இருக்குன்னு அங்கேயே படிக்கட்டு கிட்ட ஒக்காந்துட்டாரு” என்றாள்.

வெங்கட் வெளியே வந்து, பொது மருத்துவ வார்டில் வேலை செய்கின்ற பாய்க்கு கால் செய்து, ஒரு படுக்கையை ஏற்பாடு செய்யச் சொல்லி, அப்படியே உணவகத்திற்கு சென்று பால், ரொட்டியை எடுத்து வருமாறு அனுப்பினான்.

புச்சிபாபுவை பொது மருத்துவ வார்டுக்கு அழைத்துச் சென்று படுக்கையில் கிடத்தினான். அதற்குள் பாய் ரொட்டியையும், பாலையும் வாங்கிக் கொண்டு வந்தான். பாலை குடித்து புச்சிபாபு தூங்கினான்.

“சார்! ஓபி க்கு பெட் எதுக்கு குடுத்திங்கன்னு கேட்பாரு சார் ட்யூட்டி டாக்டர்” என்று முணுமுணுத்தான் பாய்.

“நான் பார்த்துக்கிறேன். ஆமா, டூட்டி டாக்டர் யாரு?” என விசாரித்து போன் செய்து விஷயத்தை சொன்னான்.

“ஹாஸ்பிடல்ல தெரிஞ்சவங்க யாராவது இருந்தா, நிறைய நோய் குணமாயிடும்மில்லே” என்றாள் சீதா. சீதாவின் கண்களில் நன்றி உணர்வை வெங்கட் வேண்டுமென்று தான் பார்க்கவில்லை. புச்சிபாபு தலையின் கீழ் பைலை வைத்து, கட்டிலின் கீழ் தண்ணீர் போத்தலை வைத்தாள்.

வெங்கட் சீதாவைக் கண்டு “ரொம்ப சோர்வா தெரியுற. அதோ அங்க டாய்லெட் இருக்கு, போயிட்டு முகத்த அலம்பிகிட்டு வா, டீ குடிக்கலாம்” என்றான். சீதாவும் சென்றாள்.

புச்சிபாபு தலைமாட்டில் இருக்கின்ற பைலை எடுத்துக்கொண்டு பார்த்தான் வெங்கட். மண் எண்ணெயை ஊற்றிக் கொண்டு தீ பற்றவைத்து கொண்டதாலான காயங்கள். ஒவ்வொரு இரண்டு வாரங்களுக்கும் கன்சல்டேஷன் எழுதி இருக்கின்றது.

புடவை முந்தானையுடன் முகத்தை துடைத்துக் கொண்டு வந்து நின்றாள் சீதா.

மெட்டர்னிட்டி பிளாக்கிற்கு செல்லும் வழியில் இருக்கின்ற கேண்டீனுக்கு அவளை அழைத்து சென்றான் வெங்கட். ஒரு முட்டை தோசையும், இரண்டு காபியையும் சொன்னான்.

சீதா வேக வேகமாக சாப்பிட்டாள். கொஞ்சம் நிலைப்பற்றபின் “இப்ப சொல்லு, எங்க இருக்கீங்க? ஊர விட்டு எங்கேயோ போயிட்டீங்கன்னு தகவல் தெரிஞ்சது” எனக் கேட்டான், காபி கப்பை சுழற்றியவாறு,

“நிறைய விஷயம் நடந்துருச்சு” என்றாள் காபியின் சூடை ஆற்றியவாறு.

“உன் பின்னாடி திரியறப்ப என்ன கண்டுப்பியா…இன்னும் சொல்லப்போனா, நான் நினைவிருக்கேனா? ” 

“என்னோட நிலைமையை பார்த்து, ஒனக்கு இந்த விஷயமா கேட்க தோணுச்சு? “

வெங்கட் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் வெட்கப்பட்டான்.

“சீதா! உங்க கணவர் எதுக்கு மண்ணெண்ணெய ஊத்திக்கிட்டு தீக்குளிச்சாரு” என்று கேட்டான்.

சீதா ஒரு நொடி எதுவும் பேசவில்லை.

காபியை ஒரு மிடறிட்டு,  “என்ன? எல்லாரும் போலவும் நீயும் தயவு காட்டி… ” எனப் பேசுவதை நிறுத்தினாள்.

“நீ சந்திச்ச ஆம்பளைங்க எல்லாரும் வேணும்னா அப்படிப்பட்டவங்களா இருந்து இருக்கலாம். ஆனா, பாக்குற எல்லா பொம்பளைங்க கிட்டயும் இப்படி கேக்க மாட்டேன். சின்ன வயசுல இருந்து உன்னை எனக்கு தெரியும். அதுக்கப்புறம் காலேஜ்ல. அது உனக்குமே தெரியும். ரவியோட, உனக்கு இருக்கிற காதல பத்தி தெரியும். நீ அவன எவ்ளோ காதலிச்சி இருக்கேன்னு தெரியும். இப்ப புதுசா உன் மேல இரக்கம் காட்டி, உன் கிட்ட என்ன சாதிக்க வேண்டி இருக்கு?” என்றான்.

சீதா கண்களைத் துடைத்துக்கொண்டாள்.

“ரவிய காதலிச்சேன். ஒண்ணா சேர்ந்து சுத்தனோம். அந்த விஷயம் எங்க வீட்ல தெரிஞ்ச பெறவு, எங்க அப்பா போயி அவங்களோட சம்பந்தம் பேசப்போனா, திட்டி அனுப்பிட்டாங்க. அதுக்கப்புறம் ரவி கூட கல்யாணம் பண்ணிக்க போறான்னு தெரிஞ்சது. எங்க அப்பாவுக்கு அவமானமா தோணுச்சு, அதனால ஏதாவது ஒரு சம்பந்தத்த பேசி முடிச்சிடலாம்ன்னு சுத்துகையில, ரவி அவங்க பெரியப்பா, பெரியம்மா எங்க வீட்டுக்கு வந்து, எங்க அப்பாவ கெஞ்சி, வரதட்சணை எதுவும் வேணாம்ன்னு, ஒத்துக்க வெச்ச்சு புச்சிபாபுவை கல்யாணம் கட்டிக்க சொல்லி கேட்டாங்க. 

வீட்ல வரதட்சணை கொடுக்க முடியாத சூழ்நிலை. அவங்களுது ரொம்ப பணக்கார குடும்பம். பத்து ஏக்கர் நிலம், பெரிய மாட்டுப்பண்ணை. ஆனா, பெரிய பையன் வெகுளி, என்ன ஆவானோ, ஏது ஆவானோன்னு மனவேதனை அவங்கள வாட்டி வதக்கிடுச்சு. கல்யாணம் செயலாம்னாலும் எந்த சம்பந்தமும் வரல. சின்ன பையன் சொத்து முழுக்க எனக்குதான்னு இருந்தான். அவனும், ரவியும் நல்ல நண்பங்க. எங்க அப்பா ஒன்னு ரெண்டு சம்பந்தம் கொண்டு வந்தாலும் ரவி கெடுத்துட்டான்.

என்னோட விஷயம் ஊருக்குள்ள தெரிஞ்சி, யாரும் வரன் கிடைக்காம, வேற வழி இல்லாம எங்க அப்பா புச்சிபாபுக்கு, என்னய கட்டிக் கொடுக்க சம்மதிச்சாரு. என் பின்னாடி தங்கச்சி வேற இருக்கா. நான் டைட் எழுதினாலும் சீட்டு கிடைக்கல. எனக்கும் வேற வழி தெரியல. நான் வேற எதுவும் பேசாம கல்யாணம் கட்டிகிட்டேன். ரவிதும், எனதும் பக்கத்து பக்கத்து வீடுதான். காலையில எழுந்தா அந்த அயோக்கியனோட முகத்தை பார்க்க வேண்டிவரும். கல்யாணம் கட்டிக்கிட்டாலும் அவன் என்னை விடறதாவே இல்ல. அந்த வேலை, இந்த வேலைன்னு எங்க பெரியப்பா வீட்டுக்கு அடிக்கடி வருவான். புச்சிபாபு அப்படியே அது எல்லாத்தயும் பாத்துட்டு இருப்பான்.

புச்சிபாபு வெகுளி, உலகம் தெரியாதவன். வீட்டு வேலை, வயல் வேல நல்லாவே செய்வான், ஆனால் ,பேச்சு மட்டும் சரியா வராது. நடக்கும்போது சரியா அடியெடுத்து வைக்க முடியாது. நடுநடுவுல கையில நடுக்கம் வேற. பார்வையாலயே நிறைய விஷயம் பேசுவான். கல்யாணமான புதுசுல அழுவேன். அதப் பாத்து, என்ன ஆறுதல் படுத்த செம்பு நிறைய தண்ணி கொண்டு வந்து கொடுப்பான். என் பின்னாடி நிறைய பேர் சுத்துனாங்க. என்னய பயன்படுத்திக்கலாம்னு பார்த்தாங்க. ஆனா, நான் யாரையும் விரும்பல. எல்லோரோட பார்வையும் என் கழுத்துக்குக் கீழே நின்னுடும். புச்சிபாபு என்னய உயிருக்கு உயிரா காதலிச்சான். ஒரே கட்டில ஒன்னா படுத்தாலும் எனக்கு மட்டும்தான் தெரியும். ஒரு நிமிஷம் நான் கண்ணுல படலேன்னாலும் பைத்தியம் பிடிச்ச மாதிரி கூச்சல் போடுவான். கல்யாணத்துக்கு அப்புறம் எல்லாரும் பைத்தியம் ஆயிட்டான்னு சொன்னாங்க.

‘தேடி தேடி இந்த வெகுளியயா கட்டிக் கொடுத்தான் ஒங்க அப்பன்’ ன்னு சில பேரு, இப்படிப்பட்ட அழகிய வெச்சுக்கிட்டு என்ன செய்வான்னு சில பேரு என் பின்னாடி அரசல் புரசலா பேசிப்பாங்க. நான் அது எதுவும் கண்டுக்கல.

ஒரு நாளு புச்சிபாபு நாற்று பத்திக்கு தண்ணி பாய்ச்சுறதுக்கு வயலுக்கு போனான். வீட்ல யாருமே இல்ல.

ரவி முழுசா குடுச்சுபுட்டு, நேரா என்னோட அறைக்குள்ள வந்து, என்னோட கையை புடிச்சான். அவனுக்கு நான் அண்ணி ஆவேன். கூச்சல் போடும் யோசனை வரல. எனக்கு கல்யாணம் ஆனாலும், நீ என் கூட தான் இருக்கணும். எங்க அண்ணன் சுத்த வெகுளி. கட்டில்ல அவன் ஒன்னும் செய்ய மாட்டான்.” ன்னு பேசயில அழுதுகிட்டு தடுக்க முயற்சி செஞ்சேன்.

நான் ரவியை வெளியே தள்ளும் நேரத்துல புச்சிபாபு வாசல்ல நின்னு அதை பாத்துட்டான்.

என்ன நினைச்சானோ என்னவோ, நேரா அடுப்பு கிட்ட போயி கேன்ல இருந்த மண்ணெண்ணெய் எடுத்துக்கிட்டு, மேலே திணிச்சுக்கிட்டு தீக்குளிச்சான். வீட்ல பெரிய சண்டை நடந்தது. புச்சிபாபு தம்பி என்னையும், அவங்க அப்பா அம்மாவையும் திட்டித் தீர்த்தான். அந்த ஊரிலயே இருந்தா, ரவி கிட்ட இருந்து தப்பிச்சுக்கிறது கஷ்டம். புச்சிபாபுவையும் உயிரோட விடமாட்டான்னு அவன அழைச்சுக்கிட்டு, எங்கேயாவது போய்டலாம்ன்னு முடிவெடுத்தேன்.

‘துனி’ இங்குர ஊர்ல எங்க அப்பாக்கு தெரிஞ்சவங்க கிட்ட மாந்தோப்புல காவல் வேலை இருக்குன்னு அழைச்சிட்டு வந்துட்டேன். நான் செஞ்ச தப்புக்கு அவன் தண்டனை அனுபவிக்கிறான்.

அந்த புண்ணு எல்லாம் சீக்கிரம் ஆறிடும். நான் ரெண்டு வாரமா இந்த ஆஸ்பத்திரிக்குதான் வரேன். ஆனா, இங்க ஒன்ன எப்பவும் பாத்ததில்லே. ஆமா, உனக்கு கல்யாணம் ஆயிடுச்சா?” என முழு கதையும் சொல்லி, புன்னகைத்தாள். நடந்ததை நினைத்து வருத்தப்படும் உணர்வேதும் அவளது முகத்தில் தெரியவில்லை வெங்கட்டுக்கு. பில் வந்ததும், பணம் கொண்டு வந்து கொடுக்கும்வரை எதுவும் பேசவில்லை.

சீதாவின் கேள்விக்கு பதில் ஏதும் கூறவில்லை வெங்கட்.

சீதா மேலே எழுந்தபடி “ஒரு மனுசன புச்சிபாபு நேசிக்கிற அளவுக்கு வேற யாராலயும் நேசிக்க முடியாது. அது என் ஒருத்திக்கு மட்டும் தான் தெரியும். அவனுக்கு ஏதாவது துயரம் இருந்தா, அதோடு சேர்ந்து பழகுவான். அதை கெஞ்சுவான். மனசு முழுக்க அதை நிரப்பிப்பான். நம்ம எல்லாரும் துயரத்தை துரத்ததான் பார்ப்போம், இல்லனா அதுலருந்து தப்பிக்க மட்டும் தான் பாப்போம்” என்றாள்.

தலை உயர்த்திப் பார்த்தான் வெங்கட். “சீதாவே இப்படி பேசுதுனா, புச்சிபாபு எவ்வளவு நல்லவனா இருந்திருப்பான்” என நினைத்தான்.

இரண்டு பேரும் சேர்ந்து பொது மருத்துவ வார்டில் இருக்கின்ற புச்சிபாபுவை அழைத்துக் கொண்டு வெளியே வந்தனர். வெங்கட் ஒரு பையனை அனுப்பி, மருந்துகள் வாங்கி கொடுத்தான்.

மூவரும் பேருந்து நிலையத்தில் நின்றனர்.

புச்சிபாபு கண் தூக்க கலக்கத்தில் இருந்தாலுமே, கண்ணில் ஒரு ஒளி தெரிகிறது.

சீதா, வெங்கட்டுக்கு அருகே நகர்ந்து,

“ஒரு மனுசன நேசிக்கிறது புச்சிபாபு ஒருத்தனுக்கு தான் தெரியும்ன்னு நான் ஏன் சொன்னேன்னு, உன்னால சொல்ல முடியுமா?” என்றாள் சீதா.

எதற்காக என்பது போல் பார்த்தான்.

“ரவியும், நானும் ஒன்னா சேர்ந்து திரிஞ்சப்போ நான் மாசமா இருக்கேனோன்னு பயமாயிடுச்சு. மாசமானா கருவ கலச்சிடுன்னு அவன் எங்கேயோ போயிட்டான். யார் கிட்ட சொன்னாலும் ஊரு மொத்தம் சொல்லிடுவாங்கன்னு, அந்த ராத்திரியில சென்டர்ல உக்காந்துகிட்டு இருக்கிற இந்த புச்சிபாபுவை அழைச்சிக்கிட்டுதான் கருவ கலைக்க போனேன். இப்படிப்பட்ட விஷயம் அந்த வெகுளி மனுசனுக்கு தெரியாதுன்னு.

ஆனா, கல்யாணம் முடிஞ்ச பெறவு பிள்ளைங்க பொறக்கலேனாலும் பரவாயில்லைன்னு அவன் தன்னோட மொழியில சொன்னான்.

கடவுள் கூட உனக்கு இனிமே பிள்ளைங்க வேணாம், ஒருத்தனை கொடுக்கிறேன், அவனயே பிள்ளையா பார்த்துக்கோன்னு சொல்லிட்டாரு” என்றாள் சிரித்தபடி.

இதற்கு இடையில் பேருந்து வந்தது. சீதா, புச்சிபாபுவின் கையை பிடித்துக் கொண்டு பேருந்தை ஏறினாள்.

சீதா மறுபடியும் அவனைத் திரும்பி பார்க்கவில்லை.

எப்போதோ சின்ன வயதில், அதன்பின்னர் கல்லூரியில், தான் காதலித்த சீதாவை தன்னுள் வைத்துக் கொண்டு அழைத்துச் சென்றது பேருந்து, அச்சு அசல் புச்சிபாபுவை வைத்துக் கொண்டவாறு. பேருந்தை அப்படியே பார்த்துக் கொண்டு இருக்கையில் கண்களில் வெண்மையான, மெல்லிய திரைச்சீலை மூடியது போல் கண்ணீர் துளி இடைமறித்தது.

***

Previous article
Next article
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here