Thursday, February 19, 2026
Homeஇதழ்கள்2025 இதழ்கள்நீலத் தாவணி: நம்பிக்கையளிக்கும் எழுத்து

நீலத் தாவணி: நம்பிக்கையளிக்கும் எழுத்து

பெண் எழுத்து ‘தன்னை எழுதுதல்’ என்ற வட்டத்திலிருந்து இன்று கொஞ்சம் கொஞ்சமாக விடுபட்டுக்கொண்டிருக்கிறது. ரம்யாவின் சிறுகதைகளை அப்படியொரு நம்பிக்கைக்குரிய எழுத்தாகப் பார்க்கிறேன். பொதுச்சமூகத்தின் உதிரிகளுக்கும் வரலாற்றில் மறக்கப்பட்டவர்களுக்கும் இவர் எழுத்து முக்கியத்துவம் கொடுத்திருக்கிறது. அதே நேரத்தில் பெண்களின் நுண்ணுணர்வு சார்ந்த உளவியல் பிரச்சினைகளையும் இவர் கவனத்தில் எடுத்துக் கொண்டிருக்கிறார். ரம்யாவின் ‘நீலத் தாவணி’ என்ற தொகுப்பிலுள்ள சிறுகதைகளை ஒட்டுமொத்தமாக வாசிக்கும்போது கதை கூறும்முறை மிகச் சிறப்பாக அமைந்திருப்பதை உணர முடிகிறது. மனித மனம் உறைபனித்தீவு (Iceberg) போன்றது என்கிறார் ஃபிராய்ட். அதன் பெரும்பகுதி நம் கண்ணுக்குப் புலப்படாத ஒரு தளத்தில் மூடுண்டு கிடக்கிறது. அதன் சிறு பகுதியே வெளியே தெரிகிறது. அதுதான் அறிமனம் (Conscious) என்பது அவரது கண்டுபிடிப்பு. இந்தத் தொகுப்பின் கதைகளினூடாக அறிமனத்தைக் கொண்டு ஆழ்மனத்தைக் காணும் முயற்சியை ரம்யா செய்திருக்கிறார். ‘நீலத் தாவணி’ அப்படியொரு உளவியல் சிக்கலைப் பேசக்கூடிய சிறந்த கதை. தன் இளமையைத் தக்கவைத்துக்கொள்ள தன் இரு மகள்களையும் சிறிய குழந்தைகளாகவே இந்த உலகிற்கு முன் நிறுத்த நினைக்கும் அம்மாவின் ஆழ்நிலை மனதை ஒரு கட்டத்தில் மூத்தபெண் கண்டுபிடித்து விடுகிறாள். தன் மகள்கள் தாவணி அணிவதன் மூலமாகத் தன்னுடைய வயதும் வெளிப்பட்டுவிடும் என்று நினைக்கும் அம்மாவின் மனதை ரம்யா இந்தப் புனைவில் மிக இயல்பாகக் காட்டியுள்ளார். அம்மா என்கிற தொன்ம மதிப்பின்மீது ஏற்படுத்திய உடைப்பு இச்சிறுகதை.

தன் குழந்தைகள் வேகமாக வளரவேண்டும் என்றுதான் பெரும்பாலான அம்மாக்கள் விரும்புவார்கள். விதிவிலக்கு இக்கதையின் மோகனாவின் அம்மா. அவள் இக்கதையில் பெரிதாக உரையாடலை நிகழ்த்தவில்லை என்றாலும் அவள் மனம் உறைபனித்தீவு. அம்மாவின் மனதைப் படித்துவிடும் அறிவை நகரம் மோகனாவிற்கு வழங்குகிறது. மோகனா தன் வயதிற்குரிய ஆடைகளை அணிந்துகொள்வதில் ஆர்வம் காட்டுகிறாள். நகரத்திற்கு வந்தபிறகுதான் பெண்களுக்கான ஆடை வகைகளே அவளுக்கு அறிமுகமாகின்றன. கிராமம் மோகனாவின் குழந்தைத்தன்மை மாறாமல் பார்த்துக்கொண்டதையும் நகரம் அந்தத் தன்மையின்மீது உடைப்பை ஏற்படுத்தியதையும் ரம்யா அருமையாகப் புனைவாக்கியிருக்கிறார். ‘குண்டா இருக்கிறவங்களுக்குத் தாவணி கட்டினா அவ்ளோ நல்லா இருக்காது’ என்று மோகனாவின் அம்மா சொல்லும்போதுகூட அவள் மனதை அவதானிக்க முடியவில்லை. மகள் மீதான கரிசனத்தின் காரணமாகவே அவள் இவ்வாறு கூறுகிறாள் என்ற தோற்றம் உருவாகிறது. ‘நான் பெரிய பொண்ணு தான். தாவணியோ சேலையோ போடாததால மட்டும் சின்ன புள்ளையா இருந்திடப் போறதில்லை’ என்ற இடம்வரை அம்மாவின் மனம் புரிந்துகொள்ள முடியாத ஒன்றாகவே இருக்கிறது. புனைவின் இறுதிவரை இதனைத் தக்கவைத்திருப்பது தேர்ந்த கதைசொல்லிக்குரிய தன்மையாகவே பார்க்கிறேன். இந்தக் கதையில் வெளிப்படும் மோகனாவின் வெகுளித்தனம் புனைவில் அருமையாகத் தொழிற்பட்டுள்ளது.

உண்மை மனிதர்களின் கதைகளைப் புனைவாக்கியதில் ஜெயமோகனுக்குத் தனித்த இடமுண்டு. அத்தகைய கதைகளடங்கிய ‘அறம்’ தொகுப்பு, எப்போதும் என் பிரதான வாசிப்புக்குரியது. அவரை முன்மாதிரியாகக்கொண்டு ரம்யாவும் நாடக அறிஞர் ஆண்டி சுப்பிரமணியம் குறித்து ‘தூசி’ என்ற கதையும் நாடக நடிகை பாலாமணி அம்மாள் பற்றி ‘ட்ராமாகுயின்’ என்றொரு சிறுகதையும் எழுதியிருக்கிறார். ரம்யா தமிழ் விக்கியில் பங்காற்றுகிறார். ஆண்டி சுப்பிரமணியம், பாலாமணி அம்மாள் பற்றிய குறிப்புகளைத் தமிழ் விக்கியில் பதிவேற்றும்போது இவர்களது வரலாறு ரம்யாவைப் பெரிதும் பாதித்திருக்கிறது. தமிழ் விக்கியின் தரவுகளை அடிப்படையாகக்கொண்டு இச்சிறுகதைகள் எழுதப்பட்டிருந்தாலும் ரம்யாவின் மொழிநடையும் புனைவின் கூற்றுமுறையும் இக்கதைகள் வாசிப்பவர்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

ஆண்டி சுப்பிரமணியம் (1897-1981) ஒரு நாடக அறிஞர். ‘தமிழறிஞர்கள்’ என்ற நூலில் அ.கா. பெருமாள் இவரைப் பற்றி ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அதில், “A Theatre Encyclopedia” என்னும் தலைப்பில் அவர் சேகரித்த நாடகக் கலைக்களஞ்சியம் 60000 உட்தலைப்புகள் கொண்டது. கையெழுத்துப் பிரதியிலிருந்த அந்த நூலைப் பாதுகாக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்ட சென்னைப் பல்கலைக்கழகம் அதைத் தவறவிட்டது; அதன் பிறகும் ஆண்டி இன்னும் ஓராண்டு முயற்சி செய்தால் மறுபடியும் அதைத் தொகுத்து விடலாம் என்றாராம். அப்போது அவருக்கு வயது 80” (பக்.214) என்று எழுதியிருக்கிறார். ஆனால் தமிழ் விக்கியில், “இன்னும் 20 ஆண்டுகள் முயற்சி செய்தால் மறுபடியும் அதைத் தொகுத்து விடலாம்” என்று ஆண்டி சுப்பிரமணியம் கூறியதாக இருக்கிறது. இதில் எது சரியான தகவல் என்பதை அறிய முடியவில்லை. அந்திம காலத்தில் இருக்கும் ஒருவர் தன்னுடைய பல்லாண்டுகால உழைப்பில் உருவான நூலின் கையெழுத்துப் பிரதி தொலைந்துபோனது பற்றிக் கவலைப்படாமல் கூறிய அந்த வார்த்தையின்மீது இந்தப் புனைவு கட்டப்பட்டிருக்கிறது. அந்தப் பிரதி காணாமல் போனதற்குக் காரணமாக இருந்த மோகன் என்ற கதாபாத்திரத்தின் வழியே இந்தக் கதை சொல்லப்பட்டிருக்கிறது. கலையின்மீது பிடிப்பற்றுப்போன ஒரு தலைமுறை எண்பதுகளிலேயே உருவாகிவிட்டதையும் இக்கதை நினைவூட்டுகிறது.

தமிழ் இலக்கியத்தின்மீது பித்துப்பிடித்து, தங்களையும் தங்கள் குடும்பத்தையும் அழித்துக் கொண்டவர்களைப்போல, நாடகத்தின் மீதுள்ள பிடிப்பின் காரணமாகவும் பல குடும்பங்கள் அழிந்துள்ளன. அப்படியொரு குடும்பத்திலிருந்து வந்தவன்தான் ‘தூசி’ கதையின் கதைசொல்லியான மோகன். ‘அத்தன பேத்த சாவடிச்ச கலைய ஏன் தூக்கி நிப்பாட்டனும்னு நெனைக்கீங்க’ என்ற மோகனின் கோபத்திற்குப் பின்னால் ஒரு துயரமான கதை இருக்கிறது. தன் தந்தையைப் போன்றவர்களைப் பார்க்கும்போது அவனுக்குக் கோபம் வருகிறது. ஆனாலும் இறுதியில் ஆண்டி சுப்பிரமணியத்தின் பணியைப் புரிந்துகொள்கிறான். அப்போது அவர் கொடுத்திருந்த கையெழுத்துப் பிரதி வேண்டுமென்றே காணாமல் ஆக்கப்படுகிறது. ஏற்கனவே நிகழ்ந்த நிகழ்வின்மீது ஒரு காத்திரமான உரையாடல் இக்கதையில் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. நாடக வரலாறுகள்கூட இவர் பெயரைக் குறிப்பிடவில்லை. இத்தகைய சூழலில் ஆண்டி சுப்பிரமணியம் எனும் ஆளுமையைப் பற்றிய இந்தப் புனைவை முக்கியமானதாகக் கருதுகிறேன்.

ஆண்டி சுப்பிரமணியம் போல வரலாற்றில் பலரும் மறந்துவிட்ட இன்னொரு நாடக ஆளுமை பாலாமணி அம்மாள். தேவதாசி மரபில் வந்த இவர், கும்பகோணத்தில் ‘பாலாமணி அம்மாள் நாடகக் கம்பெனி’யை நிறுவினார். இக்குழுவில் முழுக்க முழுக்கப் பெண்களே நடிகர்களாக இருந்தனர். மிகுந்த செல்வாக்குடன் இருந்த அம்மையார், அரண்மனை போன்ற வீட்டில் வசித்திருக்கிறார். இவர் நடிக்கும் நாடகங்களைக் காண சிறப்பு இரயில்கள் இயக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், இவரது இறுதிக்காலம் துயரம் நிறைந்ததாக இருந்திருக்கிறது. சிறிய அளவில் பாலாமணி அம்மையாரைப் பற்றிக் கிடைத்த தரவுகளை அடிப்படையாகக்கொண்டு ரம்யா ‘ட்ராமாகுயின்’ கதையை எழுதியிருக்கிறார். காசி விஸ்வநாத முதலியார் எழுதிய ‘டம்பாச்சாரி விலாசம்’ முதல் சமூக நாடகமாகப் பார்க்கப்படுகிறது. இந்த நாடகத்தைப் பாலாமணி அம்மாள் பலமுறை மேடையேற்றிப் புகழ்பெற்றிருக்கிறார். பாலாமணி அம்மையாரின் மங்கலான சில புகைப்படங்களே கிடைத்திருக்கின்றன. இந்தப் புகைப்படங்களைக் கொண்டு அவர்களைப் பற்றிய அழகான வருணனைகளை ரம்யா உருவாக்கியிருக்கிறார். இவரது மொழியில் அவரது ஆகிருதியும் அரண்மனையும் துலக்கம் பெற்றிருக்கின்றன. இந்தப் புனைவினூடாக நாடகங்களில் பங்களித்த பெண்களைப் பற்றிய ஆண்களின் ஒவ்வாமைகளையும் செல்வம் என்ற கதாபாத்திரத்தின் வழியாக விரிவான விவாதத்திற்கு உட்படுத்தியிருக்கிறார். ‘பொண்ணு வந்தாலே தீட்டுன்னா கதைல ஏன் ஆம்பளைகள மட்டும் வச்சு எழுத வேண்டியது தானே’ என்று இக்கதையின் அண்ணாச்சி கதாபாத்திரம் பேசுகிறது. இந்தக் கதாபாத்திரம் டி.கே.சண்முகம். ஏனெனில், டி.கே.சண்முகத்தின் நாடகக்குழு நொடிந்துபோனபோது பாலாமணி அம்மையார்தான் உதவி செய்திருக்கிறார். உண்மையில் பாலாமணி அம்மையாரை இச்சிறுகதை மீண்டும் உயிர்பெறச் செய்திருக்கிறது. இதுபோன்ற உண்மை மனிதர்களின் கதைகளை ரம்யா தொடர்ந்து எழுத வேண்டும் என்ற விருப்பத்தை இவ்விரு கதைகளும் ஏற்படுத்துகின்றன.

இந்தத் தொகுப்பிலுள்ள ‘வஞ்சி’ என்றொரு சிறுகதையும் மிக முக்கியமானது. இந்தக் கதையும் நாடகத்துடன் தொடர்புடையதுதான். சூர்ப்பணகை என்ற தொன்மக் கதாபாத்திரத்தை அடிப்படையாக வைத்து இக்கதையை எழுதியிருக்கிறார். இராமாயணத்தில் பாவப்பட்ட ஒரு கதாபாத்திரம் சூர்ப்பணகை. ஆனால் கம்பனின் பார்வையில் கொடூரமான அரக்கி. இராமனின் ஆளுமைப் பண்பை நிலைநிறுத்துவதற்காகத் தன் மூக்கையும் முலைக்காம்புகளையும் இழந்தவள் சூர்ப்பணகை. இராமன் என்கிற தொன்ம கதாபாத்திரத்தின்மீது நவீன எழுத்தாளர்கள் பலரும் பல்வேறு விதங்களில் மறுவாசிப்பை நிகழ்த்திப் புனைவுகளை உருவாக்கியிருக்கிறார்கள். ரம்யா இந்த இடத்தில் வேறுபட்டிருக்கிறார். நாடகத்தில் இராமன் வேடம் புனையும் செல்லப்பன், யதார்த்தத்தில் எவ்வளவு மோசமானவனாகவும் பெண் பித்தனாகவும் இருக்கிறான் என்பதை இப்புனைவின் வழியாக உரையாடியிருக்கிறார். அதேநேரத்தில் இந்தக் கதையில் கண்ணன் என்ற கதாபாத்திரத்தின் வழியாக ஆண்களின் இயல்பையும் உடைத்துப் பேசியிருக்கிறார். ‘அந்த நேரத்துக்கு ஆம்பளைக என்ன வேணுனாலும் சொல்லுவாக. பொட்டச்சிக்கு எங்க போவுது புத்தி’ என்கிறான் கண்ணன். புனைவின் ஒற்றைத் தன்மையைச் சிதைத்துக் கதாபாத்திரங்களைச் சுதந்திரமான உரையாடலுக்கு உட்படுத்துகிறார். ரம்யாவின் பல கதைகளில் இந்தத் தன்மையைப் பார்க்க முடிகிறது.

ஆண்கள் இராமன்களாக இல்லாதபோது பெண்களில் பத்தினிகள் மட்டும் எப்படி இருப்பார்கள் என்ற கேள்வியையும் இக்கதை எழுப்புகிறது. குமார், செல்லப்பன் ஆகிய இரு கதாபாத்திரங்களையும் குடிக்கவைத்துப் பேசவைத்திருக்கிறார். அவர்களின் வழியாகவே ஆண்களின் மனதில் பெண்களின் இருப்பு என்னவாக இருக்கிறது என்ற இடத்திற்கும் புனைவை நகர்த்தியிருக்கிறார். யதார்த்த வாழ்க்கையில் இராமன் என்று எவரும் இல்லை. அதுவொரு புனைவுத்தன்மைக்குரிய கற்பனைக் கதாபாத்திரம். அந்தப் பாத்திரத்தை ஏற்கும் நடிகர்கள்கூட அப்படியாக இருக்க விருப்பப்படுவதில்லை. காதல் என்பது ஒரு கற்பிதம். நிஜத்தில் சூர்ப்பணகையைப் போன்று உருகி வழியத் தேவையில்லை என்பதை இக்கதையின் ராசாத்தி இறுதியில் உணர்ந்துகொள்கிறாள். இராமனைப் பார்ப்பதற்கு முன்பிருந்த சூர்ப்பணகையின் கம்பீர நடைதான் தன்னுடைய அடையாளம் என்று அவனை ஏளனமாகப் பார்த்துவிட்டுச் செல்கிறாள் ராசாத்தி. இராமன், சூர்ப்பணகை கதாபாத்திரத்தின்மீது இக்கதை நிகழ்த்தும் மறுவாசிப்பு குறிப்பிடத்தக்கது. சா.கந்தசாமியின் ‘இரணிய வதம்’ என்ற சிறுகதையும் இக்கதையுடன் சேர்த்து வாசிக்கத் தகுந்தது.

‘அழைப்பு’ என்ற சிறுகதையும்கூட இந்தத் தொகுப்பில் குறிப்பிடத்தக்க ஒன்றாக இருக்கிறது. இக்கதையின் சோஃபியா பாவ மன்னிப்புக் கேட்க மாதா கோயிலுக்குச் செல்கிறாள். அங்கு இவளிடம் வெளிப்படும் குழந்தைத்தனம் ஃபாதரையே அயர்ச்சியடையச் செய்கிறது. எது பெரிய விஷயம்; எது சின்ன விஷயம் என்பதற்குக்கூட இவளுக்கு வித்தியாசம் தெரியவில்லை. எது பாவம்? எந்தப் பாவத்திற்கு மன்னிப்புக் கேட்கவேண்டும் என்ற உரையாடலை ரம்யா சோஃபியா கதாபாத்திரம் வழியாக முன்னெடுத்திருக்கிறார். வேலூரின் புகழ்பெற்ற சி.எம்.சி. மருத்துவமனையை நிறுவிய ஐடா சோஃபியா ஸ்கடரின் வாழ்க்கையை இப்புனைவு அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. அமெரிக்காவின் சொகுசான வாழ்க்கையைப் புறக்கணித்துவிட்டு ஏழைகளின் பக்கம் நிற்கச்சொல்லும் சமிக்ஞையை ஸ்கடர் ஒருநாள் பெறுகிறார். அந்த சமிக்ஞையைப் பெற்ற தருணத்தைத்தான் ரம்யா இக்கதையின் மையமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.

ரம்யாவின் எழுத்து பிற பெண் எழுத்துக்களில் இருந்து தனித்துத் தெரிகிறது. எந்தவொரு சிறிய நிகழ்வையும் காத்திரமான புனைவாக மாற்றிவிடும் மொழிவண்மையை ரம்யா பெற்றிருக்கிறார். எதைப் பற்றியும் இவரால் தீவிரமாக உரையாட முடிகிறது. கதாபாத்திரங்களைப் புனைவின் தன்மைக்கேற்ப அருமையாகக் கையாண்டிருக்கிறார். கலவையான கதாபாத்திரங்கள் ஒவ்வொரு சிறுகதைக்கும் புதிய நிறங்களை அளிக்கின்றன. அறிவுத் தளத்திலிருந்து விலகி நின்று தன் புனைவின் இயக்கத்தைக் கண்காணிக்கிறார். ஒவ்வொரு கதைக்கும் இவரால் உருவாக்கப்படும் எதிர் கதாபாத்திரங்கள் புனைவாசிரியரின் சார்பாக முக்கியமான உரையாடலை வளர்த்தெடுத்துச் செல்கின்றன. அதிர்ந்து பேசாத இவரது மொழி புனைவுக்கு ஓர் இயல்பான அடர்த்தியை அளிக்கின்றன. ஒவ்வொரு கதையின் உரையாடலிலும் வெளிப்படும் நுணுக்கமான விவரணைகள் புனைவுக்குக் கனத்தைச் சேர்க்கின்றன. நம்பிக்கைக்குரிய எழுத்தாக இவரது ‘நீலத் தாவணி’ இருக்கிறது.

***

சுப்பிரமணி இரமேஷ் – இயற்பெயர் சு.இரமேஷ். நவீன இலக்கியங்கள் குறித்த விமர்சனக் கட்டுரைகளை தொடர்ந்து எழுதி வருகிறார். சென்னை, இந்துக் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். ‘தமிழில் தலித் இலக்கியம்’ என்ற நூலுக்காகச் சிறந்த திறனாய்வாளருக்கான ‘பஞ்சு பரிசில் – 2023’ என்ற விருதினைப் பெற்றுள்ளார். மின்னஞ்சல்:ramesh5480@gmail.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here