Tuesday, April 30, 2024
Homesliderஒரு கிளை பல இலைகள்

ஒரு கிளை பல இலைகள்

மௌனன் யாத்ரிகா

*

1.
ரயில் நிலையத்தில் யாருமே இல்லை. நிலைய ஊழியர்களைக் கூட வெளியில் காண முடியவில்லை. சற்று நேரம் டிக்கெட் எடுக்கும் இடத்தில் அவன் நின்று கொண்டிருந்தான். ரொம்ப நாட்களாக திறக்கப்படாமல் மூடியிருக்கும் டிக்கெட் கௌண்டரின் சிறிய மூடு பலகையில் அட்டைப் பூச்சிகள் ஊர்ந்ததற்கான கோடுகள் இருந்தன. அவன் இங்கு எப்போது வந்தாலும் காத்திருக்கும் அந்த சிமெண்ட் கட்டை கறுத்து இறுகிப்போய் கிடந்தது. அந்த இடத்தில் போய் அமர்ந்து கொண்டான். அந்த இடத்துக்கும் அவனுக்கும் தொடர்பில்லாத காய்ந்த இலை ஒன்று அந்த சிமெண்ட் கட்டையில் அசைந்து கொண்டிருந்தது. அந்த இலையைக் காண்பது வித்தியாசமாக இருந்தது. எதையோ தன்னிடம் சொல்வதற்காக அது அங்கு காத்திருப்பதாக நினைத்தான். அதைப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே ஒரு படகு திரும்புவது போல் வடக்கும் தெற்குமாக இருந்த அது திடீரென மேற்குக்கும் கிழக்குக்குமாக திரும்பியது. அதன் அசைவுகளைப் பார்த்தபோது அவனே இலை வடிவில் அங்கு தத்தளிப்பது போல் இருந்தது. வெறிச்சோடி கிடக்கும் ரயில் நிலையம் ஒரு குகையைப்போல் மர்மப் பிரதேசமாக மாறிக் கொண்டிருப்பதாகவும் தோன்றியது. மாலைப்பொழுதின் வெயில் தணிந்து காற்றில் இதமான குளுமை பரவியபோது அந்த இடத்தை விட்டு எழுந்து மேற்கே தெரிந்த பாலத்தை நோக்கி நடந்தான்.

பாலத்துக்கு முன்னே ஒரு நான்கடி உயரத்தில் கருங்கல் ஒன்று நின்றிருந்தது. அதன் முகட்டில் பறவைகளின் எச்சம். அந்தக் கல்லில் நிழல் படிந்து குளுமையாக இருந்தது. அதில் சாய்ந்து நின்று கொண்டு எதிர்ப்புறத்தை வெறித்து, கண்கள் நிலைக்குத்த பார்த்துக் கொண்டிருந்தான். அந்த இடத்தைக் கடந்து கூட்டமாக காகங்கள் பறந்து போயின. எதிர்புறத்தில் ஒரு பெரிய பள்ளம் இருப்பது போல் தோன்றியது. அந்தப் பள்ளத்தில் யாராவது இருக்கலாம் என்று நினைத்தான். அதற்கும் பின்னால் அடர்ந்து விரிந்திருந்த தோப்பில் பறவைகள் ஒலியெழுப்பிக் கொண்டிருந்தன. பாலத்தின் மீது நடந்து தோப்புக்குள் போகலாம் என்பதுபோல் அவன் கால்கள் அவனை இழுத்தன. அங்கிருந்து ரயில் நிலையத்தின் எதிரே இருந்த நடைமேடைக்குப் போகும் கல் பாதையின் முகப்பில் முறிந்து பல நாட்களான ஒரு தூங்குமூஞ்சி மரம் கிடந்தது. அதன் கருமையேறிய வேர் பகுதிகளில் பூச்சிகள் ஊர்ந்து கொண்டிருந்தன.
நடைமேடை வழியே நடந்து பயணிகள் உட்காரும் கட்டையொன்றில் உட்கார்ந்திருக்கலாமா என்று நினைத்தான். மனம் அங்கு செல்ல ஒப்பவில்லை. இப்படியே பாலத்தின் வழியே நடந்து தண்டவாளத்தின் இடதுபுறமாக, கருங்கற்கள் விழுந்து கிடக்கும் ஒத்தயடிப்பாதை வழியாக போய்க் கொண்டிருக்கலாம் என்று தோன்றியது. அந்த கருங்கல் பாதை தூரத்தில் தெரிந்த ஓர் சிற்றூருக்கு போகக்கூடியது. ஒருவேளை அந்த ஊருக்குச் செல்ல விரும்புகின்றானோ. நிச்சயமாக இல்லை. அங்கு யாரையும் அவனுக்குத் தெரியாது. எங்கேயாவது போ என்று மனம் முதுகில் கை வைத்து உந்தித் தள்ளிக் கொண்டிருப்பதால் அவன் அப்படி ஒரு நடைபிணம் போல் நடந்து கொள்கிறான்.

அவன் கால்கள் தயங்கியபடியும் தடுமாறியபடியும் நின்று கொண்டிருந்தபோது எங்கிருந்தோ வந்து அந்த பாலத்தின் விளிம்பில் உட்கார்ந்த பறவைக்கு அலகு நீளமாக இருந்தது. இறகுகள் குட்டையாக வெண்மையும் கறுப்பும் கலந்தவையாக இருந்தன. தண்டவாளத்தில் கிடந்த கல் ஒன்று திடீரென சிறகு முளைத்து அங்கு வந்து உட்கார்ந்து கொண்டதோ என்று நினைக்கும்படி அதனுடைய உடல் தோற்றம் இருந்தது. அவனுக்கும் அந்தப் பறவைக்கும் இடையில் கோடு போல் விழுந்திருந்தது பாலத்தின் விளிம்பு. அவன் சில காலடிகள் எடுத்து வைத்தால் அது பறந்து விடும். அவனுடைய கால்கள் தரையிலிருந்து எழவில்லை. பறவைக்கு இவன் மீது கவனம் இல்லை. அது அங்கிருந்த எருக்குச் செடியில் ஊர்ந்து கொண்டிருந்த புழுவின் மீது கவனத்தைக் குவித்திருந்தது.

நீண்டுக் கிடந்த தண்டவாள இரும்புகளை பார்த்தபடி நின்று கொண்டிருந்தான். அந்த இரும்பின் நடுவில் ஓர் ஒளிக்கீற்று ஓடிக்கொண்டிருந்தது. பறவையின் நீண்ட அலகுகள் திறந்து மூடுவதைப் பார்த்துவிட்டு அந்த எருக்கை கவனித்தான். அதிலிருந்த காய்ந்த இலைகள் ஆடிக் கொண்டிருந்தன. அந்தப் புழுவைக் காணவில்லை.

அவனுக்கு ஒரு புழுவைப் பிடித்து கை விரல்களுக்கிடையே வைத்து உருட்ட வேண்டும் போல் இருந்தது. அந்தச் செடியிடம் இன்னும் சில புழுக்கள் இருக்கலாம். ஒருமுறை அப்படி ஒரு புழுவை உருட்டிப் பார்த்திருக்கிறான். அந்தப் புழு எப்படி வந்ததென்று தெரியாத வண்ணம் அவனுடைய சட்டையில் ஒட்டிக் கொண்டிருந்தது. நன்கு கொழுத்த சிறிய புழு. பச்சை நிறத்தில், புள்ளி புள்ளியாய் விடைத்த உடலோடு இருந்தது. விரலில் வைத்து உருட்டும்போது அழுத்தம் கூடி அந்தப் புழுவை நசுக்கி விட்டதையும், அதனுடைய கரும்பச்சை நிற திரவம் விரலில் பிதுங்கி வழிந்ததையும் நினைவு கூர்ந்தான். யாரோ தன்னை ரத்தம் வழிய அடித்து விட்டதைப் போல் பதற்றமாக இருந்தது.

புழுவைப் பிடிக்கும் எண்ணத்தை கைவிட்டு பாலத்தின் விளிம்பில் அமர்ந்திருந்த பறவையைப் பார்த்துக் கொண்டிருந்தான். அது தன் குட்டை வாலை ஆட்டியபடி தலையை இருபுறமும் அசைத்து பார்த்துவிட்டு பாலத்தின் கீழிருக்கும் பள்ளத்தை நோக்கி விழுந்தது. அடுத்த கணம் அவன் பயங்கர பதற்றமடைந்தவனாக அந்த விளிம்பை நோக்கி ஓடினான். யாரோ தற்கொலைக்குப் பாய்வதைப்போல் அவனுக்குத் தோன்றியிருக்க வேண்டும். ஓடிச்சென்று குனிந்து பள்ளத்தை பார்த்தபோது அந்தப் பறவையை அங்கு காணவில்லை. பெரிய பெரிய கற்கள் மட்டுமே கிடந்தன. பாலம் கட்டுவதற்கு ஏற்றி வந்து மீந்துபோன கற்களை ரயில்வே துறையினர் அப்படியே பாலத்துக்குக் கீழே போட்டுவிட்டு போயிருந்தனர். பாலத்தின் மேற்பரப்பிலிருந்து கீழே குதித்தால் நிச்சயம் ஏதாவது ஒரு கல்லில் மண்டை மோதி உடைந்து உயிர் இழக்கக் கூடும். இருபது அடிக்கும் அதிகமான ஆழம். கற்களோ பாறாங்கற்கள். ஆழத்தையும் கற்களையும் கணக்கில் கொண்டால், ஒருவன் கீழே விழுந்தால் தப்பிப்பது கடினம். அவன் அங்கிருந்து விலகிச் செல்ல விரும்பினான். ரயில் நிலையத்திலிருந்து இறங்கி நகருக்குள் செல்லும் பாதையில் நடக்கத் தொடங்கிய போது இரவு அவன் முதுகுக்கு பின்னால் நெருங்கி வந்துக் கொண்டிருந்தது.

2.

குடியிருப்புக்கு திரும்பி வந்தபோது இரவு தொடங்கியிருந்தது. அந்த இரண்டு மாடி வீட்டை வெளியே நின்றபடி அவன் அண்ணாந்து பார்த்தான். அப்போது அவனுக்கு பரிதாபகரமான ஒரு முகம் வாய்த்திருந்தது. அவன் பார்வைகள் ஆறு வீடுகள் கொண்ட மாடியில் எட்டு என்று எழுதி வெள்ளை நிறத்தில் பெரிய வட்டமிட்டிருந்த கதவை வெறிக்கத் தொடங்கின. அதையே சில நிமிடங்கள் பார்த்துக் கொண்டு நின்றிருந்தான். கழுத்து வலியெடுத்தது. படிக்கட்டுகளில் ஏறி அவனுடைய அறைக்கதவின் முன் நின்றான். அறையைத் திறப்பதற்கு முன் எதிர்வீட்டை ஒருமுறை பார்த்துக் கொண்டான். அவன் பார்த்துக் கொண்டிருக்கும் போதே கதவைத் திறந்த அந்த வீட்டுப் பெண், அவனைப் பார்த்து ஒரு புன்னகை செய்துவிட்டு ‘‘வாசு சார்… ரொம்ப நேரமா ஆளையே காணும்… எங்க போயிருந்தீங்க? ஒங்கள தேடிக்கிட்டு ஒருத்தர் வந்திருந்தாரு. பேருகூட ஜெயராமன்னு சொன்னாப்ள” என்றாள். அவள் சொன்ன பெயரை அவன் கேள்விபட்டதில்லை. அவள் அப்படி ஏதாவது சொல்லி பேச்சு கொடுப்பாள். அவளுக்கு அவனிடம் பேச வேண்டும். பேசத் தோன்றியதென்றால் அவளுக்கு ஏதாவது காரணம் கிடைத்துவிடும். ‘ஒங்களுக்கு கொரியர் வந்துச்சி சார்’ என்பாள், அப்படி எதுவும் வந்திருக்காது. ‘ஒங்க சட்டை கீழே விழுந்து கெடந்துச்சி.. நாந்தான் எடுத்து கொடியில் போட்டேன்’ என்பாள். அவனுடைய வீட்டுக்கு வெளியே சுவர் ஓரமாகக் கட்டப்பட்டிருக்கும் கொடிக்கயிற்றில் அவளுடைய துணிகள்தான் காய்ந்து கொண்டிருக்கும். ‘ஒங்கள பார்க்க வந்த ஒருத்தர் ரொம்ப நேரம் எங்க வீட்டுலதான் உட்கார்ந்திருந்துட்டு போனார்’ என்பாள், அதுபோல ஒருவர் அவனைப் பார்க்க வந்திருக்கவே மாட்டார். அவனைச் சுற்றி இதுபோல் நிறைய காட்சிகளையும் சித்திரங்களையும் உருவாக்கி அவனிடம் வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் அவளை கொஞ்சம் ஆழமாய் உற்றுப் பார்த்துவிட்டு கடந்து போய்க் கொண்டிருந்தான் அவன். அவள் விடுவதாயில்லை. அவனிடம் எதையாவது கேட்க வேண்டும்.

‘‘வாசு சார்… ஒங்களுக்கு உடம்புக்கு ஏதாவது பிரச்சினையா?” என்றாள். ‘‘ம்…” என்ற ஓரெழுத்துக்குப் பிறகு அவனால் பதில் சொல்ல முடியவில்லை. அந்தப் பெண் வாசுவை சற்றுநேரம் வைத்த கண் வாங்காமல் பார்த்தாள். அந்தப் பார்வையை அவனால் எதிர்கொள்ள முடியவில்லை. கதவில் தொங்கிய சில்வர் பூட்டின் துவாரத்தில் சாவியை நுழைக்க முடியாமல் கை நடுங்க கதவைத் திறந்து உள்ளே வந்த அடுத்த நொடியில் உள் பக்கமாக தாழிட்டுக் கொண்டான். அவனுடைய அந்தச் செயலை விநோதமாக பார்த்துக் கொண்டிருந்த அவள் கொஞ்ச நேரம் வாசலிலேயே நின்று உதடு சுழித்து புன்னகைத்துவிட்டு வீட்டுக்குள் சென்று அவளும் தாழிட்டுக் கொண்டாள். உள்ளிருந்த இன்னொரு பெண் அவனைப் பற்றி கேட்டாள். அந்தப் பெண் முப்பது வயது மதிக்கத்தக்கவளாக இருந்தாள். அவளுக்கு வாசுவின் மீது இனம்புரியாத ஓர் அன்பு சுரந்து கொண்டிருந்தது. அந்த அன்புக்கு என்ன பொருள் கொள்வது என்றெல்லாம் அவளுக்கு தெரியவில்லை. ஒருவேளை யாருக்காவது அதைப் பற்றிச் சொல்ல வேண்டுமெனில், அந்த அன்பில் ஏதேனும் அசிங்கமோ கேவலமோ படிந்திருக்கவில்லை என்று மட்டும் சொல்ல வேண்டுமென இருக்கும். மற்றவர்கள் பார்க்கும்போது தப்பான புரிதலுக்கு வாய்ப்பளித்து விடக்கூடாது என்ற காரணத்துக்காகவே வாசுவிடம் அவள் சரியாகப் பேசிக்கொள்ள மாட்டாள். வாசுவின் மீதிருக்கும் அந்த அன்பை மனசுக்குள் வைத்து அசைபோட்டுக் கொள்வாள். பார்த்த மாத்திரத்தில் மனசுக்குள் ஆணி அடித்ததைப்போல் சிலருடைய முகம் பதிந்துவிடுமே, அப்படி ஒரு முகம் வாசுவுக்கு என்று அடிக்கடி ராஜியிடம் சொல்வாள். வாசுவின் தற்போதைய நிலையறிய அவளுக்கு ஆவல் பிறந்தது. ராஜியிடம் கேட்டாள்:

‘‘வாசுவா..?”

‘‘ஆமா…”

‘‘என்னாச்சு அவருக்கு… ஒரு மாதிரி பைத்தியம் புடிச்சாப்புல இருக்காரு?”

‘‘ப்ச்… தெரில. பேச்சுக் கொடுத்தாலும் பேச மாட்டேங்குதுக்கா”

வாசுவைப் பற்றி தெளிவாக புரிந்துகொள்ள முடியவில்லை என்ற குறிப்பை உணர்த்தும் விதமாக ராஜி தன் வாயைப் பிதுக்கிக் கொண்டாள். தொலைக்காட்சியின் வெளிச்சத்தை வீடெங்கும் பரவ விட்டுக்கொண்டு நெடுந்தொடர் பார்க்க அமர்ந்துவிட்டவளை வீட்டில் பரவிய பலவித வெளிச்சங்களுக்கு மத்தியில் அந்தப் பெண் பார்த்துக் கொண்டிருந்தாள். ராஜிக்கு பத்தொன்பது வயது முடியப் போகிறது. அவள் அணிந்திருந்த தளர்வான நைட்டியால் அவளுடைய வாளிப்பான உடலழகை மூடி மறைக்க முடியவில்லை. ராஜி இளமைக் கோலத்தில் தளும்பிக் கொண்டிருந்தாள். அவளுடைய இடையை ஒடித்து விடுவதுபோல் கனத்த மார்பகங்கள் நெஞ்சில் மலர்ந்திருந்தன.

கல்லூரியில் தமிழ் இலக்கியத்தை எடுத்துப் படித்த சாரதாவுக்கு சங்கப் பாடல்களில் வர்ணிக்கப்பட்டிருக்கும் தலைவிகள் நினைவுக்கு வந்தார்கள். அப்படியொரு தலைவியாக தன்னுடைய தங்கை இருக்கிறாள் என்று நினைத்தாள். தன்னைவிட பிந்திப் பிறந்தவளுக்கு அம்மா தன் அழகை அப்படியே முழுமையாகப் பரிமாறிக் கொண்டிருக்கிறாள், அப்படியே துடைத்து வழித்துக் கொடுத்திருக்கிறாள். அதே இரண்டு நீலக்கண்கள், அதே பொன்னிறம், அதே வாளிப்பான உடல், திரண்ட மார்புகள், இடைதொடும் கனத்த கூந்தல், பூனாச்சி மயிர் நிறைந்த உலக்கைப் போன்ற கால்கள். அத்தனையும் அளவான எடுப்பில். அம்மாவை நினைத்தால் கோபமாக வந்தது. தன்னை மட்டும் கைவிட்டு விட்டாள் என்று தோன்றியது. அப்பாவின் மெலிந்த, கறுத்த உடல் தனக்கு. களையற்ற சோர்ந்த முகம், உடம்பில் எங்குமே சதையில்லை. மார்புகள் மட்டும் எப்படியிருக்கும்? இதற்கெல்லாம் அம்மாதான் காரணம். அவள்தான் வயிற்றில் போட்டு எட்டு மாதம் ஊற வைத்திருந்தாள். ஆமாம், அந்த எட்டு மாதம்தான் எல்லாவற்றுக்கும் காரணம். அவ்வளவு அவசரம் என்னை வெளியே தள்ளுவதில். அவளுக்கு என்னைச் சுமப்பதில் அவ்வளவு கஷ்டம். நினைக்க நினைக்க நெஞ்சில் வலி தோன்றியது. மார்புச்சதையை பிசைந்து கொள்வதுபோல் தன் மார்பகங்களைத் தொட்டுப் பார்த்துக் கொண்டாள். ராஜி கவலை ஏதும் இல்லாமல் தொலைக்காட்சித் தொடரில் லயித்து உட்கார்ந்திருந்தாள். அவளுடைய மனதிற்கு வாசு பற்றிய பழைய எண்ணங்கள் திரும்பின.

அவள் தன் அம்மாவுடனும் தங்கை ராஜியுடனும் இந்தக் குடியிருப்பில், ஆறாம் எண் கொண்ட வீட்டுக்கதவைத் திறந்து உள்ளே நுழைந்தபோது அதிலிருந்து பெயிண்ட் வாசனை மூக்கில் குப்பென்று ஏறியது. பன்னிரெண்டு வீடுகள் கொண்ட அந்த குடியிருப்பில் இரண்டு வீடுகளில் மட்டுமே ஆட்கள் குடியிருந்தார்கள். மீதமுள்ள பத்து வீடுகளும் காலியாகவே இருந்தன. நான்காம் எண் வீட்டில் வாசுவும், ஐந்தாம் எண் வீட்டில் நாராயணன் வாத்தியாரும் குடியிருந்தார்கள். இரண்டு பேருமே தனிக்கட்டை. கல்யாணமாகாதவர்கள். வாசுவுக்கு முப்பது வயதிருக்கும். நாராயணன் வாத்தியாருக்கு ஐம்பது வயதிருக்கும்.
தெருவைப் பார்த்தபடியிருந்த ஒன்று மற்றும் இரண்டாம் எண் வீடுகள் காலியாக இருந்தபோதும் சாரதா உள்ளே மூன்றாம் எண் வீட்டை பிடித்திருக்கிறது என்று தேர்வு செய்தாள். அந்த வீட்டின் எண் மீது சாரதாவுக்கு ஒரு ஈர்ப்பு. மூன்று என்கிற எண் மீது எப்போதும் ஒரு வாஞ்சை. அவளும் அம்மாவும் தங்கையும் என மூன்று பேர் மட்டுமே இருக்கும் வாழ்வில் அந்த எண்ணில் துளியும் குறைந்துவிடக் கூடாது என்று ஆசை. இந்தக் குடியிருப்புக்கு வீடு தேடி வந்தபோது அவள் தேடிச்சென்று பார்த்த வீடு மூன்றாம் எண் வீடு. அது காலியாக இருந்தது அவளை மகிழ்ச்சிக்குள்ளாக்கியது. வீட்டில் கொஞ்சம் வேலையிருக்கிறது, வேறு வீட்டைப் பாருங்கள் என்று தரகர் சொன்னபோது சாரதா மறுத்துவிட்டாள். எந்த வசதியும் இல்லாவிட்டாலும் பரவாயில்லை. இந்த வீடுதான் வேண்டும் என்று சாவியை வாங்கிக் கொண்டாள். அவர்கள் குடிவந்த பிறகுதான் குளியலறையிலும் சமையல் கட்டிலும் மிச்சமிருந்த வேலைகளையெல்லாம் பார்த்து முடித்தார்கள். மூன்று என்ற எண் கொடுக்கப்பட்டால் போதும், கண்ணை மூடிக்கொண்டு அதை வாங்கிக் கொள்வாள்.

குட்டியானையில் ஏற்றிக்கொண்டு வந்த தங்கள் உடமைகளையெல்லாம் இறக்கி வீட்டுக்குக் கொண்டுவந்தபோது தன்னுடைய எதிர் வீடான நான்காம் எண் வீட்டிலிருந்து யாராவது எட்டிப் பார்ப்பார்கள் என்று சாரதா எதிர்பார்த்தாள். அப்படி யாரும் எட்டிப் பார்க்கவில்லை. அந்த வீட்டின் வாசலைப் பார்த்தாள். ஒரு ஜோடி செருப்பு மட்டுமே கிடந்தது. உள்ளே ஓர் ஆண் இருக்கிறான், இங்கே மூன்று பெண்கள் எதிர்வீட்டுக்குக் குடிவந்திருக்கிறோம் என்ற எந்த செய்தியும் தெரியாமல். மூன்று பெண்களில் எத்தனைப் பேர் இளம்பெண்கள் என்று இந்நேரம் தெரிந்துகொள்ள ஆவல் எழுந்திருக்க வேண்டாமா? என்ன மனிதன் அவன். ஒருவேளை கிழவனாக இருக்குமோ. உடமைகளை ஏற்றிக்கொண்டே இத்தனையும் மனதில் நினைத்துக் கொண்டாள் சாரதா. ராஜிக்கு அப்படி எதுவும் தோன்றியதில்லை. அவள் தன் கனத்த மார்புகள் பிதுங்கப் பிதுங்க சுமைகளை இறக்கி வீட்டுக்குள் வைத்துக் கொண்டிருந்தாள். குட்டியானையை ஓட்டி வந்தவன் நடுத்தர வயதுடையவனாக இருந்தபோதும் காசநோயால் பீடிக்கப்பட்டவனைப்போல் மெலிந்து காணப்பட்டான். அவனிடம் சுமைகளை இறக்கி வைக்கச் சொல்ல மனம் வரவில்லை. வண்டியை நிறுத்திவிட்டு கொஞ்சம் தூரத்தில் போய் நின்று ஒரு பீடியைப் பற்ற வைத்துக்கொண்டு அவன் நின்று கொண்டான்.

சாரதாவும் ராஜியும் பொருட்களை இறக்கிக் கொண்டு வந்து வீட்டில் வைக்க அவளுடைய அம்மா வீட்டில் அவற்றை வைக்க வேண்டிய இடங்களை சீர் செய்து கொண்டிருந்தாள். பொருட்களை இறக்கிக்கொண்டு குட்டியானையை அனுப்பிவிட்டு வீட்டுக்கு வந்த சாரதா, உள் பக்கம் தாழிட்ட நான்காம் எண் வீட்டையும், வெளியே கிடந்த செருப்பையும் வெறுப்புணர்ச்சியுடன் பார்த்துவிட்டு உள்ளே சென்றாள்.

வீட்டைக் கூட்டிப் பெருக்கி கழுவி, பொருட்களை வைக்க வேண்டிய இடத்தில் வைத்து முகம் கழுவிக்கொண்டு வந்து ஹாலில் உட்கார்ந்தபோது சாரதா தன் அம்மாவின் முகத்தையும் ராஜியின் முகத்தையும் பார்த்தாள். ராஜி முகத்தில் ஒன்றும் தெரியவில்லை. அவள் தொலைக்காட்சிக்கு கேபிள் இணைப்பு கொடுப்பது பற்றி பேசிக்கொண்டிருந்தாள். ஆனால், அம்மா சோர்ந்து போயிருந்தாள். அறுபது வயதுதான் இருக்கும். பார்ப்பதற்கு அதைவிட கூடுதலான வயதைக் கொண்டவளாகக் காணப்பட்டாள். இருபது வருடங்களாக வெறுமையான வாழ்க்கை. இரண்டு பெண் பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கி விடுவதைத் தவிர வேறு நோக்கமில்லை என்பது போல் ஒரு பிடிவாதமான வெறுமை. வெறுமையை அவளும் விடுவதாயில்லை. அவளை வெறுமையும் விடுவதாயில்லை. அப்படியோர் ஒப்பந்தம் போட்டுக்கொண்டு வாழ்கிறாள். அழுத்தமும் சோர்வும் கடகடவென்று அவளது உடலைத் தளர்த்தி முதுமைக்கு நகர்த்திக் கொண்டு செல்வதை அறிந்திருந்தும் அந்த முதுமையை வேண்டி விரும்புபவளைப் போல் அதனுடன் ஒத்துழைத்து நடக்கிறாள்.

‘‘சாரதா…”

அம்மாவின் குரல் நினைவைக் கலைத்தது.

ராஜியையும் அம்மாவையும் நினைக்கத் தொடங்கியவுடன் நேரம் போனதே தெரியவில்லை. நேரம் கடகடவென்று ஓடி ஒன்பதில் நின்று கொண்டிருந்தது. ஒரு பெருமூச்சை விட்டுவிட்டு தொலைக்காட்சியில் ஓடும் நிழல்களை வெறிக்கத் தொடங்கினாள் சாரதா. அம்மா தன் இரண்டு மகள்களையும் மாறிமாறி பார்த்துவிட்டு ஓர் உறைந்த சித்திரத்தைப் போல் ஆகிவிட்டாள். உட்கார்ந்த இடத்திலேயே அப்படியே சரிந்து படுத்துக் கொண்டவளை எண்ணங்கள் ஏறி அழுத்திக் கொண்டன. முப்பது வயதில் தன் வாழ்க்கையில் எல்லாமே நடந்து முடிந்து போனதை நினைவுக்குக் கொண்டு வந்து ஆழ்ந்த துயரத்தில் அமிழ்ந்தவளை சாரதா சோர்ந்த கண்களால் பார்த்தாள். அம்மாவின் வாழ்க்கையில் ஒரு அர்த்தத்தையும் ஏற்படுத்தாமல் குடித்து அழிந்துபோன அப்பாவின் கறுத்த, மெல்லிய உருவம் நிழலாடியது. அந்த அறையில் எங்கோ படுத்துக்கொண்டு ஈரக்குலை அறுந்து விடுவதைப்போல் இருமிக்கொண்டு இந்த மூன்று பேதைகளின் முகத்தையும் ஒரு கேலியான தோரணையுடன் அவர் பார்த்துக் கொண்டிருக்கக் கூடும் என்று தோன்றியது. அந்த மனிதன் அப்படியொரு தாழ்வு மனப்பான்மைக்கு சொந்தக்காரர். அந்த மனநிலைக்கு அவரிடம் ஆயிரம் காரணங்கள் இருந்தன. அழகான மனைவி ஒரு காரணம், இரண்டு பெண் பிள்ளைகள் ஒரு காரணம், தான் உதவாக்கரை என்ற எண்ணம் ஒரு காரணம், தன் அவலட்சணம் ஒரு காரணம், தனது கறுப்பு நிறம் ஒரு காரணம், தனது நீடித்த நோய்மை ஒரு காரணம், மனைவியின் கட்டுக்குலையாத உடல் காரணம்… இப்படி ஆயிரம் காரணங்கள். கடைசிவரை அவர் நிம்மதியாய் இருக்கவில்லை. சாகும்போது கூட அம்மாவின் முகத்தில் கையில் படிந்திருந்த ஏதோவொரு கறுப்பு நிற டானிக்கை பூசிவிட்டுத்தான் இறந்துபோனார். அம்மாவின் மஞ்சள் நிறத்துக்கும் அவருடைய கறுப்பு நிறத்துக்கும் ஒரு பிரச்சினையுமில்லை. அப்பாவின் அந்த கறுப்பு நிறத்தைக் குழைத்து பூசித்தான் அம்மா எங்கள் இருவரையும் பெற்றெடுத்தாள். அம்மாவுக்கு அப்பாவோட கறுப்பும் சரி, மெலிவும் சரி, முகமும் சரி ஒரு பிரச்சினையுமில்லை. அவள் அதை மனப்பூர்வமாக கிரகித்துக் கொண்டிருந்தாள். அந்த மனிதர்தான் தன் நிறம், தோற்றம், உடல் வலு எல்லாவற்றையும் அம்மாவோடு ஒப்பிட்டு ஒப்பிட்டு தன்னைத் தாழ்த்திக்கொண்டு குடும்பத்தையே நிர்க்கதியான சூழலுக்கு ஆளாக்கினார். அவருடைய உழைப்பு அவருக்கே பெரிய இடராக மாறிக்கொண்டிருந்தது. மனைவியும் மகள்களும் தன் உழைப்பைச் சுரண்டிக் கொழுத்து தளுக்கித் திரிகிறார்கள் என்று கொச்சையாக நினைக்க ஆரம்பித்தார். தாழ்வு எண்ணம் உருவாகி உருவாகி அவரை குடியின் பக்கம் திசை திருப்பிக் கொண்டிருந்ததை நாங்கள் மூன்று பேரும் கலக்கத்தோடு கடந்து கொண்டிருந்தோம். குடிபோதையில் எத்தனையோ நாள் அவருடைய மனதில் இருக்கும் அந்த தாழ்வு எண்ணத்தில் விளைந்த குரலை எங்களிடம் உயர்த்திக் காட்டுவார். அதைக் கேட்கும் போதெல்லாம் அம்மா நொறுங்கிப் போவாள். மனதாலும் நினைவாலும் தன்னைத் தாழ்த்திக்கொண்ட அவர் தனது மரணத்தை அடிக்கடி உறுதிபடுத்திவிட்டு பிழைத்துக் கொண்டிருந்தார். எத்தனை நாள்தான் அந்த நாடகத்தை காலம் பார்த்துக் கொண்டிருக்கும். காலத்துக்கே பொறுக்கவில்லை. ஒருநாள் அம்மாவின் கண்களைப் பார்த்தபடியே அவர் உயிர் பிரிந்து போனது. வாழ்வின் இரண்டாம் அத்தியாயம் தொடங்கியபோது அம்மாவின் மங்கலத்தில் கை வைத்துவிட்டுப் போய்விட்டார்.

அம்மா சுவரை ஒட்டி நெருங்கி சுருண்டிருந்தாள். ஒரு போர்வையை எடுத்து வந்து அவளுடைய தளர்ந்த உடலை மூடினாள் சாரதா. இவை எதுவுமே தெரியாதவளாய் அறையில் நிரம்பியிருந்த வண்ணங்களின் ஒளியில் ராஜியின் முகம் ஒளிர்ந்து கொண்டிருந்தது. அமர்ந்திருந்த இடத்திலேயே தன் உடலை சரித்துக் கொண்டாள் சாரதா. ஏனோ மனதில் ஒரே நேரத்தில் அடுத்தடுத்து அப்பாவின் குழம்பிய முகமும், வாசுவின் சோர்ந்த முகமும் நினைவுக்கு வந்து கொண்டிருந்தன.

ராஜி என்ன நினைத்தாளோ தெரியவில்லை. தொலைக்காட்சியை நிறுத்திவிட்டு, சுவரில் மாட்டியிருந்த கடிகாரத்தைப் பார்த்துவிட்டு, கதவைத் திறந்து வெளியே எட்டிப் பார்த்தாள். வாசுவின் வீட்டுக் கதவைத்தான் அவள் அப்படி அவசரமாய் பார்க்கிறாள். வராந்தாவின் முகப்பில் எரிந்த விளக்கொளியில் அரக்கு நிறத்திலிருக்கும் அந்த வீட்டுக்கதவு மௌனமாய் உறைந்திருந்தது. ஜன்னல் வழியே உள்ளே இன்னும் வெளிச்சம் இருக்கிறதென்று உறுதிபடுத்திக் கொண்டவள், அவன் கழற்றி விட்டிருந்த ரப்பர் செருப்புகள் அருகருகே இல்லாமல் ஒழுங்கற்று சிதறி கிடப்பதைப் பார்த்தாள். கதவைச் சாத்திக்கொண்டு உள்ளே வந்து படுத்துக் கொண்டவளை சாரதா ஓர் ஆழ்ந்த கவலையுடன் கவனித்தாள். மங்கலான ஸீரோ வாட்ஸ் வெளிச்சத்தில் ராஜி தன் வெம்பும் மார்புகளை போர்வைக்குள் அழுத்தி ஆற்றிக் கொண்டிருந்தாள்.

3.

மணி பன்னிரெண்டு. அந்த இரண்டு மாடி குடியிருப்பு ஒரு சத்தமும் இல்லாமல் ஆழ்ந்த அமைதியில் இருந்தது. தரையில் உட்கார்ந்து தன் முன்னாலிருந்த விஸ்கியை க்ளாஸில் ஊற்றிக் கொண்டிருந்தான் வாசு. அவனுடைய தலை ஏற்கெனவே குடித்திருந்த விஸ்கியால் தொங்கிக் கொண்டிருந்தது. நறுக்கி வைத்த கொய்யாப் பழத்துண்டுகள் ஒரு சிறிய சில்வர் தட்டில் உலர்ந்து கொண்டிருந்தன.

எதையோ பேசுவதுபோல் அவன் பாவனை செய்தபோது ஒரு வறட்டு இருமல் வெளியேறி கண்களை கலங்கடித்தது. அவனுடைய உடல் பம்பரத்தைப்போல் சுற்றத் தொடங்கியது. அந்த பம்பரத்தை கையில் ஏந்தி ஆட்டுவிக்கும் பெண்ணின் பெயரை அவன் வாய் குழறியபடி சொன்னான்.

‘‘சுகுணா…”
சுகுணாவின் அழைப்பு எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்பவனைப்போல் தனக்கு அருகில் கிடந்த ஆண்ட்ராய்டு போனை அந்த மயக்கத்திலும் தன் துவண்ட தலையைத் திருப்பித் திருப்பிப் பார்த்துக் கொண்டிருந்தான். ரிங்டோன் ஒலியைத் துண்டித்து போனை அதிர்வில் போட்டிருந்தான். அது ஒளிர்ந்து, அதிலிருந்து ஒரு நீலவெளிச்சம் வெளியேறி அறையெங்கும் பரவும் அந்த அபாயமான நொடிப்பொழுது அவனை அச்சப்படுத்திக் கொண்டிருந்தது. அவள் நிச்சயம் உறங்கியிருக்க மாட்டாள் என்று அவனுக்குத் தெரியும். இன்று வருவதாகச் சொல்லியிருந்தான். பொழுதுக்கும் ஆக்ரமித்துக் கொண்ட மன அழுத்தம் அவனை அங்குப் போகவிடவில்லை. அவளிடம் கொண்டுள்ள உறவுக்கு என்ன அர்த்தம் என்று மனம் யோசிக்கத் தொடங்கியதிலிருந்து அவளைத் தேடிப்போவதை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துக் கொள்ளத் தொடங்கி விட்டான். ஆனால், இந்தக் கருமம் பிடித்த காம உணர்வு தலைக்கேறும் போதெல்லாம் அவனுடைய கால்கள் எல்லா கட்டுப்பாடுகளையும் உடைத்துக்கொண்டு அவளை நோக்கி நடந்து கொண்டிருந்தன. இன்று அந்தக் கருமம் பிடித்த காமம் கூட உதவவில்லை. இந்தத் திடீர் விலகல் சுகுணாவை சித்திரவதை செய்து கொண்டிருந்தது. அவளால் இதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. நேரம் குதிரையைப்போல் வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நேரம் போனை கையில் வைத்துக்கொண்டு அந்தக் குறுந்திரையில் தெரியும் தன் பெயரை வெறுப்புடன் பார்த்துக் கொண்டிருப்பாள் என்று வாசு நினைத்தான். இவ்வளவு நேரமாகியும் அவள் இன்னும் அழைக்காமல் இருப்பது இன்னும் அச்சத்தைக் கொடுத்தது. போதை கலைவதைப்போல் இருந்தது. இன்னும் கொஞ்சம் விஸ்கியை ஊற்றிக் கொண்டான். வாய் கசப்பதுபோல் இருந்தது. சுகுணா அந்த அறையின் ஏதோவொரு மூலையில் உட்கார்ந்து தன்னை வைத்தக் கண் வாங்காமல் பார்ப்பதுபோல் இருந்தது. ‘நீ இப்ப வருவியா மாட்டியா?’ என்று கெஞ்சிக் கேட்பதுபோல் இருந்தது. அந்த போதையிலும் அவன் உடல் நடுங்கியது. மிச்சமிருந்த விஸ்கியை பாட்டிலோடு வாயில் ஊற்றிக்கொண்டான். வாசுவின் தலை குத்திட்டுக் கொண்டது. அந்த அறையில் நிரம்பியிருக்கும் சுகுணாவின் எண்ண அலைகளுக்கு முன் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டான். அவள் தன் கால்களை உதறி அவனை தள்ளிவிட்டாள். வாசு வாய் குழறியபடி அவளிடம் இறைஞ்சினான்.

‘‘மன்னிச்சிடு சுகுணா…”

அவள் மன்னிக்கத் தயாராயில்லை. கால்களை இழுத்துக் கொண்டாள். ஓவென்று குரலெடுத்து அழுதாள். அந்த அழுகைச் சத்தம் குடியிருப்பில் யாருக்கும் கேட்டுவிடக் கூடாது என்கிற பயத்தில் அவளை இறுக்கி அணைத்து வாயைப் பொத்தினான். ஆனால், அவளுடைய குரல் இந்த நகரையே எழுப்பி விடும் அளவுக்கு ஓங்கி ஒலித்தது. வாசு அச்சத்தில் அழத் தொடங்கினான். சுகுணாவிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டே தரையில் சாய்ந்து விட்டான். அவனிடமிருந்து பிசிறாக சுகுணாவின் பெயர் கேட்டுக் கொண்டிருந்தது. சுகுணாவின் நினைவு அந்த அறையின் உள்ளே கடும் வெப்பமாக அலைந்து கொண்டிருந்தது.

4.

தன்னுடைய இரண்டு குழந்தைகளையும் அருகில் போட்டு உறங்கடித்துவிட்டு வாசல் கதவிலேயே கண்களை வைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தாள் சுகுணா. புதிதாய் வளர்ந்து கொண்டிருக்கும் அந்த நகரின் வீடுகள் ஆழ்ந்த அமைதியில் இருந்தன. தெருவிளக்கு வெளிச்சத்திலும், ஒவ்வொரு வீட்டின் வெளி வராந்தா விளக்கொளியிலும், ஒவ்வொரு வீட்டு முகப்பிலும் வளர்ந்திருக்கும் பூச்செடிகள் ஒளிர்ந்து கொண்டிருந்தன. சுகுணா வீட்டின் முகப்பில் மஞ்சள் அலரி தழைத்து வளர்ந்திருந்தது. வாசு இரவில்தான் வருவான் என்பதால் எப்போதும் வராந்தா விளக்கை சுகுணா அணைத்தே வைத்திருப்பாள். அவன் வருகை தாமதமாகும் ஒவ்வொரு நொடியும் கொடுத்த மரண அவஸ்தையைத் தாங்கிக்கொள்ள முடியாமல் இன்று சற்று நேரத்துக்கு முன்பு விளக்கைப் போட்டுவிட்டு, அது உமிழும் குறைந்த ஒளியில் ஒரு பூனையைப்போல் ஒடுங்கி உட்கார்ந்திருந்தாள். ஒரு போந்தா கோழி குஞ்சைப்போல் உள்ளங்கையில் வைத்து மூடிக்கொள்ளும் அளவுக்கு மஞ்சளாய், சிறியதாய் அந்த ஸீரோ வாட்ஸ் பல்ப் எரிந்து கொண்டிருந்தது.

அவசர அவசரமாக நான்கு திசைகளிலும் வளர்ந்து கொண்டிருந்தது அந்த நகரம். பெட்ரோல் பங்குகள், பைக் ஷோ-ரூம்கள், மளிகைக் கடைகள், ஓட்டல்கள், பட்டறைகள், கல்யாண மண்டபங்கள், பல்பொருள் அங்காடிகள், சூப்பு கடைகள் என்று அதனுடைய திடீர் வளர்ச்சி அந்த நகரத்தின் நில மதிப்பை நாளுக்குநாள் உயர்த்திக்கொண்டே இருக்கிறது. கிழக்கு முகமாகப் போகும் நெடுஞ்சாலையின் இரண்டு ஓரங்களிலும் புதிய ஷோ-ரூம்கள் முளைத்துவிட்ட அந்த ஏரியாவில், செம்மண் கொட்டிய வீதியைப் பார்த்தபடி சுகுணா அந்த குறைந்த ஒளியில் மோகமும் கோபமும் ஒரே நேரத்தில் ஆட்கொண்டவளாக உட்கார்ந்திருந்தாள்.

மூன்று வருடங்களுக்கு முன்பு சாலை விபத்தில் அடிபட்ட சிவராஜனை ஆஸ்பத்திரிக்கு கொண்டு போனது முதல், காப்பாற்ற முடியாமல் போன பிறகு அவன் உடலை போஸ்ட்மார்ட்டம் முடித்து, வீட்டுக்கு கொண்டு வந்து சேர்த்து பிறகு அவனை எரிக்கும் வரை கூடவே இருந்த வாசு, உறவுகள் ஏதுமின்றி இரண்டு குழந்தைகளோடு தனித்து நின்ற சுகுணாவுக்கு கிடைத்த ஒரே பெரிய உறவாகத் தெரிந்தான்.

வாசுவின் இருப்பும் நினைவும் பாதுகாப்பானதாக மாறுவதற்கு இரண்டு ஆண்டுகள் தேவைப்பட்டன. வாசுவுடன் தன்னைப் பகிர்ந்து கொள்வதற்கு தலைப்பட்ட அந்த மழைநாளை சுகுணா ஒருபோதும் மறக்க முடியாதவளாக இருந்தாள். அந்த மழைநாள் ஒரு கொடுமையான துயரத்தை வழங்கியிருந்தது. அது செப்டம்பர் மாதம். ஆகஸ்ட் பிற்பாதியிலிருந்தே மழை பெய்து கொண்டிருந்தது. செப்டம்பரில் விடாமல் ஒருவார காலம் பெய்த தீவிர மழையில் முதலில் அவளுக்கு வைரஸ் காய்ச்சல் வந்தது. அவளைப் காப்பாற்றுவதற்கே வாசு அவ்வளவு கஷ்டப்பட வேண்டியிருந்தது. அடுத்து அவளுடைய குழந்தைகள் ஒருவர் மாற்றி ஒருவர் நோயால் தாக்கப்பட்டபோது அவள் நிலைகுலைந்து போனாள். அவர்களைக் காப்பாற்றி அவளுடைய கைகளில் விட்டுவிட்டுப் போனவன் நோய் தாக்கி படுக்கையில் விழுந்ததை அவள் அறியவில்லை. நான்கு நாட்கள் தொடர்ச்சியாக அவனுடைய முகத்தை அவன் காட்டாமல் இருந்ததில்லை. ஒருநாளின் ஒருபொழுதாவது சுகுணாவையும் அவளுடைய குழந்தைகளையும் எப்படியாவது வந்து பார்த்துவிட்டுப் போய்விடுவான். ஆனால், நான்கு நாட்களாக வரவில்லை. அவன் வரவில்லை என்பதும், அவன் முகத்தைப் பார்க்கவில்லை என்பதும் ஒருவிதமான தவிப்பைத் தரும் என்ற உணர்வு சுகுணாவுக்கே புதிதாக இருந்தது. அந்த உணர்வுக்கு என்ன அர்த்தம்? அவளுக்கு விடை தெரியவில்லை. ஆனால், வாசுவை கண்களும் மனமும் தேடத் தொடங்கின. அவனுக்கு என்ன ஆயிற்று? அவன் இந்த நகரத்தில் எங்கு தங்கியிருக்கிறான்? இதுநாள் வரை அவனுடைய வீடு இந்த ஊரின் எந்த நகரில், எந்தத் தெருவில் இருக்கிறதென்று அவள் கேட்டுக்கொண்டதே இல்லை. வாசுவை சிவராஜின் நெருங்கிய நண்பன் என்ற வகையில் மட்டுமே தெரியும். நல்லவன், சிவராஜுடன் அடிக்கடி வீட்டுக்கு வருவான் போவான். சிவராஜ் இறந்த பிறகு சில உதவிகள் செய்து கொடுக்கிறான். அவ்வளவுதான் வாசுவுக்கும் தனக்கும் இருக்கும் உறவு என்று நினைத்திருந்தவளுக்கு நான்கு நாட்கள் அவனைப் பார்க்காமல் இருந்ததில் இவ்வளவு குழப்பமும் கேள்விகளும் வந்தது வியப்பையும் நடுக்கத்தையும் கொடுத்தது. அவனுடைய இருப்புக்கும் இன்மைக்கும் நடுவில் அவள் மனம் தடுமாறிக் கொண்டிருந்தது. பெரிய மனப்போராட்டத்துக்குப் பிறகு, கடைசியில் அவளுக்கு அவனுடைய இருப்பு தேவையாக இருக்கிறது என்பதைக் கண்டுபிடித்தாள். வாசுவை பற்றி யாரிடம் விசாரித்து அறிவது என்று தவித்துக் கொண்டிருந்தவளுக்கு பக்கத்து வீட்டு கோமதிதான் சொன்னாள்,

‘‘சுகுணா… சிவராஜோட ஒங்க வீட்டுக்கு ஒரு தம்பி வருவாப்ளியே… ரொம்ப முடியாம கெடக்காப்ளயாம். பொழைக்க மாட்டாப்ளன்னு கூட சொல்றாங்க… போயி ஒருதாட்டி என்னான்னு பாத்தியா?”

அந்தச் செய்தி சுகுணாவை சுக்கு நூறாய் உடைத்துப் போட்டுவிட்டது.

‘‘ஐயோ… எனக்கு தெரியாதேக்கா… அவரு ஊடு எங்கிருக்குன்னு கூட கேட்டுக்கிலியே…”

‘‘அடி… என்ன இப்பிடி இருக்கவ… சிவராஜி போனப்பறம் அந்த தம்பிதானே வந்து அப்பப்ப உதவி செஞ்சிட்டு போவுது… பாவம்.. நல்ல பையன். அதக்கூட தெரிஞ்சிக்காம இருக்கியே… என்ன மனுசிடி நீ.. போ… போயி மொதல்ல ஒருதாட்டி பாத்துட்டு வா”

கோமதி சொன்ன முகவரியைத் தேடி அவள் போனபோது வாசுவை ஆம்புலன்ஸ் வந்து ஏற்றிக்கொண்டு போய்விட்டது என்று சொன்னார்கள். முதன்முறை வாசுவின் வீட்டுக்கு வந்திருக்கிறாள். ஆனால், அவனை ஆம்புலன்ஸில் ஏற்றிக்கொண்டு போய்விட்டார்கள். என்ன மாதிரியான சகுனம் இது? நல்லதா கெட்டதா? சுகுணாவுக்கு புரியவில்லை. அவனுடைய வீட்டுக்கு வெளியே சிலநிமிடம் உறைந்துபோய் நின்றவளைக் குறித்து அங்கிருந்தவர்கள் மெதுவான குரலில் ஏதேதோ பேசிக்கொண்டார்கள். அந்தப் பேச்சின் சாரம்சம் என்னவென்று சுகுணாவுக்கு தெரியும்.

அவள் அங்கிருந்து அரசு மருத்துவமனை சென்றபோது வாசுவை அரியலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுபோய் விட்டார்கள் என்றாள் ஒரு மெலிந்த தேகம் கொண்ட செவிலி. எந்தக் குறிப்புமின்றி கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டு அவள் வீட்டுக்கு வந்தபோது வானம் இருட்டிக்கொண்டு வந்தது. அன்று இரவு நீண்ட நேரம் விடாமல் கனத்த மழைப் பெய்தது. இடியும் மின்னலும் அதிகரித்த அந்த இரவில் வாசுவின் முகத்தை நினைவு கூர்ந்து விம்மி அழுதாள் சுகுணா. மின்சாரம் இல்லாத அந்த இரவையும், விடாமல் பெய்த மழையையும், துயரம் தாளாமல் சிந்திய கண்ணீரையும் இதற்கு முன்பு ஒருநாளும் ஒருபோதும் சந்தித்ததே இல்லை.

மறுநாள்… பிள்ளைகளைக் கூட்டிக்கொண்டு அரியலூர் அரசு மருத்துவமனைக்குச் சென்று வாசுவைப் பார்த்தபோது அவளுக்கு அவனைக் கட்டிக்கொண்டு அழவேண்டும் போலிருந்தது. வாசு, சுய நினைவில்லாமல் மயங்கிய நிலையிலிருந்தான். யாரோ ஒருவன் அவனுடன் துணைக்கு இருந்தான். சிவராஜிக்கு வாசுவைப்போல், வாசுவுக்கென்று கிடைத்த ஒரு நல்ல நண்பன்.

சிவராஜ் அடிபட்டு கிடக்கிறான் என்று செய்தி அறிந்தபோது எப்படி துடித்ததோ அதே மாதிரி இப்போதும் சுகுணாவின் மனம் துடியாய் துடித்தது. அவளது கண்களில் தளும்பி வெளியே இறங்காத கண்ணீரைப் பார்த்ததும் வாசுவின் நண்பன் எதுவும் பேசாமல் வெளியே சென்றபோது வாசுவின் அருகில் தன் குழந்தைகளோடு அமர்ந்து அவனை வெறுமையாக அவள் பார்த்தாள். அந்தப் பார்வையில் ஒரு வேண்டுதல் இருந்தது. நீ திரும்பி வந்துவிடு, இனிமேல் தனியாக இருக்க வேண்டாம், எங்களோடு தங்கிவிடு, ஆம், என்னோடும் என் குழந்தைகளோடும் தங்கிவிடு, என் தனிமை கூட உன் தனிமையோடு சேர்ந்து தொலையட்டும் என்பதாக இருந்தது.

வாசு குணமாகி வீடு வந்தபோது சுகுணாவின் அந்த பார்வைக்கு ஒரு பொருள் கிடைத்ததுபோல் வாசு போன் செய்து பேசினான். சுகுணா அமைதியாக இருந்தாள். நீண்ட மௌனத்திற்கு பிறகு,

‘‘வாசு… நீ வீட்டுக்கு வந்திடு, இனிமே நீ அங்க தனியா இருக்க வேணாம்” என்றாள். அந்தக் குரலுக்கு காத்திருந்தவன் போல் வாசு ஒரு வார்த்தையும் பேசவில்லை. அன்று மாலைப்பொழுதே அறையைக் காலி செய்துவிட்டு அவள் வீட்டுக்கு வந்துவிட்டான். அன்று இரவு திரும்பவும் நல்ல மழை பெய்தது. குழந்தைகள் நெடுநேரம் வாசுவிடம் பேசி சிரித்துக் கொண்டிருந்தார்கள். வராந்தாவை ஒட்டிய சிறிய அறையில் வாசு படுத்துக் கொண்டான். உள் தாழ்ப்பாள் போட்டுக்கொண்டு குழந்தைகளை அணைத்துப் படுத்துக்கொண்ட சுகுணாவுக்கு, குழந்தைகள் இன்று ஆழ்ந்து உறங்குவதாகத் தோன்றியது. பின்னிரவுக்குப் பிறகும் மழையின் தீவிரம் குறையவில்லை. ஜன்னல் கதவுகளைத் தட்டிக் கொண்டிருந்த குளிர்ந்த காற்று சுகுணாவை உறங்க விடவில்லை.

சுகுணா, மெல்ல கதவைத் திறந்து, வெளிச்சுவரில் இருந்த ஸீரோ வாட்ஸ் பல்புக்கான ஸ்விட்சை அணைத்துவிட்டு வராந்தாவில் வந்து நின்றபோது தெரு விளக்குகள் ஈரத்தால் மங்கியவைப் போல் தெரிந்தன. வாசுவிடமிருந்து தூங்குவதற்கான அறிகுறிகள் கேட்கிறதா என்று கூர்ந்து கேட்டாள். தவளைகளின் சத்தம் தவிர அவளால் ஒன்றையும் அறிய முடியவில்லை. கொஞ்ச நேரம் அந்த இருளோடு இருளாய் நின்றிருந்துவிட்டு போய் கதவைத் தொட்டவளை வாசுவின் மெல்லிய குரல் நிறுத்தியது. கதவை ஒரு மெல்லிய கோடு அளவு திறந்து வைத்துக்கொண்டு வாசல் திண்டில் நின்றிருந்தான் வாசு. அவனிடமிருந்து மாத்திரைகளின் வாசனையடித்தது. கரிய அவனுடைய உருவத்தை அவளால் பார்க்க முடிந்தது.

திறந்த கதவை மெதுவாக மூடிவிட்டு அவனையே பார்த்தபடி நின்றாள் சுகுணா. சற்று சீராகப் பெய்து கொண்டிருந்த மழை அதற்குப் பிறகு வளைத்து வளைத்து சாரலும் தூவானமுமாகப் பெய்தது. சுகுணா தன் குழந்தைகளோடு போய் மீண்டும் படுத்தபோது அந்த அறை முழுக்க மாத்திரை வாசனையடித்தது. தவளைகள் ஓயாமல் கத்திக் கொண்டிருந்தன.
சுகுணா தன் வீட்டின் வராந்தாவில் எரிந்து கொண்டிருக்கும் ஸீரோ வாட்ஸ் பல்பை அணைத்துவிட்டுப் போய் படுத்துக் கொண்டாள்.

5.

மணி இரண்டு, நடு இரவு. தன் அறையில், தன்னுடைய செல்போனில் நீல வெளிச்சம் தெரிகிறதா என்று பார்த்துக் கொண்டிருந்தான் வாசு. ஒரு மின்மினி அளவுக்குக்கூட அவன் அறையில் வெளிச்சம் சுற்றவில்லை. மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்ததால் அறையெங்கும் இருள் நிறைந்திருந்தது. வாசுவின் மூளையில் ஏறியிருந்த போதையை சுகுணாவின் நினைவு குறைத்துக் கொண்டே இருந்தது. மனதில் ஏறி அழுத்திக் கொண்டிருந்த குழப்பங்கள் மெதுவாக விலகத் தொடங்கின. யாரோ அவனை தொடர்ந்து கேள்விகளால் துளைத்துக் கொண்டிருந்தார்கள். அவன் எங்கு போனாலும் அந்தக்குரல் அவனைப் பின்தொடர்ந்து கொண்டே இருந்தது.

‘சுகுணாவோட வாழ்க்கையை ஏன் கேள்விக்குறி ஆக்குற?’

‘உனக்குன்னு ஒரு வாழ்க்கையை ஏன் விரும்ப மாட்டேங்குற?’
‘சுகுணாவோட மானம் உன்னால போகுதே, அது உனக்குத் தெரியுமா? அதுக்கு நீ என்ன செய்யப் போற?’

‘ஒன்னு… அவளை ஊரறிய கல்யாணம் பண்ணிக்க, இல்லேன்னா… விட்டு விலகிப் போயிடு’

இப்படியான கேள்விகள். யார் கேட்கிறார்கள்? அந்தக் குரல் எங்கிருந்து வருகிறது? நான் என்ன செய்ய வேண்டும்? வாசுவுக்கு எதுவுமே புரியவில்லை. அந்தக் குரல் அவனுக்குள் இருந்து வருகிறதா? இல்லை… அவனை ஒருவிதமாகப் பார்ப்பவர்களிடமிருந்து வருகிறதா? இல்லை… சுகுணாவின் எண்ண அலைகள் அப்படி கேள்விகளாக மாறி தன்னைச் சுற்றுகிறதா?

இந்தக் கேள்விகள் ஒரு பூச்சியைப்போல் மனதைச் சுரண்ட ஆரம்பித்த பிறகு சுகுணாவைப் பார்க்க அவன் போகவில்லை. ஏற்கெனவே அவனுக்கு ரொம்ப பரிச்சயமான தனிமையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு கூடவே குடிப்பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டான். அது கொஞ்சம் ஆறுதலாக இருந்ததே தவிர, தீர்வாக அமையவில்லை.

அறையில் மீண்டும் விளக்கு ஒளிர்ந்த போது தலை வலிப்பது போல் இருந்தது. போதை சற்றேறக்குறைய பாதிக்கும் கீழே குறைந்துவிட்டிருந்தது. ஒரு சிகரெட்டை பற்றவைத்துக் கொண்டு வெளியே வந்து புகையை இழுத்து இருளில் ஊதிவிட்டான்.

அந்தப் புகை புதிய ஷோரூம்கள் அதிகரித்துவிட்ட, புதிய வீடுகள் முளைக்கத் தொடங்கிவிட்ட சுகுணாவின் வீடு இருக்கும் திசை பார்த்து நீந்திக் கொண்டிருந்தது. வாசு பாதி வரை எரிந்திருந்த சிகரெட் துண்டை கீழே போட்டு காலால் நசுக்கிவிட்டு, பன்னிரெண்டு வீடுகள் கொண்ட அந்தக் குடியிருப்பை மேலிருந்து கீழாக ஒரு பார்வை பார்த்தான். அடுத்தத் தெருவில் கூர்க்காவின் விசில் சத்தம் கேட்கத் தொடங்கியபோது அவனுடைய கால்கள் கதவு எண் 4, பொன்னூஞ்சல் நகர், ஜெயங்கொண்டம் சாலை நோக்கி நடக்கத் தொடங்கின.


மௌனன் யாத்ரீகா – மௌனன் யாத்ரீகா – இதுவரை ஏழு கவிதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் வெளியான நூல் “பாணர் வகையறா”. தொடர்புக்கு [email protected]

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular