Tuesday, March 19, 2024
Homesliderகாலம் கவிழ்த்த கோரத்தாண்டவம் - சு.வேணுகோபால்

காலம் கவிழ்த்த கோரத்தாண்டவம் – சு.வேணுகோபால்

கையறு நாவல் முன்னுரை

சமீப காலங்களில் மலேசிய நாவல் உலகில் நம்பிக்கை தரும் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. அ.ரங்கசாமியின் நினைவுச்சின்னம், சை.பீர்முகம்மதுவின் அக்கினி வளையங்கள் இரண்டும் முக்கியமான வரவுகள். இரண்டாம் உலகப்போர்ச் சூழலில் மலேசியத் தமிழர்கள் எதிர்கொண்ட நெருக்கடிகள், சிதைவுகள், அர்ப்பணிப்பு மிக்க செயல்பாடுகள், ஏமாற்றங்கள் என ஒரு பெரும் சித்திரத்தை அ.ரங்கசாமியின் நினைவுச்சின்னம் நாவல் காட்டுகிறது. அவரது மற்றொரு நாவலான இமயத் தியாகம், நேதாஜியின் இந்திய தேசிய இராணுவத்துடனும் இணைந்து தமிழர்கள் ஆற்றிய அளப்பரிய பணியை ஆவணமாக்கியிருப்பதைச் சொல்ல வேண்டும்.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னான மலேசிய தேசிய உணர்வு மேலோங்கி இருப்பது அறுபதுகளின் காலத்தில் கம்னியூச இயக்கச் செயல்பாடுகள் தீவிரம் பெற்றன. இதில் தமிழர்கள் இணைந்தும் ஒதுங்கியும் விலகியும் நின்ற தடத்தின் ஊடே ஒரு விடுதலையின் எழுச்சி எழுந்து வீழ்ந்துபட்ட சித்திரத்தை ‘அக்கினி வளையங்கள் நாவல் விவரிக்கிறது. சீ.முத்துசாமியின் ‘மலைக்காடு’ நாவலின் தமிழர்களின் உயர்விற்குப் பாடுபட்ட கணபதி போன்ற தலைவர்களின் தியாகங்கள் புனைவுகொள்ளாமல் தரவுகளாகத் தரப்பட்டுள்ளன. இந்நாவலில் கம்னியூசப் போராளக் குழுக்களில் தமிழ் இளைஞர்கள் சேர நேர்ந்த நிர்பந்தங்கள் பற்றிய தரவும் புனைவுமான சிறிய பகுதி காட்டப்படுகிறது.

அ.ரங்கசாமியின் நாவலில் வரலாற்றுத் தகவல்கள், புனைவின்வழி ஆவணங்களாக மாறியிருக்கின்றன. ‘அக்கினி வளையங்கள் நாவலில் தரவுகள் புனைவின் சாத்தியப்பாட்டுகளுக்குப் பேருதவி புரிந்திருக்கின்றன. சை.பீர் முகம்மது புனைவின் சாத்தியங்களான அக்கால வாழ்க்கையை விசாரணைக்கு உட்படுத்தியிருக்கிறார். ஆர்.சண்முகம் அவர்களின் சயாம் மரண இரயில்’ இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் இரயில் பாதை போடச்சென்ற தமிழர்களை ஒரு வரலாற்றுச் சாக்காக வைத்துக்கொண்டு காதலையும் கொலையையும் கலந்துகட்டி நிலத்தில் கால்பாவாத ஜனரஞ்சக இரசனைக்கேற்ப ‘ரொமேன்டிக்’ நாவலைத் தந்தார்.

மலேசிய வரலாற்றில் டாலரின் மதிப்பிழந்து 1967 சூழலில் நடந்த கலவரத்தை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட பாண்டியனின் ரிங்கிட், ஹின்ட்ராஃப் எழுச்சிக்குப்பின் இருந்த தமிழர்கள் பந்தாடப்பட்ட வாழ்வை அடிப்படையாகக் கொண்டு செல்வன் காசிலிங்கம் எழுதிய ‘மிச்சமிருப்பவர்கள்குறுநாவல் வரலாற்றின் தருணங்களைச் சொல்கின்றன. ம.நவீனின் ‘பேய்ச்சி’ நாவல் தனித்த வகையானது.

பா.சிங்காரத்தின் புயலிலே ஒரு தோணி தமிழர்கள் வாழ்வின் சாரங்களையும், ஒரு கால வரலாற்றின் சாற்றினையும் உறிஞ்சிக்கொண்டு புனைவில் நிகழ்த்தியிருக்கும் மகத்தான சாதனை தனியே உயரத்தில் நிற்கிறது.

இந்த வகையில் ஒரே சமயத்தில் இந்திரஜித்தும் (சிங்கப்பூர்), கோ.புண்ணியவானும் சயாம் இரயில் பாதை அமைக்கும் பணியில் தமிழர்கள் எதிர்கொண்ட துயரங்களை நாவலின் களமாகக் கொண்டு எழுதியிருக்கின்றனர். களம் ஒன்றே என்றாலும் இருவர் காட்டும் மனிதர்களின் குணங்கள் வேறாக இருக்கின்றன. இருவரின் பார்வையும் எழுத்துப்பாணியும் வேறாக இருக்கின்றன. இருவரும் பிரதானமாகச் சிறுகதையாளர்கள். அதன் தன்மை நாவலில் மேலோங்கியும் விடுகின்றன. புண்ணியவான் கூடுதலான விதத்தில் வாழ்வை ஆழ அகலத்தோடு தந்திருக்கிறார்.

புண்ணியவானின் ‘கையறு’ நாவல் இரண்டாம் உலகப்போரில் ஜப்பானிய படைகளின் மலேசிய நுழைவு தமிழர் வாழ்வில் ஏற்படுத்திய இரண்டு விதமான சிதைவுகளைப் பெரிய சித்திரங்களாகக் காட்டுகின்றன. ஒன்று, தோட்டக் காடுகளில் ஜப்பான் இராணுவம் ஏற்படுத்திய தாக்குதல்கள். மற்றொன்று சயாமிலிருந்து பர்மாவிற்கு இரயில் பாதை போட ஆசைகாட்டியும் ஏமாற்றியும் பிடித்து ஏற்றிச்செல்லப்பட்ட தமிழர்கள் பட்ட பெரும் பாடுகள், அவமானங்கள், துன்பங்கள் நாவலில் பேசப்படுகின்றன.

வரலாற்றின் தரவுகளை நாவலாகத் தரும் பாணியிலிருந்து முற்றாக விலகி மலேசியத் தமிழர்களின் மேல் விழுந்த காலத்தின் அலங்கோலத்தைப் புனைவின்வழி விரித்துக் காட்டுகிறார். காலத்தின் சாரமும் மானுட வாழ்வின் கோரமுகங்களும் வரலாற்றின் சந்தர்ப்பத்தில் என்னவாக வெளிப்பட்டன என்பதைக் ‘கையறு’ நாவல் காட்டுகிறது.

புண்ணியவான், என்னென்ன விதங்களில் தமிழர் குடும்பங்கள் பாதிப்புக்குள்ளாயின, பாதுகாப்பற்ற நிலையில் எதிர்வினையாற்ற முடியாத, கேள்வி கேட்க முடியாத நியாய தர்மங்களுக்கு இடமில்லாத அபலைகளாகப் பெண்கள் நிற்க வேண்டிய இக்கட்டானச் சூழலை அசலாகத் தந்திருக்கிறார். போர்ச்சூழல் தனித்த பண்பாடு கொண்ட தமிழ்ச்சமூகத்தைப், பல்லினச் சமூகம் வாழும் இடத்தில் தலைகீழாகப் புரட்டிப்போட்டுச் சிதறடித்தப் புள்ளிகளைத் தேர்ந்தெடுத்துச் சொல்லுகிறார். அதனாலேயே அந்நாவலில் சம்பவங்களின் செறிவுகள் நன்றாகக் கூடி வந்திருக்கின்றன. சிறுகதையாளனின் பலமான பார்வை நாவலுக்குச் சிலசமயம் இறுக்கத்தைத் தருகின்றன. கலங்கடிக்கப்பட்ட காலத்தின் மாதிரி வடிவம் புண்ணியவானின் கையறு நாவல்.

என்னென்ன விதமாய் தாக்குதலுக்கு உள்ளானார்கள் என்பதற்கான புனைவுவெளியைச் சரியாகப் பயன்படுத்தியிருக்கிறார். இந்தப் புனைவு நாவலுக்கு நிஜத்தன்மையை உண்டாக்குகிறது. நிகழ்வின் கதியில் நாவலில் புனைவுவெளி விரிவதால் நம்மை அந்த உலகத்தோடு இரத்தமும் சதையுமாக ஒன்ற வைக்கிறது. வரலாற்றுத் தடங்கள் தகவல்களாகத் தரவுகளாக இல்லாமல் வாழ்வாக மலர்ந்திருப்பதாலேயே படைப்பின் சாத்தியப்பாடு நாவலில் கூடி வந்திருக்கிறது. படைப்பாக்கத்திற்கும் ஆவணத்திற்குமான  நுட்பமான வேறுபாட்டை உணர்ந்த படைப்பாளியாகப் புண்ணியவான் இருப்பதாலேயே கையறு நல்ல படைப்பாக நமக்குக் கிடைத்திருக்கிறது.

காலம் ஆடிய கோரத்தாண்டவம் என்பதில் நாவல் குவிந்திருக்கிறது. உலகம் முழுக்கத் தமிழர்கள் புலம் பெயர்ந்திருக்கிறார்கள். அவர்களுடன் பண்பாடும் புலம்பெயர்ந்து வந்திருக்கிறது. பண்பாடு அவர்களிடம் சுமையாக இல்லாமல் தங்கள் இனத்தின் அடையாளங்களாகத் தனித்துவமாக வாழும் ஓர் இனமாகக் காட்டியே நிலைகொண்டிருக்கிறது. இதில் சாதகமும் உண்டு; பாதகமும் உண்டு. பிற சமூகங்களுடன் ஒட்டி உறவாடாமல் தனித்திருக்க வைத்திருப்பதும் இந்தப் பண்பாடுதான். அதிகாரமிக்க, பலமிக்க படைகளால் அந்தப் பண்பாடு தாக்குதலுக்கு உள்ளாகும்போது தமிழரின் மனங்கள் கலங்குகிறது. அது அவர்களுக்குப் பெரும் வேதனையைத் தருகிறது.

அம்மன் வழிபாடு நடக்கிறது. உடுக்கை முழங்க, கத்திமேல் ஏறி நின்று பூசாரி அருள்வாக்கு வழங்க, சாமிக்குக் கிடா பலிகொடுக்க, பூக்குழித் தணலில் பெண்களின் பாதங்கள் மிதித்துக் கடக்க இரத்தத்தோடு கலந்த வழிபாடு நடக்கிறது. மலாயா மண்ணில் அதனை உணர்வோடு அரங்கேற்றுகின்றனர். ஆங்கிலேயத் தோட்டத் துரைமார்கள், துரைசாணிகள், குழந்தை குட்டிகள் அந்த வினோதத்தை வேடிக்கைப் பார்க்க வருகின்றனர். துரைமார்களுக்கு அனல் தாக்காமல் இருக்க கங்காணிகள் அடிமைச் சேவகம் செய்கின்றனர். வேட்டைப்புலியென ஜப்பான் படை நுழைந்திருப்பதை அறிந்ததும் தமிழர்களை நட்டாற்றில் விட்டுவிட்டுத் தப்பிக்கின்றனர். உயிருக்கு உயிராக நேசித்த கித்தா காடுகளுக்குத் தீயிட்டு அழிக்கின்றனர். உயிருக்கு உத்திரவாதம் இல்லாத நிலையிலும் இரப்பரின் பயனை ஜப்பான்காரன் அனுபவித்து விடக்கூடாது என்று ஆங்கிலேயர் தீவைத்து அழிக்க உத்தரவிடுகின்றனர். ஆங்கிலேயக் கைக்கூலிகளாக இருந்த கங்காணித் தமிழர்களும் அதற்குத் துணை போகின்றனர்.

சூழ்நிலை மாறிய கணத்திலேயே தமிழர்கள் கைவிடப்படுகின்றனர். நாடற்ற, பலமற்ற தமிழர்கள் நிர்கதியாக நிற்கின்றனர். இந்த நிர்கதியைப் பயன்படுத்திக் கொண்டு ஜப்பான் இராணுவம் தொடர்ந்து தொந்தரவு செய்கிறது. ஏதும் செய்ய முடியாத ஏதிலிகளாக நிற்கும் நிலைக்கு ஆளாகின்றனர். இரணங்களைச் சுமக்கும் காலம் தமிழர்களைக் கவ்வுகிறது.

ஹார்வார்ட் தோட்டம், பதினெட்டாம் கட்டை, தாத்தா கம்பம், பாலோ என்று இந்த மூன்று பக்கமான தோட்டக்காட்டுத் தமிழர்கள் சயாம் இரயில்பாதை பணிக்குப் பிடித்துச் செல்லப்படுகின்றனர். பெரும்பாலான ஆண்கள் வெளியேற ஜப்பான் இராணுவம் தோட்டக்காட்டில் நுழைந்து பெண்களைத் தொந்தரவு செய்யத் தொடங்குகிறது. வெள்ளைக்காரனுக்குக் கைகட்டி சேவகம் செய்த தமிழக்கங்காணிகள் அதிகாரம் பெற்ற ஜப்பானியர்களுக்குக் கையாளாக மாறுகின்றனர். பெண்களைச் சீரழிக்க வருபவனுக்குத் துணை நிற்கின்றனர். காட்டிக் கொடுக்கின்றனர். கூட்டிக்கொடுக்க முனைகின்றனர். தமிழ் இனம், தமிழ் பண்பாடு என்பதெல்லாம் வெற்று வார்த்தைகளாகின்றன. சுயநலவாதிகளாகத் துரோகிகளாகத் தன்னைப் பாதுகாத்துக் கொள்பவர்களாக மாறும் இவர்களின் சல்லித்தனங்களை மாந்தர்களின் வழிகாட்டுகிறார்.

பூப்பெய்திய பிஞ்சுக்குழந்தையை எப்படி எப்படியெல்லாமோ பாதுகாக்க முயன்றும் இறுதியில் ஜப்பான்காரனால் நாசமாக்கப்படுகின்ற அவலமே நடந்தேறுகின்றது. இந்தப் பாலியல் வேட்கைக்குப் பயந்து பன்னிரண்டு வயது சிறுமியைப் பாதுகாப்பதாகக் கருதி அவசர அவசரமாகத் திருமண ஏற்பாடுகள் செய்கின்றனர். கணவன் இல்லாத இளம் பெண்களின் வீடுகள் திடீர் திடீரென்று தட்டப்படுகிறது. அடுத்தவரை அண்டி ஒளிந்துகொள்ள வேண்டியதாக இருக்கிறது. பெண்கள் தண்ணீர் எடுக்கும் தொட்டிகளில் ஜப்பானியர்கள் நிர்வாணக்குளியல் செய்கின்றனர். அவர்களின் வேட்டைக்குப் பயந்து பதுங்குகின்றனர்.

திரும்பி வராத கணவன்மார்கள் இறந்துவிட்டதாகச் சொல்லி உறவுவழி ஆண்கள் பாதுகாப்பு என்ற போர்வையில் பெண்களை ஏமாற்றித் தன்வசப்படுத்துகின்றனர். வறுமை, குழந்தைகளின் சின்னச்சின்ன ஆசைகளை நசுக்கி எறிகிறது. பிரியமான உணவைக் கேட்டுக் கெஞ்சுகின்றனர். பசி இவர்களைத் துரத்துகிறது. தோட்டக்காடுகளில் கிழங்குகளைத் திருடித்தின்று ருசியாறுகின்றனர். நல்ல அரிசி உணவிற்காக அக்குழந்தைகளின் தாய் மலாய் விவசாயியின் இச்சைக்கு இணங்கிப் போகிறாள்.

கணவன்மார்கள், தம்பிகள், அண்ணன்கள் இல்லாத தோட்டக்காடு வெறிச்சோடிக் கிடக்கிறது. வெள்ளைக்காரர்களின் பிடுங்கல்கள் போல உறவுக்காரர்களின், ஜப்பானியர்களின், கங்காணிகளின் தொந்தரவுகள் வந்து தாக்குகின்றன. சந்தர்ப்பம் வாய்த்தால் எந்த வக்கிரத்தையும் செய்யத் துணிகிறார்கள். அவரவர்களின் தந்திரங்களுக்குத் தோதான வகையில் நிறைவேற்றிக் கொள்கின்றனர்.

அரும்புமீசைப் பையன்கள் தப்பித்து ஓடிப்போகிறார்கள். கம்யூனிச இயக்க கொரில்லா படையில் சேரும் சூழல் உருவாகிறது. பார்வதியை நாசம் செய்த கங்காணியையும், ஜப்பான்காரனையும் வெகு ஜாக்கிரதையாக பதுங்கி இருந்து அடித்து நொறுக்கி காட்டில் எறிகின்றனர். இது ஒருவகையான எதிர்ப்பு. ஒரு நீதி. முடிந்தவரைக்குமான எதிர்ப்பு. சிதைக்கப்பட்டத் தோட்டக்காட்டில் இப்படியான தன்மான உணர்வும் மிகச்சிறிதாக வெளிப்படுகிறது. ஜப்பான்காரன் மலேசியாவே தங்கள் கைகளுக்கு வந்துவிட்டது போல பள்ளியைத் திறக்கச் சொல்லி முழந்தைகளை ஜப்பான் தேசிய கீதத்தைப் பாடும்படி மிரட்டுகிறான். அதிகாரத் தோரணை அவனது ஆசைகளை வெளிப்படுத்துகிறது.

நல்லவர்களும் கெட்டவர்களுமான மனிதர்கள் பல்வேறு குணங்களைச் சொல்லாமல் காட்டுகிறார். அவர்களின் செயல்பாடுகளைத் துல்லியத்தோடு நிதானமாக விவரிக்கிறார். புண்ணியவான் எந்த இடத்திலும் இந்த மாந்தர்களுக்குள் புகுந்து பேசவில்லை. அவர்களின் இயல்புகளைப், பதட்டங்களை, காருண்யத்தைத், தந்திரங்களை, பசியை, காமத்தை மிகையில்லாமல் நிஜமான அவர்களின்  குரலில் நிஜமான ஆகிருதிகளை உருவாக்கிக் காட்டியிருப்பதில் ஓர் எளிமையும், தான் என்ற எழுத்தாளத் தோரணையை ஒதுக்கி வைத்து மாந்தர்களின் பாடுகளைச் சொல்வதிலேயே முனைந்திருக்கும் (விலகி நின்று) எழுதும் எழுத்துப்பணியும் இந்த நாவலின் படைப்பு ரீதியான பலம். இதனாலேயே, பல மாந்தர்களின் செயல்கள் அப்படி அப்படியே வாசகர்களின் நெஞ்சில் நிற்கின்றன. இந்த வாசக நெருக்கம் நன்றாகவே கூடி வந்திருக்கிறது.

நாவலில் உருவாகியிருக்கும் தோட்டக்காட்டுப் பின்னணியில் புறச்சித்திரங்கள் மொழியில் துல்லியத்தோடு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. காணும் காட்சிகள் மனதில் உருவாக்கும் புதிய வடிவை நுட்பமாக வெளிப்படுத்தி இருக்கிறார். அடர்த்தியான புறப்பின்னணி கொண்டதில்லை என்றாலும் போதுமான அளவு அழகாகக் கூடி வந்திருக்கின்றன.

ஜப்பான்காரனுக்குப் பயந்து தூக்கிட்டுக்கொள்ள முயலும் மைக்கெல் துரையைக் காப்பாற்றும் பேச்சாயி, தக்கிடோவிடமிருந்து பார்வதியைக் காப்பாற்ற தாத்தா செய்யும் ஏற்பாடுகள், தொடர்ந்து துப்புத்தேடி அலையும் சிவதாசின் கள்ளத்தனங்கள், பார்வதியைப் பாதுகாக்க முடியாமல் பறிகொடுக்கிற மலாய்க் குடும்பத்தாரின் கையறு நிலை, தக்கிடோவைக் கொலை செய்ததாக அப்பாவிச் சீன முதியவர்களைக் கொலை செய்யும் அடாவடித்தனங்கள், ஜப்பான்காரனுக்குத் தெரியாமல் இராசாத்திக்குச் செய்யும் மூப்புச்சடங்கு, சாக்கன் இறந்ததாகக் கூறி செவத்தியின் மனதை மெல்ல மெல்லக் கரைத்துத் தன் தந்திரத்தால் சேது வீழ்த்தும் சாகசம் என ஒவ்வொரு பகுதியும் நெருக்கடி மிக்கக் காலத்திலும் அதற்குரிய நிதானத்துடனும் இடம்விட்டு இடம் நகர்வதில் ஏற்படும் படபடப்பும் புதிய இடச்சூழலும் மாட்டிக்கொண்ட பின் ஏற்படும் திகைப்பும் நிர்கதியும் அசலாக உருவாகியிருக்கின்றன. நிகழ்வுகளும் சரி, அந்த நிகழ்வின் ஆதாரமாக நிற்கின்ற மாந்தர்கள் தங்கள் காரியம் பொருட்டு கையாளும் அணுகுமுறைகளும் சரி வெகு இயல்புடன் உருவாகியிருக்கின்றன. காலம் தந்த பதைபதைப்பு மனிதர்களை இயக்குவதோடு மனிதர்கள் தங்களுக்குத் தோன்றும் யோசனையின்படியோ சூழல் இழுக்கும் வழியிலோ சென்று சேர்கின்றனர். சொல்லப்போனால் பெண்கள் வீழ்ந்துவிடும் துயரத்தைச் சூழல் எவ்விதமெல்லாம் நிகழ்த்தியது என்பதை ஆர்ப்பாட்டம் இல்லாமல் காட்டுகிறார்.

மருது, தெரேசா, தாத்தா, ‘பேசாம இரு’ ‘பேசாம இரு’ என்று சொல்லும் இராணியின் அம்மா, செவத்தி, எஜமான விசுவாசத்தோடு காப்பாற்றும் ஆராயி, தொடர்ந்து மோப்பம் பிடித்துச் சுற்றும் சிவதாஸ் கங்காணி என இந்த மனிதர்கள் மிக நன்றாக உருவாகி இருக்கிறார்கள்.

பாச்சோக் கடற்கரைக்கு ஜப்பான் படை வருவதும், சயாமில் இரயில் பாதை போட அதிக சம்பளம் தருவதாக ஆட்களை ஏமாற்றி இழுப்பதும், திடகாத்திரமான இளைஞர்களைக் குறிவைத்து ஏமாற்றி பிடித்து ஏற்றுவதாகக் களேபரங்கள் நடக்கின்றன. கங்காணிகள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள ஒவ்வொரு தோட்டக்காட்டு லயத்தையும் காட்டிக்கொடுத்து ஆட்களைச் சிக்க வைக்கின்றனர். ஹார்வார்ட் தோட்டத்திலிருந்தும் பதினெட்டாம் கட்டை தோட்டத்திலிருந்தும் ஆட்கள் பிடிபடுகின்றனர். ஓரிரு வாரத்திற்கு முன்னதாகத் திருமணமான இளைஞர்கள் சிக்கிக் கொள்கின்றனர். அதுவரை தங்களை ஆண்ட வெள்ளைக்காரர்களோ கொஞ்சம் அதிகாரத்தோடு இருந்து கங்காணிகளாலோ தமிழர்களின் தெய்வங்களாலோ அருகில்  இருக்கும் சீனர்களாலோ மலாய்க்காரர்களாலோ தடுத்து நிறுத்த முடியாத பலமற்றவர்களாகத்தான் இருக்கின்றனர். இதையெல்லாம் மீறி மீசை அரும்பும் மகனைத் (கன்னியப்பன்) தப்பிக்க வைக்கிறாள் தாய். அவனைக் கொரில்லா வீரனாகச் சூழல் மாற்றி அனுப்புகிறது. நாஜிகளின் வதை முகாமில் சிக்கிய யூதர்களைப் போலத் தமிழர்கள் மனைவி மக்களைப் பிரிந்து  சயாம் இரயில் பணித்திட்டத்தில் மாட்டிக் கொள்கின்றார்கள்.

பதினெட்டாம் கட்டை தோட்டக்காட்டில் மாட்டிக் கொண்டவர்கள் இடைசாதியினராகவும் ஹார்வார்ட் தோட்டத்தில் மாட்டிக் கொண்டவர்கள் தலித் மக்களாகவும் கொள்ள இடமிருக்கிறது. இந்தத் தமிழர்கள் வாங்கும் அடிகள் உதைகள் நோய்கள் எல்லாம் ஒன்றேயானவை. வேற்றுமை இதில் இல்லை. மயில்வாகனம், சேவு, கருக்கான், சதாசிவம், சந்நாசி, சுள்ளாண்டி, பக்கிரி, தேனப்பன், பீட்டர், ஜோசப், அக்கினீஸ், சிங்கப்பூர் புரட்சிக்காரர் டேன் சூன் செங், ஆங்கிலேயர்,  இவர்கள் ஒவ்வொருவரும் பெற்ற மோசமான அனுபவங்கள் நிகழ்வுகளாகின்றன. மூன்று முகாம்களுக்குப் பிரித்து அனுப்பப்பட்டு வதைபடுகின்றனர். தக்கின், சிம்போங், (மறுபடி) மெய் குவாங் முகாம்களில் இவர்கள் பட்ட அடிகள், பெற்ற நோய்கள், வேலையின் அழுத்தங்கள், சாவில் நிகழ்ந்த மனப்பிறழ்வுகள், பெண் பிள்ளைகள் என்ன ஆனார்களோ என்று தவிக்கும் தரப்புகள்,  ஏதாவது பதிலடி தர வேண்டும் என்ற வெற்றுக் கொதிப்புகள், விடுதலை எழுச்சியின் ஒளிக்கீற்றுகள், அடித்தே கொல்லப்பட்ட மரணங்கள், எரித்துக் கொல்லப்பட்ட நோயாளிகள், தப்பிக்க நினைப்பவர்களுக்கு விழும் மூக்குடைப்புக்கள், மடிவுவாடை அடிக்கும் ஒவ்வாத உணவுகள், கொசுக்கடிகள், இடைவிடாத வேலைச்சுமைகள் வயிற்றுப்போக்குகள், காலரா உண்டாக்கிய மரணங்கள், சந்தேகத்தின் பேரில் வாங்கும் அடிகள் என தமிழர்கள் பட்டத் துயரங்களை முகாம்களின் வழியே காட்டுகிறார். அதில் வெள்ளைக்காரர்களும் சீனர்களும் உண்டு. அதிகமும் இவர்கள் அரசியல் கைதிகளாக வதைபடும் நிலையைத் தொட்டுக்காட்டி இருக்கிறார்.

காஞ்சனாபுரி வரை இரயிலில் சென்றவர்களை இறக்கியதும் அடுத்து மிகநீண்ட கால்நடை பயணத்திற்கு ஆசனவாயிலில் மருந்து திணித்துத் தயார் செய்கிறார்கள். இயற்கை உபாதைகள் வராமலிருக்க இரண்டு நாள் மூன்று நாள் வெளிக்குப் போகாமல் அவதிபடுகின்றனர். அதைப்பற்றி இரகசியமாகப் பேசிக்கொள்கின்றனர். ஆசனவாயில் மருந்து திணித்ததன் காரணத்தைப் பின்னால் புரிந்து கொள்கின்றனர். அலுப்பும் உடல்நோவும் நடையைத் தளர்த்துகிறது. தயங்கி நடப்பவர்களுக்கு அடி விழுகிறது. எங்கும் ஜப்பான்காரன் சைக்கிளில் லத்தியோடுப் பின்தொடர்கிறான். மலம் கழிக்காததால் வயிற்றைச் சீர்கேடாக்குகிறது. வாந்தி எடுக்கின்றனர். தாகத்திற்கு நீர் தராமல் மிரட்டி நடத்திக்கொண்டே இருக்கின்றனர். என்ன கொடூர தாக்குதல் விழுந்தாலும் அதையும் மீறி தாகத்தைத் தணிக்க தேங்கி இருக்கும் நீரைப் பருகுகின்றனர். அவசர அவசரமாக வெளிக்கு இருந்துவிட்டு ஓடி வந்து வரிசையில் சேர்கின்றனர். சுள்ளாண்டி என்ற மாந்தனை வைத்து இந்த வழிநடை அனுபவத்தைக் காட்டுகிறார். வயிற்றுப்போக்கு ஏற்பட்டு நடக்க முடியாமல் படுத்துவிட அவனைத் தூக்கிச் சுமந்து செல்லும் சுமையும் அவர்கள் மேல் விழுகிறது. முகாமில் சேர்க்கப்பட்டு வேலை செய்ய முடியாமல் இறந்தும் போகிறான். இந்த மரணம் அவனது மனைவி குப்புச்சிக்குச் சென்று சேர்வதில்லை. ஒவ்வொரு மரணமும் இப்படித்தான் நிகழ்கிறது.

இப்படி ஒவ்வொரு மாந்தரையும் முன்னிறுத்திச் சயாமில் பெற்ற அனுபவங்களைச் சொல்கிறார். உண்ண முடியாத கருவாடு, எலிப்புழுக்கை கலந்த உணவு, கடுங்குளிரில் தற்காத்துக் கொள்ள காகிதத்தையோ பனைமட்டையையோ சுருட்டிப் பீடியாகச் சுருட்டாகப் புகையை இழுத்துக்கொள்ளத் தவிக்கும் தவிப்பு, அத்தாப்புக் கூரை வழியே கொட்டும் பனி, அட்டைக்கடிகள், அரிப்பு, என நாள்தோறும் அவதிக்கு உள்ளாகின்றனர்.

ஜோசப்புடன் வந்த அவனது மனைவி அக்கினீஸ் ஜப்பானியரிடம் அடி வாங்கிக் கர்ப்பிணியாகவே இறந்து போகிறாள். உடல்நலமின்றி வேலை செய்யும் சாக்கனுக்கு மூங்கில் தப்பை அடி விழுகிறது. விஷக்காய்ச்சல் கண்டு சாவின் தருவாயில் இருக்கும் சேவுவை உயிரோடுப் புதைக்க வைக்கிறான். வெளிக்குப்போன இடத்தில் விஷநாகம் கடித்து உடல் வீங்கிச் சாகிறான் சங்கிலி. அக்கினீஸின் கணவன் மனப்பிறழ்விற்கு ஆளாகி புதைமேட்டில் அலைகிறான். சிகிச்சைக்குப் போன வேலைய்யா ஒரு காலை இழந்து வருகிறார். ‘பெரி பெரி’ நோய்க்கும் விஷக்காய்ச்சலுக்கும் ஆளாகின்றனர். வேலை செய்ய முடியாமல் தடுமாறும் சாக்கனை மூங்கில் தப்பையால் அடித்தே வேலை வாங்குகின்றனர். இத்தனை கொடூரங்கள் ஒருபுறம் நடக்க மாலை வேளைகளில் ஜப்பானியர்கள் மது அருந்தி சயாமிய பெண்களுடன் இரவெல்லாம் கொட்டகையில் கொட்டம் அடிக்கின்றனர்.

நோய்வாய்ப்பட்ட சதாசிவம் சிகிச்சை முகாமில் மாட்டிக்கொள்கிறான். எழுந்து நகர முடியாத நோயாளிகள் குப்பையாகக் கிடக்கின்றனர். புண் நாற்றம் வீசுகிறது. ஒவ்வொரு நாளும் மரணம் நிகழ்கின்றது. சரியான மருத்துவரும் மருந்தும் இல்லாமல் அழுகிக்கிடக்கின்றனர். ஜப்பானியப் படையிடம் அரசியல் கைதியாகச் சிக்கிய சிங்கப்பூர் தேன் சூன் கெங் புரட்சிக்காரரை சிகிச்சைக் கூடாரத்தைத் தீயிட்டு எரிக்கும்படி நெருக்குகிறான். மானுட விடுதலையின் மனிதாபிமானி, லட்சியவாதி முதலில் மறுத்தாலும் தண்டனைக்குப் பயந்து நெருப்பிடும் சதிக்கு ஆளாகிறார். இவையெல்லாம் மாந்தர்களின் அனுபவத்தின் வழியாகக் காட்டுகிறார்.

சாக்கன் நோயிலிருந்து மீண்டாலும் தோட்டக்காட்டில் இறந்ததாகச் செய்தி பரவ செவத்தியை மருது வளைத்துப் போடுகிறான். தீயில் சதாசிவம் எரிந்து போயிருக்கலாம் என்ற செய்தி தெய்வானைக்குத் தாலியிறக்கும் சடங்கு முறையாக நடந்தேறுகிறது. நேதாஜியின் புகைப்படத்தை லயத்து வீடுகளில் மாட்டி ஜப்பான்காரனிடமிருந்து தப்பிக்கப் பார்க்கின்றனர். சயாம் இரயில் பாதையைப் பார்வையிட வந்த நேதாஜி பாட்டாளிகளிடம் சின்ன விசாரிப்பு கூட இல்லாமல் கடந்துபோய் விடுகிறார். குரலற்றத் தமிழர்கள் பகடைக்காய்களாக உருட்டப்படுகின்றனர். வாழ்வின் முரண்களை உணர்ந்து கொள்ளும் விதமாக நாவல் முழுக்க விரவியிருக்கின்றது. ஒருபக்கம் நம்பிக்கை இன்னொரு பக்கம் நம்பிக்கை சிதறடிக்கப்படும் காட்சிகள். இவற்றைக்கூடப் புண்ணியவான் எதிர் எதிராக வைக்கவில்லை. வாசகன் கொண்டுகூட்டி பார்த்துக்கொள்ளும்படியான எழுத்தாக்கமாக இருப்பதையும் சொல்ல வேண்டும். தோட்டக்காடு ஓர் உலகமாகவும் சயாமில் ஓர் உலகமாகவும் இயங்கிக் கொண்டிருப்பதைத்தான் காட்டுகிறார்.

ஹிரோஷிமா நாகாசாக்கி அணுகுண்டு வீச்சால் இரயில் பாதை பணி நிறைவு பெறுகிறது. அடித்தும் உதைத்தும் அதிகாரம் செய்துகொண்டிருந்த ஜப்பான் படை கமுக்கமாக யாருக்கும் தெரியப்படுத்தாமல் வெளியேறி விடுகிறது. தோட்டக்காட்டை நோக்கி நிம்மதியைத் தேடிப் புறப்படுகின்றனர். அதன் சீரழிவு தெரியாமலேயே நம்பிக்கையுடன் திரும்புகின்றனர். இங்கேயே செத்து மண்ணாகிப் போனது தெரியாமல் குப்புச்சி போன்றோர் கணவனுக்காக் காத்திருக்கின்றனர். மகளின் உண்மை நிலை  தெரியாமல் சதாசிவம் பாசத்தை ஏந்திக்கொண்டு மகள் கனவோடு இரயில் ஏறுகிறார். இப்படி எத்தனையோ தலைகீழ் மாற்றங்கள் ஒருவருக்கு ஒருவர் தெரியாமலேயே காலம் நிகழ்த்தியிருப்பதை அறியாமல் காத்துக் கிடக்கின்றனர். இருவேறாகப் போன காலத்தின் சித்திரத்தை இந்நாவல் அமைதியான தொனியில் விரித்து வைத்திருக்கிறது.

உதைபடும் போதெல்லாம் இந்த ஜப்பான்காரர்களுக்குத் தக்க பதிலடி தர நினைக்கிறார்கள். முடியாமல் போகிறது. சேவு மரணத்தின் தருவாயில் கிடக்கிறான். அவனை உயிரோடு புதைக்கும்படி மிரட்டி நிர்ப்பந்தம் செய்கிறான். அந்த அதிகாரியின் கண்களைப் பக்கிரி இருகணம் நேருக்கு நேராக குருகுருவென பார்க்கிறான். அந்தப் பார்வையைப் பொருட்படுத்தாமல் அவர்களைத் தூக்கச்சொல்லி வேகப்படுத்துகிறான். அந்தப் பார்வை ஜப்பான்காரனுக்கு கொந்தளிப்பை உண்டாக்குகிறது. அந்தச் சம்பவத்தால் பக்கிரி மன உளைச்சலுக்கு ஆளாகி துணிச்சலாக ஒரு முடிவெடுக்கிறான். புண்ணியவான் இதையெல்லாம் நினைக்காமல்தான் எழுதுகிறார். இது, நாவலில் பொருத்தமாகக் கூடி அர்த்தப்பரிமாணம் கொள்கிறது.

ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு விதமாக மானிட உணர்வுகள் வெளிப்படுகின்றன. சூழலுக்கும் சந்தர்ப்பத்திற்கும் ஏற்றபடி மனிதர்கள் தங்களை வெளிப்படுத்திக் கொள்கின்றனர். கொட்டகைக்கு நெருப்பிடும் தேன் சூன் செங்கை ஜப்பான் அதிகாரி நெருக்குகிறான். எந்தப் பாவமும் அறியாத நோயுற்ற பாட்டாளிகளைக் கொல்ல அவனது மனம் மறுக்கிறது. அவனது மறுப்பு அவனுக்கு ஆபத்தை தரும். மனித உணர்வின் அல்லாட்டத்தைச் சிறப்பாக வெளிப்படுத்திய பகுதி இது. வெள்ளைக்கார துரை ஒரு சுருட்டுக்காகச் சக பாட்டாளி தமிழனிடம் மன்றாடும்போது  காலத்தின்முன் சாதாரண மனிதனாகிறான். ஆராயி தாத்தாவிடம் வெளிப்படுவது நெருக்கடியில் அல்ல. அந்த மனிதர்களிடம் இயல்பிலேயே படிந்திருக்கும் நல்லியல்பினால் உண்டானது. நல்ல மனிதர்களின் சின்னச்சின்ன நற்காரியங்கள் பயனற்றுப் போகின்றன. அவர்கள் ஏதும் செய்ய முடியாத நிலையில் நிற்கின்றனர். மோசமான சூழலைப் பயன்படுத்தி துரோகம் செய்யவும் விளைகின்றனர். விதவிதமான மானுட ஆட்டங்கள் காலத்தின் முன் நிகழ்கிறது. காலம் இந்நாவலின் மையமாக நின்று மனிதர்களைப் பந்தாடுகிறது.

கையறு நாவலில் ஓங்கி ஒலிப்பது துயரத்தின் குரல். காலம் தமிழர்களைக் கையறு நிலைக்குக் கொண்டு வந்து நிறுத்துகிறது. இந்தச் சிதறடிப்புக்கு ஆட்பட்டதன் காரணம் என்ன? தமிழர்கள் ஒன்றுசேர முடியாதபடி தோட்டக்காட்டின் தொடர்புகளற்று வீழ்ந்து கிடப்பது, நாடற்றவர்களாக இருப்பது, கேள்வி கேட்க முடியாத சிறுபான்மையினராக இருப்பது, அறியாமையில் இருப்பது, அடுத்தவர்கள் சொல்வதை நம்புவது. இதையெல்லாம் விட, தமிழர்களின் பரம்பரைச் சொத்தான வறுமையினால் தமிழ்நாட்டிலிருந்து வெளியேறியது. மலாயா மண்ணில் அவர்களின் மூலதனமான உழைப்பே அவர்களைச் சீரழிக்கிறது. நாடற்றவர்களை யார்யாரோ பயன்படுத்திக் கொண்டு தூக்கி எறிந்துவிட்டுச் செல்கின்றனர்.

இந்த அலைகழிப்பிற்குப் பொருள்தான் என்ன? யார் யாருக்கோ நடக்கும் உலகப்போர் சம்பந்தமற்ற மலாயா தமிழர்களை இழுத்துச் சிக்க வைக்கிறது. எத்தனையோ இழப்புக்கள். எத்தனையோ அவமானங்களுக்குப் பின்னும் அவர்கள் பெற்றது என்ன? வெறுமை. அந்த வெறுமையோடு மீண்டும் வாழ்க்கையை நோக்கித் திரும்புவதை நாவல் சொல்கிறது.

புண்ணியவான் முன்னால் தத்துவங்களைவிட வாழ்க்கையே முன் நிற்கிறது. நீண்ட சயாம் இரயில்பாதையின் அடியில் தமிழர்களின் சடலங்கள் புதைக்கப்பட்டிருக்கின்றன. எளிய பாட்டாளித் தமிழர்களின் நம்பிக்கையும் ஏமாற்றங்களும் அதன்மேல் படிந்திருக்கின்றன. இது தமிழர்களின் தியாகமோ அர்ப்பணிப்போ அல்ல. அவர்கள் பட்ட கொடுந்துயர வாழ்வு. அந்த வாழ்வை அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார் புண்ணியவான். பலிகடா ஆக்கப்பட்ட தமிழர்களின் ஆவி அத்தண்டவாளம் நெடுக மிதப்பதைச் சொல்லியிருக்கிறார். தமிழர்கள் கண்டது என்ன? வெறுங்கையோடு வந்து வெறுங்கையோடு போனதுதான். ஒன்றரையாண்டு பாடுபட்டுச் சேர்த்த ஜப்பானியரின் பணம் செல்லாமல் போகிறது. மீண்டும் ஆங்கிலேயன் ஆட்சிக்கு வரப்போகிறான். அப்போது தெரிந்துகொள்ள நியாயமில்லை. ஆனால், வாழ்ந்தாக வேண்டும். காயங்களோடும் கண்ணீரோடும் நம்பிக்கைகள் பொய்த்துப் போகப்போவதை ஏற்றாக வேண்டும். மலாயா தமிழர்கள் துயரம் நதியாக ஓடுகிறது. புண்ணியவான் ஓரிடத்தில் நிறுத்தி நமக்குக் காட்டியிருக்கிறார்; கையறு நாவல் வழியாக. மலேசிய நாவல் இலக்கியத்திற்கு செழுமை பெறும் நாவலாகத் தந்திருக்கிறார். பம்மாத்து இல்லாமல் உண்மையை  நாடிய நாவல். நல்ல  நாவல். தமிழுக்கும்தான்.

பக்கிரி முகாமிலிருந்து தப்பிச்செல்லும் பகுதி இந்நாவலின் சிறந்த பகுதிகளில் ஒன்று. அவனது பயம் காடு தரும் விநோத உருவங்கள், லட்சியம்,  நிலவு தரும் காட்சிகள், திக்கற்ற பயணம், நம்பிக்கை விடுதலை உணர்வு என எல்லாம் மாறிமாறி அவனை இயக்குவதைச் சிறப்பாக எழுதியிருக்கிறார்.

ஓடும் அவனுக்கு தன் நிழல் அச்சமூட்டியது, பின் ஓடஓட பழகிப்போனது. பின் தன் நிழலே தனக்கு உதவியாகப் பின்தொடர்ந்தது.

மரங்கள் வளர்ந்து நீண்டு கிடந்த நிலத்திற்குப் பின்னால் மலைத்தொடர்களின் உச்சிகளும் பள்ளத்தாக்குகளும் நெளிந்தன

ஒரு வில்லிலிருந்து ஒரே நேரத்தில் பாய்ச்சப்பட்ட அம்பென வனத்தை ஊடுறுத்துப் பாய்கிறது தண்டவாளம்.  அதன் முனையில்  நிலவு மேகம் மறைந்து விளையாடும் வியாபகத்தைக் கடந்து ஒளிர்ந்தபடியே பயணிக்கிறது.  நிலா, அது ஊர்ந்து செல்லும் வினோத பறவை.

தண்டவாளத்தில் விழுந்து கிடப்பதாகத் தெரியும் சிறிதும் பெரிதுமான பாறைகள் ஒரு கணம் யானையும் கன்றுமாகத் தோன்றுகின்றன.

பக்கிரியின் தனிமையான பயணத்திற்கும் உருவாகும் எண்ணத்திற்கும் புறச்சூழலுக்குமான தேர்ந்த  மொழி உருவாகி நெருக்கம் கொள்ள வைக்கிறது.

புண்ணியவான் கூடுதல் குறை இல்லாமல் போதுமான அளவு மாந்தர்களின் கண்கள் வழி  புறஉலகத்தை விவரணைப்படுத்தி வருகிறார்.  அதிலே  துல்லியமான விவரணை இருக்கிறது.  பூசாரி நீரில் மூழ்கி வருகிறார்,  இடுப்பு வேட்டி புட்டத்திலும் தொடையிலும் ஒட்டிக்கொண்டு சிற்சில இடங்களில்  சிறிதும் பெரிதுமான வெள்ளைக் கொப்புளங்களால் விம்மிக்கிடந்தன என்று எழுதி விட முடிகிறது.

கூத்தைப் பார்க்கத் தாமதமாக வருபவர்கள் கையில் மண்ணெண்ணெய் விளக்கை ஏந்தி வருகின்றனர். ‘பிளந்த விறகில் புழு இருப்பதைக் காண முடிகிறது .புண்ணியாவானின் புற உலக கவனிப்பு இப்படித் துல்லியமாக அமைந்து நாவலுக்கான கலையமைதியை நல்குகிறது.

ரயில் புகையின் நாட்டியத்தை ‘வாலைச் சுருட்டிச் சுருட்டி இரையைக் கொத்தப் பாய்வது போன்று புகை மேலேறி மறைந்தன’ என்று எழுதுகிறார்.  ‘அந்நியச் சூழல் உருவாக்கும் எண்ணத்தைப் புதிய ஊரில் நண்பர்கள் அருகில் இல்லாதபோது பெருங்கூட்டத்தில் இருப்பதுகூட தனிமையாக இருப்பதற்கு ஈடானது என்பதை உணர்த்தியது போன்ற தத்துவமும் அவர் எண்ணத்தில் உதிக்கிறது.

வெள்ளைக்காரன் கோவணத்துடன் வேலை செய்கிறான்.  மூங்கில் கழியால் அடி விழுகிறது.  வெள்ளைக்காரர்களை வேலை வாங்குவதை விட அவர்களின் மானத்தை வாங்குவதுதான் தலையாய நோக்கமாக இருந்தது ஜப்பானியர்களுக்கு.  இப்படியான அவதானிப்புகள்.

காட்டை வெட்டி ஊடே தண்டவாளம் போடுகிறார்கள்.  ‘அடர்காட்டைத் திறந்து விட்டது போலத் தண்டவாளம் போடப்படும் பாதை வெட்டவெளியாகி நீண்டுகொண்டே போகிறது.  இருண்டு கிடந்த இடத்தில் ஒரு குறுகிய நிலப்பகுதி வெளிச்சமாகக் கிடக்கிறது’’. இவ்வாறு புதிய தோற்றத்தை கண்முன் கொண்டுவர முடிகிறது அவரால்.

தொடர்ந்து, உடன் வேலைசெய்த நண்பர்கள் நோயால் இறக்கின்றனர். ‘பொழப்பத் தேடி வந்தோமுன்னு நெனச்சோம், சாவத்தேடி வந்திருக்கோம் என்று அனுபவம் தரும் எளிய வெளிப்பாடு நாவலை இந்த அவதானிப்புகள், விவரணைகள், மனம் கொள்ளும் கோலங்கள் உயிர்ப்புள்ள கலையாக மாற்றுகின்றன.

நாவலின் வடிவம் சார்ந்த என் பார்வையை  முன்வைக்கலாம் என்று நினைக்கிறேன்.  புண்ணியவானின் கவனம் முழுக்க விஷயம் சார்ந்த தேர்வுகளில்  குவிந்திருக்கிறது.   சிறுகதையாளனின் மனம் ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஒரு பார்வையை வெளிப்படுத்தக் கூடியது.  இந்த அம்சம் இந்த நாவலில் கூடி வந்திருப்பது நல்ல அம்சமே.  அதே சமயம், மேலதிகமாக தொடர்புகொள்ள வேண்டிய  இழைகள் அந்தந்த இடத்தில் துண்டிக்கப்பட்டு  இணைவு கொள்ளாமலும் இருக்கின்றன.  இந்த இணைவுகள்தான்  வாழ்வை முழுதாகப் பார்க்க உதவுகின்றன.  உதாரணமாக,  பூப்பெய்திய சிறுமி  பார்வதியை தக்கிடோ தூக்கிச்சென்று கற்பழிக்கிறான்.  இது நாவலின் ஆரம்பத்திலேயே வருகிறது. அடுத்து அவள் என்ன ஆனாள் என்பது தெரியாமலே நாவலில் கைவிடப்படுகிறது.  ஒரு கற்பழிப்பு நிகழ்ந்ததற்கு உதாரணம் காட்டுவதல்ல நாவல். அதன் முழுமையைக் காட்டுவதுதான் நாவல் பார்வை என்பது.

ஜப்பான்காரன் நுழைகிற நாளிலிருந்து ஹிரோஷிமா நாகசாகியில் குண்டு வீசிய நாள்வரையிலான  ஒரு கொதிநிலையான  காலத்தை நாவலுக்கு எடுத்துக் கொண்டுள்ளார்.  ஆங்காங்கே சிதறிக்கிடக்கும் வாழ்க்கையைச் சொல்கிறார்.  நன்றாகவே இருக்கிறது.  அதன் அடுத்த நகர்வு  என்னவிதமான பாதிப்புக்களை எதிர்கொள்ளும்படியாயிற்று என்பதான இடங்கள் பேசப்படாமல் தனித்தனியாக நிற்கின்றன.  சிறுகதையிலிருந்து நாவல் வேறுபடுகிற  இடம் இதுதான்.  சிதைந்த உலகை சில இழைகளால் ஒருங்குகூட்டிப் பார்க்கும்போது மனிதர்களின் வேறுமுகங்களைக் காணமுடியும்.  அப்படியான முகங்களை இனிமேல் சந்திக்க போகிறார்கள் என்ற  சூசகம் நாவலில் இருக்கவே செய்கிறது. நான் சொல்ல வருவது மனிதர்கள் பற்றி மட்டுமல்ல.  எரிந்த கித்தா காடுகள்,  ஓடிப்போன வெள்ளைக்காரர்கள்,  வந்து சேர்ந்த கொரில்லாக்கள்  இப்படியான புதிய மாற்றத்தையும் சேர்த்தேதான் சொல்கிறேன்.

அந்தக் காலத்தில் என்னென்ன விதமான சம்பவங்கள் நிகழ்ந்தன என்பதற்குச்   சாட்சியமாய் புனைவுகளை வைத்தால் போதும் என்ற பார்வை புண்ணியவானிடம் இருக்கிறது. நாவலில் தேவையற்ற சிறுபகுதிகளைக் கூட இல்லாமல் ஆக்குகிறது.  இது நாவலுக்குச் செறிவைத் தருகிறது.  ஆனால், தேவையற்ற பகுதிகள் நாவலில் மானிட வாழ்வை அர்த்தமுள்ளதாக ஆக்கிவிடக் கூடும்.  அழகாக்கும். ஆழமாக்கும்.  கவித்துவ கணங்களைச் சென்றடையும்.  அந்தக்காலத்தில் நடந்த பாதிப்புகளை மட்டுமே சொல்ல வேண்டும் என்பதில்லை.  அதைச்சுற்றி வேறு நிகழ்வுகளும் நிகழ்ந்திருக்கக் கூடும்.  பறவைகள் வந்து சென்றது கூட நாவலின் ஒரு  பகுதியாகிவிடும்.  நாவல்  புண்ணியவானின்    கைப்பிடியில் அதிகமும் இயங்குகிறது.  அவர் கொஞ்சம் கயிற்றைக் கையிலிருந்து விட்டுவிட்டுப் பின்தொடர்ந்தால் வேறு பகுதிகளும் திறந்திருக்கும்.  அது  படைப்பை இன்னும் பலம் உடையதாக ஆக்கும். எதிர்மறை மாந்தனாக வரும் சேது, நேர்மறை மாந்தனாக வரும் பக்கிரி,  இவ்விருவரின் ஆட்டங்களைக் கைவிட்டுத்தான் பின்தொடர்ந்து இருக்கிறார் என்பதைக் கவனித்தால் அதன் வீச்சு உயர்வது தெரியும். இது நாவலின் கலை வடிவம் பற்றிய புரிதலை உண்டாக்கும். தேன் சூன்  செங் நாவலில் தத்தளிப்போடு வெளிப்படுகிறார் என்பது நல்ல இடம்தான்.  ஆனால், அவர் நாவலில் முன் அறிமுகம் இல்லாமல்  திடுக்கென வருகிறார். இரண்டாண்டு பணியில் அவரை ஏதோ ஒரு ஓரத்தில் ஊடாட விட்டிருக்க வேண்டும்.  அப்படி ஊடாடியிருந்தால் இன்னுமே கூடுதல் அழுத்தம் பெற்றிருப்பார். புண்ணியவான் விஷயத்தைச் சொல்லிவிட்டால் போதும் என்று நினைக்கிறார். இது சிறுகதையாளனுக்கு உடையது. நாவல் இன்னும் கொஞ்சம் எட்டப்பார்த்து எழுதச் சொல்கிறது சரியான  விஷயத்திற்காக.

நாவல்  அன்றாடத்தனத்திலிருந்து விரிகிறது.  அப்படியிருக்க நேதாஜி சயாம் ரயில் போகும் இடத்திற்கு வந்து போகும் செய்தியைக் குறிப்பாக இருவர் பேசிக் கொள்கின்றனர்.  அவர்  அசட்டையாகப், புரட்சிக்கான மனநிலையில் பாட்டாளியின் துயர வாழ்வை விசாரிக்க வேண்டும் என்ற நினைவு இல்லாமலும்,  அல்லது உதிரம் குடித்த பணியாளர் துயரம் என்னவென்று தெரியாமலும்,  கேட்க வேண்டும் என்ற எண்ணமே இல்லாமல் போயிருக்கலாம்.  அதை நிகழ்த்தி இருக்க வேண்டும்.   புண்ணியவான் எழுத்து  பாணியை காட்சி ரூபமான புனைவாக்கமாக இருக்கும்போது இதை எப்படித் தவற விட்டார் என்பது ஆச்சரியமாக இருக்கிறது.  ரங்கசாமியும்,  சண்முகமும் தங்களது  நாவலில் நேதாஜி பற்றி  சொல்லிவிட்டார் என்று விவரிக்காமல் விட்டாரா என்று  தெரியவில்லை.  ஆனால் அவர்கள் சொல்லாத முறையில் நேதாஜியை புனைவில் சந்திக்க வைத்திருக்க முடியும்.

ஜப்பான்காரன் நுழைந்ததும் டாலர் வீழ்ச்சி பற்றியும் ஏற்றுமதி இறக்குமதி பற்றியும் பேச்சு வருகிறது.  சயாமிற்குள்  ஜப்பானியர் வரும்போதே  அவர்களுடன் இணக்கமான அரசியல்  வைத்துக் கொண்டதாகப் பேச்சு வருகிறது.  இம்மாதிரி விஷயங்கள் உடனுக்குடன் தோட்டக்காட்டு மக்களின் செவிகளுக்கு வர வாய்ப்பில்லை.  நாவல் வளர்ந்து ஜப்பானியரின் ஊடாட்ட அனுபவங்கள் வந்த பின்பு வந்திருந்தால் இன்னும் சுவையாக இருந்திருக்கும்.

நாவலின் வடிவம் சார்ந்து கூட இன்னும் கவனத்தோடு வடிவமைத்து இருக்கலாம். ஒவ்வொரு அத்தியாயமும் வாசகனுக்குச் சிக்கலில்லாமல் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது.  வாசகர்களுக்காக எளிமைப்படுத்த வேண்டும் என்ற அவசியமில்லை.  மற்றபடி நாவல் அதன் உண்மைத்தன்மையால்  பலமாக நிற்கிறது.

ஓர் இடத்தை, நிகழ்வை, காட்சியை, காட்சி தரும் அனுபவத்தை, காட்சி மனதில் ஏற்படுத்தும் மாயத்தை,  வித்தியாசமான  எண்ணங்களை,  நிலக்காட்சியை அதன் மாயரூபத்தை ரொம்பவும் பிரயத்தனப்படாமலேயே எழுத்தில் கொண்டு வந்துவிட முடிகிறது புண்ணியவானால். அதே சமயம் அவற்றை  அளந்து கொஞ்சமாக வைக்கிறாரோ என்ற உணர்வும் சில இடங்களில் ஏற்படுகிறது.  இரும்புத் தண்டவாளங்களைத் தூக்கிச் சுமக்கும் அவர்களின் தோல்  அழுந்திச் சிவந்திருப்பதை எழுத முடிகிறது.  பெருமரம் வெட்டுப்பட்டு மண்ணில் சரிந்து விழும்போது எழும் ஓசை புயலொன்று சடுதியில் ஏறிச்சென்ற சலனமாய் எழுத முடிகிறது. இந்த அளவு போதும் என்று நினைக்கிறாரோ என்று தோன்றுகிறது. பணிபளுவின் முழுச்சித்திரம்,   அழிக்கப்படும் காட்டின் முழுச்சித்திரம் இன்னும் அடர்த்தி கொண்டதாக இருக்கும்.  ஒரு மரம்  வீழ்வது முழுச்சித்திரத்தைத் தந்துவிடாது.

நிகழ்விற்குப் போதுமான தோற்றங்களை ஏற்படுத்தினால் போதும் என்ற மன அமைப்பு கவித்துவ  கணங்களுக்கான  புனைவை இழக்கிறது.  அது மலரும் போதுதான் நாவலின் கவித்துவ கணங்கள் கூடிவரும்.  அது  புண்ணியவானின் எழுத்துப் பாணியினாலேயே தடைபடுகிறது.

ஓரிடத்தில்  சயாமியப்பெண் யானையை ஓட்டிச்செல்லும் பாகியாக ஒரு வரியிலும்,  சயாமிய பெண்ணின்  உடை பற்றி ஓர் இடத்தில் ஒரு  வரியும்,  ஜோசப்பை அழைத்து வந்துவிடும் இடத்தில் ஒரு வரியுமாக வருகிறாள்.  இதைத்தான் அடர்த்தியற்ற தோற்றதன்மை என்கிறேன். சயாம் நாட்டில் சயாமிய ஆடவர்களைப் பார்க்க முடிவதில்லை.  அவர்களது வறுமை, உழைப்பும் கூட அறிய முடிகிறது.

அக்கினீஸ் வரும் பகுதியில் பாட்டாளிகளின் பேச்சில் நிராயுதபாணியாக என்ற சொல் வருகிறது. சிவதாஸ்  பிடிபட்ட நிலையில் முதுகுப்புறம் எழுபத்தைந்து டிகிரிக்குச் சாய்ந்தது என்று கிண்டலாகச் சொல்லப்படுகிறது.  செவத்தியின் கையறு நிலையை அவள் படித்துப் போட்ட நாளிதழ் போலக் கிடந்தாள் என்று காட்சிப்படுத்தப்படுகிறது. நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், இந்தச் சொற்கள் அறிவார்த்தமான இடங்களில் சொல்லப்படும்போது நெருடலாக  இருக்காது. பாட்டாளிகளுக்குப் பழக்கமில்லாத  சொற்களை பயன்படுத்தும்போது அம்மக்களுக்கு அந்நியத்தன்மையான சொற்களாக இருக்கின்றன.  75 டிகிரி சாய்வு என்பது நல்ல ஒப்புமையாக இருக்கலாம். சூழலுக்குப் பொருத்தமில்லாதது. கல்விப்புலம் சார்ந்தது.

அதேசமயம் மலேசியத் தமிழர்களிடையே புழங்கும் சில தனித்துவமான சொற்கள்,  ஜப்பான்காரனின் அதிகார மொழி,  இருநூறு ஆண்டுகளுக்கு முன்னமே தமிழகத்திலிருந்து மனதில் ஏந்தி வந்த வட்டார மொழி, சில மலாய் சொற்கள் என மலேசியத் தமிழர்களின் மொழி கலந்து புதுமை பெற்று வெளிப்பட்டிருக்கிறது. இது நாவலை மலேசியத்தன்மை ஆக்குகிறது.  மலேசிய மண்ணின் மரங்கள் செடிகள் கொடிகள் என்று வரும்போது இன்னும்  வேரூன்றி நிற்கிறது.

இது என் பார்வைதான். இந்தப் படைப்பாக்கச் செயல்பாடுகளையும் தாண்டி  கையறு நாவல் நன்றாகவே உருவாகியிருக்கிறது. தேர்வு  சார்ந்தும் பார்வை சார்ந்தும்  இந்நாவலில் கூடி வந்திருக்கும் விஷய கனம் பலமாக இருக்கிறது.

தங்களோடு வேலை செய்த மனிதன் மரணமுற்ற போது அவனுக்கு ஒரு நடுகல்லைத் தூக்கி வைக்க  நினைக்கிறார்கள். கர்ப்பிணியான  அக்கினீஸ் மரணமுற்ற போது ஒரு சுமைதாங்கி கல் வைக்கிறார்கள். அக்காலத்தில் பெண்கள் கைலி வேட்டி கட்டி இருந்ததைச் சொல்வது கூட முக்கியம்தான். புனைவுக்கு இவை வலிமை சேர்க்கின்றன.

தெரேசா குனிந்து கதிர்களைச் சேர்த்து கட்டும்போது ‘அவன் நிழல் அவள் மேல் விழுந்திருந்தது எனச் சொல்வது, எவ்வளவு நுட்பமான இடம்!  ராசாத்திக்கு பூப்புச்சடங்கு நடக்கிறது.  மூன்றுநாள் தீட்டு கழிக்க, உலக்கை, பூ, சீனச்செய்தித்தாள் வைக்கின்றனர்.  அதையெல்லாம் விட தாளைச்சுற்றி காத்து கருப்பு அண்டாமல் இருக்க மூன்று விளக்குமாறு குச்சிகளை உருவி தாள் சுற்றி வைக்கிறாள். அந்த எளிமை ரொம்ப அழகானது.

தெய்வானையின் தாலி இறங்கும் சடங்கில்,  தாலியைப் பால்சொம்பில் போடுவதும், செங்கலை நிறுத்தி கணவனின் ஆன்மா நல்ல நிலையை அடைய வேட்டியை வைத்து வணங்குவதும் மலேசியாவில் வழக்கமாக இருக்கிறது. இந்தப் பண்பெல்லாம் கையறு நாவலை அடர்த்தியாக்குகிறது.  அழகாக்குகிறது.

***

– சு. வேணுகோபால்
1.11.2020

(கையறு, நாவல் , கோ.புண்ணியவான் பதிப்பகம், இந்திய விற்பனை உரிமை “பி ஃபார் புக்ஸ் – 9042461472” அல்லது இணையத்தில் வாங்க இங்கே சொடுக்கவும்)

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular