பிரமிளா பிரதீபன்
சிங்களத்திகள் அழும்போது இரசிக்க முடியுமென்று ராமதாஸ் ஒருமுறை சொல்லியிருக்கிறான். சரியென்றால் இந்தத் தமிழன்களை நம்பவே கூடாது.
கண்களை முட்டி விழத்துடிக்கும் கண்ணீரின் ஆட்டத்தில் தாரிகா அவனைப் பார்த்தாள். துளிச் சலனமில்லாமல் அவன் கணிணிக்கு முன்பாய் அசைந்து நெளிந்தான். அவள் வேறு சாவிகொண்டு வீட்டைத் திறந்து உள்ளே வந்ததையோ அல்லது வழமைக்கு மாறாக நேரத்தோடு வீட்டுக்கு வந்தது பற்றியோ அவன் பிரக்ஞையற்றிருந்தான்.
அவளது பாணியிலான பிரச்சனைகள் வழமைபோலவே ஆரம்பித்தன. சத்தமாக கத்திப்பேசி வீட்டை இரண்டாக்கினாள். கையில் கிடைத்த சிறு பொருட்களையெல்லாம் ஓங்கி தரையில் அடித்தாள். சிலவற்றை அவனைத்தாண்டி பறந்து போவதாய் வீசியெறிந்தாள். ‘தாரிகா’ என சத்தமாக அதட்டி அவளை அவன் அடக்கக்கூடுமென எதிர்பார்த்தாள். அதிகமாய் இரண்டு கெட்ட வார்த்தைகளில் அவன் திட்டியிருந்தால்கூட அவளது ஆத்திரம் கொஞ்சம் தணிந்திருக்கும். அவனென்றால் எந்தச் சலனமுமின்றி வேலையில் மும்முரமாயிருந்தான்.
தாரிகாவின் எல்லா சந்தர்ப்பத்து வலையிலும் சிக்கிச் சிதைந்து மீண்டு வந்த அனுபவம் அவனுக்கு. மேலும் தீவிரமாக கணிணியில் மூழ்கத் தொடங்கியிருந்தான். தவிர, இவற்றிலெல்லாம் தான் அகப்பட்டுவிடாதிருக்கவும் அவன் பழகியிருந்தான். தன்னை அதிலிருந்து இன்னுமாய் தவிர்த்துக்கொள்ள மெல்லிய ஓசையுடையதான சில தமிழ்ப் பாடல்களை சத்தமாக ஒலிக்க விட்டவாறே தலையை ஆட்டிக்கொண்டிருந்தான்.
தாளவியலா ஆத்திரம் தலையைக் குடைந்ததவளுக்கு. சிங்களத்திலிருக்கும் உச்சமான கெட்ட வார்த்தைகளையெல்லாம் சேர்த்துக் கூவி அவனைத் திட்டிக்கொண்டேயிருந்தாள். ஒரு கட்டத்தில் தன்னிடமிருந்த கடைசி வார்த்தையும் தீர்ந்து போனதாய் சோர்வடைந்தாள். தளர்வோடு சமையலறைத் திட்டில் அமர்ந்து வக்கிரமான பார்வையால் அவனையே வெறித்தாள். அவளுக்குப் புரியாத அந்தத் தமிழ்ப் பாடல்களின் சத்தமும் அதற்கேற்றாற் போலான அவனது முணுமுணுப்பும் அவளிடத்தே வெறி கொள்ளச் செய்யும் ஆத்திரத்தைப் பரவவிட்டிருந்தது. அவனுக்கு அதிகோபத்தைத் தரும் ‘தெமலு’* என்ற சொல்லையும் மிகக்கேவலமான தொனியில் உச்சரித்து அவனைச் சீண்டினாள். இன்னும் சில தடவைகளும் ‘தெமழா’ என்று அவனைத் திட்டினாள்.
இறுதி முயற்சியாக, பாய்ந்து சென்று டெலிபோன் வயரை இழுத்து அறுத்தாள். டெலிபோனைத் தரையில் அடித்து சிதறவிட்டவாறே அவனது சலனத்தை எதிர்பார்த்தாள். ஒரே ஒரு நொடி அவன் அதிர்ந்தது போலிருந்தது. ஆனால் அப்படியும் இல்லை. தொடர்ச்சியாக பாடிக்கொண்டிடேயிருந்தான்.
ஒருவரையொருவர் நாலாய், எட்டாய், பத்தாய் என துண்டங்களாக்கி வீசியெறியும் வேகத்துடன் தங்களது ஆயுதங்களைப் பயன்படுத்திக்கொண்டனர். தாரிகா தனக்கேயுரித்தான வசைச்சொற்களையும் வன்முறைகளையும் இரைத்தாள். அவனோ அதியுச்சப் புறக்கணிப்பைக் கூரிய ஆயுதமாக்கியிருந்தான். பதினொரு வருட வாழ்வின் எச்சங்களாய் இரண்டு குழந்தைகள் நடமாடுவதைத் தவிர்த்து அவர்களுக்கிடையே சொல்லிக்கொள்ள வேறெதுவுமேயிருக்கவில்லை. நல்ல தகப்பனாயிருக்கும் ஒருவனுக்கு நல்ல கணவனாக முடியவில்லையென்பது அவளது கணிப்பு. ஒரு ஆதிக்கப்பிசாசிடம் காதலில் விழுந்த துர்பாக்கியம் அவனுக்கு.
‘நீ ஆம்புளன்னெல்லாம் இங்க ஒண்ணும் புடுங்க முடியாது. எப்பவுமே நீயெல்லாம் அடிமைதாண்டா தமிழ் நாயே’ வார்த்தைகளில் விஷம் தடவி வீசிக்கொண்டிருந்தாள். எல்லாமே அவனுக்குப் பழக்கப்பட்ட வசைச்சொற்கள்தான் என்றாலும், காதில் ஒலிக்கும் பாடலைத்தாண்டி அவள் உச்சரிக்கும் ‘தமிழ் நாயே’ என்ற சொல் தலையில் அடித்து நின்றது. அவ்வளவு நிதானத்துடன் அந்த வார்த்தைகளைத் தாண்டினான்.
பரஸ்பரம் விழுங்கிட யத்தனிக்கும் அவர்களது யுத்தம் தொடங்குவதும் தெரியாமல் முடிவதும் தெரியாமல் எப்போதும் தொடங்கி எப்போதாவது முடிகிறது. இயலுமானால் ஒருவரின் இரத்தத்தை ஒருவரென்று சியர்ஸ் சொல்லி பருகுமளவிற்காய் வாழ்க்கை ஆடத்தொடங்கிக் கொண்டிருந்தது.
அனேகமாக ஒவ்வொரு சண்டைகளின் எச்சத்திலும் அவனது ஆயுதமே வலுகொண்டதென ஆகியிருக்கும். அவளது தொடர்ச்சியான தோல்வியைத் தனக்குள் பொருத்திக்கொள்ள முடியாமல் புதிது புதிதாக எதையெல்லாமோ செய்து பார்த்தாள். அவனைத் தன் வசப்படுத்த அல்லது எப்போதோ அவனைத் தனக்கேற்றாற்போல ஆட்டுவித்த காலங்களை எண்ணியெண்ணிக் கோபப்படுவாள். தன்னுடலைக் காயப்படுத்துவாள். நினைவிலுள்ள தம்மபதத்தின் வரிகளையெல்லாம் சொல்லிச் சொல்லி ஆசுவாசப்படுவாள். குழந்தைகளை அடித்து காயப்படுத்துவாள்.
நேரம் பத்தைத் தாண்டியிருக்கவில்லை. கருமை தொற்றிக்கொண்ட வானத்தில் நீலம் மறைந்து மெல்லிய தூறல் விழுந்தது. ராமதாஸ் ஓடிச்சென்று கொடியில் காய்ந்த உடைகளை எடுத்துவந்தான். அதில் குழந்தைகளினதும் அவளுடையதும் உள்ளாடைகள் சேர்ந்திருந்தன.
ஆக அவன் இன்னும் தன்னை நேசிக்கிறானோ! உள்ளுக்குள் ஜிவ்வென்றிருந்தது. பின்னென்ன? ஒரு தமிழனுக்கு எப்படி இவ்வளவு திமிர் வர முடியும்? தாரிகா அவளது உள்ளாடைகளைப் பிடுங்கியெடுத்தாள்.
அவனுக்கான உணவைத் தானே சமைத்து வைத்திருந்தான். எல்லாவற்றிலுமாய் நேர்த்தியாகத் தன்னை ஆக்கியவனாக அவன் மேலும் மேலும் மாறிக் கொண்டிருந்தான். எந்த வழியில் அவனை அணுகுவதென்பதே தெரியாதிருந்தது. தான் எதற்காக சண்டை போடுகிறேன் என்றாவது அவன் கேட்க வேண்டுமென தாரிகா விரும்பினாள்.
‘ஏன் காலையிலேயே கதவைச் சாத்தி வைத்திருந்தாய்?’ அவனைக் கைகளால் மறித்து கேட்டாள். ‘கதவு வேறெதற்கு இருக்கிறது?’ மிக இயல்பாகவிருந்தது அவனது பதில்.
‘நான் இல்லாதது அவ்வளவு சந்தோசம் உனக்கு. யனக்கங் பலங் இன்னவா நேத’* இரு மொழியிலுமாய் சத்தமிட்டு அடுத்த சண்டையை ஆரம்பித்தாள். காதில் பாடலை ஒலிக்கவிட்டவாறே கணணிக்கு முன்பாக மீண்டும் அமர்ந்தான்.
அமைதியற்றவளாய் வீட்டுக்குள்ளேயே அலைந்தாள். மண்ணுக்குள் தான் மூழ்கி அழுகிக் கொண்டிருப்பதாய் இருந்தது. தலைமுடியை இழுத்துக் கடித்துக்கொண்டு தம்மபத காத்தாவை முணுமுணுத்தாள்.
மனம் அமைதி கொள்வதாயில்லை. மேலும் மேலும் கொப்பளித்து ஆர்ப்பரித்தது. காத்தாவை விடாமல் உச்சரித்துக்கொண்டிருந்தாள். பின், விருட்டென எழுந்துசென்று உடம்போடு ஒட்டிப்பிடித்த சட்டையொன்றை அணிந்தாள். முகத்திற்கு அலங்காரம் செய்தாள். முடியை விரித்துவிட்டு ஒரு கிளிப் மாட்டினாள். அவனுக்காக வைத்திருந்த பொட்டை அழித்தாள். தாலியைக் கழற்றி மெத்தைக்கு மேலாக வீசியெறிந்து ஒரு வெள்ளிச் சங்கிலியை அணிந்தாள். இளம் ஊதாநிறத்தில் உதட்டுசாயமிட்டாள். கண்ணாடியைப் பார்த்துச் சிரிக்க முயற்சித்தாள். கண்கள் வீங்கித் தொங்கின. தனது கைப்பேசியை எடுத்து நூறிற்கு சத்தத்தை கூட்டி வைத்தாள். தனக்குப் பிடித்த பாடல்களைத் தேடித் தேடி இறுதியில் டெஸ்மொன் டி சில்வாவின் ‘சும்ஹிரி பானே’ பாடலை பெருஞ்சத்தத்துடன் ஒலிக்கவிட்டாள்.
பைலா பாடலின் அதிகரித்த சத்தம் அவனைக் குழப்பியது.
கைகளை வீசிக்கொண்டு உடலை மென்மையாக அசைத்தசைத்து தாரிகா நடனமாடத் தொடங்கியிருந்தாள்.
‘என்ன எழவாவது பண்ணட்டும்’ என்றெண்ணி அவள் பக்கம் திரும்புவதையே ராமதாஸ் தவிர்த்தான். ஆனால் பாடல் சத்தமாக அதிர்ந்தொலிப்பதையும் அவள் நிறுத்தாமல் தொடர்ச்சியாக ஆடிக்கொண்டிருப்பதையும் அவனால் உணர முடிந்தது.
தாரிகா சிங்கத்தைக் கிணற்றில் தள்ளத் திட்டமிட்ட நரியாக மாறியிருந்தாள். பிரிட்ஜிலிருந்த ஜின் போத்தலை திறந்து எதையும் கலக்காமல் கொஞ்சம் கொஞ்சமாகக் குடிக்க ஆரம்பித்தாள். அப்படியே தன்னிலை மறந்து ஆடத்தொடங்கியிருந்தாள். முதலில் கசப்பாயும் பிறகு உற்சாகமாயும் சற்றே தாமதித்து, பறப்பது போலுமாய் இருந்தது. அவனின் அலட்சியம் தந்த வெறுப்பிலிருந்து மீள்வதற்காகவே அவள் அதனை விரும்பினாள். அந்த ஜின் போத்தலை முத்தமிட்டபடி இன்னும் இன்னுமாய் சிறுகச் சிறுகக் குடித்தாள். கண்கள் மின்னியது. சிறு புள்ளியென அவன் தூரமாகிக் கொண்டிருந்தான். தானும் சேர்ந்து பாடிக்கொண்டே வேகமாக ஆடத் தொடங்கியிருந்தாள்.
Play the devil with the bottle freedom in the bar
When you broke don’t worry sell your lovely car…. *சும்ஹிரி பானே….. பதமட கஹலா… ஹெட்ட மெருணத் ஹித்தட செப்பய் அத ஜொலி கரலா… பாடல் அதிர்ந்தொலித்தது.
அவளது குட்டையான சட்டை விரிந்து சுழன்றது. சட்டென ஒருபடி அதிகரித்து, கையில் போத்தலை வைத்துக்கொண்டே அசைந்தசைந்து ஆடினாள். கண்கள் சொறுகி மீண்டது. மொத்தமாக அவனை மறந்துபோயிருந்தாள். சுற்றிச் சுற்றி ஆடினாள். தலையை ஆட்டிக்கொண்டே, போத்தலைத் தூக்கிப்பிடித்துக் குடித்துக்கொண்டே ஆடினாள். தான் இதுவரை இப்படிக் குடித்ததில்லை என்பதை மறந்து அதிகமாகக் குடித்துக் குடித்து…. கால்கள் தள்ளாடி விழப்போவதையும் நடனத்தின் அசைவென்றாக்கி, அதே பாடலை ஒலிக்கவிட்டுக் குலுங்கியாடினாள்.
‘சும்ஹிரி பானே………’ குரல் தடுமாறியது. தனக்கு முன்னால் தெரிந்த எல்லாமே தலைகீழாகிச் சுழல்வதாக… அவ்வளவு போதையிலும் அவன் தன்னைப் பார்க்கிறானாவெனத் தேடினாள். அவனைத் தெரியவில்லை. ஆடியாடித் தான் வேறெங்கோ வந்துவிட்டதாயிருந்தது. ஒருவேளை வீட்டு முற்றத்தில் ஆடிக்கொண்டிருக்கிறேனோ! ச்சே என்ன வெட்கங்கெட்ட பிழைப்பு… கைகளை அளைந்து தடுமாறி நடந்தாள். மேசை தட்டுப்பட்டது. அப்படியே டிவி.. இல்லை வீட்டில்தான் இருக்கிறோம். அவன் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறான்.
பாட்டு நின்றிருந்தது. அதையறியாமல் அவள் தானே பாடிக்கொண்டு, அவன் எங்கோயிருந்து தன்னைப் பார்க்கிறான் என்றெண்ணியவாறே ஒரு பைத்தியத்தைப் போல சரிந்து நிமிர்ந்து சிரித்துக்கொண்டே தள்ளாடினாள்.
சுற்றிலும் இருண்டது. தனதுடல் கிடையாகிச் சுற்றிக்கொண்டிருப்பதாயிருந்தது. தலை பாரமாகி வெடிக்கத்தொடங்கியது. உடலிலிருந்து கழுத்து தனியே துண்டிக்கப்பட்டாற் போல கழுத்திற்கும் உடலிற்குமான இடைவெளி எடையற்று அசைந்தது. கைகளைப் பிணைக்க முடியவில்லை. அல்லது கைகளைக் காணவில்லை. அவள் நேராக நடப்பதற்குக் கால்களைக் குனிந்து தேடினாள். கால்களையும் காணவில்லை. உடல் மட்டும் வெறும் துண்டமாய் சரியத் தொடங்கியது.
சற்று நேரத்திற்குள் தடார் என்ற பெருஞ் சத்தத்தேடு அவள் இடிபட்டு விழுந்தாள்.
…………………………………………………………..
சத்தம் கேட்டு ராமதாஸ் அவளிடத்தே ஓடினான். அசைக்க முடியாத பாரத்தோடு மயங்கிக் கிடந்தாள். ஜின் போத்தல் காலியாகியிருந்தது.
‘பைத்தியமே இவ்வளவையும் தனியா அடிச்சா செத்துருவடி’ தான் கவனிக்காமலிருந்ததை எண்ணி வருந்தினான். என்ன செய்யலாமென்று அவனுக்கும் தெளிவில்லை. பிள்ளைகள் வரும் நேரம் வேறு. ஹொஸ்பிட்டல் கொண்டுபோக முடியாத நிலை. ஆயிரம் கேள்விகள் முளைக்கும். என்ன செய்யலாமென்று ஒன்றும் தோன்றவில்லை. சுமதி அக்காவைத் தொலைபேசியில் அழைத்தான். ‘பதட்டப்படாத கொஞ்சம் பார்த்துட்டு ஹொஸபிட்டல் போ… ஆபத்தாகிரும்’ என்றாள். முகத்திற்குத் தண்ணீர் தெளித்தான். தாரிகா தாரிகா என்று கன்னத்தில் தட்டினான்.
அகங்காரத்தின் எல்லாத் திசைகளிலும் ஒரு அப்பாவியின் கழுத்து நெறிபடுகின்றது. குருதி சொட்டச் சொட்ட என்னை வேட்டையாடித் தின்று தீர்த்தும் இவளுக்கு இன்னும் அடங்காத பசி. வெறி கொண்ட பசி. கைப்பொம்மையாக விரும்பாத ஒருவன் தனித்திருக்க விரும்புவதை உலகம் எப்படிச் சொல்லப்போகிறதோ! பெண்ணுக்குச் சார்பாக மட்டுமே இயங்கும் ஒரு உலகத்தை அவன் தெளிவாகப் பார்த்தான். ஒரு அரக்கியோடு… அதிகாரப் பிசாசோடு….! என்னவொரு சாபம் இது? குழந்தைகளுக்கு என்ன பதில் சொல்வேன். இவளது ஒவ்வொரு முட்டாள்தனத்தின் முடிவிலும் எனது பிரகாசத்தை இழந்து நான் தனியனாகி நிற்கிறேன். ஏதோ ஒரு வகையில் எனக்கு உடன்படு அல்லது என்னோடு சண்டையிடு என்பதாய் பழி வாங்குபவளிடம் வேறென்ன செய்வது?
அவளைத் தூக்க முயன்றான். பின் அப்படியே படுக்கச்செய்து கால்களைத் தளர்த்தி விட்டான். சொட்டுச் சொட்டாகத் தண்ணீர்த்துளிகளைப் பருகச்செய்தான். செய்வதறியாது ஸ்தம்பித்த நிலையில் பதறியோடிச் சென்று Chat GPT யிடம் என்ன செய்வதென்பதைக் கேட்டுப்பார்த்தான்.
Chat GPT யின் பதிலைப் பார்த்ததும் அவனுக்கு மூச்சடைத்தது. வியர்த்து கைக்கால்கள் உடலென முழுதாய் நடுக்கம் கொண்டான். ஏமாற்றமும் சோர்வும் தோல்வியும் சேர்த்ததாய் சில பெருமூச்சுகளோடு தலையிலடித்துக் கொண்டான். அவனுக்குச் சாதகமாக ஏதும் இருக்கிறதாவென மீண்டும் மீண்டும் படித்தான்.
நீங்கள் உடனடியாகச் செய்யவேண்டியது இங்கே:
1. அவசர சேவைகளை இப்போதே அழைக்கவும் – இலங்கையில், 1990 (சுவசேரியா ஆம்புலன்ஸ் சேவை) என்ற எண்ணை டயல் செய்யவும்.
2. அவளை வாந்தி எடுக்கவைக்க முயற்சிக்காதீர்கள்.
3. அவள் வாந்தி எடுத்தால் மூச்சுத் திணறலைத் தடுக்க அவளைப் பக்கவாட்டில் படுக்கவைக்கவும் (மீட்பு நிலை).
4. அவளுடைய சுவாசத்தையும் நாடித்துடிப்பையும் சரிபார்க்கவும்.
5. அவளைச் சூடாக வைத்துக்கொண்டு, உதவி வரும் வரை அவளுடன் இருங்கள்.
இது ஒரு மருத்துவ அவசரநிலை. உடனடியாக தொழில்முறை உதவியைப் பெறவும் – ஆல்கஹால் விஷம் கோமா அல்லது மரணத்தை ஏற்படுத்தும்.
அவனுக்கு அழுகை வந்தது. அவள் இறக்கக்கூடுமென்ற பயத்தில் அவளது கைகளை இறுக்கமாகப் பற்றினான். நடுங்கும் விரல்களால் சுமதி அக்காவை அழைக்க கைப்பேசியை எடுக்கும்போது தாரிகா சரிந்து வாந்தி எடுக்கத் தொடங்கியிருந்தாள். கைப்பேசியை வைத்துவிட்டு அவளுக்கு உதவினான். அணைத்துப் பிடித்துக் கொண்டான். தொடர்ச்சியாக வாந்தி எடுத்துக்கொண்டிருந்தாள். மீண்டும் ஓடிச்சென்று Chat GPT யிடம் கேட்டான். ஆபத்து நிலையில்லையென்றும் தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக பருகத்தரும்படியும் சொன்னது.
அவன் செய்வது முட்டாள்தனமென்று தெரிந்தும் அவன் அதையே செய்து கொண்டிருந்தான். இப்போது அவள் விழித்திருந்தாள். உளறிக்கொண்டே கைகளை ஆட்டினாள். மீண்டும் வாந்தியெடுத்தாள். அப்படியே அவளை இழுத்து குளியலறைக்குள் எடுத்தான். ஆடையை பிய்த்தகற்றி குளிச்சியான தண்ணீரில் குளிக்கச்செய்தான். ‘சீத்தலாய் சீத்தலாய்’* என்று அவள் பிதற்றினாள். ‘என்ன செய்கிறாய், நீ யார்? ஏன் என் ஆடையைக் கழற்றுகிறாய்…?’ சிறுபிள்ளையைப்போல கேட்கத் தொடங்கியிருந்தாள். அவனுக்குள் மெல்லிய நெகிழ்தல் உருவாகியது. எலுமிச்சை பாதியை தலையில் தேய்த்து தண்ணீர் ஊற்றினான். அவளைத் துடைத்து உடைமாற்றி படுக்கச்செய்து, பின் வாந்தி எடுத்த இடத்தை முழுவதுமாய் சுத்தம் செய்தான். வயிறு புண்பட்டிருக்குமெனத் தோன்றியது. ஜெலி செய்து பிரிட்ஜில் வைத்தான்.
அதற்குள் அவள் எழுந்திருந்தாள். மீண்டும் அந்தப் பாடலை ஒலிக்கும்படியும் தான் ஆட வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டேயிருந்தாள். ஜெலியை ஊட்டிவிட்டான்.
‘சும்ஹிரி பானே….. பதமட கஹலா…’ சாப்பிட்படியே கைகளை அசைத்தாடியபடி பாடத்தொடங்கினாள். அவன் இப்போது நிஜமாகவே நொந்திருந்தான். வெறுப்பா அன்பா என்றறியாத ஒரு உணர்வோடு அவளிடத்திலேயே அமர்ந்திருந்தான். அவள் தொடர்ச்சியாக உளறிக்கொண்டே கைகளையும் உடலையும் அசைத்தசைத்து ஆடுவதாய் எண்ணிக்கொண்டு ஏதோ செய்தாள். அவனை அருகே வரும்படி அழைத்தாள். அவனது மடியில் படுத்துக்கொண்டாள்.
நீண்ட காலத்திற்குப் பிறகு பெண்ணுடலை நிர்வாணமாக பார்த்த நிலை அவனை அழுத்தியது. அவள் தனது மடியில் படுத்துக்கொண்டு பாடுவது மேலும் அவனை அவஸ்த்தைக்குள்ளாக்கியது. தான் எல்லாவற்றிலிருந்தும் தப்பித்து ஓட எத்தனித்தும் மீண்டும் வெளிச்சத்தைத் தேடி இறக்கும் பலவீனமான ஒரு பூச்சியென உணர்ந்தான். விருப்பத்துடன் அவளது ஸ்பரிசத்தை ஏற்றான். போதையில் அவளது கண்கள் ஜொலித்தன. அவ்வளவு அருவருப்பான வாந்தியின் மணத்தைத் தாண்டியதொரு பெண் வாசனை நாசியில் அகலாமல் தங்கியிருந்தது. அவள் தொடர்ச்சியாக பாடிக்கொண்டே இருந்தாள். அவனை இழுத்தணைத்தபடி அசைந்தாடினாள்.
தான் சுயமிழக்கப் போகிறேனென்று உள்ளுணர்வு அவனை எச்சரித்தது. மொழிக் கலப்பைக் கொண்டாடிய அவர்களின் அழகான பக்கங்களை நினைவிற்குக் கொண்டுவந்தான். அது நடுக்கடலையொத்த பேரமைதியுடன் கடந்து போனதை எண்ணிக்கொண்டான். மழைநீரின் தூய சுகந்தத்தை அள்ளித்தெளித்த அவர்களது அந்நாட்களில் காதல் ததும்பியருந்ததையும் அவளது உரத்த சிரிப்பும் அதன் அதிர்வுகளும் அவனை வீழ்த்திச் சாய்த்ததையும்… மீண்டும் அந்நாட்களை உயிர்ப்பிக்க எங்கேனும் வாய்ப்பிருக்கிறதாவென ஒருகணம் சந்தேகித்தான். அப்போதெல்லாம் வெளியில் தென்படா அவளின் வெறி, இப்போது மட்டும் எங்கிருந்து வந்ததென யோசித்தான். . பிள்ளைகளைக் கட்டாயப்படுத்தி சிங்களத்தில் பேசவைத்தது தற்செயல் அல்லவெனத் தோன்றியது.
அதிகாரத்தின் ஆதிவேரைக் கொண்ட ஒருத்தியின் அனிச்சையான குணம் வெறுமனே உள்ளத்தோடு தோன்றித் தொடர்பறுந்துபோக வாய்ப்பே இல்லையென்பதை யாருமே அவனுக்குச் சொல்லியதில்லை. அல்லது காதல் முற்றிய அவனது பூஞ்ஞைக் கண்கள் அதனைக் கண்டுபிடிக்கவில்லை. அத்தகைய ஆதிக்கத்தின் மிச்சங்கள் குருதியின் மொத்தத்திலும் ஆட்கொண்டிருக்கும் என பின்னாளில் தாரிகாவேதான் அவனுக்கு உணர்த்தியுமிருந்தாள். அவளது நாக்கில் மிகுந்திருந்த துவேசிக்கும் நச்சுக்கள் மீதான தன் சகிப்பிற்குள் குழந்தைகளின் முகங்கள் மாத்திரமே எஞ்சியிருந்தன.
அவனை மொத்தமாகத் தோற்று விழச்செய்த அவளின் இந்தப் புதிய நாடகத்தில், துருவேறி விஷமாகியிருந்த அவர்களுக்கிடையேயான இடைவெளி இன்னும் கொஞ்சம் அதிகரிக்கும் என்றே அவன் நம்பினான். ஆனால் நீண்ட தொலைவுக்கப்பால் இருவரும் பிரியப்போகிறார்கள் என்ற அவனது உள்ளுணர்வு கொதிக்கும் எண்ணெயில் தெறித்த நீரத்துளிகளென்றானது. பிடிவாதத்தின் உச்சத்தில் நெகிழ்வடையும் தன்மையுடையதான ஒரு பலவீனமான ஆண் அவனுக்குள் உயிர்த்தெழுவதாய் உணர்ந்தான்.
பாம்பும் ஏணியும் கொண்ட விளையாட்டில் ஒவ்வொரு ஏணியிலும் தாவியேறி வெற்றியின் எல்லையைத் தொட்டிருந்த அவன், இறுதியில் வாய் பிளந்திருந்த பாம்பின் வாய்க்குள் தப்பிக்க வாய்ப்பிருந்தும் சிக்குவது போலானான். அந்தப் பெரும் பாம்பு வெற்றியின் உச்சத்திலிருந்து அவனைத் தொடக்கப் புள்ளிக்குள் வீழ்த்துவதற்காய் வாய்பிளந்து காத்திருந்தது.
பிறகும் அவள் அதே பாடலைப் பாடிக்கொண்டே அவனைப் பார்த்து வெற்றிச் சிரிப்பொன்றை உதிர்த்தாள். தனக்கு முன்னால் விட்டத்தை வெறித்துக் கொண்டிருந்த அவனைத் தன் கால்விரல்களால் சீண்டி,
‘ஒயா மட்ட ஆதரேய் நேத?’* என்றாள்.
***
*சும்ஹிரி பானே….. பதமட கஹலா…ஹெட்ட மெருணத் ஹித்தட செப்பய் அத ஜொலி கரலா… (இனிய பானத்தைப் பதமாகக் குடித்து இன்று குதூலித்துவிட்டு நாளையே இறந்தாலும் மனதிற்குக் கொண்டாட்டம்தான்.)
*சீத்தலாய் – குளிர்கிறது
*யனக்கங் பலங் இன்னவா நேத’- போகும் வரை பார்த்துக் கொண்டிருக்கிறாய் தானே?
*‘தெமலு’- தமிழன்
*ஒயா மட்ட ஆதரேய் நேத?– நீ என்னை காதலிக்கிறாய் தானே?
பிரமிளா பிரதீபன் – இலங்கையை சேர்ந்தவர். ஃபாத்திமா மகளிர் கல்லூரியின் துணை முதல்வராகவும், SLIIT பல்கலைக்கழகத்தின் வருகைதரு விரிவுரையாளராகவும் பணிபுரிகிறார். மூன்று சிறுகதைத் தொகுப்புகள், ஒரு நாவல் வெளியாகியிருக்கின்றன. தொடர்ச்சியாக இலக்கிய இதழ்களில் சிறுகதைகள் எழுதிவருகிறார். மின்னஞ்சல் : pramilaselvaraja@gmail.com


