ஆண்டாள் (க.நா.சு)
தமிழில் : பாலா இளம்பிறை
(தமிழில் காந்திய இலக்கியம் பற்றி க.நா.சு.வின் மதிப்பீட்டைப் புலப்படுத்தும் இந்தக் கட்டுரை ‘Tamil Literature After Gandhi’ என்ற தலைப்புடன் ‘Gandhi Marg’ (அக்டோபர் 1958) இதழில் வெளியான கட்டுரையின் மொழிபெயர்ப்பு. இக்கட்டுரையை Andal என்ற புனைபெயரில் எழுதியிருக்கிறார். அவர் தரித்துக்கொண்ட நாமங்களில் இதுவும் ஒன்று. – ஶ்ரீனிவாச கோபாலன்)
நடைமுறையில் இந்த மாதிரியானதொரு கருத்தியலைக் கையாளுவதென்பது எனக்கு முற்றிலும் புத்தம் புதிய முயற்சி. இந்த நாடு இன்னமும் வரைபட ஆக்கத்துக்குள் கொண்டுவரப்படவில்லை, கடல்கள் அடையாளம் கண்டு கொள்ளப்படவில்லை, உயரங்கலும் ஆழங்களும் குறிக்கப்படவில்லை அல்லது அளக்கப்படவில்லை. என்னை நான் வழி நடத்திச் செல்லும் வழக்கமான அடையாளங்கள் எதுவும் எனக்குத் தென்படவில்லை. எனது மதிப்பீடுகள் அனைத்தும் அகம் சார்ந்ததாகவே இருக்கவேண்டுமென்று நினைக்கிறேன், மேலும் அப்படிபட்ட அகம் சார்ந்த மதிப்பீடுகள், அறுதியிட்டுக் கூற முடியாத நிலையில் இலக்கியத்தில் உள்ளோடியிருப்பதும் தவிர்க்க முடியாததே. இத்துடன் மற்றுமொரு உண்மையையும் பொருத்திப் பார்க்கும் போது, இலக்கியம் சார்ந்தும் அரசியல் சார்ந்தும் மிக அருகாமையில் ஒன்றை வைத்துப் பார்க்கும் போது, மிகைப்படுத்தப்படுகிற சில திரிபுகள் ஏறக்குறைய தவிர்க்க முடியாதவை ஆகிவிடுகின்றன.
தமிழ் இலக்கிய வெளி பற்றிய பொதுவான சில அவதானிப்புகள் ஒரு வசதியான தொடக்கமாக இருக்கும். கடந்த மூன்று நூற்றாண்டுகளாக, அதாவது பதினாறில் இருந்து பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை தமிழ் இலக்கிய வெளியானது இலக்கணக் குறைபாடற்றவர்களாகவும் மற்றும் தங்களுடைய தனிப்பட்ட மேதைமையைப் போற்றி அதில் நாளும் தொலைந்து போனவர்களாகவும் இருந்த ஆசிரியர்களாலும், பாடகர்ளாலும் ஆதிக்கம் செலுத்தப்பட்டுக் கொண்டிருந்தது. இத்தகைய போக்கின் விளைவாக, தமிழ் இலக்கியத்தின் இடைக்கால, நடுத்தரம் மற்றும் கல்வியியல் சார்ந்த ஆளுமை மிக்க மதிப்பீடுகளுக்கு ஊடே இலக்கியமானது பெரும்பாலும் புறக்கணிக்கப்பட்டே வந்தது.
சென்ற நூற்றாண்டின் முப்பதுகளில் சென்னையில் நிறுவப்பட்ட ஆங்கிலக் கல்விச் சங்கத்தாலும் (The English Education Society), பேச்சுத் தமிழிலும் எழுத்துத் தமிழிலும் முன்னோடியாய் தமிழார்வம் காட்டிய கிறித்துவ மிஷனரிகளின் முன்னெடுப்புகளாலும் தமிழுக்கு முதன் முதலாக நவீன தமிழ் அகராதிகள், அகரவரிசைச் சொற்குறிப்புகள், இலக்கண விளக்கங்கள் மற்றும் ஏறக்குறைய முதல்-உரைநடை நூல்களும் வெளிவந்தன. சீர்திருத்தங்கள் வேண்டிய உணர்வு பரவலாகிக் கொண்டிருந்த நேரத்தில், இராம் மோகன் ராய் மற்றும் பல சீர்திருத்தவாதிகளால் பகிரப்பட்ட சமூக சிந்தனைக் கருத்துக்கள் களத்தில் இருந்தபோது, அதேநேரத்தில் மெல்லிய முன்னெடுப்புகளாக அவை உணர்வுபூர்வமானவையாக தமிழ்நாட்டையும் வந்தடைந்து கொண்டிருந்தன. பத்தொன்பதாம் நூற்றாண்டின் மையப் பகுதியில் மத மற்றும் சமூகக் கட்டமைப்புகளை எதிர்த்து நின்று உத்வேகம் அளித்துக் கொண்டிருந்த செறிவான எழுத்துக்களும், தமிழ் நிலத்தில் நிலை கொண்டிருந்த தற்போதைய போதாமை உணர்வும் கிளர்ந்தெழுந்து கொள்ள கல்விச் சூழலற்ற மந்தநிலையை மாற்றுவதற்கான உத்தியில் அவை ஆதிக்கம் செலுத்தத் தொடங்கின, வெகு முக்கியமாக அது உரைநடை எழுத்துத் துறையை ஆட்கொண்டது.
நவீனத் தேவைகளுக்கேற்ப தங்களது மொழியை மாற்றுவதற்கான போராட்டத்தில் இறங்கிய போது, தமிழ்ச் சமூகமானது சில நூற்றாண்டுகள் மறதிக்குப் பின், பெருமைகள் வாய்ந்த தங்களது கடந்த காலத்தை மீட்டெடுப்பதற்கான விழிப்புணர்வையும் பெற்றது. கடந்த நூற்றாண்டின் இரண்டாம் பகுதியில் பேச்சு வழக்கில் தெளிவற்ற முறையில் இருந்த பண்டைய தமிழ் நூல்களுக்கான தேடல் அப்போதே தொடங்கியது. முனைவர் சாமிநாத ஐயர் மற்றும் எல்.டி. சாமிக்கண்ணு பிள்ளை போன்றவர்களின் முயற்சியால் அதுவரை கிடைக்கப்பெற்ற உறுதியான தகவல்கள் கொண்ட மற்றும் அறிவார்ந்தவர்களால் தொகுக்கப்பெற்ற தமிழ்ச் செவ்வியல் நூல்கள் தமிழார்வலர்களுக்குக் கிடைக்கப் பெற்றன. சிறந்த எழுத்தாளர் ஒருவரால் ‘பதினெட்டு நூற்றாண்டுகளுக்கு முந்தைய தமிழர்கள்’ (The Tamils Eighteen Hundred Years Ago) என்கிற தலைப்பில் கொண்டு வரப்பட்ட ஒரு சிற்றேட்டின் தொகுப்புகள் மூலமாக, மொழியின் மீதான பற்றும் நாட்டுப்பற்றும் மிகத் தீவிரமாக வெளிப்பட்டு பத்தொன்பதாம் நூற்றாண்டில் அது உச்சத்தை அடைந்தது.
கடந்த காலப் பெருமைகளை நிலைநாட்டிக் கொண்டிருந்தபோது, அது எவ்வளவு திருப்திகரமானதாக இருந்த போதிலும், வளர்ந்து வரும் சூழலின் தேவைகளைப் பூர்த்தி செய்வதாய் இல்லை, முற்றிலுமாய் பூர்த்தி செய்யவும் முடியாத நிலை. காந்தி இந்திய அரசியல் அரங்கில் நுழைந்து புரட்சிகரமான, ஆனால் அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய முறையில் அத்தியாவசியமான இந்திய விழுமியங்களை மீண்டும் வலியுறுத்தி பிரச்சினையை தீர்த்துக்கொள்ள முயற்சித்த போது, ஏற்கனவே கிளர்ந்தெழுந்திருந்த மறுமலர்ச்சி மற்றும் சீர்திருத்தப் போக்குகள் தங்களை தமிழ் நிலத்தில் நிலைநிறுத்திக்கொள்ள போராடிக் கொண்டிருந்தன. அப்போது இந்தியாவில் இருந்த பிற மொழியியல் சார்ந்த குழுக்களைப் போலவே தமிழர்களும், இந்தக் காந்திய அணுகுமுறையின் வாரிசுகளாக மாறினார், மேலும் விரைவிலேயே தமிழ் எழுத்தாளர்கள் கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் காந்திய முறையில் ஒரு சக்திவாய்ந்த முறையில் இணைத்துப் பேசத் தொடங்கி விட்டனர்.
வேறெங்கிலும் தவிர்த்து, மிகக் குறுகிய காலமே வாழ்ந்த தமிழ்நாட்டின் தேசியக்கவியான திரு சுப்ரமணிய பாரதியின் (1889-1921) எழுத்துக்களின் தொகுப்புகளில் மட்டுமே அது வெளிப்படையாய் காணக் கிடைக்கிறது. பாரம்பரிய ஏற்றுக்கொள்ளலுக்கும் புரட்சிகர ஆர்வங்களுக்கும் இடையே நைந்து ஊசலாடிக் கொண்டிருந்த தற்போதைய அதிருப்திகளுக்கு சற்றும் குறையாமல், கடந்த கால மீட்டுருவாக்கங்களின் வாரிசான சுப்ரமணிய பாரதி, காந்தியின் வருகையை வெறுமனே மெலிதானதொரு பார்வையோடு கடந்து விடுகிறார். அதற்கு மேல் எதுவுமில்லை. ஆனால், கவிதை நுண்ணறிவின் வேரினைப் பற்றிக்கொண்டு, வெளிநாட்டவரிடமிருந்து மட்டுமல்லாமல், தனது சமூகத்தில் காலங்காலமாய் நீடித்துக் கொண்டிருக்கும் தீமைகளில் இருந்தும் இந்தியாவை விடுவிக்கும் முயற்சிகளில் இருந்ததால் அவர் போற்றுதலுக்குரியவராகிறார்.
பாரதியும் கூட 1906 –லிருந்து வங்காளப் புரட்சியாளர்களுடனும், பிபின் சந்தர பால் மற்றும் துடிப்பு மிக்க திலகருடனும் ஒத்த மனநிலையோடே இருந்தார். கிழக்கிந்தியக் கம்பெனி அல்லாத வேறொரு ஆளுகையின் கீழ் அரவிந்தர் பாண்டிச்சேரி வந்தடைந்து அரசியல் ரீதியாகவும் தத்துவார்த்த ரீதியாகவும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டபோது அவரால் ஈர்க்கப்பட்டவராகவும், கிட்டத்தட்ட அரவிந்தருக்கு முன்னமேயே தன்னை அங்கே நிறுவிக் கொள்ளவும் செய்தார். காந்தியின் சென்னை வருகையின் போது, அவருடனான பாரதியின் ஒரேயொரு புயல் மாதிரியான சந்திப்பு மட்டுமே பதிவு செய்யப்பட்டிருக்கிறது. பாரதியின் எழுத்துக்களில் காந்தியின் தாக்கம் மிகச் சொற்பமாகவே காணக் கிடைக்கிறது. காந்தியைப் பற்றிய உற்சாகமான ஐந்து பாராக்கள் கொண்ட ஒரேயொரு கவிதையை மட்டுமே அவர் நமக்கு விட்டுச் சென்றுள்ளார்.
பாரதியின் நட்பு வளையத்தில் இருந்த எழுத்தாளர் வி. இராமசாமி ஐயங்கார் நாற்பதுகள் வரை வாழ்ந்தவர். பாரதி குரல் கொடுத்த சமூகப் போராட்ட வழிமுறைகள் அனைத்திற்கும் அவர் வாரிசு நிலையில் இருந்தார், காந்தி அவர்களின் மீது அவருக்கு நம்பிக்கை இருந்தது, ஆனாலும் வன்முறை சார்ந்த போராட்டங்களில் அவர் அதீத நம்பிக்கைக் கொண்டிருந்தார். வெகுவான இளைஞர்களை தன் பக்கம் ஈர்த்திருந்த, வலிமையும் முக்கியத்துவமும் வாய்ந்த எழுத்துக்களைக் கொண்டிருந்தவர் வ. ரா. என்று அழைக்கப்படும் இராமசாமி ஐயங்கார். காந்திக்கும் சுப்ரமணிய பாரதிக்கும் இடையிலான சந்திப்பின் சூழல்களை, அவர் தன்னுடைய ‘சுப்ரமணிய பாரதியின் முழுமுதல் சுயசரிதை’ நூலில் பதிவு செய்திருக்கிறார். வாசலில் இருந்த பாதுகாவலர்களைக் கூட சட்டை செய்யாமல், அறைக்குள் அமர்ந்து இராஜாஜியுடனும் மற்றைய தலைவர்களுடன் காந்தி பேசிக்கொண்டிருக்கும் நேரத்தில் உள்ளே நுழையும் பாரதி, காந்தியின் அருகே அமர்கிறார், மாலையில் கடற்கரையில் தான் உரையாற்றவிருக்கும் கூட்டத்திற்குத் தலைமை தாங்க முடியுமா என்று கோரிக்கை வைக்கிறார். மகாதேவ் தேசாயுடன் கலந்தாலோசிக்கும் காந்தி, மாலையில் தனக்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்டிருக்கும் நிகழ்வுகள் இருக்கின்றன என்று சொல்கிறார். ‘அதற்கு நானெதுவும் செய்ய முடியாது’ எனும் பாரதி அங்கிருந்து உடனடியாய் வெளியேறுகிறார். அங்கிருந்து அவர் கிளம்பியதும், காந்தி இராஜாஜியைப் பார்த்து ‘யார் இவர்’ என்று கேட்க, அதற்கு இராஜாஜி, ‘இவர் நமது தேசிய தமிழ்க் கவி’; என்றதாகவும் கூறப்படுகிறது. அடுத்து உடனடியாகப் பேசிய காந்தி, ‘ஓ.. புனித எண்ணங்கள் கொண்டவர். அவர் பாதுக்காக்கப்பட வேண்டிய நமது பொக்கிஷம்’ என்கிறார். உறுதியானதோ அல்லது உறுதித்தன்மை அற்றதோ, இந்த அத்தியாயம் பாரதியின் மீதும் காந்தியின் மீதும் ஒரு புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சுவதற்காகவே.
இருபதுகளில் காந்தியின் தாக்கத்தை உள்வாங்கி தமிழர்களுக்கு அதைத் தங்கள் எழுத்துகள் மூலம் பரப்பியவர்களில் முக்கியமானவர்கள் (இங்கே எழுத்தாளர்கள் மற்றும் எழுத்தாளுமைகள் என்று அழைக்கப்படக் கூடியவர்களாக என்னளவில் தெரிந்த சிலரைப் பற்றி மட்டுமே இங்கே குறிப்பிடுகிறேன்) என்று மூன்று முக்கியமான ஆளுமைகளை இங்கே குறிப்பிட வேண்டுமானால் அவர்கள், சி. இராஜகோபாலாச்சாரி, திரு. வி. கல்யாணசுந்தரனார் மற்றும் பி. வரதராஜுலு நாயுடு. இருபதுகளில் காந்தியத் தாக்கத்தில் இருந்து விலகாத நான்காவது நபராக இன்னொருவரை இந்தப் பட்டியலில் சேர்க்க வேண்டுமானால், அவர் ஈ.வெ. இராமசாமி நாயக்கர். எழுத்துலகில் ஏதும் பெரிய அளவிலான பங்களிப்பு இல்லையென்றாலும் சமகாலத் தமிழ் எழுத்துக்களில் முக்கியமான அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியவர், ஆனால் சீக்கிரமாகவே காந்தியக் கொள்கைகளில் இருந்து வெளியேறி பெரும்பாலோர் ஏற்கத் தயங்கும் தனது கொள்கைகளாலும் பழமைவாத உணர்வுகளுக்கு மாறான கோட்பாடுகளுடனும் கிளர்ந்தெழுந்து, கனவுலகத் திராவிட நிலத்தின் கனவுலகத் தந்தையானார். அவரைப் பற்றி இங்கே நாம் பேசவரவில்லை. டாக்டர் வரதராஜுலு நாயுடுவைப் (சமீபத்தில் ஐம்பதுகளில் காலம் சென்ற) பற்றியும் நாம் இங்கே பேச வேண்டியதில்லை, அவரும் கூட ஒரு காந்தியவாதியாகவோ அல்லது ஓர் எழுத்தாளராகவோ அதிக காலம் நீடிக்கவில்லை.
இன்னொரு புறம் திரு. வி. கல்யாணசுந்தரனார், முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு காந்தியவாதியாக தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்தவர். அவர் ஒரு சீர்திருத்தவாதி, சோசலிஸ்ட், மத மறுமலர்ச்சிக்காகப் போராடியவர், கம்யூனிச சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டு தொழிற்சங்க தலைவராக செயல்பட்டவர், ஆனாலும் அவரது சிந்தனையானது எப்போதும் காந்திய சித்தாந்தங்களால் செழித்து, தனக்குப் பின்னால் வந்த பெரும்பாலான இளைஞர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்திய புத்தமிழில் எழுதியவர். இன்னொரு வகையில் அவருடைய காந்தியப் புரிதல் என்பது உணர்வு பூர்வமான அறம் சார்ந்தது, மேலும் அறிவு சார்ந்த ஆழம் ஏதுமில்லாமல் உணர்வுகளின் அடிப்படையில் பெரிய எண்ணிக்கையிலான பொதுப்படையான எல்லா மதம் சார்ந்த நல்லிணக்கங்களையும் உள்வாங்கியதாக பெரும்பான்மையோர் ஏற்றுக்கொண்ட கட்டுப்பாடுகளோடு திகழ்ந்தது. காந்தியத்தைப் பற்றிய தனது உள்ளுணர்வை, வாசிப்பை அவர் தனது பெரும்பாலான தளங்களிலும் எழுத்துக்களிலும் பயன்படுத்தினார். அவருடைய எழுத்துக்களில் இருந்து காந்தியைப் பற்றிய ஒரு முழு ஆய்வறிக்கையைக் கூட எழுத முடியும் – தன்னுடைய தூய்மை மற்றும் எளிமை ஆகியவற்றிலிருந்து சமயங்களில் காந்தி கூடத் தவறியிருக்கலாம், ஆனால் திரு.வி.க. தன்னுடைய அனைத்து பொதுவாழ்வு நோக்கங்களிலும் பெரும் விளைவை ஏற்படுத்திய ஒரு சிக்கலான, உணர்வுபூர்வமான தமிழகக் காந்திய அடையாளமாக வாழ்ந்தார். அதிக அளவு கவிதைதன்மை கொண்டதாக அல்லாத தன்னுடைய நீண்ட கவிதைகளில் காந்தியைப் பற்றிய தன்னுடைய கருத்துக்களைப் பரப்பினார், அதன் மூலம் ஈர்க்கப்பட்ட பெரும்பாலான அவரது வாசகர்களையும் காந்தியை சுவீகரிக்கச் செய்தார்.
மற்றொரு காந்தியவாதியான சி. இராஜகோபாலாச்சாரி (இராஜாஜி என்று பொதுவில் அறியப்படுபவர்) இன்றும் நம்மோடு நலமுடன் மகிழ்வோடிருக்கிறார். காந்தியைப் பற்றிய அவரது அணுகுமுறையானது (திரு.வி.க. –வைப் போல் அல்லாமல்) அறிவு பூர்வமானதாகவும், மேலும் ஓர் அரசியல்வாதியாகவும், தீவிர எழுத்தாளராகவும் (மிகைப்படுத்தப்பட்ட?) காந்திய அணுகுமுறைகள் பற்றிய புரிதலை தமிழ் நிலத்திற்கு தன்னுடைய பங்களிப்பை வழங்கியுள்ளது கவனிக்கத்தக்கது ; அவர் ஒரு நுட்பமான தந்திரங்கள் அறிந்த தர்க்கவாதி, கொள்கைப்பிடிப்புள்ளவர், பகுத்தறிவாளர், ஐரோப்பிய அறிவுலகத்தோடு கூடிய அறிவுஜீவி. அவரது தோற்றத்தில் கூட ஈ.வெ.ரா.’வினுடைய தாக்கம் சிலது இருக்கிறது, ஆனால் காந்தியினுடைய கடுந்தவ வாழ்க்கையை.. துறவறத்தை அவர் நம்புகிறார் என்பதில் சந்தேகமில்லை. காந்தியைப் பற்றிய இராஜாஜியின் கருத்துகள் ஒன்று கருத்தாக்கமாகும் அல்லது எதிர்வினை ஆற்றும், மேலும் அவர் மகாபாரதம் அல்லது இராமாயணம், கீத கோவிந்தம் அல்லது திருக்குறள் பற்றி எழுதினாலும், அதனுள் காந்திய சிந்தனையின் வெளிப்பாடு இருப்பதை நாம் ஆராய்ந்தறிந்து காணலாம்.
காந்திக்கும் ராஜாஜிக்கும் இடையிலான அரசியல் வேறுபாடுகளை நான் இங்கே விளக்கப் போவதில்லை – ஏனென்றால் அவை மிகப் பிரபலமானவை. ஆனால், இராஜாஜி தன்னுடைய நெடிய சுறுசுறுப்பான வாழ்வு முழுவதும், தமிழர்களுக்கான காந்தியக் கண்ணாடியாக – தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளால், அணுகுமுறைகளால் எவ்வளவு குறுகியதாக இருந்தாலும், தன்னுடைய வாழ்நாள் முழுவதும் காந்தியத்தைத் தூக்கிப் பிடிப்பதில் சிறப்பாகவே பணியாற்றியுள்ளார். தமிழர்களால் புறக்கணிக்கப்பட்ட அவரது அணுகுமுறையில் உள்ளார்ந்த முரண்பாடுகள் இருப்பது உண்மையே, ஆனால் தமிழ்நாட்டில் காந்தியத்தின் அறிவுசார் உள்ளடக்கத்தை, நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ காந்தியைப் பற்றிய தன்னுடைய எழுத்துக்களில் ஏறக்குறைய காந்தியைப் பற்றி திறம்படவே அவர் எழுதியுள்ளார்.
காந்தியின் மீதான தமிழ் எழுத்தாளர்களின் தாக்கத்தை, மற்றவர்களைப் போலவே மூன்று பெரிய நிலைகளில், வகைமைகளில் பொருத்தலாம். முதலாவதாக வெளிப்படையான, எழுச்சியூட்டுகிற மற்றும் தட்டையானதாக என்று கொள்ளலாம். இரண்டாவதானது – இடைப்பட்ட நிலை, சிரமத்தோடு காணும் நிலை – அதாவது தட்டையான எழுத்துக்களை விட சற்றே ஆழமானது. மூன்றாவது – மிக முக்கியமானதும் நுட்பமானதும், மிக ஆழமானதுமாக காந்தியத்தைப் பற்றிய உணர்வு ரீதியான மற்றும் சொல்லும் பொருள் வகையின் தீவிரத்தை உணர்த்துவதாகவும் இருக்கிறது.
முதலாதவதாக மொழிபெயர்ப்பு பரப்பு – இங்கே காந்தியால் ஆன படைப்புகளும், அவரை அறிந்தவர்களால் ஆன காந்தியைப் பற்றிய படைப்புகளும், தமிழ் வாசகர்களுக்கு மொழிபெயர்ப்பு நூல்களாகவே கிடைக்கின்றன. இரண்டாவது பத்திரிகை நிலை என்று கொள்ளலாம் – காந்தியச் சிந்தனையின் தாக்கங்கள் அனைத்தும் பத்திரிகை வாசகர் நிலையிலேயே பிரதிபலிக்கப்பட்டு, மற்றபடி பெரிய அளவில் எப்போதுமாக இலக்கிய அரங்கில் அலசப்படும் நிலை இல்லை என்றும் கொள்ளலாம். எனக்குக் கிடைத்த தமிழ்ப் படைப்புகளின் வெளிச்ச அதிர்வுகளைக் கொண்டு இந்த மூன்று நிலைகளையும் காந்தியின் தாக்கத்தை கருத்தில் கொள்வேன்.
முப்பதுகளின் வாக்கில், அனைவரது எழுத்திலும் காந்தியின் தாக்கமென்பது தவிர்க்க முடியாததாக இருந்தது, இவற்றையெல்லாம் தாண்டி ஒருவர் அதிலிருந்து தப்பிக்க முயன்றாலும் கூட (முழுமையானதொரு நம்பிக்கையாக அது இருந்திருக்கலாம், கிட்டத்தட்ட யாரும் அதிலிருந்து விடுபடவும் விரும்பவில்லை) முடியாதது. காந்தியின் பெரும்பாலான எழுத்துக்கள், அவரது சொந்த பத்திரிகையான ஹரிஜனுடையதும் சேர்த்து, முறையாக தமிழில் மொழிபெயர்க்கப்பட்டன. அதைத் திறம்பட செய்த சங்கு கணேசனின் பங்களிப்பு பாராட்டப்படவேண்டிய ஒன்று. இந்திய தேசிய காங்கிரஸை ஆதரித்து காலணா நாளிதழ் ஒன்றை நடத்தியோடு, காந்தியக் கருத்துக்களின் மொழிபெயர்ப்பையும் தொடராக வெளியிட்டார். அவை தமிழில் இன்றளவும் கிடைக்கக்கூடிய ஆகச் சிறந்த மொழிபெயர்ப்புகளில் ஒன்றாகும். திரு.வி.க. –வின் துணை ஆசிரியர்களில் ஒருவராகவும், இராஜாஜியின் ஆசிரம நாட்களில் அவருக்கு வலதுகரமாகவும் இருந்த கல்கி (மறைந்த ஆர். கிருஷ்ணமூர்த்தி), இருபதுகளின் முற்பகுதியில் கல்லூரிப் படிப்பை விட்டுவிட்டு ஒத்துழையாமை இயக்கத்தில் சேர்ந்தார், தற்போது சங்கு கணேசனுக்காக காந்தியின் சுயசரிதை மொழிபெயர்ப்பைச் செய்திருக்கிறார். இந்தியாவின் ஏனைய மொழிகளில் காந்தியின் தன்வரலாறு மொழிபெயர்ப்பு எந்த அளவில் இருக்கிறதென்று எனக்குத் தெரியாது, ஆனால் தமிழில் கல்கியின் மொழிபெயர்ப்பு மிகச் சிறந்த ஒன்றாக, நிகரற்றதாக இருந்தது. பின்னால், சத்தியாகிரத்தின் மொழிபெயர்ப்பு தென்னாப்பிரிக்காவில் அவிநாசிலிங்கம் செட்டியாரால் மேற்கொள்ளப்பட்டது, அவருடைய நடையில் அது திருப்திகரமான ஒன்றே.
காந்தியின் பிற படைப்புகளின் மொழிபெயர்ப்புகள் அதைத் தொடர்ந்து வர ஆரம்பித்தன, ஆனாலும் அவ்வளவு விரைவாக இல்லையென்றாலும், உடனடியாக நடைமுறைப்படுத்தப்படும் அளவுக்கு விரைந்து செய்யப்பட்டன. தமிழ் நாளிதழ்கள் மற்றும் காந்தியச் சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டு அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்பட்ட குழுக்கள் – அவர்களில் மிக முக்கியமாக சிலரை நாம் குறிப்பிட வேண்டுமென்றால், சங்கு சுப்பிரமணியம், ராய. சொக்கலிங்கம், பி. வரதராஜுலு நாயுடு, பாரதி நாராயணசாமி செட்டி, வா. இராமசாமி ஐயங்கார், நா. சோமாயாஜுலு, பாவலர் கிருஷ்ணசாமி, ஆர். எஸ். ஸ்ரீகந்தன், ஜே. எஸ். கண்ணப்பர், ஆர். நாராயண ஐயங்கார், டி. எஸ். சொக்கலிங்கம், கல்கி ஆகிய மற்றும் பலர் எழுத்தறிவு பெற்ற மக்களிடையே காந்தியச் சிந்தனைகளையும் இலட்சியங்களையும் பிரபலப்படுத்தினர். அத்தகையவர்களில் குறிப்பிட்டுச் சொல்லப்படியாக முத்திரை பதித்தவர்களில் ஒருவராக எஸ். சத்தியமூர்த்தியைக் குறிப்பிட்டாக வேண்டும். சுதந்திரப் போராட்டமானது இளைய தலைமுறை தமிழ் எழுத்தாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் என்று அதிக எண்ணிக்கையிலானவர்களை ஈர்த்தது. காந்தியக் கருத்துக்கள் மற்றும் காந்தியைப் பற்றிய தகவல்கள் அடங்கிய புத்தகங்கள், எப்போதும் போல் திருப்திகரமாக இல்லாவிட்டாலும், அல்லது நன்றாக எழுதப்பட்டிருந்தாலும், உணர்ச்சி மேலீட்டில் தவறான தகவல்களைக் கொண்டிருந்தாலும், அவையனைத்தும் பொதுவெளியில் வெள்ளமாய்ப் பெருக்கெடுத்து ஓடின. அப்படியான புத்தகங்கள் பற்றிய பட்டியல் தான் கிடைக்கவில்லையே தவிர, ஆனால் என்னுடைய அளவீட்டின்படி, 1940 -க்கு முன்பு, சுமார் பத்து ஆண்டுகளில், காந்தி மற்றும் காந்தியச் சிந்தனைகள் குறித்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் வெளியிடப்பட்டன. நினைவுகூர வேண்டிய ஒன்று யாதெனில், புத்தக வெளியீட்டிற்காக அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்த காலம் அது. புத்தக விற்பனை என்பது சரியாக முறைப்படுத்தப்படவில்லை. அரசாங்கமானது, தேசியவாதக் கருத்துக்கள் அடங்கிய புத்தக வெளியீட்டாளர்கள் மீது கடுமையான போக்கைக் கடைப்பிடித்த காலம். இன்றைக்கிருப்பதைப் போல, பெரிய அளவிலான நூலக இயக்கங்களும் அப்போது இல்லை. எழுத்தாளர்கள் (பெரும்பாலும் அவர்களின் புத்தகங்களுக்கு அவர்களே வெளியீட்டாளர்கள்) தங்களது பணத்தையும் தனிப்பட்ட சுதந்திரத்தையும் பணயம் வைத்தே அவ்வகையான அதி அற்புதமான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொண்டனர். ஆனால், அவையனைத்தும் தமிழ்ச் சமூகத்தின் முன்பாக இலக்கிய வடிவில் காந்திய சிந்தனைகளை கொண்டு சேர்க்க உதவின.
தேசியக் கவிஞர் சுப்ரமணிய பாரதியின் அணுக்கமான சீடரான, வ.ரா.வின் தலைமையில், தீவிர எழுத்துச் சிந்தனையை உள்வாங்கிய இளைஞர் பட்டாளம் ஒன்று எழுத்தாளர்களாகப் பரிணமித்து, அதுவே பின்னாட்களில் மணிக்கொடி தலைமுறை என்றாகி வெகுவான இளைய தலைமுறை எழுத்தாளர்களை ஈர்த்து ஊக்குவித்தது, பெரும்பாலும் உணர்வு பூர்வமாகவும், சிற்சில சந்தர்ப்பங்களில் இயற்கையாக உந்தப்பட்டவர்களாகவும், ஆனால் எப்போதும் காந்தியக் கண்ணோட்டம் பற்றிய புரிதலுடனும் இருந்தனர், அந்தப் புரிதல் அவர்களின் காலத்திற்கு முந்தையதாகவும், அரசியல் காட்சிகளில் இருந்து வெகு தொலைவிலிருப்பதாகவும் காட்சியளித்தது. இத்தகைய எழுத்தாளர் குழுவிலிருந்து தான் காந்தியச் சிந்தனையின் மீதான நுட்பமான செல்வாக்கை நாம் தேடவேண்டும். காந்திய வழியிலான சமூக சீர்திருத்தம் என்பதே வ.ரா.வின் எழுத்துக்களில் முக்கியத்துவம் பெற்றிருந்தது.
அரசியல் பத்திரிகையாளராக வலம் வந்த டி. எஸ். சொக்கலிங்கம் முப்பது மற்றும் நாற்பதுகளில் காந்தியச் சிந்தனைகளான அகிம்சை மற்றும் உண்மை பற்றியும் அன்றைய காலகட்டத்தைய தகிக்கும் பிரச்சினைகளையும் எடுத்துக்கொண்டு தன்னுடைய வீராவேசப் பேச்சுக்கள் மூலம் பெருவாரியான கூட்டத்தை தன்பக்கம் ஈர்த்தார். கலைக்களஞ்சியகள் மற்றும் அறிஞர்களின் கருத்துக்கள் அடங்கிய உரைகளையும் ஆராய்ந்து காந்தியச் சிந்தனைகளை அடிப்படையாகக் கொண்ட தொடர்ச்சியான புத்தகங்களை சாமிநாத சர்மா எழுதினார், அவற்றிற்கு காந்தியச் சிந்தனையோடு எவ்விதத் தொடர்பும் இல்லையென்றாலும், அவை கார்ல் மார்க்ஸின் எழுத்துக்கள் மற்றும் சமூக ஒப்புறவுகள் குறித்து அக்கறை கொண்டிருந்தன என்பதையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். பெரும்பாலானவர்களைக் கவர்ந்த காந்திய இசத்தின் மிகப்பெரிய உரைநடைப் பாடகரான கவிஞர் இராமலிங்கம் பிள்ளை, எளிமையான நடையில் நேரடியாகக் கருத்துக்களைப் புகுத்தி தன்னுடைய எளிய பாடல்களால் படிப்பறிவற்ற மற்றும் மதிநுட்பம் அல்லாத பலரையும் ஊக்கப்படுத்தினார். காந்தியைப் பற்றிய அவரது புரிதலோடு கூடிய கவிதைகள் அனைத்தும் உணர்வுபூர்வமானவை, மேலும் அவர் சமீபத்தில் தமிழ் கலைக்களஞ்சியத்திற்காக வழங்கிய காந்தியைப் பற்றிய உன்னதமான கட்டுரை, காந்தியைப் பற்றிய நுட்பங்கள் இல்லாத அறிக்கூர்மை இல்லாத அணுகுமுறைகள் நிலவும் தமிழ் இலக்கியத்தை மதிப்பிடுவதற்கான அடிப்படையாகக் கொள்ளலாம். மதராஸ் அரசாங்கம் அவரை அரசவைக் கவிஞராக நியமித்ததைக் கொண்டே நாம் இதனைப் புரிந்து கொள்ளலாம் – ஏனென்றால் அரசியல், தத்துவ மற்றும் பிற தாக்கங்களைத் தவிர்த்து மனித நேயத்துக்கு அருகில் மட்டுமே நின்று கவனம் செலுத்தி, தமிழர்களுக்கு காந்தியைப் பற்றி, காந்தியச் சிந்தனைகள் பற்றி இவ்வளவு எளிமையான வார்த்தைகளில் யாரும் இதுவரை கூறியதில்லை.
கிட்டத்தட்ட அவர் அளவுக்கு தாக்கங்கள் கொண்டவராக இல்லாவிட்டாலும் கூட கவிஞர் இராமலிங்கம் பிள்ளையுடன் சேர்த்து குறிப்பிட்டு சொல்லக்கூடிய மற்றொரு கவிஞரும் இருக்கிறார், அவர் பீர். முகம்மது பாவலர்., அவர் தன்னுடைய கவிதைகள் மற்றும் பாடல்கள் மூலம் காந்தியச் சிந்தனைகளை மக்கள் மனங்களில் கொண்டு சேர்த்து பிரபலப்படுத்தினார். இந்தச் சூழலில் சங்கரதாஸ் சுவாமிகளின் மேடைப் பாடல்களையும் முக்கியமாக குறிப்பிட்டேயாக வேண்டும், அது போலவே காந்தியச் சிந்தனைகளை நாடக மேடைகளில் பிரபலடுத்திய எஸ். எஸ். விசுவநாத தாஸ், நடராஜ பிள்ளை, கே. எஸ். அனந்தநாராயணன், கே.பி. சுந்தராம்பாள், மன்னார்குடி கே. பி. நடராஜ பிள்ளை, கே. பி. ஜானகி (அவர் இப்போது ஒரு கம்யூனிச சித்தாந்தவாதி) போன்ற பிரபலமான நடிகர் நடிகையர்களையும் குறிப்பிட்டுச் சொல்வது முக்கியமானது, அவர்கள் சுதந்திர தேசியச் சிந்தனைகளை நடைமுறைத் தமிழில் உணர்ச்சி பொங்கக் கூறி, காந்தியம் எனும் சுடரை திரளான பொதுமக்கள் மத்தியில் உயிர்ப்புடன் வைத்திருந்தனர்.
நான் தேர்ந்தெடுத்துக் கொண்ட வாசிப்புகள் தவிர்த்து, முதன்முறையாக வை. மு. கோதைநாயகி அம்மாளின் பிரபலப் படைப்பொன்று என்மீது தாக்கத்தை ஏற்படுத்தியது எப்போது என்பதை நான் அறியேன் (இருபதுகளின் முற்பகுதியிலிருந்து முப்பது ஆண்டுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட நாவல்கள் என்பது தமிழில் பிற்காலத்தில் கூட நிகழ வாய்ப்பில்லாதது என்று நினைக்கிறேன் – மேலும் இன்னும் மகிழ்வோடு அந்த எண்ணிக்கையை தொடர்ந்து கொண்டிருக்கிறார்!) முழு நம்பிக்கையுடனும் உணர்வுப் பெருக்குடனும் ஒரு காந்தியவாதியான அவரின் கதைகள் அனைத்திலும் காந்தியச் சிந்தனைகள் எங்கெங்கிலும் விரவிக் கிடக்கின்றன. ஒரு கல்வியாளராக, காந்தியத் தாக்கம் என்பது அவரது நாவல்களில் எப்போதிருந்து தொடங்குகிறது என்பதைக் கண்டறிய அவரது நாவல்களைப் படிப்பது சுவாரசியமானதாக இருக்கும் – அது முழு தமிழ்நாட்டிற்கும் ஒரு வகையான அளவீடாக இருக்குமென்றும் உறுதியாகச் சொல்வேன். உணர்வுகளை நுண்ணியமாகக் கடத்துமொரு எழுத்தாளர் அவர், கடந்து செல்லும் ஆண்டுகளைக் கூட ஏறக்குறைய நம்பகத்தன்மையுடன் கூடிய யதார்த்ததுடன் பதிவு செய்துள்ளார், அப்படி இல்லையென்று நீங்கள் கூறுவீர்களென்றால் (சிலரின் கூற்றுப்படி) வேறெந்தக் கலையோடும் ஒத்துப் போகும்படி செய்துவிடுவார். தமிழ்நாட்டுப் பெண்களிடம் இருந்த காந்தியத் தாக்கத்தை வேறெந்தக் கலை வடிவ ஆதாரங்களை விட கோதைநாயகியின் நாவல்களிலிருந்து வெற்றிகரமாக அளவிட முடியும். இருபதுகளின் நடுப்பகுதிகளில் தொடங்கி இன்று வரையிலும் அவருடைய நாவல்களின் வெளியீடு ஏறக்குறைய மாறாத அடிப்படை வடிவம் மற்றும் உணர்வுபூர்வ படிமங்களோடு, தத்துவ விசாரங்களைத் தாங்கி நிற்காமல் எப்போதும் மனித நேயத்தை உள்ளடக்கியதாகவே நிலைத்திருக்கிறது.
முப்பதுகளின் முற்பகுதியிலிருந்து ஐம்பதுகளின் மையப்பகுதி வரை கிட்டத்தட்ட இருபத்தைந்து ஆண்டுகள் தமிழில், பத்திரிகைத் துறையில் ஆதிக்கம் செலுத்திய கல்கி என்று அழைக்கப்படும் மறைந்த ஆர். கிருஷ்ணமூர்த்தி திரு.வி.க விடம் தனது இலக்கியப் பயிற்சியையும், இராஜாஜியிடம் தனது அரசியல் பயிற்சியையும் தொடங்கினார். காந்தியின் மொழிபெயர்ப்பாளராக அவர் ஆரம்ப நிலையிலேயே தன்னை முற்றிலும் வேறுபடுத்திக் காட்டிக்கொண்டார். தமிழ் வார இதழான ஆனந்த விகடனின் பொறுப்பு ஆசிரியராகவும், பின்னர் அவரது சொந்த பத்திரிகையான கல்கியின் ஆசிரியராகவும், அவருடைய தயாரிப்பான எல்லாவற்றிலும் காந்தியின் தாக்கத்தை, செல்வாக்கை சிறிதளவேனும் வெளிப்படுத்தாமல் இருந்ததில்லை. சமகால நாவல்கள், சிறுகுறு புனைவுகள், சிறுகதைகள், பயணக் குறிப்புகள் மற்றும் ஓவியங்கள் ஆகிய எல்லாவற்றிலும் வெளிப்படுத்தியதோடு நிற்காமல், விழிப்போடு துருதுருவென்றிருக்கும் ஓர் அரசியல் பத்திரிகையாளராக, விவாதங்கள் மற்றும் பிற படைப்புகளில், காந்தியைப் பற்றிய தனது புரிதலையும், மற்றும் தனக்குப் புரிந்த மக்களின் மீதான காந்தியத் தாக்கத்தையும், எந்தவொரு சமரசமும் இல்லாமல் வெளிப்படுத்திக் கொண்டேயிருந்தார். காந்தியின் மீதான பொதுஜன அபிப்பிராயமாக அறிவு சார்ந்த உணர்வுபூர்வமான மதிப்பீட்டிற்கு மாறாக அவற்றை பாரம்பரியமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட உணர்வுகளுடன் இணைத்ததன் அடிப்படையில், காந்தியின் பிரபலமான மதிப்பீட்டை பொதுமைப்படுத்தும் முயற்சியில் நடை போட்டார். அவரது குரலானது எப்போதும் ஓர் உறுதியான நிலைப்பாட்டோடும், வெகுவான மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும், இரண்டு தசாப்தங்களாக தமிழ் மக்களிடையே அதிகம் புழக்கத்தில் இருந்த குரலாகவும் இருந்தது. தியாகபூமி (1939) தொடங்கி, அவருடைய மறைவுக்குப் பின் சாகித்திய அகாடமியால் விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட அலை ஓசை வரை பல பிரபலமான புனைக்கதை நாடகங்களின் வாயிலாகவும், காந்தியைத் தமிழ் வாசகர்களுக்குக் கொண்டு சேர்ப்பதில் உணர்வுபூர்வமாக தனது பங்களிப்பைச் செய்தார். காந்தியின் வாழ்க்கையை மீண்டும் மீண்டும் சொல்லிச் சொல்லி, அதன் தாக்கத்தை தன்னுடைய ஒவ்வொரு செயலிலும் காட்டியுள்ளார், எழுதியுள்ளார். இவையனைத்திலும் அவர் தன்னுடைய அணுகுமுறையை பகுத்தறிவோடு, பிரபலமானதாக மற்றும் தன்னுடைய மேதாவித்தனத்தை வெளிப்படுத்தாத முறையில், உணர்வுபூர்வமான அணுகுமுறையின் ஒரு சிறு பகுதியை மட்டும் எடுத்துக்கொண்டு தமிழ் வாசகர்களுக்கு காந்திய சிந்தனையை சுவையோடு கொண்டு சேர்த்தார்.
காந்தியச் சிந்தனையின் தாக்கத்தை உண்மையாகவும், தங்களின் சொந்த ஆற்றலுக்கேற்றவாறும் பதிவு செய்த மற்றைய தமிழ் எழுத்தாளர்களில், முதன்மையாக நாம் காலம் சென்ற கே. எஸ். வெங்கடரமணியைக் குறிப்புட்டுச் சொல்லவேண்டும் – தென்னிந்தியாவின் காந்தியச் சிந்தனைவாதிகளில் அவருக்கும் சிறப்பான ஓர் இடம் உண்டு. ஆரம்ப காலத்தில் அவர் ஆங்கிலத்திலேயே எழுதினார், பின்னர் தமிழுக்குத் திரும்பி, தனது சொந்த நாவல்கள் மற்றும் கதைகளை மொழிபெயர்த்தும், ஒரு தமிழ் மாத இதழுக்கு ஆசிரியராகவும் இருந்தார். காந்தியைப் போலவே பொருளாதார தாராளமயமாக்கல் மற்றும் கிராமப்புற மறுசீரமைப்பு போன்ற சிந்தனைகளில் அவர் அதிகளவு ஆர்வம் கொண்டிருந்தார். மேலும் அடிப்படைக் கல்வியானது அரசாங்கத்தால் ஆதரிக்கப்படும் ஒரு மோகமாகவும், இலாபம் ஈட்டக்கூடிய தொழிலாகவும் மாறுவதற்கு வெகு காலத்திற்கு முன்பே, அடிப்படைக் கல்வி குறித்த சோதனை முயற்சிகளில் தனிப்பட்ட முறையில் அவர் ஈடுபட்டார். அவரது முக்கிய நாவல்களான ‘முருகன் தி டில்லர்’ (1927) மற்றும் ‘கந்தன் தி பேட்ரியாட்’ (1931) ஆகிய இரண்டும் ஸ்வராஜ்யா இதழில் தொடராக வெளியிடப்பட்டு 1932 –இல் புத்தகமாக வெளிவந்தன. இரண்டிலும் காந்தியச் சிந்தனைகளே உள்ளோடிக் கிடந்தன. என்னுடைய கருத்தின்படி, காந்தியச் சிந்தனைகளை சிறப்பாக உள்வாங்கிய படைப்புகளாக அவரது நாவல்கள் இன்றைக்கும் இருக்கின்றன, அவை வெகுஜன பத்திரிகை மற்றும் மேலோட்டமான கருத்துக்களோடு கூடிய வேறெந்த தொடர் படைப்புகள் போல் அல்லாமல், வெகு நுட்பமாக ஆன்மீகச் செறிவோடு கலை நிலைத்தன்மை பெற்று விளங்குகின்றன. தொடர்ந்த செயல்பாடுகளாக – கட்டுரைகள், ஓவியங்கள் மற்றும் கதைகளில், காந்தியைப் பற்றிய தனது கருத்துக்களை அவர் அழகாகக் கோடிட்டுக் காட்டிக் கொண்டேயிருந்தார்.
இதே போன்ற பரிமாணங்களைக் கொண்ட இன்னொரு எழுத்தாளர் காலம் சென்ற எஸ்.வி.வி. காந்தியச் சிந்தனைகளின் மீதான பச்சாதாபம் அவருக்கு இல்லாவிட்டாலும், அவரது எழுத்துக்களில் சமகாலச் சூழலின் காந்திய சிந்தனைத் தாக்கத்தைத் தவிர்க்கவும் முடியவில்லை. நகைச்சுவை உணர்வு மிக்கவராகவும், பழைய மரபுகளைச் சார்ந்து வாழும் ஓர் ஒழுக்கவாதியாகவும் இருந்து கொண்டு, பழமைகளை புதுமைகளாய் வேறுபடுத்திக் காட்டுவதில் ஆர்வமுடன் இருந்தார். புதிய தலைமுறையைப் பற்றிய அவரது சித்தரிப்புகள் நேர்மையற்றதாக இருக்கலாம், ஒருவேளை மாறிக்கொண்டு வரும் புதியவற்றின் பெரிய அளவிலான தாக்கங்களை அவர் முழுமையாக உள்வாங்கிக்கொள்ளாமல் கூட இருந்திருக்கலாம், ஆனால், கலை நுணுக்கத்தோடும் படைப்பாற்றல் மூலமாகவும் புதியனவற்றை பழையவைகளோடு அவரால் இணைத்து உருவாக்க முடிந்தது. எஸ்.வி.வியின் பல மீட்டுருவாக்கங்களில் காந்தியின் தாக்கத்தை நாம் சந்திக்கவே செய்கிறோம்.
நாற்பதுகளின் பெரும்பாலான தமிழ் நாவல்களில், காந்திய சிந்தனைத் தாக்கத்தின் தெளிவான அறிகுறிகளையும் அதன் விளக்கங்களும் காணக் கிடைக்கின்றன. இந்தியில் ப்ரேம் சந்த், மராத்தியில் காண்டேகர், குஜராத்தியில் இருந்து சோபன் அல்லது வங்காளத்தின் தாகூர் ஆகியோரை முன்மாதிரியாகக் கொண்டு எழுதிய சில எழுத்தாளர்கள் பல்வேறு வழிகளில் காந்தியக் கருத்துக்களின் செல்வாக்கோடு இருந்தனர். பி.எஸ். இராமையா மற்றும் பி.எம். கண்ணன் போன்ற நாவலாசிரியர்கள் முப்பதுகள் மற்றும் நாற்பதுகளின் காந்தியப் பின்னணியை ஏறக்குறைய ஒரு மெல்லிய நாடகத்தன்மையோடு வெளிப்படுத்தினர். அந்தப் பத்தாண்டுகளில் எழுதிய ஒவ்வொரு நாவலாசிரியரும், வேறெந்த வழியிலும் இல்லாவிட்டாலும், தங்களுடைய படைப்பின் மூலமாக ஏதேனும் ஒரு பகுதியில், குறைந்தபட்சம் 1946 –இல் எழுதப்பட்ட பி.எம். கண்ணனின் நெடீய நாவலைப் போல வியக்கத்தக்க வகையில் உச்சபட்ச நிலையில் காந்திய உலகம் பற்றிய தங்களின் பார்வைகளைப் பகிர்ந்துள்ளனர். சிறிதான புனைகதைகளிலும் சிறுகதைகளிலும் அதன் தாக்கம் சமமாக, தெளிவாக காணக் கிடைக்கிறது. சி.சு. செல்லப்பா போன்ற பல எழுத்தாளர்கள் தங்களது கதைகளின் கட்டமைப்பில் காந்தியக் கருத்துக்களை அழகாகப் புகுத்தியுள்ளனர்.
கொத்தமங்கலம் சுப்பு நாட்டுப்புறப் பாடல் மொழியில் எழுதிய மகாத்மா காந்தியின் சுயசரிதை, தமிழ் மக்களிடையே பத்து ஆண்டுகளுக்கும் மேலாகப் பிரபலமாக இருக்கிறது. சுப்புவே அதைப் பல தளங்களில் (ஹரிகதை கதாகாலட்சேபம் போல) நிகழ்த்திக் கொண்டுள்ளார். உணர்ச்சிமயமான இந்த நாட்டுப்பாடல் முறை மூலம் காந்தியின் சுயசரிதையால் ராஜ்காட் முதல் கன்னியாகுமாரி வரை பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை அவர் சென்றடைந்திருக்கிறார்.
காந்தியின் வருகையோடு தமிழ் இலக்கியமானது தன்னை புதுப்பித்துக்கொண்டு சமகாலத்தன்மையோடும் உயிர்ப்பித்துக்கொண்டது என்று சொல்லலாம். புதிய மற்றும் பழைய, புரட்சிகரமான மற்றும் பாரம்பரியமான கருத்தாக்கத்தின் தொகுப்புகள், மேலும் பாரதத்தின் மற்றும் காந்தி வலியுறுத்திய அறம் சார்ந்த விழுமியங்களின் ஏற்றுக்கொள்ளல், என்று இந்திய மொழிகள் ஒரு நவீன மற்றும் சமகால மொழியியல் மற்றும் இலக்கியத்தன்மை கொண்ட கண்ணோட்டம் உருவாகிப் பெருகுவதை சாத்தியமாக்கியது.
சந்தேகத்திற்கு இடமின்றி, காந்தி உருவாக்கிய இந்த ஒருமித்த உணர்வுபூர்வமான இயக்கமானது, திசைகள் எங்கிலும் கடந்த மூன்று தசாப்தங்களாக அனைத்து பரிமாணங்களிலும் வளர்ந்து வந்திருக்கிறது. தமிழ் எழுத்துச் சமூகம் தாங்கள் எந்தத் திசையில் பயணிக்க வேண்டும் என்று திகைத்து நின்றிருந்த நேரத்தில், அந்தத் திசையை அவரே அவர்களுக்கு வகுத்துக் கொடுத்தார். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் உணர்வுபூர்வமாகவும், அறியாமல் சிலவற்றிலும், சிலரின் விசயத்தில் ஒருவேளை விருப்பமில்லாமலும் கூட அவர் சுட்டிக்காட்டிய பொதுவான திசையை கையாண்டுள்ளனர். அவ்வாறு குழு மனப்பான்மையோடு வழிநடத்தும் மனநிலை இப்போது இல்லவே இல்லை, ஆனாலும் அந்த ஒருமித்த வழிகாட்டுதல் சார்ந்த எழுத்து என்பது இன்றைய அனைத்து தமிழ் எழுத்துக்களிலும் உள்ளார்ந்து கிடக்கிறது.
இறுதியாக, எல்லோரும் கேட்கும் ஒரு கேள்விக்கு நான் பதிலளிக்கிறேன். காந்தியின் வாழ்க்கை அல்லது இறப்பு என்கிற நான்கு தசாப்த கால காந்தியத் தாக்கம் தமிழ்ப் பரப்பில் அவரைப் பற்றிய ஒரேயொரு சிறந்த புத்தகையாவது உருவாக்கியுள்ளதா? இதற்கு நான் எதிர்மறையாகவே பதிலளிக்க வேண்டும். அப்படியொரு நூல் தமிழில் வந்திருக்குமானால், அதை நான் படிக்கவில்லை. ஆனால், இதில் வருத்தப்பட வேண்டியது எதுவுமில்லை. ஏனெனில், புதிய உருவாக்கங்கள் அனைத்தும் அவற்றின் சொந்த சட்ட திட்டங்களுக்குட்பட்டவை, அவை தங்களுடைய திட்டப்படி சமரசங்கள் ஏதுமின்றி தமக்கான வெளியை உருவாக்கிக் கொள்ளும்.
***
பாலா இளம்பிறை – இயற்பெயர் ந. பாலச்சந்திரன். திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர். சென்னையில் மத்திய அரசுப் பணியில் உள்ளார். இரண்டு கவிதை நூல்கள், ஓவியர் புகழேந்தியுடனான நேர்காணல் தொகுப்பு மற்றும் மெஸ்யூர் வான்கா எனும் மொழிபெயர்ப்பு நாவல் ஆகியன இவரது ஆக்கங்களாகும். மின்னஞ்சல் : ilampiraibala@gmail.com





