Monday, February 16, 2026

தலையங்கம்

உணர்வுசார் கதைகளும் கதைகளின் உணர்வுகளும்

கதைகளை அரசியல்சார் கதைகள் மற்றும் உணர்வுசார் கதைகள் என்று பொதுவாசிப்பில் பிரிக்கப்பட்டிருக்கின்றன. இராண்டையும் இருவேறு துருவமாக அர்த்தப்படுத்தியதில் ஒன்றில் மற்றொன்றைக் காணும் வாய்ப்பை தவறவிட்டிருக்கிறோம். அரசியல் கோட்பாடுகளின் பின்புலத்தில் குடும்பத்தின் பங்கும் சேர்ந்தே செயல்படுகிறது. குடும்பம் அரசியல் கோட்பாடுகளின் எளிய முன்மாதிரியாக அமைகின்ரன. ஆதிக்கத்தின் வேர்களும், மரபார்ந்த சாதியப் பிடிமானங்களும், தந்தை எனும் அமைப்பியல் ரீதியான தலைமைக் குணமும் அரசியல் கோட்பாடுகளின் சிற்றுருவங்களாக அமைகின்றன. அதனுள் முளைக்கும் காதல் அதிகார கட்டமைப்பை உலுக்குவதாக அமைகிறது. அதன் பரிணமித்த தடமும், பண்பாட்டில் அதன் இடமும், மருவி நிற்கும் அதன் வெளிப்பாடும் விமர்சனத்திற்கு உள்ளாக்க வேண்டியதாகிறது. வரலாற்றில் நிறுவப்பட்டிருக்கும் அனைத்து காதல் கதைகளும் அரசியல் கதைளாக மீள்வாசிக்கப்பட வேண்டியவையாகின்றன. தனிமனிதனின் சிக்கல் குடும்பம் சார்ந்த சிக்கலாகவும் மற்றமைகளின் கதைகள் சமூக/அரசியல் கதைகளாகவும் அர்த்தப்படுத்தப்படுகின்றன. காதல் தனிமனிதனின் சிக்கலோ துய்ப்போ அல்ல. மற்றமைகளின் மீதான அபிமானத்தை தன்னைக் கடந்து பேசும் கோட்பாடாக காதல் அமைகிறது. அதன் கதைகள் பிற சமூக அமைப்பில் ஊடுருவும் தன்மை கொண்டவையாகின்றன. காதல் இரண்டு தனி மனிதர்களின் உணர்வுசார் அனுபவங்களாக தொடங்கினாலும் குடும்பம் எனும் சமூக அமைப்பிற்குள் நுழையும்போது அவை சமூக அனுபவமாக மாறிவிடுகின்றன. குடும்பம் எனும் அமைப்பின் மீதான உளவியல்சார் அச்சம் அதனுள் நுழைவதற்கு தடையாகவும் ஆகிறது. அதன் மீது வைக்கப்படும் உரையாடல்களும் விமர்சனங்களும் பார்வைகளும் வேறுபாடுகள் நிறைந்த சமூகத்தை கூர்ந்து அவதானிப்பதற்கான வாய்ப்பாக அமைகின்றன.

யாவரும் பிப்ரவரி – மார்ச் இதழில் காதலை சிறப்பு பகுதியாக்க திட்டமிட்டோம். நிர்மல் மற்றும்  பாரதிராஜாவின் கட்டுரைகள் சமுகத்தில் காதலின் தாக்கத்தையும் தடத்தையும் புரிந்துகொள்ள உதவுகிறது. பல்வேறு நாகரிகங்களில் பயணித காதலின் பரிணாமத்தை பேசுகின்றன. தி கு இரவிச்சந்திரனின் கட்டுரை உளவியலாளர்களின் பார்வையில் காதலின் நுட்பம்ங்களை அலசுகின்றன. நமக்குள் இருக்கும் காதல் சார்ந்த புரிதல்களுக்கு கூடுதல் வெளிச்சத்தை பாய்ச்சுகின்றன.

இந்த இதழ் முதல் தொடக்கமாக கடந்த ஐந்து ஆண்டுகளில் எழுத வந்த எழுத்தாளர்களுக்கு ஓர் அறிமுக நேர்காணலை எடுக்க திட்டமிருக்கிறோம். ஒரே கேள்விகளுக்கு கிடைக்கும் எழுத்தாளர்களின் பதில்கள் சமகால இலக்கியத்தின் பன்முகதையும், அதன் பரந்துபட்ட வீச்சையும் அறிய உதவும் என்று எண்ணுகிறோம். இந்த இதழில் ப்ரிம்யா கிராஸ்வின் மற்றும் ஐசக் பேசில் எமரால்ட் ஆகிய எழுத்தாளர்களின் நேர்காணல் இடம்பெற்றிருக்கிறது. சமகாலத்தை உணர்வு ரீதியாக முன்வைக்கும் ப்ரிம்யாவின் புனைவும், படிமமாக முன்வைக்கும் ஐசக்கின் பார்வையும் இரண்டு உலகத்தை நமக்கு அறிமுகம் செய்கின்றன.

இதழில் இடம்பெற்றிருக்கும் சிறுகதைகள், கவிதைகள், மொழிபெயர்ப்புகள் அனைத்தும் உணர்வுசார் இலக்கியத்தின் மீதிருக்கும் நமது மதிப்பீடுகளை சலனப்படுத்துவதாக அமைந்திருப்பது ஓர் தற்செயல் நிகழ்வு. பங்களித்திருக்கும் அனைத்து படைப்பாளிகளுக்கும் எங்களது அன்பையும் நன்றியையும் உரித்தாக்குகிறோம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here