அறைக் கதவு
இந்த விரிந்த உலகம்
எனது அறைக் கதவு வழியாகத் தான்
கொஞ்சம் கொஞ்சமாக எனக்குப்
பெரிதாகின்றது
கொஞ்சம் கொஞ்சமாக
எனக்குச் சிறிதுமாகின்றது
பைக் ஓட்டி
வண்டி ஓட்டிக் கொண்டிருப்பவனிடம்
இருப்பது எல்லாமே ஆயிரம்
ஒரு கட்டிடத்தை அவனால்
காணவே முடியாது
ஒரு மரத்தை அவனால்
பார்க்கவே முடியாது
ஒரு சந்தோசத்தை அவனால்
அடையவே முடியாது
அவனுக்கு தெரிவது எல்லாமே ஆயிரம்
அவனுக்கு கிடைப்பது எல்லாமே ஆயிரம்
அவன் ஆயிரங்களின் தலைவன்
அரவணைப்பு
இரண்டு கை நீட்டி தரை
எந்தக் கால்களையும் அழைத்ததில்லை
இரண்டு கால்கள்
இரண்டு கைகளை நீட்டி
தரையை வந்து அணைக்கும்
அம்மா அணைக்கின்றதே
தெரியாமல் அணைப்பார்
குழந்தைகள் முட்டி முட்டி
அம்மாவை அணைத்துக் கொள்வர்
நீர் நிலம்
தங்களுக்குள் பழக்கமான
இரண்டு பேர்
வேறு வேறு பாதையில்
முன்னால் கூடி நகர்ந்தனர்
அவர்களுக்கு பின்னால் கூடி
ஒரு கடல்
இடையே இருந்து புரண்டது
பெருகுவதும் ஒடுங்குவதுமாக
தன் எல்லையை மாற்றி மாற்றி
வகுத்துக் கொண்டிருந்தது
நீர் நிலம்
எத்தனையோ தலைகள்
இந்த நிலத்தில் மிதப்பது
தெரிந்தாலும்
இந்நிலத்திற்கென இருப்பது
எந்நேரமும்
வெறும் இரண்டு பேர்
முகக் கோட்டை
என் முகத்திற்கு என்னிடம்
முறையான பாதைகளே இல்லை
அங்கு செல்லவே எப்பொழுதும்
தவ்விக் கொண்டிருக்கிறேன்
எங்கு சேர்கிறேன் தெரியவில்லை
என்னை என் முகம்
ஏமாற்றுவது மாதிரி யாரும்
என்னை ஏமாற்ற முடியாது
ஆனால் ஒன்று
அந்த கோட்டைச் சுவரை
அங்கு நான் கட்டவில்லை
அந்தப் பாடல்
அந்தப் பாடலை
அவன் ரசித்துக் கேட்கிறான்
அந்தப் பாடல்
எத்தனையோ இடங்களில்
இதுவரைக்கும் ஒலித்துள்ளது
அவனது ரசிப்பு முறை தான்
அந்தப் பாடலுக்கு மிகவும் பிடிக்கும்
எங்கிருந்தாலும் அந்தப் பாடல்
அவனைக் கண்டுபிடித்து விடும்
அவன் இறந்த வீட்டிலும்
அந்தப் பாடல்
ஒலித்துக் கொண்டிருந்தது
***
செல்வசங்கரன் : விருதுநகரில் பிறந்தவர். அரசு உதவிபெறும் கல்லூரியில் தமிழ் இணைப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். 2009 லிருந்து சிற்றிதழ்களில் கவிதைகள் எழுதிவரும் இவர். ஆதவன் ( கே.எஸ்.சுந்தரம் ) படைப்புகளை முனைவர் பட்டத்திற்காக ஆய்வு செய்துள்ளார். அறியப்படாத மலர் ( 2013 ), பறவை பார்த்தல் ( 2017 ), கனிவின் சைஸ் (2018 ), சாலையின் பிரசித்தி பெற்ற அமைதி ( 2020 ), கண்ணாடி சத்தம் (2022), மத்தியான நதி ( 2022), வெறுங்கடல் ( 2024 )ஆகிய ஏழு கவிதைத் தொகுப்புகளை எழுதியுள்ளார். தொடர்ந்து கவிதைகள் எழுதி வருகிற இவரது கவிதைகள் அநேக இதழ்களிலும் வெளிவந்துள்ளன. சௌமா இலக்கிய விருது பெற்றுள்ளார். மின்னஞ்சல்: selvasankarand@gmail.com

