Monday, February 16, 2026
Homeஇதழ்கள்2026 இதழ்கள்செல்வசங்கரன் கவிதைகள்

செல்வசங்கரன் கவிதைகள்


றைக் கதவு
இந்த விரிந்த உலகம்
எனது அறைக் கதவு வழியாகத் தான்
கொஞ்சம் கொஞ்சமாக எனக்குப்
பெரிதாகின்றது
கொஞ்சம் கொஞ்சமாக
எனக்குச் சிறிதுமாகின்றது


பைக் ஓட்டி
வண்டி ஓட்டிக் கொண்டிருப்பவனிடம்
இருப்பது எல்லாமே ஆயிரம்
ஒரு கட்டிடத்தை அவனால்
காணவே முடியாது
ஒரு மரத்தை அவனால்
பார்க்கவே முடியாது
ஒரு சந்தோசத்தை அவனால்
அடையவே முடியாது
அவனுக்கு தெரிவது எல்லாமே ஆயிரம்
அவனுக்கு கிடைப்பது எல்லாமே ஆயிரம்
அவன் ஆயிரங்களின் தலைவன்


அரவணைப்பு
இரண்டு கை நீட்டி தரை
எந்தக் கால்களையும் அழைத்ததில்லை
இரண்டு கால்கள்
இரண்டு கைகளை நீட்டி
தரையை வந்து அணைக்கும்
அம்மா அணைக்கின்றதே
தெரியாமல் அணைப்பார்
குழந்தைகள் முட்டி முட்டி
அம்மாவை அணைத்துக் கொள்வர்


நீர் நிலம்
தங்களுக்குள் பழக்கமான
இரண்டு பேர்
வேறு வேறு பாதையில்
முன்னால் கூடி நகர்ந்தனர்
அவர்களுக்கு பின்னால் கூடி
ஒரு கடல்
இடையே இருந்து புரண்டது
பெருகுவதும் ஒடுங்குவதுமாக
தன் எல்லையை மாற்றி மாற்றி
வகுத்துக் கொண்டிருந்தது
நீர் நிலம்
எத்தனையோ தலைகள்
இந்த நிலத்தில் மிதப்பது
தெரிந்தாலும்
இந்நிலத்திற்கென இருப்பது
எந்நேரமும்
வெறும் இரண்டு பேர்


முகக் கோட்டை
என் முகத்திற்கு என்னிடம்
முறையான பாதைகளே இல்லை
அங்கு செல்லவே எப்பொழுதும்
தவ்விக் கொண்டிருக்கிறேன்
எங்கு சேர்கிறேன் தெரியவில்லை
என்னை என் முகம்
ஏமாற்றுவது மாதிரி யாரும்
என்னை ஏமாற்ற முடியாது
ஆனால் ஒன்று
அந்த கோட்டைச் சுவரை
அங்கு நான் கட்டவில்லை


அந்தப் பாடல்
அந்தப் பாடலை
அவன் ரசித்துக் கேட்கிறான்
அந்தப் பாடல்
எத்தனையோ இடங்களில்
இதுவரைக்கும் ஒலித்துள்ளது
அவனது ரசிப்பு முறை தான்
அந்தப் பாடலுக்கு மிகவும் பிடிக்கும்
எங்கிருந்தாலும் அந்தப் பாடல்
அவனைக் கண்டுபிடித்து விடும்
அவன் இறந்த வீட்டிலும்
அந்தப் பாடல்
ஒலித்துக் கொண்டிருந்தது

***

செல்வசங்கரன் : விருதுநகரில் பிறந்தவர். அரசு உதவிபெறும் கல்லூரியில் தமிழ் இணைப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். 2009 லிருந்து சிற்றிதழ்களில் கவிதைகள் எழுதிவரும் இவர். ஆதவன் ( கே.எஸ்.சுந்தரம் ) படைப்புகளை முனைவர் பட்டத்திற்காக ஆய்வு செய்துள்ளார். அறியப்படாத மலர் ( 2013 ), பறவை பார்த்தல் ( 2017 ), கனிவின் சைஸ் (2018 ), சாலையின் பிரசித்தி பெற்ற அமைதி ( 2020 ), கண்ணாடி சத்தம் (2022), மத்தியான நதி ( 2022), வெறுங்கடல் ( 2024 )ஆகிய ஏழு கவிதைத் தொகுப்புகளை எழுதியுள்ளார். தொடர்ந்து கவிதைகள் எழுதி வருகிற இவரது கவிதைகள் அநேக இதழ்களிலும் வெளிவந்துள்ளன. சௌமா இலக்கிய விருது பெற்றுள்ளார். மின்னஞ்சல்: selvasankarand@gmail.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here