சிங்கவேள்
ஒரு நாள்
சந்திப் பொழுதில்
உன்னை
மனமாறக்
கொன்றேன்
சிங்கவேளாய்
மடியில் வைத்து
உன் இதயம் பிளந்தேன்
அடுத்த நாளே
யோகத்தில் அமர்ந்து
இன்னொரு மனமும்
கூடுவதற்கு இன்னொரு ஒரு பெண்ணும் சிருஷ்டித்தேன்
இனி
புதியவளின் பஞ்சு தனங்கள்
என்னை சீண்டினாலும்
அவள் என் மார்பில் குழைந்தாலும்
அலட்டாமல் யோகத்தில்
அமர்ந்து போவேன்
இருட்டு குகையில்
தனியே அமர்ந்தப்படி
இதை சொல்கிறேன்
நித்யம் அநித்யம் எல்லாம் கூச்சல்
முடிவிலி – Infinity
அனைத்திற்கும் சாட்சியாக
ஒருத்தி இருக்கத் தான் செய்கிறாள்.
அவளே,
ஈசன் எரி ஆடும் கணங்களில்
மஹா தாண்டவ சாக்ஷிணி.
அனைத்திற்கும் சாட்சி எனில்,
எறும்பின் கடிக்கும்
ஊழிக்கும் அஃதே.
வண்ணம் பூசாத
வெள்ளைத் தாளுக்கும்
பார்வையின் புணர்வுக்கும்
பிறந்தவள் அவள்
அருவம் அவள்
வண்ணம் தீட்டாத வரை
உருவம் அவள்
வரைந்தவை அழியும் வரை
அனைத்திற்க்கும் சாட்சி ஆவதால்
படைப்பு, காப்பு, இறப்பு
முத்தொழிலும் அவளுக்கு பரிட்சயம்
எங்கும் நிறைந்தவள்
நிறைந்தவள் எனில் முடிவற்றவள்
முடிவற்றது உலகில் காமம்
சம்மந்தமில்லாத
X & Y
அனைத்தையும் தனதாக்கி
ஒரு புறம் முத்தமிட்டும்
மறு புறம் அளித்தும்
இச்சைக்கு பின்னால்
பொருளாக முன்னால்
தன்னைத் தானே
பார்த்து சிரிக்கும்
வினோதினி
எண் இறந்து
ஒன்றே எஞ்சுவதால்
அ-த்வைதி
ஆதி அந்தம்
சொல்ல முடியாத முடிவிலி
நீலி காளி முடிவிலி Infinity
நீரின் கைகள்
மனம் உடல் வாக்கு என்று
அனைத்தையும் சுத்தப்படுத்தும்
நீரின் கைகளை
என் முன்னோர்கள் நம்பி வந்தார்கள்.
காட்டிலும் மலையிலும்
பதுங்கி நின்ற பன்றிக் குட்டிகளை மாய்த்து,
மாலையில் எதோ ஒரு நதியின் கரையில் அமர்ந்தபடி
பயத்துடன் இறந்து வீழ்ந்த அந்த பன்றியின் கண்களை
நீரில் பார்த்தபடி அவர்கள் அசைப்போட்டார்கள்.
உண்மையில் அக்காலம்
பசிக்கும் – பண்பிற்கும் விடை சொல்ல முடியாத ஒரு காலம்.
எப்படியோ அந்த காலத்தில்
எளிதாக மந்திரத்தில் நீர் சுத்தமானது.
சுத்த நீரில் மலர்கள் தூவப்பட்டன.
இன்று
நம் கண் முன் அழுக்கு நீரும்,
நீரில் பிரதிபலிக்கும் பொய்யும் மட்டுமே எஞ்சி நிற்கின்றன.
இதை உணர்ந்தபடி
நிதானத்துடன்
நீரை சுத்தப்படுத்த
நீரின் கைகளையே நான் தேடிக் கொண்டிருக்கிறேன்.
மூன்றாம் கண்
இட பாகம் முழுதும் தந்தும்
சிவனை எதிர் நின்று
அவன் நெற்றியில் முத்தமிடவே ஆசைப்படுகிறாள்
உமா
நெற்றிக் கண்ணின் சூட்டில்
சிவந்த இதழ்கள் பொசுங்கும் வரை
ஏர்ப்போர்ட் குறிப்புகள்
காலம்
ஒழுகும் குழாயின் நீர்ப்போல
சொட்டுகிறது
யாருக்கும் பயனின்றி
எழுத்துக்கள் வண்ணமாக மாறும்
காலம்
கவிதைகளின் காலம்
துறவியின் கண்கள்
சௌந்தர்யத்தை
மௌனமாகப் பார்க்கின்றன
பார்த்தப் பின்
அப்பட்டமாக்கிவிடுகின்றன
அந்த
லோக யுவதியின் அழகை
காதலித்தது
சத்தியத்தை
காமம் காதலியுடன்
இப்படிக்கு
சத்ய காமன்
ஏகாந்தம் என்பது
ஒன்றை மட்டும் விட்டு
அனைத்தையும் கொன்ற
கொலைகாரனின் சாந்தம்
அனைத்தும் நானே என்பது
அஹங்காரம்
எதிலும் நான் இல்லை என்பது
சூன்யம்
சிலவற்றில் நானும்
பலவற்றில் பிறவும்
என்னும் குழப்பமே நிதானம்
ஆயிரம் பௌர்ணமிகளைக்
கண்டவர்கள்
கொண்டாடப்படுகிறார்கள்
நானோ
ஆயிரம் நிலவுகளுக்குப் பாலூட்டும் அவளை
காண விரும்புகிறேன்.
***
ஆர்.கே.ஜி – இயற்பெயர் ராம் கார்த்திக் கணேசன். 2013 ஆம் ஆண்டு கனடாவின் கனகார்டியா பல்கலைக்கழகத்தில், இயந்திர பொறியியல் துறையில், முதுகலைப் பட்டம் பெற்றவர். தற்பொழுது டொரோண்டோவில் உற்பத்தி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். தமிழ் நவீன இலக்கியக் குரல்களுள் ஒன்றான இவரின் நாவல்கள், ‘பாடுவான் நகரம்’ மற்றும் ‘அகம்‘, யாவரும் பதிப்பகத்தின் வெளியீடாக வந்துள்ளன. மின்னஞ்சல்: ramkarthiksgm@gmail.com

