எடித் வார்டன்
தமிழில் : பாலா இளம்பிறை
தன்னுடைய பெர்த்’தில் படுத்திருந்த நிலையிலேயே, மேலேயிருக்கும் பெர்த்’தில் கால் நீட்டிப் படுத்துக் கொண்டிருக்கும் அந்த நிழலையே உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கும் அவளது மூளையில் இரயிலின் சக்கரங்கள் வேக வேகமாகச் சுழன்று கொண்டிருக்கின்றன. மேலும் மேலும் ஆழமாகும் அவ்வட்டங்கள் விழிப்பின் தெளிவான எல்லைக்குள் அவளை உள்ளிழுத்துக் கொள்கின்றன. படுக்கைப் பெட்டிகள் வசதி கொண்ட, அந்த இரயில் ஆழ்ந்த அமைதியில் மூழ்கிக் கிடந்தது. ஈரமான கண்ணாடிச் சன்னலின் ஊடாக திடீரெனத் தோன்றும் விளக்குகளையும் நகரும் நீண்ட இருள் பகுதிகளையும் பார்த்துக் கொண்டே வந்தாள். அவ்வப்போது தலையைத் திருப்பி நடுவிலிருக்கும் கம்பியையும் தாண்டி, தனக்கு மேலாக தொங்கிக் கொண்டிருக்கும் திரைச்சீலையின் இடையில் இருக்கும் கம்பியின் வழியாக அங்கே படுத்திருக்கும் தனது கணவனை மறைத்திருக்கும் திரைச்சீலையைப் பார்த்துக் கொள்கிறாள்.
அவனுக்கு ஏதாவது தேவைப்பட்டுக் கேட்கும் போது, அது தன் காதில் விழாமல் போய்விடுமோ என்கிற பதட்ட சிந்தனையோடே இருந்தாள். கடந்த சில மாதங்களாக அவனது குரல் மிகவும் பலவீனமாகிவிட்டிருந்தது. அது சரியாகக் கேட்காமல் பதிலுக்கு உடனடியாக அவளால் எதிர்வினையாற்ற முடியாத போது, அவன் எரிச்சலுற்றான். அந்த எரிச்சல், பிடிவாதம் எல்லாமுமாய்ச் சேர்ந்து அவர்களுக்கிடையில் புலப்படாத ஒரு குழந்தைத்தனமான அந்நியத்தன்மையை வெளிப்படுத்தியிருந்தது. ஒரு கண்ணாடித் துண்டின் இரண்டு பக்கமும் இருக்கும் இருவர், ஒருவருக்கொருவர் மிக நெருக்கத்தில் இருப்பது போல் உணர்வதும், கிட்டத்தட்ட தொடுதலை உணர்கிற நிலையில் இருப்பதும். ஆனால் அவர்களால் கேட்கவோ பதிலுரைக்கவோ முடியாததாகவும் – அவர்களுக்கிடையேயான தொடர்பு கிட்டத்தட்ட துண்டிக்கப்பட்டிருந்தது. அந்த அந்நிய உணர்வை குறைவாகவேணும் அவள் அறிந்தே இருந்தாள். மேலும் அவனது தளர்ந்து கொண்டிருக்கும் வார்த்தைகளுக்குப் பின்னாலும் அவளுடைய பரிவின் பிரதிபலிப்பில் கூட அது எதிரொலிப்பதை சமயங்களில் அவள் கற்பனை செய்துகொள்வாள். சந்தேகமேயில்லை, நிச்சயமாய்த் தவறு அவளுடையது தான். நோயின் தேவையற்ற பாதிப்புகள் எதுவும் தன்னை அண்டாதவாறு அவள் தன்னை மிகுந்த ஆரோக்கியத்துடன் எப்போதும் வைத்துக் கொண்டிருந்தாள். இங்கு, தன்னைத்தானே நொந்து கொள்ளும் அந்த கூச்ச உணர்வில், அவனுடைய பகுத்தறிவற்ற தன்மை குறித்த எண்ணமும் கலந்திருந்தது – அவனுடைய அந்த ஒன்றுக்கும் ஆகாத இத்தகைய கொடுமைகளுக்குப் பின்னால் ஒரு நோக்கம் இருப்பதாக அவளுக்குள் ஒரு சலசலப்பு இருந்து கொண்டேயிருந்தது. திடீரென நிகழ்ந்துவிட்ட இந்த மாற்றங்களின் தன்மை அவளை முற்றிலுமாய் தயாராகாத நிலையில் வைத்திருந்தது. சரியாக ஓராண்டுக்கு முன்னால் வரையிலும் அவர்களது இதயத் துடிப்புகள் ஒரே சீரான தாள லயத்தோடு துடித்துக் கொண்டிருந்தன. வற்றிப்போகாத எதிர்காலத்தைப் பற்றிய அபரிமிதமான நம்பிக்கை அவர்களுக்குள் சம அளவில் இருந்தது. இப்போது அவர்களுடைய ஆற்றல்களானது ஒன்றோடொன்று ஒத்துப் போகும் நிலையில் இல்லை. அதாவது அவளுடைய வாழ்க்கையானது தற்போது இன்னும் சற்று முன்னோக்கிச் சென்று, நடப்புக்கும் நம்பிக்கைக்கும் உரிமை கோர முடியாத அளவுக்கு அவளைத் தள்ளியிருந்தது. அதே சமயத்தில் பின்தங்கிவிட்ட அவளது வாழ்க்கையானது இதையும் கடந்து செல்வதற்கான போராட்டமாகிப் போயிருந்தது.
அவர்கள் தங்களது திருமண உறவுக்குள் நுழைந்த போது, ஈடு செய்ய முடியாத குறைகள் ஏராளமாய் இருந்தன – உப்பு சப்பில்லாத தகவல்களை, உண்மைகளை மனமற்று இருக்கும் குழந்தைகளின் மீது திணிக்கும் வெள்ளையடிக்கப்பட்ட பள்ளி வகுப்புகள் போல், அவள் வெறுமையுடன் இருந்தாள். அவளுக்குள் நிகழ்ந்த அவனது வருகையானது, சூழலின் மந்தநிலைகளைக் கலைத்துப் போட்டு நிகழ்காலத்தைப் பற்றிய பெருத்த எதிர்பார்ப்புடன், தொலைதூர சாத்தியக் கூறுகளையும் உள்ளடக்கியதாக மாற்றியது. ஆனால், கண்களுக்குப் புலனாகாதவாறு அந்த எல்லையானது சிறிது சிறிதாக சுருங்கிக்கொண்டே வந்தது.
வாழ்க்கைக்கு அவள் மீது ஒரு வன்மம் இருந்தது. அவள் தனது சிறகுகளை விரிப்பதற்கு ஒருபோதும் அனுமதிக்கப்படவே இல்லை. ஆறு வாரங்களுக்கு இதமான காற்றைச் சுவாசித்தால், அவனுடைய உடல்நிலை சீராகும் என்று ஆரம்பத்தில் மருத்துவர்கள் சொல்லியிருந்தார்கள். ஆனால் அவனது உடல்நிலை தேறி வரும்போது, அவ்வாறான உறுதிமொழியில் வறண்ட காலநிலையுள்ள ஓரிடத்தில் குளிர்காலத்தைக் கண்டிப்பாகக் கழிக்க வேண்டியதும் அடங்கும் என்பது விளக்கப்பட்டிருந்தது. அவர்கள் அழகான தங்களது வீட்டை விட்டுவிட்டு, திருமணப் பரிசுகள், புத்தம் புதிதான தளவாடங்கள் அனைத்தையும் ஓரிடத்தில் அடைத்து வைத்துவிட்டு கொலராடோவுக்குச் சென்றனர். தனக்கு நடந்த பொருத்தமிக்க அந்தத் திருமணத்தைப் பார்த்து வியக்கவோ அல்லது தனக்கு இப்போதைக்கும் பிரமிப்பூட்டும் அந்தத் திருமண ஆடைகளைப் பற்றியோ வாழ்த்து மடல்களைப் பற்றியோ பார்த்து பேசி அவள் மீது பொறாமைப்பட அங்கே யாரும் இல்லையே என்று அவளுக்கு வெறுப்பாக இருந்தது. அவனது நிலைமை மேலும் மோசமாகிக்கொண்டே வந்தது. எதையும் நேருக்கு நேர் அணுகும் சுபாவம் கொண்ட அவளுக்கு, தன்னால் எதிர்கொள்ள முடியாத அளவிலான தந்திரமான பல சிரமங்களால் தான் சூழப்பட்டிருப்பதாக அவள் உணர்ந்தாள். இன்னமும் அவனை அவள் உறுதியாக நேசித்துக் கொண்டேயிருக்கிறாள். ஆனால் படிப்படியாக, தீர்மானிக்க முடியாத அளவுக்கு அவன் அவனாக இருப்பதை நிறுத்திக்கொண்டு விட்டான். அவள் யாரை மணந்திருந்தாளோ அந்த மனிதன் வலிமையானவன். துறுதுறுவென ஆற்றலும் மென்மையும் திறமையும் கொண்டவன். பொருளாதாரத் தடைகள் என்று நாம் நினைப்பவை அனைத்தையும் தகர்த்து நம்மைத் தெளிவுபடுத்துவதில் மகிழ்ச்சியடைபவன். ஆனால், அவளே இப்போது அவனுக்கும் பாதுகாவலாக இருக்கிறாள். எந்தத் தொந்தரவும் அவனுக்கு நேர்ந்து விடாமல் அவன் காக்கப்பட வேண்டும். வானமே இடிந்து விழுகிற நிலை வந்தாலும் அவனுக்கு இப்போது கொஞ்சமாவது மாட்டிறைச்சிச் சாறு வழங்கப்பட வேண்டும். நோயாளியை வைத்திருக்கும் அறையின் வழக்கங்கள் அவளை குழப்பத்தில் ஆழ்த்தின. நேரத்துக்கு மருந்துகள் வழங்க வேண்டிய நடைமுறைகள் யாவும், புரிந்துகொள்ள முடியாத சில மதச் சடங்குகளாகவும் வீணான கதைகளைப் போலவும் தோன்றின.
அவனுடைய – அதே அரதப் பழசான ‘தான்’ என்கிற அவனுடைய பலவீனத்தின் அடர்த்தியை அவள் இப்போதும் ஊடுருவும் அவனது கண்களின் வழியாக காணத்தான் செய்கிறாள். இவையெல்லாம் நினைவில் நிலைக்கும் தருணங்கள். ஆம். அப்படித்தான்.. ஆனாலும், அவனது இன்றைய நிலை குறித்த அடியாழத்தின் வெறுப்புணர்வை அவன் மீதான பீறிட்டெழும் நெகிழ்வான பரிதாப உணர்ச்சியானது அனைத்தையும் துடைத்துப் போட்டு விடுகிறது. ஆனால் இந்த மாதிரியான தருணங்கள் மேலும் வலுப்பெறுவது அரிதாகிவிட்டது. சமயங்களில் அவன் தனது தோற்றத்தால் அவளைப் பயமுறுத்தினான். ஆழ்ந்து கிடக்கும் அவனது உணர்ச்சிகளற்ற முகமானது ஓர் அந்நியனைப் போல் தோன்றச் செய்தது. அவனது குரல் மிகப் பலவீனமாகவும் கரகரப்புடனும் இருந்தது. உலர்ந்து போன அவனது உதடுகள் வெளிப்படுத்தும் மெல்லிய புன்னகை கூட ஒரு தசைச் சுருக்கம் போல் இருந்தது. ஆண்மையின் வழக்கமான கரடுமுரடான நலத்தை இழந்து நிற்கும் அவனது மென்மையான தோலை வருடிப் பார்ப்பதை அவளது கைகள் தவிர்த்துவிட்டன. ஒரு விசித்திர விலங்கைப் பார்ப்பது போல் அவள் அவனைத் திருட்டுத்தனமாக பார்த்துக் கொண்டிருந்தாள். ஒரு நேரத்தில் தான் மிகத் தீவிரமாய் நேசித்த ஒரு மனிதன் தான் இவன் என்கிற நினைப்பு கூட அவளைப் பயமுறுத்தியது. தன்னுடைய இந்த மாதிரியான அச்சத்தில் இருந்தெல்லாம் தப்பிப்பதற்கு அவள் எவ்வளவெல்லாம் துன்புற்றிருக்கிறாள் என்பதை அவனிடம் தெரிவிப்பதற்கு இன்னும் பல மணி நேரங்கள் இருக்கின்றன. ஆனால், பொதுவாக அவள் தன்னை மிகவும் மென்மையானவளாகக் கருதிக் கொண்டாள். ஒருவேளை அந்த நினைப்பானது, அவள் தொடர்ச்சியாக அவனுடன் தனிமையில் இருந்ததால் ஏற்பட்டதன் விளைவாகக் கூட இருந்திருக்கலாம். மேலும் உணர்வுபூர்வமான வலுவான சுற்றத்தால் சூழப்பட்டிருக்கும் தன்னுடைய குடும்பத்துடன் இருந்த போதிருந்த நிலையென்றால் கூட அவள் தன்னை சற்று வேறுபடுத்தித் தான் உணர்ந்திருப்பாள். இறுதியில் மருத்துவர்கள் அவனை அவர்களது வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்கு ஒப்புதல் தந்த பிறகு, அவள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. மருத்துவர்களின் அந்த முடிவானது எதற்காகவென்று அவளுக்குத் தெரியும். அது அவர்கள் இருவருக்கும் தெரியும். அதன் பொருளானது, அவனது இழப்பு விரைவில் நிகழப்போகிறது என்பதே. ஆனாலும் அந்த உண்மையை அவர்கள் நம்பிக்கையூட்டும் வேடிக்கைப் பேச்சுகளாலும், சமயங்களில் அதை மகிழ்ச்சியோடு எதிர்கொள்ளும் அலங்கரிப்பிலும் கழித்தனர். உண்மையில் அவள் தங்களது பயணத்தின் நோக்கத்தையே மறந்து விட்டாள். அடுத்து வரும் ஆண்டுக்கான திட்டங்களை வகுக்கும் குறிப்புகளில் ஆர்வத்தோடு தன்னை இலயிப்பில் ஆழ்த்திக் கொண்டிருந்தாள்.
இறுதியில், மருத்துவமனையில் இருந்து கிளம்பும் அந்த நாளும் வந்தது. மருத்துவர்கள் ஒருபோதும் அவர்களைக் கைவிட மாட்டார்கள் என்கிற கொடூரமான அச்சம் அவளுக்குள் இருந்து கொண்டேயிருந்தது. கூடவே எப்படியாவது கடைசி நேரத்தில் தனது நம்பிக்கை பொய்த்துவிடும் – அவன் தன்னை ஏமாற்றி விடுவான் என்கிற அச்சமும். மருத்துவர்களும் தங்களுக்குப் பழக்கமான துரோகங்களில் ஒன்றை மறைத்துத்தான் வைத்திருந்தார்கள். ஆனால் அப்படியெதுவும் நடக்கவில்லை. அவர்களிருவரும் இரயில் நிலையம் வரை வந்தார்கள். முழங்கால்களுக்கு மேலாக ஒரு கம்பளியும், முதுகுக்கு ஒரு மெத்தையையும் கொண்ட படுக்கை இருக்கையொன்றில் அமர வைக்கப்பட்டான். அப்படியொரு நிகழ்வை விரும்பாத அவள் அறிமுகமான அனைவருக்கும் வருத்தங்கள் ஏதுமின்றி விடைபெற்றுக்கொண்டு சன்னலோர இருக்கையில் சென்று அமர்ந்து கொண்டாள்.
முதல் இருபத்து நான்கு மணி நேரம் நன்றாகவே கழிந்தது. அவன் கொஞ்சம் புத்துணர்வோடிருப்பது தெரிந்தது. சன்னலுக்கு வெளியே பார்ப்பதும் இரயில் பயணங்களின் நகைச்சுவைகளைப் பகிர்வதும் அவனுக்கு வேடிக்கையாக இருந்தது. இரண்டாவது நாள், சூயிங்கம் மென்று கொண்டிருக்கும் கரும் புள்ளிகள் கொண்ட முகத்தோடு இருந்த குழந்தையொன்றின் உணர்ச்சிகளற்ற பார்வையால், எரிச்சலுற்று சோர்வடைந்தான். உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் தனது கணவனின் நிலை பற்றியும் அவருக்கு எதுவும் தொந்தரவுகள் நேரக் கூடாது என்றும், அந்தக் குழந்தையின் தாயிடம் தன் நிலையை விளக்க வேண்டியிருந்தது. வண்டியிலிருந்த மொத்த பேரும் தாய்மையுணர்வுடன் வெளிப்படையாக ஆதரிக்க, ஒருவித கசப்போடு அந்தக் குழந்தையினுடைய தாய் அவளது விளக்கத்தை ஏற்றுக்கொண்டாள்.
அன்றைய இரவு உறக்கமின்றித் தவித்தான். காலையில் ரொம்பவும் காய்ந்து கொண்டிருந்த அவனது உடம்பைப் பார்த்து உறைந்து போனாள். அவன் மிக மிக பலவீனமாகிப் போய்க் கொண்டிருக்கிறான் என்பது உறுதியாயிற்று. சின்னச் சின்ன எரிச்சல்கள் இருந்தாலும், அந்த நாளின் பயணம் மெதுவாகவே கழிந்தது. அவனது சோர்வடைந்த முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த அவள், அதன் சுருக்கங்களில் நிற்காமல் ஓடுகிற இரயிலின் அதிர்வையும் சலசலப்பையும் கண்டாள். அவள் தனது உடல்நிலை தளர்ந்து போகும் அளவுக்கு அனுதாபத்தோடு அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். பயணத்தில் உடனிருந்த மற்றவர்களும் அவனைக் கவனிப்பதை உணர்ந்தாள். அவனைக் கவனிப்பதிலும் சக பயணிகளின் விசாரணைப் பார்வைகளுக்கும் இடையிலாக ஊசலாடிக் கொண்டிருந்தாள். கரும் புள்ளிகள் கொண்ட அந்தக் குழந்தையின் பார்வையும் விளையாட்டும் அவன் மீது ஊர்கின்ற ஈயொன்று அவனைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருப்பது போலிருந்தது. மிட்டாய்கள், பாடப் புத்தகங்கள் கொடுத்தாலும் வாங்கிக் கொண்டு தொந்தரவு செய்வதை அந்தக் குழந்தை நிறுத்தவில்லை. ஒரு காலை இன்னொரு காலோடு மடக்கி வைத்துக்கொண்டு, உறுதி குலையாமல் அவனையே அசையாமல் பார்த்துக் கொண்டிருந்தாள். அங்கே அவர்களைக் கடந்து செல்லும் பெட்டிகளின் காவல் ஊழியன் ஒருமுறை நிதானித்து நின்று பார்த்து விட்டு, ‘பயணிகளுக்கு உதவிகள் ஏதேனும் தேவைப்படுமா என்ற மனிதாபிமான சேவை எண்ணத்தோடு’ அங்கிருந்தவர்களுக்கு உதவிக் கொண்டிருந்தான். மேலும் அங்கே மண்டையோடு பதிப்பித்த தொப்பியணிந்த மனிதன் ஒருவன் தனது மனைவியின் உடல்நிலை குறித்து கவலையுடன் பேசிக் கொண்டிருப்பதையும் கேட்டுக் கொண்டிருந்தாள்.
ஒரு சலிப்பான ஆக்கிரமிப்போடு மணித்துளிகள் கடந்து கொண்டிருந்தன. மாலை நேரத்தில் அவன் அருகில் சென்று அமர்ந்து கொண்டாள். அவன் தனது கையை அவளது கைகளோடு பொருத்திக் கொண்டான். அந்த ஸ்பரிசம் அவளைத் திடுக்கிட வைத்தது. அவன் அவளை நெடுந்தொலைவில் இருந்து அழைப்பதைப் போலிருந்தது. கையறு நிலையில் அவள் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவனது புன்னகை ஓர் உடல் வாதையைப் போல், அவளுக்குள் பாய்ந்தது.
“ரொம்ப சோர்வா இருக்கீங்களா?” ,அவள் கேட்டாள்.
“இல்லை.. ரொம்ப இல்லை.”
“நாம சீக்கிரமாவே வீட்டுக்குப் போயிடலாம்.”
“ஆமா, ரொம்ப சீக்கிரமா.”
“நாளைக்கு இதே நேரம் நாம அங்கே இருப்போம்”
அவன் தலையசைத்தான். அங்கே இருவருக்குமிடையில் சிறிது அமைதி நிலவியது. அவனைப் படுக்க வைத்து, குனிந்து தவழ்ந்து சென்று தனது படுக்கைக்குத் திரும்புகையில், இன்னும் இருபத்தி நான்கு மணி நேரத்திற்குள் அவர்களிருவரும் நியூயார்க்கில் இருப்பார்கள் என்ற எண்ணத்தில் தன்னைத் தானே உற்சாகப்படுத்திக் கொண்டாள். அவளது சுற்றம் அனைத்தும் அவளைச் சந்திக்க இரயில் நிலையத்துக்கு வருகை தருவார்கள் – அந்தக் கூட்டத்தில் வட்டமாகச் சூழ்ந்திருக்கும் பதட்டமற்ற அவர்களின் முகங்கள் அவளை அரவணைப்பதைக் கற்பனை செய்து பார்த்தாள். அவர்கள் அவனிடம் சென்று உரத்த குரலில், ‘அவன் நலமோடிருக்கிறான்.. சீக்கிரமே எல்லாம் சரியாகிவிடும் என்று சத்தமிட்டுச் சொல்ல மாட்டார்கள்’ என்று நம்பினாள். துன்பத்துடனான நீண்ட காலத் தொடர்புகளால் ஏற்படும் நுட்பமான அனுதாபங்கள், குடும்ப உணர்வுகளின் மீது ஒரு பச்சாதாபத்தை ஏற்படுத்தாமல் அதன் கரடுமுரடான அமைப்பு முறைகள் அவளை உறுத்தின.
திடீரென, அவன் அழைப்பது போல் தோன்றியது அவளுக்கு. திரையை விலக்கிப் பார்த்தாள். இல்லை. இன்னொரு ஓரத்தில் வேறொரு மனிதன் குறட்டை விட்டுக் கொண்டிருந்தான். அவனுடைய குறட்டையொலி பிசுபிசுவென்று கடந்து போகும் சதைக் கொழுப்பு போலிருந்தது. அவள் கீழே அமர்ந்து கொஞ்சம் கண்ணயர முயற்சித்தாள். அவன் இலேசாக அசைவது அவளுக்குக் கேட்கவில்லையா?… அவள் உடல் நடுக்கம் கண்டது… எந்தச் சத்தத்தையும் விட அந்த மௌனம் அவள் நிம்மதியைக் குலைத்தது. அவனது குரல் எழுப்பும் சத்தத்தை அவளால் கேட்க முடியாத அளவுக்கு அவனது குரல் உள்ளாழ்ந்து போயிருக்கலாம் – அவன் இப்போது அவளை அழைத்திருந்திருக்கலாம்… எது அவளை இப்படியெல்லாம் யோசிக்க வைக்கிறது? மிகுந்த சோர்வுக்குள்ளாயிருக்கும் மனமானது, தனக்குத் தானே அதிவேகமாகச் செயல்பட்டு சகித்துக்கொள்ள முடியாத வாய்ப்புகளை முன்னறிவிக்கக் கூடியதாய் இருக்கிறதா ? தலையை இலேசாக வெளியே நீட்டி காது கொடுத்துக் கேட்கிறாள். ஆனால், அவளைச் சுற்றியுள்ள மற்றைய இரண்டு நுரையீரல்களின் சுவாசத்திலிருந்து, அவனது சுவாசத்தை அவளால் வேறுபடுத்திப் பார்க்க முடியவில்லை. எழுந்து அவனைப் பார்க்க விரும்பினாள். அந்தத் தூண்டுதலானது மனத்தின் அமைதியின்மையைப் போக்கிக் கொள்வதற்கான ஒரு வழியாக இருக்கும் என்பதை அறிந்திருந்தாள். ஆனாலும் அது அவனுக்குத் தொந்தரவாய் இருக்குமோ என்கிற அச்சமும் அவளைத் தடுத்தது. அவன் இருந்த படுக்கையை மறைத்திருந்த திரை அசைந்து கொண்டிருந்தது ஒருவித நிம்மதியை அவளுக்குத் தந்தது. ஆனால் அப்படியொரு எண்ணம் தோன்றுவது ஏன் என்பது அவளுக்கே தெரியவில்லை. அவன் சற்று முன், மகிழ்ச்சியோடு இரவு வணக்கம் தெரிவித்ததை நினைத்துக் கொண்டாள். மேலும், தனக்கு ஏற்படும் அச்சங்களை அவளால் ஒரு கணம் கூட தாங்கிக்கொள்ள முடியாதவளாக இருக்கும் போது, மிகவும் களைப்புற்ற தனது உடலின் அத்தனை பாகங்களுக்கும் தெரியப்படுத்தி அவற்றை தன்னிடமிருந்து விலக்கிவைக்க முயற்சித்தாள். அவன் பக்கம் திரும்பியிருக்குமாறு ஒருக்களித்துப் படுத்து உறங்கி விட்டாள்.
விறைப்புடன் எழுந்து உட்கார்ந்து கொண்டு அதிகாலையை சன்னல் வழியாக தரிசித்தாள். உயிரற்று மிதக்கும் வானத்தில் ஒட்டிக் கொண்டிருக்கும் வெற்று மலைகளின் வழியாக இரயில் விரைந்து கொண்டிருந்தது. படைப்பின் முழுமுதல் நாள் போல் அந்தக் காலை தோன்றியது. சன்னல் வழியாக வரும் காற்று முகத்துக்கருகில் பாய்ந்தது. கிழித்துக்கொண்டு வரும் காற்றை உள்ளே அனுமதிக்க சன்னலைத் தள்ளித் திறந்துவிட்டாள். கைக்கடிகாரத்தைப் பார்த்தாள். மணி ஏழாகி விட்டது. உடனிருப்பவர்கள் அனைவரும் பரபரப்பில் மூழ்கி விடுவர். அவள் எழுந்து உடைமாற்றும் அறைக்குச் சென்று, ஆடைகளை சரி செய்துகொண்டு, கலைந்திருந்த தலைமுடியை ஒதுக்கி மென்மையாக்கி விட்டுக் கொண்டாள். ஆடையைச் சரி செய்துகொண்டு முகம் கழுவிய பின் ஒரு புத்துணர்வும் நம்பிக்கையும் பிறந்தது. அதிகாலை வேளையில் மகிழ்ச்சியற்றிருப்பது என்பது அவளுக்கு ஒரு போராட்டமே. கரடு முரடாக இருந்த துண்டை எடுத்து முகத்தை அழுந்தத் துடைக்கையில் கன்னக் கதுப்புகள் எரிச்சல் கண்டன. நெற்றியைச் சுற்றிக் கொண்டிருந்த வலுவான கூந்தல் மேல்நோக்கிய தசைநார்களை உடைப்பது போலிருந்தது. உடம்பின் ஒவ்வோர் அங்குலமும் உயிர்ப்பும் நெகிழ்வுமாகத் துவண்டது. அடுத்த பத்து மணி நேரத்தில் அவர்கள் வீட்டில் இருப்பார்கள்!.
அவனுடைய படுக்கையை நோக்கி நகர்ந்தாள். வழக்கம் போல், ஒரு குவளை பால் காலை வேளையில் கொடுக்கப்பட வேண்டிய நேரம் ஆகிவிட்டது. சன்னலின் நிழல் கீழ் நோக்கி விழுந்து கிடந்தது. திரைச்சீலைகள் பிணைத்திருந்த இடத்தில் விழுந்த அந்தியின் வெளிச்சத்தையும் தாண்டி, அவன் திரும்பியவாறு ஒருக்களித்துப் படுத்திருந்ததை மட்டுமே காண முடிந்தது. அவள் அவன் மீது சாய்கிற நிலையில் இடைவெளி வழியாக வெயில் பரப்பும் திரைச்சீலையை இழுத்து விட்டாள். எதேச்சையாக அவளுடைய கை அவன் மீது பட்டதில், குளிர்மையை உணர்ந்தாள்.
அவன் அருகே குனிந்து, அவன் தோளின் மீது கை வைத்து அவனைப் பெயர் சொல்லி அழைத்தாள். அவனிடம் எந்தவொரு அசைவும் தென்படவில்லை. திரும்பவும் உரக்கப் பேசிப் பார்த்தாள். தோளை இறுகப் பற்றி இலேசாக உலுக்கினாள். அவன் அசைவற்றுக் கிடந்தான். அவனது கைகளை திரும்பவும் பற்றினாள். அது தளர்ந்து போய், இறந்து போன ஒன்றைப் போல் நழுவி விழுந்தது. இறந்து போன ஒரு பொருள்…? அவள் ஒரு நொடி உறைந்து போனாள். இதயம் நின்றுவிட்டது போல் தோன்றியது. அவனது முகத்தை உடனடியாகப் பார்த்தாக வேண்டும். அவன் உடம்பின் மீதான சில்லிப்பு அவளது கைகளில் திரும்பவும் படர்ந்தது. அவள் முன்னோக்கி சாய்ந்து, அவசர அவசரமாய், உடம்பைக் குறுக்கிக்கொண்டு, சதை மீது உமிழும் வெறுப்போடு, கைகளால் அவனது தோள்களை இறுகப் பற்றி திருப்பிப் போட்டாள். அவனது தலை தொய்ந்து விழுந்தது. முகம் சுருங்கிச் சிறியதாய் இருந்தது. அவனது நிலைகுத்திய விழிகள் அவளை நோக்கி இருந்தன.
அவனது தோள்களை இறுகப் பற்றிக்கொண்டிருந்த அவள், வெகு நேரம் அசையாமல் இருந்தாள். அங்கிருந்தவர்கள் ஒருவர் மற்றவரைப் பார்க்கத் தொடங்கியிருந்தனர். திடீரென்று பின்வாங்கினாள். கத்தி அழவேண்டும், யாரையாவது கூப்பிட வேண்டும், அவனிடமிருந்து தப்பியோட வேண்டும் என்கின்ற ஏக்கம் அனைத்தும் கிட்டத்தட்ட அவளை ஆட்கொண்டுவிட்டது. ஆனால், திடமான கரமொன்று அவளை அரவணைத்தது. கடவுளே! அவன் இறந்து விட்டான் என்று இங்கிருப்பவர்களுக்குத் தெரிந்து விட்டால், அவர்களிருவரும் அடுத்த நிலையத்தில் இறக்கிவிடப் படுவார்கள்.
சட்டென்று முன்பொரு பயணத்தின் போது, அவளுக்குத் தெரிந்து நிகழ்ந்த கொடூர காட்சியொன்று நினைவுக்கு வந்து முகத்தில் அறைந்தது – இரயில் பயணத்தில் தற்செயலாய் குழந்தையைப் பறிகொடுத்த ஒரு தம்பதியர் அடுத்த நிறுத்தத்திற்கான வாய்ப்பிற்காகக் காத்திருந்து வெளித் தள்ளப்பட்டனர். குழந்தையின் உடல் அவர்கள் இருவருக்குமிடையே கிடத்தப்பட்டிருக்க, நடைமேடையில் அவர்கள் பரிதவிப்போடு நின்றிருந்தது இன்னமும் நெஞ்சில் நிழலாடுகிறது. தங்களைத் தவிக்கவிட்டு பின்வாங்கிச் செல்லும் இரயிலை திகைப்பூட்டும் பார்வையால் நனைத்த அவர்களை ஒருபோதும் மறப்பதற்கில்லை. அவளுக்கும் இப்போது அதுதான் நடக்கப் போகிறது. அடுத்த ஒரு மணி நேரத்திற்குள், அவளும் ஏதோவொரு அனாதரவான இரயில் நிலையத்தின் நடைமேடையில் தனது கணவனது உடலோடு தன்னந்தனியாக இருக்கப்போவதைக் காணலாம். அதைத் தவிர வேறென்ன! நினைக்கவே பயங்கரமாய் இருந்தது – ஊழிச் சூழலில் சிக்கியதோர் உயிரினம் போல் தவித்தாள்.
அவள் தன்னை மறைத்துக்கொண்டு பதுங்கியிருக்கும் வேளையில், இரயில் மெதுவாக நகர்வதை உணர்ந்தாள். அடுத்து வரக்கூடிய ஒரு நிறுத்தத்தை நோக்கிய மெதுவான நகர்வு! கணவனும் மனைவியுமாக தனிமையானதொரு இரயில் நிலையத்தின் நடை மேடையில் நிராதரவாய் நிற்பதை மீண்டும் நினைத்துப் பார்த்துக்கொண்டாள். அவன் முகத்தின் மீது விழும் வெளிச்சத்தை மறைப்பதற்காக, விடாப்பிடியான வற்புறுத்தும் தோரணையோடு திரைச்சீலையை இழுத்து விட்டாள்.
தலை சுற்றுவது போலிருந்தது அவளுக்கு. அவனது நீட்டிய உடல் அருகிலேயே மூழ்கித் தலை கவிழ்ந்து கிடப்பதைத் தவிர்த்து, படுக்கையின் விளிம்பில் இருந்து விலகி திரைச்சீலைகளை இழுத்து மூடினாள். அவர்களிருவரும் அந்தி மயங்கும் மாலை நேரத்தின் கல்லறை அமைதிக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். எதையும் சிந்திப்பதற்குக் கூட களைப்பாய் இருந்தது. அவன் உயிரோடில்லை என்கிற உண்மையை அவள் எப்படியாவது மறைத்தாக வேண்டும். ஆனால் எப்படி? மூளை வேலை செய்யவில்லை. எதையும் திட்டமிடவோ. ஒன்றோடொன்றை இணைத்துப் பார்க்கவோ முடியாத நிலை. நாள் முழுக்க திரைச்சீலைகளை இழுத்துப் பிடித்துக்கொண்டு அங்கேயே அமர்ந்திருப்பதைத் தவிர வேறெந்த வழியையும் அவளால் யோசிக்க முடியவில்லை.
படுக்கை விரிப்புகளை சேகரிக்கும் பணியாளர்கள் வரும் ஓசை கேட்டது. பயணிகளும் அங்குமிங்குமாய் இரயிலுக்குள் நடக்கத் தொடங்கி விட்டனர். உடைமாற்றும் அறையின் கதவு திறப்பதும் மூடப்படுவதுமாய் இருந்தது. அவள் ஓர் உத்வேகத்திற்குத் தயாரானாள். இறுதியில், தீவிர முயற்சியோடு எழுந்து நின்று, இடைக் கம்பிகளின் வழியே தலையை நுழைத்து, திரைச்சீலைகளை இணைத்து இறுக்கமாகப் பின்னால் இருக்குமாறு இழுத்து விட்டாள். வண்டியின் அசைவால் இன்னமும் விலகுகிற திரைகளைப் பார்த்துவிட்டு, தன்னுடைய உடையிலிருந்த ஊக்கை எடுத்துக் குத்தி அவற்றை இணைத்தாள். அப்போதைக்கு பாதுகாப்பாய் உணர்ந்தாள். சுற்றிலும் பார்க்க, பணியாளர் ஒருவர் அங்கே நின்று கொண்டிருந்தார். அவர் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதாய் கற்பனை செய்துகொண்டாள்.
“சார் இன்னும் எழுந்திருக்கலயா மேடம்?” , அவன் விசாரிக்கத் தொடங்கினான்.
“இல்லை,”, அவள் தடுமாறினாள்.
“நேரமாச்சேன்னு, அவருக்காக பால் எடுத்துட்டு வந்திருக்கேன். ஏழு மணிக்கு கொடுக்கச் சொல்லி நீங்களும் சொல்லியிருந்தீங்க.”
அவள் அமைதியாக தலையசைத்துவிட்டு, அவளது இருக்கையில் அமர்ந்து கொண்டாள்.
எட்டரை மணிக்கு இரயில் பஃபலோ நிறுத்தத்தை வந்தடைந்தது. அதற்குள் அடுத்து வரும் பயணிகளுக்கான இருக்கை விரிப்புகள் சரி செய்யப்பட்டு, பழையவை மடித்து வைக்கப்பட்டன. தலையணை, படுக்கை மற்றும் இருக்கை விரிப்புகள் சுமையோடு அங்குமிங்கும் நகர்ந்து செல்லும் பணியாளர் ஒருவர், அவளைக் கடந்து செல்லும் போது ஒரு நிமிடம் நின்று பார்த்தார். “சார் எழுந்திருக்க மாட்டாரா மேடம்? உங்களுக்குத் தெரியும். முடிஞ்ச வரைக்கும் நாங்க சீக்கிரமா பழைய படுக்கையெல்லாம் எடுத்து வெச்சுட்டு, அடுத்ததுக்கு தயாராகணும்.”
அவள் முகம் குளிர்மையால் இருண்டது. ஆம் புதிதாய் பயணம் மேற்கொள்பவர்கள் அதே முகப்புக்கு வந்து விட்டார்கள்.
“ஓ.. இன்னும் இல்லை,” அவள் தடுமாறினாள். “அவர் இன்னும் பால் கூட குடிக்கல. தயவு செஞ்சு வாங்கித் தர்றீங்களா?”
“சரி.. சீக்கிரமே.. வண்டி கிளம்பினதும் பார்த்துக்கலாம்.”
“இரயில் நகர்ந்ததும் அவர் கையில் பால் குவளையுடன் வந்தார். அவன் கையிலிருந்து குவளையை வாங்கியவள், அதை வெறுமையோடு பார்த்தாள். சுழன்றடிக்கும் வெள்ளத்தின் நடுவே வெகு தொலைவில் அமைக்கப்பட்ட படிக்கற்கள். அவள் ஒரு யோசனையில் இருந்து அடுத்தடுத்த யோசனைகளுக்கு மெதுவாக தாவிக் கொண்டிருந்தாள்.
“நான் வேணா அவருக்குக் கொடுக்கட்டுமா?”, அவன் பரிவோடு கேட்டான்.
“இல்லை.. இல்லை..” அவள் கதறாத அளவுக்கு குரலை உயர்த்தினாள். “அவரு.. அவரு.. இன்னும் தூங்கிட்டு இருக்காருன்னு தான் நினைக்கிறேன்.”
அந்தப் பணியாளர் அங்கிருந்து நகர்ந்து செல்லும் வரை அவள் காத்திருந்தாள். பின் திரைச்சீலைகளின் ஊக்குகளைத் தளர்த்திவிட்டு, அதன் பின்னால் சற்று மறைந்து கொண்டாள். பாதியே தெளிவாய்த் தெரிந்த அந்த குறை வெளிச்சத்தில், தெளிவற்ற நிலையில் இருக்கும் அவளது கணவனின் முகம், பளிங்கு பதித்த கண்களோடு முகமூடி அணிந்தது போல் அவளையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தது. அந்தக் கண்கள் பயங்கரமானவை. அவள் தனது கைகளை நீட்டி அந்த இமைகளை கீழே இழுத்து விட்டாள். மறு கையில் பால் குவளை இருப்பது நினைவுக்கு வந்தது. அதை வைத்துக்கொண்டு அவள் என்ன செய்யப் போகிறாள்? சன்னலை மேலே உயர்த்தி, அதை வெளியே தூக்கி எறிந்து விடலாமா என்று நினைத்தாள். அப்படிச் செய்வதற்கும் அவனது உடலின் குறுக்காகச் சாய்ந்து, தன் முகத்தை அவன் அருகில் கொண்டு சென்று அந்த சாகசத்தை நிகழ்த்த வேண்டும். எனவே, அந்தப் பாலை அவளே குடித்து விடவேண்டும் என்று முடிவு செய்தாள்.
காலிக் குவளையை எடுத்துக்கொண்டு தனது இருக்கைக்கு வந்தவளிடமிருந்து, சிறிது நேரத்தில் அங்கே வந்த பணியாளர் அதை வாங்கிக்கொண்டு சென்றார்.
“அவரோட படுக்கையை நான் எப்போ சுருட்டி வைக்கிறது?”
“வேணாம்.. இப்போ வேணாம். அவருக்கு முடியல.. அவருக்கு உடம்புக்கு ரொம்ப முடியல. அவரைக் கொஞ்சம் அப்படியே இருக்க விடுறீங்களா? அவரு முடிஞ்ச வரைக்கும் படுத்தபடியே இருக்கட்டும்னு டாக்டர் சொல்லிருக்காரு.”
அவன் தலையைச் சொறிந்தான். “நல்லது.. முடியலன்னா.. பாவம்.. இருந்துட்டுப் போகட்டும்.”
காலிக் குவளையை எடுத்துக்கொண்டு சென்றவன் மற்றைய பயணிகளிடம், “பாவம்.. அந்தத் திரைக்குப் பின்னால இருக்குறவருக்கு உடம்புக்கு ரொம்ப முடியல.. எழுந்திருக்கவே முடியல.. இப்போ தான் பால் குடிச்சாரு” என்று விவரித்தவாறே நகர்ந்தான்.
அனுதாபம் பெருகும் கண்களுக்கு நடுவில் அமர்ந்திருப்பதாய் அவள் இப்போது உணர்ந்தாள். வயதில் முதிர்ந்த பெண்மணி ஒருத்தி தாய்மை உணர்வுடன் அவள் அருகில் வந்து அமர்ந்தாள்.
“உன்னோட வீட்டுக்காரர் இப்படி உடம்புக்கு முடியாம இருக்குறத பார்க்கிறதுக்கு கஷ்டமா இருக்கு. இந்த மாதிரி சூழல்கள் யாருக்கும் வரலாம்னு சேர்த்து வெச்சிருக்கிற பணம் கொஞ்சம் எங்ககிட்ட இருக்கு, தேவைப்பட்டா நான் உனக்கு உதவ முடியும். நான் அவரைப் பார்க்கட்டுமா?”
“ஐயோ வேணாம்.. ப்ளீஸ்.. அவரைக் தொந்தரவு பண்ணவே கூடாது.”, அந்தப் பெண்மணி மனதார ஒப்புக்கொண்டாள்.
“நீங்க சொன்னா சரி தான்.. அப்படியே இருக்கட்டும்.. ஆனா இந்த மாதிரி நீங்க கஷ்டத்துல இருக்கும் போது, நான் உதவி செய்வேனோ மாட்டேனோன்னு எதுவும் நினைக்க வேண்டாம். அப்படி ஒரு வாய்ப்பு எனக்கு கிடைச்சா மகிழ்ச்சியாத் தான் செய்வேன். உங்க வீட்டுக்காரருக்கு இப்படி இருக்கும் போது, சாதாரணமா நீங்க என்ன செய்வீங்க?”
“நான் – நான் அவரை தூங்கட்டும்னு விட்டுருவேன்.”
“இப்படி அதிகமா தூங்குறதும் நல்லது இல்ல. அவருக்கு மருந்து எதுவும் கொடுக்கலையா?”
“ம்ம்.. ஆமாம்.”
“அதைக் கொடுக்குறதுக்காவது அவரை எழுப்பலையா?”
“ஆமாம்.. ஆமாம்.””
“மருந்து அடுத்த வேளை எப்போ கொடுக்கணும்?”
“ரெண்டு மணி நேரமா…. கொடுக்கல”
அந்தப் பெண்மணி ஏமாற்றத்துடன் காட்சியளித்தாள். “உன்னோட இடத்துல நான் இருந்திருந்தா, அடிக்கடி கொடுக்கணும்னு நெனைப்பேன்.. அப்படித்தான் நான் எங்க வீட்டுக்காரரை கவனிச்சுப்பேன்.”
“அதற்குப் பின் பல முகங்கள் அவளை உற்று நோக்கின. சாப்பாடு கிடைக்கும் பெட்டியை நோக்கிச் செல்லும் பயணிகள், இடைக்கம்பியைத் தாண்டிச் செல்லும் போது மூடியிருக்கும் திரைச்சீலைகளை ஆர்வத்துடன் பார்ப்பதை அவள் உணர்ந்தாள். அழுந்திய தாடையோடும் வெளிறிய கண்களோடும் இருந்த மனிதன் ஒருவன் அசையாமல் மூடிய திரைச்சீலையின் சிறிய இடைவெளியை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். காலை உணவை முடித்துக்கொண்டு திரும்பிய பெண் குழந்தை குறுக்கே நின்றுகொண்டு துறுதுறுப்பாய், முணுமுணுப்பதாய் பாவனை செய்து கொண்டு உரத்துச் சொன்னது – “அவருக்கு உடம்புக்கு சரியில்ல” – இன்னொரு முறை திரும்பவும் வந்த டிக்கட் பரிசோதகர், பயணச்சீட்டு கேட்டார். பொருள் புரியாத சித்திர எழுத்துக்களைக் கொண்ட ஒரு முடிவில்லாத நீண்ட காகிதத்தைப் போல் விரிந்து கிடக்கும் மரங்களும் வீடுகளும் சன்னலுக்கு வெளியே பறப்பதை, ஒரு மூலையில் தன்னைச் சுருக்கிக் கொண்டு அமர்ந்து அவள் பார்த்துக்கொண்டே வந்தாள்.
அவ்வப்போது இரயில் நின்றது. பயணத்திற்காக புதிதாய் உள்ளே நுழைபவர்களும் மூடிக் கிடக்கும் திரைச்சீலையை மாறிமாறிப் பார்த்தபடியே கடந்தார்கள். மேலும் மேலும் பயணிகள் கடந்து செல்வது போல் தோன்றியது. அவர்களின் பார்வைகள் அனைத்தும் மூலையில் குறுகிப் போய் அமர்ந்திருக்கும் அவளது தோற்றத்துடன் கலக்கத் தொடங்கியதாய் மூளைக்குள் உறைத்தது.
முகத்தின் மீது ஒட்டியிருந்த மூடுபனியை விலக்கியவாறே அன்றைய பிற்பகலில் வண்டியின் உள்ளே நுழைந்தான் ஒரு பருத்த மனிதன். அவனது வயிறு சுருங்கி, உதடுகள் வெளிறிப் போயிருந்தன. அவளுக்கு எதிரில் இருந்த இருக்கையில் அவன் தன்னை அழுந்தப் பதித்துக்கொண்ட போது, கருப்பு நிறத்தில் அகலமானதொரு துணியை ஆடையாய்ப் போர்த்தியிருப்பதையும்.. அழுக்கடைந்த வெள்ளை டை’யை அணிந்திருப்பதையும் கண்டாள்.
“காலையில் இருந்தே உங்கள் கணவர் மிக மோசனமான நிலையில் இருக்கிறார், இல்லையா?”
“ஆமாம்.”
“மகளே!.. நடந்ததையெல்லாம் நெனைச்சு உனக்கு இப்போ ரொம்பவும் வருத்தமா இருக்கு, இல்லையா?” ஒரு திருத்தூதன் தனது தங்கப் பற்கள் வெளியே தெரியுமாறு புன்னகைப்பது போல் தோன்றியது. “நோய் என்று இந்த உலகத்தில் எதுவுமில்லை என்பது உங்களுக்குத் தெரியும். அப்படித்தான். அது ஓர் அழகியல் சிந்தனை இல்லையா? மரணம் என்பது நமது பரந்திருக்கும் புலன்களின் அழிவு மட்டுமே. புனிதங்கள் ஊடுருவ உங்களது ஆன்மாவைத் திறந்து வையுங்கள். இறை சக்திக்கு முன்னால் உங்களின் செயலற்ற தன்மையை சமர்ப்பித்து விடுங்கள். பிறகு, நோயென்பதும் அழிவென்பதும் உங்களுக்கு இல்லாமல் போகும். இந்தச் சிறிய துண்டுப் பிரசுரத்தை உங்கள் கணவரிடம் கொடுத்து படிக்க வைக்க முடிந்தால்…”
அவளைச் சுற்றியிருந்த முகங்கள் மீண்டும் தெளிவின்றி வளர்ந்து கொண்டிருந்தன. ஒரே நேரத்தில் பலவித மருந்துகளை முயற்சித்துப் பார்க்கும் செயலையும் அல்லது ஒவ்வொன்றையும் மாறி மாறி எடுத்துப் பயன்படுத்திப் பார்ப்பதுமான முயற்சியை, அதன் ஒப்பீட்டு நன்மைகளைப் பற்றி தாய்மையுணர்வோடு தன்னை அணுகிய வயதான அந்தப் பெண்மணியும், முகச்சுருக்கம் கொண்ட அந்தக் குழந்தையின் பெற்றோரும் தீவிரமாக விவாதித்துக் கொண்டிருந்தது அவளுக்கு மங்கலாகக் கேட்டது.. போட்டி மனப்பான்மையானது நேரத்தை மிச்சப்படுத்துகிறது என்றாள் அந்த வயதான பெண்மணி. அதற்கு மறுத்துக் கூறுவதாக, அப்படியென்றால் எந்த மருந்து உங்களை குணப்படுத்தியது என்பதை உங்களால் சொல்ல முடியாது என்றது எதிர்க்குரல். அவர்களின் குரல்கள் மூடுபனிக்குள் பாய்ந்து செல்லும் மணிகள் பொருத்தப்பட்ட மிதவைகள் போல் தொடர்ந்து கொண்டேயிருந்தன.
அந்தக் குறிப்பிட்ட பெட்டியின் பணியாளர் திரும்பத் திரும்ப வருவதும் கேள்விகளை அடுக்குவதுமாக இருந்தார். அவளுக்கு எதுவும் புரியவில்லை. ஆனால் அவன் திரும்பவும் எதையும் சொல்லாமல் மீண்டும் சென்றுவிட்டதால், அவள் ஏதோ எப்படியோ பதிலளித்திருக்க வேண்டும். ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் அந்த வயதான பெண்மணி வந்து, அவளது கணவனுக்கு மருந்து கொடுக்க வேண்டுமென்று நினைவூட்டிக் கொண்டிருந்தாள். ஏற்கனவே இருந்த பயணிகள் அடுத்தடுத்த நிறுத்தங்களில் இறங்கினார்கள். காலியான இடங்களை புதியவர்கள் நிரப்பினார்கள்.
அவளுடைய காதுகள் நாலா பக்கமும் சுழன்றன. கடந்து செல்லும் எண்ணங்களைப் பற்றிக்கொண்டு தன்னை நிலை நிறுத்திக்கொள்ள முயன்றாள். ஆனால் அவை செங்குத்தான பள்ளத்தாக்கின் ஓரத்தில் விளைந்திருக்கும் புதர்களைப் போல் அவளிடமிருந்து நழுவிச் சென்றன. சட்டென்று மின்னலென ஒரு தெளிவு. இரயில் நியூயார்க்கை அடையும் போது என்ன நடக்கும் என்று விலாவாரியாக கற்பனை செய்தாள். அவனது உடம்பு சில்லிட்டிருக்கிறதென்றும். அவன் அதிகாலையிலேயே இறந்திருக்கக் கூடும் என்பதை யாரேனும் அனுமானிப்பார்கள் என்றும் நினைத்தபோது அவளது உடல் நடுங்கியது.
உடனடியாக ஒன்றைச் சிந்தித்தாள். “நிகழ்வைப் பற்றிய ஆச்சரியம் ஏதுமில்லாமல் நான் இருந்தால், அவர்கள் என்மீது சந்தேகப்படக்கூடும். அவர்கள் கேள்விகளால் துளைப்பார்கள். நான் உண்மையை, நடந்ததைச் சொன்னாலும் கூட அவர்கள் நம்ப மாட்டார்கள். ஒருவரும் என்னை நம்பமாட்டார்கள்! ரொம்பக் கொடுமையானது”. மேலும் ஒன்றை திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டாள், “நிகழ்ந்தது எதுவும் தெரியாதது போல் நான் நடிக்க வேண்டும். ஆம்.. கட்டாயம் நான் நடிக்கத்தான் வேண்டும். அவர்கள் வந்து திரைச்சீலையை விலக்கும் போது, நான் வெகு இயல்பாக மேலே சென்று அவனைப் பார்க்க வேண்டும். பிறகு கதறித் துடிக்க வேண்டும். அந்தக் கதறல் பெரிய ஓங்காரம் போல் இருக்க வேண்டும்” , என்று யோசனை செய்து கொண்டாள்.
படிப்படியாக அடுத்தடுத்த துடிப்பான துரிதமான சிந்தனைகள் அவளுக்குள் குவியத் தொடங்கின. அவள் அவற்றைப் பிரித்துப் பார்க்கவும் கட்டுப்படுத்தவும் முயன்றாள். ஆனால் அவை அவளை ஆரவாரத்தோடு திரும்பவும் சூழ்ந்து கொள்கின்றன. அவளது பள்ளிப்பருவத்தின் ஒரு பரபரப்பான நாளின் முடிவைப் போல அவள் களைப்படைந்த போது அவை அமைதியாயின. அவளது மூளை குழம்பியது. தன் பங்கை மறந்துவிட்டு, ஏதோவொரு கட்டுக்கடங்காத சொல் அல்லது பார்வையால் தானே தன்னை காட்டிக் கொடுத்துவிடுவாளோ என்கிற கலக்கம் அவளுக்குள் ஏற்பட்டது.
“எனக்கு எதுவும் தெரியாது என்பது போல் நான் கட்டாயம் நடித்தேயாக வேண்டும்,” அவள் தனக்குள் முணுமுணுத்துக் கொண்டாள். சொற்கள் தன் நிலையை இழந்துவிட்டன. ஆனால் ஒரு மாய சூத்திரத்தைப் போல, அவள் அவற்றை இயந்திரத்தனமாக திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டேயிருக்கிறாள். அவள் சொல்வது அவளுக்கே கேட்கிற வரை, அவளே உணர்கிற வரை. அதாவது , “எனக்கு ஞாபகம் இல்லை.. ஞாபகம் இல்லை!”
அவளுடைய குரல் உரத்து ஒலித்தது. ஒருவித அச்சத்தோடு தன்னைச் சுற்றிலும் பார்த்தாள். நல்லவேளை அவள் பேசியதை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை.
இரயிலின் உட்புறத்தைப் பார்ப்பது போல் அவளுடைய கண்கள் அவன் இருக்கும் பெர்த்’தின் திரைச்சீலையைப் பார்த்தது. அவள் அவர்களுடைய கனமான துணிப் பைக்குள்ளிருந்து அலங்காரமாய் நெய்யப்பட்ட ஆடைகளை தேடத் தொடங்கினாள். கண்டுபிடிப்பது சிக்கலாகவும் கடினமாகவும் இருந்தது. அவள் திரைச்சீலைகளை வெறித்துப் பார்க்கிறாள். அடர்த்தியான பொருட்கள் யாவும் வெளிப்படையாக மாறின. அதன் வழியாக அவள் தனது கணவனின் முகத்தைப் பார்க்கிறாள், அதோ அவனது இறந்து போன முகம். அதிலிருந்து தனது பார்வையைத் தவிர்க்க போராடினாள். ஆனால் அவளது கண்கள் அங்கிருந்து அசைய மறுத்தன. அவளது தலை ஒரு தீய சக்தியிடம் சிக்கிக் கொண்டது போல் தோன்றியது. இறுதியாகத் தன்னை பலவீனமாய் நடுங்க வைத்த அந்தச் சிக்கலில் இருந்து விடுபட கடும் முயற்சி செய்து தலையைத் திருப்பினாள். ஆனால், அதனால் எந்தப் பயனும் இல்லை. அவளுக்கு முன்னால் வெகு நெருக்கமாக சிறியதாக மென்மையாக அவளது கணவனின் முகம் நிழலாடுகிறது. அவளுக்கும் அவளுக்கு முன்னால் அமர்ந்திருக்கும் பெண்ணின் போலி ஜடைக்கும் இடையில் அது காற்றில் தொங்கவிடப்பட்டிருப்பது போல் தோன்றியது. கட்டுப்படுத்த முடியாத ஒரு சைகையோடு அவள் அந்த முகத்தைத் தள்ள முயற்சித்து தன் கையை முன்னே நீட்டினாள். திடீரென்று அவனுடைய மென்மையான ஸ்பரிசத்தை அவள் உணர்ந்தாள். அழுகையைப் பாதியிலேயே அடக்கிக் கொண்டு இருக்கையிலிருந்து எழுந்தாள். பொய்ச் சடை அணிந்த அந்தப் பெண்ணை சுற்றிலும் பார்த்துவிட்டு, தன்னுடைய செய்கைகளை நியாயப்படுத்தும் விதமாக எதிர்ப்புறத்தில் இருந்த தங்களது பயணப்பையை தூக்கினாள். பையைத் திறந்து உள்ளே பார்த்தாள். ஆனால், அவளது கையில் முதலில் தட்டுப்பட்டது ஒரு ஃப்ளாஸ்க்.. அவசரமாய்ப் புறப்படும்போது அவனுக்காகத் தேவைப்படுமேயென்று உள்ளே திணிக்கப்பட்டது. பையை இழுத்து மூடினாள். கண்களை மூடிக் கொண்டாள். அவனுடைய முகம் திரும்பவும் அங்கே தெரிந்தது. அது அவளுடைய இமைகளுக்கும் கருவிழிகளுக்கும் இடையே சிவப்புத் திரைக்கு எதிராக ஒரு மெழுகு முகமூடியைப் போல் ஆடிக்கொண்டிருந்தது.
நடுக்கத்துடன் எழுந்தாள். அவள் மயக்க நிலையில் இருக்கிறாளா? அல்லது தூங்கிவிட்டாளா? வெகு நேரம் கடந்துவிட்டது போல் தோன்றியது. ஆனால், நேரம் பகலாகவே இருந்தது. அவளைச் சுற்றியிருந்த மக்கள் முன்பு போல அதே மனநிலையிலேயே அமர்ந்திருந்தனர்.
திடீரென்று ஏற்பட்ட பசி உணர்வு, காலையிலிருந்தே அவள் உணவு எதுவும் எடுத்துக்கொள்ளவில்லை என்பதை உணர்த்தியது. சாப்பிட வேண்டும் என்கிற எண்ணம் அவளுக்கு வெறுப்பை ஏற்படுத்தியது.. ஆனால், மீண்டும் மயக்கம் வந்துவிடுமோ என்று பயந்தாள். பையில் சில ரொட்டித் துண்டுகள் இருப்பதை நினைத்து அதிலிருந்து ஒன்றை எடுத்து வாயில் போட்டுக்கொண்டாள். வறண்டு போன அந்த ரொட்டித் துண்டுகள் அவளை மூச்சுத் திணற வைத்தன. அவசர அவசரமாய் தனது கணவனின் ஃப்ளாஸ்க்’கிலிருந்த மதுவை சிறிது விழுங்கினாள். தொண்டை எரிந்தது. அந்த எரிச்சல், உள்ளிருக்கும் எரிச்சல்களை எதிர்க்கும் மருந்தாகச் செயல்பட்டு அதுவரை ஏற்பட்ட நரம்புகளின் மந்தமான வலிகளை கொஞ்ச நேரம் குறைத்தது. பின், இதமான ஓர் அரவணைப்பை உணர்ந்தாள். மென் தென்றல் காற்று அவளை வருடுவது போலிருந்தது. சுற்றி வளைத்திருந்த அச்சங்கள் அனைத்தும் தங்களது பிடியைத் தளர்த்தின. அக்கணத்தில் சூழ்ந்திருந்த அமைதியின் வழியே சிறிது பின்வாங்கினாள். ஒரு கோடை நாளின் பரந்த அமைதியைப் போல் இனிமையான அமைதி அது. அவள் அப்போதைக்கு உறங்கிப் போனாள்.
தூக்கத்தில் இரயிலின் துருப்பிடித்த சத்தம் கேட்டுக் கொண்டேயிருந்தது. வாழ்க்கையே இதுதான் என்பது போல, தவிர்க்க முடியாத சக்தியொன்று அவளை தூக்கிச் சென்று இருளிலும் திகிலிலும் இன்னதென்று புரியாத அரூப நாட்களின் பிரமிப்பிலும் ஆழ்த்தி துயரத்தில் தள்ளியது. இப்போது அனைத்தும் ஒரே நேரத்தில் ஒன்றாகிக் கலந்து அமைதியாகி – ஒரே நிசப்தம்.. ஒரு துடிப்பு இல்லை.. அவளது முறையாக, அவளும் இப்போது இறந்துவிட்டாள்.. மென்மை தவழும் முகத்தோடு அவன் அருகிலேயே அவளும் படுத்திருந்தாள். ஓ.. எவ்வளவு அமைதியாக இருந்தது! இன்னமும் காலடியோசைகள் கூடக் கேட்டன.. ஆம்.. அவர்களை எடுத்துச்செல்ல வந்த மனிதர்களின் காலடி ஓசைகள் அவை.. அவள் அதை உணர்ந்தாள்.. திடீரென்று ஒரு தொடர்ந்த அதிர்வை உணரத் தொடங்கினாள்.. தொடர்ச்சியான அதிர்வுகள்.. அதன் பின்னும் மீண்டும் இருளில் மூழ்குதல். இந்த முறை மரணத்தின் இருள்குகையில் ஒரு கருப்பு சூறாவளியின் கைகளில் அவர்களிருவரும் இலைகளைப் போல் சுழன்று கொண்டிருந்தனர்.. சுருள் சுருளாய் காட்டுத்தனமான சுழல்கள்.. அதுவும் கோடிக்கணக்கான இறந்து போனவர்களுடன்.
பயத்தில் அவளது உடல் குலுங்கியது. குளிர்கால நாளானது வெளிறிப்போய். விளக்குகள் எரிந்து கொண்டிருந்ததால், அவளுடைய உறக்கம் நீண்ட நேரம் நீடித்திருக்க வேண்டும்.. நிறுத்தம் வருவது போன்ற கிறக்கத்தில் இரயில் என்ஜின் கிறுகிறுத்தது. அவள் தன்னுணர்வு பெற்று எழுந்த போது, பயணிகள் தங்களது உடைமைகளை சேகரித்துக் கொண்டிருப்பதைக் கண்டாள். தளர்ந்திருந்த பெர்முடாஸுடன் பொய்ச் சடை அணிந்திருந்த பெண், உடை மாற்றும் அறையிலிருந்து வந்து கொண்டிருந்தாள். போதனைகள் செய்த அந்தக் கிறித்துவ விஞ்ஞானி சட்டையின் கைமுனைக் காலரை சரி செய்து கொண்டிருந்தான். பணியாளர் தனது பாரபட்சமற்ற சேவைகளைத் தொடர இடைக்கம்பியை தாண்டிச் சென்றார். தங்க நிறத்தில் பட்டை அணிந்த தொப்பியோடிருந்த ஒருவர் அவளது கணவனின் டிக்கட் பற்றிக் கேட்டார். “பேக்..கேஜ்… எக்ஸ்பிரஸ்!” என்றொரு உரத்த குரல். பயணிகள் தங்களது டிக்கட்டுகளை ஆய்வாளரிடம் ஒப்படைக்கும் போது, ஒப்புதலுக்காக டிக்கட்டை அழுத்தும் உலோக ‘க்ளிக்’ சத்தம் அவளுக்குக் கேட்டது.
தற்போது இரயிலானது ஹார்லெம் சுரங்கப் பாதையில் சென்று கொண்டிருந்ததால், அவளுடைய சன்னலைச் சுற்றிலும் புகைமூட்டமான சுவரால் அடைக்கப்பட்டிருந்தது. பயணம் நிறைவுறப் போகிறது. இன்னும் சில நிமிடங்களில், இரயில் நிலையத்தின் கூட்ட நெரிசலின் ஊடாக தனது குடும்பத்தினர் மகிழ்ச்சியுடன் தன்னை நோக்கி நடந்து வருவதைக் காண்பாள். அவள் இதயம் ஆசுவாசத்தில் விரிந்தது. மிக மோசமான பயங்கரமொன்று கடந்துவிட்டது.
“நாம இப்போ அவரை எழுப்புறது நல்லது.. இல்லையா?” இரயில் பணியாளர் கேட்டார்.
அவர், அவளது கணவனின் தொப்பியைக் கையில் ஏந்திக் கொண்டு, நிதானமாக அதைத் தனது விரலின் கீழ் வைத்து சுழற்றிக் கொண்டிருந்தார்.
அவள் தொப்பியைப் பார்த்து பேச முயன்றாள். சட்டென்று இரயிலின் அறை முழுவதும் இருட்டாகி விட்டது. அவள் தீவிர முயற்சியுடன் தன் கைகளை மேலே தூக்கி எதையோ பிடிக்கப் போராடினாள். முகம் கீழ்நோக்கிக் கவிழ்ந்தது. இறந்தவனின் படுக்கை இருக்கையில் தலையை மோதிக் கொண்டாள்.
எடித் வார்டன் (1862-1937)– அமேரிக்க சிறுகதை மற்றும் நாவலாசிரியர். நாற்பதிற்கும் மேம்பட்ட ஆக்கங்களை எழுதியிருக்கிறார். அமேரிக்க மேல்தட்டு வர்க்கத்தின் வாழ்வையும் அதன் நுட்பங்களையும், அவர்களுடைய அறம் சார் சிக்கல்களையும் தன்னுடைய புனைவில் விரிவாக சித்தரித்தவர்.
***
பாலா இளம்பிறை – இயற்பெயர் ந. பாலச்சந்திரன். திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர். பணி நிமித்தம் சென்னையில் வசிக்கிறார். இரண்டு கவிதை நூல்கள், ஓவியர் புகழேந்தியுடனான நேர்காணல் தொகுப்பு மற்றும் மெஸ்யூர் வான்கா எனும் மொழிபெயர்ப்பு நாவல் ஆகியன இவரது ஆக்கங்களாகும். மின்னஞ்சல் : ilampiraibala@gmail.com


