Monday, February 16, 2026

நகர்வு

பா.கண்மணி

ம்மாவின் நீளக் கண்கள், விமான நிலையத்தின் வாயிலில் வெளியேறிடும் முகங்களை மாறிமாறி அலைமோதிப் பொறுமையிழந்தன. பின்னர் அரேபிய மோஸ்தரில் விதானத்திலிருந்து தொங்கிய மூன்றடுக்கு மூங்கில் கூடைகளை அளைந்தன. இந்திய விமான நிலையம், என்ன இழவுக்கு அரேபிய………அதைப்பற்றி ஆராய இது நேரமில்லை. இதோ, இதோ, எந்த நொடியிலும் அமெரிக்காவிலிருந்து தரையிறங்கிடும் மகள் தோன்றப் போகிறாள். பரபரத்த உடலைப் பின்னாலிருந்து தழுவியது-மகளே தான்! திரும்பிய அம்மா, எலும்புவரை இறுக்கிக் கொண்டாள். 

குரல்வளை வழி வெளியேறத் துடித்திட்டக் கொத்து விளிகளில் முண்டியடித்து வெளிவந்த “செல்லக்குட்டீ!” லேசாக நடுங்க, அம்மாவின் உலர்ந்த முத்தம், மகளின் கழுத்தெழும்பில் அழுத்தியது. அப்பாவைப் போலவே நல்ல வளர்த்தியவள். ட்ராலியைத் தள்ளியபடி, டாக்ஸி பிடிக்கும் நடை மேடையை நோக்கிச் சென்றிடும் மகளை அம்மா தொடர்ந்தாள். அவள் பெரிய பெட்டியை எடுத்துக் கீழே வைப்பதை, தோள்வலியுள்ள அம்மாவால் வேடிக்கை பார்க்கவே முடிந்தது. 

காரின் பின்னிருக்கையில் அம்மாவின் கையை மகள் பிடித்துக் கொண்டாள். 

“கை ஏன் இவ்ளோ ஜில்லாருக்கு? செக் பண்ணணும். “

“அம் ஆல்ரைட் கண்ணா“. 

பயண அனுபவங்களை விசாரித்த அம்மாவின் மீது,”ஆல் ஓகே“, என்கிற பதில், கத்தரிக்கப்பட்டு விழுந்தது. அசந்திருப்பாள் என அம்மா அமைதியானாள். அம்மாவின் தோளில் சாய்த்து வடிவான அவையங்களைப் பக்கவாட்டில் பார்த்தபடி அரைக்கண் மூடிய மகளுக்கு, எங்கும் எதிலும் கிடைத்திடாத ஆசுவாசம் கிட்டியது. அம்மா, தன் பக்கத்து சன்னல் கண்ணாடியை சற்று இறக்கினாள். பாதையோரம் நட்சத்திரங்களாய் மலர்ந்த நைட் குவீன் மலர்களின் அலாதியான மென் மணம் நுழைந்து தாலாட்டியது. மௌனத்தின் கனம் தாளாது மை வீதியில் வீழ்ந்தது பனி. 

அந்தப் பழைய அடுக்ககத்தை அடைந்ததும் காவலாளி பெட்டிகளை எடுத்துவந்து பூச்சு தேய்ந்த கூடத்தில் வைத்தான். முன்னாலிருந்த ஆக்கிரமித்துக் கொண்ட 2 பெட்டிகளும், மங்கிய அந்த சூழலுக்குப் பொருந்தாது பளீரிட்டன. நுழைவாயிலில் இறைந்து கிடக்கும் பெரிய செருப்புகள், உள்ளே ஆங்காங்கு சிதறியிருக்கும் டம்ளர், குவளை, நாளிதழ்-இவையெதையுமே காணோம். வீட்டின் துப்புரவு, துக்கம் முடிந்து கழுவப்பட்ட வீடாய் அச்சுறுத்தியது. 

மகள், பசிக்கிறதெனக் கூறினாள். அவளுக்கு உண்மையில் பசிப்பது போலவுமிருந்தது. சோபாவில், உணவு மேசையில், டிவி ஸ்டாண்டில் அடையாளக் குறியோடு கிடந்த தடித்த புத்தகங்கள் மட்டும் அங்கிருந்த ஒழுங்கில் துருத்திக்கொண்டு தெரிந்தன. ஒஷோவின் ‘love, freedom, aloneness ‘, தேநீர் மேசை மீது தலைகுப்புற விரிந்து கிடந்தது. அதையெடுத்துக் கண்ணோட்டிய மகள் புன்னகைத்தாள். அப்பா இருந்தபோதே அம்மாவைப் பீடித்திருந்த புத்தகப் பித்து, இப்போது தீவிரமடைந்திருக்கிறது. அதுவும் இல்லையென்றால் இன்றைய நிலைமைக்கு, அவர் பைத்தியமாகி விட்டிருப்பார். அம்மா கொடுத்த தட்டிலிருந்த கேக்கையும் இனிப்பையும் பார்த்து முகஞ்சுளித்தவள், வறுத்த முந்திரியைக் கொறிக்கும்போதே இமைகள் பாரத்தில் தாழ, தன்னறைக்குச் சென்றாள். பொருட்கள் இம்மியும் நகராது தான் விட்டுச் சென்றவாறே இருந்த அறை, அருங்காட்சியகமாகத் தோற்றமளித்தது. அப்பா இருந்திருந்தால் ஒதுங்க வைப்பதாக எதையாவது மாற்றியிருப்பார். இப்போது தூசி மட்டும் துடைக்கப் பட்டிருந்தது. அறையின் உயிர்ப்பின்மை தாளாது கண் மூடினாள். 

அம்மா, குவில்ட்டை விரித்து நெடுமூச்சோடு போர்த்திவிட்டாள். வெக்கையாக இருக்கிறதென்ற மகள், அதனை உதறித் தள்ளினாள். விழிமூடிய மகளைப் பார்த்துக்கொண்டே நின்ற அம்மாவின் கால்கள் வலிக்கத் துவங்க, படுக்கையின் கால் பக்கமாக மெல்ல அமர்ந்தாள். மகளிடம் அனக்கம் ஓய்ந்ததும் மெலிதான போர்வையொன்றை எடுத்துவந்து மூடி வைத்தாள். ஜாதிப் பூச்சரத்தைப் பருத்தித் துகிலில் பொதிந்து வைப்பதாக இருந்தது அது. மகள் கருவறைக் குழந்தையாய்ப் போர்வைக்குள் சுருண்டுகொண்டாள். 

கடை திறந்த சுருக்கில் போய் ஆட்டுக்கறி வாங்கிவருவதற்குள் மகள் எழுந்து பிரட்டை டோஸ்டரில் போட்டுக் கொண்டிருந்தாள். 

“ப்ளாக் காஃபி கிடைக்குமா?”

“இது எப்பைலருந்து?”

“அங்கே நா ஒரு நாளைக்கு 18 மணி நேரம் தூங்காம வொர்க் பண்ணியாகணும். அதுக்காகப் பழகிகிட்டது.“

கடுங்காப்பியை சகித்துக் குடித்த மகள், கைபேசியை மின்னூட்டத்தில் போட்டுவிட்டு மீண்டும் படுத்துக் கொண்டாள். 

அம்மா, பிரியாணியைக் கவனமாக செய்யத் துவங்கினாள். எளிய ஆரோக்கிய உணவுப் பழக்கத்திற்கு மாறியிருந்த அவளுக்கு, விசேஷ சமையல் இடறியது. சுவைத்து சுவைத்து சமைத்ததிலேயே கால் வயிறு நிரம்பிவிட்டது. ஆவி பறக்கும் பிரியாணியை எடுத்து தாராளமாக நெய் விட்டுக் கிளறிக் கிண்ணத்தில் அடைத்துத் தட்டிற்கு மாற்றினார். அளவுக்கதிகமான நெய், பிரியாணியை சப்பென்று ஆக்கிவிட்டது. காரத்தைக் குறைத்துவிட்ட மகளுக்கு சரியாகத்தான் இருக்கும். அந்த மொட்டைக் கோபுரத்தின் உச்சியில் புதினாக் கொத்தை செருகி, பக்கவாட்டில் தயிர்பச்சடி கப்பை அமர்த்தி, முள்கரண்டி, ஸ்பூனோடு தட்டை எழுதுமேஜையில் வைத்துவிட்டு மகளை மிருதுவாக அழைத்தாள். 

“artistic garnishing“, மகள் படுக்கையில் இருந்தபடியே திரும்பிப் பார்த்து சிரித்தாள். எத்தனை நாட்கள் கழித்து இந்த ராஜபோகம்! 

தன்னுடைய மெல்லிய அழைப்பிற்கு மகள் எப்படி விழித்தாள்? அவள் உறங்கவே இல்லையோ?

“ஆறிப் போறதுக்குள்ள பல்ல வெளக்கிட்டு சாப்புடுடா“

“என்ன பிரியாணி?”

“மட்டன்”

“நா ரெட் மீட் சாப்புட்றதில்ல “

“சொல்லவேயில்ல?”

“கேட்டாதான சொல்றதுக்கு?”

உண்மைதான். வரண்டுபோன இந்த நாட்களில் கல்லூரிக் கட்டணம், கைச்செலவு மற்றும் மதிப்பெண்கள் குறித்து மகளிடம் பேசியவையே அதிகம். முன்பெல்லாம் இந்தப் பொறுப்புகளைக் கணவரே கவனித்துக் கொள்வார். மகளிடம் உணவைப் பற்றியும் உடல்நிலை குறித்தும் துருவித்துருவிக் கேட்டு வற்புறுத்துவதற்கான அவகாசம், அம்மாவுக்கு இருந்தது. எந்நேரமும் மனதின் பின்னணியில் வரவு செலவு கணக்கு ஓடிக் கொண்டிருப்பதால் மற்ற அனைத்தும் மறந்து போகின்றன. கணவரின் காசோலைகளும் கணக்குப் புத்தகங்களும் தேடத்தேடக் கிடைத்துக் கொண்டேயிருந்தன. எதற்காக இத்தனை வங்கிகளில் கணக்கு வைத்திருந்தாரோ புரியவில்லை. ஐந்தாயிர ரூபாய் க்ளைமுக்காக கற்றைக் காகிதங்களோடு ஒவ்வோர் வங்கியிலும் ஐந்தாறு முறை படியேறி இறங்கவேண்டும். தனக்குரிய கௌரவம் கிட்டாததில் அம்மாவுக்கு வருத்தமே. 

கனவிலும் காசைப் பற்றிய பதற்றம். மகளுக்குப் பணம் அனுப்புவதற்காக வங்கியை நோக்கி நடக்கும்போது கைப்பையை ஓர் இளம்பெண் பறித்துக்கொண்டு ஓடுவதாய் ஒரு கனவு. பிரதான சாலையிலிருந்து தெருவுக்குள் திரும்பி விரையுமவளை விடாது துரத்துகிறாள். மூச்சிரைக்க எட்டிப் பிடிக்கும் தூரத்தில் விழிப்பு வந்துவிட்டது. இளம்பெண்ணின் முகத்தைப் பார்த்திருக்கலாம்.  கணக்கிலிருந்த தொகை குறைந்து விட்டதாக மற்றுமோர் கனவு வந்தபோது, வியர்த்து நனைந்ததில் எழுந்துவிட்டாள். செல்வத்தின் வல்லமையை அறிந்திடாது, கணவருடைய ஆலோசனையின் பேரில் வங்கிப் பணியைத் தான் ராஜினாமா செய்திருக்கக் கூடாது. அதற்குத் தன்னுடைய சோம்பேறித் தனமும் காரணம். இப்போது வங்கிப் பரிவர்த்தனை செய்வதற்கே தடுமாறுகிறது. மாற்றம் என்பது இப்படி ஒளிந்திருந்து வந்து கழுத்தை நெறிக்குமென எண்ணிப் பார்த்ததில்லை. 

“அமெரிக்காவுக்குப் போய் கருத்திருக்க?” மகளை சகஜ நிலைக்கு இழுத்தாள். 

“ஹூ கேர்ஸ்? அங்க extreme weatherக்கு இப்படித்தான் ஆகும்,” தன்னுடைய பொது நிறத்தை சுட்டிக் காட்டுவதாக எண்ணி எரிந்து விழுந்தாள். 

அம்மாவின் வெண்ணிற முகத்தில் இருளாடியதும், தான் அநாவசியமாகக் கோபமுற்றத்தை உணர்த்த மகள்,”you racist“, என்றபடியே அவளை செல்லமாக உச்சந்தலையில் தட்டினாள்.

குளிர்ந்த அம்மா, “அப்ப கறியை எடுத்துட்டு வெறும் பிரியாணிய தரவாம்மா?”

“நோப். ஆதிரா மெஹந்தி functionக்கு வரச்சொன்னா. அங்க சாப்டுக்குறேன்.”

இதுபோன்ற ஆரவாரங்களில் தனக்கு உவப்பில்லை தான். திருமணத்திற்குப் போனால் போதுமானது. ஆனால் இங்கிருந்து நாள் முழுக்க இந்த அம்மாவை மட்டும் வைத்துக்கொண்டு என்ன செய்வது? அப்பா இருந்தால் குறுக்க மறுக்க அலைந்துகொண்டு, எதையாவது சலம்பிக் கொண்டிருப்பார். தன்னை வலிந்து உற்சாகப் படுத்திக்கொள்ளும் முனைப்பில் ஜெட்லாகையும் பொருட்படுத்தாது கிளம்பிச் சென்றாள். 

‘’எப்போ வருவ?”

வினோதமாகப் பார்த்த மகள்,’’அதெல்லாம் சொல்லமுடியாது. இவ்ளோ நாளுக்கப்புறம் friends எல்லாம் மீட் பண்ணிக்கப் போறோம்.” 

இரவு படுக்க வந்துவிடப் போவதைத் தெரிவித்திருக்கலாம். ஆனால் தன் வளர்ச்சியைக் காட்டுவதற்கு வேறென்ன வழி? மேலும், இரவுணவு குறித்து நடக்கப்போகும் உரையாடலை அவள் வெறுத்தாள். 

மகள் அலரக் குளித்து வருவதற்குள் அம்மா, அலமாரியிலிருந்த 3 லெஹெங்கா செட்டையும் எடுத்துக் கட்டிலின் மீது வைத்தாள். அவற்றைப் பிரித்துப் போட்டதும் விழாக்கோலத்தில் மெத்தை மறைய, இருவரையும் மகிழ்ச்சி சுற்றிக்கொண்டது. தள்ளி நின்று பார்த்த மகள், பழுப்புவெள்ளைப் பாவாடையை எடுத்து விரிக்க, அதிலிருந்த முத்துக்கள் கண் விழித்தன. 

“பகல் வெளிச்சத்துக்கு குட் சாய்ஸ். ஆனா மருதாணி படாம பாத்துக்கோ.”

அலட்சியமாக உச்சுக் கொட்டினாள் மகள். 

“எத்தனை ஆயிரம் தெரியுமா அது?” அம்மாவிடம் அந்த விலைக்கு சேலையில்லை. 

“நாட் அகய்ன்! Am sick of these numbers ……அயர்ன் பண்ணி வச்சிருக்கக் கூடாது?”

‘நீ எந்தப் பாவாடைன்னு சொல்லிருந்தா குடுத்து வாங்கியிருப்பேன். மூணையும் எதுக்கு வேஸ்ட்டான்னு“

“எல்லாத்துக்குமே கணக்கு தானா?’

கணக்கு பார்க்காவிடில் அடுத்தவரிடம் கையேந்த வேண்டிவரும் என்று அம்மா சொல்லவில்லை. 

“குடு; உன் தலை காயுறதுக்குள்ள அயர்ன் பண்ணித் தரேன்.“

“ஆமா, நீங்க சரியாவே பண்ண மாட்டீங்க.”

“இப்பல்லாம் புடவையக் கூட நானேதான் அயர்ன் பண்ணிக்குறேன்”, பாவாடையை வாங்கிய சின்னக் கை, அதன் கனத்தில் தாழ்ந்தது. 

பணியாளிடம் பை பையாகத் துணிகளை இஸ்திரிக்குக் கொடுத்து வாங்கும் அம்மாவிடம் இப்போது பணியாளுமில்லை; தோரணையுமில்லை. 

இஸ்திரிப் பெட்டியை ஸிந்தெடிக் செயல்முறையில் வைத்த அம்மாவுக்கு உள்ளூரப் பதைப்பு. முத்துக்கள் கருகி விடாதவாறு இடைப்பட்ட துணியை விரித்துவிட்டு அழுத்துகையில், சுர்ரென இடது கையின் நடுவிரல் நுனி சூடு வாங்கிவிட்டது. எரிச்சலை வெளிக்காட்டாது பணியை முடித்தாள். 

அதிருப்தியோடு மகள் உடுத்திக் கொண்டாள். 

“You look like a princess da!”

“ஆ,மா ; princess without kingdom,” கல்விக் கடனின் சுமை அதில் தெரிந்தது. 

மகளைக் கட்டிக்கொள்ள நெருங்கிய அம்மா, அங்கேயே நின்றுவிட்டாள். காதணியைத் தவிர வேறு ஆபரணங்களின்றி மகள் முத்துப் பல்லாக்காக அசைந்து சென்றாள். தோழனின் காருக்குள் அவள் மறையும் வரை இமைக்காது பார்த்துக் கொண்டிருந்த அம்மா, தன் பூரிப்பைப் பகிர்ந்து இரட்டிப்பாக்கக் கூடிய ஒரே ஜீவனுக்காக ஏங்கினாள். ஹூம்….. மரணிப்பவர்கள் தங்கள் உடலைத் தவிர வேறெதையுமே எடுத்துச் செல்வதில்லை. அவர்களது பொருட்களாலும் சொற்களாலும் உணர்ச்சிகளாலும் செயல்களாலும் மதிப்பீடுகளாலும் ஆசை, நிராசைகளாலும் குப்பைக் காடாக நிரம்பி வழிகிறது இந்த உலகம். மகள் விட்டுச்சென்ற மேல்நாட்டுத் திரவிய வாசம் மெல்ல வருடி சாந்தப் படுத்தியது. காலாவதியாகிப் போயிருந்த பர்னாலை விரல் நுனியில் தாராளமாகத் தடவினாள். எரிச்சல் தணிந்த பாடில்லை. 

மகளுக்கு நல்ல வேலை கிடைத்துப் பணம் அனுப்பினால் அடகிலிருக்கும் நகைகளை சிறிது சிறிதாக மீட்கவேண்டும். இறுதி செமஸ்டர் முடித்தும் ஏனோ அவளுக்குத் தகுதியான வேலை இன்னும் வாய்க்கவில்லை. ஆறிப்போன பிரியாணியை இட்டு வயிற்றை நிரப்பினாள். தனக்குப் பிடித்தமான உணவு எதுவென்று யோசித்தபடியே அடை தோசைக்கு ஊற வைத்திருந்த பருப்புகளை அரைத்து ஃபிரிஜ்ஜில் வைத்தாள். அங்கு பெரிய டப்பாவில் இட்லி மாவு இருந்தது. இந்தப்பெண் எதைத்தான் சாப்பிடுமோ? 

சாம்பல் பொழுதின் நிசப்தத்தை உடைக்கும் பொருட்டு தொலைக்காட்சியை உயிர்ப்பித்தாள். பொழுதுபோக்கு அலைவரிசைகள் அனைத்துமே அசட்டுத்தனமாக நேரத்தை வீணடித்தன. எனவே அந்த வீட்டு வழக்கப்படி ஆங்கிலச் செய்தி அலைவரிசைக்கு மாற்றி, கணவர் ஒலிக்கவிடும் விதமாக உரக்க வைத்தாள். இந்த சத்தத்தைத் தாளமுடியாமல் தினந்தோறும் தான் ஆட்சேபித்தது நினைவுக்கு வந்தது. வெறும் நிழலாய் வாழ்ந்து வந்திருக்கும் தான், அவர் மறைந்தபின்பும் நிலத்தில் காலூன்றி நடக்க முயலவில்லை; அவரது ருசியையும் ஆரோக்கியத்தையும் மறந்து சமைக்க, கைகளுக்குத் தெரியவில்லை. ஆர். கே. நாராயணனின்,’The Blind Dog ‘ஐப்போல மனம் கணவரையே சுற்றிச் சுற்றி வருகிறது. விருப்பங்களை விடப் பழக்கங்களுக்கு வலு அதிகம் போல. சுயவெறுப்பில் தொலைக்காட்சியை டொக்கென்று நிறுத்தினாள் அம்மா.

எப்போது வருகிறாய் என்று அனுப்பிய செய்தியை மகள் பார்த்ததாகவே தெரியவில்லை. கார் எடுத்துக்கொண்டு வரவா எனக் கேட்பதற்குக் கார் இப்போதில்லை; இருந்தாலும் தனக்கு ஓட்டத்தான் தெரியுமா? இயலாமையில் சோர்வு மேலிட்டது. இணையத்தில் வாசித்துக் கொண்டிருந்ததில் இரவு நாகப்பழமாய்ப் பழுத்தது தெரியவில்லை. தமிழ்நதியின் நிதிலாவா தான்? மகளுக்கு ஃபோன் செய்தாள். 

“Am just worried about your safety.”

“சும்மா nag பண்ணாதீங்க. ஃபாரின்லயே தனியா இருக்கிற எனக்குத் தெரியாதா?”

இந்த அடியை அம்மா எதிர் பார்த்திருந்தாள். ஆனால் கேட்கவில்லை என்றால் அக்கறை இல்லையென்று மகள் கருதுவாள். அதற்காகத்தான் விசாரிப்பு. மகள் அதனை ஊகித்திருந்தாள். இதே நள்ளிரவில் மகள் பிறந்தபோது, உடல் வெடிக்குமளவிற்குத் தான் மகிழ்ந்தது அம்மாவின் நினைவில் மோதியது. பிறந்து 3 நாட்கள் கழித்தே கணவர் வந்து பார்த்தார். மின்தூக்கி வந்து நிற்கும் சத்தம் கேட்ட அம்மா, துள்ளிச் சென்று கதவை விரியத் திறந்தாள்.

மேஜையில் விரிந்திருந்த அரதப் பழைய கணினியைப் பார்த்த மகள், “நல்ல வேலை கிடைச்சதும் புது லேப்டாப் வாங்கி அனுப்பறேன்.”

“அது கிடக்கட்டும். சில ஆபரேஷன்ஸ் சொல்லிக் குடு ராஜ். தடுமாற வேண்டியிருக்கு.”

மகளிடமிருந்து மதுவாடை வருகிறதோ? அவள் காலணியைக் கழற்ற அமர்ந்திடும் இந்த சமயத்தில் உச்சி முகர்ந்து முத்தமிட்டால் உண்மையைக் கண்டுபிடித்து விடலாம். இது தன்னுடைய பழைய யுக்தி. அப்படியே கண்டுபிடித்துக் கேட்டு மகள் எடுத்தெறிந்து பேசினால்? அம்மா, நீர்த்துளி விழுந்த ஓவியமாகக் கலைந்தாள்.

“சாப்பிட்டாச்சா?”

“சாப்டுட்டு வருவேன்னு அப்பவே சொன்னனே.”

அம்மாவின் கண்ணுக்குக் கீழான கருவளையத்தின் அளவும் அடர்வும் குறைந்திருப்பது குழல் விளக்கு வெளிச்சத்தில் மகளுக்குப் புலப்பட்டது. 

“ஹால்லருந்த அப்பா ஃபோட்டோ எங்க?” துப்பட்டாவை நாற்காலியில் போட்டபடி கேட்ட மகளின் அதிகாரத் தோரணை, அம்மாவைப் பதம் பார்த்தது. 

“சாமி அலமாரீல“, இதனைக் கூறுகையில் தனக்கேற்பட்ட குற்றவுணர்விற்காக அம்மா வெட்கினாள். 

“எதுக்கு அங்க போச்சு?” மகளுடைய குரல் முன்னிலும் உயர, அம்மா சமையலறைக்குள் பதுங்கினாள். 

“இங்கருந்தா, போறப்பயும் வர்றப்பயும் அவர் என்னப் பார்க்கிற மாதிரியே இருக்கு. ஃபோட்டோ கூட குடும்பம் நடத்துறது வேதனை,”திக்கித் திணறி உணர்வுகளை இறைத்துவிட்டார்.  

தன்னுடைய அறைக்குள் சென்று கதவை அறைந்த மகள், விளிம்பில் நின்ற கண்ணீரை வடித்து தீர்த்தாள். தான் கூடுதலாக மது அருந்தியிருக்க வேண்டும். 

தோழியின் திருமணம் முடிந்ததும் மகள், பல்லைத் தூய்மைப் படுத்திக்கொள்ள வேண்டுமென்றாள். அவளது பல் மருத்துவரிடம் மன்றாடி அதற்கான நேரத்தை வாங்கினாள் அம்மா. மறுநாள் நாராயணா நேத்ராலயாவில் கண் பரிசோதனை. மகள் தேர்ந்தெடுத்த கண்ணாடியின் விலை, அம்மாவை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. டாலரில் புழங்கிடும் மகளுக்குத் தன்னாலான ஒரே பரிசு. சேமிப்பைத் துடைத்தெடுத்து தன் கையால் பெருந்தொகையைக் கொடுக்கையில் பெருமிதமாக இருந்தது. பிறகு மகளை வற்புறுத்தி மணிப்பால் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று மைக்ரேனுக்கு ஸ்கேன் செய்வித்து அதற்கான மாத்திரையை வாங்கித் தந்தாள். அப்படியே அங்கிருந்த மகப்பேறு மருத்துவரையும் விட்டுவைக்காது, மாதவிடாய் வலிக்கான நிவாரணியையும் எழுதி வாங்கினாள்.

தூசி படிந்திருந்த அப்பாவின் சுழல் நாற்காலியின் தண்மை உரைக்குமாறு அழுந்தியமர்ந்த மகள், முன்னாலிருந்த இரும்பு மேஜையின் இழுப்பறையை சாவி போட்டுத் திறந்தாள். துருவில் இறுகிப் போயிருந்த இழுப்பறைகள், மகளுக்கு சலுகை தந்து திறந்தன. முதல் இழுப்பறையில் கண்ணாடி, பேனா, பற்று அட்டைகள் மற்றும் பர்ஸ். அவற்றுக்கடியில் அமெரிக்க விசாவிற்கான விண்ணப்பம். பட்டமளிப்பு விழாவில் தான் அனாதையாக நின்ற காட்சி, துயரத்தை அழைத்து வந்தது. இரண்டாவது இழுப்பறையை இழுத்தாள். அதில் இவள் கொடுத்த பிறந்தநாள் வாழ்த்தட்டைகள்; க்ரையானில் வரைந்தது முதல் ஆர்ச்சீஸ் வரை கால வரிசைப்படி அடுக்கி வைக்கப் பட்டிருந்தன. அவற்றின் நிறம் அதிகம் மங்கிப் போகாமலிருந்தது. I lost unmatched love forever……..

மகளது அழுகையைக் கண்டுப் பதறியணைத்த அம்மா,”It’s okay da,” இயலாமையில் திரண்ட துளி மகள் தலையில் இறங்கியது.

“Its not okay. I love him”, நின்றிருந்த அம்மாவை விலக்கித் தள்ளினாள்.

“He always wanted your happiness. நீ வருத்தமா இருந்தா அவருக்குப் பிடிக்காது“. 

“ம்ம்..”, திரும்பிக் கண்ணீரை சட்டையின் கையில் துடைத்துக் கொண்டாள். 

“We can’t help da. Be practical“, குரல் தாழ்ந்தது. 

“If I die, can you be practical?”

அமிலத்தின் காட்டம் தாளாத அம்மா, “நான் போய் அவர் இருந்திருக்கணும். அப்ப ஹாப்பியா இருந்திருப்பல்ல?” அரற்றினார்.

“வாய மூடுங்க! எனக்கு ரெண்டுபேரும் வேணும்.”

“ஒருவேள அப்படி நடந்திருந்தா, வேளைக்கொரு ஹோட்டல்ல சாப்பிட்டு ஷூகர் ஏறிக் கோமாவுல முடிஞ்சு -என் பின்னாலயே வந்து சேந்திருப்பாங்க உங்கப்பா“. 

“இப்பகூட அவுங்கள விடமாட்டீங்களா நீங்க?” ஒருவழியாக மகள் சிரித்துவிட்டாள். 

“வேற யார இப்படியெல்லாம் டீஸ் பண்ண முடியும்? நீ கூட கோச்சிப்ப. உங்கப்பா இருந்தப்ப கூட அவர இவ்ளோ நினைச்சதில்லை பாரு. இப்ப என்னடான்னா சும்மா சும்மா நினைப்பில வந்து தொல்லை பண்றார்.” 

மகள் மூன்றாவது இழுப்பறையைத் திறந்தாள். அதில் பெற்றோரின் திருமண அழைப்பிதழ். அடுத்து, கோர்த்த கைகளின் புகைப்படம் தாங்கியதோர் வாழ்த்தட்டை. அட்டைக்குள் 4 வரியில் ஆங்கில மணநாள் வாழ்த்து. எஞ்சியிருந்த இருந்த காலியிடத்தை அம்மாவின் கோர்வையான தமிழ் கையெழுத்து பூர்த்தியாக நிரப்பியிருந்தது. தேதி, தான் பிறந்த வருடத்திற்கானது. பிரசவத்திற்காக சென்ற அம்மா, பிறந்த வீட்டிலிருந்து அனுப்பியிருக்க வேண்டும். தமிழ் படிக்கத் தெரியாத தன்னை அந்நியமாக உணர்ந்தவள், அவற்றை இருந்தவாறே மடித்து வைத்தாள். கோர்த்திருந்த அந்தக் கைகள் கசகசப்பு தாளாது விடுபட்டுப் போயின போலும். தனக்கு விபரமறிந்து, அவர்கள் திருமண நாளைக் கொண்டாடியதில்லை. 

“இங்க டேபிள்ல இருந்த ஸீடி ப்ளேயர் என்னவாச்சி?”

“அது பாடலன்னு டிஸ்கார்ட் பண்ணிட்டேன்.“

அது ஒலித்து அவள் கேட்டதில்லை. 

“அப்பா வாங்குனது. ஞாபகமா வச்சிருக்கலாமில்ல?”

“சின்ன சாமான் எல்லாமே அப்பா வாங்குனது தான? ஃபர்னீச்சர்ஸ் எல்லாம் நா சீதனமா கொண்டுவந்தது; சாகற வரைக்கும் அது கூடவே இருந்து சாகணும்,” அம்மாவின் குரலில் பழைய எகத்தாளம். தான் தேடிவந்த கதகதப்பு இங்கு கிடைக்கப் போவதில்லை என்பது மகளுக்குப் புரிந்தது. இல்லத்தின் தகுதியை இந்த வீடு இழந்துவிட்டது. 

“The weight of memories is pressing me down“, கோழி சூப்பைக் கொண்டுவந்த அம்மா ஆழத்திலிருந்து கூறினாள். நெஞ்சப் பாரத்தைத் தாண்டிவந்த சிரமம், அவற்றிலிருந்தது. 

தளராடையோடு உலா வரும் அம்மா, புடவை கசங்காமல் நடமாடுவது அந்நியமாகத் தெரிந்தது. இவள் கேலி செய்யும் தொப்பை கூட சற்று உள்ளொடுங்கித் தெரிந்தது. அம்மா நடைப்பயிற்சி செல்கிறாராம்.  

“ஐய்யே….. fat !” சூப்பில் ஏடு கட்டியிருந்த கொழுப்பைக் கண்ணுற்ற மகள், புருவத்தை உயர்த்தினாள். 

“Fat இல்லாம என்னதான் வேணும்னு சொல்லேன்; செஞ்சு தரேன்.”

“ஒண்ணும் வேணாம். சாப்புடுறதுக்காகத் தான் இவ்வளவு தூரம் வந்தேனா? அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன்“, மகள் சூப்பை உறிஞ்ச அம்மாவிடம் வாட்டம் கண்டது. மகளுக்கு திருப்தி. 

“நைஸ் ஸாரீ“, அம்மாவை உற்சாகப் படுத்தப் பாராட்டினாள். 

“பொய் சொல்லாத. பெய்ஜ் எனக்கு எடுக்கவேயில்ல. எல்லாம் உங்கப்பா செலக்ஷன். அப்பப்ப கடைக்குப் போக வேண்டியிருக்கேன்னு கட்டியிருக்கேன்”, அம்மாவின் வழமையான அதிருப்தி. ஆனால் அப்பா “நல்லாருக்கே “ என்றதும் கன்னம் சிவக்க வெட்கப் படுவார். கடாயை அடுப்பில் வைத்துவிட்டு அப்பாவைக் கடைக்கு அனுப்புவார். “இதுகூட ஞாபகமில்லையா?” என அப்பா எய்திடும் அம்பு, “எத்தனை வருஷமா இதையே ஞாபகம் வச்சிருக்க முடியும்?”என்கிற கேடயத்தில் பட்டு வீழும். அப்பா, அம்மாவை விட 9 வயது மூத்தவராதலால் சில சமயம் பொருட்படுத்தாது போய்விடுவார்.  

புறப்படும் நாள் நெருங்கி வர, மகளுக்கு அம்மா மீது வாஞ்சை பெருகியது. பாவம் ஓடியோடி இளநீர் வாங்கிவந்து, ஜூஸ் பிழிந்து, சாலட் செய்து கரிசனமாக கவனித்துக் கொள்கிறார். அந்த இளக்கத்தில் தன்னோடு தங்கியிருக்கும் அமெரிக்க நண்பனைப் பற்றிய விவரங்களை அம்மாவிடம் கூறி, அலைபேசியிலிருக்கும் அவனது புகைப்படத்தைக் காண்பித்தாள். 

“ம்…. பையன் பீங்கான் பொம்மை மாதிரி அழகாயிருக்கான்,”அம்மா அதிர்ச்சியை மறைத்தபடி சொன்னாள். அவளது அப்பா இருந்திருந்தால் இந்த முடிவை எடுத்திருப்பாளா? ஒருவேளை எடுத்திருந்தாலும் இவ்வளவு சகஜமாக அவரிடம் தெரிவிப்பாளா? செம்பருத்தி குஞ்சம்மாளைப் போல ஏனோ, தன்னிருப்பு யாரையுமே பாதிப்பதில்லை. 

தனக்கு அமெரிக்க இணை இருப்பது அத்தனை சாதாரண விஷயமா என்ன ? சும்மா நடிக்கிறார் அம்மா. அவருக்கு எல்லாமே சாதாரணம் தான். அப்பாவுக்குத் தான் ஆர்வமெல்லாம். தோற்றதாய் உணர்ந்தவளுக்குக் கோபம் வந்தது. 

“அப்பறம் எதுக்கு டல்லா இருக்கீங்க ?”அம்மாவின் ஆட்சேபணையை அவள் கோரினாள். 

“இவங்கள்லாம் அலுத்துப்போனா விட்டுட்டுப் போயிடுவாங்க“

“That’s better; நீங்களும் டாடியும் மாதிரி fight பண்ணிகிட்டே ஒண்ணா இருக்குறதை விட.”

“That’s our personal. அதை விமர்சிக்கிற உரிமை உனக்கில்லை !” 

இவளைப் பீற்றிக் கொண்டேயிருக்கத் தானொன்றும் இவளுடைய தந்தையைப்போல முட்டாளில்லை. அதற்குமேல் அந்த அமெரிக்கனைப் பற்றியோ அவனுடனான உறவைப் பற்றியோ விசாரிப்பதற்கான சூழல் வாய்க்கவில்லை. தகப்பனில்லாத அந்தப் பிள்ளைக்குத் தன்னைவிட்டால் வேறு யார் இருக்கிறார்கள்? சின்னப் பெண்ணிடம் கடுமை காட்டிய தன்னைக் கடிந்துகொண்டு சமாதானப்படுத்த முனைந்தாள். 

“எங்களுதெல்லாம் மனந்திறந்த விவாதங்கள். Tv டிஸ்கஷன்ல கத்தறதில்லையா? உள்ளே இருக்குற grudge எல்லாம் வெளீல வந்துட்டா we will become free”, வலிந்த சிரிப்போடு சமாளித்தாள். 

பின்னர் பால்கனிக்குப் போய் வாகாக அமர்ந்து, தையல் பிரிந்த, பட்டன் கழன்ற மகளின் உடைகளை தைத்துக் கொண்டிருந்தாள். கொட்டிக் கிடந்த சூரியவொளி, அம்மாவை சகஜ நிலைக்குத் திருப்பியது. 

“இதையெல்லாம் கத்துக்கோன்னு தலைபாடா அடிச்சிகிட்டேன். இப்ப பாரு-எல்லாத்தையும் இவ்வளவு தூரத்துக்கு அள்ளிகிட்டு வர வேண்டியிருக்கு.”

“உங்களால முடியலைன்னா விட்டுடுங்க.”

“அப்படி யார் சொன்னது? எல்லாரும் செல்ஃப் ரிலையண்ட்டா இருக்கணும்னு அப்பல்லாம் ஸ்கூல்ல அடிப்படை தையல் கத்துக் குடுப்பாங்க. அப்படித்தான் நா கத்துகிட்டேன். இப்பல்லாம் பணம் சம்பாதிக்க மட்டுந்தான் கத்துக் குடுக்குறாங்க. “ 

“உபதேசம் போதும்“

இதுபோன்ற வேலைகளை செய்யும்போது அம்மாவுக்கு சினிமாவில் திடாரென நொடித்துப்போய் ஒட்டுப் போட்ட ரவிக்கை உடுத்திடும் கதாநாயகி நினைவுக்கு வருவாள். அதுவரை அணிந்திருந்த புதிய நல்லாடைகளையெல்லாம் என்ன செய்வாள் அந்த நாயகி? 

மகள் புறப்படும் நாள் தாவி வந்துவிட்டது. 

“பாஸ்போர்ட் டிக்கெட் எடுத்துட்டியா ?”

“ம்.. டிக்கெட் ஃபோன்ல இருக்கு. அப்பா இருந்திருந்தா ரெண்டுமூணு print எடுத்துத் தந்திருப்பாங்க.”

“ஆமாம். நான் -இப்ப ஓடிப்போய் எடுத்துட்டு வந்துடவா?’’

“பரவாயில்லை; அதுக்கெல்லாம் டைமில்ல.”

“பாப்பா, டாக்ஸியை வரவழிக்கவா?”

“இன்னும் புக் பண்ணலியா? அப்பா ஏற்கெனவே fix பண்ணியிருப்பாங்க.”

அம்மாவுக்கு இந்த விசா, boarding, check-in.. அனைத்துமே மலைப்பாக இருந்தது. அப்பா, அம்மா – இரண்டு பாத்திரங்களையும் மோனோ ஆக்ட் செய்ய இயலாது விழி பிதுங்கியது. 

முதன்முதலாக இதே விமான நிலையத்திற்குச் செல்கையில் கண்ணும் மூக்கும் சிவக்கும்படி டிஷ்யூவால் ஈரத்தைத் துடைத்துக்கொண்டே வந்த அம்மா, அப்பா கவனித்ததும் இயல்பானார். அவர்கள் ஒருவருக்கொருவர் தங்கள் பலவீனத்தைக் காட்டிக்கொள்ள மாட்டார்கள். இப்போது பின்னிருக்கையில் கல்லாய் உட்காரந்திருப்பது வேறு பெண்மணி. மகள் டாக்சியின் முன்பக்கம் ஏறிக்கொண்டாள். 

“பின்னால உட்கார்ந்தா பேசிகிட்டே போகலாமில்ல?”

“இத்தனை நாள் பேசாதத இப்பதான் பேசப் போறீங்களாக்கும்? ஒண்ணரை வருஷமா நான் 5 இடம் மாறியிருக்கேன். நான் என்ன செஞ்சேன்; எப்படி சமாளிச்சேன் -எதையாவது கேட்டீங்களா நீங்க? You just care about my health. நான் உயிரோட இருந்தா போதும். எப்படி இருந்தாலும் பரவாயில்லை.”

கொரில்லா தாக்குதலில் அம்மாவின் நா உலர்ந்து போனது. 

“எனக்கு அங்கே இருக்கற சிச்சுவேஷன் புரியாதுடா.”

“உங்களுக்குத் தோணல. உங்களுக்கு வேற priorities இருக்கலாம்.”

“சீச்சீ ! உன்னைவிட வேறென்ன priority எனக்கு?”

“எனக்கென்ன தெரியும்?”

அம்மாவின் கடைசித் துருப்புச் சீட்டும் கை நழுவிப் போய்விட்டது. இனி இழப்பதற்கு ஏதுமில்லை. வலியோடு ஒருவிதமான நிம்மதியும் சேர்ந்து கவ்வியது. 

“I have become a loner now”, அம்மா பிசிறடித்தாள். 

விமான நிலையத்தில் பக்கத்தில் அமர்ந்திருந்த மகள், இலக்கின்றி தூர வெறித்துக் கொண்டிருந்தாள். 

அவளின் கை பிடித்து, “நாளெல்லாம் வெளீல சுத்திட்டு ராத்திரி தான் தனியா கிடைப்ப. அப்ப வந்து பேசி உன் தூக்கத்தக் கெடுக்க மனசில்லடா..”

“ராத்திரி வந்து பாத்தா, உங்க ரூம்ல மொபைல உருட்டிட்டு இருப்பீங்க.” 

இவள் இன்னும் குழந்தை தான்; என்னுடைய குழந்தை தான்! மகளை ஆரத் தழுவிக்கொள்ளும் பேரவாவை சிரமப்பட்டு கட்டுப் படுத்திக் கொண்டாள். தான் பாசாங்கு செய்வதாக மகள் எண்ணக் கூடும். இந்தக் குழந்தையின் தலையை மடியில் வைத்துக் கோத எப்படித் தவறினேன்? அம்மா, மடித்துப்போன ஏடுகளாக உதிர்ந்தாள். 

“நீ மாறிப் போயிட்டடா. உனக்கு என்ன வேணும்னு தேரீல கண்ணு”, உடைந்தாள்.

“Don’t bluff. I’ll go”, விமான அழைப்பு வருமுன்னே கிளம்பி உள்ளே போய்விட்டாள். தன்னுருவம் மறையப் போகையில் கண்ணாடிச் சுவர் ஊடாக திரும்பிப் பார்த்த மகள், கையாட்டவில்லை. வெளியே நின்றிருந்த அம்மா மட்டும் கையை அரைவட்டமாக அசைத்து அசைத்துக் காண்பித்தாள். அதில் முன்பிருக்கும் நளினம் காணாமல் போயிருந்தது. 

திரும்பி வந்த அம்மாவுக்கு, அங்கிருந்த கடைகளில் எதை வாங்கிக் குடிப்பதென்று தெரிவுசெய்ய இயலவில்லை. இதுவரை வெளியில் போனால்-தன்னைக் கேட்காது ஏதோவொரு பானம் கைக்குக் கிடைத்துவிடும். அவற்றிலுள்ள குறையைக் கூறியபடியே அருந்தும்போது சுவை கூடும். தான் இதுவரை அருந்திடாத டர்கிஷ் காப்பியை சிறிய கோப்பையில் வாங்கிக்கொண்டு ஆட்களில்லாத மேசைக்கு முன்பிருந்த இருக்கையில் வந்தமர்ந்தாள். வடிவான கோப்பையில் குட்டிக்குட்டி மலர்களும் இலைகளும் பளிச்சிட்டன. கருத்திருந்த காப்பி கசந்தது. இதனால்தான் கணவர் மறுத்திருக்கிறார். ஆனால் இந்தக் கோப்பையின் அழகே போதும். 

தலை, சாவி தீர்ந்த பொம்மையாய் அலைபேசியை நோக்கியவண்ணம் அசைவின்றிக் குனிந்திருந்தது. ‘Burnt Sugar’இன் தாராவைப் போலத் தான் ‘cold mother’ ஆகிவிட்டோமா? வாசித்து வாசித்துத் தனக்குள் பெருகிடும் தர்க்கமானது உணர்வுகளைக் கொன்றுவிட்டதா? இல்லை. இந்தக்கணம் அனுபவிக்கும் துடிப்பும் வலியும் சத்தியம். கசப்புக் காப்பியைப் பெறுமிடறாக விழுங்கினாள். சலனமற்ற தொடு திரையிலிருந்து அவள் கண்ணெடுக்கவில்லை. தன்னைச் சுற்றி இயங்கிக் கொண்டிருந்த சாவி தீராத பொம்மைகளைப் பற்றிய பிரக்ஞை அவளிடமில்லை. 

பாதுகாப்புச் சோதனை முடித்து விமானத்திற்காகக் காத்திருந்த மகளை, உடைந்த பொம்மையைப் போன்ற அம்மாவின் கையசைப்பு தொந்தரவு செய்தது. 

‘Security check over. Where are you?’ குறுஞ்செய்தி அனுப்பினாள். 

‘Sitting at the same gate.‘

இந்த அகாலத்தில் அம்மா விசாரித்து விசாரித்து வீடு போய்ச் சேரவேண்டும். விமான நிலையப் பேருந்து அவர்களது பகுதிக்குச் செல்லாது. எனவே டாக்ஸி தான் கதி. நண்பர்கள் யாராவதை, கூட வரச் சொல்லியிருக்கலாம். விமானத்தில் ஏறுவதற்கான நடை பாலத்தில் நடக்கும்போது அம்மாவை விட்டு விலகி விலகிச் சென்றிடும் தொலைவு உரைத்தது. விமானத்தில் ஏறியமர்ந்ததும் 

‘Boarded the flight. Feeling bad that you don’t understand me. I’m still the same only. Just better’, நீள செய்தியனுப்பினாள்.

‘1-2 years of loneliness might have erased tenderness from me.’

வீட்டில் அப்பாவின் நினைவுகள், மறைந்த வெளிச்சமாக மனதிற்குள் பெருகிப்பெருகிக் கண்ணைக் கூசச் செய்து நடைமுறையை மறைத்துவிட்டது. தன்னுடைய முதிர்ச்சியின்மைக்காகக் கூசியவள்,

‘Am proud that you have become stronger’, அம்மாவைத் தேற்றுமுகமாக அனுப்பினாள். 

‘sorry da..’

‘Chi! why sorry? Flight is taking off. Bye’

‘bye. tc kannappa’

பரீட்சை முடித்த பள்ளிச் சிறுமியாக எழுந்து வெளிப்புறமாக வந்த அம்மா, அண்ணாந்து பார்த்தாள். பஞ்சு பஞ்சாய் சிதறிக் கிடந்த மேகங்களுக்கிடையில் ஒளியிழந்த விழிகள், தொலைந்துபோன எதையெதையோ தேடித் தவித்தன. கடிபட்டுத் தப்பித்த மிருகத்தின் மருட்சி கலந்த வேதனை அந்தக் கண்களில் படர்ந்திருந்தது. ஒருகை கைப்பையையும் மறுகை அதன் வாரையும் பற்றியிருந்தன. இரைச்சலிட்ட விமானம் மேலே மேலே உயர்ந்து, ஆகாயத்தில் கரைந்திடும் புள்ளிக்குள் அவளது மொத்த பந்தமும் இருக்கின்றது. கன்னத்து ஈரத்தில் காற்று பட்டு சிவீரிட, ஜீன்ஸை ஊடுருவிக் குளிர் நடுக்கியது. 

மகளின் இந்தப் பாசம்-தனக்கானதல்ல; முளையடித்து கட்டப்பட்ட தன் இடத்திற்கானது. அடித்த புயலில், மூடியிருந்த கூரையும் சுவரும் காணாமல் போய்விட்டன. ஆயினும், தான் அங்கேயே தன்னந்தனியாக நிற்கவேண்டும்; வெய்யிலிலும் மழையிலும் பனியிலும். அவற்றிலிருந்து சற்றே ஒதுங்கி நிற்பதற்காகத் தான் எடுக்கும் குறுகிய அடி, சிறுமியை சஞ்சலப் படுத்துகிறது. அவள் மட்டும் அமெரிக்கக் கலாச்சாரத்தைப் பின்பற்றுகிறாள். மகளது இந்த இரட்டை நிலையானது, வியப்பையும் ஏமாற்றத்தையும் அளித்தது. 

சிந்தனையின் அடுக்குகளில் சிக்கியபடி மெல்ல நடந்தாள். 

‘க்ளக்‘

‘Daughter left? Are you okay?’ நண்பனிடமிருந்து சம்பிரதாய விசாரிப்பு கைபேசியில். 

‘she left. am depressed’, விரலை மீறி வழுக்கிச் சென்றது பதில். 

அனுப்பிய செய்தியை வேண்டாமென்று அழிப்பதற்குள் ‘Come home‘ வந்து விழுந்தது. 

வாட்ஸப்பில் மேலே தெரிந்த அவனது பெயரை ஆட்காட்டி விரலால் வருடினாள். தமிழ் பழகாத அவனின் உச்சரிப்பில் தன்னுடைய பெயர், தனித்துவமான இனிமையுடன் ஒலிக்கும். அந்தப் பெயருக்கு அவன் புத்துயிர் கொடுத்திருக்கிறான். 

‘coming’ என்கிற ஆறு எழுத்துக்களைத் நிறுத்தி நிறுத்தி டைப் செய்வதற்கு 60 வினாடிகள் ஆயின. 

பிறகு டாக்ஸி நிறுத்தத்தை விசாரித்து, அதன் திசையில் ஓட்டமும் நடையுமாகக் கைவீசி விரைந்தாள். 

***

பா.கண்மணி – பெங்களூருவில் வசிக்கிறார். இடபம், வீனஸ் ஆகிய இரண்டு நாவல்களை எழுதியுள்ளார். இடபம் நாவலுக்காக கனடா இலக்கியத் தோட்டப் புனைவு விருது பெற்றவர். இணைய இதழ்களிலும் சிறுபத்திரிக்கைகளிலும் தொடர்ச்சியாக சிறுகதைகள் எழுதி வருகிறார். மின்னஞ்சல்: bkanmani16@gmail.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here