Monday, February 16, 2026
Homeஇதழ்கள்2026 இதழ்கள்காதலெனும் குன்றா வளம்

காதலெனும் குன்றா வளம்

நிர்மல்

ண்மையில்… காதல் குறித்து நமக்கு என்னதான் தெரியும்?”

அந்தக் கேள்வியின் நுனியிலிருந்துதான் இந்தப் பயணம் தொடங்குகிறது..

காதலென்பது…யாதெனில்…..

“காதல்.. மனிதர்கள் உருவாக்கிய ஒரு சமூகக் கட்டுமானம்” என்ற கருத்து உண்டு. சமூகம் சொல்லிக் கொடுத்தது, திரைப்படங்கள் அலங்கரித்தது, பாடல்கள் நம்முள் ஊற்றியது, இலக்கியங்கள் வார்த்தைகளால் வார்த்தது, கதைகள் கற்பனையால் ஜோடனை செய்தது—இவை எல்லாம் சேர்ந்தே காதல் என்கிற புரிதல் உருவானது போலத் தோன்றுகிறது. ஆனால் கவனித்துப் பார்த்தால், இவை எதுவும் காதலை உருவாக்கவில்லை; அதை விளக்க முயன்ற முயற்சிகள்தான் இவை எல்லாம். திரைப்படங்கள் காதலைப் பிறப்பிக்கவில்லை, ஏற்கெனவே இருந்த ஒன்றை காட்சியாக மாற்றின. பாடல்கள் மனத்தில் காதலை ஊற்றவில்லை, மனதில் ஓடியதை ஒலியாக்கின. இலக்கியங்கள் காதலை கண்டுபிடிக்கவில்லை, அதை வார்த்தைகளுக்குள் பிடிக்க முயன்றன. கதைகள் காதலை ஜோடனை செய்யவில்லை, அதைப் புரிந்து கொள்ள மனிதன் எடுத்துக் கொண்ட பாதைகள்தான் அவை. ஒரு விஷயம் சொல்லப்படுவதால் அது உருவாகாது; அலங்கரிக்கப்படுவதால் அது பிறக்காது. மழையைப் பற்றி கவிதை எழுதலாம், ஆனால் கவிதையால் மழை பெய்யாது. அதுபோலவே, சமூகம் காதலை உருவாக்கவில்லை; காதலைப் பற்றி பேசுவதற்கான மொழிகளை மட்டும் உருவாக்கியுள்ளது.

“காதல் என்பது வெறும் ஹார்மோன்களின் ரசவாதம், ரசாயன மாற்றங்களின் லீலைகள், மூளைக்குள் நடக்கும் விசித்திர கண்ணாபூச்சி விளையாட்டு” என்றொரு விளக்கம் உண்டு. டோபமைன், ஆக்சிடோசின், செரோட்டோனின் என்று சில பெயர்களை உச்சரித்தவுடன், காதல் முழுவதும் அங்கேயே அடங்கிவிடும் போலத் தோன்றுகிறது. ஆனால் அதே ஹார்மோன்கள் பயம், கோபம், மகிழ்ச்சி, அடிமை, உற்சாகம் போன்ற பல அனுபவங்களிலும் சுரக்கின்றன. ரசாயன மாற்றங்கள் இல்லாமல் எந்த மனித அனுபவமும் சாத்தியமில்லை என்பதும் உண்மை. அதனால் ரசாயன மாற்றங்களே அந்த அனுபவம் ஆகிவிடுவதில்லை. ரசாயனம் காதலுக்கே உரியது அல்ல. அது வாழ்க்கை முழுவதும் உடன் வரும் ஒரு அடித்தளம் மட்டுமே.

மூளைக்குள் என்ன நடக்கிறது என்பதை விவரிக்க முடியும் என்பதால், காதலை முழுமையாக விளக்கிவிட்டதாகக் கூற முடியாது. ஒரு இசையை கேட்டபோது மூளையில் எந்த நரம்பு எரிகிறது என்பதைச் சொல்லலாம்; ஆனால் அந்த இசை ஏன் ஒருவரை அழ வைக்கிறது, இன்னொருவரை அமைதியாக்குகிறது என்பதற்கு அது போதாது. அதுபோலவே, மூளையில் நடக்கும் செயல்களை வரைபடமாகக் காட்டுவதால், காதலின் ஆழத்திற்கும் அதன் மாற்றுத்திறனுக்கும் முழுமையான விளக்கம் கிடைத்துவிடாது.

“காதல் இன்பம் துய்க்கும் ஒரு வழிமுறை” என்றொரு புரிதலும் உண்டு. காதலை சந்தோஷம், சிலிர்ப்பு, நிறைவு என்று மட்டும் பார்க்கும் பார்வை அது. ஆனால் காதல் அப்படியொரு வழிமுறை மட்டுமே என்றிருந்தால், அதில் இவ்வளவு வலி, பிரிவு, தவிப்பு, இழப்பு ஏன் இடம் பெற்றிருக்கும்? வள்ளுவரின் காமத்துப்பால் அதிகாரங்களில் ஒலிப்பது இன்பம் மட்டுமா? வள்ளுவரின் காமத்துப்பால் அதிகாரத்தின் குறள்கள் முழுக்கக் காதலின் வலிகளே ஒலிக்கின்றன. ரண வேதனைகள், கண்ணீர், கவலை, பிரிவாற்றாமையே மேலோங்குகின்றன. அதன் அதிகாரங்களின் தலைப்புகளே இதற்கு சாட்சி. பிரிவாற்றாமை (பிரிவைத் தாங்க முடியாமை), படர்மெலிந்திரங்கல் (காதல் நோயால் மெலிந்து வாடுதல்), கண்விதுப்பழிதல் (கண்கள் வாடுதல்), பசப்புறுபருவரல் (நிறம் மாறுதல்), தனிப்படர்மிகுதி (தனிமையில் வருந்துதல்), நினைந்தவர்புலம்பல் (நினைத்து வருந்துதல்), கனவுநிலையுரைத்தல் (கனவு கண்டு வருந்துதல்), பொழுதுகண்டிரங்கல் (பிரிவுப் பொழுதில் வருந்துதல்), உறுப்புநலனழிதல் (உடல் உறுப்புகள் வாடுதல்), நெஞ்சொடுகிளத்தல் (நெஞ்சோடு பேசுதல்), நிறையழிதல் (மனம் கலங்குதல்), அவர்வயின்விதும்பல் (அவரைப் பிரிந்து வருந்துதல்), குறிப்பறிவுறுத்தல் (அவருக்குத் தன் நிலையை உணர்த்துதல்), புணர்ச்சி விதும்பல் (மீண்டும் இணைதலை விரும்புதல்), நெஞ்சொடுபுலத்தல் (நெஞ்சோடு கோபித்தல்) இன்பம் காதலில் ஒரு அலைபோல் வந்து செல்லலாம்; ஆனால் காதலின் மையம் அது அல்ல. இன்பம் தேடும் கருவியாகக் காதலைப் பார்க்கும்போது, காதல் மனிதனை எப்படிச் சிதைக்கும், மாற்றும், ஆழமாக உலுக்கும் என்பதற்கு விளக்கம் கிடைப்பதில்லை. அதனால் காதல், இன்பம் துய்க்கும் ஒரு வழிமுறை அல்ல.

“Love is blind” என்று சொல்வது முதலில் அழகாகவும் கவிதை போலவும் தோன்றலாம். ஆனால் அந்தச் சொற்றொடர், பார்வையின்மை என்றால் அறிவின்மை என்ற தவறான புரிதலின் அடிப்படையில் உருவானது. பார்வையில்லாத மாற்றுத்திறனாளிகள் பலர், அறிவுத்திறனிலும் உணர்வுத்திறனிலும் எவ்வளவு ஆழமாகவும் கூர்மையாகவும் இருப்பதை நாம் தினம் தினம் அனுபவத்தில் காண்கிறோம். பார்வை அறிவின் ஒரே வாயிலல்ல, அது பல வழிகளில் ஒன்றே. இந்தச் சொற்றொடர், உடல் பார்வையை மட்டுமே அறிவின் மையமாகக் கருதும் ஒரு குறுகிய எண்ணத்தையும், அதே நேரத்தில் அழகு, தோற்றம் போன்ற வெளிப்படையான அம்சங்களைத் தாண்டிய உறவைச் சுட்டிக்காட்டும் முயற்சியையும் ஒரே நேரத்தில் தாங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால், காதலுக்கு கண் உண்டு.. அது பார்க்கிறது—அழகை அல்ல, தோற்றத்தை அல்ல, உடலை அல்ல, மாற்றங்களை, மௌனங்களை, சின்னச் சலனங்களை. காதல் தீர்ப்பை ஒத்திப் போடலாம். சில குறைகளைக் கணக்கில் எடுக்காமல் இருக்கலாம். ஆனால் அது பார்ப்பதை நிறுத்துவதில்லை. மாறாக, காதல் வேறு விதமாகப் பார்க்க ஆரம்பிக்கிறது. அந்த “வேறு விதமானப் பார்வை”யை பார்வையற்றதாக சித்தரிப்பது தகாதலின் கவனத்தையும் அறிவையும் தவறாகப் பெயரிடுவது போல.

“Love is God” என்றார்கள்—விளக்கம் தர வேண்டிய அவசியமே இல்லாத ஒன்று என்ற பொருளில். ஆனால் நம்புகிறவர்களிடம் மட்டுமே வேலை செய்யும் ஒன்றுதான் இறை. நம்பவில்லை என்றால், அதற்கு அங்கே இடமில்லை. காதல் அப்படியல்ல. காதல் என்றால் என்ன என்று தெரியாதவர்களிடமும் அது பெருகுகிறது, பிரவாகமாகிறது. நம்பிக்கை இல்லாத இடத்திலும், விளக்கம் இல்லாத மனங்களிலும் அது வேலை செய்கிறது. அப்படியென்றால் காதல் இறை அல்ல.

“காதல் அழிக்கும்” என்றார்கள். காதலைப் பிடித்துக்கொண்டு மீண்டு வந்தவர்களை காணாதவர்களின் பிதற்றலே அது. காதல் மனிதர்களை மீட்டிருக்கிறது, வீழ்ச்சியிலிருந்து எழ வைத்திருக்கிறது, வாழ்க்கையை மறுபடியும் தொடங்கச் செய்திருக்கிறது. “காதலுக்கு மரியாதை வேண்டும்” என்ற கூற்று, காதலைப் புரிந்து கொண்டதன் விளைவு அல்ல. அதைப் புனிதமும் அதிகாரமும் கொண்டு பார்க்கப் பழகிய சமூகப் பழக்கத்தின் விளைவு மட்டுமே. அதன் தொடர்ச்சியாகத்தான் “காதல் சாத்வீகமானது” என்றார்கள். ஆனால் காதலால்தான் பல வன்முறைகள் அரங்கேறுகின்றன என்ற இன்னொரு பக்கம், அந்தச் சாத்விகக் கற்பனையை உடனே கரைத்துவிடுகிறது.

ஒன்றாய் வாழ, இனப்பெருக்கம் செய்ய, துணை ஒன்றைத் தேட—இவையே காதலுக்கான காரணங்கள் என்றார்கள். ஆனால் காதல் இல்லாமலேயே இனப்பெருக்கம் நடந்துகொண்டு இருக்கிறது என்பதே எளிய உண்மை. விந்தணுவும் கருமுட்டையும் சேர்ந்தால் உயிர் தொடங்கிவிடுகிறது. அதற்குக் காதல் கட்டாயமில்லை. காதலோடு கலவை நிகழும்போது அது பேரின்பமாக மாறலாம்—அது மனித அனுபவத்தின் ஆழம் சேர்க்கிறது. ஆனால் காதலின்றியும் கலவை சாத்தியம் என்பதும் மறுக்க முடியாத உண்மை. அப்படியானால், காதல் இனப்பெருக்கத்தின் நிபந்தனை அல்ல.

இந்தப் பட்டியலை இன்னும் நீட்டித்துக்கொண்டேச் செல்ல முடியும். ஒவ்வொரு கருத்துக்கும் அதற்கு நேரெதிரான இன்னொரு கருத்தை, மிக நேர்த்தியாக, ஒன்றுக்கு ஒன்று எதிரே அடுக்க முடியும். அப்படியென்றால் காதல் என்றால் என்ன? எந்த ஒரு பிடிமானத்துக்குள்ளும் முழுவதுமாக அகப்படாமல், அதே நேரத்தில் மனிதன் செய்யும் ஒவ்வொரு செயலிலும் எப்படியோ கலந்து கொண்டே இருக்க வேண்டியதாகக் கருதப்படும் இந்தக் காதல், உண்மையில் என்னவாக இருக்க முடியும்? அதைத் தெளிவாக வரையறுத்து, “இதுதான்” என்று சொல்லிவிட முடியாது என்பதே ஒரே உறுதி.

காதல் என்பது மனித அனுபவம் மட்டுமா என்றால், அதுவுமில்லை. மனிதன் பெயரிட்டதும் விளக்க முயன்றதும்தான் காதல். ஆனால் அதன் செயல் மனிதனைத் தாண்டி இயற்கை முழுவதிலும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. தென் துருவத்தின் கொடியப் பனிக்குளிரில், பென்க்யுன் பறவைகளின் உலகத்தில், ஆண் பறவை தன் இணை இட்ட முட்டையைக் கால்களின்மேல் வைத்து, புயலும் பனியுமாகிய உறையும் குளிரை எதிர்கொண்டு அடைகாக்கிறது. அதே நேரத்தில், பெண் பறவை ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் தொலைவு கடந்து கடலை நோக்கி இரை தேடிச் செல்கிறது — நாட்கள் அல்ல, மாதங்கள்! அங்கே எந்த மொழியும் இல்லை, எந்த வாக்குறுதியும் இல்லை, “நான் உன்னை நேசிக்கிறேன்” என்ற சொற்றொடரும் இல்லை. ஆனால் அந்தக் காத்திருப்பு, அந்தத் தாங்குதல், அந்தத் தியாகம் — இவை அனைத்தும் காதல் அல்ல என்று சொல்வதற்கு வேறு எந்த அளவுகோல் இருக்க முடியும்? இங்கே காதல் உணர்ச்சியாக அல்ல, பொறுப்பாக, தொடர்ச்சியாக, உயிர் காக்கும் செயல் வடிவில் இயங்குகிறது. மனிதன் காதலை புரிந்து கொள்ள முயல்வதற்கு முன்பே, இயற்கை அதை வாழ்ந்து காட்டிக் கொண்டிருக்கிறது.

காதல் என்றால் என்ன என்பது நமக்குத் தெரியவில்லை. குத்துமதிப்பாக—இதுதான், அதுதான், இப்படித்தான், அப்படித்தான் என தத்தக்காபித்தகாவென ஏதோதோ உருவகங்களைச் சேர்த்து, நமக்குள் காதல் இதுதான் என நம்பிக்கையுடன் வாழ்கிறோம். காதலை முழுமையாக அறிந்துவிட்டோம் என்ற இடத்திலிருந்துதான், காதலைக் கொள்கையாக மாற்றுகிறோம். சடங்குகள், தியாகங்கள், எதிர்பார்ப்புகள் என அளவுகோல்களைக் கொண்டு அதை அளக்க முயல்கிறோம். அதன் விளைவுதான் ஏமாற்றமும் எரிச்சலும். ஆனால், “எனக்குக் காதல் என்னவென்று தெரியாது” என்று நாம் ஒப்புக்கொள்ளும் கணத்தில் அதிசயங்கள் நடக்கத் துவங்குகின்றன. காதல் குறித்து நாம் எடுக்கும் முடிவுகள் அறிவிலிருந்து வருவதில்லை, அவை ஊகங்களின் மேல் நிற்கின்றன என்கிற உண்மையை ஏற்றுக் கொள்ள வைக்கிறது. அப்பொழுது, காதல் ஒரு கொள்கையாக இல்லாமல் ஒரு “பொறுப்பாக” மாறுகிறது. கொள்கை என்பது இப்படித்தான் இருக்க வேண்டும் என முன்கூட்டியே நிபந்தனை விதிப்பது. பொறுப்பு என்பது – எதிரில் இருப்பவர் இப்போது எப்படி இருக்கிறார் என்பதைக் கவனிப்பது. நாம் செய்யும் செயல் அவருக்குப் பாதுகாப்பா அல்லது சேதமா என்பதை யோசிப்பதே அந்தப் பொறுப்பு. நம் உணர்வுகளைச் சொல்லும் அதே உரிமை, அவரின் எல்லைகளை மதிப்பதிலும் இருக்கிறது. அங்கே காதல் யாரையும் கட்டளையிடுவதில்லை, எதையும் அளப்பதில்லை.

எதிரில் இருப்பவரின் அக உலகம் நமக்கு முழுமையாகத் தெரியாது என்பதை உணர்ந்து, அவரோடு கவனமாகத் தடம் பதிப்பதே காதலின் நெறிமுறை. எனவே, காதல் என்பது எல்லாம் தெரிந்து செய்யும் செயலல்ல, ஒன்றும் தெரியாத நிலையிலும், மிகுந்த பொறுப்போடும் நெறியோடும் ஒருவரோடு ஒருவர் இணைந்து நடக்கும் பயணம்.

காதல் குறித்து நமக்குச் சொல்லப்பட்ட, காட்டப்பட்ட, வாசிக்கப்பட்டவைகள் அனைத்தும் தவறு அல்லது முழுமையான விளக்கமல்ல என்ற புரிதல், காதலைக் குறித்த முடிவுகளை நிராகரித்து முடிவில்லாத சிந்தனைக்கு இட்டுச் செல்கிறது. அதே நேரத்தில், அதன் தன்மையை—அது மனித வாழ்க்கையில் எப்படிச் செயல்படுகிறது என்பதை—கொஞ்சம் பணிவுடன், அருகிலிருந்து கவனித்துப்

பார்க்கும் சாத்தியத்தையும் உருவாக்குகிறது. புதியதாகக் கற்பனை செய்யும் சுதந்திரத்தையும் தருகிறது.

என்றோ நினைவில் வாழும் நம் நேசத்துக்குரியவரின் முகமும் குரலும், காலங்களைத் தாண்டி திடீரென நம் நினைவுக்குள் எழுகின்றன. கடந்த காலமாக அவை உறங்குவதில்லை. அந்த நினைவுகள் இன்று நமது செயல்களை மாற்றக் கூடியவை. இன்று எதைச் சொல்வது, எதைத் தவிர்ப்பது, எங்கே நிற்க வேண்டும் என்பதையே தீர்மானிக்கின்றன. நாளை சந்திக்கப் போகும் காதலியை நினைத்தாலே உள்ளம் சிலிர்க்கிறது, அதே நேரத்தில் பார்க்க முடியாமலே போய்விடுமோ என்ற எண்ணம் நெஞ்சை அழுத்துகிறது. இன்னும் நிகழாத ஒன்றுக்கான உணர்வு, இன்றையத் தருணத்தை மாற்றுகின்றது. இது காலத்துக்கும் தூரத்துக்கும் அப்பால் செயல்படும் காதலின் விசித்திரமான நடை. காலத்தின் நேர்க்கோட்டை (Linear Time) வளைக்கும் ஆற்றல் இதற்கு உண்டு. அதனால்தான், இறந்துபோன ஒருவரின் நேசம் இன்றும் நம்மைச் செயல்படுத்த வைக்கிறது. இன்னும் பிறக்காத ஒரு உயிருக்காக நாம் தியாகம் செய்யத் துணிகிறோம். இது வெறும் உணர்ச்சி வேகம் அல்ல, இது ஒரு பரிமாணத்திலிருந்து மற்றொரு பரிமாணத்திற்குப் பாயும் ஒரு ஆற்றல் பரிமாற்றம். நம் நேசத்துக்குரியவர் கடந்த காலத்தில் மரணித்திருக்கலாம். அல்லது இதோ, பூமியின் ஏதோ ஒரு பாலைவனத்தில் நமக்காகப் பயணித்துக் கொண்டிருக்கலாம். இல்லை, மிக அருகில் அடுத்த அறையிலேயே கூட அமர்ந்திருக்கலாம். நம்மிடையே இருக்கும் தூரங்களும் காலங்களும் வெவ்வேறாக இருக்கலாம். ஆனால், அவர்கள் அங்கே இருக்கிறார்கள், அவர்கள் என்னை நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்கிற அந்த ஒற்றை உறுதிப்பாடு போதும்—அனைத்துத் தடைகளும் தகர்ந்து போகின்றன. மரணம் என்பது காலத்தால் ஏற்படும் பிரிவு, பாலைவனம் என்பது தூரத்தால் ஏற்படும் பிரிவு. ஆனால், இந்தப் பிரிவுகள் அனைத்தும் உடலுக்கு மட்டுமே. நினைவுகளில் நாம் சேமித்து வைத்திருக்கும் அந்த அழுத்தமான உணர்ச்சிச் சித்திரங்கள், அவர்களை எப்போதும் நம் நிகழ்காலத்தில் வைத்திருக்கின்றன. பௌதீக விதிகள் அவர்களை நம்மிடமிருந்து தள்ளி வைக்கலாம், ஆனால் காதல் எனும் விசை, அந்த விதிகளை வளைத்து அவர்களை நமக்கு நெருக்கமாக்குகிறது.

காதலை ஒரு இயற்கை வளம் போலக் கருதலாம். அது நல்லதும் அல்ல, கெட்டதும் அல்ல. அது வெறுமனே உண்டு, நீரைப் போல, நெருப்பைப் போல. பயன்படுத்தினால் அர்த்தம் பெறுகிறது—இரு உள்ளங்கள் இணைகின்றன. உள்ளங்களைப் புரிந்து கொள்ளச் செய்கிறது. ஒன்றாய் ஏதோ செய்யத் தூண்டுகிறது. பிழையைப் பொறுக்கச் செய்கிறது, மன்னிக்க அழைக்கிறது, கனிவாக்குகிறது. உடலுக்குள் இடம் தருகிறது. காய்த்துக் கனி தர வைக்கிறது. இந்த வளம் அரிதானதல்ல. எப்போதும், எங்கும் கிடைத்துக் கொண்டே இருக்கிறது. ஏதோ பெரும் சக்தியின் முடிவிலா கொடையாகக் கூடக் கற்பனை செய்து கொள்ளலாம். இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும். இந்த வளத்தை சேமிக்க முடியாது, உரிமையாக்கவும் முடியாது. ஆனால் அணுக முடியும், பயன்படுத்த முடியும். காற்றாடி சுழலும் போது நம்மை சுற்றியுள்ள காற்றை உணர்வதைப் போல நம் நேசத்திற்குரியவர்களுக்காகச் செய்யும் ஒவ்வொரு காரியமும் காதலை, தென்றல் போல உணரச் செய்யும். இந்த வளத்தின் உரிமை நம்மிடமில்லை, அதன் பயன்பாட்டின் பொறுப்பு மட்டும் நம்மிடம் இருக்கிறது.

ஒருவருக்காகக் கவலைப்படுவது, அவருக்காகக் காத்திருப்பது, கடந்த காலத்தைத் திரும்பிப் பார்ப்பது, ஒரு செயலுக்குப் பொறுப்பேற்பது—இவை அனைத்துமே காதலின் வெவ்வேறு செயலாக்கங்கள். காதல் அங்கே உணர்வாக மட்டும் நிற்கவில்லை, அது செயலில் இறங்குகிறது, மனிதனை நகர்த்துகிறது. இந்தச் செயல்களினூடாகத்தான் காதல் நேரத்தையும் தூரத்தையும் தாண்டி அர்த்தமுள்ள ஒன்றாக மாறுகிறது. காதல் உணர்வாகத் தொடங்கலாம். ஆனால் உணர்வாக மட்டுமே இருந்தால், அது நினைவாக மங்கிவிடும். செயலில் இறங்கும் போது தான் காதல் காலத்தைக் கடக்கிறது. அதனால் காதல் “என்ன உணர்கிறேன்?” என்ற கேள்வி அல்ல; “இந்த உணர்வால் நான் என்ன செய்கிறேன்?” என்பதே கேள்வி. கரையில் நின்றபடி கடலை விவரிக்க முயலும் ஒருவனின் தவிப்பைப் போலவே,  இவை ஒவ்வொன்றும் காதலின் ஒரு துளியை மட்டும் பிடித்து வைத்துக்கொண்டு, ஒட்டுமொத்தப் பெருங்கடலையும் விளக்கிவிட முடியுமா என்கிற சிறு முயற்சிதான் இது. அதனால் அவசரப்பட்டுக் காதலுக்குப் புது விளக்கம் சொல்லிப் பெயரிட்டு முடிக்கவும் மனம் வரவில்லை—ஏனெனில் காதல் அப்படித்தான் வேலை செய்கிறது. காதலைப் பற்றிப் பேசுவதை விட, அந்தப் பெருங்கடலில் இறங்கி நனைவதே அதன் சாரத்தைப் புரிந்துகொள்ளும் ஒரே வழி. நாம் காதலை வரையறுக்க வேண்டிய அவசியமில்லை, காதலின் வழியே நம் வாழ்க்கையை வரையறுத்துக் கொண்டாலே போதுமானது.

***

நிர்மல் – தூத்துக்குடி மாவட்டம் ‘ஏரல்’ எனும் ஊருக்கு அருகில் உள்ள ‘திருவழுதிவிளை’ எனும் கிராமத்தைச் சேர்ந்தவர். கத்தார்’ தேசத்தில் ‘பெட்ரோ கெமிக்கல்’ துறையில் பணி செய்து வருகிறார். ‘ காணாமல் போன தேசங்கள்’, ‘நிலமும் பொழுதும்’, ‘குன்றாவளம்’ , “சகாக்கள் “ , “ மக்களாகிய நாம்”, “அறியாத உறவுகள்”, “இடுக்கண் படினும்” ஆகிய புத்தகங்களை எழுதியுள்ளார். மின்னஞ்சல்: nirmalcb@gmail.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here