Wednesday, October 29, 2025
Homeஇதழ்கள்2025 இதழ்கள்ஜனநாயகம், சோஷலிஸம் மற்றும் காந்தி

ஜனநாயகம், சோஷலிஸம் மற்றும் காந்தி

க.நா. சுப்ரமணியம்

தமிழில் : அருந்தமிழ் யாழினி

(‘Democracy, Socialism and Gandhi’ என்ற தலைப்பில் ‘Gandhi Marg’ (ஜூலை 1973) இதழ் வெளியிட்ட விவாதத்தில் க.நா. சுப்ரமண்யம் உள்பட 18 பேர் பங்குபெற்றனர். அந்த விவாதத்தில் க.நா.சு. முன்வைத்த வாதத்தின் மொழிபெயர்ப்பு.)

னநாயகமும் சோசலிசமும் பொதுவாகப் புரிந்து கொண்டிருப்பதைப்போன்று  சரியாக வரையறுக்கப்படவில்லை என்றாலும் அவை எதிரெதிரான சித்தாந்தங்கள். ஒரு தனிநபரின் வேறுபட்ட, தனித்துவமான, சுதந்திரமான மற்றும் இணக்கமற்ற தேவையை ஜனநாயகம் நிறைவேற்றுகிறது. சோசலிசம் என்பது தனக்குத் தேவைப்பட்டாலும் இல்லாவிட்டாலும் தன்னால் முடிந்ததை வாங்குவது, தனக்கு திருப்தியைத் தருகிறதோ இல்லையோ அதிக எண்ணிக்கையிலான பொருட்களை வைத்திருப்பது  என தொழில்துறை சார்ந்த ஒரு மனிதனுடைய தேவையாகிறது. இந்த இரண்டு பொருத்தமற்ற கட்டுப்பாடுடைய ஒத்திசைவிற்கு  சாதாரண மனிதனின் கல்வி தேவையாகிறது , இதில் வருந்தத்தக்கவிதமாக சுதந்திரம் அடைந்து இருபத்தைந்து ஆண்டுகளாகியும் நாம் பின்தங்கியிருக்கிறோம். ஒரு சராசரி இந்தியனுக்கு கூட ஜனநாயகம் பற்றியோ அல்லது சோசலிசம் பற்றியோ சரியாகக் கற்பிக்கப்படவில்லை. அவர்கள் தங்களது தனிப்பட்ட சுதந்திரத்தை  கருத்து வேறுபாடு கொள்ளவோ, ஒன்றிற்கு இணங்காமல் இருக்கவோ பயன்படுத்த முடியாது.  பல பொருட்களை முன்னேற்றம் என்ற பெயரில் அவர்கள் மீது திணிக்கப்படுவதை அவர்கள் விரும்பவில்லை.

ஜனநாயகம் என்பது ஒரு விதமான மாறிவரும் களமாக இந்திய ஆட்சியாளர்களுக்கு இருக்கிறது. காந்தியில்லாத காங்கிரஸ் என்பது அக்கட்சியை  மற்றொரு கட்சி அதிகாரத்திலிருந்து தள்ளும் ஆபத்தின் நிலையில் இருந்தது. நிரந்தர அதிகாரத்தில் நிலைநிறுத்தும் ஆர்வத்திலிருந்த காங்கிரஸிற்கு, சோசலிசத்தின் மீது நம்பிக்கை கொள்வது எளிதாகியது. மார்க்ஸ் ஒரு வகையில் தீர்க்கதரிசியாக இருந்திருக்கலாம், ஆனால் அவரது தீர்க்கதரிசனம் யதார்த்தங்களுக்கு வெகு தொலைவில் இருந்தது. சமீபத்திய வரலாற்றில் ரஷ்யா மற்றும் சீனாவும் தீவிர சோசலிச அரசுகளின் எடுத்துக்காட்டுகள். அப்போது அவை எந்த வகையான சோசலிசத்தை அடைந்தாலும், தொழில்துறை ரீதியாக வளர்ச்சியடையாதவை, அப்போது ஆட்சியிலிருந்த கட்சி, தன்னை அதிகாரத்தில் நிலைநிறுத்திக் கொண்டு, மக்களுக்கு அனைத்து வகையான பொருளாதர மற்றும் இதர வளத்தையும்  உறுதியளித்தது.

சித்தாந்தங்கள் அல்ல மாறாக, நிறுவனங்கள், மரபுரிமை மற்றும் கல்வியும் தான் குறிப்பிடும்படியானது என வரலாறு நிரூபிக்கிறது. மகாத்மா காந்தி இந்தியாவின் பாரம்பரியம் என்பதை உண்மை, வாழ்க்கை மற்றும் வாழ்வின் மீதான ஒரு தார்மீக அணுகுமுறை என்று சரியாகவோ அல்லது தவறாகவோ புரிந்து கொண்டார். இந்தியா ஒருவேளை வாழ்வியலின் தார்மீக மதிப்புகள் மாறக்கூடும் என்பதை உணர்ந்திருக்கும் பட்சத்திலும், ஒழுக்க நெறி பற்றிய உணர்வு இல்லாத நீதி என்பது ஒரு கற்பனாவாதம் என்பதை அறிந்திருந்தும் கூட, வாழ்க்கை நெறிமுறைகளை வளர்த்தெடுத்திருந்தால் இந்துக்கள் எதை  தர்மம் என்று அழைக்க விரும்பினரோ அவை நீண்ட காலத்திற்கு எளிதான ஒன்றாக இருந்திருக்கும்.

அதற்கு பதிலாக ஜவஹர்லால் நேருவும், பின்னர் திருமதி இந்திரா காந்தியும் ஒரு தேசம் மேலிருந்து கீழாக வளைந்து கொடுக்கக்கூடிய சித்தாந்தங்களை  வலியுறுத்த விரும்பினர். இதன் விளைவு , இந்தியாவின் விதி என்று மகாத்மா காந்தி வலியுறுத்திய எளிய வாழ்க்கையிலும் உயர்ந்த சிந்தனையிலும் நம்பிக்கை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த இருபத்தைந்து ஆண்டுகளில் நாம் எளிய வாழ்க்கைக்கும் எளிய சிந்தனைக்கும் கணிசமாகத் தள்ளப்பட்டுள்ளோம். இது மக்களின் மகிழ்ச்சிக்கோ, மக்களின் பொருளாதார வளத்திற்கோ பங்களிக்கவில்லை, இருப்பினும் ஆளும் சித்தாந்தவாதிகள் அந்த உண்மையை இன்னும் கண்டுணரவில்லை.

வாழ்க்கைகான அத்தியாவசியப் பொருட்களுக்கு பத்து மடங்கு அதிகமாக பணம் செலுத்துவதால் மட்டுமே நான் என் தாத்தாவை விட பணக்காரன். நான் அவரைப் போலவே அறியாமையில் இருப்பதாகக் கருதப்படுகிறேன் என்றாலும் நான் என் தாத்தாவை விட மகிழ்ச்சியானவன் இல்லை. மிக அருகாமையில் இருப்பதாக கூறப்படும் ஒரு சோசலிசத்தின் பெயரால் அதிக ஊழலை அதிக பாசாங்குத்தனத்தை, அதிக அநீதியை நான் பொறுத்துக்கொள்கிறேன்.

காந்தி ஒரு ஆர்வமற்ற சோஷலிஸ்டாகவும், அரை மனதுடைய ஜனநாயகவாதியாகவும் இருந்திருந்தாரெனில் அது அவர் சித்தாந்தத்திற்கு அப்பாற்பட்டவர் என்பதால் அல்ல, மாறாக மனிதனின் வாழ்க்கை சித்தாந்தங்களுடன் ஆரம்பிப்பதோ முடிவடைவதுவோ இல்லை, அவை மேலிருந்து திணிக்கப்பட வேண்டும். வாழ்க்கையானது அதன் அனைத்து அம்சங்களிலும் ஒழுக்கநெறியுடைது என்பதை அவர் உள்ளுணர்வாக உணர்ந்ததால்தான். நமது  இருபத்தைந்து ஆண்டு சுதந்திரத்தில்  நாம் தவறாக வழிநடத்தப்பட்டது இந்த ஒழுக்க உணர்வைத் தான்.

துரதிர்ஷ்டவசமாக, ஒழுக்க வாழ்வு மத வாழ்வைச் சார்ந்தது என்ற உணர்வு உள்ளது. இதற்கு நேர்மாறாக, மதமானது ஒழுக்கநெறியைச் சார்ந்துள்ளது. இந்தியாவின் எதிர்காலம் வாழ்க்கையின்  ஒழுக்க நெறிகளை மீட்டெடுப்பதையே சார்ந்துள்ளதே தவிர ஜனநாயகம் அல்லது சோசலிசம் என்ற முழக்கங்களைச் சார்ந்தது அல்ல. ஆனால், ஒழுக்கம் என்பது ஆட்சியாளர்களின் சிந்தனையிலிருந்து வெகு தொலைவில் உள்ளது. வாழ்க்கையின் அடிப்படையாக ஒழுக்கத்தை அவர் வலியுறுத்துவதில்தான் காந்தி இன்னும் எல்லாரும் வியந்து பார்க்கும் ஒரு தலைவராக இருக்கிறார், மற்றவர்கள் இங்குதான் நம்மை மிகவும் மோசமாகத் தோற்கடித்துள்ளனர்.

கூடுதல் குறிப்பு (ஶ்ரீனிவாசன் கோபாலன்) – இந்திய தேசிய இயக்கத்தின் சுவடுகள் தமிழ் நவீன இலக்கிய முன்னோடிகளின் புனைவாக்கங்களில் அதிகம் படியவில்லை என்பது விமர்சகர்களின் அவதானிப்பு. ‘சுதந்திர தாகம்’, ‘இருபது வருஷங்கள்’, ‘மண்ணில் தெரியுது வானம்’ போன்றவை விதிவிலக்குகளாக அமைந்தவை. ஆனால், நவீன இலக்கிய முன்னோடிகளில் பலரும் காந்தியின் மீதும் தேசிய இயக்கத்தின் மீதும் மதிப்பு கொண்டவர்களாகவே இருந்துள்ளனர். அவர்களில் ஒருவரான க. நா. சுப்ரமண்யமும் தனது இளம் பருவத்திலேயே காந்தியின்பால் ஈடுபாடு கொண்டார். தமிழில் எழுத ஆரம்பிக்கும் முன்பே, 1930ஆம் ஆண்டளவில், காந்தியைப்பற்றி அமெரிக்க ஏட்டில் கட்டுரை எழுதியிருக்கிறார். அப்போது அவருக்கு வயது 18 தான். அந்தப் பருவத்திலேயே நாட்டுப்புறக் கதைகள் மீதும் ஆர்வம் உண்டானது. பின்னர் நாட்டுப்பாடல் வடிவில் எழுதப்பட்ட ‘காந்தி மகான் கதை’யைப் படித்திருக்கிறீர்களா என உசாவினார். உலக இலக்கியக் கட்டுரைகளை எழுதும்போது, டால்ஸ்டாய் பெயரைக் குறிப்பிடும் இடங்களில் காந்தியுடன் அவருக்குள்ள தொடர்பையும் சேர்த்துச் சொல்கிறார். ஓரிடத்தில் ‘காந்தி டால்ஸ்டாய்’ என்றே பெயரிடுகிறார். ஆல்பர்ட் ஷ்வைட்ஸரைப்பற்றி எழுதும்போது காந்தியையும் சேர்த்து ‘இரண்டு ஏசு பக்தர்கள்’ என்பார். ‘வால்டன்’ மொழிபெயர்ப்பின் முன்னுரையில், காந்தியிடம் செயல்பட்ட தோரோவின் செல்வாக்கைக் காட்டுவார். க.நா.சு. காந்தியின் எழுத்துகளை ஊன்றிப் படித்திருக்கிறார். தமிழில் காந்தி நூல் தொகுதிகள் வெளியீடு பற்றி எழுதியிருக்கிறார். காந்தியின் தன்வரலாற்றையும் காந்தியர்களின் தன்வரலாற்றையும் விரும்பி வாசித்தார். காந்தியைப்பற்றி சிறந்த கவிதையை எழுதியவர் மகாகவி பாரதி; சிறந்த கட்டுரை வரைந்தவர் நாமக்கல் கவிஞர் என்பது அவரது அபிப்பிராயம். க.நா.சு. காந்தியக் கருத்தரங்குகளிலும் பங்கெடுத்திருக்கிறார். காந்திய சிந்தனையின் தாக்கத்தை ஆராயும் நோக்கில், தானே ‘காந்தி வழி’ என்ற கருத்தரங்கிற்கும் ஏற்பாடு செய்தார். காந்தியைப்பற்றி தனி நூல் எழுதும் திட்டமும் க.நா.சு.வுக்கு இருந்திருக்கிறது. ‘சத்யாக்ரகி’ என்ற நாவலைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியதாகக் குறிப்புகள் கிடைக்கின்றன. காந்தியை கதாநாயகனாக்கி எழுதிய சிறுகதையும் உண்டு. தமிழ் இலக்கியம் செழுமையுற ஒல்லும் வகையிலெல்லாம் உழைத்தவரென்றாலும் “நான் தியாகி இல்லை” என்று சொல்லும் உண்மை ஒளியும் அவரிடம் துலங்கிற்று.

***

முனைவர். அ. அருந்தமிழ் யாழினி , சென்னையிலுள்ள தூய தாமஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உதவி பேராசிரியராகவும்,  அகில இந்திய வானொலியின் RAINBOW FM 101.4 ல் பண்பலைத் தொகுப்பாளராகவும் இருக்கிறார். மின்னஞ்சல்: aruntamilyazhiniaravindan@gmail.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here