Thursday, February 19, 2026
Homeஇதழ்கள்2025 இதழ்கள்புராதன நினைவுகளின் உறைவிடத்தில் உயிர்த்தெழுந்த புனைவு மிருகம்

புராதன நினைவுகளின் உறைவிடத்தில் உயிர்த்தெழுந்த புனைவு மிருகம்

ல்குதிரையில் [இதழ் 38] வெளியான ‘இரு பிரதிமைகள்’ என்ற கதையை வாசிக்க நேர்ந்த பிறகுதான் அசோக் ராம்ராஜ் என்ற எழுத்தாளர் எனக்கு அறிமுகமானார். [கதையின் வாயிலாக மட்டுமே]. இணையத்தில் தேடியபோது, சில ஆண்டுகளுக்கு முன்பு அவரின் முதல் சிறுகதைத் தொகுப்பு வெளியாகியிருப்பதை அறிந்தேன்.

எழுத்தாளர் அசோக் ராம்ராஜின் முதல் சிறுகதைத் தொகுப்பு “ரித்னாபூரின் மழை”. இது இரண்டாயிரத்து இருபத்தொன்றில் நூல் வனம் வெளியீடாக வந்துள்ளது. இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான கதைகளும் கல்குதிரை இதழ்களில் வெளிவந்திருக்கின்றன. மேலும், நாதன் பதிப்பகம் சார்பாக அஷ்வின் பாக்கியராஜ் தொகுத்த “புதிய காற்று: தற்காலத் தமிழ்ச்  சிறுகதைகள் (2014–2024)” தொகுப்பில், இதன் தலைப்புக் கதையான “ரித்னாபூரின் மழை” இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது 

இத்தொகுப்பில் மொத்தம் பத்துச் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன.

ஓர் எழுத்தாளன் நேரடியாகவோ, குறிப்பிட்ட சம்பவத்தின் மூலமாகவோ, இலைமறை காயாக ஏதேனுமொரு குறியீட்டின் வாயிலாகவோ கதை நிகழ்ந்திடும் காலத்தைப் பதிவு செய்வதன் மூலமாக குறிப்பிட்ட அந்த காலக்கட்டத்திற்குப் புனைவின் பிரதான வெளிகளைக் கொண்டு கதையின் உள்ளடுக்குகளில் மறைந்திருக்கும் புதிர்களைப் புரியச் செய்வான். காலம் அணுக்கமாகும் போது கதாபாத்திரங்களின் தனிப்பட்ட குணாதிசயங்களும், முரண்களும் ஒவ்வொன்றாக முடிச்சவிழ்ந்து வாசிப்பவனுக்குக் கதையோடு ஒரு நெருக்கமான பிணைப்பை உருவாக்கும். அந்த வகையில் அசோக் ராம்ராஜ் கையாண்டிருக்கும் கதைகளில் காலம் என்று பார்த்தால்,  அவை பெரும்பாலும் பல நூறு ஆண்டுகள் பழமையானவையாக இருக்கின்றன. எந்த ஒரு கதையும் சமகாலத்தை மையம் கொண்டு இயங்கவில்லை. 

புனைவு என்னும் மாய வெளியில் தனது கற்பனைக் குதிரையை உலாவச் செய்து, அதன் குளம்படிகள் இட்டுச் செல்லும் மாயப் பாதையை மௌனமாகப் பின்தொடர்ந்து தமக்கு வாய்த்திருக்கும் செழிப்பான சொற் குவியல்களில் தேர்ந்தெடுத்த சொற் முத்துகளைக் கோர்க்கப் பண்ணி அந்தக் காலத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக மீளுருவாக்கம் செய்து சமகாலக் கதைகளாக்கி வாசகனுக்கு வழங்கியிருக்கிறார். 

இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள கதைகளின் போக்கானது, வழக்கமான உரையாடல் வழி கதை நகர்தலிலிருந்து விடுபட்டு முற்றிலும் வேறுபட்ட பாணியில் வாசிப்பின் சுவாரசியத்தைக் கூட்டி மிகச்சிறந்ததொரு வாசிப்பனுபவத்தை அளிக்கின்றன. எந்தக் கதையிலும் பெண்கள் இல்லை. உறவுகள் இல்லை. உறவுச் சிக்கல்கள் இல்லை. கதாபாத்திரங்களின் குணாதிசயங்கள் குறித்த பெரும் சித்தரிப்புகள் இல்லை. குறிப்பாகக் காதல் இல்லை. இவற்றிற்கு மாறாக, கிட்டத்தட்ட அனைத்துக் கதைகளுமே வரலாற்றைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்டிருக்கின்றன. இதில் நிலமும், புன்னை மரங்களும், இலைகளும், மலையும், காடும் பெரும்பங்கு வகிக்கின்றன. அக்காட்டில் நாகம் உகுத்த தோல் எப்போதும் காற்றில் அசைந்தபடியே இருக்கிறது. இப்போது ஒவ்வொரு கதையாக அசை போட்டுப் பார்க்கையில் ஒரு பிரதான கதாபாத்திரத்திற்கு நிகரான அந்தஸ்தை ஒவ்வொரு கதையிலும் ‘இருள்’ [இரவு] பெற்றிருப்பதை உணர முடிகின்றது. 

பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் சொந்த மண்ணில் நிகழ்ந்த போரும், போரினால் உண்டான நசிவும், அதையொட்டிய வந்த பஞ்சத்தின் கொடுமைகளும் கதையின் வெளிப்புறக் காட்சியமைப்புகளுக்குப் பின்னால் ஊடாடியிருக்கும் முதன்மையான அம்சங்களாகத் திகழ்கின்றன. கதை சொல்லல் முறையில் இவை யதார்த்தத்தின் சாத்தியக்கூறுகளிலிருந்து தம்மை முற்றிலுமாக துண்டித்துக் கொண்ட விதத்தில் தனித்துவமான புனைவு வெளியை  வந்தடைகின்றன. 

எது வரலாறு? எது புனைவு? என்று வாசக மனநிலையின் அவதானிப்புகளை கூர்தட்டும் இடங்களில் அந்த வரலாற்றையும், புனைவையும் இணைத்திடும் ஒரு மென் இழையாகத் தொன்மத்தை உய்த்துணர வைப்பதன் மூலம் கதை வேறொரு தளத்திற்கு பரிணமிப்பதுடன் வாசகனையும் புனைவின் மயக்குறு நிலைக்கு இட்டுச் செல்கின்றது. 

என் வாசிப்பு அனுபவத்தில் நான் கண்டு கொண்ட மற்றொரு முக்கியமான விடையம், இத்தொகுப்பில் வரும் மனிதர்களான சங்கன், சித்தன், ராஜன், சீவல மாறன், பூலி, ஈசல் என அனைவரும் ஒற்றை ஆளுமையாகவே தோன்றுகிறது. தனித்தனி சூழ்நிலைகளில்  விளைந்த தொடர்ச்சியான சம்பவங்களின் ஊடாக வெவ்வேறு கதைகளில் வேறுவேறு கதாபாத்திரங்களாக உருப்பெற்று வருகிறார்கள் என்றே தோன்றுகிறது. எனினும் முன்னரே குறிப்பிட்டது போல், இக்கதைகளில் பாத்திரங்களின் தனிப்பட்ட இயல்புகளை விட அதன்வழியே முன்னின்று பேசப்படும் நிலம், காடு, தொன்மம், புராதன நினைவுகள் போன்றவைகளே கதையை முன்னகர்த்திச் செல்லும் முக்கிய காரணிகளாக விளங்குகின்றன. 

தனது மண்ணும் நிலமும், ஒரு காலத்தில் அங்கு நிலவிய போரும் வறட்சியும் அதன்பால் உண்டான பஞ்சத்தால் நிகழ்ந்தேறிய தவிர்க்க முடியாத இடப்பெயர்வும் மனதின் அடியாழத்தில் வலியும், ஏக்கமுமாக அண்டிக் கிடந்து தொந்தரவுக்கு உள்ளாக்கிடும் புராதன நினைவுகளிலிருந்து  மீண்டெழும் முயற்சியில் அல்லது அந்தப் புராதன நினைவுகளை மீட்டிப் பார்க்கும் பேராசையில் தன்னையே அர்ப்பணித்து தனது படைப்பின் வாயிலாக அதற்குச் சாட்சியம் தேட முயன்றிருக்கிறார்  அசோக் ராம்ராஜ். இப்படைப்பிலேயே ஓரிடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது போன்று,

இந்தப் புனைவுலகில்,  “எல்லாற்றுக்குமே வழி உண்டு”.

***

கார்த்திக் பிரகாசம் கல்குதிரை, தமிழ்வெளி, உதிரிகள், அகழ், நகர்வு, கலகம், வாசகசாலை முதலிய அச்சு, இணைய இதழ்களில் சிறுகதைகளும் மற்றும் கணையாழி, பேசும் புதிய சக்தி, சொல்வனம், நுட்பம் இதழ்களில் கவிதைகளும் எழுதி வருகிறார். இவரது “மீச்சிறு இருள்” என்ற சிறுகதைத் தொகுப்பை தேநீர் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. மின்னஞ்சல்: karthiksona91@gmail.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here