வசந்த் முருகன்
நிசப்தமான அதிகாலைப் பொழுதின் அமைதியைக் கடப்பாரை, மண்வெட்டியின் சத்தம் கெடுத்தது. குழி ஆழமாக வெட்டப்பட்டிருப்பதை பார்த்து கண்களில் நீர் வைத்துக்கொண்டான் லோகு. குழிக்கு அருகேயிருந்த கோணிப்பை சாக்கில் சில ஈக்கள் மொய்ப்பதை பார்த்து கோபமானான் மாரி.
“அயிதது போதும் பைய தள்ளுடா ஈ முக்கிது பாரு”
அழுதுகொண்டே கோணிப்பையைக் குழிக்குள் தள்ளினான் லோகு. அது புரண்டு உள்ளே விழ, கிழிந்துப் போன பையின் இடுக்குகளில் கூர்மையான நகங்கள் கொண்ட கரும் பாதங்கள் வெளிப்பட்டன.
“இந்தா புடி”
ஒரு கைப்பிடி மண்ணை வாரிக் கொடுத்தான்.
“பெ…பெ”என்று அழுதுக்கொண்டே மண்ணைக் குழியில் போட்டான்.
வெட்டிய குழி மூடப்பட்டதும் அதன் மேல் ஒரு முருங்கை மரக் கிளை நடப்பட்டது.
லோகுவின் அழுகை நின்றபாடில்லை. தன் ஆசை நாய் டைகர் இறந்ததை எண்ணி மீண்டும் அழுத்தொடங்கினான். தன் உணர்வுகளை வார்த்தைகளால் சொல்லும் திறனற்ற அவன் தனக்குள்ளேயே வைத்து அழுகைகளால் மட்டும் அதை வெளிப்படுத்தினான்.
“எதுக்கு டா ஊமையா இன்னும் அழுவுற, உன் டைகர் செத்தாலும், வளந்து முருங்க மரமா நிக்கும், வா தண்ணி ஊத்து”
மரம் நடப்பட்டு மூடப்பட்ட குழியின் மீதும் சிறிது தண்ணீர் தெளித்தார்கள்.
பலமுறை டைகர் தன் தீராத பாசத்தால் நக்கிய இந்த கரங்களால் அதற்கு குழி வெட்டப்பட்டதை எண்ணி மாரியும் வருத்தப்படத்தான் செய்தான். ஆனால் அதனால் எப்பலனுமில்லை என்பதையும் அறிந்திருந்தான்.
கழனியைக் காவல் காக்கும் நாய்களுக்கு பல எதிரிகள் எளிதில் உருவாவது வழக்கம்தான். சில சமயம் இது போல நாய்களைக் கொன்றுவிடும் அளவிற்கு பகை முற்றிவிடும். டைகரை கொன்றவர்களைப் பற்றி மாரிக்கு எண்ணமில்லை. அது யாராக இருந்தாலும் அவர்கள் வளர்க்கும் நாய் இப்படியானால்தான் வலியை உணர முடியுமே தவிர அவர்களை கடிந்து ஒன்றுமாகப்போவதில்லை. இருந்தாலும் யார் என்று தெரிந்துகொள்வதில் அவனுக்கு சிறிய எண்ணம் ஏற்பட்டிருந்தது.
ஒரு விதத்தில் இப்படி மனிதர்கள் தங்கள் நாய்களை மாறி மாறி கொன்று போடுவது சொல்லப்படாத போட்டியாகவும் இருந்தது. பல நாய்கள் கொல்லப்பட்டாலும் டைகரின் மரணம் மர்மமாயிருந்தது. அவனுக்கு பல விரோதிகள் இருந்தாலும் பக்கத்துக்கு கழினி சாமியாரும், ஆடு மேய்க்க வரும் ரேவதியும்தான்,
“என்னிக்கினா ஒரு நாள் இத சாவடிக்கிறேன் பாரு”
என்று அடிக்கடி சொல்வார்கள்.
டைகர் நேற்று இறந்தபோது மாரி கழனியில் இல்லை. நேற்று முழுவதும் லோகுவும், மாரியின் தம்பி ஆறுமுகமும் மட்டுமே கழினிக்கு காவலாக இருந்தார்கள்.
விடியற்காலை கழனிக்கு வந்ததும் லோகு கோணிப் பையோடு அழுது கொண்டிருந்தது மட்டும் நினைவில் இருந்தது. நேற்று காலை வரை அவன் டைகரை இத்தனை தூரம் நேசிக்கவில்லை. இன்று அவன் அழுவதை பார்த்து மாரிக்கு அதிர்ச்சியில் ஒரு ஆச்சர்யம் இருந்தது. எத்தனை முறை லோகுவிடம் கேட்டாலும் அவன் தன் வழக்கமான செய்கையில் பன்றிகளுக்காக இடப்பட்டு கழனியை சுற்றியிருந்த கரண்ட்டு வேலியைக் கை காண்பித்து அழுதான்.
அவன் கரண்ட் வேலிகளுக்கு செல்லும் லைனை பல நாட்களுக்கு முன்னரே தடுத்துவிட்டான். ஒருவேளை பக்கத்து கழனி சாமியார் போட்டு வைத்திருந்த கரண்ட் வேலியில் கூட மாட்டியிருக்கவோ வேண்டுமென்றே மாட்ட வைத்திருக்கவோ வாய்ப்புள்ளதை எண்ணி சந்தேகித்தான்.
சாமியார் இரவு நேரங்களில் மாரியின் கழினியில் இறங்கி மலம் கழிப்பது வழக்கம். அன்றும் அதே போல யாருமில்லை என்பதை உறுதி செய்துவிட்டு டெஸ்டர் ஒன்றை எடுத்து வேலியில் மின்சாரம் பாயவில்லை என்பதையும் உறுதி செய்தார். தன் லுங்கியை தூக்கி பிடித்து வேலியை தாண்டி குதித்தார்.
அந்த அமைதியான இரவின் அழகில் தன் கழிவை நீக்கிக்கொண்டிருந்த சாமியாருக்கு யாரோ உறும்பும் சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. அதை அலட்சியம் செய்துவிட்டு ஒரு பீடியை எடுத்து வாயில் வைத்தார். இரு முறை நெருப்பு பெட்டியை கிழிக்க மூன்றாவது முறை பற்றி எரிந்தது. உறும்பும் சத்தம் இன்னும் அதிகமாய் கேட்டது.
அந்த ஒளியில் தன் முகத்திற்கு முன்னே சற்று தூரம் தள்ளி உள்ள அந்தக் கொடிய உருவத்தை திடுக்கிட்டு பார்த்தார். ஒரு நாய் இத்தனை கொடூரமாக இருப்பதை அதுவரை அவர் பார்த்ததில்லை.
அதன் இரண்டு காதுகளும் அறுக்கப்பட்டு ஒரு கரடி போல் இருக்க, அதன் நாக்கு மட்டும் கழுத்து வரை நீண்டிருந்தது. அவர் மீது பாயத் தன் கால்களை எத்தனிக்க உடனே சாமியார் தெறித்து ஓடினார். சகதி மலம் என இரண்டிலும் புரண்டு வேலியைத் தாண்டி குதித்தார். அந்த நாயின் ஓலம் மட்டும் கழனி முழுக்க பரவி இரவின் தன்னியல்பை உருக்குலைத்தது.
மாரி வைக்கோல் போரின் ஒரு பக்கம் உட்கார்ந்தவாறு கட்டளையிட்டு கொண்டே வைக்கோலுக்கு தண்ணீர் தெளித்து கோர்த்துவிட மறுபக்கம் லோகு ஒரு மூங்கில் கொம்பில் வைக்கோலை திரித்து கயிறாக்கிக் கொண்டிருந்தான். திடீரென அந்த நாய் குலைக்க அவன் பதட்டத்தில் திரித்துக் கொண்டிருந்த கயிறைக் கைவிட்டான்.
“பெ..பெ”
“தெ ஊமையா இன்னாடா வேல பாக்கற? நாய் கொலச்சா பயப்புடுவியா”
“பையன ஏன் பா திட்ற ? இந்த நாய பார்த்தா யாருக்குதான் பயம் வராது”
புதிதாய் ஒரு குரல் கேட்க மாரி திரும்பிப் பார்த்தான்.
“வா சாமியாரே”
சாமியார் மெல்ல வந்து போரின் சில வைக்கோலை இருக்கைக்கு ஏற்றுவாறு தயார் செய்து அமர்ந்தார்.
“வரம் பா…யாரு ஊட்டு நாய் இது”
“ஓ டைகர கேக்குறியா”
“இதுக்கு பேரு டைகரா”
என்று அந்த நாயை மீண்டும் ஒரு முறை பார்த்தார். இரவு பார்த்ததை விட சற்று கொடூரம் குறைந்திருந்தாலும் அதன் வால் கூட ஓட்ட நறுக்க பட்டிருப்பதை பார்த்தார். காதுகள் அறுக்க பட்டு, வாலும் வெட்டபட்டு இப்படி ஒரு நாயை மாரி ஏன் வைத்திருக்கிறான் என்பது புரியாமல் இருந்தார்.
“எங்க இருந்து பா புடிச்சாந்த”
“ஒரு வாரத்துக்கு முன்னால நம்ம ஆட்டுக்கார கண்ணன் மாமா கழினிக்கு வந்தாரு. அவரு ஆடு எல்லாத்தையும் வித்துடதா பொலம்பிகினு இருந்தாரு. அவருகூடதான் இந்த நாயும் வந்துச்சி. பாத்த ஒடனே நானே பயந்துட்டேன். என் மவன் ஊட்டுக்கு உள்ளயே ஓடி புட்டான்”
“அன்னிக்கு ஊட்ல பன்னி கறி கொஞ்சம் இருந்துச்சினு போட்டேன் பாரு ஆள உட்டுட்டு தூரவே நவுர்லயே துன்னுட்டு என் காலையே சுத்திகினு இருந்துச்சி அப்புறம் அவருகிட்ட இந்த நாயப்பத்தி கேட்டப்போதான் சொன்னாரு ஆடுங்க இருந்தப்போ அதுங்களுக்கு காவலா இந்த நாய்தான் இருந்துச்சாம். காட்ல இருந்து குள்ளநரி எதனா ஆடுங்கள கடிக்க வந்தாக்கூட அதையே கடிச்சி புடுமாம்.”
“சரின்னு அவரு கெளம்புனாறு நாய கூப்டு கூப்டு பாத்தாரு போவேயில்ல. அதான் ஆடுங்களாம் வித்து ஆய்டுச்சே இனிமே இதுக்கு எங்கிருந்து
தண்டத்துக்கு தீனி போட்றதுனு இங்கயே உட்டுட்டு போய்டாரு. அப்பயிருந்து கழினிய உட்டு நவுரவேயில்ல. எனக்கு இத பாத்ததும் என் பழய நாய் டைகர் நியாபகம் வந்துச்சி”
“அதான் காட்ல மலையாளத்தானுங்க யாரோ போறத பாத்து கொளச்சதுனு சுட்டுடானுங்ளே அதான” என்றார் சாமியார்.
“அதே நாய்தான் சாமியாரே! அதான் இதுக்கும் டைகர்னே பேரு வச்சிட்டேன்”
“இதான் இனிமே கழினிக்கு காவலா”
“ஆமா, கரண்ட்டு கம்பி போட்டா ரீடிங் அதிகமா ஆவுதுன்னு ஒரு வாரமா லைனே கொடுக்கறது இல்ல. இதான் நைட்டு காவலுக்கு இருக்குது”
“எதுக்கு மாரி இதெல்லாம், யாரு தீனி போடறது”
“அட நீ வேற வாரம் ஒரு முற பன்னி கறி போட்டா போதும். ஆனா தாராளமா அதுக்கு போடலாம் சாமியாரே. முன்னாடிலாம் கழினில அவன் அவன் இஷ்டத்துக்கு மாட்ட மேய உட்றதும் ஆட்ட மேய உட்றதும்னு இருப்பான் இப்போ ஒருத்தனையும் கழினில எறங்க உட்றதுயில்லையே ரெண்டு நாளைக்கு முன்னாடி நம்ம ஆடு மேய்க்கிற ரேவதி இருக்காளே வழக்கம்போல ஆடு நம்ம கழினில எறங்கி மேயுறத பாக்காம பெராக்கு பாத்துனு இருந்தா. நம்ம டைகர் இன்னா பண்ணுச்சி தெரியுமா?”
சாமியாரின் கண்கள் ஆர்வத்தில் விரிந்தன.
”ஓடி போய் பயிறு மேஞ்சிகுனு இருந்த குட்டிய ஒரே கவ்வு கவ்வுசி பாரு, அன்னிக்கு சாயுங்காலம் அந்த ஆட்ட, மூட்ட கட்டிதான் எடுத்துனு போனா. போறப்போ, என்னிகினா ஒரு நாள் இத சாவடிக்கிறேன் பாருனு பொலம்பிகினே போனா.”
சாமியார் இதைக் கேட்டவுடன் டைகரை மீண்டும் ஒரு முறை பார்த்தார்.
அது நாக்கை தொங்க போட்டவாறு அவரையே பார்த்துகொண்டிருந்தது.
“எதுக்கு பா ரெண்டு காதையும் அறத்து வெச்சிகீறாங்க?”
“கேட்டேன் சாமியாரே, இதுக்கு தொங்கு காதாம் யார்னா கூப்டா கூட திரும்பாதாம் இத எப்டி காவலுக்கு வைக்கிறது. அதான் ரெண்டு காதையும் அறுத்து போட்டாங்களாம். யார்னா பாத்தா சும்மா சும்மா வால ஆட்டுதுன்னு வாலையும் ஒட்ட வெட்டி உட்டாங்க அதான் பாக்க பேய் மாதிரி கீது”
“சரிதான் நேத்து இந்த பேயி என்னையே கடிக்க வந்திருக்கும் பா”
என்றார் சாமியார்.
“இல்லையே கழினில எறங்கனா மட்டும்தான கடிக்கும்”
அவர் சிறிது நேரம் என்ன பேசுவது என்று தெரியாமல் முழித்தார். லோகு சாமியாரை பார்த்து தனக்குள்ளே சிரித்துக் கொண்டான்.
சாமியார் சிறிது கோபமாகி,
“இன்னாவோ பா என்னிகினா என்ன கடிக்க போவுது அன்னிக்கு இத சாவடிச்சி பூட்றேன் பாரு”
என்று சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு உடனே கிளம்பிவிட்டார். டைகர் சிறிது தூரம் அவரை துரத்திக்கொண்டு சென்றது.
டைகரை சாகடிப்பதாக சொன்னவர்களை சந்தேகித்தவாறு அவனைப் புதைத்த இடத்தில் நடப்பட்ட முருங்கை மரத்தை பார்த்துக்கொண்டிருந்தான் மாரி. அவன் சிந்தனையை சீண்டும் விதமாக ஆடுகள் கூட்டம் தங்கள் கழுத்தில் கட்டப்பட்ட மணிக் கூண்டுகளை ஆட்டியபடி சத்தமிட்டுக் கொண்டே வந்தது.
ரேவதி தன் ஆடுகளை வரிசைப்படுத்தி மேய்த்துக்கொண்டு வந்தாள்.
மாரி தனியாக இருப்பதை பார்த்து,
“இன்னாச்சி ண்ணா தனியா எதையோ மொறச்சி பாத்துக்குனு கீற”
என்றும் இல்லாத அளவிற்கு ரேவதியின் முகத்தில் இருந்த மகிழ்ச்சியை பார்த்து சந்தேகமடைந்தான் மாரி.
“டைகர் செத்துபோச்சி ரேவதி”
“இன்னா சொல்ற எப்டி ஆச்சி”
“தெரில லோகுகிட்ட கேட்டா அழுதுகுனே கீறான்”
“இன்னாவோ போண்ணா. நேத்து என்ன பொண்ணு பாக்கவந்தாங்க, ஆசையா உன்கிட்ட சொல்லலாம்னு வந்தேன் இப்டி ஆய்போச்சி”
மாரி அவளை எண்ணி மகிழ்ந்தான்.
“பரவால்ல மா நம்ம கையில என்ன இருக்குது…அத உடு இனிமே எங்கிருந்து ஆடு மேய்கிறதுக்கு வரபோற, புருஷன மேய்க்கவே உனக்கு சரியா இருக்கும்”
ரேவதி வெட்கமடைந்து நமுட்டு சிரிப்பு சிரித்துவிட்டு கழனியைப் பார்த்தாள். ஒரு ஆடு நெற்பயிரை மேய்வதை கண்டு,
“சாவடிச்சிறேன் பாரு உன்ன” என்று அதை துரத்திக்கொண்டு ஓடினாள். நிச்சயம் ரேவதி அதை செய்திருக்க வாய்ப்பில்லை என்று நினைத்தவாறு சாமியாரின் கழனியை நோக்கி நடந்தான் மாரி.
பொழுது விடிய சிறிது நேரம் இருக்கும் தருணத்தில் டைகரோடு தயங்கித் தயங்கி விளையாடிக் கொண்டிருந்தான் லோகு. அவனிடம் விளையாடும் விதமாக டைகர் அவனைத் துரத்த பலமுறை பயந்து போய் கல்லை எடுத்து டைகரை அடித்துவிடுவான். அது கத்திக்கொண்டே ஓடும் ஆனால் இரவு சாப்பாட்டிற்கு மீண்டும் வந்துவிடும். இப்படி விளையாடிக்கொண்டு இருக்கையில் திடீரென இருட்டில் யாரோ வருவதைப் பார்த்து அவன் குலைக்கத் தொடங்கினான்.
“யாருனு பார்றா லோகு”என்றான் மாரி.
ஆறுமுகம் சிரித்துக்கொண்டே வந்தான்.
“அண்ணா நான்தான்….நாயப் புடிடா லோகு கடிச்சிற போது”
“அதெல்லாம் ஒன்னும் பண்ணாது வாடா…ராத்திரி டவுனுக்கு போவனும்னு சொன்ன, விடிஞ்சதுக்கு அப்றம் வர”
“ராத்திரி நம்ம ராமஜெயம் கழினில ஒரு பன்னி மாட்டிகிச்சினா அதான் போய் எடைக்கு எடை போட்டு வந்தேன்…நம்ம லைன்ல எதனா மாட்டுச்சா னா”
“லைன்லாம் போடறதில்ல டா”
“ஏன்னா”
“நம்ம டைகரே நைட்டு நல்ல காவலுக்கு இருக்குது. எதனா பன்னி வந்தா கூட தொரதிக்குனு ஓடுது அப்றம் எதுக்கு லைன் போட்டுக்குனு”
“இன்னானா பேசற ? தொர்த்தனா ஆச்சா ஊர்ல இன்னா ரேட்டு போவுது தெரியுமா கறி”
“எப்டினா போவட்டும். நைட்டு இங்கயே படுத்துக்க நான் வர நாளைக்கு காலம ஆய்டும்”
அன்று முழுக்க ஆறுமுகம்,லோகு மற்றும் டைகர் மட்டுமே இருந்தார்கள்.
சாமியார் அப்போதுதான் தன் வயல்களில் சுற்றுயிருந்த மின்சாரக் கம்பியை எடுத்து கையில் சுற்றிக்கொண்டு இருந்தார்.
“இன்னா சாமியாரே எல்லாத்தையும் சுத்திக்கிட்டு இருக்க”
“வா மாரி, நேத்து எங்க மாமா ராத்திரி சொல்லாம கொள்ளாம கழினில எறங்கிட்டாரு பா, செத்த நேரத்துல பயந்தே புட்டேன்”
“டக்குனு ஆப் பண்றதான”
“எங்க பண்றது போன வாரம் என்து புயுஸ் கட்டைய புடுங்கிட்டு போய்டானுங்க. சரி னு ராத்திரி ஆறுமுகம் கிட்ட கேட்டுகுனு உங்க மோட்டர் ரூம்ல இருந்துதான் லைன் கொடுத்தேன்”
“இன்னாச்சி அப்புறம்”
“அப்றம் கத்தி கத்தி கூப்டு பாத்தேன் எங்க மாமனுக்கு காதே கேக்கல நல்ல வேல அந்த நேரம் பாத்து உங்க லைன்ல எர்த் அடிச்சி ப்யூஸ் போயிடுச்சி, எங்க மாமன் தப்பிச்சான்”
“அதுக்கு ஏன் சாமியாரே லைன் எடுக்கிற”
“நம்ம லைன் போட்றதே கழினில பன்னிங்க எறங்கி பயிர நாசம் பண்ணிட கூடாதுனுதான். இதுல மனுசாலோ மத்த ஜீவனுங்களோ மாட்டி செத்தா நல்லாவா இருக்கும்”
“அதுவும் சரிதான்”
“சரி இன்னா பா காலைலே இந்த பக்கம்?”
“ஒண்ணுல சாமியாரே ப்யுஸ் போச்சில அதான் உனக்கு எதனா
தெரியுமானு கேக்க வந்தேன்…சரி நான் வரேன்”
இரவு ப்யுஸ் போனதை பற்றி கூட சொல்லாமல் ஆறுமுகம் நடையைக் கட்டியதை எண்ணி கோபமடைந்து தன் கழனியை நோக்கி நடந்தான். சாமியார் மேல் இருந்த சந்தேகம் முழுவதுமாய் நீங்கிவிட்டது.
கழனியை நெருங்கியதும் லோகு சிரிக்கும் சத்தம் கேட்டு ஆச்சர்யப்பட்டான். அங்கே ஆறுமுகம் ஒரு அழகிய நாய்குட்டியை கையில் ஏந்தியவாறு லோகுவிற்கு காண்பித்தான். அதை அவன் ஆசையோடு வாங்கி அணைத்துக்கொண்டான்.
“பெ…பெ”
மாரி கோவத்துடன் ஆறுமுகத்தைப் பார்த்தான்.
“ப்யூஸ் போனத கூட சொல்லாம கெளம்புற அளவுக்கு தொரைக்கு இன்னா ஆட்ற வேல?”
“இல்ல ண்ணா”
“இன்னா டா இல்ல நொள்ளனு டைகர் செத்துபோச்சினாவது சொல்டு போனியா டா…கோணி பைல போட்டு இறுக்க கட்டி குடுத்துட்டு மயிராச்சேனு போய்ட”
“அப்டிலாம் ஒண்ணுல னா “
“டைகர் வந்ததுல இருந்து லைன் போடறது இல்ல அதனால உனக்கு பன்னி கெடைக்கறது இல்ல. அதனால அத சாவடிச்சிட்டா லைன் போட்டுதான ஆவனும்னு நீயே கொன்னுட்ட, இப்போ புது நாய் குட்டிய எடுத்துனு வந்து நாடகம் போடுறியா? ”
மாரி கோபமாகி அருகே இருந்த கட்டையை எடுத்து அவனை அடிக்க சென்றான்.
“மன்னிச்சிக்கண்ணா சொல்லாம போனது என் தப்புதான். ஆனா சத்தியமா நான் டைகர சாவடிக்கிலண்ணா. ராத்திரி சாமியார் வந்து லைன் போட்டுகட்டுமானு கேட்டாரு, சரி போட்டுக்கனு சொன்ன. அந்த ஆளு லைன் போட்டு பன்னி மாட்டுச்சினா எப்டியும் கொடுக்க மாட்டான் சரி இன்னிக்கு ராத்திரி மட்டும் நம்ம கழினில போடுவோமேனு வேலிக்கு லைன் போட்டு உட்டுட்டு, வேக்காடா கீதேனு கெணத்துல எறங்கி குளிச்சேன்.
குளிச்சிட்டு சட்டைய மட்டும் தொவச்சி காய போட எடம் இல்லன்னு நம்ம கெனத்துக்கு போற லைன்ல சட்டைய காய போடப் போனேன் பின்னாடியே டைகர் வந்து கொலச்சது, சரி புது ஆளா இருக்கவே காலைல இருந்து நம்மள பாத்து கொலைக்குதுனு விட்டுடேன் கொஞ்ச நேரத்துல மேலப் பாய வந்துசினு நவுந்தேன் போய் சட்ட காய போட போன கம்பில வாய் வெச்சிச்சு”
ஆறுமுகம் சிறிது எச்சிலை முழுங்கினான்.
“கம்பிய கடிச்சதும் அப்டியே சுருண்டு விழுந்துச்சிண்ணா, அப்றம்தான் தெரிஞ்சிது அந்த கம்பி பூரா கரண்ட் பாஸாயி கீதுனு. அப்டியே கரண்ட் ஆப் ஆகி ப்யுஸ் போய்டுச்சிண்ணா”
மாரி அவனைத் தொட்டு அணைத்தான்.
“உனக்கு ஒன்னும் ஆவல இல்ல”
“எனக்கு ஒன்னும் இல்லண்ணா, லோகுதான் அழுதுனே இருந்தான்.
எனக்கு மனசே கேக்கல, இன்னடா இது போற அப்போ கூட நம்ம உசுரக் காப்பாத்திட்டு போய்டுச்சேனு, அதான் லோகுக்கு ஒரு நாய் குட்டி புடிச்சார்லாம்னு காலையிலே சொல்லாம கெளம்பி போய்டேன்ண்ணா”
“பரவால்ல உட்றா”
அங்கே லோகு அந்த நாய்க்குட்டியோடு விளையாடிக்கொண்டிருந்தான்.
“ஊமையா இதுக்கு இன்னாடா பேரு வைக்கிலாம்”
அவன் சிரித்துக்கொண்டே தன் இரு கைகளையும் சுருக்கி காண்பித்து உறுமினான்!
***
வசந்த் முருகன் – திருவண்ணாமலையைச் சேர்ந்தவர். சென்னையில் வசித்து வருகிறார். திரைத்துறையில் பணிபுரிகிறார். சைக்கிள் மூர்த்தி எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியாகியுள்ளது. மின்னஞ்சல் : vasanthmurugan1973@gmail.com



சிறுகதை: “கரும்புள்ளியின் நிழல்”மாணிக்கன் தனியா ஒரு குடிலில் வாழ்ந்தவன். வயதின் கடைசிக்கட்டத்தை அடைந்திருந்தாலும் அவனுக்கு அருகில் ஒரே தோழன் — கரும்புள்ளி என்ற குதிரை நாய். தன் பிள்ளைகள் யாரும் பார்த்துக் கொள்ளாமல் சென்ற பிறகும், ஒவ்வொரு காலை கரும்புள்ளி அதன் வால் ஆட்டி அவனை எழுப்பும். சூரியன் மறையும் நேரத்தில் அது அமைதியாய் அவனது அருகில் படுத்துக்கொள்வது ஒரு வழக்கம்.ஒருநாள் மழை பெருகியபோது மாணிக்கன் அவனுடன் வயலில் சிக்கிக்கொண்டான். கரும்புள்ளி மீள முடியாமல் செழித்து ஓடிய நீரில் அடித்துச் சென்றது. அதன் குரல் இருளில் மறைந்தது.மாணிக்கன் பல நாட்கள் பேசவுமில்லாமல் இருந்தான். சுற்றியவர்கள் “இன்னொரு நாய் வாங்கிக்கோங்க மாமா!” என்றாலும் அவர் சுவாசித்துக் கொண்டே கூறினார் —
“அது நாய் இல்ல, உயிர். அதை மாற்ற முடியாது.”எப்போதாவது காற்று வீசும்போது கதவு சத்தம் எழுந்தால், மாணிக்கன் சிரித்து “கரும்புள்ளி வந்தாச்சா?” என்று கூறி வாய்ந்திழுக்கும். அந்த நிழல் தான் அவனுக்கு இன்னும் வாழ்வை நினைவூட்டும் உயிர்நிழல்.இந்த மாதிரியான உணர்ச்சி நிறைந்த, மனிதனும் உயிரினமும் இடையே நிகழும் உறவை மையப்படுத்திய சிறுகதைதான் உங்களுக்கு வேண்டும் என்று தோன்றுகிறது.