Tuesday, January 27, 2026
Homeஇதழ்கள்2025 இதழ்கள்பென்டெம் சோடா சென்டர்

பென்டெம் சோடா சென்டர்

முகம்மது கதீர் பாபு

தமிழில்: ஸ்ரீநிவாஸ் தெப்பல

டல் பகுதியைச் சார்ந்து இருக்கும் ஊரில் கோடைக்காலம் வந்தால் சாபக்கேடு.

வெயிலுக்கு உப்பும் இணையாகும். வியர்வைக்கு தோல் வெடிக்கும். மேலும் மேல்காற்று கடந்து சென்றால் உடலில் ஒரு துளி நீரும் மிஞ்சாது.

அப்படியான கோடைக்காலத்தில், அப்படியான உப்புக் காற்றின் மத்தியில், அப்படியான கடல் அருகிலுள்ள ஊரில் இடுப்புக்கு வேட்டியைக் கட்டியபடி ஒரு மனிதர் வீதியில் உலாவுகிறார். உடம்பில் சட்டை அணியாத அவரின் மெல்லிய மார்பிலும், கட்டுமஸ்தான பின்புறத்திலும், அவரது மாநிறமான முதுகின் மீதும் இரண்டு அட்டைகள் தொங்குகின்றன. அதன்மீது சுண்ணக்கட்டியால் எழுதிய எழுத்துக்கள் அங்கங்கே வியர்வைக்கு நனைந்து அழிந்து இருந்தன. அதில் இப்படி எழுதி இருந்தது. 

‘ஹரிஜன ஆலயப் பிரவேசம்

மக்கள் தொண்டே மகேசன் தொண்டு.’

சில நாளாக அந்த மனிதர் யார் மதித்தாலும், மதிக்காவிட்டாலும், யார் கேட்டாலும், கேட்காவிட்டாலும், யார் சிரித்தாலும், சிரிக்காவிட்டாலும், அந்த அட்டைத் துண்டுகளின் பிரச்சாரத்துடன் ஊரூராகச் சுற்றி கூவிக்கொண்டே இருந்தார். நின்ற இடத்தில் எல்லாம் அந்தப் பிரச்சாரத்தைக் கூறுவதும், கழுத்தில் புதிய அட்டைகளைத் தொங்கவிட்டபடி அழிந்த எழுத்துகளை மறுபடியும் எழுதுவதுமாக இருந்தது அவரது செயல்.

அன்று அவர் அந்த ஊரில் அந்தச் செயலுக்காக நேராக இலிந்திர குருநாதம் ஸ்ரேஷ்டி துணி அங்காடியின் முன் நின்றார். 

‘ஸ்ரேஷ்டி ஐயா… நான் அட்டைகளுக்காக வந்திருக்கேன்’ என்றார் குரலை உயர்த்தியபடி.

ஸ்ரேஷ்டி அவரைக் கண்டு முகம் சுளித்தபடி, மேலோட்டமாக மட்டும் சிரித்தவாறு ‘மகானுபாவரே வாங்க வாங்க… ’ என்றார் மேஜையை காண்பித்தவாறு. 

வெயிலுக்கு சோர்ந்து போன அந்த வேட்டியை அணிந்த நபர் மேஜையின் மீது சோர்வை தணித்து கொள்ள உட்கார்ந்தார்.

‘வெயிலுக்கு தாகமா இருக்கு… கொஞ்சம் தண்ணி குடுங்க’ என்றார்.

அப்பேர்ப்பட்ட புண்ணியவான், போதாதற்கு எஜமானுடைய சாதியைச் சேர்ந்தவர் வாயைத் திறந்து தண்ணீர் கேட்டால் கொடுப்பதைக் காட்டிலும் வேறு ஏதும் பாக்கியம் இருக்குமாவென நினைத்து அங்காடியில் உள்ள குமாஸ்தா சட்டென எழுந்து மூக்குக்குவளையில் தண்ணீரை கொடுக்க முயன்றார்.

அவ்வளவுதான்… ஸ்ரேஷ்டியின் குரல் சீறியது.

‘டேய் டேய் கழுத… வந்திருக்குறது யாருன்னு நெனைச்சா… மகான் ஸ்ரீஸ்ரீஸ்ரீ பொட்டி ஸ்ரீ ராமுலு அவர்கள். அவ்வளவு பெரிய மனுஷனுக்கு, உத்தமருக்கு வெறும் குடித்தண்ணியா கொடுக்கப் பாக்குற? குவளை அங்க வெச்சிட்டு சட்டென எழுந்து போய்ப் பென்டெம் காரங்க கடையிலிருந்து சோடாவை வாங்கிவந்து கொடு? வேகாத வெயில்ல வந்தவங்களுக்கு அதல்லவாடா நம்ம செய்யவேண்டிய மரியாத’ என்றார் கோபமாக. 

குமாஸ்தா திகைத்துத் தண்ணீரை அங்கே வைத்துவிட்டு சோடாவிற்காக ஓட முயன்றார்.

அதைக் கண்ட அந்த வேட்டியை அணிந்த நபர் ‘வந்துட்டாரு பெரிய போராளி’ என ஊர் மக்கள் நெடுங்காலமாக ஏளனம் செய்துகொண்டு இருந்த பொட்டி ஸ்ரீராமுலு அவர்களுக்குச் சிரிப்பு வந்தது. 

மேலே எழுந்து நின்று ‘ஸ்ரேஷ்டி அவர்களே… உங்களுக்கு எதற்கு அந்த வீண் சிரமம். நம்ம ஊர் மரியாதை எனக்குத் தெரியாதா. அந்தச் சோடாவை ஏதோ நானே வாங்கிக்கிறேன்’ என்று அவர் கூச்சத்துடன் போக முற்பட்டார். ஸ்ரேஷ்டி தடுத்தாலும், அதைக் காதில் வாங்கிக்கொள்ளாமல் அவர் அங்கிருந்து கிளம்பினார்.

கொஞ்ச தூரம் நடந்து பென்டெம் காரங்க சோடா அங்காடிக்குச் சென்று தென்னை நாரை போட்டு மென்மையாக அமைத்த மர நாற்காலியில் சாய்ந்துவாறு ‘சந்திரய்யா அவர்களே இதாங்க விஷயம். குடிக்க தண்ணி கேட்டா கூடக் குடுக்கலங்க’ என்றார் சிரித்தவாறு.

அந்த வார்த்தைக்குச் சந்திரய்யாவிற்கு பேச்சு வரவில்லை. 

சட்டென அவருக்குக் குடிதண்ணீர் கொடுத்து, அதைவிடக் குளுமையான சோடாவை கையில் வைத்துப் பக்தனை போல், அருகில் ஓரமாகச் சாய்ந்து நின்று, கொஞ்சம் குரலைச் செருமிக்கொண்டு ‘எதுக்காக ஸ்ரீராமுலு ஐயா… எதுக்காக அப்படி நடந்துகிட்டாரு ?’ என்றார் வருத்தத்துடன்.

அவர் மீண்டும் புன்னகைத்து ‘ஹரிஜன ஆலயப் பிரவேசத்திற்கு பறையர், அருந்ததியரின் பறைச்சேரியில சுத்துறன் இல்லயா. தீட்டு ஆயிட்டேனாம். இப்போ தண்ணி குடிக்குற குவளையில் எனக்குத் தண்ணி கொடுத்தா தீட்டு ஆயிடுமே… அதனாலதான்’ என்றார்.

அதைக் கேட்ட சந்திரய்யா நெடுநேரம் வரை ஏதும் பேசவில்லை.

அதன் பின் ‘செட்டி ஐயா… உங்க மேல சத்தியம். ஊரு தண்ணிக்கு வேணும்னா தீட்டு இருக்கலாம், இங்க தண்ணீக்கும், சோடாவுக்கும் தீட்டு ஏதும் இல்லேங்க’ 

*

கடல் பகுதியைச் சார்ந்து இருக்கும் அந்த ஊரின் பெயர் காவலி. 

பிரம்மம் அவர்கள் காலக்கணிப்பை கூறுகையில் ‘நெல்லூரு தரைமட்டம், காவலி பொன்நகரம்’ என்றார். அந்தப் பைராகி வாய் வார்த்தையினால் அது ஆதியிலிருந்து பொன்நகரம்தான்.

இலிந்திர குருனாதம் ஸ்ரேஷ்ட்டியிதும் அதே ஊர்தான். பொட்டி ஸ்ரீராமுலுதும் அதே தாலுகாதான். மேலும் பல வியாபாரிகள் அந்த ஊரில்தான் பிறந்து வளர்ந்திருக்கின்றனர். ஆனால், பென்டெம் சந்திரய்யா மட்டும் அந்த ஊரைச் சேர்ந்தவர் இல்லை.

அவரது ஊர் சீராலா. அந்தக் காலத்து நெசவு ஜவுளிகளுக்குப் பிரசித்தி பெற்ற இடம்.

நெசவாளி சாதியில் பிறந்ததற்கு எல்லோரும் போல் அவரும் தறியை கையில் ஏந்தி இருந்தால் இந்நேரத்திற்கு சீராலாவில் அவர் கைதேர்ந்த வேலைக்காரனாக இருந்திருப்பாரே தவிர காந்தியடிகள் ‘ஓய்’ என்று அழைத்தால், ‘ஓய்’ என்று பதிலுக்குத் திரும்பிப் பார்த்த லட்ச கணக்கான இளைஞர்களில் அவரும் ஒருவர். முகத்தில் மீசை கூடச் சரியாக முளைக்காத வயதில், இருக்கிற சொத்தையெல்லாம் போராட்டத்திற்கு கொடுத்து வெறும் கையோடு நிற்கிற அவரைக் கண்டு உடல் முழுக்க ஆடையை அணிந்த தனது சொந்த சமுகத்தினை சேர்ந்தவர்களே அவரைத் தூக்கி விடுவதற்கு பதில் தரக்குறைவாக நடத்தினர்.

‘இவனுக்குப் பொண்ணு குடுக்கரதே தரித்திரம்’ என்றனர்.

‘குலத்தொழில் கூட வராதே எப்படிதான் வாழப்போறானோ?’ எனப் பரிகசித்தனர்.

இனி அந்த ஊரில் இருப்பது சரி வராதென இரண்டு ஜோடி துணியை மூட்டைக் கட்டி சீராலாவிலிருந்து தெற்கை நோக்கிக் கிளம்பி நெல்லூரு வரை பயனம் செய்தார், எந்த ஊர் சௌகரியமாக இருந்தால் அந்த ஊரிலேயே நிரந்தரமாக வாழ்ந்து விடலாமென நினைத்துக் கொண்டு. 

அந்தப் பயணத்தில் முதலில் அவன் ஒங்கோலுவை சென்றடைந்தான். ஆனால், அங்குக் கருவேலம் மரங்கள் அதிகமாக இருந்ததாம். ஊர் கரடுமுரடாகத் தெரிந்ததாம். இறுதியில் நெல்லூரை சென்றடைந்தான். அங்குப் பட்டினத்தின் சாயல் அதிகமாகத் தெரிந்ததாம். ஆங்காங்கே தமிழ் மொழி வாசமும் தென்பட்டதாம்.

இது இரண்டுமே வேண்டாமென, இதற்கு மத்தியில் இருந்த காவலியைக் கண்டு அவ்வளவு பெரிய பட்டினமும் கிடையாது, அவ்வளவு பெரிய கிராமமும் கிடையாது. அவ்வளவு நல்லதும் கிடையாது, அவ்வளவு கொடியதும் கிடையாதென இந்த ஊர்தான் சௌகரியமா இருக்குன்னு பெருவழி அருகில் கொஞ்சம் வசதியாக இருக்கின்ற நிலபரப்பில் சின்னத் திண்ணையைப் போட்டு உட்கார்ந்தான்.

‘யார் இவன்? சீராலாவிலிருந்து வந்து நம்ப சாலை பக்கம் திண்ணையைப் போட்டிருக்கான்?’ என யாராவது கேட்டால்….

‘அட… எங்கிருந்தோ வந்த வெள்ளைக்காரன் நம்ப நாட்டையே அவனுதுங்குறன். அசலூரிநிலிருந்து வந்த வீடுவாசல் இல்லாதவன் நான். இந்தத் திண்ணை எனதுன்னா மட்டும் தப்பா’ என்றானாம்.

அந்த வார்த்தைக்குக் காவலி மக்கள் வேறேதும் பேசவில்லை.

அவர்களை மீண்டும் பேசவிடாமல் மௌனத்தில் ஆழ்த்திய இன்னொரு நிகழ்வும் இருந்தது. அதுதான் பென்டெம் சந்திரய்யா சோடா.

வளி உருளையைப் பக்கத்தில் நிற்கவைத்து முகத்திற்கு கம்பி வலையை மாட்டிகொண்டு போத்தல் நிறைய வாயுவை நிரப்பித் தண்ணீர் தொட்டியில் குளிரூட்டி கேட்பவர்களுக்குப் பெரும் சப்தத்துடன் கோலியை அடித்துக் கொடுக்கும் சந்திரய்யா சோடா என்றதும், எல்லோரும் வெகுவிரைவில் நெருக்கமானார்கள். அதற்கு காரணம், இதுவரை அவர்கள் அவ்வளவு வாயு நிறைந்த சோடாவையோ, அவ்வளவு ருசியான ஏப்பத்தையோ அதுவரை கண்டதில்லை.

‘சந்திரய்யா… நல்ல வேலைக்காரன்யா நீ… உனக்கு எப்படியா இந்த வித்தை தெரிஞ்சது?’ எனக் கேட்டால் சிரித்து அமைதியாகிவிடுவார்.

சந்திரய்யா இந்தத் தொழிலை எப்போது, எப்படி கற்றார்? எப்படி திறனை அடைந்தாரென யாருக்கும் தெரியாது. ஆனால், ஆகமொத்தத்தில் காவலி சந்தியில் சந்திரய்யா சோடா ஒரு பழக்கமாக மாறிவிட்டது. பொழுது சாய்வதற்குள் சந்திரய்யா சோடா வயிற்றில் விழுந்தால் அன்று பொழுதோடு, உயிர் கூடத் தேறுமென்று காவலி மக்களின் பேச்சு.

அந்த வார்த்தை ஊரின் நாலாபுறமும் பரவியது. வியாபாரம் சூடு பிடித்தது. குளிரூட்டும் தண்ணீர் தொட்டிகள் இரண்டும், நான்கென ஆனது. சிப்பம் கொண்டு செல்லும் ஆறு பெட்டிகளின் எண்ணிக்கை, பன்னிரண்டு ஆனது. காற்றிற்கும், வெயிலிற்கும் அடிபணிந்த அந்தத் திண்ணைகள் போகப் போக நான்கு பக்கமும், நான்கு சுவர்கள் எழுந்தன. கூறையில் ஓடுகள் வேயபட்டன. அதன் பின்னர் வாசற்படியில் பெரிய அட்டை துண்டு ஒன்று தொங்கிகொண்டு கிடந்தது. அதில் இப்படி எழுதியிருந்தது.

‘ஹரிஜன ஆலயப் பிரவேசம் – பொட்டி ஸ்ரீராமுலு அவர்களின் எடுத்துரை.’

வந்தேமாதரம் – பென்டெம் சோடா செண்டர் கொள்கைக் குரல்’

அதைக் கண்டு காவலி மக்கள் ‘நீ அரசியல்வாதியா? என வியப்படைந்தனர்.

‘இல்லை…காந்தியவாதி’ எனப் பதிலளித்தார் சந்திரய்யா.

சந்திரய்யா காவலி வந்து நல்லபடியாக இருந்து, நாலு காசைச் சம்பாதித்தார். மறுபடியும் அதனைக் காங்கிரஸ்காகவோ, மற்றோன்றுக்கோ தானம் செய்வதற்கு முன்பே, அதைத் தடுத்து, ஒரு கால்கட்டு போட நினைத்துச் சீராலாவிலிருந்து உறவினர்கள் வந்து இறங்கி தகுந்த பெண்ணைப் பார்த்துக் கல்யாணத்தை நடத்தி சென்றனர்.

அந்தப் பெண் பலசாலி. கூர்மையான பார்வை கொண்டவள். சோடா போத்தலில் கோலியை போல வந்தும் வராதுமா சந்திரய்யாவிடம் ஒட்டிகொண்டாள்.

‘லக்ஷ்மம்மா கொஞ்சம் தண்ணி பிடிக்கிறியா?’ என்றால், ‘பிடிச்சி வெச்சு ஒரு சாமம் ஆயிடுச்சி’ என்பாள்.

‘லக்ஷ்மம்மா போத்தல்களை கழுவிட்டீயா? என்றால், ‘கழுவி வெச்சி பொழுது சாஞ்சிடுச்சு’ என்பாள்.

முடியை முடிச்சு போட்டுக் குனிந்து வேலையைச் செய்யத் தொடங்கினால் வீட்டு வேலை, கடை வேலையைச் செய்யத் தொடங்கினால், மறுபடியும் அதை முடிக்கும்வரை மேலே எழும்பமாட்டாள்.

அவளது துணிச்சலை கண்டு, வீட்டிற்கே வளி உருளையைக் கொண்டு வந்து சோடா பிடிப்பதை கற்றுதந்தார் சந்திரய்யா. அந்தக் காலத்தில் இந்த வேலையைச் செய்யும் பெண்ணை ஊர் மக்கள் எல்லோரும் விந்தையாகப் பார்த்தனர்.

அவர்கள் எல்லோரும் எட்டிப் பார்க்கையில் லக்ஷ்மம்மா கண்டுக் கொள்ளாதது போல் சர்ரெனச் சக்கரத்தை சுழற்றுவாள்.

பிற்காலத்தில் பென்டெம் சோடா சென்டர் சுதந்திர வீரர்களின் இடமாக மாறியது, அங்கு எப்போதும் விவாதங்களும், சோடாகளின் சப்தங்களும் காட்டமாக ஒலித்தன. அவர்களுக்காக ஆந்திரப் பத்திரிகையின் முதல் வாழ்நாள் சந்தா பென்டெம் சந்திரய்யாவின் கடையிலிருந்துதான் போனது. நெல்லூரில் நடக்கும் காங்கிரஸ் சபைகளுக்கும், ஊர்வலங்களுக்கும், கண்டனங்களுக்கும் செல்லவேண்டிய மக்கள் கூட்டம், கொடுக்கவேண்டிய ஆதரவு அனைத்தும் அந்தக் கடையிலிருந்துதான் தீர்மானிக்கபடும்.

ஆனால், அதற்குத் தேவைபடும் நிதிகள் அவர்களிடம் இருக்காது. சில சமயங்களில் நெல்லூருக்கு கால்நடையில்தான் செல்வார்கள். சில சமயங்களில் அந்த அவஸ்தையைத் தாங்க முடியாமல் நின்றுவிடுவார்கள். அதைக் கண்டு, அவர்களுக்குப் போதுமான அளவிற்கு உதவி செய்தால் நன்றாக இருக்குமென நினைத்தார் சந்திரய்யா. அதற்கு இருக்கின்ற அந்த வியாபாரம் போதாது, அதை மேலும் வளர்க்க வேண்டும். அணாவிற்கும், காலணாவிற்கும் சேர்த்து நாலு காசு சம்பாதிக்க வேண்டும்.

‘அது எப்படி?’ என்று நினைத்தார்.

‘இதுல என்ன இருக்கு? ஒரு வேலையை மட்டும் நம்பி இருந்தா நடக்குற காரியமா அது? தங்கமான சென்டர் அது. ஒன்னுக்கு நாலு பொருள் வைக்கணும்’ என்றாள் லக்ஷ்மம்மா.

‘என்ன செய்யலாம்?’ என்றார் சந்திரய்யா. 

‘நீதான் யோசிக்கனும்’ என்றாள் அவள்.

அப்போது சந்திரய்யா நன்றாகச் சிந்தித்து மனைவியுடன் இணைந்து பல ஆராய்ச்சிகள் மேற்கொண்டு ஒரு பானத்தைக் கண்டுபிடித்தார்.

அதன் பெயர் ‘சுகந்தா பால்.’

இதை வேண்டுமெனவே மக்கள் கூட்டம் ‘பென்டெம் சுகந்த்’ என்று அழைத்தனர்.

வெட்டிவேர்களுடன் செய்கின்ற இந்தப் பானம் அப்போது சிங்கபுரி மண்ணில் ஒன்றிரண்டு இடங்களில் மட்டும்தான் கிடைத்துக் கொண்டு இருந்தது. சந்திரய்யாதான் இதனைக் காவலிக்கு அறிமுகம் செய்தார். இருளர்களிடம் சொல்லி அந்தந்த நாளுக்கு வேர்களைத் தோண்டி எடுத்துவந்து அவற்றினை இரண்டு நாள் ஊறவைத்து, மூன்றாவது நாள் கொதிக்கவைத்து, ஆறியதும் அதனிலிருந்து அடர்த்தியான சாரத்தை எடுப்பார். அந்தச் சாரத்திற்கு சர்க்கரை கரைசல், காட்டமான சோடாவை கலந்து அதன் மீது எலுமிச்சை நாலு சொட்டைப் பிழிந்து ‘உடம்புக்கு நல்லது… குடிங்க’ என்று கொண்டுவந்து கொடுப்பார்.

இது கோடைக் காலத்தில் அமிர்தம் போன்றது. மழைக்காலத்தில் சினேகம் போன்றது. குளிர்காலத்தில் குதூகலம் போன்றது.

மக்கள் இதைக் குடிக்க சாக்குபோக்குகளை தேடுவார்கள். சந்திரய்யாவின் வியாபாரம் மேலும் வளர்ந்தது. ‘சோடா, சுகந்தா எது குடிச்சாலும், சந்திரய்யா கிட்டதான் குடிக்கனும்’ என மக்கள் சத்தியம் செய்தனர்.

‘பாத்தியா. ஒன்னுக்கு ரெண்டு கலந்து குடுத்ததும் எவ்வளவு நன்மை நடந்திருக்குன்னு, இந்த ரெண்டை நாலாக்கனும், நம்பகிட்ட இருக்கும் பொருட்களோட எவ்வளவு செய்ய முடியுமோ அத்தன செய்வோம்’ என்றாள் லக்ஷ்மம்மா.

அன்று முதல் அங்கு மேலும் மேலும் புது பானங்கள் வந்தன.

ஆரஞ்சு சோடா, எலுமிச்சை சோடா, லைம் பழரசம், க்ரஷ், திராட்சை, பாதாம் பால், வயிற்று போக்குக்கு இஞ்சி.

மற்ற பானங்களின் சங்கதி என்னமோ, இஞ்சி விஷயத்தில் மட்டும் சந்திரய்யா பெண்களுக்குக் கடவுளுக்கு இணையானார். அவர்களுக்குத் தீட்டு போன்ற பிற உபாதைகள், பல நேரங்களில், பலவிதமான காரணங்களுக்காக வயிற்றுவலி வரும். அந்த நேரத்தில் அவர்களுக்குச் சந்திரய்யாவின் இஞ்சிதான் மருந்து. அதைக் குடித்ததும் வலி சட்டெனப் பறந்துவிடும். மிகவும் மோசமான வயிற்றுவலி என்றால் ஒரு வாந்தியோடு குறைந்துவிடும்.

சந்திரய்யா அதை அதனுடன் விட்டுவிடவில்லை. பொடி போடும் பழக்கமுள்ள வயதானவர்களின் அவசரத்தையும் கண்டறிந்தார். அந்தக் காலத்தில் தரக்குறைவான பொடி எல்லா இடத்திலும் கிடைக்கும். ஆனால், மெட்ராஸ் ஆண்டார்குப்பம் மூக்குபோடி மட்டும் எவ்வளவு கஷ்டபட்டாலும் கிடைப்பதில்லை. அதற்கு முன்பணம் அதிகமாகச் செலுத்தவேண்டி இருந்தது. விலையும் அதிகம்தான். ஆனாலும், கஷ்ட்டபட்டு ஆங்கிலத்தில் கடிதங்கள் எழுதவைத்து அதையும் சந்திரய்யா வரவழைத்தார். தரமான சரக்கு என்பதால் மூக்குபொடி பழக்கம் இருப்பவர்களுக்கு அது சொர்க்கத்துக்கு சமம்.

தற்போது சந்திரய்யா வியாபாரம் ஜோராக உள்ளது. சுதந்திர போராளிகளுக்கு உதவி செய்வதில் முன்னும் பின்னும் யோசிக்கவில்லை. நாட்கள் ஓடின. இந்தியா மட்டுமின்றி நெல்லூரு சுற்று வட்டாரங்களிலும் போராட்டங்கள் தீப்பற்றி எரிந்தன.

சரியாக அந்த நேரத்தில் காந்தியடிகளின் கதர் போராட்டம் தெற்கை நோக்கிச் சீறிபாய்ந்து பற்றி எரிந்தது.

அந்த நெருப்பின் தீப்பிழம்புகள் பென்டெம் சோடா சென்டரின் மீதும் விழுந்தன.

இது சந்திரய்யாவிற்கு புதிய விழிப்பு. இன்னும் சொல்லபோனால் வாழ்கையில் அவரை அதிகளவில் யோசிக்கவைத்த ஒரே செய்தி.

அதுவரை அவன் சுதந்திரம் கிடைத்தால் போதும் எல்லோரும் நல்ல நிலைமைக்கு வருவார்கள். எந்தவித துயரங்கள் இனி இருக்காதென நினைப்பார். ஆனால், சுதந்திரம் வந்தாலும், வரவில்லையென்றாலும், கொடுத்தாலும், கொடுக்காவிட்டாலும் – இங்கிருக்கும் சொத்துகளைக் கொள்ளையடித்து செல்ல வெள்ளையர்கள் வியாபார சாக்கில் பலவிதமான ஏற்பாடுகள் செய்கின்றார்களென அவனுக்குப் புரிந்து விட்டது. அந்நிய நாட்டு ஜவுளிகளினால் இங்குத் தான் பிறந்து வாழ்ந்த சாதிக்கும், நெசவு தொழிலாளர்களுக்கும் எப்படி நஷ்டமோ, பிற அந்நிய பொருட்களால் போதிய உள்நாட்டு வியாபாரிகளுக்கும், வேலைகாரர்களுக்கும் நஷ்டம் தானே என்று நினைத்தார் சந்திரய்யா. அது புரிந்ததும் சுதேசி மரியாதையுடன் புதிய பிறவியை எடுத்தார்.

‘நமது உடனடி நடவடிக்கை – சுதேசிப் போராட்டம்.’

இந்தக் கொள்கைக் குரல் எழுதிவைக்கபட்ட அட்டையை வாசற்படிக்கு தொங்கவிட்டதும் அவர் செய்த முதல் செயல் வீட்டிற்கு சென்று தெரிந்த ஒவ்வொரு அந்நிய பொருளையும் கொண்டுவந்து அங்காடிமுன் வீசி எரிப்பது.

அதன்பின் வாழ்கையில் அவர் எப்போதும் அந்நிய ஆடையை அணிந்ததில்லை. அந்நிய பொருளைக் கண்டதில்லை. மெட்ராஸில் சாரங்களை கடை கடையாகத் தேடி தேடி வாங்குகின்ற அவரைக் கண்டு வியாபாரிகள் வியப்படைந்தனர். அவர் அவர்களைக் கண்டுகொண்டதில்லை. ஆனால், அந்த மகாநகரத்தில் அவரைக் கலவரத்துக்கு ஆளாக்கிய சங்கதி ஒன்று உள்ளது.

அது தான் அந்நிய பானங்களின் மீது நயப்பு.

திராவிடர்களின் நாட்டுபற்று சந்தேகத்திற்கு இடமில்லை என்றாலும், அவர்களையும் தகர்த்தெரியும் மகத்துவமும், மாயயையும் அதில் உள்ளதாக அவருக்குச் சந்தேகம் எழுந்தது. ‘இது இன்னைக்கு இங்குவரைக்கும் வந்தது, நாளைக்கு எங்குவரை போகும் என்று பயந்தார்.

நாலு நாள் கழித்து. அவரின் பயம் உன்மை ஆனது.

நூனெ சுப்ரமன்ய ஸ்ரேஷ்டி என்னும் வர்த்தகன் ஆறு அணாக்கள் ‘போர்டெல்லோ’ என்னும் அன்னிய பானத்தை ஊருக்குள் கொண்டுவந்ததாக, மக்களிடயே பழக்கப்படுத்த நாலு அணாக்களுக்கே விற்பதாகவும் – இது பென்டெம் சுகந்தாவை விட வித்தியாசமாகவே இருப்பதாகவும், சந்திரய்யா வல்லமையை கண்டு தாங்கமுடியாமல் அவன் இந்த வேலைக்கு இறங்கியதாக ஒரு செய்தி காட்டுத் தீயாகப் பரவியது.

இந்த வார்த்தை பெண்டெம் சந்திரய்யாவை கடுமையாகத் தாக்கியது. அன்று அவர் சோறு தண்ணியை எதுவும் சாப்பிடவில்லை.

‘ஊருக்குள்ள இதுக்கே இப்படின்னா எப்படி? குறுக்கு வழியில வந்த சனியன், குறுக்கு வழியிலியே அடையாளம் தெரியாமலே போகும். நம்பளுக்கு ஒன்னும் ஆகாது’ என்று உச்சுகொட்டினாள் லக்ஷ்மம்மா.

ஆனால், சந்திரய்யா அமைதியாக இல்லை.

அதுவரை மேடைகளுக்கும், மேடைப் பேச்சுகளுக்கும் தூரமாக விலகி நின்ற அந்த மனிதர் அன்று மாலை முதன்முறை பென்டெம் சோடா சென்டரில் நாலுபேரு முன்னாடியும் நின்று சிறிய உரையையாற்றினார்.

‘ஐயாமார்களே… இதெல்லம் சீனி வாசம் பழகிய எறும்புகளின் விவகாரம் போல் உள்ளது. சீனி அறிகுறியை முதலில் ஒரே ஒரு எறும்புதான் கண்டறியும். அதன் பின்னர் மற்ற எறும்புகள் எல்லாம் வழியைக் கண்டறியும். இந்த அந்நிய பொருட்களும் அப்படிதான். இவை ஒன்றோடு நிற்ப்பவை அல்ல. இவை அனைத்தும் நம் நாட்டு வளத்திற்கு முதல் எதிரியென நாம் அறிய வேண்டும். நூனெ சுப்ரமன்ய ஸ்ரேஷ்டிது இந்த வியாபாரம் கிடையாது. அவனுக்கு இந்த வித்தை புரியாது. இதன் மீது சார்ந்திருக்க வேண்டிய எந்த அவசியமும் இல்லாத வியாபாரங்கள் அவனுக்குப் பல உள்ளன. ஆனாலும், அவன் இந்த வேலையைச் செய்தான் என்றால் – நாலு காசு இருக்கும் இது போன்றோர்களினால் எந்தச் சரக்கையாவது வித்து காசாக்கிக் கொள்ளலாமெனப் பார்க்கும் இப்படி பட்ட வியாபாரிகளினால் வருங்காலத்தில் நம் நாட்டுக்கும், உள்ளூரில் இருப்பவர்களுக்கும், திறமையானவர்களுக்கும் தீவிர நஷ்டம் வரும் வாய்ப்பு அதிகமுள்ளது. இந்த விபத்தினை நாம் வேரிலேயே தகர்த்தெரிய வேண்டும். அந்த வேலையை நாம் இப்போதே தொடர வேண்டும். காவலிலியிருந்து அவன் அந்த அந்நிய பானத்தைப் பின்வாங்கும் வரை நான், காந்திய வழியில் உண்ணாவிரதம் செய்ய நினைக்கிறேன்.’

இந்த இறுதி வார்த்தைகள் ஊரில் பதற்றத்தை உண்டாக்கின.

வணிகர்கள் எல்லோரும் இதன் மீது பல வியாக்கியானம் செய்தனர். சிலர் சந்திரய்யாவின் பக்கம் பேசினர். சிலர் சுப்ரமன்ய  ஸ்ரேஷ்டியின் பக்கம் பேசினர். ஆனால், பென்டெம் சோடா சென்டர் மட்டும் தணல்களை போல் எரிந்தது. சந்திரய்யாவுடன் உண்ணாவிரதத்தில் உட்காருவதற்கு மற்ற காந்தியவாதிகள் ஏற்பாடுகள் செய்துகொண்டிருக்க அன்று இரவுப் பொழுது சாய்ந்ததும் நூனெ சுப்ரமன்ய ஸ்ரேஷ்டி கடை சட்டெனப் பற்றி எரிந்தது. கறுப்பு வானில் தீப்பிழம்புகள் காற்றில் நாக்கை நீட்டிச் செந்நிற நெருப்பு ஊரை அச்சுருத்தியது.

இது சந்திரய்யா சற்றும் எதிர்பார்க்காத மரண அடி.

அடிமீது அடியாக இது சந்திரய்யாவின் வேலைதான் என்ற புகாரும் ஊருக்குள் பரவலாகப் பரவியது. விவாதங்கள் இடம்பெற்றன. உண்மைகளைக் கண்டறிய ஊர் பெரியவர்கள் களத்தில் இறங்கினார்கள். சந்திரய்யாவின் ஆதரவாளர்களில் சில அமிதவாதிகள் அவருக்கே தெரியாமல் இந்த வன்முறையில் ஈடுப்பட்டதாக இறுதியில் உண்மை வெளியே வந்தது. ஆனால், இந்த அமிதவாதிகள் யாரென்பது யாருக்கும் தெரியவில்லை.

இது நடக்கின்றபோது சந்திரய்யா மௌனமாகவும், கம்பீரமாகவும், வார்த்தையற்று நின்றார். இறுதியில் இப்படி கூறினார்.

‘இவ்வளவு பெரிய நாட்டிற்கு சுதந்திரம் கிடைக்க காந்தியடிகள் அகிம்சையை ஆயுதமாக்கினார். ஒரு சிறிய செயலுக்காக நமது ஆட்கள் வன்முறையைக் கையாண்டனர். இது என் மனசுக்கு மிகவும் கஷ்டத்தை அளித்தது. இதற்குக் கண்டனம் தெறிவிக்கும் வகையில் பதினைந்து நாள் தொடர்ச்சியாக உண்ணாவிரதம் செய்கிறேன்.’

இந்தப் பிரகடனம் செய்ததும் அவர் முடிவை யாரும் மாற்றமுடியவில்லை.

மிக எளிமையான மனிதர் பதினைந்து நாட்களாகச் சோறுதண்ணியை சாப்பிடாமல் உண்ணாவிரதத்தை செய்வதைக் கண்டு ஊர் முழுக்க அவரைச் சென்றடைந்தது. பதினைந்தாவது நாளில் சுப்ரமன்ய  ஸ்ரேஷ்டி தானாகவே முன்வந்து கால்மாட்டில் உட்கார்ந்தார்.

‘சந்திரய்யா… நடந்தது ஏதொ நடந்து முடிஞ்சது. தப்பான வேலை செஞ்சிட்டேன். உங்க ஆளுங்க நல்லாவே பாடத்தைப் புகுத்திட்டாங்க. இதுக்கிடையில நீ எதுக்கு உசுர கஷ்டபடுத்திக்கிட்டு. உன் வார்த்தை படியே செய்றேன். சரியா?’ என்றான் முழுமனதோடு.

சந்திரய்யா விரதத்தை கைவிட்டார். ஊரிலிருந்து அந்த அந்நிய பானம் வெளியேறியது.

நாட்கள் கடந்தன.

இந்திய சுதந்திர போராட்டம் உச்சத்திற்கு சென்றது.

தேசபட்ல ரங்கய்யா, பெஜவாட கோபால ரெட்டி போன்ற காங்கிரஸ் தலைவர்கள் பென்டெம் சோடா சென்டரை மையமாக மாற்றிக்கொண்டு ஆரவாரமான சொற்பொழிவுகள் நிகழ்த்தினார்கள். மூக்குபொடி இழுப்பதை பழக்கமாக்கிகொண்ட வென்னெலகண்டி ராகவய்யா போன்ற பெரியவர்களுக்குக் காவலியில் இது மிகவும் பிடித்தமான இடமாக மாறியது. பத்திரிகைகளுடன், நாட்டுபற்று பாடல்களுடன், வந்தேமாதரம் போன்ற கோஷங்களுடன் நாளுக்குநாள் பற்றி எரிகின்ற இந்தத் தேசிய முகாமிற்கு இன்னும் இன்றோ, நாளையோ இந்திய சுதந்திர பிரகடனம் வரவிருப்பதாகப் புரிந்துவிட்டது.

கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடுகள் நடந்தன.

‘அன்னைக்கி நம்ப எல்லோரும் பண்டிகை கொண்டாடனும்’ என்றான் ஒரு நாட்டுபற்றாளார் சந்தோஷத்தை தாங்கமுடியாமல்.

‘நம் தேசிய கொடி முதலில் இந்த மையத்தில்தான் பறக்க வேண்டும்’ என்றார் இன்னோரு நாட்டுபற்றாளர் உற்சாகத்துடன்.

‘அதெல்லாம் அப்புறம். முதல்ல இந்தச் சங்கதி ஊர் முழுக்க கேட்கனும். அதற்கு ஏற்பாடுகளைச் செய்யனும் என்றான் சந்திரய்யா.

‘அதெப்படி?’ என்றார் அவர்கள்.

‘ரேடியோ கொண்டுவரலாம்’ என்றான் சந்திரய்யா.

அதன் மறுநாள் சந்திரய்யா முடிவின்படி இடுப்பளவு உயரம் இருக்கும் ஐந்து வால்வுகள் கொண்ட ரேடியோ ஒன்று மெட்ராஸுலிருந்து வந்திறங்கி அங்காடியில் வைக்கபட்டது.

அதுவரை வணிகர்களின் வீட்டில் அலங்கார பொருளாக மட்டுமே கிடந்த நாட்கள் எல்லாம் போய் முதன்முறை சாலையில் நின்று இந்திய முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு சரித்திரமிக்க செங்கோட்டை சொற்பொழிவு ஊர் முழுக்க ஒலித்தது.

பெண்களும், குழந்தைகளும், முதியவர்களும் எழுதபேச இயலாத துடிப்பான நாட்டுப்பற்றாளர்கள் எத்தனயோ பேர் பென்டெம் சோடா சென்டார் முன் கூட்டம் கூடி அந்த அற்புத சொற்பொழிவிற்கு பரவசமடைந்து கரகோஷம் எழுப்பினார்கள்.

அன்று முதல்,

அதன்பின்னர் அந்த ரேடியோ அப்படி எத்தனயோ செய்திகளை அந்த ஊர் மக்களிடம் ஒலிக்கசெய்தது. பல நாள்களாக, மாதங்களாக இன்றுவரையிலும் ஒலித்துகொண்டே இருக்கும் அந்தச் செய்திகளில் ஒரு இரண்டு செய்திகளை மட்டும் சந்திரய்யா என்றைக்கும் மறக்கமாட்டார்.

அந்த இரண்டில் முதல் செய்தி மதவெறியர்களின் கையில் காந்தியடிகளின் கொடுமையான கொலை.

இரண்டாவது செய்தி ஆந்திர மாநிலத்துகாகப் பொட்டி ஸ்ரீராமுலு அவர்கள் செய்த உயிர் தியாகம்.

இது இரண்டும் இல்லாமல் அவர் மறக்கமுடியாத இன்னொரு செய்தியும் இருந்தது.

அதுதான் – இந்தியாவில் கொக்கக் கோலாவின் வருகை.

கருமேகம் போல் இந்தியாவில் அந்த அந்நிய பானம் எப்படி உள்ளே நுழைந்து என்று உள்ளூர் வியாபாரிகள் எல்லோரும் திக்குமுக்காடினார்கள். அவர்கள் இதயம் படபடத்தது, முணுமுணுத்தல்கள் உடைந்தன.

அது அடி எடுத்து வைத்ததுமே மாநகரங்களை ஜெயித்ததாக, கல்லூரி மாணவர்கள் எல்லோரும் பித்துப் பிடித்தவர்கள் போல் இதைக் குடிப்பது மட்டுமே நயப்பாகி விட்டதாக அப்போதே சந்திரய்யாவிற்கு அங்கும் இங்கும் பார்த்தவர்கள் சொல்லுகிறார்கள். இன்றைக்கோ, நாளைக்கோ கிராமங்களின் புறமும், பட்டினங்களின் பக்கம் வரத்தொடங்கினால் அந்தக் குறையும் நிறைவடைவதாகப் பயமுறுத்தினார்கள்.

அவர்கள் பயந்தது போலவே நடந்தது.

ஒரு நாள் மதியம் உச்சி வெயிலின் வெப்பம் சுட்டெரிக்கையில் அந்தக் கம்பெனி தென்னிந்திய பொது மேலாளர் அவராகவே முன்வந்து சந்திரய்யாவை சந்தித்தார்.

‘சந்திரய்யா அவர்களே…நான் வேலையில் சேர்ந்த நாளிலிருந்து இன்றுவரை ஆறு மாசம் ஆகுது. இந்த ஆறு மாசமாக மெட்ராஸ்லிருந்து, பெஜவாடா வரை சுத்திகிட்டே இருக்கேன். எந்த ஊர் போனாலும், எந்தச் சந்தைக்குப் போனாலும் எங்க கூல் டிரிங்க் ஏஜென்ஸிக்காக அவ்வளவு பணம் டிபாசிட் கட்டுறோம், இவ்வளவு டிபாசிட் கட்டுறோம்ன்னு சொல்லுவாங்களே தவிர, வேணாம் போயிடுங்கன்னு சொன்னவங்க ஒருத்தங்க கூடக் கிடையாது. நீங்கப் பெரிய மனுஷன். எத்தனயோ வருஷமா இந்தத் துறையில இருக்கிங்க. புதுசா வர எங்க ட்ரிங்க்கை முதல்ல உங்கள மாதிரி ஆட்கள் வித்தால்தான் எங்களுக்கும் பெருமை. மக்கள் மத்தியிலும் நம்பிக்கை. அதுக்காகதான் நானே சுயமா வந்து கேட்குறேன். டெபாசிட் ஏதும் வேணாம். ஏஜென்ஸி தறேன். வேணம்ன்னு மட்டும் சொல்லாதிங்க’ என்றார்.

சந்திரய்யாவிற்கு என்ன செய்வதென்பது தெரியவில்லை.

எதிரில் இருப்பவன் வயதில் சிறியவனும், படித்தவனும். படித்த படிப்புக்கு ஏதோ ஒரு வேலை கிடைத்தால் போதுமெனச் சேர்ந்தவன். குருவியின் மீது பிரம்மாஸ்த்திரம் போல் அவனோடு எதற்குத் தகராறு என ‘ஐயா, ஒரு நிமிஷம்’ என்றார்.

உள்ளே சென்று தனது கைகளினால், டம்ளரை சுத்தபத்தமாகக் கழுவி குளுமையான சுகாந்தாவை கலந்து ‘ஐயா, இது எங்க கடை சிறப்பு, குடிங்க’ என்று கோடுத்தார்.

அவரும் அதைக் குடித்தார்.

‘நல்லா இருக்கா?’

‘நல்லா இருக்குங்க’ என்றார் அந்த இளைஞன்.

‘உங்க கொக்கக் கோலா விட நல்லா இருக்கா?’ என மறுபடியும் கேட்டார் அவர்.

‘உண்மையாதாங்க சொல்றேன். எங்க கொக்கக் கோலாவைவிட நல்லாவே இருக்கு’ என்றார்.

‘அப்ப வேறென்ன…. நீங்களே உங்க வாயால ஒத்துகிட்டிங்க. கிளம்புங்களய்யா… நான் உங்க கொக்கக் கோலாவை விக்கமாட்டேன்.’ என்றார் அவர்.

வந்தவர் அதைக் கேட்டுத் திகைத்தார்.

‘சந்திரய்யா அவர்களே, உங்கள பத்தி எதுவும் தெரிஞ்சுக்காம இங்கு வந்துட்டேன்னு நினைக்காதிங்க. அதெல்லாம் அந்தக் காலம். இப்போ அது எதுவும் எடுப்படாது. உண்மையை சொல்றேன். இனிமே நீங்க இதை அதிக காலம் இதெல்லாம் விக்க முடியாது. எங்க கம்பெனி முதலீடு பார்த்திங்களா, எங்க கம்பெனி விளம்பரத்தைப் பார்த்திங்களா? இந்த உலகத்துல அதிக பேருக்குத் தெரிஞ்ச ஒரே ஒரு கம்பெனி எங்களதுதாங்க. இதுக்கு முன்னாடி உங்களால நிக்கமுடியுமா? இப்போ வர வருமானத்தவிட பல மடங்கு வருமானம் உங்களுக்கு எளிமையா கிடைக்கும். உங்க மேல இருக்குற மரியாதை நிமித்தமா சொல்றேன். என் வார்த்தையைத் தட்டாதிங்க…’ என்றார்.

சந்திரய்யாவிற்கு அந்தப் பேச்சு சிரிப்பு வந்தது.

‘ஐயா… எந்த வருமானத்தைப் பத்தி சொல்றீங்க? சுட்டெரிக்கிற வெயில் காலத்திலும் ஒரு பொழுது சோடாவை வித்தாலும் அது வித்த வருமானத்தோட நூறு நாட்டுப்பற்றார்களுக்கு சோறு போடுறவன் நான். இந்த வியாபரத்துல வருமானத்தைப் பத்தி எனக்கே சொல்லிகொடுக்கிறீங்களா? எது வருமானம்? என் சரக்கு நாலணாக்கு வித்தா எனக்கு மிச்சமிருக்கும் அந்த இருபது பைசா வருமானமா? உங்க சரக்கு நாலணாக்கு வித்தா உங்களுக்குக் கிடைக்கும் இருபது பைசாவா? என்னோட இருபது பைசா இங்கதான் இருக்கும். உன் இருபது பைசா நாடுகடக்குது. அப்படிப்பட்ட வேலைக்காக என்னையும், என் கஷ்டத்தயும், என் கடையையும் பயன்படுத்திக்கிட்டு, அதுக்கு பதிலா அஞ்சு பைசா பிச்சை போட்டு அதுக்கு வருமானம்ன்னு பேரு வைக்கிறீங்களா? இதுக்கு நான் விலைபோகனுமா?’ என்றார் அவர் அமைதியாக.

வந்தவர் ஏதும் பேசவில்லை.

சற்று நேரம் உட்கார்ந்து பார்த்துவிட்டு இனி ஏதும் செய்யமுடியாமல் எழுந்து கிளம்ப முற்படுகையில் ‘ஐயா, ஒரு வார்த்தை’ என்று தடுத்தார் சந்திரய்யா.

‘ஐயா! உனக்குத் தெரியுமா இல்லையான்னு தெரியல. இருநூறு வருசமா வெள்ளயர்களின் ஆட்சியில் அடைபட்டு நசுங்கிய இந்த நாட்டை எத்தனயோ மகான்கள் எத்தனயோ மக்களோட துயரத்தைக் கண்டு தியாகங்கள் செஞ்சி, சிறையிலிருந்து மீட்டு, உங்கள மாதிரி ஆளுங்க கையில குடுத்துட்டு போனாங்க. அதுக்கு முடிஞ்சா நல்லது செய்யுங்க. அதை விட்டுபுட்டு இப்படி பட்ட துரோகம் மட்டும் செய்யாதிங்கய்யா…’ என்றார்.

அந்த இளைஞனின் குரல் தளர்ந்தது.

‘துரோகமா…’ என்றார்.

‘துரோகம் இல்லனா இதை வேறென்ன சொல்லுவாங்க? என்னய்யா இந்த நாட்டுல எத்தனை நதி, வாய்க்கால் இருக்கு. வெயில் அடிச்சா தாகத்த தனிக்க தித்திப்பான பானங்கள் இருக்கு. குளுமையூட்டும் வேர்கள் இருக்கு. நம்ப கண்டுபிடிச்ச சர்பத் இருக்கு. இங்க இத்தனை இருக்க, எங்கிருந்தோ கடல் தாண்டி வந்து உன் கம்பெனி இங்கு வந்து வியாபாரம் செய்ய நினைச்சா இங்க எவ்வளவு வருமானம் வராமலேயேவா இந்த வேலைக்கு வந்து இறங்கும். இப்பேர் பட்ட துரோக செயலுக்கு உங்கள மாதிரி ஆளுங்க துணை போகலாமா?’ என்றார் அவர்.

இந்தக் கேள்விக்கு அவன் பதிலளிக்கவில்லை.

சற்று நேரம் நின்று ‘கிளம்புறேன்ங்க’ எனத் தலைகுனிந்து கிளம்பினார்.

அவர் சென்றதும் இனி அங்காடியில் உட்கார ஏனோ மனம் வரவில்லை சந்திரய்யாவிற்கு. ரிக்ஷாவை அழைத்து வீட்டிற்கு கிளம்பினார்.

அன்று அவருக்கு மிகவும் நிலைகுலைந்தது போல் உள்ளது. அதுவரை அவரில் இருந்த கொஞ்ச நஞ்ச ஆசையும் அன்றோடு மொத்தமாகக் கரைந்தது.

காந்தியவாதிகள் இருக்கிறார்கள்…கொக்கக் கோலா வந்ததினால் நாட்டில் கண்டன பிரகடனங்கள் பலவற்றை கொட்டிக் குவித்தனர்… அவர்களின் மதிப்பு இல்லாமல் போய்விடுமா, அரசு அதை முறை படுத்தாதா என்று அவர் நினைத்தார். இன்று நடந்ததை கண்டதும், கிராமங்களின் மூலைமுடுக்குகளுக்கும் அது சேருவதற்கு அத்தனை முயற்சிகளும் செய்கின்றதென்று தெரிந்ததும் இனி முழுமையாக நம்பிக்கையை இழந்துவிட்டார்.

‘இனி எல்லோரோட நிலமையும் அவ்வளவுதான?’ என்று நினைத்தார்.

சுற்றி இருக்கும் கிராமங்களில் அதற்கு தகுந்த ஆதரவு இல்லாததினால், என்ன செய்வதென்று தெரியமால் ‘ஐயா சந்திரய்யா! நாங்களும் சோடா சென்டர்கள் வெச்சிக்கபோறோம். எங்களுக்கும் அதக்கான வழிய சொல்லுங்க. எரிவாயு உருளைகளை வாடகைக்கு குடுங்க. சாரத்தை எப்படி கலக்கனும்ன்னு சொல்லிகொடுங்க’… என்று எத்தனயோ பேர் கேட்டதால், அவர்கள் எல்லோருக்கும் தகுந்த வழிகளைச் சொல்லி அவரது கையோடு சாரத்தை கட்டி கொடுத்து அவர் மனநிறைவு அடைந்தார். அவர்கள் எல்லோரும் ஒருவரை சார்ந்து இல்லாமல் மனைவி, பிள்ளைகளுடன் சேர்ந்து அந்த வியாபாரங்களை செய்துகொண்டு இருப்பதைகண்டு மனம் மகிழ்ந்தனர்.

இனிமேல் அந்த உழைப்பும், அந்தச் சுதந்திரமும் இழக்கவேண்டியதுதானா? இவர்கள் கல்லா பெட்டிகளின் முன்னால் சோம்பேறிகளாக இருக்கவேண்டியதுதானா? என அவர் நினைத்தார்.

அதை நினைத்துப் பார்க்கையில் அவருக்கு மகன் நினைவுக்கு வந்தான். அவன் என்ன நினைப்பானோ என நினைத்தார்.

வீட்டிற்கு வந்து மனைவியுடன் அந்த சங்கதியைக் கூறினார்.

‘நல்ல வேலை செஞ்ச…. இதுக்கு மேல எப்படி நல்லபடியா பேச முடியும் என்றாள் லக்‌ஷ்மம்மா.

‘பயா என்ன நினக்கிறானோ இல்லே’ என்றான் சந்திரய்யா.

‘அவன் நம்ப புள்ளை யாச்சே? நம்பள மாதிரி யோசிக்கமாட்டானா பின்ன?’ என்றாள் லக்ஷ்மம்மா.

அன்றிரவு சாப்பிடுகையில் சந்திரய்யா லக்ஷ்மம்மா, மருமகள், மகனும் அருகில் உட்காரந்தனர்.

சந்திரய்யா மகனுடன் இப்படி கூறினார்.

‘கிருஷ்ணா… எங்களுக்கும் வயசாயுடுச்சி. வாழ்க்கயோட விளிம்புல இருக்கோம். இதுவரை ஒரு மாதிரி வாழ்ந்தோம். புரட்சி, போராட்டங்களுன்னு இருந்துட்டோம். சுத்தி முத்தி பார்த்தா இப்போ காலம் மாறிபோயிருக்குது. உன்ன மாதிரி இளைஞர்கள் மன நிலை எப்படி இருக்கோ, என்ன நினைக்கிறாங்களோன்னு எனக்குச் சுத்தமா புரியல. உனக்கு இப்படி இருக்கிறது பிடிக்குமா? இல்ல அப்படி இருக்கிறது பிடிக்குமா? எதுவா இருந்தாலும் சொல்லிடுப்பா… என்னொட முடிவுகள் உனக்குச் சுமையா இருக்ககூடாதுப்பா…”

சாப்பிட்டபடி இருந்தவன் சட்டெனப் பிடிசோறை தட்டில்வைத்துவிட்டான்.

‘அப்பா, நீங்கப் போய் என்ன இப்படி கேட்க்கலாமா? என்றான் மனம் நொந்தபடி.

‘அப்படி கிடையாதுடா, உன் மனசுல என்ன இருக்குன்னு எனக்குத் தெரிய வேணாமா?’ என்றார். 

‘அப்பா…உங்கள நான் சின்ன வயசுலிருந்து பார்க்குறன். நீங்களும், அம்மாவும் எவ்வளவோ உழைச்சிருக்கிங்க. கடையை அடுத்தகட்டத்திற்கு கொண்டு போயிருக்கிங்க. இப்போ நானும், என் மனைவியும் அதே அளவுக்குதான் உழைக்கிறோம். உங்க ரெண்டு பேருக்கும் எவ்வளவு வேலை தெரியுமோ, எங்களுக்கும் அதே அளவுக்கு வேலை தெரியும். இவ்வளவு தொழில் தெரிஞ்சிகிட்டு நம்ப நாலுபேரும் இன்னொருத்தரோட காலுக்குக் கீழ வேலை பாக்கனுமா, நம்ப வாழ்க்கையை நம்பளல வாழமுடியாதா?’ என்றான் மகன்.

அந்த வார்த்தை சந்திரய்யாவிற்கு மனநிறைவை அளித்தது.

அன்றிரவு அவர் நீண்ட நாட்களுக்குபின் அமைதியாக உறங்கினார்.

காலையில் கண் விழித்துப் பார்கையில் மகன் அவரது கால்மாட்டில் அமர்ந்திருந்தான்.

‘கிருஷ்ணா… என்னடா செய்தி?’ என்றார்.

‘ஒன்னுமில்லப்பா? நேத்து ராத்திரி அந்தக் கொக்கக் கோலா ஏஜென்ஸியை நம்ப ஆத்துக்கு அக்கரையில பண்ட்ல சேஷாரெட்டி எடுத்துகிட்டாறாம். நம்ப வேணாம்ன்னு சொன்னதுக்கு அப்புறம், இன்னொருத்தர் கிட்ட போனா, உங்களுக்குப் பயந்து எடுத்துக்க மறுத்தாங்களாம். கடைசியில நான் எடுத்துக்குறன், எவன் குறுக்க வந்தாலும் நான் பாத்துக்கிறேன்னு அந்த ரெட்டி எடுத்துக்கிட்டானாம். காலைலை டீக்கடை முன்னாடி பார்த்தேன். திமிரா பேசுனான்.’ என்றான் கிருஷ்ணன்.

‘திமிராவா? என்ன சொன்னான்? என்றார் சந்திரய்யா,

‘டேய்…பொடியா… உங்க அப்பன என் கூடத் தகராறுக்கு வரவேணாம்ன்னு சொல்லிவை. ஏஜென்ஸியை எடுத்துக்கிட்டேன்னு, ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி கடைகளை எரிக்கிறதுக்கும், சத்தியாகிரகம் செய்றதுக்கும் இது வெள்ளைக்காரங்க காலம் கிடையாதுன்னு சொல்லு. ஏதாவது செய்யணும்னு நெனச்சா சிறைல கம்பி என்ன வேண்டி வரும்னு சொல்லு’ என்றான்.

சந்திரய்யா எதுவும் பேசவில்லை.

கொக்கியில் மாட்டியிருந்த சட்டையை மாட்டிகொண்டு நேராகப் பண்ட்ல ஸெஷாரெட்டி வீட்டை நோக்கிச் சென்றான்.

வேப்பம் குச்சியுடன் பல் துலக்கிகொண்டு ஸேஷாரெட்டி விடிகாலையில் வாசற்படியில் நேர் எதிரில் நிற்கின்ற சந்திரய்யாவை பார்த்துத் திகைத்தான்.

‘சந்திரய்யா அவர்களா…வாங்க…வாங்க’ என்றான் தடுமாறியபடி.

அவர் உள்ளே அடியெடுத்து வைக்கவில்லை.

‘ரெட்டி… எங்க பையனுடன் ஏதோ சொன்னியாம்… எங்கே இன்னொரு முறை சொல்லு’ என்றான்.

ரெட்டி இன்னும் பதற்றமடைந்தார்.

‘அட… நான் ஏதும் சொல்லலயே…நான் ஏதும் சொல்லலங்க’ என்றான்.

‘சரிதான் பார்த்துகிட்டு இரு. மூனு மாசத்துக்கு முன்னாடி மூடிவைச்ச உன் அழுக்கு தண்ணி ஜெயிக்குமா… இப்பத்திக்கிப்போ இந்த மண்ணுலிருந்து தோண்டியெடுத்த இந்த ஊர் தண்ணி ஜெயிக்குமான்னு பார்த்துக்கலாம்’ ன்னு வீட்டுக்கு நடையைக் கட்டினார்.

ரெட்டி அந்த வார்தைகளை பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. 

அதன் மறுநாளே மூன்று மாதங்களுக்கு முன்பு மூடிவைத்திருந்த கொக்கக் கோலாவை மேளதாளங்களுடன் ஊருக்குள் கொண்டுவந்து இறக்கினார்.

அது வந்த முதல் நாளே காவலி மக்களுக்குப் பெரிய விந்தை. அதைத் தொட்டு பார்ப்பவர்கள், குடித்து பார்ப்பவர்கள், குழந்தைகளுக்காக, பெண்களுக்காக, கொண்டாட்டத்துடன் வீடுகளுக்குப் பார்ஸெல் வாங்குபவர்களும்… சந்திரய்யாவும் ஒன்று வரவழைத்தார்.

அதை நேராக வீட்டிற்கு எடுத்துச் சென்று தரையில் வைத்து ‘இதுக்கு நம்ப நகல் செய்யனும்’ என்றார்.

‘நகலா? என்றான் கிருஷ்ணா.

‘அது எவ்வளவு நேரம்’ என்றாள் லக்ஷ்மம்மா.

‘இதைவிடச் சிறப்பா, இதைவிடக் காட்டமா, இதைவிட நல்ல நிறத்தோடு நம்ப அதைத் தயார் செய்யானும். இதைவிட மலிவான விலைக்கு விக்கனும். இப்படி பட்டவங்கள, அப்படிதான் முறியடிக்கன்னும்’ என்றார் சந்திரய்யா.

சந்திரய்யா, லக்ஷ்மம்மா, கிருஷ்ணா, அவனது மனைவி மூக்கை மூடி ஆளுக்கொரு மிடறு அதைக் குடித்துப் பார்த்தனர்.

பல வருஷங்களாக அந்தத் துறையில் பழம் தின்னு கொட்டை போட்ட அந்தத் திறமையாளிகளுக்கு அதில் உள்ள ரகசியம் என்னவென்று விலங்கியது. அந்த ராத்திரியோட, ராத்திரியா ஆராய்ச்சி தொடங்கியது.

அதன் மறுநாள் நீண்ட நேரத்திற்கு பிறகு பென்டெம் சோடா சென்டர் வாசற்படியில் ஒரே ஒரு அட்டைத் துண்டு தொங்கிகொண்டு இருந்தது.

அதில் இப்படி எழுதபட்டு இருந்தது.

‘பென்டெம் காரங்க புதிய பானம் – பென்டெம் கோலா – இன்றே குடித்து மகிழுங்கள்.’

அதைக் கண்டு ‘அஹா’ என்று சுற்றி வந்தனர் மக்கள்.

‘இதென்னய்யா’ என்று ஆச்சரியம் தொடர்ந்தது.

இதென்ன விந்தையா இருக்குன்னு அதன்பின் குடித்துப் பார்த்தனர்.

குடித்ததும் சந்திரய்யாவிற்கு வணங்கினார்கள்.

கொக்கக் கோலாவை விட மலிவான விலைக்கு, அதைவிடச் சிறப்பான ருசியுடன் கொக்கக் கோலாவை விடச் சிறப்பான காட்டத்துடன் கிடைக்கின்ற அந்தப் பானம் மற்றோரு முறை சந்தையில் ஜெயித்தது. அதன் வெற்றி எவ்வளவு கனமானது என்றால், அதன் தாக்குதலுக்கு ஊரில் கொக்கக் கோலாவின் விற்பனை முழுமையாகச் சரிந்தது.

இது தெரிந்து துடிதுடித்தான் ரெட்டி. பென்டெம் கோலாவை வாங்கிவந்து குடித்து, அதைக் குடித்த வாயுடன் இது குடிப்பது சிரமம் என்று புரிந்து விட்டது.

விழுந்து பொறண்டு அந்தத் தகவலை மெட்ராஸுக்கு அனுப்பினான்.

பொது மேலாளர் ஓடிவந்தார்.

‘ஐயா சந்திரய்யா… இது சரியான முறை கிடையாது. எங்களை நகல் செய்ததற்கு உங்க மேல் வழக்குப் பதிவு செய்வோம்’ என்றான் மிரட்டியபடி.

சந்திரய்யா கொஞ்சம் கூட அசரவில்லை.

‘உங்களுக்கு என்ன தோணுதோ அதைச் செய்யுங்க’ என்றான் துளியும் அதைப் பற்றி எந்த வருத்தமும் இல்லாதவன் போல்.

பொது மேலாளார் வழக்கைப் போடவில்லை. அதே போல் ஊரில் கொக்கக் கோலாவை நிலைநிறுத்தும் முயற்சிகளும் கைவிடவில்லை.

அது ஊரிலேயே பீறிட்டு ஓடியது. சந்தையில் அலங்காரமாகத் தொங்குகின்றது. பலவிதமான அளவுகோல்களில், பலவிதமான போத்தல்களில் மக்களைக் கவருவதற்கு முயற்சிகள் மேற்கொண்டனர். சினிமாக்காரர்கள் புதிதாக இதன் மீது மெட்டுகள் கட்டினார்கள். மது வியாபாரிகள் இதை மதுவில் எவ்வளவு நன்றாக இருக்குமோ என அதை விவரிக்கின்றனர்.

ஆகமொத்தத்தில் சந்திரய்யா இருந்த இடத்திலேயே நின்று கத்தி சுழற்றுகையில் அது சுற்று வட்டாரத்திலிருந்து அவனையே விழுங்கிக்கொண்டு இருந்தது.

ஒரு ஆண்டு, இரண்டு ஆண்டு, மூன்று ஆண்டு என நாட்கள் கடந்தன. 

அதன்பின், மக்கள் கொஞ்ச கொஞ்சமாக அதற்குப் பழகிப்போனார்கள்.

மரத்திற்கு பூச்சி பிடித்து நாளடைவில் அதைத் தகர்த்தெறிவது போல் சந்திரய்யா கூட நாளுக்கு நாள் விற்பனை இழந்தான். தற்போது அங்குக் கொண்டாட்டம் இல்லை. கோலாகலமும் இல்லை. சோடாவிற்காகவோ, சுகந்திற்காகவோ, ரேடியோவில் செய்திகளைக் கேட்பதற்காகவோ அங்கு வருபவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் குறைந்துவிட்டது. இஞ்சி அவசியம் தீர்ந்து விட்டது. ஆரெஞ்சு, திராட்சையின் டிமாண்டும் குறைந்துவிட்டது. அரசியல் பேசுபவர்கள் இல்லை. நாட்டுப்பற்றார்களின் முன்னாள் வீரத்தை நினைத்துப் பார்ப்பவர்கள் இல்லை.

சந்திரய்யா ஒருவன் மட்டும்தான் கதர் துணியை அணிந்த வெள்ளை வேங்கை புலிபோல் அங்கு அமர்ந்து தெரிகிறார். அவருக்குச் சமீபகாலத்தில் பார்வை குறைபாடு வந்தது. உடல் நலமும் பாதிக்கபட்டது. சோடாவை அடிக்கையில் கை நடுங்குகின்றது.

‘எதுக்குப்பா இன்னும் நீங்க இதெல்லாம் பண்ணிகிட்டு, ஓய்வு எடுத்துக்கலாமே’ என்று மகன் சொன்னால் ‘என்ன ஓய்வுடா… கை நிறைய வேலையுடன் வாழ்ந்தவன். இப்போ சும்மா உட்கார முடியுமா?’ என்று கூறுவார் அவர்.

‘கிருஷ்ணா… காந்தியடிகள் சொல்லிகிட்டு இருப்பாருடா… நம்ப நாட்டுல இருக்கிறதே கிராமங்கள்தான். இங்குக் குடிசைத் தொழில்கள்தான் சரி வரும்மென்று. நம்பளுதும் குடிசைத் தொழில்தாண்டா. உங்க அம்மா, நானும், நீயும், மருமகள், நம்ப வேலைக்காரங்க எல்லாரும் சேர்ந்து உழைச்சோம். இப்போ என்னோடு சேர்த்து நீங்க எல்லோரும் சும்மாவே இருக்கீங்களே, அது எப்படிடா…. என்னோடு நீங்க எல்லோரும் சும்மாவே இருக்கீங்களே, இப்படி நூத்து கணக்குல எத்தனை பேர் காலியா இருப்பாங்கன்னு யோசிச்சுபாரு. இது எல்லாத்துக்கும் காரணம் அதுதாண்டா. இந்தக் குணம் அதோட நிறத்துலயே இருக்குது போலடா. என்னிக்காவது கவனிச்சியா? ரத்தம். அந்த ரத்த சோறுக்கு என்னிக்கும் ஆசை படாதேடா யப்பா’ என்பார்.

‘அதை என்னிக்காவது நாட்டுலிருந்து விரட்டி அடிப்போம்’ என முணுமுணுப்பார்.

அவர் கோரிக்கை நிறைவேறவில்லை. நாளடைவில் அவரது உடல் நலமும் சீர்குலைந்தது. கிருஷ்ணா மருந்து, மாத்திரை என்று அவஸ்தைபட்டான். கண்ணுக்கு இமைபோல் லக்ஷ்மம்மா அவரைக் கட்டி காத்தாள்.

இது தெரிந்து ஒரு நாள் சேஷாரெட்டி இருக்கிறவன் சும்மா இருக்காமா ‘சந்திரய்யா ஓட நிலமை மோசமா இருக்குனு தெரிஞ்சது. குடும்பம் ஓடுறதே சுமையா இருக்குனு தெரிஞ்சது. என் சரக்கு போடுறேன்னு சொல்லுங்க. அவருக்காக என் கமிஷனை கூட நான் இழக்க தயாரா இருக்கேன்னு சொல்லுங்க’ என்று தகவல் சொன்னான்.

அதைக் கேட்டு ‘ஆ’ எனச் சந்திரய்யாவின் இதயம் படபடத்தது.

அதன்பின்னர் அவர் நிலைமை என்ன ஆனது என்று பல பேருக்குத் தெரியாது. கொஞ்ச நாள் படுத்த படுக்கையாக இருந்து அதன்பின் இறந்து விட்டதாகச் சொல்வார்கள்.

அவர் இறந்த கொஞ்ச நாளைக்கு இந்தியாவிலிருந்து கொக்கக் கோலாவை உண்மையாகவே விரட்டி அடித்தனர். அப்போது ஜார்ஜ் பெர்னாண்டஸின் பெயரை நாடு முழுக்க பெருமையாக உச்சரித்தது. காவலியிலும் பேசிக்கொண்டனர்.

ஆனால், சந்திரய்யாவை நினைவு செய்து கொண்டவர் எவரும் இல்லை.

கடல் பகுதியைச் சார்ந்து இருக்கும் ஊரில் தற்போது எங்குப் பார்த்தாலும், வெட்டபட்டு, கருத்த தலைகளைப் போன்று கொக்கக் கோலா தொங்குகின்றது.

அந்தத் தலைகள் முழுக்க முழுக்க உள்ளூர் மக்களுடையது. உள்ளூர் வேலைக்காரர்களுடயது.

கொஞ்சம் சர்க்கரை, கொஞ்சம் எலுமிச்சை, கொஞ்சம் வெட்டி வேர்களுடன் அதிசயங்களை நிகழ்த்தும் புண்ணியவான்கள் தற்போது இறந்து விட்டனர். அவர்களின் திறமையும் ஒழிந்துபோனது.

இந்தியாவில் மறுபடியும் கொக்கக் கோலா நுழைந்ததும் வாய்க்கால்கள் பாய்ச்சலிடும் கிராமங்களிலிருந்து, ஒரு சொட்டு தண்ணீர் கூடக் கிடைக்காத செந்நிற பாலைவனம் வரை அது பரபரப்பாகப் பரவி இங்குக் குழந்தைகளுக்குப் பாலுக்கு பதிலாகக் கொக்கக் கோலாவை புகட்டும் பழக்கத்தைப் புழக்கத்தில் கொண்டுவரும் அளவிற்கு மனிதகுலம் வளர்ச்சி அடைந்ததும், ஒரு குளிர் பேழையை வைத்துகொண்டு கொஞ்சம் பொருட்களை வாங்கி போட்டுக் கொண்டு அதனை விற்று சோம்பேறிகளை போல் கல்லா பெட்டிகளின் முன் உட்காருவதற்கு இளசுகள் எல்லாம் எத்தனித்ததும், அனைத்து ஊர்களிலும் எத்தனயோ தலைகள் உருளுகின்றன.

இன்னும் ஏதாவது ஒன்றிரண்டு மிச்சம் இருந்தால் அது கிருஷ்ணாவை போன்றொரின் கடைகள் மட்டும் தான்.

தற்போது கிருஷ்ணாவிற்கு அறுபது வயது.

தந்தை போலவே அவனும் அந்த அங்காடியில் அப்படியே உட்காருகிறான். வெள்ளை தாடியும், ஆங்காங்கே கிழிந்த கதர் துணிகளும் எந்த ரத்த சோற்றுக்கும் கரைபடியாமல் ஜொலிக்கின்ற கண்களும், கண்ணுக்குப் புலப்படாத வாளை இரு கரங்களுடன் திடமாகப் பிடித்துக்கொண்டு வீசுகிற கண்ணுக்குப் புலப்படாத போராளியின் தோற்றமும்….

கடந்த காலத்தின் எந்தவித தடையங்களும் அங்கு இல்லை.

பென்டெம் வம்சத்திற்கு கல்பதருவை போல் நின்ற சோடா என்றோ மறைந்து போனது. கொக்கக் கோலாவை விரட்டி அடித்ததும், மீண்டு வந்த உள்ளூர் பானங்களை அங்கு மறுபடியும் ஒரு முறை இறந்தன. நாள் முழுக்க அழுது கிடந்த குளிர் பெட்டிகள் ஏதோ கொஞ்ச நேரம் வேலை செய்யும்.

லட்ச கணக்கில் மக்கள் நிறைந்த ஊர். லட்சங்கள் திரட்டும் தங்கமான சென்டர்.

ஆனாலும், பிடிவாதமாக அப்படியே இருக்கிறான்.

கற்பனை விடவும் எதிர்பாராத இந்த உண்மையில் சமீபகாலத்தில் ஒரு நிகழ்வு இடம் பெற்றது.

இந்தியாவில் குடிதண்ணீர் விற்க சென்ற ஒரு அந்நிய கம்பெனி அனைத்து ஊர்களிலும் வியாபாரத்தை நிலைநிறுத்திக் கொண்டது போல் காவலியிலும் நிலைநிறுத்துவதற்கு முன்னுக்கு வந்தது. அதன் மேலாண்மையர் ஒருவர் கிருஷ்ணாவை சந்தித்தார்.

‘கிருஷ்ண மூர்த்தி அவர்களே… எதுக்காக நீங்க இப்படி இருக்கீங்க. தயவு செஞ்சி நீங்க எங்க தண்ணியை வித்துகொடுங்க. ஒரு ரூபாயிக்கு ஒரு ரூபாய் லாபம் பார்க்கலாம். காவலியில் இது மாதிரி ஒரு நல்ல சென்டர் வேற எங்கேயும் கிடைக்காது. கண்ணு முன்னாடி குவியுற காசை வேணாம்னு விட்டுடாதிங்க. என் பேச்சைக் கேலுங்க. எங்க ஏஜன்ஸியை எடுத்துகோங்க’ எனக் கெஞ்சி பேசிக் கிளம்பினார்.

அவர் இருக்கும்வரை ‘அப்படியேங்க… பாக்கலாம்’ என இருந்த கிருஷ்ணா, அவன் கிளம்பியதும் ஒரு அட்டை துண்டைக் கொண்டுவந்து அதற்கு கயிறினை கட்டி பென்டெம் சோடா சென்டருக்கு தொங்கவிட்டார். அதன்பின்னர் அதில் இப்படி எழுதிவைத்தார்.

‘இங்கு கம்பெனி குளிர்பானங்கள் விற்கபடாது’

‘இங்கு கம்பெனி தண்ணீரும் கிடைக்காது’

நல்ல வெயில் காலத்தில் மேல்காற்று செந்நிறத்தில் சட்டென எழுந்தாலும் கூடத் தைரியமாக அந்த அட்டை துண்டு அங்குத் தொங்கி கொண்டேதான் இருந்தது.

***

முகம்மது கதீர் பாபு – 1972 இல், ஆந்திரப் பிரதேசம், நெல்லூர் மாவட்டத்தின் தர்காமிட்டா பகுதியில் பிறந்த முகம்மது கதீர் பாபு ஒரு புகழ்பெற்ற தெலுங்கு சிறுகதை எழுத்தாளர். அவர் எழுதிய கதைகள், குறிப்பாக முஸ்லிம் சமூக வாழ்க்கையை வெளிப்படுத்துகின்றன. தர்காமிட்டா கதைகள், நியூ பாம்பே டெய்லர்ஸ் போன்ற சிறுகதை தொகுப்புகள் தெலுங்கில் மிகவும் புகழ் பெற்றவை. இதுவரை 20 நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன, அதில் பத்திற்கும் மேற்பட்ட தெலுங்கு சிறுகதை தொகுப்புகள் தொகுத்துள்ளார். தற்போது சாட்சி பத்திரிகையில் பணி புரிந்து வருகிறார்.

ஸ்ரீநிவாஸ் தெப்பல – 1989 இல் பிறந்த இவர், ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில், விசாகா மாவட்டத்தில், ‘துனி’ என்னும் ஊரைச் சேர்ந்தவர். சிறுவயதிலிருந்து சென்னையில் வசித்து வருகிறார். கணினி அறிவியல் படித்த இவர், வரைகலை வடிவமைப்பாளராக ஆறு ஆண்டுகள் பணி புரிந்து, தற்போது திரைத்துறையில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்து வருகிறார். ‘இவன்தான் பாலா’, ‘மாயப்பொன்’ தமிழிலிருந்து தெலுங்கிற்கு மொழிபெயர்த்துள்ளார். தெலுங்கிலிருந்து தமிழுக்கு ‘முக்குளிப்பான்’ ‘கரடி’ என்னும் நூல்களை மொழிபெயர்த்துள்ளார். தொடர்ந்து தெலுங்கு, தமிழ் இரு மொழிகளிலும் மொழிபெயர்த்துவருகிறார். Email : srinivasprasthanam@gmail.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here