Wednesday, February 18, 2026
Homeஇதழ்கள்2025 இதழ்கள்வெம்மையும் தணிவும்

வெம்மையும் தணிவும்

ஆர்த்தி முருகேசன்

ஜி. கார்ல் மார்க்ஸ் தமிழில் கதைகள் மற்றும் அரசியல் சார்ந்த கட்டுரைகள் எழுதி வருகிறார். இவரது புனைவுக் கதைகள் மத்திய மண்டலமான டெல்டா பகுதிகளைக் கதைக்களமாக்குகிறது. கதைகளில் வாழ்வின் பகுதிகளை நுண்ணியமாய் சித்தரிக்கும் முறை கொண்டவர். “வருவதற்கு முன்பிருந்த வெயில்” ஆசிரியரின் முதல் சிறுகதைத் தொகுப்பு. மொத்தம் 10 சிறுகதைகளை உள்ளடக்கியது. எதிர் வெளியீடு பதிப்பகம் இப்புத்தகத்தை பதிப்பித்துள்ளனர். 

“வருவதற்கு முன்பிருந்த வெயில்” எனும் தலைப்புக் கதை மொத்தத்திற்குமான உருவகத்தை கொண்டிருக்கிறது. வெயில் என்பது வெம்மையையும் வெளிச்சத்தையும் தருபவை. வருவதற்கு முன்பு என்றால் வெயிலின் தன்மையில் எதைக் கூறுகிறது எனும் சுவாரசியத்தைத் தூண்டுகிறது. 10 சிறுகதைகளில் இதே தலைப்பில் ஒரு கதையும் உள்ளது. 

புத்தகத்தின் என்னுரையும் முகப்புரையும் வாசிக்கையில் ஆசிரியர் பற்றியவை ஊர், படிப்பு, வேலை, குடும்பம், வாசிப்பு பழக்கம் பற்றி அறிய நேர்ந்தது. எழுத்தாளர் சாரு நிவேதிதா அவர்களின் முகப்புரை வாசிப்புக்கு வேகப்படுத்தியது.

ஒரு சிறுகதை இப்படித்தான் இருக்க வேண்டும், கதை மாந்தார்கள் இவ்வாறு நடக்க வேண்டும், கதையின் போக்கு இந்த கோட்டில் செல்ல வேண்டும் என முன் தீர்மானங்களோடு இலக்கியத்தை அணுகக்கூடாது எனும் பொதுமைப் பண்பு கடைபிடிக்கப்படுகிறது. அதிலும் சிறுகதைத் தொகுப்பை திறந்த மனமாக வாசிக்க வேண்டும். கதையின் போக்கில் எங்கு பரிமாணம் திசை மாறும் என்றே கூறமுடியாது. இதுவே நாவலுக்கும் சிறுகதைக்கும் இடையே உள்ள வித்தியாசம். நாவலில் திசைமாற்றத்தின் செயல்முறை மெதுவாக நிகழும். சிறுகதையில் வேகமாக நிகழும்.

வாசகர்கள் கொண்டுள்ள பிம்பங்களையும் முன் அனுமானங்களையும் எந்த கதை உடைத்து தன்மை மீறி செல்கிறதோ, அதுவே தரம் வாய்ந்தது. மனதில் நிற்பது. அவ்வகையில், “வருவதற்கு முன்பிருந்த வெயில்” தரம் பெற்றிருக்கிறது.

இத்தொகுப்பில் உள்ள கதைகள் Fast Reading வகையை சார்ந்து, வாசிப்பிற்கு எளிதாக அமைந்திருக்கிறது. இயல்பான மொழி வடிவம், கதாப்பாத்திரங்களின் வடிவமைப்பு, நிகழ்வு விவரணை, நுணுக்கமான உரையாடல்கள், விவரிக்க படும் உணர்வுகள் யாவும் கிராமத்து பின்னணியில் அமைந்து நம்முன் கதையைக் காட்சி படுத்துகிறது. இக்கதைகளை இரு கூறுகளுக்குள் பொருத்தி பார்க்கலாம். ஒன்று கிராமத்தினுள் இழையோடி இருக்கும் பண்பாட்டின் வெளிப்பாடுகள் மற்றொன்று மனித உணர்வுப் பரிணாமங்களின் வெவ்வேறு உருவங்கள்.

சிறுகதைகளின் போக்கு, முடிவு ஆகிய இரண்டும் எந்தப் பக்கச்சார்புமின்றி நடுநிலையாக நிலைத்திருக்கும் தன்மையைப் பெற்றிருப்பது, கதையை மீறிய ஒரு இயல்புதன்மையை வெளி கொணர்கிறது. கதையை ஒரு மையக்கருவை நோக்கி நகர்த்தாமல் கதாபாத்திரங்களின் இயங்குதல் மூலம் கதை எழுப்பப்படும்போது, கதாபத்திரங்களின் தன்மை இன்னும் ஆழமாக விரிவடைந்து கதைக்கு வலு சேர்க்கின்றன. திறந்த நிலையுடைய இடத்தை நோக்கி கதாப்பாத்திரங்களை நெறியாளும் எழுத்தாளரின் நடை, இவரது மற்ற படைப்புகள் நோக்கியும் எதிர்ப்பார்ப்பு தூண்டுபவை.

எழுத்தாளர் கதையின் கருவை நேரடியாகக் கூறாமல் காட்சிகளை முன்வைத்து கடத்துகிறார். எடுத்துக்காட்டாக, செவப்பு ஓணான் கதையில், மகனை அவனுடைய கல்வி செலவிற்கு பணம் வாங்க சித்தப்பா வீட்டிற்கு அனுப்பும் பெற்றோர். சித்தப்பா வீட்டிற்கு சென்று வரும் மகனை அழைத்துக்கொண்டு அப்பா ஊர் சுற்றிவிட்டு வீட்டிற்கு வருவார். இக்கதையில் அப்பா மகன் காட்சி அமைதியாக ஆரம்பித்து மனதை சுணங்க வைத்து இறுதியில் மகிழ்ச்சியாக முடித்திருப்பார். இதில் மகனிற்கு குடும்பத்தின் பொருளாதார நிலையை புரிய வைப்பதே கதைக்கரு. புரியவைப்பதைவிட அவன் மனதில் பதிய வைக்கும் முயற்சி நடைபெறுகிறது. 

இவரது கதாப்பாத்திரங்கள் பெரும்பாலும் அமைதியும் ஏற்றுக்கொள்ளுதல் பண்பும் கொண்டவர்களாக தென்படுகின்றனர். அது கதையோடு பயணிக்கையில் நிறைவாக பிரதிப்பலிக்கிறது.

‘வார்த்தைகளின் மீது படரும் பனி’ கதையில் ஒரே பெண்ணிடம் இரு நண்பர்கள் கொண்டுள்ள வெவ்வேறு உணர்வுகள், அவை குவியும் இடத்தில் முரண்பாடான ஏற்றுக்கொள்ளுதலும் கதை முடியும் இடத்தில் அசாத்தியமான அமைதியும் நிகழ்கிறது.

‘ஆட்டம்’ கதையில் கணவனின் இறப்பில் கருவுற்றிருக்கும் இளம் இரண்டாவது மனைவியின் அமைதியான செயல் அவளின் பக்குவத்தைக் காட்டுகிறது. கிராமங்களில் ‘துக்க வீடு’ எவ்வாறு இயங்கும், எப்படி அதன் அடையாளங்களைப் பெறும், மக்களின் சிந்தனை யாவும் கூறியிருப்பார்.

முன்பு குறிப்பிட்ட ‘செவப்பு ஓணான்’ கதையில் சிறுவனின் விளையாட்டு காட்சி தொடங்கி மகனை கடன் வாங்க அனுப்பும் அப்பா நடந்துகொள்ளும் விதம், கடைசியில் வரும் அம்மாவின் செயல் அனைத்தும் தினசரி கிராமத்து வீடுகளில் அன்றாடம் நடப்பவற்றைத் தொகுத்து கூறுகிறது.

‘வருவதற்கு முன்பிருந்த வெயில்’ கதையில் காதலிக்கும் மகள் வீட்டிற்கு தெரிந்த பின் அப்பாவின் கோர முகத்தை கண்டு தயங்கும்போது அம்மாவின் வெகுளியான தைரியத்தைக் காண்பாள். அங்கு ஒரு ஆணாக அப்பாவின் கோபம் அர்த்தமற்றதாக போய்விடும். அங்கு காலம் காலமாக அப்பாவின் கோபம் அம்மாவின் தாங்குதலில் உள்ளது எனத் தெரிகிறது. கோபத்திற்கு இல்லாமல் அப்பாவின் முட்டாள்தனத்திற்கு யோசித்து மகள் முடிவெடுப்பது கட்டுடைத்த மீறல் ஆகிறது.

இதே போல் ‘அப்போது அது வேறாக இருந்தது’ கதையில் அப்பா மகள் உறவின் தொடரை வேறொரு பாணியில் காட்டி, அவர் உதிர்த்த தவறின் வீரியத்தை கண்டுகொள்ள செய்வார். மனைவியின் இறப்பிற்கு பின்னால் மச்சான் மற்றும் மாமியாரின் உறவு குறித்து வரும் காட்சிகள் அத்தனை வாஞ்சையாக உள்ளது.

நான்கு கதைகள் ஆண் பெண் இடையே உள்ள முரண்களை காட்டும் கரு கொண்டிருக்கிறது. ‘காட்டாமணக்கு’ கதையில் ஆண் தன் எதிர் பாலினம் மீது எவ்வாறு தன் தாழ்வு மனப்பான்மையை செயல்கள் மூலம் காட்டுகிறான் என கூறியிருப்பார். தவறின் பொழுதுகளில் குற்றவுணர்ச்சி எவ்வாறு தன் பங்கு செய்கிறது என்பதை மறைமுகமாகக் கூறுகிறது.

மற்றொரு கதையான ‘மகிழம்பூ’ கணவன் மனைவிக்குள் இருக்கும் புரிந்துணர்வு, தன் இணை தன்னை மீறி போனாலும் எவ்வாறு செயல்படுகிறது எனக் காட்டுகிறது. இதில் ஒரு பக்கம் துரோகம் மறு பக்கம் தியாகம் எனத் தென்பட்டாலும் இக்கதையின் பிரதானம் இருவரின் புரிந்துணர்வைக் காட்டுகிறது.

‘டிராகன் டாட்டூ’ கதையில் ஆண் ஒருவன் விலைமகளுடன் இருக்கும் கதையில் பெண்ணிடம் அவன் என்ன எதிர்பார்க்கிறான்? என்ன அவனுக்குள் ஓடுகிறது? அவளை எவ்வாறு நடத்துகிறான்? கடைசியாக அவளிடம் என்ன கேட்பான்? எனும் கேள்விகளுக்கு வெளிப்படையாக இல்லாமல் உள் அடுக்குகள் மூலமே அமைந்த எழுத்து ஆண்களின் மறைக்கப்பட்ட முகமாககிறது.

‘கட்டுதரை’ எனும் கதை முழுதும் கிராமத்து மக்களிடம் பழக்கப்பட்ட அன்பு எவ்வாறு நெகிழ வைக்கும் என்பதன் எளிமையான எடுத்துக்காட்டு. வசதியான வீட்டுபையன் தன் வீட்டு கால்நடைக்கு மருத்துவம் பார்த்த தாத்தா மீது கரிசனை காட்டுகிறான். அந்த கரிசனை எப்படி தனிமனிதனின் சுயமரியாதையைத் தாக்குகிறது என காட்டும் கதை.

திடமான சுதந்திர போக்கு உடைய பெண் கதாப்பாத்திரங்கள் கதைகளில் பரவலாக வருகின்றனர். எடுத்துக்காட்டாக ‘உப்புசுவை’ கதையில் திருமணத்திற்கு பிறகு காதலித்தவனை காணச் சென்று வரும் கதையின் நாயகி ‘சிறப்பான ஒன்று’. அடுத்து என்ன என்பதில் தெளிவுள்ள இருவரும் அக்கணத்தில் காதலில் எவ்வளவு வெளிப்படையாக உள்ளனர் எனக் காட்டும் கதை. அதேபோல், முதல் கதையில் அப்பாவின் இரண்டாம் திருமணத்தை ஆதரித்து மகள் முத்தம் கொடுக்கும் இடம், முழு நெகிழ்வு! அம்முத்தம் ஒரு வகையான காப்பாற்றுதல் வழி.

கதைகளில் இடம்பெறும் கிராமத்து பாங்கான காட்சிகள் மனதிற்கு மிகவும் நெருக்கமாகிறது. டெல்டா பகுதிகளில் இறப்பு எவ்வாறு கொண்டாடப்படும்? அந்த தெருவின் மக்களின் அந்நாளை எவ்வாறு பாதிக்கிறது? கரகாட்டகாரர் மீதுள்ள மக்களின் எண்ணம் என்ன? என்பதில் ஆரம்பித்து கிராமங்களில் பெரிய வீடு எவ்வாறு இருக்கும்? வீட்டின் அமைப்பு, கொள்ளைப் புறத்தின் அமைப்பு, மாடு கொட்டகை, வைக்கோல் போர், கவணை, படல், துணி வைக்கும் இடம் பற்றி கதைப்போக்கில் குறிப்பிடிருந்தது, அம்மக்களின் வாழ்க்கைத் தன்மையை கற்பனை செய்துகொள்ள ஏதுவாக அமைகிறது. 

கிராமங்களில் உள்ள பெரிய வீட்டிற்கும் ஏனைய மக்களுக்கும் உள்ள அன்றாடத் தொடர்பு என்ன, அது மக்களின் பழக்கவழக்கங்களில் எவ்வளவு தொடர்புடையது என்பதும் கதையின் வாயிலாக புரிந்துகொள்ள முடிகிறது. குறிப்பாக கதையின் சொற்றோடர்களில் இடம்பெற்ற கிராமத்து வார்த்தைகள் கதையின் முழுமை உணர்வை வாசகர்கள் மத்தியில் கடத்துகிறது. 

மொத்தத்தில், நல் வாசிப்புக்கு உகந்த சிறுகதை தொகுப்பு. இத்தொகுப்பிற்கு உயிர்மையும் சுஜாதா அறக்கட்டளையும் இணைந்து “சிறுகதைக்கான சுஜாதா விருது” வழங்கியது குறிப்பிடத்தக்கது.

***

ஆர்த்தி முருகேசன் – திருவாரூர் மாவட்டத்தில் இடையூர் எனும் கிராமத்தை சேர்ந்தவர். தற்போது சென்னையில் சமூகப் பணியாளராக பணியாற்றி வருகிறார். நல்ல எழுத்துகளை தேடி வாசிக்கும் இவர் எழுதுவதிலும் ஆர்வம் உடையவர். மின்னஞ்சல் : aarthimurugesan82737@gmail.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here