ஜெயன் கோபாலகிருஷ்ணன்
நிஷாராதா ஈத்தாமொழி சந்திப்பில் வந்து கல்லூரிக்கு பேருந்து ஏற நின்றுகொண்டிருந்த பொழுது கணபதிபுரத்திலிருந்து வந்த 38B சரியாக அவள் முன்னால் வந்து நின்றது.
அவள் படிக்கட்டில் கால்வைத்து ஏறவும் பின்னிருந்து தாழ்ந்த குரலில் “சாயுங்காலம் நாலு மணிக்கு கீழ ரோட்டுல அந்த முக்குல நிப்பேன், இந்த மஞ்சக் கலர் சுடிதார் அடிபொழியாட்டு இருக்குவு என” என்று சொல்லிச் சென்றான் ரெஜின்.
அவள் திரும்பிப் பார்க்காமல் சிரித்தபடியே பேருந்தில் ஏறி தள்ளி நின்ற அவனை ஒருநொடிப் பார்த்துவிட்டு கண்களை விலக்கிக்கொண்டாள்.ரெஜின் வேகமாக நடந்து வண்டாவிளை செல்லும் சாலையில் மறைவதைப் பார்த்தபடியே பேருந்தின் முன் வாசலை ஒட்டிய இருக்கையில் அமர்ந்துகொண்டாள்.பேருந்து கல்லூரியை அடையும்வரை அவன் கல்லூரியின் கீழச்சாலை முக்கில் நின்றுகொண்டிருப்பதை விதவிதமாக அவளின் மனம் நினைத்துக்கொண்டது. அங்கே பேருந்தில் நிகழ்ந்துகொண்டிருக்கும் சிறு நிகழ்வுகளில் வலுக்கட்டாயமாகத் தன்னைப் பொருத்திக்கொள்ள முயன்றாள் என்றாலும், அவன் உருவம் ஒரு பச்சை நிற சட்டை அணிந்தவாறு அந்த முக்கில் நிற்பதே மீண்டும் மீண்டும் மனதில் வந்துகொண்டிருந்தது.
கல்லூரியில் இறங்கியதும் எதிரே பள்ளத்தில் செல்லும் கீழரோட்டை ஒரு முறை திரும்பிப் பார்த்துக்கொண்டாள். வகுப்பறைக்குள் சென்று அமர்ந்து கொண்டபொழுது, தான் தேவையில்லாமல் சிரித்துக்கொண்டிருப்பதாக அவளுக்குத் தோன்றவே தன் உதடுகளை கையைக்கொண்டு ஒரு முறை அழுத்தி சரிசெய்துகொண்டாள்.
அவள் வகுப்பில் அன்று வழக்கத்தைவிட சற்றே உற்சாகம் பெருகிக்கொண்டிருப்பதைப் அப்பொழுதுதான் கவனித்தாள்.
சற்றுமுன்பு வந்து அவள் அருகே அமர்ந்திருந்த அவள் தோழி சஜினியிடம் “ஏளா, ஏம்ட்டி எல்லாம் கெடந்து கலைவு இண்ணைக்கு” எனக்கேட்டாள்.
“அது ஒண்ணுமில்ல மக்கா, இண்ணைக்கு மத்தியானத்துக்கு பொறவு மேஜிக் ஷோ இருக்குவுல்லா அதான் எல்லானுவளும் கலஞ்சிட்டு கெடக்கானுவ”.
“ஓ, இப்பமே மேஜிக் மூடுக்கு பேயிற்றானுவளோ”.
“ஆமா, இண்ணைக்கு மொத்தம் ரெண்டு பீரியட்தான, அயுக்கம்பொறவு சும்மா கொஞ்ச நேரம் கெறங்கிட்டு அந்தால இரண்டு மணிக்கு பேய் ஆடிற்றோரியத்துல பட்டறைய போட்டுறவேண்டியதுதான்”.
அவள் திரும்பி ஆண்கள் பகுதியைப் பார்த்தாள். பத்துபேர் சுத்தியிருக்க நடுவில் ஒருவன் தனது கைக்குட்டையைக் கொண்டு தன் கைகளை மூடியவாறு ஏதோ செய்துகொண்டிருந்தான். அவன் அதைத்திறந்து உள்ளே ஒன்றுமே இல்லையென்று கைகளை விரித்துக் காட்டினான்.
“வித்த தெரியணும் கேட்டியா” என்றான்.
அருகேயிருந்த ஒருவன் “லே, என்னல வித்த, நீ மூடும்போதும் ஒண்ணுமில்ல, தொறக்கும் போதும் ஒண்ணமில்ல, இதுக்க பேருதான் வித்தையா” என்றவாறு அவன் கைகளில் குத்தினான்.
அன்று இரண்டாம் பாடவேளை முடிந்தவுடன் எல்லாரும் வகுப்பறையிலிருந்து வெளியேறிவிட நிஷாராதாவும் அவள் தோழிகளும் வகுப்பறையிலேயே அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். அவளுக்கு காலையில் ரெஜின் தன் காதருகே வந்து சொன்னது மீண்டும் மீண்டும் ஒலித்தது போலிருந்தது. தன்னையறியாமல் திரும்பிப் பார்த்துக்கொண்டாள். சஜினி “அங்க எவம்ட்டி இருக்காம்ணி திரும்பி பாத்துட்டு கெடக்கா” என்றதும் சற்றே கூச்சத்துடன் அவளை அடித்தவாறு சிரித்துக்கொண்டாள்.
“ரெஜின் இண்ணைக்கு வாறேணி சொன்னான் பாத்துக்க” என்றாள்.
“ஓ, அதான் பிள்ளை காலையில இருந்து ஒரே கொணட்டாட்டு இருக்குவோ”.
“போட்டி அந்தால”.
“வந்தாம்ணா ஒழுங்கா எனக்கு ஐஸ்கிரீம் வாங்கி தரச்சொல்லு, இல்லணா ஒங்க விசியத்தை ஒனக்க அப்பாய்ட்ட சொல்லி குடுத்திருவேன் பாத்துக்க”.
“சரிட்டி சொல்லுகேன்”.
“கழிஞ்ச தடவை வந்தால இப்படிதான் சொன்னா, கடைசில ஆளக்காணல, போட்டோல ஆளு கொள்ளாம், அதான் நான் நேர்ல பாக்கலாம்ணி வந்தா எஸ் ஆயிற்றான், இந்த தடவை தப்பமுடியாது பாத்துக்க”.
“சரிட்டி இண்ணைக்கு சாயுங்காலம் நம்ம பாக்கலாம்”.
மதியம் இரண்டு மணிக்கெல்லாம் அரங்கம் நிறைந்துவிட்டது. மொத்தம் நாற்பது வரிசை இருக்கைகளிருந்த அரங்கத்தில் நிஷாராதாவும் சஜினியும் சென்று மேடையிலிருந்து இருபதாவது வரிசையில் அமர்ந்துகொண்டார்கள். இரண்டரை மணிக்கெல்லாம் மேஜிசியன் முழுவதும் கருப்பு நிறமான உடையில் கழுத்தில் ஒரு அடர் சிகப்பு நிறத்துணியைச் சுற்றிவிட்டபடி மேடைக்கு வந்துவிட்டார். தன்னைப்பற்றிய ஒரு சிறிய அறிமுகத்தை மேடையின் நுனியில் நின்று பார்வையாளர்களுக்குக் கொடுத்துக்கொண்டிருக்க அவரின் உதவியாளர் பெண்மணி பின்னால் மேடையில் பொருட்களை அடுக்கினார். “இதோ நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த மேஜிக் ஷோ தொடங்குகிறது” என்ற அறிவிப்போடு ஒரு சிறிய அட்டைப்பெட்டியைப் பார்வையாளர்களை நோக்கிக் காட்டி அதில் ஏதேனும் இருக்கிறதா என்று கேட்டார். பார்வையாளர்களில் சில மாணவ மாணவிகள் “இல்லை இல்லை” என்று கத்தினர். பின் அவர் அட்டைப் பெட்டியை அவர் முன்னிருந்த மேஜையில் வைத்து ஒரு கருப்புத்துணியால் மூடினார். எலும்புகளே இல்லாதது போன்று தோன்றிய அவர் கைவிரல்களை அந்தக் கருப்புத் துணியின் மேலே வருடினார். சட்டென கருப்புத்துணியை இரு விரல்கள் கொண்டு தூக்கி உதறி பார்வையாளர்களிடம் காட்டிவிட்டு கீழே போட்டபின் அட்டைப்பெட்டியைத் தூக்கி தன் வலதுகையை அதனுள்ளே விட்டு புறா ஒன்றை எடுத்துக் காட்டினார். ஒட்டுமொத்த அரங்கமும் கைதட்டியது. சஜினி தன்னை மறந்து கைதட்டிக்கொண்டிருந்தாள்.
“ஏளா, போதும்ட்டி” என்றாள் நிஷாராதா.
ஒன்றரை மணி நேரமாக அவர் விதவிதமான மாயங்களை மேடையில் நிகழ்த்தினார். கடைசியாக “இதோ இங்கே இப்பொழுது உங்கள் முன்னே உலகப்புகழ் பெற்ற மேஜிக்கை நிகழ்த்தப்போகிறேன், அமெரிக்கா முதல் ஜப்பான் வரை ஆர்ட்டிக் முதல் அன்டார்டிக் வரை உலகம் முழுவதும் எல்லோராலும் ரசிக்கப்பட்ட புகழ்பெற்ற மேஜிக் இந்தியாவில், தமிழ்நாட்டில், நாகர்கோவிலில் உங்களுக்காக” என்றவாறு ஒரு நூறு ருபாய் தாளை எடுத்தார். அதை சுருட்டியும் விரித்தும் பார்வையாளர்களிடம் காண்பித்தார்.
பின், முதல் வரிசையை நோக்கி “பச்சைக் கட்டம் போட்ட சட்டைப் போட்டத் தம்பி மேடைக்கு வரமுடியுமா” என்று கேட்டார். அந்த இளநிலை மாணவன் அந்த நிகழ்வில் தானும் ஒரு பகுதியாகிவிட்டதனால் வந்த பெருமையினால் தன் முகத்தில் பொங்கும் சிரிப்போடு மேடையில் ஏறினான். அவர் அவனிடம் அந்த நூறு ருபாய் தாளைக் கொடுத்து அதை நன்றாகப் பார்த்துவிட்டு தருமாறு கேட்டார். அவன் பார்த்துவிட்டுக் கொடுத்தப்பின்பு அதைக் கையில் பிடித்தவாறு அவனிடம் ஒரு பேனாவைக் கொடுத்து அந்தத் தாளிலிருந்த எண்ணை அவன் கைகளில் குறித்துக்கொள்ளச் சொன்னார். அதை எழுதியெடுத்தப்பின்பு அவனை இருக்கைக்கு அனுப்பிவிட்டு அந்தத்தாளை தன் இடது கையில் வைத்து கருப்புத்துணிகொண்டு மூடினார்.பின் தன் எலும்பில்லாத விரல்களைக்கொண்டு அந்தத்துணியை வருடினார். “இதோ உலகப்புகழ்பெற்ற மேஜிக்” என்றவாறு துணியை எடுத்தார். அவர் கைகளிலிருந்த நூறு ருபாய் தாள் மறைந்திருந்தது. அங்கே நிறைந்திருந்த அரங்கில் முழு அமைதி நிலவியது. அவர் தன் எலும்பற்ற விரல்களை ஒன்றுமில்லை என்பதுபோல் கூட்டத்தின் முன் விரித்துக்காட்டி, பின் கூட்டத்தை நோக்கி கை நீட்டி சரியாக இருபதாவது வரிசையைில் கொண்டு வந்து தன் கைகளை நிறுத்தி “அந்த மஞ்சச் சுடிதார் போட்ட பிள்ளை எழும்பமுடியுமா” என்று கேட்டார். குழப்பத்தில் பின்னால் திரும்பிப்பார்த்த நிஷாராதாவை கையைப்பிடித்து “ஏளா எழும்புளா” என்று தூக்கிவிட்டாள் சஜினி.
“உங்கள் பெயர் என்ன ?” என்றார்.
“நிஷாராதா”.
நிஷாராதாவை நோக்கி அவர் தன் விரல்ளை சுழற்றியபின் “நிஷாராதா உங்கள் பையைத்திறந்து பார்க்கமுடியுமா” என்றார். அவள் அதிர்ச்சியும் குழப்பமும் நிறைந்தவளாகத் திரும்பி சஜினியைப் பார்த்தாள்.
“என்ன யாம்ளா பாக்கா, பேக்க தொறந்து பாரு”.
அவள் குழம்பிய முகத்தோடு பையைத்திறந்து துளாவினாள்.இரண்டு புத்தகங்கள் மட்டுமே இருந்தன.
“நல்லா தேடுட்டி” என்ற சஜினியை முறைத்துவிட்டு மீண்டும் கைவிட்டு தேடியவளின் கைகளில் சுருட்டிவைக்கப்பட்ட நூறு ருபாய் தாள் அகப்பட்டது. அவள் கைகளிலிருந்து அதைப்பறித்த சஜினி துள்ளியவாறு அதை விரித்துக் கூட்டத்தினிரிடம் காட்டினாள். “இதோ உலகப்புகழ்பெற்ற மேஜிக் உங்கள் முன்னே நிகழ்ந்துகொண்டிருக்கிறது” என்றவாறு முதலில் வந்த மாணவனை அழைத்து ஒலிவாங்கியில் அவன் கைகளில் குறித்திருந்த எண்ணைப் படிக்கச்சொன்னார். அவன் ஒவ்வொரு எண்ணாகச் சொல்ல சஜினி அது சரிதான் என்று கூட்டத்தினருக்குத் தெரிவிக்கும் பொருட்டு தன் மடக்கியக் கையை வானத்தை நோக்கிக்குத்தினாள். “இதோ உலகப்புகழ்பெற்ற மேஜிக்” என்றவாறு அவர் பார்வையாளர்கள் முன் பணிந்தார். அனைவரும் எழுந்து நின்று கை தட்டினர்.
கூட்டம் கலைந்து வெளியேறிக்கொண்டிருக்க சஜினி நிஷாராதாவை நச்சரித்துக்கொண்டிருந்தாள்.
“ஏட்டி ஒனக்க பைக்க எப்படியாங்கம் அந்த ருவா வந்து”.
“அதாம்ளா எனக்கம் தெரியமாட்டேங்குவு”.
“ஒரு வேளை நேரத்தே வந்து வச்சிட்டு பேயிருப்பாரோ”.
“அது எப்படிட்டி எனக்க பைல வைக்க முடியும்”.
“அப்பம் நீ காலேஜிக்கி வாறக்கு முன்னுக்கே அவருட்ட வாங்கி வச்சிருப்பா”.
“ஆமா அவரு எங்க மாமா தான நான் வாங்கி வைக்கியதுக்கு”.
“அப்பம் எப்படிட்டி வந்து”.
“எனக்கெப்படிட்டி தெரியும்”.
“ஒரு வேள இந்த பயக்க யாரம் வச்சிருப்பானுவளோ”.
“நான் வரும்போது கிளாஸ்ல எல்லானுவளும் இருந்தானுவ, நான் பைய கிளாஸ்ல வச்சிட்டு எங்கையும் போவலல்லா, பொறவு எப்படியாங்கம் அவனுவ வைப்பானுவ”.
“ஏட்டி நீ கள்ளப்பொய் சொல்லாத என, ஒனக்கு தெரியாம எப்படிட்டி ருவா பைக்க வரம்”.
“நம்புளா, சத்தியாமாட்டு எனக்கு தெரியாது”.
“அந்தாளுக்க வீடு எங்க”.
“யான், அவரு சொன்னாருல்லா, மேக்க காப்பிகாடு பக்கம்ணி, யான் என்னத்துக்கு கேக்கா”.
“இல்ல அவருக்கு ஈத்தாமொழி பக்கம் எங்கயும் ஊராணி தெரிஞ்சிகிடுயதுக்குத்தான்”.
“லேட்டி, அப்பம் நீ என்ன நம்பமாட்டங்கா என”.
“நம்புயது மாதிரியாட்டி இருக்கவு, அவருக்க கையில அங்க மேடையில இருந்த ருவா ஒனக்க பைக்க எப்படிட்டி வரம்”.
“அதாம்ட்டி எனக்கு தெரியலணி சொல்லுகேன், சரி அப்பம் ஒண்ணு செய்வமா, இது கள்ளநோட்டாணி பாப்போம், கீழ ரோட்டுல மற்ற கம்புக் கண்ணன் கடையில என்னதாம் வாங்குவம்ட்டி”.
“நான் வரல்ல, அவன் பத்து ருவா தாள குடுத்தாலே நல்ல நோட்டாணி பாக்க கண்ணு கம்புபோல நீண்டு ருவாய்க்கு அந்த கரைக்கும் இந்த கரைக்கும் போவும், இத பாத்து நல்ல நோட்டு இல்லணி அறிஞ்சாம்ணா அவ்வளவுதான், போலீஸ்ல புடிச்சி குடுத்திருவான்”.
“ஒரு மயிரும் ஆவாது நீ வா, நம்ம போவோம்”.
கம்புக்கண்ணன் கடைக்குச் சென்று “எண்ணே ரெண்டு சர்பத்” என்றவாறு நிஷாராதா நூறு ருபாயை நீட்டினாள்.
“சில்லறை இல்லியா பிள்ளே” என்றவாறு சலித்துக் கொண்டே அவர் ருபாயை ஒரு கைகளால் பிடித்து மறு கை விரல்களால் சுண்டினார். பின் அதைப் பல்வேறு முறைகளில் திருப்பி பார்த்துவிட்டு கல்லாப்பெட்டியில் போட்டார்.
அவர்கள் சர்பத்தைக் குடித்துவிட்டு சில்லறையை வாங்கிவிட்டு வெளியே வந்தனர்.
“ஏட்டி, உண்மையிலேயே ருவாதாம்ட்டி, அதம் கம்புக்கண்ணன் அப்ரூவ் பண்ணிட்டாம்ணா அது கள்ளநோட்டாட்டு இருக்க வாய்ப்பேயில்ல கேட்டியா, ஏம்ணா அவன் ரிசிர்வ் பேங்குக்கம் மேலலா” என்றாள் சஜினி.
“ஏட்டி எனக்கு பயமாட்டு இருக்கவு கேட்டியா, எதுக்கும் அந்தாளுட்ட கேப்பமா”.
“போட்டி அந்தால, அவரு எப்படிட்டி மேஜிக் ரகசியத்த சொல்லுவாரு”.
“எனக்கு ஒரு மாரி கை காலெல்லாம் நடுங்குவு கேட்டியா” என்றவாறு நடந்தவளின் தோளில் ஒரு விரல் பட்டது.
“ரெஜினு”.
“யாம் ஒரு மாரி இருக்கா”.
அவள் அனைத்தையும் ஒப்பித்தாள். அவன் “நீ யான் அதுக்கு பயப்படுதா அது எதாம் ட்ரிக் இருக்கம். ஒனக்க கிளாஸ்லதான் எவனாம் கொண்டு வந்து ஒனக்கு தெரியாம வச்சிருப்பான்”.
“சரி அது எந்தாலையும் போட்டு, இவளாங்கம் சஜினி, நான் சொல்லிருக்கம்லா”.
அவன் “நல்லாயிருக்கியல்லா” என்றான்.
“அவா ஐஸ்கிரீம் கேக்கா” என்றாள்.
“போட்டி” என்றவாறு நிஷாராதாவின் கைகளில் குத்தினாள்.
“அதுக்கென்ன பேயிரலாம்” என்றான்.
“பெரிய கடைக்குதான் போணுமாம்” என்றாள் நிஷாராதா.
“அவா சும்மா சொல்லுகா” என்றவாறு மீண்டும் அவள் கையில் குத்தினாள் சஜினி.
நாகர்கோயில் குளத்து பஸ்ஸ்டாண்டிற்கு வந்து சஜினி தக்கலை செல்லும் பேருந்தில் ஏறிச் சென்றுவிட இவர்கள் இருவரும் 38L பேருந்தில் ஏறிக்கொண்டார்கள். நேரம் இருட்டிவிட்டிருந்தது. பேருந்து ஈத்தாமொழி வந்ததும் இருவரும் இறங்கிக்கொண்டார்கள். அவன் அவளிடம் கண் காணித்துவிட்டு விலகிச்சென்றான். அவள் வீட்டிற்குச் சென்று வீட்டின் நான்கு பாழிக் கதவைத்திறந்து கொண்டு உள்ளே செல்லவும் இருளுக்குள்ளிருந்து அவள் கன்னத்தில் ஒரு அறை விழுந்தது.
அவள் தடுமாறி வாசலிலேயே விழுந்தாள். வலது உதடு கிழிந்து ரத்தம் சொட்டி அவள் அணிந்திருந்த மஞ்சள் சுடிதாரெல்லாம் ரத்தக்கறையாகியது.
விளக்கை போட்டுவிட்டு வெளிச்சத்தில் அவளைப் பார்த்து முறைத்தபடியே பல்லைக் கடித்துக்கொண்டு கையைப்பிடித்து வீட்டிற்குள் இழுத்தார் அவளின் அப்பா திரவியம்.
“கையைப் கண்டியாட்டி, மரம் யாறி காய்ப்பு பிடிச்சிருக்கு, ஒரோரு பைசாயாட்டாங்கம் சேத்து ஒன்னை காலேஜிக்கு அனுப்புயது, நீ என்னடாண்ணா அங்க ஒரு பயலுக்க கூட கெறங்கிட்டு வாறா என. அப்படி என்னட்டி ஒனக்கு நாக்குல நொடி, கெடக்காதாட்டி நாக்கி, ஐஸ்கிரீம் அவளுக்கு, அடுத்தவன்ட்ட இப்படி யாணாகுடிச்சி வாங்கி தின்னுட்டு கெடக்கியதுக்கு தெக்க வெளைக்க பேய் கொஞ்சோல பீ அள்ளி தின்னலாம்ட்டி. நீ கேக்கியதெல்லாம் வாங்கித் தந்துதான வளத்திருக்கு, பொறவு யாம்ட்டி இந்த அலப்பு”.
“சைசு சைசாட்டு வாங்கி குடுத்திருப்பான், அதான் கூடால பேயிருப்பா” என்றாள் அம்மா தங்கக்கனி.
“அப்படி அலந்து திரியாட்டு தான் என்னணி”.
அவள் எல்லாம் தன் வீட்டிற்கு தெரிந்துவிட்டது என்பதை அறிந்து எதுவும் சொல்லாமல் , வழிந்து கொண்டிருந்த குருதியைத் துடைத்துக்கொண்டிருந்தாள்.
“எந்தாலையும் போங்க, நான் அடுத்த செமஸ்ட்டருக்கு பீஸு கெட்டமாட்டேன், நீ படிச்சா படி இல்லணா எங்கயாம் வீட்டு வேலைக்கு போ” என்றவாறு வீட்டைவிட்டு வெளியேறினார்.
“அவா யான் பாத்திரம் பூச போவப்போறா, அதான் ஊரு ஊரா மாப்பிளை பிடிச்சிக்கிட்டு திரியாலா, எவன் கூடயாம் போவா” என்றாள் தங்கக்கனி.
நிஷாராதா தன் சுரிதார் துப்பட்டாவால் உதடை அழுத்திப்பிடித்துக் கொண்டிருந்தாள். அதை விலக்கியபோது அது முழுவதும் ரத்தத்தால் நனைந்திருந்தது.தங்கக்கனி ஓடிச்சென்று “இங்கேருங்க ரத்தம் நிக்கமாட்டேங்கவு, இந்த ஆஸ்பத்திக்கு கூட்டிட்டுப் போங்க” என்றபடி திரவியத்தின் கையைப்பிடித்தாள்.
“அந்தால கெடந்து சாவட்டு” என்று படலையைத் திறந்தவர் திரும்பி வந்து “வாட்டி ஆஸ்பத்திரிக்குப் போவம்” என்றார்.
மூன்று தையல்கள் போடப்பட்டு ஒரு நாள் ஆஸ்பத்திரியில் இருந்துவிட்டு வந்தார்கள். திரவியம் நிஷாராதாவிடம் பேசுவதைக் குறைத்துக்கொண்டார்.
தையல் பிரிப்பதற்காக மருத்துவமனைக்குக் கூட்டிச்சென்றவர் திரும்பக் கொண்டுவந்து வீட்டில் விட்டபொழுது “சரிதான் சுண்டு கிழிஞ்சி கோரையாயிற்றுல்லா எனி பொறத்தால வரமாண்டான்” என்று சொல்லிவிட்டு வெளியே சென்றார். தங்கக்கனிதான் எப்பொழுதும் பேசிக்கொண்டிருந்தாள்.
“தவப்பன் பிச்சக்காரம்லா, எதாம் கொத்தனுக்கு கெட்டி குடுத்துப்புடுவாணிட்டு இவா மாப்பிளை பிடிக்க பேயிருக்கா, அதான் நல்லா சொளயா பைசா உள்ளவன பாத்து பிடிச்சிருக்கா, அவன் இந்த வண்டாவிளை வெறவு யாவாரிக்க மொவனாம்லா” என்றாள் ஒரு நாள்.
“நம்மக்கிட்ட இருக்கப் பணத்துக்கு நம்ம எதாம் கொரங்கு மூஞ்சிக்காரனுக்கு கெட்டி வச்சிருவம்லா, அதாம் ஸ்டைலா அவளாட்டு ஆளு புடிச்சிருக்கா, நல்லா செவப்பா முடியக் கோரி எளச்சிட்டு வந்தவொடன மயங்கிட்டா” சாப்பிட்டத்தட்டை எடுத்தப்படியே சொன்னாள் ஒருநாள்.
நிஷாராதா குளித்துவிட்டு வெளியே வரும்போது ஒரு நாள் “நம்ம கூடிப்போனா ஒரு இருவது பவுனு உருப்படி போட்டுகிடுவமா, அது எப்படியாங்கம் நெஞ்சு நெறையும், அதான் வெறவு யாவாரிக்க மொவம்லா, வாங்கி கழுத்துல இருந்து கொப்புளு வர அடுக்கலாம்லா” என்றாள் தங்கக்கனி.
தங்கக்கனி சொல்வதெல்லாம் புதுமையாக இருந்தது நிஷாராதாவிற்கு. அவள் ரெஜினை சந்தித்ததை அவனோடு காதலில் விழுந்ததை அசை போட்டபடியே நாட்களைப் போக்கிக்கொண்டிருந்தாள்.அவள் கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும் பொழுதுதான் ரெஜினை சந்தித்தாள். அவன் தான் வந்து காதலைச் சொன்னான். கல்லூரி கீழ் ரோட்டில் அவள் ஜெராக்ஸ் எடுக்கத் தனியாக நிற்கும் பொழுதுதான் அவன் அருகில் வந்து பேசினான், அவளைக் காதலிப்பதாக சொல்லிவிட்டு அவள் பதிலென்ன என்று இரண்டு நாட்களில் சொல்லவேண்டும் என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டான். ஒரு நொடித் திகைத்தவள் அவன் யாரென்பதை நினைவுபடுத்திப் பார்த்தாள். அவனை அவள் அதற்கு முன்பு பார்த்ததில்லை என்பது அச்சத்தை உண்டாக்கியது. அன்று பேருந்தில் வீடு செல்லும் வரை அவனுக்கான பதிலையும் அவன் யாரென்பதையும் மனதில் நினைத்தபடியே அமர்ந்திருந்தாள். மெல்ல அவனின் முகம் துலங்கியது. அவனை அவள் கவனித்ததில்லை என்றாலும் அவன் முகம் சற்றுப் பரிச்சியமானது போலத் தோன்றியது. அவன் இரண்டு வாரங்களுக்கு முன்பு கல்லூரிப் பேருந்து நிலையத்தில் நின்றது அவளுக்கு நனைவிற்கு வந்தது. ஆனால் அவள் நினைவில் அன்றும் அவன் இன்று அணிந்திருந்த அதே சட்டையைத் தான் அணிந்திருந்தான். சற்றே யோசித்துப் பார்த்தால் அவளின் நினைவில் அவள் பல இடங்களில் அவனைப் பார்த்திருப்பதாகத் தோன்றினாலும் அத்தனை இடங்களிலும் அவன் அதே சட்டையை அணிந்தபடி நின்றதுதான் அவளுக்கு குழப்பமாக இருந்தது. அன்று ஈத்தாமொழியில் பேருந்திலிருந்து இறங்கியபொழுது அவளுக்கு அவள் அப்பாவின் நினைவுத் தட்ட ரெஜினிடம் “இல்லை நான் உன்னை விரும்பவில்லை” என்று சொல்லவேண்டுமென்று நினைத்துக்கொண்டாள்.
சொல்லியதுபோல அடுத்து இரண்டு நாட்களும் அவனிடம் சொல்லப்போகும் “இல்லை” என்கிற பதிலை வெவ்வேறு வகைகளில் கற்பனை செய்து கொண்டிருந்தாள். ஒவ்வொரு பதிலுக்கும் அவன் வெவ்வேறு வகைகளில் அவளின் கற்பனையில் சொல்லாகவோ அல்லது உடலாலோ பதில்சொல்லிக்கொண்டிருந்தான். இரண்டு நாட்கள் கழித்து சாயுங்காலம் அவள் கல்லூரியைவிட்டு வெளியே வரும்பொழுது அவன் வாசலிலேயே நின்று கொண்டிருந்தான். அவளைக் கண்டதும் அருகில் வந்து “யோசிச்சாச்சா” என்றான். அவள் அஞ்சி விலகி சாக்கடையின் அருகில் சென்றான். “கடக்காலுக்க வுழுந்துராத” என்றான். “உண்டா இல்லையாணி சொல்லு” என்றான். அவள் மனதில் நினைத்து வைத்திருந்த பதில்களைத்தும் ஒரு நொடியில் காணாமல் போயிருந்தது. அவள் மனம் அந்த நொடியில் மீண்டும் பதில்களைத் தேடியது. அவன் சற்றே அவளை நெருங்க அவள் “உண்டு” எனச் சொல்லிவிட்டாள்.
நிஷாராதா வீட்டின் சூழ்நிலையை அவள் தோழியின் வழியாகத்தான் ரெஜினுக்குச் சொல்லி அனுப்பினாள். ரெஜின் தோழி மூலமாக அனுப்பிய தகவலின்படி ஒரு அமாவாசை இரவு பதினோரு மணிக்கு வீட்டின் நான்கு பாழிப் பின்கதவைத் திறந்து மேல் பாழிகளைப்பூட்டாமல் வெளியே இருந்த கழிவறைக்கு அருகில் சென்றாள். கழிவறையின் பின்னால் வந்து ஒழித்திருந்த ரெஜின் அவள் வலது கையைப்பிடித்து இழுத்துக் கொண்டு ஓடினான். இரண்டு தென்னந்தோப்புகள் தாண்டியபின் அவள் திரும்பி தன் வீட்டைப்பார்த்தாள். இருளினூடாக மேல்பாழிகள் திறந்திருந்தக் கதவின் வழியாகத் தெரிந்த உள்ளறையின் ஒளி தொலைவானின் வெள்ளி போல புள்ளியாகத் தெரிந்தது. ரெஜின் அவளை அணைத்துக்கொண்டான். அவள் இதுவரை தன் வாழ்வில் கண்டிராத ஈத்தாமொழியின் தென்னங்காடுகளினூடாக அழைத்துச் சென்றான்.
தலைக்குமேல உயர்ந்திருந்த ஒரு வரப்பின் மேல நெடுநின்ற தென்னைகளைக் கண்டு திகைத்து நின்றுவிட்டாள். அவன் வரப்பின் மீது தாவி ஏறினான். சற்றுத் தள்ளி நடந்து சென்று பள்ளத்தில் வைக்கப்பட்டு தளிர்த்து நின்ற தென்னங்கன்றின் ஓலையைப்பிடித்தபடியே அவளுக்கு கையை நீட்டினான். தான் எங்கிருக்கிறோம் என்ற போதம் சற்று பிசகிவிட தன் தலையை ஆட்டிக்கொண்டு தன்னிலையை மீட்க முயன்றாள். ஆனால் அவன் கையும் அதன் பின்னே தெரிந்த ஓங்கிய தென்னைகளையும் தவிர வெறெதையும் அவள் கண்களும் மனமும் காணவில்லை. அவள் அறியுமுன்பே அவன் அவளைத் தூக்கினான். அந்த மேல்தோப்பின் மறு எல்லையில் தார் சாலையும் அதில் நிற்கும் இரண்டொரு தெருவிளக்கையும் பார்த்ததும் அவள் நினைவு சட்டென்று மீண்டது. அவர்கள் அந்த தார்சாலையை அடைந்ததும் சரியாக நாகர்கோயில் செல்லும் கடைசிப் பேருந்து தொலைவில் வருவதைப் பார்த்தார்கள். கைக்காட்டி அதை நிறுத்தி அங்கிருந்து நாகர்கோயில் சென்றார்கள்.
ஜிவிஷா “அம்மா நீ கூப்பிட வருவியா, மத்தியானம்” என்று கேட்டபொழுது நிஷாராதா ரெஜினைப் பார்த்தாள்.”பேயிட்டு வாயாம், யான் என்ன பாக்குயா” என்றான்.
அன்று ஜிவிஷாவின் கல்லூரி நூற்றாண்டு விழா. நிஷாராதாதான் தன் மகளைப் புறப்பட்டு விட்டாள். அவள் அந்நிகழ்விற்காகவே வாங்கிய புத்தம் புதிய கிளிப்புகள், பொட்டு மற்றும் மஞ்சள் நிறச் சுரிதார் ஆகியவற்றை அணிந்து கொண்டு புறப்பட்டபொழுது நிஷாராதா ஜிவிஷாவின் கன்னத்தில் முத்தமிட்டு அனுப்பிவிட்டாள்.
அன்று நண்பகல் பன்னிரண்டு மணிக்கு கல்லூரி வாசலில் தனது ஸ்விப்ட் காரை நிறுத்திவிட்டு சாலையை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தாள் நிஷாராதா. உள்ளே தொலைவில் கல்லூரி அரங்கத்தினுள் நிகழும் நிகழ்வின் ஒலி மெல்லிசாகக் கேட்டுக்கொண்டிருந்தது. ஏதோ ஒரு கணத்தில் வீசிய காற்றில் உள்ளிருந்து வந்த ஒலியின் வேகம் கூட உற்சாகம் பொங்க ஒரு வயதான ஆணிண் குரல் துல்லியமாகக் கேட்டது.
“இதோ உங்கள் முன்னே இப்பொழுது உலகின் மிகப்புகழ் பெற்ற மேஜிக், அட்லாண்டிக் முதல் ஆர்டிக் வரை, அமெரிக்கா முதல் ஆண்டிப்பட்டி வரை, டேவிட் காப்பர்ஃபீல்ட் அஞ்சிய மேஜிக், இன்று இந்த நாகர் மாநகரிலே, திருவாங்கூரின் புகழ்பெற்ற கல்லூரியிலே வந்துவிட்டது. அதோ தொலைவில் அமர்ந்திருக்கும் மஞ்ச சுரிதார் அணிந்த பெண்
உங்கள் கைப்பையை கொஞ்சம் பார்வையாளர்களுக்கு திறந்து காட்ட முடியுமா”.
நிஷாராதா தன்னை அறியாமல் கல்லூரியினுள் ஓடினாள். ஓடிச்சென்று நிகழ்வு நடந்து கொண்டிருந்த மாபெரும் அரங்கிற்குள் கூட்டத்தினுள் புகுந்து அங்கு பார்வையாளர்களின் ஆரவாரத்தின் நடுவே தனது கைப்பயை விரித்து காட்டிக்கொண்டிருந்த ஜிவிஷா-வை கையைப்பிடித்து இழுத்து வெளியே கொண்டு வந்தாள். தன்னிடம் சண்டையிட்டமகளிடம் “ஒனக்கு ஒண்ணம் தெரியாது நீ சின்னப்பிள்ளை” என்று காரினுள் அமர வைத்துவிட்டு அரங்கத்தை நோக்கி ஓடினாள். அங்கே மேஜிக் நிகழ்ந்து முடிந்திருந்தது.
இளமையின் துடிப்புக் கொப்பளிக்கும் முகத்துடன் ஒரு பெண் தன் கையில் ஐநூறு ருபாய் நோட்டை பார்த்தபடியே அரங்கத்தின் நடுவில் அனைவரின் கண்களும் அவள் மீதிருக்கத் திகைப்புடன் நின்றுகொண்டிருந்தாள். நிஷாராதா அரங்கத்தின் பின்புறம் ஓடிச்சென்று அதன் பின்னிருந்த ஒப்பனை அறையின் வாசலில் நின்றுகொண்டாள். ஐந்து நிமிடத்தில் தனது கருத்த உடையையும் சிகப்பு நிற உடையையும் கழற்றிவிட்டு சாதாரண உடை அணிந்தபடியே வெளியே வந்த அந்தக்கிழவரை நிஷாராதா வழிமறித்தாள்.
“அந்த ருபாய்த்தாள் எப்படியாங்கம் பைக்குள்ள போவுவு” என்று கேட்டாள். அவளை வியப்புடன் கண்களைச் சுருக்கியபடியே பார்த்த அந்த வயதான மனிதனிடம் மீண்டும் மண்டியிடும் தொனியில் கேட்டாள், “தயவு செய்து சொல்லுங்க, அது எப்படி அங்க போச்சி”.
புன்னகையுடன் அந்த வயதான மனிதன் சொன்னான், “அது வெறும் கண்கட்டி வித்தை, மனசனுக்கு மனசிலாவக்கூடிய காரியமில்ல, அது உண்மையில்ல” என்று. சொல்லிவிட்டு வேகமாக அந்த இடத்தைவிட்டு நகர்ந்து சென்றான். நிஷாராதா தன் வலது உதட்டை தடவிப்பார்த்தாள். அவள் உதட்டில் போடப்பட்ட தையலின் காரணமாக வந்த தழும்பு அப்படியே அங்கேயே இருந்தது.
***
ஜெயன் கோபாலகிருஷ்ணன்: குமரி மாவட்டம் முருங்கவிளையில் பிறந்த இவர் தற்பொழுது பணி நிமித்தமாகச் சென்னையில் வசித்து வருகிறார். யாவரும் வெளியீடாக ‘நின்றெரியும் சுடர்’ எனும் சிறுகதைத் தொகுப்பு வெளிவந்துள்ளது. மின்னஞ்சல்: jeyangopalakrishnanv@gmail.com


