Wednesday, February 18, 2026
Homeஇதழ்கள்2025 இதழ்கள்தமிழர், இந்தியர், உலகப் பிரஜை - ஒரு எழுத்தாளராக நாம் யாராக இருக்கிறோம்?

தமிழர், இந்தியர், உலகப் பிரஜை – ஒரு எழுத்தாளராக நாம் யாராக இருக்கிறோம்?

ஆர். அபிலாஷ்

டந்த 75 ஆண்டுகளில் இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் இயங்கிய நாவலாசிரியர்களின் வரலாற்றை, வாழ்க்கையைப் பற்றிப் படித்துக் கொண்டிருக்கிறேன். பொறாமையாக உள்ளது – இலக்கிய படைப்பாளியாக இருந்தாலும் குறைந்தபட்ச விற்பனை, உலகளவிலான கவனம், பரிசுகள், விருதுகள், கல்விப்புலப் பணி, ஓரளவுக்குப் புகழ்பெற்ற நாவலெனில் அதற்கு திரைப்பட ஒப்பந்தம் என முற்றுமுழுமையானதொரு வாழ்க்கை அவர்களுக்கு அமைகிறது. அவர்களுக்கு அதிகாரத்தை நெருங்கிச் செல்ல எதாவதொரு கட்சியின் மறைமுக ஆதரவாளராக மாறி ஜால்ரா அடிக்கும் அவசியமும் இல்லை (அதெல்லாம் இங்கிலாந்தில் கூட விக்டோரிய மகராணியுடன் முடிந்துபோகிறது). 16-17ஆம் நூற்றாண்டுகளில் இங்கிலாந்தில் படைப்பாளர்கள் தோன்றிய போதிருந்த நிலையுடன் வேண்டுமானாலும் தமிழ்நாட்டு இலக்கியவாதிகளின் நிலையை ஒப்பிடலாம். இந்தியாவை எல்லாம் இந்த வட்டத்துக்குள்ளே கொண்டு வர முடியாது. ஒருசில மாநில மொழிகளை (குறிப்பாக தென்பகுதியையும் வங்காளத்தையும்) விடுத்தால் இந்திய இலக்கியத்திற்கு தத்தமது மாநில மொழிகளில் எந்த இடமும் உள்ளதாகத் தோன்றவில்லை. பல மாநிலங்களில் உயிர்த்தரித்தலை, நுகர்வைத் தாண்டி ஒரு வாழ்க்கை மக்களுக்கு இல்லை. 

தமிழ்நாட்டில் எழுத்தாளராக இருப்பதன் ஒரு முக்கியமான சிக்கல் நமக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைக்காது என்பது. மிகமிக அரிதாகத்தான் மொழிபெயர்ப்பு வழியாக அது சாத்தியப்படும். அப்போதும் தமிழ் அடையாளத்துக்காக அல்ல, இந்திய அடையாளத்துக்காகவே. இது படைப்பாளியின் ஆகிருதியை முழுமையாக வெளிப்படுத்த உதவாது. இதற்கு நாம் இந்திய ஒன்றியத்தின் பகுதியாக இருப்பதே காரணம். சுதந்திரப் போராடத்தின் பின்பு, நாம் தனியாகப் பிரிந்து சென்றிருந்தால் தமிழ்நாட்டு அரசே எழுத்தாளர்களுக்கு மிகப்பெரிய இடத்தை அளிக்கிற நிலை வந்திருக்கும். சர்வதேச வாசகர்களும் நமது தேசியத்தை, அரசியலை, நிலையைப் புரிந்துகொள்ள நம் படைப்புகளை வாசிக்க முன்வருவார்கள். இப்போது நாம் இந்திய தேசியத்தின் மணற்பரப்பில் ஒரு ஊசியாக மறைந்து போகிறோம். எந்த  குறிப்பிடத்தக்க ஜி.டி.பியும் மக்கள் தொகையும் இல்லாத எறும்பளவு தேசங்களுக்கு உள்ள முக்கியத்துவம் அவற்றின் தேசியத்தாலே வருகிறது. ஈழப்படைப்பாளிகளுக்கும் அவர்களது ஐரோப்பிய புலம்பெயர்வினாலும் உள்நாட்டு யுத்தத்தாலுமே ஒரு தற்காலிக தேசிய அடையாளம் கிடைத்து, அவர்களது எழுத்துக்குச் சர்வதேச அங்கீகாரம் வாய்த்தது (இது இந்தியாவுக்குப் புலம்பெயர்ந்து வந்த ஈழப் படைப்பாளிகளுக்கு கிடைக்கவில்லை. ஏனென்றால் நம் ஒன்றியம் அவர்களை சரியாக அங்கீகரிக்கவில்லை.) நம்முடைய போதாமை தேசியத்தின் போதாமைதான். நமக்கென ஒரு தேசியம் இருந்து அங்கீகரிக்கப்பட்டிருந்தால் தமிழில் உள்ள திறமைக்கு மிகப்பெரிய இடம் நம் படைப்பாளிகளுக்கு கிடைத்திருக்கும் – முக்கியமான காரணம் நமக்கு தமிழும் ஆங்கிலமும் நன்றாக வரும் என்பது.

இன்னொரு சிக்கல் – யாரைக் குறித்து, எதைக் குறித்து எழுதுவது எனும் சிக்கல் நம்மை ஆக்கிரமிக்கிறது. எண்பதுகள் வரைக்கும் நாம் சர்வதேச மனநிலையை நோக்கி எழுதினோம். அது ஒரு கற்பிதமான கருத்துருவாக, உணர்வு நிலையாக வைத்து என்றென்றைக்குமான எல்லாருக்குமான கதைகளை, கவிதைகளை எழுதப்பார்த்தோம். தொண்ணூறுகளில் ஆரம்பித்து (பின்நவீனத்துவ, இனவரைவியல் தாக்கத்தினால்) நாம் உள்ளூர் நம்பிக்கைகள், தொன்மங்கள், வரலாறு, இனவரைவியல், தன்கதைகள் என உள்-நகர்ந்தோம். ஆனால் அதன் ஒரு சிக்கல் நம்மால் நம்மை அதிகமாக பாதிக்கும் தேசிய அளவிலான பிரச்சினைகளைப் பேச முடியவில்லை என்பது. நம்மால் நம் மாநில அரசியலையும் காத்திரமாகப் பேச இயலாது – ஏனென்றால் அது ஒன்றிய அரசியலுடன் பிணைந்துள்ளது. நம்மால் இந்து மதத்தை விடுத்து சாதியத்தைப் பற்றியும் பேச முடியாது. ஏனென்றால் இந்து மதம் ஒன்றியத்துடன் பிணைந்த ஒன்று. நமக்கென்று தனித்ததாக உள்ள அனுபவங்களுக்கும், தரவுகளுக்கும் என்ன முக்கியத்துவம் உண்டு என்றும் நமக்குத் தெரியவில்லை. பின்காலனிய உலகில் நாம் ஒரு உப-பின்காலனிய மக்கள் திரளாக உள்ளோம்.

ஒரு பெரிய தேசத்தின் பகுதியாக உள்ளது பேசிப்பேசித் தீராத பெருஞ்சிக்கல். அது படைப்பாளிகளையும் சிந்தனையாளர்களையுமே அதிகமாக பாதிக்கிறது. ஒரு உதாரணத்துக்கு காப்காவை எடுத்துக் கொள்வோம். அவர் ஆஸ்திரிய-ஹங்கேரிய தேசத்தின் பகுதியான பிராகில் பிறந்தார். அவர் இறப்பதற்கு ஓராண்டுக்கு முன்னரே (1924) செக்கஸ்லோவோகியா  தோன்றுகிறது. அவர் செக் தேசப் பிரஜையாக இறந்தாலும் அவர் அப்படித்தான் தன்னைக் கண்டார் என்று சொல்வதற்கு இல்லை. அவர் ஜெர்மன் மொழியில் எழுதியதால் அவரை ஜெர்மானிய படைப்பாளி எனக் கருதுவோரும், தேசிய அடையாளத்தின்படி செக் தேசத்தவர் எனக் கொண்டாடுவோரும் உண்டு. இவ்வளவு குழப்பங்கள் இருந்தாலும் அவர் ஜெர்மன் மொழியில் எழுதியதால் அவரை ஐரோப்பிய மக்கள் சுலபத்தில் ஏற்றுக்கொண்டனர் (செக்கில் எழுதியிருந்தாலும் பின்னர் அது நடந்திருக்கும்). செக் மொழி அவருக்கு இரண்டாம் மொழி. அவர் படித்ததும் இலக்கிய உலகில் புழங்கியதும் ஜெர்மானிய மொழியைக் கொண்டே. அவரது செக் மொழி கடிதங்களில் இலக்கணக் குழப்பங்கள் உள்ளதாகவும் கருதுகிறார்கள். இங்கு நாம் கவனிக்க வேண்டியது என்னவெனில் இதற்கு ஒப்பாக நம் நாட்டில் உள்ளது ஆங்கிலம் மட்டுமே. முழுமையாக ஆங்கிலத்தில் படித்தும் பேசியும் எழுதியும் வருவோர் படைப்பாளிகளாகும்போது அவர்கள் இந்திய வாழ்க்கையில் இருந்து விலகிவிடுகிறார்கள். ஆனால் அவர்களுக்கு சர்வதேச அங்கீகாரமும் பணவசதிகளும் கிடைக்கின்றன. சொந்த மொழியில் பேசினாலோ எழுதினாலோ ஒன்றுமே கிடைப்பதில்லை. கேரளாவிலும் கர்நாடகாவிலும் இந்தியில் பேசும் பூர்வ மாநிலத்தார் உண்டு. ஆனால் அவர்களில் இருந்து ஒரு இந்தி எழுத்தாளர் தோன்றியதில்லை. காப்கா ஜெர்மனில் எழுதினாலும் அவர் செக்கஸ்லாவகிய பண்பாட்டில் இருந்து, வாழ்க்கையில் இருந்து அந்நியப்பட்டு எலீட் மனநிலைக்குப் போகவில்லை (அருந்ததி ராய், ஷஷி தரூரைப் போல). 

நம்முடைய மொழிப் பிரச்சினைகள் தேசியப் பிரச்சினைகளாகவும் உள்ளன. நம்மால் எழுத முடிகிற மொழிகளை நம் தேசியப் பண்பாடு ஏற்பதில்லை. நம் தேசியப் பண்பாட்டு அடையாளமான இந்திக்கு உலகளவில் இலக்கிய மதிப்பில்லை. இதற்கு நமது காலனிய வரலாறும் நம் ஒன்றிய அரசுகள் ஆங்கிலேய அரசின் காலடியை ஒட்டி தம் அரசியலமைப்பு, நிர்வாகம், பண்பாட்டு நடவடிக்கைகள், பொதுமக்களை அந்நியர்களாக அச்சத்துடன் நோக்கும் போக்கை வரித்துக் கொண்டதும், மக்களின் மொழிக்கோ பண்பாட்டுக்கோ உரிய முக்கியத்துவம் கொடுக்காததும் காரணங்கள். மாநில மக்கள் மொழிகளுக்கு இடமளிக்கும்போது மக்களின் சிந்தனைக்கு, முகமைக்கு, நுண்ணுணர்வுக்கு இடம் அளிக்கிறோம். இந்தியையும் கூட இந்திய ஒன்றியம் போதுமான அளவுக்கு வளர்த்தெடுக்கவில்லை என்பது அவர்கள் பெரும்பகுதி மக்களின் மொழியையும் கூட ஊமையாக்கவே விழைந்தனர் என்பதைக் காட்டுகிறது. ஆங்கிலம் நம் சுதந்திரத்துக்குப் பின்பான நிர்வாகத்தின், கல்வியின், கார்ப்பரேட் வேலைகளின் மொழி. மக்கள் இதற்காகவே மொழியைக் கற்றுக் கொண்டனர் எனும்போது நாம் பெயரளவுக்கே சுதந்திரம் பெற்றோர், கறுப்புத் தோல் வெள்ளையர்களே நம்மை இன்று ஆளுகின்றனர், அவர்கள் மக்கள் சிந்திப்பதையோ, பேசுவதையோ எழுதுவதையோ விரும்பவில்லை என்பது புலப்படுகிறது. 

இந்த வினோதமான சூழலை நாம் இவ்வாறு புரிந்துகொள்ளலாம் – நம்மை இப்போதும் வெள்ளையர்களின் ஆவியே ஆள்கிறது. ஆகையால் நாம் அவர்களின்  கண்வழியே நம் மொழியையும் பண்பாட்டையும் தன்னிலையையும் காண்கிறோம். ஆகையால் நம துண்டுப்பட்டுப் போகிறோம். நகுலனின் நிழலைப் போல நம்மையே பார்த்துக்கொண்டு அமர்ந்திருக்கிறோம். அந்த பதற்றம் நம்மைச் சதா ஆட்கொள்கிறது. நம்மை நாம் மிகுந்த கழிவிரக்கத்துடன் நோக்குகிறோம். இந்த தாழ்வுணர்வும் ஆளும் வர்க்கத்தின் திரள் மீதான அச்சமும் விலக்கமும் சேர்ந்து நம்மை ஊமைகளாக்குகின்றன. காலனிய ஆதிக்கத்தால் நம்மைப் போல நூற்றாண்டுகளாக பாதிக்கப்படாத ஐரோப்பிய நாடுகளின் மக்களுக்கு இப்பிரச்சினைகள் இல்லை. அவர்கள் பேசும், எழுதும் மொழிக்கு இயல்பாகவே ஒரு தேசிய அங்கீகாரம் உள்ளூரிலும் சர்வதேச அளவிலும் ஏற்பட்டுவிடுகிறது. மனதளவிலும் தேசிய அளவிலும் நாம் ‘அடிமைகள்’, அவர்களோ ‘சுதந்திரமானவர்கள்’. அவர்களது ஆன்மீக உடைதலும் கூட தனிமனிதனுக்கும் தன் இருப்புக்குமான பிரச்சினையாகவே தோன்றுகிறது (இருத்தலியம்). ஆனால் நம்முடையதோ தேசிய அடையாளத்துக்குள் வர முடியாத, அரசியல் பிரஜை அடையாளம் கிடைக்காத ஏக்கத்தில் இருந்து தோன்றுகிறது (காலனியம் – பின்காலனியம்). அவர்களுக்கு கிடைத்துள்ள முகமையை நம் அரசுகள் நமக்கு பல நூற்றாண்டுகளாகவே தரவில்லை. 

இதன் விளைவாக நம் இலக்கியத்துக்கு என்று சந்தையோ, அங்கீகாரமோ சர்வதேச கவனமோ விருதுகளோ கிடைப்பதில்லை. இலக்கியவாதிகள் நம் நாட்டில் இலக்கியவாதியாகவே வாழ முடியாது. ஏனென்றால் பிரஜையாகவே நாம் இந்த தேசத்தில் முழுமையான முகமையையும் சுதந்திரத்தையும் உணர்வதில்லை (ஐரோப்பியர்களுடன் ஒப்பிடுகையில்). இந்திய இலக்கியத்தைப் பரவலாகப் பார்கையில் அது இந்திய பிரஜை என்றால் யார், இந்தியத் தன்னிலை என்பது யாரெனும் கேள்விகளுக்கு சுதந்திரத்துக்குப் பிறகு வலுவாக எழுப்பவில்லை என்பதைக் கவனிக்கலாம். நம் வரலாற்றின் ஒவ்வொரு பத்தாண்டிலும் நாம் எதிர்கொள்ளும் ஆன்மீக நெருக்கடிகளை, நம்மைப் புரட்டிப் போடும் பொருண்மையான, தொழில்நுட்ப மாற்றங்களை நாம் நம் எழுத்தில் எதிர்கொள்வதில்லை. அமெரிக்க, இங்கிலாந்து இலக்கியத்தில் இது எளிதாக நடக்கிறது. நமக்கும் நம் வாழ்க்கைக்குமான மிகப்பெரிய இடைவெளியே நம் இலக்கியத்துக்கும் நம் தேசத்துக்கும், இங்குள்ள வாழ்க்கைக்கும் இடையே உள்ளது. அதனால் சமகால இந்திய இலக்கியத்தை மொழிபெயர்ப்பில் படிக்கும் ஒருவரால் இங்கு கடந்த கால்நூற்றாண்டில் நடந்த பாரித்த மாற்றங்களை, அவற்றின் மீதான விமர்சனங்களைப் புரிந்துகொள்ள இயலாது. 9/11 தாக்குதல்களைப் பற்றியே பல அமெரிக்க நாவல்களில் விமர்சனங்களும் குறுக்குவெட்டுச் சித்திரங்களும் வருகின்றன. ஆனால் இங்கு நடந்த தீவிரவாத தாக்குதல்கள் மக்கள் மனத்தை உலுக்கினாலும், வெள்ளம், இடப்பெயர்வு, இயற்கைப் பேரழிவுகள் நம்மை அசைத்தாலும் நம் இலக்கியத்தில் அவை பரவலாக உருவகமாவதில்லை. ஏனெனில், ஒரு பிரஜையாக, தனிமனிதராக நாம் ஒரு கண்ணாடிச் சிறைக்குள்ளே நீண்ட காலமாக வாழ்கிறோம். நமது அன்றாட உலகம், நம் வேலையிடம், குடும்பம், சாதி வரலாற்றைத் தாண்டி நம்மால் இந்த தேசம், அதன் அடையாளம், அதன் தத்துவச் சிக்கலைப் பற்றிப் பேச முடிவதில்லை (மலினமான தொன்ம மிகுபுனைவுகள் எழுதுவதைத் தவிர). 

இந்த பின்நவீனச் சிக்கலில் இருந்து நாம் ஒருநாள் மீண்டு வரும்போது நம் அரசியலிலும் இலக்கியத்திலும் நமக்கென்று ஒரு இடம், நம் ஆன்மாவில் நாம் வாழ்வதற்கென நமக்கென்று சொந்தமான ‘வீடு’ உருவாகும் என கனவு காண்கிறேன். 

***

ஆர். அபிலாஷ்: 1980இல் பத்மநாபபுரத்தில் பிறந்தார். ஸ்காட் கிறுத்துவக் கல்லூரி, சென்னை கிறித்துவக் கல்லூரி மற்றும் சென்னை பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் முறையே இளங்கலை, முதுகலை பட்டங்கள் மற்றும் முனைவர் பட்டத்தை பெற்றார். அனைத்து முன்னணி இதழ்களிலும் தொடர்ச்சியாக எழுதி வருகிறார். இதுவரை நான்கு நாவல்கள், ஒரு சிறுகதைத் தொகுப்பு, கட்டுரைத் தொகுப்புகள், வாழ்க்கை சரிதை, ஒரு கவிதைத் தொகுப்பு, ஒரு ஹைக்கூ கவிதைகளின் மொழியாக்கத் தொகுப்பு உள்ளிட்டு ஆங்கிலத்திலும் தமிழிலுமாய் 40 நூல்களுக்கு மேல் பிரசுரித்திருக்கிறார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014இல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது.  2016இல் பாஷா பரிஷத் விருதும் இவரது இலக்கிய பங்களிப்புக்காக வழங்கப்பட்டது. ஆங்கிலத்தில் Plop: Notes on Heidegger எனும் அபுனைவு நூலும், சில ஆய்வுக்கட்டுரைகளும் எழுதியுள்ளார். மின்னஞ்சல்:abilashchandran70@gmail.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here