Thursday, February 12, 2026
Homeஇதழ்கள்2025 இதழ்கள்ஶ்ரீநேசன் கவிதைகள்

ஶ்ரீநேசன் கவிதைகள்

இருட்பிரகாசம்

என்னைச் சுற்றிலும்
கொஞ்சம் வெளிச்சம் வேண்டுமென
ஒரே ஓர் அகல் விளக்கை ஏற்றியிருந்தேன்
ஆனால்
அதையும் இப்போது
அணைத்து விட்டேன்
இதுவரை மங்கலில் ஒளி நிழலாய் மிதந்திருந்தவன்
இப்போது இருளின் நிழல் ஒளியில் ஆழ்ந்திருக்கிறேன்.

குரங்கு வித்தை

மலைமுகட்டில் ஓர் உருண்டைப்பாறை
முதியவர்கள்
பார்வையால் மட்டுமே தொட்டுணரக்கூடியது
ஒரு குரங்கு அதன் உச்சியில் வந்தமர்ந்தவுடன்
விரைத்தவொரு காம்பாகி விடுகிறது
இவ்வாறு அக்கடினப்பாறையை
ஒரு கோணல் பார்வை
அவ்வளவு அழகான
மென்முலையாக்கிக்கொண்டது.

கவிதைகள் சொல்

தனித்துவமான இந்தச் சொல்
கவிதையின் இறுதி வரிகளில் இருக்கிறது
எழுதி பல காலம் ஆனது
அதை எழுதும் போதும்
பின் பிரசுரத்தில் வந்தபோதும்
அதன் பின் நூலைப் புரட்ட நேர்ந்த
பற்பல சந்தர்ப்பங்களிலும்
இச்சொல்லை வாசித்துக் கடந்திருக்கிறேன்
இப்போதைய எதிர்பாரா வாசிப்பில்தான்
எதிர்பாராது உணர்ந்த இந்த இணைவு
நம் மொழியின் புகழ்ப்பெற்ற கவி
தூய கவிதையில் அரசியலைப் பிணைத்தவர்
அகாலமாய் வாழ்வை முடித்துக் கொண்டவர்
தம் புகழ்ப்பெற்ற கவிதையொன்றையும்
பிரத்யேகமான
இவ்வார்த்தையின் வரியோடு முடித்திருக்கிறார்
இன்றிருந்திருந்தாலும் அவர்
கவனத்துக்குக் கவிதை வந்திருக்குமா
வந்திருந்தாலும் அவர் பொருட்படுத்தியிருப்பாரா
பொருட்படுத்தியிருப்பினும்
அவரது போன்றே கவிதையின் இறுதியில்
கையாண்ட சொல்லை கவனித்திருப்பாரா
அதற்காக மகிழ்ந்திருப்பாரா
அசூயையேதும் அடைந்திருப்பாரா
அவர் தாக்கத்தில்
பெறப்பட்டிருப்பதாய் எண்ணமிட்டிருப்பாரா
அவரது தீவிர வாசகர்களில் ஒருவரோ
என்னை ஆர்வமாய் வாசித்த நண்பரோ
ஒத்திசைவான இப்பொருத்தப்பாட்டை
தம் வாசிப்பில் ஒரு போதும் உணர்ந்திருப்பாரா
ஒன்றிலிருந்து இன்னொன்று
தாக்கம் பெற்றதாய் கருதியிருப்பாரா
அல்லது
அவரது கவிதைகளை ஆழக்கற்று
ஆய்வுகள் செய்தவர்
பன்முகப் பார்வையில்
விமர்சனம் செய்தோர்
எவரும் இது குறித்து யோசித்திருப்பார்களா
எது எவ்வாறாயினும்
அக்கவிதை போன்றே இக்கவிதையும்
தோதான அந்த வார்த்தையிலான
இறுதி வரியைக் கொண்டு
சுபிட்சமாய் முடிந்ததில் பெருமகிழ்ச்சி எனக்கு.

திறவு

பயணப் பரவசப் பாய்ச்சல்
திமிறிக்கிளம்பும் மெய்யின் இருப்பில்
அகம் விழித்த உயிரின் மேய்ச்சல்
நீயோர் பறவை
கிளையிடைக் கூட்டை நெய்யும் குருட்டுத் தனத்தை
வழமையற்ற வாழ்வால் பொசுக்கும்
சுதந்திரப் பட்சி
எல்லையின்றிப் பறக்க
வெளியைத் தேர்ந்தால் வசப்படுமோர் சூக்குமம்
நெஞ்ச வேட்கையில் சிறைபுக அஞ்சா
அது அவியக் காலம்
நெய்யும் கனவில் தினசரி துளிர்ப்பு
உச்சி அரசனில் பொன்னிலை அசைப்பு
உதிர்ந்தால் சருகு
பறந்தால் முருகு
பறபற கடகட திரும்ப வெண்ணா
பயணம் பழகு
மரங்கள் எதிர்ப்படும்
வயல்கள் விரிந்திடும்
மலைகள் கூட நின்று சுழன்றிடும்
தரையினில் இறங்கு
புதிய முகங்களில் கண்கள் ஊன்றி
ஆதியன்பை அதன்வழிப் பருகு
ஆங்கே கசப்பே இனிப்பு
அழுக்கே சுத்தம்
அறிவும் மூடம் என அறி
மகத்துவ புள்ளியைத் தொட்டு
மறைநிலைப் புதிரினைத் திறந்திடு
திறக்கும் நோக்கே கதவின் சாவி
ஒவ்வொரு திருகிலும் முயங்கிடும் இருளொளி
உடன்
திறந்த புதையலை மூடித் திரும்பிடு.

நாங்களோடு நான்

வீட்டிலிருந்து வெளியே ஓரடி வைத்தாலே
தெருவுக்கு வந்து விட்டிருப்பேன்
அவ்வளவுதான் இடைவெளி வீட்டுக்கும் தெருவுக்கும்
அதனால் வீட்டில் இருந்தாலும்
நான் எப்போதும் தெருவில் வசிப்பவன்தான்
அநேக கூப்பிடு குரல்கள் சூழ எழுகின்றன
அவற்றின் பலவிதத்தொனி ஒலிப்புகளுக்கு
எம் தேகம் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது
யம்மா என்ற யாசகக் குரலும் எம் குரலே
காலத்தில் காலூன்ற முடியாத எனக்கு
எண்ணற்ற கால்கள்
எனினும் அவற்றைக் கொண்டுதான்
இத்தனை கால தூரங்களையும் கடந்திருக்கிறேன்
பூக்காரர் வருகிறார் வாசம் பரப்பியவாறு
கீரை முள்ளங்கி விற்பவருக்கு கருணை அதிகம்
வாரந்தோறும்
தெருவில் சிறுகூவலிடுவார் உப்பு வண்டிக்காரர்
எண்ணெய்க்காரரிடம் நயமான சொற்களுண்டு
சைக்கிளில் கேன் கட்டிய பால்காரர்
பணபட்டுவாடாவன்று தாமாதமாக வருவார்
வளையல்காரருக்கு முன்பாக
திருநாட்களை மோப்பம் பிடித்திருப்பார்
மொக்குமாவு செம்மண் விற்பவர்
உன்னி மக்காரியில்
குத்திப்பழம் கலாக்காயோடு வரும் மலையாள்
ராத்தங்கித்தான் மலை திரும்புவார்
காடா விளக்கேந்தி வரும் துப்பட்டி ஏலக்காரர்
நாதஸ்வர இசைமுழங்கும் பூம்பூம் மாட்டுக்காரர்
மூன்றாம் சாமத்தில் மூடிய கதவுமுன்
வாக்குச்சொல்லும் குடுகுடுப்பைக்காரர்
ஓக்கலித்துப் பிச்சைப் பிடுங்கும் பண்டையன்
சகலரும் ஊருக்கு உரியோரே
யாவரும் எண்ணக் குருதியில் சுழல்வோரே
வண்டியோடு வருவர்
தேங்காய் வெல்ல மண்டிக்காரர்கள்
கோணிப்பைகளுடன் நெல் வியாபாரிகள்
கல்யாணப் பந்தல்காரர் சுபநிகழ்வு மேளக்காரர்
எல்லோரும்
தேவையானதைத்தேடி வந்தோரே தந்தோரே
ஓர் அர்த்தத்தில் அனைவரும் நாங்களே
எம் சிச்சிறு பணிகள்
கைம்மாற்றுக்கு அப்பாலானவை
இனியும்
ஊரில் ஏர்மாடுடையோர் நிலத்தில் ஏர் பூட்டுவோம்
பெண்களோடு நாற்று நட்டுக்
களைப் பறித்து நெல்லறுத்துக்
களத்தில் குவிப்போம்
யாரோ நட்ட தென்னையில் ஓய நிழல் பெறுவோம்
கரும்பை வெட்டி வெல்லம் காய்ச்சுவோம்
கிணற்றில் ஏரியில் மூழ்கித் திளைப்போம்
மாடுகளோடு மல்லு கட்டுவோம்
உழைப்பின் களைப்பில்
வரப்புகளில் உறங்கியும் விழித்திருப்போம்
கல்யாண அழைப்பு சாவுச் செய்தி
எங்கெங்கோ போய் வருவோம்
ஏதெதற்கோ சுற்றி வந்து
ஓய்ந்த பம்பரம்போல் இந்நிலத்தில் சாய்வோம்.

***

ஶ்ரீநேசன் – திருப்பத்தூர் மாவட்டத்தில் வாணியம்பாடிக்கு அருகில் உள்ள குந்தாணிமேடு கிராமத்தில் ஜூலை 28, 1966 அன்று பிறந்தார். கிருஷ்ணகிரி அரசு கலைக் கல்லூரியில் தமிழ் துறைப் பேராசிரியாராகப் பணியாற்றுகிறார். கவிதைகளிலும் கட்டுரைகளிலும் பங்களித்துவரும் முதன்மையான கவிஞர்களுள் ஒருவர். உயிர்மை சுஜாதா அறக்கட்டளை விருது, அன்னம் விருது, கலைஞர் நவீன கவிதை விருது ஆகிய விருதுகளை வென்றிருக்கிறார். மின்னஞ்சல்: sreenesan1966@gmail.com

RELATED ARTICLES

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here