Sunday, October 1, 2023
Homeஇதழ்கள்2023 இதழ்கள்பொய்க்கால் குதிரைகள்

பொய்க்கால் குதிரைகள்

பரிவை சே.குமார்

ஓவியம்: சீராளன் ஜெயந்தன்

முத்தாளம்மன் கோவில் திருவிழா.

காயத்ரியின் வற்புறுத்தலுக்காக வேண்டா வெறுப்பாகத்தான் வந்திருந்தேன். இப்போதெல்லாம் வேலை முடிந்து வந்ததும் சிறு குளியல், நரசுஸ் பொடி மணக்கும் காபியுடன் கொறிக்க மிக்சர் அல்லது கடலை, அதன்பின் போனில் முகநூல், வாட்ஸப், ரீல்ஸ் எனப் பொழுதைக் கழிக்கவே மனம் விரும்புகிறது என்பதால் அலுவலகத்திலிருந்து கூடடைந்த பின் வெளியில் எங்கும் செல்வதில்லை. போன் என்னைக் கெடுத்துவிட்டது என நீங்கள் நினைக்கலாம் இன்னைக்கு உலகத்துல இருக்க அம்புட்டுப் பேரையும் இந்தப் போன்தான் கெடுத்து வைத்திருக்கிறது என்பதே உண்மை, ஏன் உங்களைக் கூட அது தன் கட்டுப்பாட்டுக்குள்தான் வைத்திருக்கும் என்பதில் எனக்குத் துளியேனும் சந்தேகமில்லை.

சின்ன வயதில் முத்தாளம்மன் கோவில் திருவிழா என்றால் அத்தனை மகிழ்ச்சியாக இருக்கும். செண்பகம் என்னைக் காதலிப்பதாய்ச் சொன்னதும் இந்த திருவிழாவில்தான், என்னோட மாமா மகனுக்கே கட்டி வச்சிட்டாங்க நான் என்ன செய்யட்டும் என சிறிதாய் கண்ணீர் சிந்திச் சென்றவள் இதுதான் என்னோட அத்தான் மலரவன் என அவளின் காக்கைக் கலர் கணவனை அறிமுகப்படுத்தியதும் இதே கோவில் திருவிழாவில்தான். அதன்பின் முத்தாளம்மன் மீது எனக்குத் தனிப்பட்ட விதத்தில் ஏற்பட்ட கோபத்தால் கோவிலுக்குச் செல்ல விரும்புவதில்லை. எப்பவும் ஏதாவதொரு காரணம் சொல்லித் தப்பி வந்தவன் இந்தமுறை வயித்துப் பிள்ளைக்காரி கூப்பிடுறா போயிட்டு வந்தாத்தான் என்ன எப்பப் பாரு இந்த போனை நோண்டிக்கிட்டு இருந்தா சீக்குத்தான் வரும் என அம்மா கத்தியதால் கிளம்பி வந்தேன்.

முன்பெல்லாம் இல்லாத அளவுக்கு இப்போது அருகில் தரிசாய் கிடந்த வயல்களில் கார், வண்டிகளை நிறுத்த சுத்தம் செய்து டியூப்லைட் கட்டி வைத்திருந்தார்கள். அங்கு காரை நிறுத்திவிட்டு இறங்கினோம். ஓரளவுக்குக் கூட்டம் இருந்தது.. மக்கள் நடமாட்டத்தின் காரணமாக அந்தப் பகுதி முழுவதும் தூசியாக இருந்தது. காயத்ரியின் வயிற்றில் யாரும் இடித்து விடாத வண்ணம் அவளைப் பாதுகாப்பாய் கூட்டிக் கொண்டு போனவன், ‘பாரு ஒரே தூசியா இருக்கு… நாளக்கி வந்திருக்கலாம் கொஞ்சம் கூட்டமில்லாமல் இருக்கும். இன்னைக்கு திருவிளக்குப் பூஜைங்கிறதால கூட்டம் அதிகமாத்தான் இருக்கும், இதுல வந்து உடம்புக்கு ஒத்துக்காமப் போச்சுன்னா என்ன பண்றது’ எனச் சத்தமாகச் சொன்னபோது ‘அதெல்லாம் ஒண்ணும் ஆகாது… நீங்க வாங்க’ என்றபடி நடந்தாள்.

‘செல்லாத்தா செல்ல மாரியாத்தா’ என எல்.ஆர்.ஈஸ்வரி ஒலிபெருக்கியில் அதிக சப்தமில்லாமல் பாடிக் கொண்டிருக்க, கோவில் வாசலை அடைந்தபோது கூட்டத்தில் சிலர் செல்லாத்தாவாக மாறி ஆடிக் கொண்டிருந்தார்கள்.

“நீ மெல்லப் போய் சாமியைக் கும்பிட்டு வா… நா இந்தா அந்தப் பக்கம் நிக்கிறேன். வெளிய வந்ததும் எனக்கு மிஸ்டு கால் கொடுத்துட்டு இங்கயே நில்லு நான் வந்து கூட்டிக்கிறேன்” என என் விரதத்துக்கு, கோபத்துக்கு பாதிப்பு வராமல் முத்தாளம்மன் முகத்தைப் பார்க்காமால் ஓரமாய் ஒதுங்கி நிற்க நினைத்துச் சொன்னேன்.

“சாமி கும்பிட வரலையா..? கூட்டமில்லாத இடத்துல எல்லாம் பாதுகாப்பா வந்தீங்க… இங்க விட்டுட்டுப் போறீங்க…” என நக்கலாய் அவள் கேட்க, “நீ போனா அங்க நிக்கிற போலீஸ்கார அம்மாவே உன்னைப் பாதுகாப்பா உள்ள அனுப்பிரும்… போ என்னையக் கம்பல் பண்ணாதே” என்றபோது என் மனசுக்குள் செண்பகம் முத்தாளம்மனாகத் தெரிந்து சிரித்தாள்.

என்னை இவ்வளவு தூரம் கொண்டு வந்ததே பெருசு. இனியும் வற்புறுத்த வேண்டாம், அப்படி வற்புறுத்தினால் வீணான வாக்குவாதம்தான் வரும் என நினைத்தவள் போனை மட்டும் எடுத்துக் கொண்டு ஹேண்ட் பேக்கை என் கையில் கொடுத்துவிட்டுப் போனாள்.

அப்படியே மெல்ல நடந்து கூட்டமாக இருந்த இடத்துக்குப் போனேன். அங்கே ஒரு குதிரையை ஆட வைத்துக் கொண்டிருந்தார் அந்த நரை விழுந்த மனிதர். அவருக்கு அருகில் ஒரு சிறுவன் மேளம் ஒன்றை அடித்துக் கொண்டிருக்க, இன்னொருவர் நாதஸ்வரம் வாசித்துக் கொண்டிருந்தார். அந்த இசைக்குத் தகுந்தவாறு அந்தக் குதிரை ஆடிக் கொண்டிருந்தது. முதியவரின் உடம்பு எலும்பாகத் தெரிந்தாலும் குதிரை நல்ல சதைப்பிடிப்புடன்தான் இருந்தது. அவரின் முகத்தைப் பார்த்தபோது எங்கயோ பார்த்த ஞாபகம் வர, நெற்றில் தடவி யோசித்தேன்.

சின்ன வயதில் பக்கத்து ஊர் பெரியநாயகி அம்மன் கோவில் குதிரையெடுப்புக்கு இதேபோல் குதிரை கொண்டு வருவதுடன், பொய்க்கால் குதிரை ஆட்டமும் வருடாவருடம் இவர்தான் ஆட்டுவிப்பார், ஆடுவார். எங்கள் பகுதியில் பங்குனியில் ஆரம்பிக்கும் அம்மன் கோவில்களின் திருவிழா ஆடி மாதம் வரை இருக்கும். அதுவரை அவர் சந்தைக்கு அருகில் குடிசை போட்டுத் தங்கியிருப்பார். பெரும்பாலும் எல்லாத் திருவிழாவிலும், செட்டிய வீட்டுத் திருமணங்களிலும் இவர் குதிரையை ஆட்டுவிப்பார். குதிரையெடுப்புக்கு வரும்போது அவர் பக்கத்திலேயே நிற்பதுண்டு, குதிரையைப் பார்க்க என்றாலும் கூட அவருடன் சிநேகமான ஒரு சிரிப்பு இருக்கும்.

அப்போது அவருக்கு வயது நாற்பதுக்குள்தான் இருக்கும், தலை நிறைய முடி வைத்திருப்பார். இப்போது முன் வழுக்கையும் தாடி நிறைந்த முகமுமாய் காலம் அவரை மாற்றியிருந்தது. அவருடன் ஒரு சிறுவன் இருப்பான். அந்தச் சிறுவன்தான் இப்போது நாதஸ்வரம் வாசிப்பவராக இருக்கக் கூடும். ஏறத்தாழ அவரை அன்று பார்த்தது போன்ற உருவம்.

சுற்றிலும் கூட்டம் நிற்க, குதிரையை ஆட விட்டுக் கொண்டிருந்தார். மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன பாடல் முடிந்து, கூடமேல கூடை வச்சு பாட்டுக்கு குதிரை ஆடி சற்று ஓய்வுக்காக அவர் முகம் பார்த்தபோது வாசித்துக் கொண்டிருந்தவர்களைப் பார்த்துக் கையை உயர்த்தினார். வாசிப்பு நிற்கவும் குதிரை ஆட்டத்தை நிறுத்த ,சிறுவன் மேளத்தை வைத்து விட்டு அதன் கயிற்றை அவரிடமிருந்து வாங்கிக் கொண்டு போய் ஒரு வாளியில் இருந்த தண்ணீருக்கு அருகில் விட்டான். அது குடிப்பமா வேண்டாமா என்பதாய் வாய் வைத்து, பின் எடுத்துப் பெரும் மூச்சொன்றை விட்டு, பல்லைக் காட்டி, சிறிதாய் சப்தம் எழுப்பி மீண்டும் குடித்தது.

ஒலிபெருக்கியின் சப்தம் சுத்தமாகக் குறைக்கப்பட்டிருந்தது. அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற இருப்பதாக அவ்வப்போது அறிவிப்பு மட்டும் வந்து கொண்டிருந்தது.

விரித்திருந்த துண்டில் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் காசு போட்டு விட்டு நகர, நானும் பத்து ரூபாய் தாளை அதில் போட்டுவிட்டு சற்றே ஒதுங்கிப் போய் அமர்ந்தவரின் அருகில் போய் ‘ஐயா நல்லாயிருக்கீங்களா…?’ என்றேன்.

என்னை ஏறிட்டுப் பார்த்தவர், விளக்கொளியில் சரியாகத் தெரியவில்லை என்பதாலா அல்லது வயதானவர்களுக்கே உரித்தான பார்வையாலா தெரியவில்லை , கையை கண்களுக்கு மேல் இருத்தி, ஒளி மறைத்துப் பார்த்து ‘தம்பி யாரு… தெரியலையே…’ என்றார்.

“ஐயா நான் உங்கள சின்ன வயசுல பாத்திருக்கேன்… நம்ம பெரியநாயகி அம்மன் கோவில் குதிரையெடுப்புக்கு வந்து பொய்க்கால் குதிரை ஆட்டம் ஆடுவீங்க, குதிரை எடுத்து வரும்போது உங்க குதிரையை முன்னால ஆடவிட்டுக்கிட்டு வருவீங்க. அப்ப உங்க மகனும் இன்னொருத்தரும் வாசிப்பாங்க. இங்க இப்ப நாதஸ்வரம் வாசிச்சவருதானே உங்க மகன்”

“ஆமய்யா… பெரியநாயகி வர தேவதையில்லய்யா… அவளக் கும்பிட்டுப் போனா ஆடி மாசத்து வரைக்கும் அமோகமான சம்பாத்தியம். சாதிச் சண்டை, நீ பெரியவனா நா பெரியவனாங்கிற பணச் சண்டையில குதிரையெடுப்பை நிப்பாட்டிட்டாங்க, அதுக்கு அப்புறம் எங்க பாடும் பெரும்பாடாத்தான் போச்சு. ம்ம்…. என்னத்தைச் சொல்ல… வாழ்க்கை கஷ்ட ஜீவனமாய்த்தான் ஓடுது தம்பி. அன்னைக்குப் பாத்தவங்க இப்ப ஞாபகம் வச்சி எங்கிட்ட வந்து பேசுறீங்க பாருங்க காசு பணத்தைவிட இதைத்தான் ஊருஊராச் சம்பாரிச்சி வச்சிருக்கோம் தம்பி”

“அப்ப நீங்க வச்சிருந்தது வெள்ளைக் குதிரை… நல்ல உயரமா இருக்கும் இல்லையா…”

“ஆமா தம்பி… அது நல்ல உசரம், அரபிக்குதிரையோட வாரிசு… வயசானப்பவும் கொடுக்க மனசில்லாம வச்சிருந்தேன். ஒரு மழை நாள்ல செத்துப் போச்சு தம்பி. இது என்னய மாதிரி குதிரையை ஆட்டுவிக்கிறவருக்கிட்ட வாங்குனதுதான்… ஆனா அம்புட்டு உசரமில்லைன்னாலும் நல்ல அறிவு… சொல்றத அப்புடியே கேட்டுக்கும்… இந்தப் பாட்டுக்கு இதுதான் தாளகதின்னு ஒரு தடவை கயிற்றைச் சுண்டிக் காமிச்சிட்டாப் போதும் அடுத்த முறை கயிறை நாம சுண்ட வேண்டியதில்லை அவுகளே அழகா ஆடிருவாங்க… புத்திசாலி” பெருமையாச் சொன்னார்.

“அன்னைக்கு இதுல கிடைச்ச வருமானம் உங்க குடும்பத்துக்குப் போதுமானதா இருந்திருக்கும்… ஆனா இப்பக் கிடைக்கிறா சொற்பக் காசுல அப்படி இருக்காதுல்லய்யா”

“எங்க தம்பி… இப்ப இதுல அவ்வளவு ஒண்ணும் சம்பாத்தியமில்ல தம்பி. நம்ம பக்கந்தான் கூப்பிடுறாங்க. அதுவும் இப்ப மண்டபங்கள்ல கல்யாணத்தை வச்சி பாட்டுக் கச்சேரி வைச்சிடுறாங்க. மாப்பிள்ளை அழைப்புக்கெல்லாம் ஆடும் குதிரை யாரும் கேக்குறதில்லை. சினிமாவுல ஆடுற மாதிரி ரோட்டுலயும் ஆளுகள ஆட விட்டுக் கூட்டியாராங்க” விரக்தியாய்ச் சொன்னார்.

“ம்…”

“இப்போதைக்கு எங்க பொழப்பு கஷ்ட ஜீவனம்தான் தம்பி. அன்னக்கி வந்தோம் நாங்க ஆடுனோம் குதிரையை ஆட விட்டோம் சொன்ன பணத்தை வாங்குனோம் போனோம்ன்னு இருந்தோம். இப்ப அதிகமா பணமெல்லாம் கிடைக்காது. அதுபோக பெரும்பாலும் கூப்பிட மாட்டாங்க. கூட்டம் கூடுற திருவிழாக்கள்ல நாங்களே குதிரையை ஆட விட்டு, துண்டை விரிச்சி காசு வாங்குறோம். இது கூட கௌரவமான பிச்சைதான் தம்பி” குரல் கம்மச் சொன்னார்.

“இந்த வருமானம் உங்களுக்கும் உங்க குடும்பத்துக்கும் அதோட குதிரைக்கும் போதுமானதா இருக்காதே”

“இதுல எப்புடி தம்பி இன்னைக்கு வெலவாசிக்கு கட்டுபடியாகும். அன்னக்கி கஷ்டப்பட்டாலும் பெரியவன ஒரு பத்தாப்பு வரைக்கும் படிக்க வச்சேன். அவனுக்கும் எந்த தெய்வத்தோட புண்ணியமோ பேங்குல பியூன் வேலை கிடைச்சிச்சு. அவனோட சம்பாத்தியத்துலதான் நாங்க ஆறு பேரு வயித்தைக் கழுவிக்கிட்டோம். இந்தா இங்க நாதஸ்வரம் வாசிக்கிறானே இவன் ரெண்டாவது ஆளு. சின்ன வயசுல எங்கூட அதைத் தூக்குனவன் படிக்கலை… கொத்தனார் வேலைக்குப் போவான். கரெண்ட் வேலை பார்ப்பான். ஆசாரி வேலையும் அத்துபடி. வீட்டுல சும்மாவே இருக்கமாட்டான். ஏதாவதொரு வேலைக்குப் போவான். ராத்திரியல்ல இந்த மாதிரி வரும்போது அவனும் வருவான். அவனுக்கு இது தொழில் இல்லை. மனசுக்கு சந்தோசத்தைக் கொடுக்கிற ஒரு வஸ்து. அது இவனோட மகன்… படிக்கிறான்… என்ன படிக்கப்போறேன்னா கலெக்டருன்னு சொல்வான். அதுதான் விதியின்னா மாறவா போகுது. படிப்புல படு கெட்டி, மேளம் வாசிக்கிறதுலயும் கில்லாடி. இப்பல்லாம் எங்க ஊரு பிச்சை கோவில்களுக்கு வாசிக்கப் போகும்போது இவனையும் கூட்டிப் போறான். போன வாரம் திருப்பத்தூர்ல புத்தகக் கண்காட்சியில வாசிச்சி முதல்வர்கிட்ட பாராட்டு வாங்கிட்டு வந்தான்… மேளத்துல இப்ப வர்ற பாட்டுக்கெல்லாம் அழகாத் தாளம் போடுவான்” பெருமையாச் சொன்னார்.

“ஆஹா… திறமை இருந்தா பிழைச்சிக்கலாம்ய்யா… ஆமா உங்க மூத்த மகன் இப்ப உங்க குடும்பத்துக்கு…” மெல்ல இழுத்தேன்.

“ஏந்தம்பி அப்படிக் கேக்குறீங்க… கஷ்டத்தைப் பார்த்து வளர்ந்த புள்ளையில்லயா அவன்… இன்னமும் எல்லாரும் கூட்டுக் குடித்தனம்தான். பர்மா காலனி கடைசியில ஒரு இடத்தை வாங்கி, லோனைப் போட்டு வீட்டைக் கட்டிப்புட்டான். அங்கதான் எல்லாரும் இருக்கோம். மருமகப்புள்ள எங்கக்கா மக, இவனுக்கு எம்மச்சினன் மக. அதுனால சண்டை சச்சரவுக்கு வழியில்ல. என்னயத்தான் குதிரையை விக்கச் சொல்லி நின்னான், நிக்கிறான். பதினஞ்சி வயசுல இதோட கயிறைப் பிடிச்சது, அதெப்படி இதை விட்டுட்டு வீட்டுக்குள்ள உக்காந்து காலத்தை ஓட்டுறது, நடைபொடையா இருக்கும் வரைக்கும் இதுதான் நமக்குன்னு விக்கல்லாம் முடியாது, வேணுமின்னா இப்பவே இன்னொரு குதிரை ஒண்ண வாங்கிக் கொடு பழக்கப்படுத்தி வச்சிக்கலாம் இதுக்கும் வலது கால்ல ஏதோ அடிபட்டிருக்கும் போல ஆடும்போதே காலத் தூக்கிருது. நம்ம பொழப்புக்கு வாயில்லா ஜீவன் அதுகளப் போட்டுப் பாடாப்படுத்துறோம் இல்லையா… சர்க்கஸ்ல யானையை சேர்ல உக்கார வைக்கிற மாதிரி, நாயை சைக்கிள் ஓட்ட வைக்கிற மாதிரித்தானே இதுவும். இப்படி ஆடணும்ன்னு அது தலையெழுத்து… இல்லையா..”

“நீங்க சொல்றது சரிதாய்யா… இப்பல்லாம் இதெல்லாம் குறைஞ்சிக்கிட்டுத்தானே வருது… அப்புறம் எதுக்கு இன்னொரு குதிரை உங்க மகன் சொன்னது மாதிரி இதெல்லாம் வித்துட்டு வீட்டுல ஓய்வெடுக்கலாமுல்ல”

“ஆடுன உடம்பு எப்புடி தம்பி ஓய்வெடுக்கும். இப்ப எல்லா ஆட்டத்துக்குமே மவுசு போச்சு தம்பி. கரகாட்டம், நாடகமே அரிதாகிப் போன காலத்துல பொய்க்கால் குதிரை ஆட்டமெல்லாம் போன இடம் தெரியல. எங்களுக்கு கூட ஒருசில ஊர்கள்லதான் இன்னமும் வாய்ப்பு கிடைக்குது புதுசா எதுவும் கிடைக்கிறதில்லை. முன்ன மாதிரி மக்கள் ராவெல்லாம் முழிச்சி எதையும் பாக்க விரும்புறதில்லை. எல்லாத்தையும் கையில வச்சிருக்க போனுக்குள்ள கொண்டு வந்துட்டாங்க. அதுல நல்லதும் இருக்கு கெட்டதும் இருக்கு. எல்லாத்தையும் பாக்க முடியுதுல்ல. கரகாட்டத்தையெல்லாம் ஆளுகளைப் பாக்க வக்கிறேன்னு வக்கிரமா மாத்தி மொத்தமா எடுத்து வச்சி மூடிட்டாங்கள்ல. பல ஊர்கள்ல கரகாட்டத்துக்கு போலீஸ் அனுமதியே இல்லைன்னு சொல்லிட்டாங்க. சமீபத்துல எங்கயும் கரகாட்டம் வைக்கக் கூடாதுன்னு அரசாங்கமே சொல்லியிருக்குன்னு பேச்சு வந்துச்சு… பாவப்பட்ட சனங்க… அதுக வாழ்க்கை அதுலதானே… இப்ப என்னவோ அனுமதி வாங்கி, இத்தன மணிக்குள்ள முடிச்சிக்கணும்ன்னு சொல்லியிருக்காங்களாம்… பொழச்சிப் போகட்டும். கரகாட்டத்துக்கு இம்புட்டுக் கட்டுப்பாட்டுக்கு காரணம் என்ன… கொச்சையாப் பேசுறது மட்டுமில்ல தம்பி, நாலு சுவத்துக்குள்ள நடக்குறதை தெருவுல நடத்திக் காட்ட ஆரம்பிச்சதுதானே. அதுல படிக்கிற சின்னப் பயலுகள ஆபாசமா ஆடவிட்டு, அவனுக எட்டிக்கிட்டு எங்க எங்கயோ புடிக்கிறானுக… அன்னக்கி ஒரு நாடகத்துல சின்னப் பயல பபூனுக்குப் பழக்குறானுங்களாம்… அவங்க அம்மா வயசுல்ல டான்ஸ்காரிக்கிட்ட அவ்வளவு ஆபாசமாப் பேசுறான். நம்ம சனங்க கைதட்டுதுக… எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல, எந்திரிச்சி வந்துட்டேன். காலம் கெட்டுப் போச்சு தம்பி. அன்னக்கி நாடகம் நடத்த செலவான தொகையை இன்னைக்கு ராஜ நடிகருக்கு கொடுக்கணும். அதிகமாச் செலவு பண்ணி கூட்டமே இல்லைன்னு பாதி ராத்திரியில நிப்பாட்டுறதுக்கு எதுக்கு அதை வைக்கணுமின்னு முடிவு பண்ணிடுறாங்க.”

அவர் சொல்வது சரியெனத் தெரிய தலையை ஆட்டினேன்.

அம்மனுக்கு அபிஷேகம் ஆவதை மணியோசை சொன்னது.

“எல்லாக் கலையையும் அழிச்சிட்டோம் தம்பி, உங்களுக்குத் தெரியுமான்னு தெரியலை முன்னெல்லாம் நம்ம பக்கம் ஒயிலாட்டம்ன்னு ஒண்ணு வைப்பாங்க. ராமாயணக் கதையைச் சொல்லி கையில கர்ச்சீப் மாதிரி ஒரு வெள்ளைத் துணியை வச்சிக்கிட்டு ஆடுவாக. பாக்க நல்லாயிருக்கும். அதெல்லாம் இப்போ எங்கே…? அந்தக் கலைஞர்கள் என்ன ஆனாங்க..? அந்தக் கலையையே தொலச்சிட்டோமுல்ல. அதே மாதிரித்தான் கரகாட்டம்… மெல்ல மெல்ல அழிஞ்சிக்கிட்டு வருது. இனி எங்கயும் வைக்கக் கூடாதுன்னு சொன்னதை மாத்திக்க மாட்டேன்னு அரசு சொல்லியிருந்தா அந்தக் கலைஞர்களோட வாழ்க்கை என்னாகும்..? அதை யாரும் யோசிக்கமாட்டோம். அவங்களை மறந்திருவோம். நீங்க யோசிச்சிப் பாருங்க… நீங்க சின்ன வயசா இருக்கும் போது ஊரு ஊருக்கு ரிக்கார்ட் டான்ஸ்ன்னு வந்து பாட்டுப் போட்டு ஆடி, அரிசி, புளி, பருப்பு, பழைய துணிகன்னு கொடுக்கிறதை வாங்கிட்டுப் போவாங்க. அவங்கள்லாம் இப்ப வர்றதேயில்லை இல்லையா. அது மாதிரித்தான் மண்டமணிக்காரங்க, பனையரம்மா, குடுகுடுப்பைக்காரங்க, அழகர் மாட்டுக்காரங்க, ஏலத்துல துணி விக்கிறவங்க இப்ப நிறைய காணாமலே போயிட்டாங்களா இல்லையா… அப்படித்தான் எல்லாமே… கொஞ்ச நாள் பேசுவோம்… அப்புறம் மறந்துருவோம்.”

புரிந்ததாய் தலையாட்டினேன்.

“இந்தா இங்க நாளைக்கு அம்மன் பவனிக்குத்தான் எங்களை வரச்சொன்னாங்க… வேற வேலையில்லை, சரி மொதநாளே போனா அங்குன ஏதாச்சும் சம்பாதிக்கலாமேன்னு வந்தோம். அஞ்சு பாட்டுக்கு ஒரு தடவை குதிரைக்கும் எங்களுக்கும் ஓய்வு விட்டுப்போம். எழு மணிக்கு ஆரம்பிச்சோம் மூணு ரவுண்டு முடிச்சிருக்கோம்… ஒரு மூன்னூறு ரூபாயாச்சும் கிடைச்சிருக்கும். குதிரைக்கு தேவையானதெல்லாம் கொண்டு வந்திருக்கோம். எங்களுக்கு எப்படியும் சாப்பாடு கிடைச்சிரும் அப்ப இது லாபந்தானே. நாளைக்கு பேசுன தொகையைக் கொடுப்பாங்க. அப்ப இங்க வந்ததுக்கு எங்களுக்கு ஒரளவு நல்ல வருமானம் கிடைக்குமுல்ல”

“ம்.. இருந்தாலும் வீடு, வேலை, படிப்புன்னு வாழ்க்கை மாற்றத்தை நோக்கிப் போனதுக்கு அப்பறம் எதுக்கு இப்படி..?”

“அதான் சொன்னேனா… இதுதான் எங்களுக்கு சோறு போட்டுச்சு, இதுதான் எங்கள வாழ வச்சிச்சு, இதுதான் என் பிள்ளைகளுக்கு நல்ல வாழ்க்கையைக் கொடுத்துச்சு, என்னோட வாரிசுகளை படிக்க வச்சிச்சி… அப்புறம் இதை எப்படி தம்பி விடமுடியும்… இந்தா இங்க வந்தோம், நாலு தெரிஞ்ச சனங்களைப் பார்த்தோம்… உங்களமாதிரி ஆளுகளோட பேசுனோம். இது கூட ஒரு சந்தோசம்தானே… இல்லையா..?”

“ம்”

“இன்னொன்னு தம்பி… அன்னைக்குத் திருவிழாக்கள் எல்லாம் எல்லாரும் கூடி மகிழக் கொண்டாடினாங்க… அதுல அந்நியோன்யம் இருந்துச்சு, ஆனந்தம் இருந்துச்சு, குறிப்பா வருசம் பூராம் உழைச்ச களைப்பு நீங்கி உடம்புக்கு புத்துணர்ச்சியைக் கொடுத்துச்சு. தங்களுக்கு பாதுகாப்பா, வாழ்வுக்கு வளமளிக்கிற தெய்வத்துக்கு அவங்க சிறப்பு செஞ்சாங்க, அந்தத் தெய்வங்கள் எல்லாம் குளிர்ந்து அடுத்த வருசம் இன்னும் நல்ல மழை பெய்ய வச்சி விவசாயத்தை பெருக்குச்சுக… இன்னக்கி திருவிழாக்கள் எல்லாம் கடமைக்காய் மாறிப்போச்சு. பல கிராமங்கள்ல வீடுக மட்டும் பூட்டிக் கிடக்கலை கோயில்களும்தான். அன்னைக்கு செவ்வாய் வெள்ளி சாம்பிராணி போட்டுக் கும்பிட்ட மாதிரி இன்னக்கி எங்கயும் இல்லை. திருவிழாவுக்கு வர்றாங்க கொண்டாடுறாங்க பூட்டிப் போட்டுட்டுப் போயிடுறாங்க… மனுசங்களே குடியிருக்காத ஊருகளுக்குள்ள தெய்வம் மட்டும் எப்படி இருக்கும்…? கல்லுதான் இருக்கும் அதான் இன்னக்கி மனுசங்க மனசு கல்லாகிப்போச்சு. எவனாச்சும் ஒருத்தன் அடிபட்டுக் கிடந்தா என்னாச்சோ ஏதாச்சோன்னு பதறித் தூக்கிட்டு ஓடுன காலமெல்லாம் மலையேறிப் போச்சு தம்பி. இப்பல்லாம் அதைப் போட்டோ புடிச்சி, போனுல போடுற காலமாகிப்போச்சு… இன்னக்கி இருக்க மனுசங்க உணர்வுகள் செத்துப் போனவங்களா மாறிப் போயிட்டாங்க தம்பி. வீட்டுல ஆளாளுக்கு தனித்தனி உலகம்… சிரிப்பு… யாரும் யாரோடவும் பேசுறதில்லை… எங்கயும் ஒண்ணாக் கிளம்பிப் போறதில்லை… எப்பவும் போனு… பெரியவங்ககிட்ட ஆறுதல் வார்த்தையெல்லாம் பேசுன காலம் இப்ப இல்லை. ஒரே வீட்டுக்குள்ள அப்பனும் மகனும் பேசி வருசமாயிப் போச்சுன்னு சொல்றதெல்லாம் கேக்கவே ரொம்ப வருத்தமாயிருக்கு தம்பி”

எனக்கு சுருக்கென்றது. என் உலகம் போனுக்குள் சுருங்கி விட்டதையும் வீட்டில் யாருடனும் சிரித்துப் பேசியதில்லை என்பதையும் அப்போது உணர்ந்தேன்.

“தம்பி… இனி வரும் காலத்துல திருவிழாக்கள் எதுவும் இருக்காது. கிராமங்களோட பெருமையே சிறு தெய்வங்கள்தான்… பேச்சி, முத்தாளம்மன், நாகர், கருப்பர், முனியய்யா, ஒண்டி வீரன், காளி, மாரி, பாம்பரம்மா, பரமேஸ்வரி, உளிவீரன், அய்யனாருன்னு எம்புட்டுச் சாமிய ஊரு ஊருக்கு இருக்கும் தெரியுமா…? மரத்தைக் கும்பிடுவான்… கல்லைக் கும்பிடுவான். இப்ப அதெல்லாம் எங்க போச்சு தம்பி. எத்தனை சிறு தெய்வத்தை தொலைச்சிட்டோம் தெரியுமா..? மாரியும் காளியும் கருப்பனுந்தான் இன்னக்கி ஊருகள்ல இருக்காங்க, மத்ததெல்லாம்..? மரத்துலயும் கல்லுலயும் இருந்ததெல்லாம் இடம் தெரியாமப் போயிருச்சா இல்லயா… அப்படித்தான் தம்பி வரும் காலத்துல எல்லாத்தையும் இழந்துருவோம். சிறு தெய்வங்கள், புடைப்புத் தெய்வங்கள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா காணாமப் போயிரும் தம்பி. வருமானம் வர்ற கோவில்கள்ல காசு கொடுத்துப் பாக்குற தெய்வங்கள் மட்டுந்தான் இருக்கும். நேருக்கு நேரா நின்னு நாம பேசுன, சண்டை போட்ட, கட்டிப் புடிச்சிக் கொஞ்சுன சிறு தெய்வங்கள் எல்லாம் காணாமலே போயிரும். எல்லாத்தையும் இழந்த மாதிரி அதுகளையும் நாம இழந்திருவோம் தம்பி” என்றபடி வெற்றிலையுடன் புகையிலையை வைத்துச் சுருட்டி வாயில் அதக்கிக் கொண்டார்.

“உண்மைதான் ஐயா… நீங்க சொன்னதெல்லாம் இப்ப அப்படித்தான் இருக்கு… எங்க ஊர்லயே நிறைய சிறு தெய்வங்கள் போன இடம் தெரியல. இப்ப இருக்க தலைமுறை ஊருக்கே வர்றதில்லை. அவங்களுக்கு நாகரைத் தெரியுமா..? வில்லுக்கம்பு வெள்ளச்சாமியைத் தெரியுமா..? இல்லை பனங்காட்டுக் கருப்பனைத்தான் தெரியுமா..? வரமளிக்கும் வனப்பேச்சியைத் தெரியுமா..? எல்லாமே போச்சுங்க”

“திருவிழாக்கள், கலைநிகழ்ச்சிகள், சிறு தெய்வங்கள்ன்னு எல்லாத்தையும் இழந்த நாம இப்ப உறவுகளையும் உரிமைகளையும் இழக்க ஆரம்பிச்சிருக்கோம் தம்பி. வாழ்க்கை ஒரு தரம்தான் அதுல எத்தனை சண்டைகள், சச்சரவுகள்… பேச்சுவார்த்தை அத்துப் போய்… உறவு முறைகள் தெரியாம அடுத்த தலைமுறையை நாம போனுக்குள்ளயும் டிவிக்குள்ளயும் வளக்குறோம். வெளியில ஓடி ஆடுன காலமெல்லாம் இப்ப இல்லை… போனுலதான் விளையாட்டு. எல்லாரையும் சோம்பேறி ஆக்கிட்டோம்… வீட்டுக்குள்ள் சண்டைக்காரங்க மாதிரி வாழுறோம்… எழுத்தைக் குறைச்சோம், இப்போ பேச்சையும் குறைச்சிட்டோம்… எல்லாத்தையும் நாசமாக்கிட்டு நாம நல்லாயிருக்கோம்ன்னு நினைச்சிக்கிறோம். காரும், வீடும், பணமும் இருந்தா அது நல்ல வாழ்க்கையா தம்பி. இல்ல தம்பி இல்லவே இல்லை… உறவுகள் வேணும், அடுத்தவனுக்கு ஒரு துன்பமுன்னா ஆதங்கப்படுற உணர்ச்சி வேணும்… இதெல்லாம் இல்லாம வாழ்ந்து என்ன புண்ணியம் தம்பி” வெற்றிலை எச்சிலைத் துப்பினார்.

மிகப்பெரிய விசயத்தை சாதாரணமாய் அவர் பேசியது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. அவர் எனக்கு ஊர் காக்கும் அய்யனாராகத் தெரிந்தார். கையெடுத்துக் கும்பிட்டேன்.

அவரின் பேரன் “அய்யோவ் வா… இன்னம் ஒரு தடவை” எனக் கூப்பிட எழுந்து வேஷ்டியை அவிழ்த்துக் கட்டிவிட்டு, வெற்றிலையைத் துப்பி, வாயைக் கொப்பளித்துத் தண்ணீர் குடித்தவர் என்னிடம் “கடைசியா ஒண்ணு சொல்றேன் தம்பி… நாம வாழப் பிறந்த இந்த வாழ்க்கை ஒரு தரம்தான் என்பதை உணர்ந்து எதிரெதிரா நிக்கிற சொந்தத்தை எல்லாம் இனிமேலா பிறக்கப்போறோம் எனக் கட்டி அணைச்சி வாழக் கத்துக்கிட்டா இந்த வாழ்க்கை இன்னும் சிறப்பாகும் தம்பி. இந்த குதிரை ஆட்டமெல்லாம் என்னோட ஆட்டத்தோட போயிரும் தம்பி… இதுக்கெல்லாம் இனி மவுசு இருக்காது தம்பி. எல்லாம் மாறிடும். என்னைய அடையாளம் தெரிஞ்சி பேச வந்தீங்க ரொம்ப நேரமா என்னென்னமோ பேசிட்டேன். யார்க்கிட்டயாச்சும் கொட்டணும்ன்னு தோணுறப்போ நமக்கு நெருக்கமான ஒருத்தர் வந்தா கொட்டிருவேன் தம்பி. இதே மாதிரி பல ஊர்ல கொட்டியிருக்கேன்… விதைச்சதெல்லாம் எங்கயாச்சும் ஒரு இடத்துல முளைவிட்டாக்கூட போதும் தம்பி… சரி இன்னொரு ஆட்டம் போட்டுட்டு வர்றோம். நாளக்கி இங்கதான் இருப்போம், வந்தா ரெண்டு வார்த்தை பேசிட்டுப் போங்க”

“சரிங்கய்யா… கண்டிப்பா நாளைக்கு வர்றேன். இந்தாங்க இதை குதிரைக்கு கொள்ளு வாங்க வச்சிக்கங்க” என்றபடி பணத்தை நீட்ட, “அதெல்லாம் இருக்கு தம்பி. இம்புட்டு நேரம் பேசுனதுக்கா” எனச் சிரித்தவரிடம் “அதெல்லாம் இல்லைங்கய்யா… இருக்கட்டும்” என அவரின் கையில் வைத்துத் திணித்துவிட்டு நகர, காயத்ரி மிஸ்டு கால் கொடுத்தாள்.

இனி வீட்டில் போனுக்கு ஒதுக்கும் நேரத்தையெல்லாம் எல்லாருடனும் பேசுவதற்கு ஒதுக்க வேண்டும் என மனசுக்குள் நினைத்தபடி கோவில் வாசலை நோக்கி நடந்தேன்.

‘கூப்பிட்டா ஓடி வருவாளா’ என ஒலிபெருக்கி பாட ஆரம்பித்தபோது ஏனோ பல வருடங்களாக பேசாத தங்கை செல்லநந்தினி ஞாபகத்தில் வந்தாள்.

***

பரிவை சே.குமார் – தற்பொழுது பணி நிமித்தம் அபுதாபியில் வசிக்கிறார். இவரது சிறுகதைத் தொகுப்பு எதிர்சேவை வெளியாகியது. இரண்டாவது தொகுப்பை வம்சி பதிப்பகம் வெளியிட்டது. இவரது சிறுகதை ஒன்று யாவரும் பப்ளிஷர்ஸ் நடத்திய க.நா.சு சிறுகதைப் போட்டியில் பரிசு வென்றது. தொகுப்பின் பெயர் “கொரோனா காலம்”.

RELATED ARTICLES

6 COMMENTS

  1. கதையில் மேலாண்மை பொன்னுசாமியின் நடை, போக்கு, மற்றும் தமிழ் வட்டார வழக்கு தெரிகிறது. ஆனால் புலம்பல் கொஞ்சம் திகட்டச் செய்கிறது. நேரம் கிடைத்தால் பொன்னுசாமியின் மதகதப்பு படித்துப் பாருங்கள்.

    Jayakumar

    • அன்பின் ஜெயக்குமார் சந்திரசேகரன் அய்யா…

      தங்களின் மனதில்பட்டதை கருத்தை மனம் திறந்து சொன்னதற்கு மிக்க நன்றி.

      சொல்ல வந்ததைச் சொல்லியே ஆகவேண்டும் என்றபோது அது உண்மையான புலம்பலாய் இருக்கும் போது நீளமாக, அயற்சியாகத்தான் இருக்கும். இது சிலருக்குப் பிடிக்கும், சிலருக்குத் திகட்டலாய் இருக்கும். இதைச் சொல்ல சிலர் யோசிப்பார்கள் ஆனால் தாங்கள் மனதில் இருப்பதைச் சொன்னதில் மகிழ்ச்சி. இனி வரும் கதைகளில் குறைக்க முடியுமெனில் கண்டிப்பாக உங்கள் கருத்தை மனதில் நிறுத்துவேன்.

      மேலாண்மை பொன்னுச்சாமி ஐயாவின் கதகதப்பு வாசித்தேன். நல்ல கதை, வாசிக்கச் சொன்னதற்கு நன்றி ஐயா.

    • அன்பின் ஸ்ரீராம் அண்ணா…

      தொடர்ந்து என் எழுத்தை – எனது வலைப்பூவில் – வாசித்துக் கருத்துச் சொல்லும் தங்களுக்கு நன்றி.

      ரசித்து வாசித்தமைக்கும் நன்றி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular