பிரமிளா பிரதீபன்
‘அதிசயமான ஒலகத்துல ஆம்புள்ளப்புள்ள பொறந்துச்சாம். தொப்புள்கொடிய வெட்றதுக்குப் பதிலா எதையோ புடிச்சி வெட்டுனானுங்களாம்’
கனகு புலம்பிக்கொண்டே கல்வாசலைத் தேய்த்துக் கழுவிக் கொண்டிருந்தாள். சாடைமாடையாக எனக்கும் விசயம் தெரிந்ததால் அவள் வாயைக் கிளறுவதற்காகவென்றே கேட்டேன்.
‘என்னா கண்ணாடியாம் அது?’
‘சொன்னேனே அதிசயமான ஒலகத்துல ஆம்பளப்புள்ள பொறந்த கதன்னு…’
அருகே நெருங்கி வந்து குசுகுசுத்தாள்.
‘ஆளு ஒசரத்துல கண்ணாடி வாங்கிட்டாளாம். அதெ கொண்டே மறைவாத்தான் போட்றது! லயத்துல உள்ள சிறுசு பெருசு எல்லாம் அவ வீட்டு முன்னுக்கு நடக்கணுமுன்னு இருக்கு. நடுவீட்டுல வச்சி சோ காட்டுறாளுக.’
கைப்பிடி ஈர்க்கிளால் வாசலை இன்னும் அழுத்தமாய்த் தேய்த்தபடி புறுபுறுத்தாள்.
‘அவ வாசல்ல நடந்தாலே கண்ணாடி தெரியுதாமே! காலயில இருந்து அந்தக் கருமத்த ஏங்கேக்குற? இங்குட்டுக்கூடி குறுக்குப்பாத இருக்கையில, கொடத்த தூக்கிக்கிட்டு அங்குட்டால தண்ணிக்குப் போறாளுக.’
அதன் பிறகாய் அவள் பேசியது எதுவுமே என் காதில் விழவில்லை.
ஆளுயரக்கண்ணாடியாம். எனக்குள் பற்றியெரிந்துகொண்டிருந்தது. இஸ்தோப்பு சுவர் விளிம்பில் சாத்தி வைக்கப்பட்டிருந்த சதுரவடிவ சிறிய கண்ணாடியைக் கைகளில் எடுத்துக்கொண்டேன். ஸ்டிக்கர் பொட்டு ஒட்டிக் கழட்டிய அடையாளங்களை எச்சில் தொட்டு அழுந்தத் தேய்த்தெடுத்தேன். தெளிவு போதவில்லை. ஈரத்துணியால் அப்பியெடுத்து என் பாவாடையின் விளிம்பைத்தூக்கித் துடைத்தேன்.
முழு முகத்தையும் ஒருசேரப் பார்ப்பதற்கு இரண்டடி தள்ளி நின்றால்தான் உண்டு. ஒருபக்க முகத்தை உற்றுப்பார்த்துவிட்டு மறுபக்க முகத்தையும் எரிச்சலோடு பார்த்தேன். ஆளுயரக் கண்ணாடியில்தான் முழு உருவத்தையும் பார்க்க வேண்டுமா என்ன? நெஞ்சுப் பகுதிக்கு முன்னால் கண்ணாடியைப் பிடித்து எக்கிப்பார்த்தேன். அப்படியே வயிற்றை.. தொடைகளை… கால்களை… பார்க்க வளைந்து குனிய வேண்டியிருந்தது. வாந்தி வருவது போல… நெஞ்செல்லாம் எரிவது போல, பொறாமை இப்படியெல்லாமா செய்யும்!
என்ன நினைத்தேனோ அவசரமாய்க் குடத்தை எடுத்துக்கொண்டு லயத்துப்பாதையில் பீலிக்குச் செல்ல வாசலுக்கு இறங்கினேன். தவிப்பாய் இருந்தது. தலைமுடியைச் சரிப்படுத்திக்கொண்டு வேண்டுமென்றே கதவுகளோடு ஒட்டிய கல்வாசலில் நடந்தேன். அடுத்துக் கவீன் வீடு, அதற்கடுத்த இரண்டாவது வீட்டில்தான் அந்தக்கண்ணாடி. சித்திரா நின்றுகொண்டிருந்தால் என்ன செய்வது?
கதவு திறந்திருந்தது. சித்திரா வீட்டைத்தாண்டிய அந்த ஒரு நொடியில் மஞ்சள் பூக்களால் நிறைந்த நீலநிறப் பாவாடையோடு ஒரு அழகான பெண் நகர்ந்தாள். பகீர் என்றிருந்தது. நானேதான் என் மொத்த வடிவம்தான். ஒருகணம் நிதானித்து முழு லயத்தையும் நோட்டம் விட்டேன். கோடிப்பக்கத்தில் கண்ணாத்தம்பி கால்சட்டை இல்லாமல் ஓடிக்கொண்டிருந்தான். படபடவென ஆறேழு அடிகள் பின்னால் நகர்ந்து நின்றுகொண்டேன். வேகமாக மூச்சிரைப்பது போலிருந்தது. மீண்டும் சாதாரணமாக நடப்பது போலக் குடத்தின் கழுத்தை இடக்கையால் அணைத்துக்கொண்டு நடந்தேன். என் நடையில் வித்தியாசமிருந்தது. உதடுகளைக் கடித்து ஈரப்படுத்திக்கொண்டேன். சரியாகச் சித்திரா வீட்டைக் கடக்கையில் முழுதாகத் திரும்பாமல் ஒரு பக்கம் தலையைச் சரித்து எதேச்சையாகப் பார்ப்பது போலப் பார்த்தேன். சித்திரா நின்றுகொண்டிருந்தாள். பட்டெனத் தலையை வெட்டி வேகமாகக் கடக்க நினைத்தேன்.
‘கண்ணாடி வாங்கிட்டேன் சரசு. வேணுமுன்னா வந்து பாத்துக்க’ என்றாள்.
வெட்கமேயில்லாமல் சிரித்தேன். அவள் என் கோபக்காரி என்பதை மறந்து ‘அப்பறம் வாரேன்’ என இளித்துக்கொண்டே வழிந்தேன். ஒரே குதூகலமாய் இருந்தது. நடக்க முடியாமல் குடத்தைத் தூக்கிக்கொண்டு தவழ்ந்தேன்.
முழுதாய்த் தன் உருவத்தைப் பார்க்க யாருக்குத்தான் பிடிப்பில்லை! வயது இருபத்தைந்தைக் கடந்த பின்னுமே அந்த ஆசையின் எச்சம் ஒட்டியிருப்பதையெண்ணி வெட்கமாயிருந்தது. நடக்கும் போதில் சிரிக்கும் போதில், குளிக்கும் போதிலென்று ஒரே கண்ணாடியின் நினைப்பு. மலையில் தனியே நின்று மிளகு பறிக்கும்போது அதன் பச்சை வாசனை வழமைபோலல்லாமல் சுகந்தமாயிருந்தது. காரத்தில் உடலெறிவது போலாய்த் தோன்றவுமில்லை. மிளகுக் கொட்டைகளை உருவி யூரியா பேக்குக்குள் கொட்டும் போதும் கைகளால் துழாவித்துழாவி எக்கியும் குனிந்தும் அமர்ந்தும் ஆயும்போதும் என் கண்களில் நீலப் பாவாடையின் மஞ்சள் பூக்களும் மின்னலென மறைந்த மொத்த உடலும் நிழலாடின. தலைவேட்டியை முக்காடாய்ப் போர்த்திக்கொண்டே மிளகு ஆய்ந்தேன். முகம் கறுப்பாகத் தெரியக்கூடாது. மொத்தமாகப் பார்க்கும்போது கொஞ்சமாவது அழகாய்த் தெரியவேண்டாமா? ஆறு மணியளவில் சித்திராவைப் பார்க்கப் போவதுபோலப் போகவேண்டும். அதற்கு முதல் பீலியில் இடம்பிடித்துக் குளித்துக்கொள்ள வேண்டும். என்ன உடுத்தலாம்? சல்வார்? இல்லை சந்தேகம் வரும். சாதாரணமாகப் போவது போலத்தான் போகவேண்டும். பாவாடை சட்டையே போடலாம். பிறகு சமயம் கிட்டினால் பார்த்துக்கொள்ளலாம். பெரிய கண்ணாடி அது. எவ்வளவு விலை வருமாயிருக்கும்? பேசாமல் வாங்கிப் போட்டாலென்ன? சித்திரா வீட்டில் போய் அப்படியே திருப்திப்பட்டுவிட, ஆடையோடு சேர்த்தென் முழு உடலையும் மட்டுந்தான் பார்க்க விரும்புகிறேனோ? எப்போதிலுமே நான் பார்க்காத அந்த என் நிர்வாணத்தையும்தானே!
காரத்தை எனக்குள் கடத்திவிட்டு யூரியா பேக் மிளகால் நிறைந்திருந்தது. நான் உவகையால் கரைந்து புகைந்து கொண்டிருந்தேன்.
*
எனைச்சுற்றிலும் நெருக்கிய ஆயிரம் கண்ணாடிப் பிம்பங்களை விலக்கித்தள்ளி நித்திரைக்குள் தாவ முயன்றேன். முடிவதாயில்லை. பலநூறு நாட்களுக்கு முற்பட்ட நினைவுகள் இடைவெளியற்ற விக்கலைப்போல வந்து விழத்தொடங்கின. மஞ்சள் பூசி மேனியைப் பொன்னிறமாக்கிய என் பதிமூன்றுகளின் வெளிச்சம் கண்களைக் கூசியது. அப்படியே பதிநான்கு.. பதினைந்து… என் மாய உடலைப் பதுக்கிக்கொண்ட பதினாறுகள்… எனையறியாமல் முகத்தை விளாவிய விரல்களைத் தொப்பெனத் தலையணையில் விழுத்தினேன். நீண்டநாட்களாக மாற்றப்படாத உறையில் எண்ணெய் பிசுக்கு நாறியது. தலையணையை மறுபக்கம் மாற்றி வைத்துப் படுத்துக்கொண்டேன். இந்த நினைவுகளைச் சுகந்தங்கள் மட்டுமே பற்றிக்கொள்ள வேண்டும்.
இருளில் விழித்துக்கிடந்த இரவுகளை நினைவிலில்லை. குத்தியெடுக்கும் இராக்குளிரை பெரிய போர்வையால் விரட்டியடிக்கும் முயற்சி அனேகமாக நித்திரையில் முடிந்திருக்கும். இடையில் வெளிக்குப் போக வந்தாலும் அடக்கிக்கொண்டே கிடத்தலில்கூட நல்ல பரிச்சயம். கண்கள் திறந்து ஒருக்களித்துப் படுத்தேன். இடப்பக்கம் வரிசையாய்க் கிடந்த தலைகள் மேலும் கீழுமாய் மாறியிருந்தன. வழமையாகப் படுக்கும் கயிற்றுக்கட்டிலைச் சுருட்டிவிட்டு ஐயா அம்மாவிடம் கிடந்தார். வாய்பிளந்து தூங்கும் அம்மாவின் மார்ச்சேலை விலகியிருந்தது. பட்டென வலப்பக்கம் திரும்பிப் படுத்துக்கொண்டேன். ஒரு மூலையில் பிணமொன்று வெள்ளைத்துணியால் சுற்றிக்கிடப்பதைப் போலவே ஆயா தெரிந்தாள். தைலவாடையும் புகையிலை வாடையுமாய் சேர்ந்த பொசுங்கிய மணமொன்று அவளது அருகாமையில் நிரம்பியிருந்தது.
நிலை கொள்ளவில்லை எனக்கு. மீட்டிப்பார்க்க வேண்டும். என்னை, என் இளமையின் நாட்களை, உடலை, உடலின் மாயங்களை, மறைத்து வைத்திருந்த அம்மாயங்களின் வசீகரத்தை… எழுந்து நேராக நடுவீட்டில் நின்றேன். இப்படி நிற்பதில் ஒரு ஆபத்துமிருக்கிறது. சின்னமாமி ஒரு நடுயாமத்தில் ‘பேய்’ என்று சத்தமாக என்னைப் பார்த்துக் கத்தி முழு லயத்தையே உசுப்பிவிட்ட சம்பவங்களுமிருந்தன. யார் காலிலும் இடறாமல் தாண்டித் தாண்டி இருட்டைத் தடவிக்கொண்டே இஸ்தோப்புக்கு வந்தேன். முன் கதவைத் திறந்தால் கிறீச்செனச் சத்தம் கேட்கும். சரணீரைத்திறந்து கதவைத் தூக்கியிழுத்தேன். சத்தமில்லாமல் திறப்பட்டது. அதே வேகத்தில் கதவை மூடி கல்வாசலில் குதித்தேன்.
கிளிமூக்கு மாமரத்தின் இலைச்சந்துகளுக்குள் நிலவொளி கோடாகியிருந்தது. வாசற் கனகாம்பரப் பூக்களின் தனித்த நிறம் பனித்துளிகள் பட்டு ஜொலித்தன. கவீன் வீட்டு வாசற்கொடியில் ஈர உடுப்புகள் அப்படியே நீர்வடியத் தொங்கின. தரையில் ஒரு சவர்க்காரப்பெட்டியும் சன்லைட் கட்டியும் விழுந்துகிடந்தன. ஈரக்காற்று காதுத்துளைகளை அடைத்து இழுத்தது.
நான் மாமரத்தடிக் கருங்கல்லில் அமர்ந்து, சித்திரா வீட்டையே பார்த்துக்கொண்டிருந்தேன். ஆறு மணிக்கு அவள் வீடு மூடியிருந்தது. ஏழுக்கும், எட்டைத் தாண்டியும் கூட… அந்த நிலைக்கண்ணாடியைக் கல்லால் அடித்து நொறுக்க வேண்டும். அவளையும் சேர்த்து. என் வக்கிர மனம் அலைந்தது. எழுந்து கோடிப்பக்கம் நடந்தேன். பெரும்பூதமாய் என் நிழல் அசைந்தது. மார்பகங்களின் மேடு பள்ளங்கள் பிள்ளைத்தாச்சிப் பெண்ணின் வயிற்றைப்போல உருண்டிருந்தது. ச்சே! மீண்டும் கல்லில் வந்தமர்ந்தேன்.
உடுப்புக்கடைச்சந்துக் கண்ணாடியில் பார்த்த அந்த என்னையும் நெத்திக்காண் தண்ணீர்ப் பிம்பத்தில் பார்த்த என்னையும் ஒப்பிட்டுப் பார்க்க முடியவில்லை. சந்துக்கண்ணாடி என்பதால் அப்படிப் பெருத்துப்போய்த் தெரிந்தேனா? இடுப்பில், வயிற்றில் மார்புக்கும் அக்குளுக்கும் இடையிலெல்லாம் எப்படித் தசைகள் தொங்கின? சித்திரா வீட்டுக் கண்ணாடியிலும் அப்படியேதான் தெரிவேனா? எத்தனை மிருதுவான என் உடற்பாகங்களைத் தவற விட்டிருக்கிறேன்! குனிந்து கைகளால் கால்களைத் தடவிக்கொண்டேன். விரல் நுனிகளின் வெடித்துப் பிளந்த சிறு கத்திக்காயங்களும் அதிருப்தியான சொரசொரப்பும் கால்களை முரட்டுத்தனமாய்க் கீறின. இரு உள்ளங்கைகளையும் சேர்த்துத் தேய்த்து முகத்தில் வைத்தேன். முகத்தின் வெயிற்புண்களும் வியர்க்குருக்களும் சில்லிட்டிருந்தன.
எவ்வளவு சபிக்கப்பட்டவள் நான்! சொல்லப்போனால் நான் மட்டும்தான் என்னைப் பார்க்கத் தவறியிருக்கிறேன். தவறணைக் கிணற்றில் குளிக்கும்போது பலா மர உச்சியிலிருந்து தொரசிங்கு பார்த்திருக்கிறான். நெரிசலில் போகும்போதும் வரும்போதும் யார் யாரோ தடவியும் இடித்துமிருக்கிறார்கள். கொக்கோ மரங்களுக்குப் பின்னால் நகம் வெட்டுவதுபோல நின்று, நீரள்ளும்போது என் மார்புகளைக் குற்றவுணர்ச்சியேயில்லாமல் மைனா பார்த்திருக்கிறான். இப்படி ஆயிரம் ‘பார்த்திருக்கிறான்களை’ அருவருத்தபின் உடல் மீதொரு வெறுப்பும் அலட்சியமும் இயல்பாகவே எனக்கு முளைத்திருந்தது. அந்த ‘பார்த்தான்களை’ கொதிக்கும் வெந்நீரில் தள்ளி அவிக்க முடியாத ஆதங்கம் என் மேனியை மறைத்துப் பதுக்கிக்கொண்டு ஓடவைத்தது. ஒளிய வைத்தது. பெருங்குற்றமிழைத்த காயமென உடற்பாகங்களைத் தண்டித்தலைப் பழக்கமாக்கியது. குமட்டும் அந்தப் பார்வைகளைப் பாவாடைக்குள் மறைத்துக் கழுவியகற்றியிருக்கிறேன். தடங்கள் பதியுமளவில் சொரசொரப்பான டவலால் துடைத்து அந்த ஸ்பரிசங்களை அழித்திருக்கிறேன்.
நிஜமாகவே முடியவில்லை. பல்லாயிரம் வருடங்களாக இளைப்பாற விடாமல் உடலைத் தூக்கிச் சுமந்துகொண்டே அலைந்து திரிவதைப்போல மிகக் கணமாகவும் களைப்பாகவும் இருக்கிறது. அதன் அசிங்கமான நீட்சிதானோ என்னவோ! உடல் மறந்து தூங்கிய நாளென்று இதுவரை எனக்கு எப்போதும் அமைந்ததில்லை. யாராவது உள்ளே வரலாமெனும் அதீதத் தயக்கம் துணி விலகாமல் இருப்பதற்கான நிரந்தர விழிப்பொன்றைப் பற்றிக்கொண்டேதான் இருந்தது. உள்ளாடைகள் அணியாமல் நான் படுத்ததேயில்லை. மெய்மறந்து எப்போதும் கிடந்ததில்லை. எப்படி ஆரம்பித்ததெனத் தெரியாத இந்த நிரந்தர விழிப்பு பெருஞ்சோர்வையும் தாளவியலா பயத்தையும் ஒருசேரத் தருகிறது. ஆனால் இழந்தவைகள் மீளப்பெற முடியாதவை எனும் உண்மை தட்டுப்படும் போதில்தான் தாங்கமுடியாத் துயரொன்றால் ஆழ்மனம் விம்மியழுகின்றது. அந்த அழுகைக்குக் கண்ணீர்த் துளிகளோ கதறலோ தேவைப்படுவதில்லை.
எத்தனை மாயம் இந்தப் பெண்ணுடலுக்கு! ஒரே ஒரு பொழுதேனும் என் புறத்தின் பிம்பத்தைக் காணமுடியாத இந்த வாழ்க்கையில் அகத்தை என்னவென்று அறியப் போகிறேன். சிரிப்பாய் வந்தது. எனக்கென ஒரு படுக்கை அறை. பயமற்றுக் குளிக்க நான்கு பக்கமாகத் தகரங்களில் அடைத்தேனும் ஒரு குளியலறை. கிணற்றடியிலோ பீலியிலோ அல்லாமல் துணியையோ அல்லது செனிட்டரி பேட்டையோ உள்ளாடையில் நேர்த்தியாக வைத்தெடுத்து அவஸ்த்தையற்றுப் போட்டுக்கொள்ள மறைவான ஓரிடம். அம்மாவிடம் கேட்டால் ‘ அதிசயத்த…..! புதுசா கொமராயிட்ட பாரு’ என அலட்சியமாகச் சிரிக்கிறாள்.
*
காலைப்பீலியின் பரபரப்பில் யாரும் யாருடனும் பேசிக்கொள்வதில்லை. பாத்திரங்களைப் பேசனில் போட்டுத் தேய்த்துக் கழுவிக்கொண்டும் முகம் கைகால் அலம்பிக் கொண்டுமென ஆளாளுக்கு வந்த வேகத்தில் விரைந்துவிடுவார்கள். நான் இன்று வேலைக்குப் போவதாய் இல்லை. மனது செத்து வறண்டிருந்தது. துளிர்ப்பிக்கச் சில நச்சுத்துளிகளைச் சித்திரா மேல் தெளித்தாக வேண்டும். அவள் பாத்திரங்களை அள்ளிக்கொண்டு வரும்வரை காத்திருந்தேன். காட்டுச் செடிகளுக்குள் தெரிந்த கருப்பட்டி இலைகளைக் கொத்தாக உருவி ஒவ்வொரு இலையாக மென்றுதின்று அதன் சாற்றை உறிஞ்சிவிட்டுச் சக்கையை எச்சிலுடன் கலந்து ஊதினேன். துவர்ப்பும் இனிப்பும் கலந்த அச்சாற்றின் சுவை மேலும் என்னை வெறியேற்றிக் கொண்டிருந்தது. செடியிலிருந்த ஊதாநிறச் சிறு பூக்களைக் கைகளுக்குள்ளாலேயே கசக்கி மணந்தேன். வேட்டையாடக் காத்திருக்குமொரு மிருகமாய் மாறிக்கொண்டிருந்தேன். அவளை இன்னுமே காணவில்லை. பீலியிருந்தவர்களும் வடிந்தோயத் தொடங்கினார்கள். அதற்குப் பிறகும் பொறுமையில்லாமல், கட்டியிருந்த பாவாடையை இழுத்தேற்றி மாரோடு கட்டிக்கொண்டு இதரத்துணிகளை நனைத்துத் துவைக்கும் கல்லில் வீசினேன்.
அந்தக் கண்ணாடியைப் புகழ்ந்தவாறே யாரோ வந்துகொண்டிருந்தார்கள். பின்னாலேயே அவளும். கணமும் தாமதியாமல் பீலித்தண்ணீரில் தலையை நனைத்துக் குளிக்கத் தொடங்கினேன். இன்று யாருக்கும் இடம் தருவதாயில்லை. விழும் நீரின் மொத்தமும் திணறடித்தது. குஞ்சுக்கோழி வாயைத் திறந்து திறந்து மூடுவதைப்போல நீருக்குள் நின்று சுவாசித்தேன். காலை வெயிலின் மென்சூடு நீரைக் கதகதப்பாக்கிக்கொண்டு என்னை மொத்தமாய் ஆட்கொண்டிருந்தது. நான் சித்திராவைக் கொஞ்சம் மறந்தும் போனேன். உச்சந்தலையில் பரவும் குளிர்ச்சி தொண்டைக்குழி வழியில் அப்படியே பரவி உடலை இறுக்கியது. சிலிர்த்தடங்கி அண்ணாந்து கண்கள் திறந்தேன். வானத்தில் ஈரப்பலாவிலைகள் மிதந்தன. வெளிச்சம் சரிநேராய் பாய்ந்தது. ‘சரசு…’ என்று என் பெயரை நீருக்குள்ளேயே கூவிக் கத்தினேன். நீரோடு பிணைந்த அதிர்வுடன் அந்தச் சத்தம் திக்கியது. சித்திராவும் என்னிடம் ஏதோ பேசிக்கொண்டிருந்தாள். நீரோசையில் ஒன்றுமே புரியவில்லை. ‘வௌங்கல…’ என்றேன். ‘ஏன் நேத்து வீட்டுக்கு வரல்ல?’ அவள் சத்தமாகக் கேட்டாள். என்ன சொல்வது? துணிக்கல்லில் நனைத்துக் கிடந்த உடைகளைப் பளார் பளாரென அடித்துத் துவைத்தேன். சோப் நுரையின் சிதறல்கள் அவள் மீதும் பட்டுத் தெறித்தன.
‘நீதான் கதவ மூடிட்டியே?’
‘தட்டுனா கொறஞ்சிருவியோ’
அவளிடம் பேசப்பிடிக்கவில்லை. ‘கண்ணாடில பார்க்க என்ன இருக்கு.. இந்தா இப்டி பாத்துக்குறேன்’ குனிந்து என் மேனியைக் கைகளால் தடவிக் காட்டினேன். பாவாடையை அவிழ்த்துப் பக்கவாட்டில் உதறி மீண்டும் கட்டிக்கொண்டேன். சித்திரா கேவலமாகச் சிரித்தாள். பற்கள் வெளித்தள்ளிய ஒரு அரக்கியைப் போலக் குனிந்தும் நிமிர்ந்தும் பெரும் அகங்காரத்துடன் சிரித்துக்கொண்டிருந்தாள். திடீரெனத் தடுமாற்றத்துடன் பேச்சிழந்து என்னைப் பார்த்தாள். நான் கைபிடித்தண்ணீரை முகத்திலடித்துக் கழுவினேன். நிலைக்குத்தாக விழும் தண்ணீரில் என் பாதி உடல் பளிச்சென்று தெரிவதைப் பார்த்துக்கொண்டே மேலேறினேன். அவள் ‘பாம்பு பாம்பு’ என்று கத்தத் தொடங்கினாள். பதறியடித்து லயத்துப் பக்கமாய் ஓடினாள். அவளுக்குப் பின்னாலேயே வேறு சிலரும் ஓடினார்கள். நானும் ஈரப்பாவாடையுடன் டவலைப் போர்த்திக் கொண்டு விரைந்தேன்.. பாம்பு எங்கள் லயத்திற்குள் நுழைந்ததென யாரோ கூச்சலிட்டார்கள்.
ஓரு வீட்டில் நுழையும் பாம்பு அடுத்தடுத்ததாய் எல்லா வீட்டுக்குள்ளும் கூரை வழியே புகுந்துகொள்ளும். ஆளுக்கொரு மண்ணெண்ணெய்ப் போத்தலை எடுத்து ஊற்றுவார்கள். பாம்பு தலைதெறிக்கத் தப்பித்து ஏதாவது ஒரு வீட்டுச்சந்துக்குள் ஒளிந்து வெளிவராமல் சில நாட்களுக்கு அப்படியே கிடக்கும்.
லயமே கூவித்தத்தளிக்க ஆரம்பித்தது. ‘இன்னாம் பெரிய நல்லபாம்பு’ கனகு விவரிப்பதைப்பார்க்கப் பயமாயிருந்தது. வீட்டுக்குள்ளே சென்று பாம்பை அடிக்கும் துணிவு யாருக்கும் இருக்கவில்லை. நான் அரை குறை ஆடையுடனிருப்பதை மறந்து பாம்படிக்கப் பாய்ந்து திரிந்தேன். என் திடீர்த் தைரியம் அவ்விடத்தின் தலைவியாய் எனை ஆக்கியது. கட்டைகளையும் தடிகளையும் வைத்திருந்த ஓரிருவர்கூட என் பின்னால் வந்து பாம்பைத் தேடினர். போதாக்குறைக்கு நாய்களும் குரைக்க ஆரம்பித்திருந்தன. அதிலொரு வேட்டை நாயும் இருந்ததால் தெம்போடு பாம்பைத் தேடிக்கொண்டிருந்தோம். பகல்நேரக் குடிகாரன் சின்னானும் எங்களோடு சேர்ந்துகொண்டான். நாங்கள் முழு லயத்தையும் சுற்றிச் சுற்றி ஓடினோம். அவ்வப்போது சின்னானும் ‘அந்தா போகுது… இந்தா வருது’ என்று எங்களைத் திசை திருப்பிக் கொண்டிருந்தான். வாசலில் காயப்போடப்பட்டிருந்த மிளகுக் கொட்டைகளை மிதித்து இரைத்துக்கொண்டு அவன் ஓடினான்.
ஈரப்பாவாடையோடும் நீர் சொட்டும் தலைமுடியோடும் நான் அலைந்தேன். என் பின்னால் வருபவர்களின் பயத்தைப் பார்த்ததும் நானே அந்தப் பாம்பைக் கொன்றுபோட வேண்டுமென்று தோன்றியது. கைக்கெட்டிய கண்டிமர வாதொன்றை வளைத்து ஒடித்துக்கொண்டேன். சித்திரா பயந்து நடுங்கியபடி என் பின்னாலேயே திரிந்தாள். சந்தர்ப்பம் பார்த்து அவளது வீட்டுக்குள்ளேயே நுழைந்து அந்தக் கண்ணாடியையும் சேர்த்து நொறுக்க நினைத்தேன். அது புரியாமல் பைத்தியத்தைப் போல அவள் என் பின்னால் ஒட்டிக் கொண்டிருந்தாள்.
கூரையில…. கூரையில…. எங்கவீட்டுக் கூரையில’ கனகு கத்திக்கொண்டு பதறினாள். அது கூரைவழியே உள்ளேயும் வெளிச்சுவற்றிலுமாய் மாறி மாறி ஒவ்வொரு வீடாக உலாவியது. அப்படியே அதனைப் பின்தொடர்ந்து அடித்துவிட எவரும் முன்வருவதாயில்லை. வஞ்சம் கொண்ட என் துஷ்ட மனம் அச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொள்ளத் தயங்கவில்லை.
நான் அந்தத் தடியோடு பின் வாசல் வழியாகத் தடாரென சித்திரா வீட்டுக்குள் நுழைந்தேன். முன் வாசல் மூடியிருந்தது. அரையிருட்டிற்குள் கூரைவழி வெளிச்சம் செங்குத்தாக விழுந்து வீட்டைப் பொன்நிறமாக்கியிருந்தது. முதலில் நான் அந்தக் கண்ணாடியைத்தான் தேடினேன். இதழ்கள் திறந்த மௌனச் சிரிப்பொன்று இயல்பாக விரிந்தது. அப்படியே கண்ணாடி முன் நின்றேன். நடுக்கம் கொண்ட விரல்களால் என் பிம்பத்தைத் தொட்டுத் தடவினேன். இமைக்காமல் சில நொடிகள் ஓவியமானேன். அபிஷேகத்திலிருக்கும் தேவியின் கருஞ்சிலையாய்… மேனி ஜொலித்தது. தலையிலிருந்த ஈரம் மார்பிலும் கழுத்திலும் சொட்டி வடிந்தது. அவர்கள் வெளியிலிருந்து கத்தினார்கள். சித்திராவின் குரல் தனித்துக் கேட்டது. ‘இருக்குதா..? அடிச்சிட்டியா?’ நிஜமாலுமே என் பிம்பத்தைச் சுற்றிப் பாம்பு தெரிகிறதாவென கண்ணாடியிலேயே தேடினேன். அவர்கள் தொடர்ந்தும் கத்திக்கொண்டேயிருந்தார்கள். நாய்களும் சேர்ந்து குரைத்தன. எனக்கு எல்லாமே ஸ்தம்பிதமாகித் தொலைவாகின. என் உலகம் பிம்பத்தின் வழி மிதந்தது. பாம்பு நிலத்திலிருந்து முளைத்து எனதுயரம் வரைக்குமாய் நீண்டு படமெடுத்து நிற்பதையும் அதன் கண்களில் எனது சாயலையும் துல்லியமாகக் கண்டேன். விநோதமான மூச்சொலியுடன் அதிர்ந்துப்போனேன். ஓரடி பின்நகர்ந்து முகர்ந்து தேடினேன். பாம்பின் வாசனை பிடிபடவில்லை. என்ன நடக்கிறதென்று தெரியாத குழப்பம். பசித்த மிருகமொன்றின் வெறி கொண்ட கண்களால் பாம்பின் பளபளப்பை எனதாக்கி இரசித்தேன். என் உடல் நெளிவுகளில் பாம்பொன்றின் வசீகர அலைகள் மின்னின. நான் சுடர்ந்து கொண்டிருந்தேன். அமர்ந்தும் எழுந்தோங்கியும் வளைந்தாடத் தொடங்கினேன். சட்டையகற்றிய நிர்வாணத்துடன் தன்னைத்தானே மோகிக்க எண்ணும் அந்தப் பாம்பின் காதுகளுக்கு எதுவுமே கேட்கவில்லை.
சுற்றிலுமாய் நிச்சலனம். பாம்பு வேறெங்கோ ஓடிக்கொண்டிருப்பதாகச் சின்னான் சத்தமாகக் கத்தினான்.
நான் பின் வாசற்கதவை இறுக்கி அடைத்தேன்.
***
பிரமிளா பிரதீபன் – இலங்கையை சேர்ந்தவர். ஃபாத்திமா மகளிர் கல்லூரியின் துணை முதல்வராகவும், SLIIT பல்கலைக்கழகத்தின் வருகைதரு விரிவுரையாளராகவும் பணிபுரிகிறார். மூன்று சிறுகதைத் தொகுப்புகள், ஒரு நாவல் வெளியாகியிருக்கின்றன. தொடர்ச்சியாக இலக்கிய இதழ்களில் சிறுகதைகள் எழுதிவருகிறார். மின்னஞ்சல் : pramilaselvaraja@gmail.com


