குயிலிமுனுசாமி
(வையாசி – 19 செட்டிநாட்டு வழக்காறுகளை ஆய்வு செய்வோருக்கு கிடைத்த பொக்கிஷம்)
வையாசி -19 என்ற இந்த நாவல் 1910 முதல் 1945 முடிய உள்ள 35 ஆண்டுகாலத்தில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகில் உள்ள கோட்டையூரிலும் மலேசியாவில் உள்ள பொந்தியான் பகுதியிலும் நிகழும் நிகழ்வுகளை மையமாக கொண்டு புனையப்பட்டுள்ளது.
நாவலின் நாயகியான கோட்டையூர் அடைக்கப்பன் மகள் மீனாவுக்கு வயது 13. அவள் அதே ஊரைச் சோ்ந்த அண்ணாமலையை நான்காம் தாரமாக மணக்கிறார். அண்ணாமலைக்கு வயது 26 தான். ஆனால் பால்ய வயது திருமணங்கள் நடந்து வந்த அக்காலத்தில் அவரது முதல் மனைவி எட்டு வயதில் அம்மை நோயால் இறந்து விடுகிறார். இரண்டாவது மனைவி, இரண்டு குழந்தைகள் பெற்றுவிட்டு இரண்டாவது பிரசவத்தில் உயிரிழக்கிறார். மூன்றாவது மனைவி அண்ணாமலையுடன் வாழப் பிடிக்காமல் பிரிந்து விடுகிறார். அதனால் அண்ணாமலைக்கு நான்காவதாக திருமணம் நடக்கிறது.
மீனாவிற்கு இரண்டு ஆண் குழந்தைகள், இரண்டு பெண் குழந்தைகள். ஐந்தாவது குழந்தை இரண்டு மாதக் கருவாக இருக்கும் போது அண்ணாமலை அரவம் தீண்டி இறக்கிறார். 32 வயதில் விதவையான மீனா, கணவன் விட்டுச் சென்ற பணிகளை முடிக்க அவன் வணிகம் செய்த மலேசியாவிற்கு செல்கிறார்.
மலேசியாவில் மீனாவின் சித்தப்பா ராமையாயவும் அவரது வளா்ப்பு மகன் ரூபி போன்றோர் அவருக்கு உதவியாக இருக்கிறார்கள். மலேசியாவில் பல்வேறு பிரச்னைகளை சந்திக்கும் மீனா அவற்றை தைர்யமாக நின்று தீர்க்கிறார். 1944-ம் ஆண்டு மலேசியா மீது ஜப்பான் குண்டு வீசி தாக்கி மலேசியாவை ஜப்பான் கைப்பற்றியதும் மலேசியாவில் நிலைமை மாறுகிறது. இனி மலேசியாவில் இருக்க சாத்தியமில்லை என்று மீனா தனது சொந்த ஊரான கோட்டையூர் திரும்புகிறார். அத்துடன் 628 பக்கங்களை கொண்ட இந்த நாவல் முடிகிறது
நெல்லைத் தமிழ், சென்னைத் தமிழ், கொங்குத் தமிழ் என்பது போல செட்டி நாட்டுப் பகுதியில் உள்ள சுமார் 50க்கும் மேற்பட்ட ஊர்களில் இன்றும் வழக்கத்தில் உள்ள பேச்சு மொழியில்தான் இந்த நாவல் முழுவதும் எழுதப்பட்டுள்ளது
இந்திய சுதந்திரத்திற்கு முன்னர் மலேசியா, தென்னாப்பிரிக்கா. இலங்கை போன்ற பல்வேறு நாடுகளுக்கு தோட்டங்களில் வேலை செய்ய தமிழகத்திலிருந்து கூலிகளாக கொண்டு செல்லப்பட்டனர்.
அது போல் வட்டித் தொழில் செய்ய தமிழகத்திலிருந்து கடல் கடந்து சென்றவர்களில் நாட்டுக் கோட்டை செட்டியார் எனப்படும் நகரத்தார்கள் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்கள் மலேசியா, பர்மா சிங்கப்பூர், ஜாவா, சுமத்ரா, இலங்கை போன்ற நாடுகளுக்கு வட்டித் தொழி்ல் செய்ய புலம் பெயர்ந்தார்கள். பின்னர் அங்கு ரப்பர் தோட்டங்கள், விவசாய நிலங்களை போன்றவற்றை வாங்கி பிற வணிகங்களிலும் இறங்கி பொருள் ஈட்டினர்.
நாவலில் குறிப்பிடப்படும் பொந்தியான் மலேசியாவின் தலைநகர் பினாங்கிலிருந்து 360 மைல் தொலைவில் ஊராகும். கதையின் நாயகி மீனாவின் தந்தை அடைக்கப்பனும், மீனாவின் கணவன் அண்ணாமலையும் அங்கு ரப்பர் தோட்டம், வட்டி வணிகம். விவசாயம் போன்ற தொழில்களை செய்து வருகின்றனர். இதனால். மாமனாரும் மாப்பிள்ளையும் மீனாவின் திருமணத்திற்கு முன்பே மலேசியாவில் ஒருவருக்கொருவர் அறிமுகமானவர்கள். அண்ணாமலையின் நற்குணங்களால் ஈர்க்கப்பட்ட அடைக்கப்பன் தன் மகளை அண்ணாமலைக்கு நான்காம் தாரமாக கொடுக்க சம்மதிக்கிறார். மீனாவின் பூரண சம்மதத்துடன் திருமணம் கோட்டையூரில் 1913ம் வருடம் வைகாசி மாதம் 19ம் தேதி நடக்கிறது. வையாசி -19 என்பது கதையின் நாயகி மீனாவின் திருமண நாள். அதுவே நாவலின் தலைப்பு.
ஒருவருக்கு நாலாந்தரமாக திருமணம் செய்தால் அந்த திருமண வாழ்வும் நிலைக்காது என்பதால் ஜோசியரின் யோசனைப்படி மாப்பிள்ளை வீட்டில் ஒரு வாழை மரத்திற்கு மஞ்சள் கயிறு கட்டி பின்னர் அதனை வேலையாளை விட்டு வெட்டிச் சாய்த்த பிறகு அண்ணாமலை மீனாவை திருமணம் செய்து கொள்கிறார். இப்படி ஒரு சடங்கு அக்காலத்தில் இருந்துள்ளது. இப்போதும் சில பகுதிகளில் இரண்டாம்தாரமாக செய்யப்படும் இடங்களில் இந்த வாழைமரச் சடங்கு உள்ளது
இந்நாவலில், மீனாவின் மங்கல நீராட்டு விழாவில் தொடங்கி அவளின் திருமணச் சடங்குகள், குழந்தைப் பேறு, கணவன் இறந்த பிறகு கடைப்பிடிக்கப்படும் சடங்குகள் என ஒரு பெண்ணின் வாழ்வில் ஏற்படும் அனைத்து நிகழ்வுகளும் ஒரு காணொளி போல நன்கு படம் பிடித்துக் காட்டப்பட்டுள்ளன. இதல்லாமல் பல்வேறு தகவல்களைத் தரும் தகவல் களஞ்சியமாகவும் இந்நாவல் உள்ளது
அவ்வை நோன்பு நகரத்தார் பெண்கள் ஆடி, தை, மாசி ஆகிய மாதங்களில் செவ்வாய்க் கிழமைகளில் இரவு 10 மணிக்கு மேல் ஒரு நோன்பு கொண்டாடுவார்கள். அதற்கு “ஒரு சந்தி” என்று பெயர். இதற்கு ஒரு கதை இந்நாவலில் கூறப்படுகிறது
ஒரு வீட்டுக்கு பிச்சைக் கேட்டு வந்த அவ்வையாருக்கு கொடுக்க ஏதுமில்லாததால் வீட்டிலிருந்த பெண் தயங்கி நிற்க, அதைக்கண்ட அவ்வையார், அந்தப் பெண்ணிடம், “தப்பினது தை, மறந்தது மாசி, அசந்தது ஆடி மூணு மாசமும் அள்ளு படி எடுத்து முள்ளு புடி எடுத்து முஞ்சாங்கெடுத்து பிஞ்சரங்கொடுத்து ஏறு பொழுதில குத்தி இறங்கு பொழுதில காயப்போட்டு ஊரு உறங்கி ஒரு சாமஞ்சென்டு என்னய நினைச்சு கும்பிடு அமோகமா இருப்பே” என்றாராம். இப்படி அவ்வை நோன்பிற்கான கதையை விவரிக்கிறது நாவல்.
இது போல் பல வழக்காற்று கதைகள், செட்டி நாட்டுப் பகுதியில் வழங்கப்படும் தாலாட்டுப் பாடல்கள், ஒப்பாரி பாடல்கள், தமிழகத்தில் விஜயநகரப் பேரரசு ஆட்சி செய்த போது புழக்கத்தில் இருந்த காசுக் கணக்குகள், நடப்பில் இருந்த நிறுத்தல் அளவை கணக்குகள் என வட்டார வழக்காறுகளை ஆய்வு செய்வோருக்கு வேண்டிய ஏராளமான தரவுகள் நாவலில் உள்ளன
அரண்மனை போன்ற வீடுகள் கட்டப்பட்ட விதம் இன்றைக்கு பல திரைப்படங்களிலும் தொடர் நாடகங்களிலும் இடம் பெறும் காரைக்குடி பகுதியில் உள்ள நகரத்தாரின் அரண்மனை போன்ற வீடுகள் எப்படிக் கட்டப்பட்டன என்ற தகவலையும் இந்நாவல் நமக்கு கூறுகிறது. குறிப்பாக இவ்வீடுகளின் சுவர்கள் பளபளப்பான பூச்சுகளுடன் காணப்படும். இந்த பூச்சை எப்படி செய்வது? நூலாசிரியர் விவரிக்கிறார்
“நல்ல சுண்ணாம்புக் கட்டி வாங்கியாந்து, கடுக்கா தண்ணி ஊத்தி, முட்டையோட வெள்ளக் கருவ மஞ்சத்தாது கலக்காம, அடிச்சுக் கலக்கி சேத்து கருப்பஞ்சாறு கலந்து செக்குல போட்டு, மாட்ட பூட்டி ஓட்டுனா சும்மா வெண்ணயா தெரண்டு வரும் கலவையை கொத்துக் கரண்டி வச்சு பூசுனா செவரு சும்மா வெள்ளக்காரக மார்பில் கல்லு போல வழுக்கும்”
இப்படி கட்டிய வீடுகள்தான் நுாற்றாண்டு கடந்தும் இன்றைக்கும் கம்பீரமான நிற்கின்றன.
குழந்தை திருமணங்கள் நகரத்தார் சமுதாயத்தில் அக்காலத்தில் பால்ய திருமணங்கள் வழக்கத்தில் இருந்துள்ளன. அதிலும் பெண்கள் வயதுக்கு வரும் முன்பே திருமணம் செய்து விடுவதே சிறந்தது என்றும் வயதுக்கு வந்த பிறகு திருமணம் என்பது சிரமம் என்ற நிலை காணப்பட்டுள்ளது
நாவலில் இரண்டு பகுதிகள் அடு்த்தடுத்து கையாளப்படுகின்றன. ஒன்று கோட்டையூரில் நடக்கும் நிகழ்வுகள். இன்னொன்று மலேசியாவில் நடக்கும் நிகழ்வுகள். இதில் கோட்டையூரில் நடக்கும் நிகழ்வுகள் வழக்காற்று கதைகள், சடங்குகள், கோயில் விழாக்கள். சந்திப்புகள் என போகிறது. இவற்றுள் பெரும்பகுதி சாதாரண சந்திப்பு உரையாடல்களாக இருப்பதால் பல இடங்களில் சலிப்பு ஏற்படுகிறது. ஆனால் மலேசியாவில் நடக்கும் நிகழ்வுகள் விறுவிறுப்பாக பதிவு செய்யப்பட்டுள்ளன
கப்பல் பிரயாணம் நாகப்பட்டிணத்திலிருந்து பினாங்கிற்கு அந்தக் காலத்தில் ஐந்து நாள் கப்பல் பிரயாணம் இருந்திருக்கிறது. கப்பல் பிரயாணத்தின் போது கப்பலில் கொடுக்கப்படும் உணவுகள் ஒத்துக் கொள்ளாததால் வேங்கரிசி மாவு, தேன்குழல் அதிரசம் போன்ற எளிதில் கெடாத பதார்த்தங்களை கட்டுச் சோறு போல் எடுத்துச் சென்று கப்பல் பிரயாணத்தின் போது சாப்பிட்டுள்ளனர் என்பதையும் இந்நாவல் விவரிக்கிறது.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பிறந்த கதை இன்றைக்கு ஆயிரக்கணக்கான கிளைகளுடன் உலகம் முழுவதும் பரவி உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பிறந்த வரலாறும் இந்நாவலில் உண்டு. உலகின் பல நாடுகளில் வணிகம் செய்த நகரத்தார்கள் தங்கள் சம்பாத்யத்தை இந்தியாவிற்கு கொண்டு வரும் வழி தெரியாமல் அங்கேயே ரப்பர் தோட்டங்கள், வீடுகள், விவசாய நிலங்கள் போன்றவற்றில் முதலீடு செய்து வந்துள்ளனர். இவற்றில் கிடைக்கும் வருமானத்தை ஊருக்கு வருபவர்களிடம் காசுப்பை எனப்படும் பணப்பையில் கொடுத்து வரும் வழக்கம் இருந்துள்ளது.
இந்தக் காசுப்பையில் ஏற்படும் சிரமங்களை தவிர்க்க வங்கி பரிமாற்றத்தை ஏற்படுத்துவது என்று முடிவு செய்து எம்.சிடி.எம் சிதம்பரம் செட்டியார் என்பவரின் முன்னெடுப்பால் 1937ம் ஆண்டு ரங்கூன், பினாங்க், சிங்கப்பூர், சென்னை, காரைக்குடி ஆகிய இடங்களில் IOB திறக்கப்பட்டு்ள்ளது. இந்தக் கிளைகளில் போடப்படும் பணம் காரைக்குடிக்கு வந்து சேர நான்கு வாரங்களாகியுள்ளது என்ற செய்தியையும் இந்நாவல் தெரிவிக்கிறது.
மலேயா மனைவிகள் கடல்கடந்து மலேசியாவுக்கு வணிகம் செய்யப் போன சில செட்டியார்கள் சொந்த ஊரில் மனைவியுடன் பிணக்கு ஏற்பட்டால் மலேயாவிலேயே சீனப் பெண்களையாவது மலாயா பெண்களையாவது சேர்த்து வைத்துக்கொண்டு செட்டில் ஆகி விடுவதுண்டு ஆனால் சொந்த ஊரிலிருக்கும் கட்டிய மனைவியைக் கைவிடாமல் காசுப்பையை மட்டும் கடமை தவறாமல் கொடுத்து விடும் நிகழ்வுகளும் நாவலில் சுட்டிக்காட்டப்டுகிறது செட்டியார்கள் மட்டுமன்றி தோட்ட வேலைக்கு போகும் ஆட்களும் கூட இது போல் அங்குள்ள பெண்களை மணந்து கொண்டு செட்டில் ஆவதுண்டு.
இப்படி புருவாஸ் என்ற இடத்தில் தோட்ட வேலைக்கு போன புதுக்கோட்டையை சோ்ந்த ராஜேந்திரன், சீனப் பெண் கிம்மை சோ்த்துக்கொண்டு பாண்டியன், லீ என்ற இரண்டு குழந்தைகளுக்கு தந்தையான பிறகு கிம்மை விட்டு விட்டு தாய் நாட்டுக்கு வந்து விடுகிறார். கிம்மின் முதல் கணவன் மூலம் பிறநத ரூபி, வீட்டை விட்டு வெளியேறி பொந்தியானில் மீனாவின் சித்தபபா ராமையாவை சென்றடைகிறான். கோட்டையூரில் தனது மனைவியுடன் ஏற்பட்ட மனஸ்தாபத்தால் சொந்த ஊருக்கே போகாமல் இருக்கும் ராமையா, வழி தவறி வந்த ரூபியை எடுத்து தன் மகனைப் போல வளா்த்து வருகிறார்.
புருவாஸில் தோட்ட வேலை பார்ப்பவர்களை வெள்ளைக்காரர்கள் பாலம் கட்டவும் ரோடு போடவும் பிடித்துக் கொண்டு போகிறார்கள் என்பதால் பயந்து போன தோட்டத் தொழிலாளர்கள் புருவாஸை விட்டு குடும்பம் குடும்பமாக தப்பி ஓடுகின்றனர். அவா்களுடன் கிம்மும் தனது இரண்டு மகன்களுடன் தப்பிக்கிறாள். ஆனால் வழியில் மூவரும் பிரிந்து விடுகின்றனர். இதில் கிம், தனது மூத்த மகன் ரூபி வசிக்கும் பொந்தியான் பகுதியில் மயங்கி விழுகிறாள். அவளை கண்டெடுக்கும் மகன் ரூபி தனது அம்மாவை ராமையாவின் அனுமதியுடன் தன்னுடன் வைத்துக் கொள்கிறான். தாயை பிரிந்த பாண்டியன், லீ ஆகிய இருவரும் என்ன ஆனார்கள் என்று தெரியாமலேயே நாவல் முடிகிறது
மலேசியாவிற்கு வந்த மீனாள் இங்கு தன் கணவன் வாங்கிய சொத்தை சேது என்ற அவளது உறவினர் ஒருவர் மோசடியாக விற்றுள்ளதை அறிந்து நீதி மன்றம் போகிறாள். இது தொடர்பாக சேது மீது அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப் போகிறாள். அங்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் வில்லியம்ஸை சந்தித்து பேசும் போது நீங்கள் என் மகன் மாதிரி. தயவு செய்து உதவுங்கள் என்று கேட்கிறாள். இதைக் கேட்ட தாயை இழந்த வில்லியம்ஸ் தன் வயதை ஒத்த பெண் தன்னை மகன் என்கிறாளே என்று உருகி மீனாவை தன் தாயாகவே எண்ணி உதவிகள் செய்கிறார். ஒரு விபத்தில் சிக்கிய இன்ஸ்பெக்டர் வில்லியம்ஸை மீனாவின் குடும்பமே கவனித்து குணமடைய வைக்கிறது. இதனால் வில்லியம்ஸ் மீனாவின் குடும்ப நண்பராகிறார். மீனா நீதிமன்றத்தில் நேரடியாக தனது தரப்பினை எடுத்துச் சொல்லி வழக்கில் வெற்றி பெறுகிறார். இருந்தாலும் மீனாவின் இடத்தை வாங்கிய அஜ்மல் குடும்பத்தினருக்கு கோர்ட் சொல்லாமலேயே மீனா இடத்தை வாங்கிய விலையை விட கூடுதலாக கொடுத்து உதவி செய்கிறார். இதனால் அஜ்மல் குடும்பம் மீனாவுடன் நட்புறவாகி விடுகிறது. இப்படி விறுவிறுப்பான சம்பவங்கள் நாவலில் அழகாக சித்தரிக்கப்பட்டு்ள்ளன
மலேசியாவின் தலைநகரான பினாங்கு துறைமுகம்தான் கப்பல் ஏறவும் இறங்கவும் உள்ள இடமாக இருந்துள்ளது. இதனால் நகரத்தார்கள் அந்தக் காலத்திலேயே பினாங்கில் நகரத்தார் விடுதி ஒன்றையும் கட்டியுள்ளனர் என்பதையும் இந்நாவலிலிருந்து அறியமுடிகிறது
நகரத்தார் ஆண்கள் ஊரில் தங்கள் உறவுகளை பிரிந்து கடல் கடந்து போய் வருடக் கணக்கில் அங்கேயே இருந்து பொருள் ஈட்டி திரும்பும் நிகழ்வை குறிப்பிடும் இடத்தில் ஆசிரியர், இளமையும் ஆண்மையும் கட்டப்பட்டு. பெண்மையச் சுருக்கி அரண்மனை போல கட்டுன வீடுக. அந்தக் கண்ணீர் எப்பவும் பேசும் வறண்டு போன கண்ணால என்கிறார்.
ஆனால் இன்றைக்குமே நிலைமை அப்படித்தான் இருக்கிறது. தமிழகத்திலிருந்து வெளிநாடுகளுக்கு வேலைக்கு சென்று சொந்த ஊரில் வீடுகளை கட்டியவர்கள் அதில் இருந்து அனுபவிக்க முடியாமல் ஓராண்டு அல்லது ஈராண்டுக்கு ஒருமுறைதான் ஒரு மாத விடுப்பில் ஊர் திரும்பி பின்னர் பயணிக்கிறார்கள். ஆனால் என்ன வித்தியாசம் என்றால் நகரத்தார்கள் கடல் கடந்து போன காலத்தில் இப்போதுள்ளது போல் தகவல் தொடர்புகள் இல்லை. அதனால் பிரிவாற்றாமை அதிகமாகத்தான் இருந்திருக்கும் என்பது உண்மையே.
இந்த நாவலின் நாயகியாக மீனா இருந்தாலும் அடுத்தடுத்த அத்தியாயங்கள் நகரும் போது மலேயாவில் உள்ள மீனாவின் சித்தப்பா ராமையா, சீனப் பெண் கிம்மின் மகன் ரூபி. மலேசியா போலீஸ் அதிகாரி வில்லியம்ஸ் போன்ற கதாபாத்திரங்கள் படிப்பவர்களின் மனதில் முக்கிய இடத்தை பெற்றுவிடுகின்றனர்.
மீனா மலாயாவிலிருந்து இந்தியா திரும்பிய பிறகு மலேயாவில் உள்ள ராமையா செட்டியார், ரூபி, வில்லியம்ஸ், ஆகியோர் அதற்கப்புறம் என்னவானார்கள் என்ற கவலையும் ஆவலும் படிப்பவர்களுக்கு ஏற்படுகிறது என்பதே, அவர்களின் பாத்திரங்கள் எந்த அளவுக்கு வாசகர்களின் மனதில் ஊடுருவிவிடுகிறது என்பதை சொல்லாமல் சொல்லிவிடுகிறது. இப்படி முக்கிய கேரக்டர்கள் நாவலில் காணாமல் போனதை வைத்து பார்க்கும் போது இந்த நாவலில் இரண்டாம் பாகம் எழுதும் போது அவர்களையெல்லாம் சேர்த்துக் கொள்ளலாம் என்று ஆசிரியர் நினைத்திருப்பாரோ என்னவோ என்று எண்ணத் தோன்றுகிறது
இந்த நாவலில் கோட்டையூர் மற்றும் மலேயாவில் உள்ள பொந்தியான் நகரமும் முக்கியமாக இடம் பெற்றாலும் அந்த ஊர்களின் அமைப்பு கலாசாரம் ஆகியவற்றை நாவலாசிரியர் முன்னிறுத்த்த தவறி விட்டார். உதாரணமாக அரண்மனை போன்ற வீடுகள் எழும்புவதற்கு முன் கோட்டையூர் எப்படி இருந்தது, இன்ஜினியர் இ்ல்லாத காலத்தில் இப்படி ஒரு அருமையான கட்டடிடக் கலையை கொண்டு வருவதற்கு அடிப்படையான அறிவு எங்கிருந்து கிடைத்தது ?, மலேசியாவிற்கு வட்டித் தொழில் செய்யச் சென்றவர்கள் தங்களது தொழில் சம்பந்தமாக எதிர்கொண்ட பிரச்னைகள் போன்றவற்றை இந்நாவலாசிரியா் ஏனோ கூறத்தவறி விட்டார். கதாபாத்திரங்களின் உரையாடல்களே நாவலை வெகுவாக ஆக்ரமி்த்திருக்கின்றன. இந்த உரையாடல்கள் படிப்பதற்கு பலநேரங்களில் சலிப்பை ஏற்படுத்துகிறன்றன. தேவையற்ற உரையாடல்களைத் தவிர்த்திருந்தால் நாவலில் வாசிப்பின் வேகம் கூடியிருக்கும்..
நாவலாசிரியர் இன்பா சுப்பிரமணியன் தனது முன்னுரையில், “அதிகம் வாசித்தோ எழுதிடாத நான்“ என்று தன்னடக்கத்துடன் இந்த நாவல் எழுத முற்பட்ட நிகழ்வை கூறுகிறார்.
கற்பனைக் கதைகளை எழுதுவதை விட வரலாற்று நிகழ்வுகளை, தகவல்களைத் திரட்டி தடம் மாறாமல் இணைத்து எழுதுவது கடினமான காரியம்தான். அந்தக் கடினமான காரியத்தில் இன்பா சுப்பிரமணியன் வெற்றி கண்டிருக்கிறார்.
வட்டார வழக்காறுகளையும் வட்டார மொழிக்கும் முக்கியத்துவம் கொடுத்து வரலாற்றுத் தகவல்களை உள்ளடக்கி எழுதப்பட்ட இந்த நாவல் மிகப் பெரிய பொக்கிஷம்.
***
குயிலிமுனுசாமி – இயற்பெயர் முனுசாமி. தினமலரில் பத்திரிகையாளராக திருச்சி, பொள்ளாச்சி, தஞ்சை, மதுரை, கோயமுத்துார் ஆகிய நகரங்களில் பணியாற்றியவர். கலைஞர், எம்.ஜி.ஆா் போன்றோருடன் பலமுறை நேர்காணல் செய்துள்ளார். கதை, கவிதை, அரசியல், ஆன்மீகம், விவசாயம், வரலாற்று நிகழ்வுகள் என பல தலைப்புகளில் கட்டுரைகள் தொகுக்கப்படாதவை இந்த நாற்பதாண்டுகளில் தினமலரில் வெளிவந்துள்ளன. “இந்து தமிழ் திசை“யில் வணிகம் சம்பந்தமான கட்டுரைகள். “இந்திய தென்னை இதழு“க்கு ஆங்கிலக் கட்டுரைகளை தமிழில் மொழிபெயர்க்கும் பணியில் மூன்றாண்டுகள். கூட்டுறவுத்துறையில் துறையலுவலாராகப் பணியாற்றி ஓய்வுபெற்று தற்போது புதுக்கோட்டையில் வசிக்கிறார். தொடர்புக்கு kuyeli@ymail.com


