Wednesday, February 18, 2026
Homeஇதழ்கள்2025 இதழ்கள்ந. பெரியசாமி கவிதைகள்

ந. பெரியசாமி கவிதைகள்

1.பழி

பாட்டலில் நீரைப் பீச்சி
நன்றாக குலுக்கினான்
சொட்டுகள் இறங்கும்வரை
கவனமாக கொட்டிய 
கடைசி கோப்பையை
கை தவறிக் கவிழ்த்தான்

திமிர்பிடித்த முண்டதான்
செத்துக் கிடக்கிறாள்
எப்பவும் இப்படித்தான்
தட்டி விடுகிறாள்.

எரிச்சலோடு புதை மேட்டை
எட்டி உதைத்தவன்
வேறு இடம் மாற
நினைத்தபடி
சட்டெனக் குனிந்து
கொட்டிய மதுவை
மோந்து நகர்ந்தான்.

*

2. பிச்சை மது

இடிபாடுகளுக்கிடையே
முன் நகர்ந்தவன்
190ல் ஒன்னு கொடு
காலி ஆகிடுச்சு
240தான் இருக்கென்றதும்
நாதேறிப்பய ஊரில்
எப்பவும் இப்படித்தான்
கேட்டது கிடைக்காதென
கொஞ்சம் தூரம் வந்தவன்
ஒவ்வொருவரிடமாக கெஞ்சத் தொடங்கினான்

பத்து ரூவா கொடுண்ணா.

*

3. வேண்டுதல்

நெடுஞ்சான்கிடையாக வீழ்ந்தான்
உள்ளிருப்பது
ஆம்பளையோ பொம்பளையோ
குடிச்சிட்டு போற வரைக்கும்
வம்பு தும்பு ஏதும் வராம
பத்திரமா பாத்துங்குங்க.

வேண்டுதலோடு
ஊதுபத்தியை சொருகிவிட்டு
மூடியை திறந்து
நுகர்ந்த வாசனையை ரசித்தவாறு
ஊற்றத் தொடங்கினான்
நம்பிக்கையோடு.

***

4. நூல் கணக்கு

எப்படி பார்த்தாலும்
ஒரு நூல் அளவு 
உங்களுக்கு எச்சாகத்தான் இருக்கும்
அப்ப இத நீ குடி
அத கொண்டாவென கேட்க
அய்யோ
நீ தெய்வம் அண்ணே
உங்கிட்ட வம்பெதுக்கு
கண்களை இறுக்கி மூடி
சட்டென வாயில் கவிழ்த்து
முகத்தில் பாவம் வழிய
விரலை நீட்டினான்.

கொஞ்சமாக ஊறுகாயைப் பிதுக்க
நக்கியபடி நகர்ந்தான்

*

5. இடுகாட்டு எழில்

லெமன் பக்கார்டி கோட்டர்
ஒரு லிட்டர் தண்ணி பாட்டில்
சிக்கன் கவாப் சகிதமாக
புங்கமர நிழல் இருந்த
புதை மேட்டில் அமர்ந்தான்

டாஸ்மாக் கடைகளை
சுடுகாட்டிற்கு அருகில் வைக்கும்
அதிகாரிகளை மெச்சியபடி.

அருகில் அமர்ந்த நாய்க்கு
அப்பப்போ ஒரு துண்டை போட்டு 
மூன்றாவது ரவுண்டில் 
அலைபேசியில் ஒவ்வொருவராக அழைத்து
உரையாடத் தொடங்கினான்.

பொட்டலம் காலியானதும்
வெறித்தபடி நாய்
விட்டோடியது.

யாரிடமோ அவன்
அவமதிக்கப்பட தொடங்கினான்.

6. டம்ளர் பார்த்தீனியம்

பார்த்தீனியச் செடிகளோடு
செடிகளாக எங்கும் 
முளைத்திருந்தன
கசங்கிய டம்ளர்கள்

மூட்டையில் பாட்டில்களை 
சேகரித்தபடி இருந்தவன்
மீந்த தண்ணிரை சேகரித்து
கொண்டுபோன கோட்டரை
குடித்து முடித்தான்

நாளைய குடிக்கு
உத்திரவாதம் கொள்ள
போதும் பாட்டில் பொறுக்கியதென
புறப்பட்டான்.


வானில் சூரியனும்
ஒளியை 
மூட்டை கட்டிக் கொண்டிருந்தது.

***

1990-ல் கவிதைகள் எழுத ஆரம்பித்தார். 2004-ல் முதல் கவிதைத்தொகுப்பான ‘நதிச்சிறை’ வெளிவந்தது. ஐந்து கவிதைத்தொகுப்புகள் வெளியிட்டுள்ளார். தொடர்ந்து கவிதைகள், நூல் விமர்சனங்கள், கட்டுரைகள் எழுதி வருகிறார். ‘மொழியின் நிழல்’ என்ற கட்டுரைத்தொகுப்பு வெளியிட்டுள்ளார். இவரது படைப்புகள்

கவிதைத் தொகுப்புகள்
நதிச்சிறை (2004)
மதுவாகினி (2012)
தோட்டாக்கள் பாயும் வெளி (2014)
குட்டிமீன்கள் நெளிந்தோடும் நீலவானம் (2016)
கடைசி பெஞ்ச் (2021)
அகப்பிளவு
கட்டுரை தொகுப்பு
மொழியின் நிழல் 2021

periasamy na
periasamy na
1990-ல் கவிதைகள் எழுத ஆரம்பித்தார். 2004-ல் முதல் கவிதைத்தொகுப்பான 'நதிச்சிறை' வெளிவந்தது. ஐந்து கவிதைத்தொகுப்புகள் வெளியிட்டுள்ளார். தொடர்ந்து கவிதைகள், நூல் விமர்சனங்கள், கட்டுரைகள் எழுதி வருகிறார். 'மொழியின் நிழல்' என்ற கட்டுரைத்தொகுப்பு வெளியிட்டுள்ளார். கவிதைத் தொகுப்புகள் நதிச்சிறை (2004) மதுவாகினி (2012) தோட்டாக்கள் பாயும் வெளி (2014) குட்டிமீன்கள் நெளிந்தோடும் நீலவானம் (2016) கடைசி பெஞ்ச் (2021) அகப்பிளவு கட்டுரை தொகுப்பு மொழியின் நிழல் 2021 2021-ல் 'கடைசி பெஞ்ச்' என்ற இளையோருக்கான இணைய கவிதை தொகுப்பு வெளிவந்தது. பின்னர் அச்சிலும் வந்துள்ளது. ஆங்கிலத்தில் மலர்விழியும், தெலுங்கில் ரகுபதியும் இத்தொகுப்பை மொழியாக்கம் செய்துள்ளனர்.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here