Wednesday, February 18, 2026
Homeஇதழ்கள்2025 இதழ்கள்மதுஷன் சிவன் கவிதைகள்

மதுஷன் சிவன் கவிதைகள்

இருத்தலின் மீதம்

ஒரு அழுத்தத்தில் இருந்து விடுதலை அடைவதை
எந்த வகையில் தெரிவு செய்வது;
பேராசைகளின் நிமித்தம் பதற்றமடைகின்றேன்
ஏதொரு சம்பாசனைகளுமற்ற வெறுமையில்
காலிடறி விழுவதில் விழுந்த உடனே எழுவதில்:
வெடித்த பட்டாசைப்போல சில்லுசில்லாக சிதறுண்டு தரையில் ஒரு மீதப்பொருளாகிப்போக;
ஏதேன்னை கட்டுகிறது;ஏதென்னை விடுவிக்கிறது
ஏதேன்னை நடத்துவிக்கிறது,
ஒரு நீச்சல் தடாகம் அல்லது ஆழ்கடல் ஏதுவாகினும்
தொப்பெனக்குதித்ததும் என்னை ஒரு மீனைப்போல மாற்றி விடுமா?
இல்லாது போனால் நீராகவேனும் மாற்றி விடுமா?
கோடை முடிந்து கொண்டிருக்கிறது 
அதி பலமான காற்று உதிரும் இலைகள்,உதிர்ந்த இலைகள் பாதை வெளியை கடக்க 
இலைகளின் மேல் நடக்கிறேன்.

2

ராச்சத எண்ணங்களின் அலைக்கழிவுகளில்
இருந்து தப்பிக்க நான்
என்னில் இருந்து என்னை ஒதுக்கி விடுவது எப்படி?
பனிக்காலத் தொடக்கம்;
சூரியன்;இருளை விலக்கி கவிந்த மஞ்சள் நிற வெளிச்சப்பரப்பு தளத்தில் பட்டுத் தெறிக்கும் ஒளியைப் போல படர விடுகிறது,
கோடை காலங்களில் இப்படியாக இல்லை
ஒரு இளம் மஞ்சலின் சாயல்
கட்டற்ற மாயச்சுழல்,வெறுமை வெளியில்
உருண்டை உருண்டையாக
மாயச்சகதிகளை,உருள விடுகிறது
கூச்சலிட்டபடியே போய் மோதுகிறேன்
கண்களை திறந்தபடியே போய் மோதுகிறேன்
என்னை திட்டியபடியே போய் மோதுகிறேன்
உருக்குலைந்து,உருக்குலைந்து,உருவமற்று,
இப்பொழுதில் நான் ஒரு மாயச்சுழல்
என்னுள்ளும் இருப்பது ஒரு மாயச் சரடு
தெரியும் வண்ணம்,பிரம்மத்துவத்தை கண்டடைவதில்;
பனிக்குளிர் நாளில் தேநீரை அருந்தியபடி
புகைத்தபடி நடக்கும் அந்த ஒருத்தியின்
விடிகாலைப் போல,மதியம் போல, இரவினைப் போல
வார இறுதி இரவுகளைப் போல,
வருடக்கடைசி நாட்களைப்போல
அவள் கடக்கும் வருடங்களைப்போல;

3

தெய்வாம்சக் குறியீடுகளை கொண்டிருக்கிறாய்
என்கிறார்கள்
தெய்வத்தை போன்றதுன் கண்கள்,
கருணை ததும்பி வழியும் பார்வை,
மானிறத்தேகத்தில் சந்தன வாசம்,
பறவைகளும் விலங்குகளும் இன்ன பிற சிற்றுயிரிகளும் உன்னை ஆராதிக்கத் தலைப்படுகின்றன
நீயேன் மௌனமாக இருக்கிறாய்
ஏதை சேபிக்கிறாய்,
பரமபிதாவுடன் உரையாடுகிறாயா?
பரமபிதாவிடம் என்ன பேசினாய்?
எங்களுக்காகவும் மன்றாடினாயா?
பரமபிதா என்ன சொல்லி இருந்தார்?
எங்கள் பிணி தீரும் என்றாரா?
எங்கள் வாதை கழியும் என்றாரா?
கண்களை விழிக்கிறேன்
காற்று மண்டலம் பிரார்த்தனைகளாலும் 
கேள்விகளாலும் மாசுற்று இருக்கிறது
வெள்ளைச் சாம்பல் மூட்டங்கள் பரந்த வெளிகளில்
வேண்டிக்கொள்பவர்களின் ஒலத்தில்;
நான் துஷ்டனாக்கப்பட்டேன்
யாராவது இருந்தால் ஒரு பாடகனை அழைத்து வாருங்கள் என்றேன்
துஷ்டனை புகழ்ந்து பாடச்சொல்லுங்கள்
இந்த ரோகியை புகழ்ந்து பாடச்சொல்லுங்கள்
உங்கள் உங்கள் கழுத்துக்கு என் கத்தி வரும்முன்
பாடகனை பாடச்சொல்லுங்கள்.

*

உறை வெளி

பரந்த வெளிச்சம் மற்றும் பரந்த இருள்
துண்டுகளாக்கப்பட்டது
கோடை நாள்களில் சூரியனை வெளிர் மஞ்சள் வர்ணத்துடன் தழுவிக்கொள்கிறேன்
பிரதியுபகாரம் கோராமல் இருள் சுருங்கத்தொடங்குகிறது
பரந்த வெள்ளை அறையின் மௌனத்தின் நிமித்தம்
காற்றில் அலைக்கழியும் நெகிழிப்பையினைப்போல்
பறக்கிறேன், இருக்கிறேன், தவழுகிறேன், உருளுகிறேன்,புரண்டு வெண்ணிறத்தின் ஸ்பரிசத்தின் கதகதப்பில் நிறங்களற்று கரைந்து போகிறேன்
குறு மனதின் சஞ்சாரம்; கோடி ஆண்டுகள் பழையது
உயிர் உறைந்த சதையில் பூரித்திருக்கும் கேசங்களின் தோற்றுவாய் வழி
ஒன்று, இன்னொன்று, மேலும் ஒன்று என 
மேலும் மேலும் அடுக்குளில் நினைவுத்தளங்கள் வரிசைப்படுத்தபட்டிருக்கிறது; யாரென்னை அழைப்பது
உங்கள் முகம் என்னிடம் இல்லை, 
உங்கள் குரல் என்னிடமில்லை,
புதிதாய் செழித்த மரங்களில் பூ உதிரும் சப்தம்;
அசௌகரியத்தின்பால் காதுகளை மூடிக்கொள்கிறேன்

காலம் இரத்தாகும்

வெலவெலத்துப்போயிருந்த சமாதானம் 
இரவுகளை சிறுமைப்படுத்த தொடங்கியது
ஒரிரு கைகளில் ஆயுதங்கள் வந்து விட்டன
கடல் அங்குமிங்குமென நிலையில்லாத பூதத்தின் கைகளைப்போல அசைந்த படி இருக்கிறது
அந்தரத்தின் பேரிரைச்சல்
அமைதியின் சலசலப்பையும் மீறி 
ஒழிந்து கொள்ளுவதற்கான ஆகுதியுடன் இறுதியாக அண்ணார்ந்து பார்த்து ஆழத்தொலைந்து போகிறது
பின்னர் காற்றை வலித்து
மின்சார வடங்களை சில பறவைகள் ஆட்கொள்ளுகின்றன
*
பரவும் வெளிச்சம்

எல்லா இடங்களிலும் வெளிச்சம் மெல்ல துளிர்விடுகிறது
ஒரு பறவையைப்போல வெளி எங்கும் பறக்கிறேன்
பசிக்கு இரையாக்க பறவை ஒன்றைத் தேடி அலைகிறீர்களா
நான் குறித்துச் சொல்லியிருந்த பறவை
உங்கள் கண்களுக்கு தெரிகிறதா
மெல்லிய நுண்ணதிர்வுகளை உணர்ந்து 
தாழப்பறக்கும் அதன் அதிர்வலைகள் உங்கள் செவிமடல்களை வந்தடைந்திருக்க வேண்டுமே
பறவை அங்குமிங்குமென வானத்தை அளந்து மேலெழுகிறது, பின் எங்கு போனது
சமையலறையின் ஓரமாயிருக்கும் நீர்குழாயில் 
துளித்துளியாய் கொட்டும் நீர் துளிகளின் சப்தம்
கோடையின் இரவுகளை பறவை தன் கூரிய அலகுகளால் கொத்துவதை போல;
ஆழ் தூக்கத்திலிருந்து 
மேலெழுகிறேன்
வெள்ளை முகில்களிடை புரண்டு தவழ்ந்து
அப்படியே நிராதரவாய் வெளியினிடை வந்து கொண்டிருக்கிறேன்
வந்து கொண்டிருந்தவன் மழையாக்க கரைந்து
நீர் குழாய் வழியே சிந்துகிறேன்
இப்பொழுது பறவை கொத்துவதை போன்ற 
சப்தம் இல்லை;
மறுபடியும் ஆழ் நிலை தூக்கத்திற்கு போய்கொண்டிருக்கிறேன்

*

தேக தானம்

ஆதிக்கற் காலத்தில் இருந்து கொழுந்து விட்டு எரிந்தபடி இருக்கிறாய்;உன் திருப்தியின்மையை
வெளிக்காட்ட சில நாழிகை தூரமாக ஒளிந்து கொள்கிறாய், பின் வெட்கமே இல்லாது சிரித்தபடி வந்து நிற்கிறாய் ;அவள் எல்லா நதிக்கரைகளிலும் 
கூழாங்கற்களாய் உருமாறி நீரில் நீராடியபடி இருக்கிறாள், பேரன்புத்துணிக்கைகள் அவள் மடியில் வீழ்ந்து சிறு பிஞ்சென உருமாறுவதை 
உணர்ந்த பொழுதில் பூரித்திருந்தாள்;
மௌனத்தை கலைத்து விட்டு யன்னலை திறந்து வெளிச்சத்தைப்பார்; தெருக்களில்பரபரத்து நகரும்
கண்களைப்பார்;வானம் மங்கி மறைந்து மின்னும் நட்சத்திரங்கள்,ஒளி மிகும் முழுநிலா எல்லாமும்;
எல்லாச்சதைகளிலும் காமம் ஊற்றெடுக்கும்
திருமேனியேன்றுந்தன்;
மின் ஒளிரும் தேகத்துள் அங்குமிங்கும் என காமம்
அலைந்து உருக்குலைந்து பின் உருவெடுக்க ஓலம் வைக்கும்
மலைகளை அவள் படைத்தாள்,நதிகள் ஊற்றெடுத்தன ,மலைகள் உடைந்து சிதறி கூழாங்கற்களாகி கூழாங்கற்கள் நதியில் நீராடி
பின் மலைகளை தம் வயிற்றில் சுமக்கும்
மலையின் இடைவெளிகளில் வெளிச்சத்தைப்பரப்பி
சூரியன் வந்தடையும், வருவதற்கும் முன் எங்கு;
மலையின் தாழ்வாரத்தில் எவரின் கலவியை சிறப்பிக்க ஒளிந்திருந்தாய்;

*

பரிபூரணபாவி

பற்களில் அமிர்தம் கசியும் பாம்பின் தலை
வெளிப்பட்டதும்,வெளிப்பட்டது;
ஊன் உடம்பின் ஒவ்வொரு பாகங்களும்
அதற்கென குறிக்கப்பட்ட பெயர்களும்
அதீத தித்திப்புடையது அந்த அமிர்தம்;
விசம் அமிர்தமாக உருமாறிக் கொண்டதாக 
கொள்ள வேண்டாம்,
அமிர்தமாகவே உருவானது
அமிர்தமாகவே திரண்டது
அமிர்தமாகவே உருண்டு, நகர்ந்து
பாம்பின் பற்கள் வழி கசிகிறது
அமிர்தம் தான், விசத்தை ஒத்த அமிர்தம்
பற்கள் பதிந்ததும், ஊன் உடம்பில் விசம்
கணத்தில் பரவி விடும்
பெயர் கொண்ட பாகங்களில் எல்லாம் தேடித் தேடிப் பரவிவிடும்

இந்த அமிர்தம் விசத்தின் சாயலில் இருப்பதால்
பரவியதும்,பரவிய கணத்தில் மரிக்கச் செய்துவிடும்
விசத்தின் சாயலில் இருந்தாலும் அது அமிர்தமில்லையா?
மரித்ததை,மரித்த கணத்தில் உயிர்க்கவும் செய்துவிடும்.

*

கூடு விட்டது

நான் அனாதரவாய் விடப்பட்டேன்
பேரவலமோ, பேரமைதியோ பெரும் உண்மைகளை 
கண்கள் வழி மறைத்து காதுகள் வழி செலுத்தி
அழைத்துச்செல்லப்பட்டேன்
இடிகளும் மின்னலும்,வானத்தாழ்பாள் திறந்து
மழையை விசிறியபடி இருக்கும் பகலில் பின் இரவில்
பாடல்கள் ஒலித்தபடி நகரும் நொடிகளின் இரைச்சலில் பறவைகள் திசைமறந்து 
அங்கும் இங்கும், இங்கும் அங்கும் என சிறகுகள் பரிதவிக்க ஒற்றை மேகம் கீழிறங்கி வருவதை கண்டு
மரத்தின் கிளைகளென ஒரே தாவாய் தாவி அமர முற்பட்ட பொழுதில்;
ஒரு போதும் கண்களை திறந்து விடமாட்டீர்களா,
ஒரு போதும் வழிகளின் குறிப்புகளை சொல்லிவிடமாட்டீர்களா,
நான் இப்பொழுதே இங்கேயே கரைந்து போகப்போகிறேன்
என் பின்னங்கால்கள் இடறுகின்றன;
கடல்காற்றின் ஸ்பரிசத்தை உணருகிறேன்
அலைகள் முன்வந்து பின்போகும் வாதையினை உணருகிறேன்
செழும் மீன்களின் பாடல்களை உணருகிறேன்
கடலை அண்மித்து விட்டேனா,
இல்லையா,
நான் இருக்கும் இடத்துக்கெப்படி கடல் வந்தது;

***

மதுஷன் சிவன் – (1990 ஜீலை 25) கவிஞர் மற்றும் ஓவியர். 2003ம் ஆண்டில் இருந்து கவிதைகள் எழுதிக்கொண்டிருப்பவர். இதுவரை ஆறு கவிதை தொகுதிகள் எழுதியுள்ளார், 2025 இல் பரியலம் என்ற தொகுதி வெளி வந்தது. மின்னஞ்சல்:mathusansivam@gmail.com

RELATED ARTICLES

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here