Wednesday, February 18, 2026
Homeஇதழ்கள்2025 இதழ்கள்மையெருமை கண்டெத்திய இலக்கிய வெளி

மையெருமை கண்டெத்திய இலக்கிய வெளி

சால்வாடி ஈஸ்வரன்

புதிய புத்தகங்களை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வந்த பிறகு நான் செய்யும் முதல் காரியம் புத்தகங்களை பிரித்து அந்த புதிய மணத்தை முகர்ந்து பார்ப்பது. அலையாத்தி செந்தில் எழுதி இருக்கும் மையெருமை புத்தகத்தை பிரித்து முகர்ந்து பார்த்ததில் வண்டல் மண்வாசனை அடித்தது! இழந்து கொண்டிருக்கும் கிராமத்து அழகியலை அந்தந்த மண்ணின் சொற்களால் தான் மீட்டெடுக்க முடியும் என்று உணர்ந்த தருணம் அது.

பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருக்கும் போது ஒருவர் வந்து ஒரு குறிப்பிட்ட ஊருக்கு போகும் பேருந்து எங்கிருந்து கிளம்பும் என்று கேட்கிறார் அதற்கு நாம் பதில் சொல்லிவிட்டு உங்களுக்கு கோயம்புத்தூர் பக்கமா என்று கேட்க ஆச்சரியமாக ஆமாம் என்று சொல்ல எப்படி கண்டுபிடித்தீர்கள் என்று கேட்டவரிடம் உங்க பேச்சிலேயே அது தெரியுது கொங்கு மணம் வீசுது என்று சொல்ல இருவரும் சிரித்து விட்டு விலகுவதற்கும் அவருடனே நாலு மணி நேரம் அதே வட்டார வழக்கில் பேச்சைக் கேட்டுக் கொண்டு பயணப்படுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது மையெருமை இரண்டாம் ரகம்.

ஐந்து நிமிட உரையாடலில் கேட்கக் கிடைக்காத பல வட்டார வழக்கு வார்த்தைகள் நாலு மணிநேர பயணத்தின் போது காதில் விழுவதும் ஆச்சரியமும் அதே சமயம் இந்த சொல் நம் வட்டாரத்தில் எப்படி பயன்படுத்தப்படுகிறது என்ற விசாரணையும் நிகழ்வதற்கு வாய்ப்பு உண்டாகிறது.

பல பேச்சுப் பேசினாலும் ஏதோ ஒரு இடத்தில் இருவருக்கும் பொதுவான, இருவருக்கும் இணக்கமான ஒரு மையப் புள்ளி உரையாடலை நீளமாகவும் அர்த்தமுள்ளதாகவும் மாற்றிவிடும். பெரும்பாலும் அப்படிப்பட்ட மையப்புள்ளி மனித இனத்திற்கு பொதுவாக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கக்கூடும். அரசியல், வாழ்வியல், விவசாயம் என்று ஏதோ ஒரு இடத்தில் இருவரும் இணைவோம்.

மையெருமை அப்படி ஒரு இயற்கையான இணைப்புப்புள்ளியை அலையாத்தி செந்திலுக்கும் நமக்கும் ஏற்படுத்திவிடுகிறது. “உழவுக்கு டிராக்டர் வேண்டாம் ஏனென்றால் டிராக்டர் சாணம் போடாது” என்று யாரோ சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன். யோசித்துப் பார்த்தால் சாணம் என்பது இயற்கை உரம். உழவு செய்யும்போது மண்ணின் மேற்பரப்பு அடிமண் இரண்டும் புரட்டிப் போடப்படும்போது அதோடு சாணம் கலக்க வேண்டும். இது ஒருவித சுழற்சி. சாணம் போட மாடு வேணும், மட்டைக் காக்க உழவன் வேண்டும், உழவன் பயிர் செய்யும் பயிர்கள் சந்தைப்படுத்தப்பட்டு வரும் வருமானம் அவனுக்கு மட்டுமல்லாமல் அவனுடன் பணிபுரியும் மாட்டைக் காக்கவும் பயன்படும். இந்தச் சுழற்சியில் எந்தக் கண்ணி அறுபட்டுப் போனாலும் பாதிக்கப்பட போவது உழவன் மட்டுமல்ல எல்லோரும் தான். இப்படி உழவுக்கு ஆதாரமான ஒரு கண்ணி எருமை.

கதை ஆசிரியரின் தந்தையான திரு.வை.இராசரெத்தினம் அவர்கள் “கருப்பட்டியிலேயும் கல்லு இருக்கும் கவனமென” கூறியதை இப்பேருலகின் இனிப்பைக் கண்டு ஆர்ப்பரிக்காது நிதானிக்க எச்சரித்த என் அப்பாவுக்கு என்று அவருக்குக் காணிக்கையாக்கி நாவலை ஆரம்பித்து இருப்பது முயற்சியின் அழகு.

அலையாத்தி செந்தில் இந்தக் கதையை ஏன் எழுதி இருக்கக் கூடும் என்ற கேள்விக்கு புத்தகத்திலிருந்தே பதிலை எடுத்து விட வேண்டும் என்று தேடினேன். ஒரு இடம் சற்று உறுத்தலாக இருந்தது “காரித்தாய்ப் பிரசன்னம்” பகுதியில் வேங்கையனின் ரத்த ருசி பற்றிச் சொல்லும்போது அவன் தாயைப் பற்றி கூறுகிறார். அப்பன், அண்ணன், புருஷன், பெத்த பிள்ளை என்று வரிசையாக பலி கொடுக்கத் துணியும் தாயைப் பற்றிச் சொல்லிவிட்டு “ஆயாக்காரினா அவ ஆயாக்காரி இப்பயும்தா இருக்காளுவுளே பிள்ளைகள திருப்பூர் பனியன் கம்பெனிக்கும் கடல் கடந்து எங்கேயோ தீவு தேசத்துக்கும் வெம்பாலையா கிடக்கிற காஞ்சவனத்துக்கும் கிழக்கையும் மேற்குமா விரட்டி விரட்டிவிட்டு சம்பாரிச்சு வாக்கெட்ட போட்டுக்க நிற்கிறாளுவுளே” என்ற வரிகளில் தொணிக்கும் ஆதங்கம் சொந்த மண்ணில் விவசாயம் செய்து திளைத்துக் கிடப்பதை விட்டுவிட்டு வெளிநாட்டு மண்ணில் அவதிப்படும் எத்தனையோ விவசாய குடும்பத்து ஆண் பிள்ளைகளின் பிரதிநிதிக் குரலாக அலையாத்தி செந்தில் குரல் எழுப்பி இருந்தால், ஒருவேளை விவசாயத்தை எருமையாக ( metaphor) சித்தரித்து இருந்தால், சாதி மத வேறுபாடுகளைக் கடந்து போற்றப்பட வேண்டிய விவசாயத்தின் முக்கியத்துவத்தை தொலைத்து விட்டு தேடும் படலமாக மையெருமை உருவாகி இருக்க வாய்ப்பு இருக்கிறது என்று தோன்றுகிறது!

மையெருமை சமகால தமிழ் இலக்கியத்தில் விவசாயம், மண், மரபு, மனிதர் ஆகியவற்றை மையமாகக் கொண்டு எழுந்திருக்கும் ஒரு ஆழமான சிந்தனைக்கு. உள்ளாக்கும் நாவலாக விளங்குகிறது. இந்த நாவல் வெறும் ஒரு கதை அல்ல; அது நம் மண்ணின் நினைவுகளையும், இழந்தொழிந்த விவசாய மரபுகளையும், மனிதன் இயற்கையுடனான உறவையும் மீட்டெடுக்கும் ஒரு சமூக இலக்கியப் படைப்பாகும்.

விவசாயம்: தொழிலல்ல, ஒரு உயிர் உறவு

இன்றைய காலத்தில் விவசாயம் என்பது ஒரு “தொழில்” என்று கருதப்படுகிறது; ஆனால் நாவல் நம்மை அந்த எண்ணத்திலிருந்து விலக்கி, விவசாயம் ஒரு உயிர் உறவு என்று மீண்டும் நினைவூட்டுகிறது. டெல்டா பகுதியின் வளமான மண்ணில் உருவான கதாபாத்திரங்கள், தங்கள் நிலத்துடன் கொண்டுள்ள அந்த ஆழமான பிணைப்பை வெளிப்படுத்துகின்றனர்.

‘மையெருமை’ நாவல் விரியும் புவியியல் வட்டாரம் — வண்டல் மண் — வெறும் பின்னணியாக இல்லை, இந்த கதையின் ஆதாரம். இந்த நாவலில் காவிரி நதி ஒரு தெய்வம் போலவும், ஒரு உயிரோட்டம் போலவும் நடக்கிறது. அவள் பாயும் இடமெல்லாம் மனித உறவுகளின் முரண்பாடுகள், நம்பிக்கைகள், மாயைகள், துயரங்கள் எல்லாம் கலந்துகிடக்கின்றன. வண்டல் மண்ணில் வாழும் மக்களின் வறுமை, தங்கள் நிலத்தை இழந்து வெளிநாடுகளுக்கு போகும் அவசரம், இழந்த பண்பாடு — இவை அனைத்தும் ஒரு பெரும் தத்துவக் களத்தில் கலந்துவிடுகின்றன.

இக்கதை மூன்று அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்டு எழுதப்பட்டுள்ளது. 

  • அரமங்காட்டு மந்த்ரமூர்த்தியூடு
  • அஞ்சன மைப் பிரசன்னம்
  • காரித்தாய்ப் பிரசன்னம்

மிகுந்த எதிர்பார்ப்புடன் வாசிக்கத் தொடங்கிய எனக்கு அவரது எழுத்து நடை வாசிப்பில் தொய்வை ஏற்படுத்தியது என்பது உண்மை. வாசிப்பில் கொஞ்சம் சுணக்கம் ஏற்பட்டது. காரணம் அவரது வட்டார வழக்கு.

மூன்று மனிதர்கள் — மூன்று நிலங்கள்

கதை மூன்று முக்கியமான கதாபாத்திரங்களைச் சுற்றி விரிகிறது- சிவஞானத் தேவர், சந்தன கோனார், மருதய வேளாளர்.

இவர்கள் மூவரும் நிலத்தின் குழந்தைகள். ஆனால் ஒவ்வொருவருக்கும் தனித்தனி பிரச்சனைகள், தனித்தனி தேடல்கள். சிவஞானத் தேவர் தனது பங்குப் பிரச்சனையில் சிக்கியிருக்கிறார். சந்தன கோனார் எருமையை இழந்து வாடுகிறார். மருதய வேளாளர் பங்காளிப் பிரச்சனையில் சிக்கி அவமானப்படுகிறார். இந்த மூவரின் பாதைகள் வெவ்வேறாக இருந்தாலும், அவை எல்லாம் மந்த்ரமூர்த்தியின் வீட்டில் ஒன்றாக இணைகின்றன — அதுவே நாவலின் மையப் புள்ளி.

மந்த்ரமூர்த்தி – நவீன புராண நாயகன்

மந்த்ரமூர்த்தி என்ற இந்தக் கதாபாத்திரம், நவீன தமிழ்ச் சமூகத்தில் மறைந்து போன “மனித மாயையின்” உருவமாக நிற்கின்றான். அவரது வாழ்க்கை துயரத்தின் அடிப்படையில் தொடங்குகிறது — சீட்டு கம்பெனியில் சரியான மேலாண்மை இல்லாமல் பணத்தை இழந்த தந்தை, தற்கொலை செய்த தாய். ஊரை விட்டு ஓடிப் போகும் மூர்த்தி, பல வருடங்கள் கழித்து சில சக்திகளைப் பெற்றுவிட்டு, மீண்டும் தாய்மண்ணில் திரும்பி, வெற்றிலைத் தடவி குறி சொல்லும் மந்த்ரவாதியாக மாறுகிறார் மந்த்ரமூர்த்தி.

கருமை என்பது புலப்படாதது. அண்டம் போல தன்னுள் எல்லாவற்றையும் மறைத்து வைத்திருக்கும் ஆற்றல் உடையது. அக்கருமையை ஊடுருவி அறிந்து கொள்ள முயல்வதும் அதன் மூலம் இந்நிலத்தின் வரலாற்றைக் கூறுவதும் நல்ல முயற்சி. ஆண் வெற்றிலையை மந்த்ரமூர்த்தி எடுத்து, அதில் அஞ்சன மையை நடுவிரலால் தொட்டு வழிச்சி வெத்தல நடுவ இடவலமா வட்டமா தடவி எதிர்ல்ல பச்சரிசி நெரவி இருந்த தாம்பலத்துல நடுச்சமதில வச்சி கண்ண மூடி கும்புட்டுக்கிட்டான். அந்த அஞ்சன மையில காளியோட கண் வந்து குடிபுகும். பின்னர் எல்லாவற்றையும் அந்த மையினூடாகப் பார்க்க முடியும்.

மாயம் – யதார்த்தம்: எது உண்மை?

இந்த நாவலின் மிகப் பெரும் வலிமை ஒரு குழப்பம்தான். நாம் படித்துக் கொண்டிருப்பது மாய யதார்த்தமா அல்லது எதார்த்தத்தில் இதெல்லாம் மாயமா என்பதுதான். உதாரணமாக,

  • எருமைகளும் வரிக்குதிரைகளும் ஒன்றாக ஆற்றைக் கடப்பது, ஆற்றில் முதலை துரத்துவது
  • தொலைந்த எருமையை இயேசு, அல்லா, கிருஷ்ணர் ஆகிய தெய்வங்கள் தத்துவங்களில் தேடுவது
  • புதிதாகக் குடியேறும் இனக் குழுவில் தேடுவது
  • நீலகிரியில் தேயிலைத் தோட்டம் அமைக்க வந்த ஆங்கிலேயர்கள் நூற்றுக்கணக்கான எருமைகளை துப்பாக்கியால் சுட்டுக் கொல்வது —
    இவை அனைத்தும் நிஜமும் மாயையும் கலந்த காட்சிகள்.

இதில் ஒரு பக்கம் வரலாறு, மற்றொரு பக்கம் அதற்குள் உறைந்த புராணம். இதுதான் அலையாத்தி செந்திலின் தனித்துவம் — மாயயதார்த்தம் (Magical Realism) என்பதைக் கிராமிய மொழியில் உயிரோட்டமாக்குவது.

மந்த்ரமூர்த்தி சொல்லும் கதை இயேசுவைப் பற்றியதாக இருக்கிறது. நல்லா உசந்த ஆளுப்பா. கையில ஒத்தக் கம்ப ஊனி ஒரு கல்லு திட்டுல உக்காந்து இருக்கானப்பா. வயசு எப்படியும் ஒரு முப்பது இருக்கும். மடியில ஒரு ஆட்டுக்குட்டி. மேய்ச்சல்ல ஆடுகள் நிக்கிறது தெரியுதப்பா ஆட்டுக்குட்டி பயந்து போய் படபடப்பாக மடியில அமர்ந்து இருக்க இயேசுவை சிலுவையைச் சுமக்க வைத்து மலை உச்சிக்குச் சென்று சிலுவையில் வைத்து ஆணியால் அறைந்து சிலுவை ஏற்றிய காட்சியை விவரித்துள்ளார். முழுக் காட்சியையும் விவரிக்கும் போது அவரது குரல் தழுதழுத்தது. தேவரும் கோனாரும் தம் கண்ணில் இருந்து வழியும் கண்ணீரைக் கட்டுப்படுத்தாமல் உட்கார்ந்து இருந்தனர். இதில் உள்ள சிறப்பு யாதெனில் அவர் இயேசு என்ற பெயரைக் குறிப்பிடவே இல்லை. நமக்கு வரலாறு தெரிந்தபடியினால் இயேசுவை குறிப்பிடுகிறார் என்பதனை உணர முடிகிறது.

மந்த்ரமூர்த்தி எங்கோ உள்ள காட்டுக்குள் ஆற்றங்கரையில் உள்ள எருமையை கண்டு அதைப்பற்றி சொல்கிறார் உடனே கோனார் தன் பக்கத்திலிருந்த தேவரைப் பார்த்து இவர் சொல்கிற அடையாளம் தன் எருமை இல்லை என்பதைப் போல் சைகை செய்கிறார். அதைக் கேட்ட தேவர் சரி மூர்த்தி செத்த அங்கிருந்து சனி மூலப் பக்கமா தேடி பாருப்பா இது என்னமோ நம்ம கோனார் எருமை மாதிரி தெரியல என்றபோது ரவி மெல்லிதாகச் சிரித்துக் கொண்டான். பக்கத்தில் இருந்த அவன் மனைவி சுதா அவன் காலைக் கிள்ளினாள். சுதாவின் நகை களவு போகிறது. அதனைக் கண்டுபிடிக்க சுதா இங்கு வந்திருந்தாள். ரவிக்கு இதில் துளி கூட விருப்பமில்லை. அவன் ஒரு வெட்னரி டாக்டர். போலீசுக்குப் போகலாம் என்றான். அவள் பிடிவாதமாக அவனை இங்கே கூட்டிக் கொண்டு வந்திருந்தாள். திருமணம் முடித்துச் சில வருடங்கள் ஆகிவிட்டன இவர்களுக்குக் குழந்தை இல்லை ( பின்னால் பேயின் ஒரு சூழ்ச்சிக்கு இது பயன்படுகிறது).

அடுத்ததாக முகமது நபியின் வரலாற்றை தனக்கே உரிய வட்டார மொழியில் கதையாக கூறுகிறார் மந்த்ரமூர்த்தி. முகமது நபியின் பெயரும் இவரால் சுட்டப்படவில்லை. அடுத்ததாக சிந்துவெளி கால மக்களது வாழ்க்கை முறை, கட்டிட அமைப்பு, நிர்வாக ஒழுங்கு, பண்பாடு,கலாசாரம், பசுபதி வழிபாடு போன்ற வரலாற்றைக் கதையாகச் சொல்கிறார். அதுமட்டுமின்றி அங்கு எருமை நிற்பதையும் கூறுகிறார். 

எருமையின் அடையாளங்களைக் கூறும் போது அதன் கொம்புகள் சுருட்டியுட்ட மாதிரி கொம்பு. நெத்தியில வெள்ளப் பொட்டு, நெத்திப்பொட்டு கழுவி மூக்கு வர ஒழுவிருக்கு. இப்படிச் சொல்லிக் கொண்டு போகும் போது கோனாரு முகம் வாடிக் குறுக்கிட்டு, “நெத்திப் பொட்டா…..நம்ம எருமைக்கு நெத்திப்பொட்டெல்லாம் இல்லைங்களே சாமி, நீங்க கண்டது எருமை தானா” என்ற அவர் கேள்வியில் மைப் பார்வையில் இருந்து வெளியேறினார் மந்த்ரமூர்த்தி. சிந்துவெளி என்ற பெயரையும் இவர் குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்ததாக, இப்ப அவர் புல்லாங்குழலுடன் இருக்கும் கண்ணனை பற்றிச் சொல்கிறார். மாடு மேய்க்கும் கண்ணன், புல்லாங்குழல் இசைக்கும் கண்ணன், பாதத்தில் அம்புபட்ட கண்ணன் என அத்தனையும் சொல்கிறார். பங்காளிச் சண்டைய இவர் தீக்குறதுக்குள்ள பட்ட பாடு பற்றியெல்லாம் சொன்னார். இடையில் குறுக்கிட்டு இங்கன எங்கேயாவது நம்ம எரும நிக்குதான்னு பாருப்பா என்ற போது வெளி உலகத்திற்கு வந்தார் மந்த்ரமூர்த்தி. கண்ணன் பெயரை இவர் குறிப்பிடவில்லை. 

இந்த முறை கண்களை மூடி முணுமுணுத்து திறந்த போது அஞ்சன மையில் பெரும் காட்சியாக பிரசன்னமானது. இந்த முறை காட்சி தெரிய ஆரம்பிக்கும் போது அதுல நடக்கிற உரையாடல்களையும் மூர்த்தியால கேட்க முடிந்தது. கைபர் கணவாய் வழியாக வந்த ஆரியக்கூட்டம் பற்றிய விபரணம். அவர்களது உருவம் கூட விவரிக்கப்பட்டு உள்ளது. அந்தக் கூட்டம் வரும்போது உள்ளூர்காரன் ஒருத்தன் எதிர்ல ஒரு எருமையை ஓட்டிக்கிட்டு வாரான், பெரிய மந்தையும் பின்னாடி குதிரையில ஆளுகளும் வர்றதைப் பார்த்துட்டு எருமைய புடிச்சிட்டு ஒதுங்கி நிக்கிறான். 

வந்த மாட்டுக்கூட்டம் இங்க பச்சைய கண்டதும் ஓடி செதறுது. கழுத்துல தாடி இடவலமா ஆட மடி குலுங்க ஓடிவந்து பரந்து பரவி பரபரப்பா மேய ஆரம்பிக்குது. குதிரை மேல இருக்கிறவங்க இந்த எருமையையும் இவனையும் ரொம்ப அருவருப்பா பாக்குறாங்க. அவங்க கிட்ட வந்து இந்த உள்ளூர்காரன் “யாருப்பா நீங்க எல்லாம்?” அப்படி என்று கேட்கிறான்.

உடனே அவர்கள் “தள்ளிப் போய் பேசு, தொட்டுப்படாத” அப்படின்னு சொல்றான். கிட்ட வந்தது என்னமோ அவனுக நம்மள தூர போனு சொல்றானுங்க என யோசித்துக்கொண்டே எருமய பிடிச்சு இழுத்துக்கிட்டு நிக்கிறான் உள்ளூர்காரன்.

கையில் என்ன கருமத்தை புடிச்சிட்டு நிக்கிற அதுவும் நீயும் தூரமா போ என்றான் குதிரையில் வந்தவன். அப்படி என்னப்பா ஒம் மாடு ஒசந்த மாடு. மூத்திரம் போகிற இடத்தில் பால் கறக்குமா? கோவத்துல கேட்டுட்டான் உள்ளூர்காரன் 

உடனே குதிரை மேல இருந்த செம்பட்டை தல முடிக்காரன் தல முடிய கோதிக்கொண்டே சொல்றான் எங்க மாட்டு மூத்திரம் பால விட மேலடா. 

இந்த நாட்டுல இருக்க 18 வகை சாதித்தீட்டுக்கும் எழவு, கருமாதி புள்ள பெத்தது, பொண்ணு சமஞ்சு குத்த வச்சு உட்கார்ந்திட்டு வர 46 ரக தீட்டையும் எப்படி கழிப்பே? எங்க மாட்டு மூத்திரத்தில் ஒரு சொம்பு பிடிச்சு மாவிலையை தொட்டு நாங்க வந்து நாலு வார்த்தை சொல்லி தெளிச்சுட்டா தீட்டு அது தீர்வாகும் .

உடனே உள்ளூர் காரன் எங்க ஊர்ல அப்படி ஒரு நடைமுறையே இல்லையே தீட்டா அப்டின்னா என்ன என கேட்கிறான்.

இப்ப தானே இங்க வந்திருக்கம். இனி கொஞ்சம் கொஞ்சமா உங்களுக்கு விளங்க வைப்போம்.

பின்னால் மாட்டைக் கொன்று தின்னும் காட்சி அதனை மற்ற மாடுகள் கண்டும் காணாதது மாதிரி இருக்கும் போக்கு ரொம்ப கொடுமையாக இருக்கிறது. எங்கிருந்தோ வந்து நம் கலாச்சாரத்தில் கலந்துவிட்ட ஆரியர் என்ற பெயரை மந்த்ரமூர்த்தி சொல்லவே இல்லை. நான் யூகிக்கிறேன்.

அங்கும் வேறொரு எருமையை பற்றி கூறிய போது இது இல்லங்க என் எருமை என்ற குரலுக்கு கண்ணை விழித்தார் மந்த்ரமூர்த்தி.

மறுபடியும் அவர் கண்ணை மூடுவதற்குள் வெட்னரி டாக்டர் ரவி எல்லோரையும் பார்த்தபடி மந்த்ரமூர்த்தியிடம் ஐயா நீங்க இப்ப கடைசியா சொன்ன ரெண்டு எருமை பத்தி சொல்லணும். முதல்ல திருவிழா நடந்த ஊருக்கு பக்கத்தில் பார்த்ததா சொன்னீங்களே நெத்தி பொட்டோட அது ““நீலிராவி” ரகம் ராவி ரிவர் பக்கம் உள்ள எருமை. இப்ப பார்த்தது “முர்ரா” ரகம். இந்த எருமைங்க எல்லாம் நார்த் இந்தியாவுல இருக்கு. ரொம்ப வடக்க இருக்கு. நாம ரொம்ப ரொம்ப தெக்க இருக்கிறம்.”

மீண்டும் மையில் தன் பார்வையைச் செலுத்தினார் மந்த்ரமூர்த்தி. 

இப்போது அடேங்கப்பா இது என்ன எருமை நடு முதுகு வர கொம்பு வளர்ந்திருக்குப்பான்னு வாய்விட்டு சொல்ல உடனே ரவி அது “பத்திராபுரி” ரக எருமைங்க பார்க்க வேடிக்கையா இருக்கும் என்று சொல்லி நம்மூரு இன்னும் தெக்கால இருக்கு அப்படின்னு சொல்றான்.

இப்படியே பல ஒரு எருமைகள் மையில் தெரிய ஒவ்வொரு எருமையின் பெயராக ரவி சொல்லி வருகிறான்.

கடைசியில தெற்கு நீலகிரி தோடர் எருமைங்க தெரிஞ்ச போது அப்படியே நிதானமாக பார்க்கிறார் மூர்த்தி. ஏன்னா அப்படி ஒரு ரம்யமான காட்சியா விரியுது. ரயிலு வண்டி வர்றது தெரியுது. ரயில் வண்டியில இருந்து துப்பாக்கியால தோட்டத்துல மேஞ்சிட்டு இருக்கிற அத்தனை எருமைகளையும் சுட்டு கொல்ற வெள்ளைக்காரனை தெரியுது . மலையில எருமைக செத்து கிடக்கிறது பார்த்து அந்த மக்கள் பதறி அழுகிறது தெரியுது . மலையிலிருந்து எருமக உருண்டு உருண்டு கீழே விழுகிறது தழுதழுத்தக் குரலில் மூர்த்தி சொல்லச் சொல்ல மருதையா வேளாளருக்கு அழுக அழுகையா வருது.

காளித்தாய் பிரசன்னம் – தத்துவத்தின் உச்சி

நாவலின் அடுத்த பகுதியில் வரும் காளித்தாய் பிரசன்னம், ஒரு தத்துவக் களஞ்சியமாக விளங்குகிறது. அது மனிதனின் உள்ளார்ந்த பயங்களையும், புனிதத்தின் மீதான நம்பிக்கையையும் இணைக்கிறது. “உறையூர் சண்டையில் கடைசி தலைமுறை சோழர்கள் அழிக்கப்படுவது”, “செத்த பிணங்களை சாப்பிடும் பிசாசு” போன்ற காட்சிகள் ஜெயங்கொண்டாரின் கலிங்கத்துப்பரணியை நினைவூட்டுகின்றன.

மூன்றாவது அத்தியாயத்தைப்போன்று ரசித்து வாசித்த பகுதி வேறில்லை. ஆரம்பமே ஆர்ப்பாட்டமாக இருக்கிறது. “எத்தனை வருஷம் ஆச்சு சுடச்சுட நான் மனுச ரத்தம் குடிச்சு..”

அதெல்லாம் ஒரு காலம் 10 வயசு பாலகன் வேங்கையன் ரத்த ருசிக்கு ஈடாவுமா?…ஆயாக்காரின்னா அவ ஆயாக்காரி…முதல் நாளே அப்பனப் பலி கொடுத்து அடுத்த நாள் அண்ணனப் பலி கொடுத்து மறுநாள் கட்டின புருஷன பலிகொடுத்து பெறவு பெத்த புள்ளைய கூப்பிட்டு கைல வேலை கொடுத்து அனுப்புவா பாரு அதுவும் குத்துப்பட்டா மார்ல வாங்கணும்னு சொல்லி அனுப்பிச்சு வச்சாளே, ஆயக்காரின்னா அவ ஆயக்காரி. இது புறநானூறு!

வேங்கையன் ரத்தத்தை குடிச்சு பச்ச பிணத்தை தின்னு எதுக்களிச்சு சலிச்சு போயிருந்த எனக்கு தஞ்சாவூரையும் உறையுரையும் கொளுத்தி சுட்ட பிணம் கிடைத்தது…..ஆண் பிணம், பெண் பிணம் என்ன பலதரப்பட்ட பிணங்கள்.

என் தம்பி சுடலை மாயாண்டி கூடவே 21 மாடம்மாரையும் 61 சேனையையும் பேய் பிசாசையும் கூட்டிட்டு பெரும் கூட்டமாக வருவான். அவங்களுக்கு பச்சை பிணம் ஆகாது அவிச்ச பிணம் வேணும் அதுக்கு ராத்திரி தான் வரணும். என் சின்ன தங்கச்சி அங்காளி ஆத்தக்காரி பெரியாச்சி பெரிய பொண்ணு பிடாரி இவங்க எல்லாம் பச்சப் பிண வாசத்துக்கு எங்கன்னு இருப்பாளுக. ஆத்தா பேய் புலம்புவது வரலாற்றில் நடந்த பாண்டிய சோழ போர் அதன் மூலம் விழுந்த போர் வீரர்கள் அவர்கள் மனைவிகள் அந்தப்புரத்தில் கருவை சுமந்து இருந்த பெண்டிர் பற்றியெல்லாம் சிலாகித்து பேசினாள்.

திடீர்னு சலித்த குரலில் என் புள்ள தான் இது மீசை தாடி எல்லாம் வல்லிசா வழிச்சு மழுங்க செறச்சு தலைய நடுவெடுக்காம அப்படியே நேரா மேலாக்க ஏத்திச் சீவி தோள்ல ரெண்டு பக்கமும் சுருண்டு பொரடிய மறச்சு அழகா கிடக்கு முடி. என தன் மகன் சைவம் என்பதை சலிப்புடன் சொல்லும் அம்மாப்பேயின் அழகு. இவன் மாமன்காரன் சாப்பிடும் பிணங்கள் பற்றியும் இவன் தகப்பன் உண்ணும் எலும்பு சதை சுட்டப்பிணம் பற்றியும் கூறி இவன் அவர்கள் ரத்தம் தானா என புலம்புவது நன்றாக இருக்கிறது. 

மந்த்ரமூர்த்தியிடம் தீர்வுக்காக வந்த மக்களுக்கு தீர்வு கிடைத்தது. கோனார் மாடு எங்கே சிக்கி இருக்கிறது என்பது தெரிந்து விடுகிறது. நம் வரலாற்றின் இருண்ட பக்கங்களை இருட்டில் துலாவி தன் மொழி நடையில் வெளிக்கொணர்ந்துள்ளார் ஆசிரியர். ஆதிமனிதனில் தொடங்கி சமகாலம் வரை வந்து முடித்துள்ளார்.

பூசாரியின் பாடல்கள், மக்கள் நம்பிக்கைகள், காடு, நதி, எருமைகள் — அனைத்தும் நாவலின் ஒலி வடிவங்களாக நிற்கின்றன. நாவல் முழுவதும் மொழியின் மணம் வீசுகிறது. உதாரணமாக, “ஆத்து தண்ணி மெதுவாக போகுது” என்பதை, “எறைய முழுங்கின பாம்பு கணக்கா மெதுவாகத்தான் எழையும்” என்று செந்தில் சொல்வது, அந்த மண்ணின் சொற்களால் தான் சாத்தியமாகிறது. 

இது வெறும் மொழி அல்ல, அது மண்ணின் உயிர் மொழி. இழந்த கிராமத்து அழகியலை அதன் சொந்த சொற்களால் மட்டுமே மீட்டெடுக்க முடியும் என்பதையே எழுத்தாளர் நேரடியாக நிகழ்த்தியுள்ளார்.

‘மையெருமை’ நாவல் நம்மை நான்கு திசைகளிலும் இழுத்துச் செல்கிறது:

  • நிலம் – உயிரின் ஆதாரம்
  • சூழல் – சமூகத்தின் முகம்
  • மொழி – உணர்வின் வாசல்
  • மனிதர் – அந்த மொழியின் வடிவம்

இந்த நான்கு கூறுகளும் ஒன்றை ஒன்று தாங்கிக்கொண்டு நாவலின் நிதானமான நடையை உருவாக்குகின்றன. இது நம்மை நம்முடைய காலத்தில் இருந்து ஒரு படி விலக்கி, நிஜத்திலிருந்து மாயத்திற்கும் மீண்டும் நிதர்சனத்திற்கும் அழைத்துச் செல்கிறது.

“நாம் நம்முடைய மண்ணையும், மாயையையும், மாந்தர் மரபையும் எங்கே இழந்தோம்?” என்ற கேள்வியை நம்முள் எழச்செய்து அதன் காரணங்களை மனதிற்குள் விசாரிக்க செய்கிறது மையெருமை.

மையெருமை என்பது ஒரு மாய யதார்த்த நாவல் என்றாலும், அதின் அடிப்படையில் ஒரு கடும் சமூகச் சிந்தனை பதிந்துள்ளது. நவீனமயமாக்கப்பட்ட உலகம் இயற்கையையும் விவசாயத்தையும் புறக்கணித்து முன்னேறும்போது, இந்த நாவல் நம்மைத் திரும்பிப் பார்க்க வைக்கிறது. இது ஒரு கதையல்ல, ஒரு அழைப்பு — மண்ணுடன் மீண்டும் இணைவதற்கான அழைப்பு. விவசாயம் மீண்டும் ஒரு தொழிலாக அல்ல, ஒரு உயிரின் வழிபாடாக மாறவேண்டும் என்பதையே “மையெருமை” நாவல் சொல்லுகிறது. 

அனுபவித்து வாசித்தால் தான் வாசிப்பு அனுபவம் கை கூடும் என்பதை மீண்டும் ஒருமுறை வலியுறுத்தி உள்ளது இந்நாவல்! இதுவே இந்நாவல் இன்றைய தமிழ் இலக்கியச் சூழலில் முக்கியமான நாவலாக அமைவதும், மொழி பயன்பாட்டை ஆக்கப்பூர்வமான அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்லும் முயற்சியாகவும் அமைவதும் சிறப்பு. அலையாத்தி செந்தில் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!

***

சால்வாடி ஈஸ்வரன் கவிராயர் – திருக்குற்றாாலக் குறவஞ்சி பாடிய திரிகூட ராசப்பக் கவிராாயரின் மரபுத் தொடர்ச்சியில் வந்தவர். நுண்ணுயிரியல் துறையில் முதுகலைப் பட்டமும் உயிரின அறிவியல் துறையில் ஆய்வியல் நிறைஞர் பட்டமும் உளவியல் ஆலோசனை சிகிச்சை பிரிவில் முதுகலை பட்டமும், மேலாண்மை மேம்பாாட்டுத் திட்டம் துறையில் பட்டயமும் பெற்றவர். அமெரிக்காவின் ஐஜிஐ க்ளோபல் பப்ளிஷிங் மற்றும் அணி சேரா இயக்கம் வாயிலாக ஆங்கிலத்திலும், பாவை மதி வெளியீடு வாயிலாக ”தளம்” (கவிதைத் தொகுப்பு) ”எட்டிய பத்து எட்டாத பத்து” (கட்டுரைத் தொகுப்பு) முகிலன் பதிப்பகம் வாயிலாக ”நிறமற்ற நிஜங்கள்” (சிறுகதைத் தொகுப்பு) மற்றும் மெய்நிழல் பதிப்பகம் வாயிலாக “சுவர்” (சிறுகதைத் தொகுப்பு) என்று தமிழ் எழுத்துலகிலும் இயங்கி வருகிறாார். மின்னஞ்சல் : salavadieaswaran@gmail.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here