Wednesday, February 18, 2026
Homeஇதழ்கள்2025 இதழ்கள்கெட்டிக்கார அத்தை

கெட்டிக்கார அத்தை

மன்னு பண்டாரி

ஆங்கிலம் வழி தமிழில் : பாலா இளம்பிறை

திகாரத்தின் மொத்த உருவமான அத்தையின் ஒழுக்கமான நடவடிக்கைகளின் தாக்கத்தால் அந்த வீட்டில் இருந்த ஒவ்வொருவரும் கலக்க மயக்கத்தோடு இருப்பது போல் தோன்றியது. அந்த மொத்த வீடும் எந்த ஒழுங்கீனங்களும் இல்லாமல் நகரும் இயந்திரங்களைப்போல் துல்லியமான இயக்கத்துடன் இருந்தது. 

ஒவ்வொருவருக்குமான அன்றாடப் பணியாக – அதிகாலை ஐந்து மணிக்கு எழுதல், தோட்டத்தில் ஒரு மணி நேர நடை, பின்னர் அவரவருக்குத் தேவையான தேநீர் அல்லது பால் அருந்தினர். அதற்குப் பிறகு அன்னு தனது படிப்பைத் தொடர வேண்டும். வீட்டுப் பெரியவரும் அன்றைய தினசரி, அலுவலகக் கோப்புகள் மற்றுமிருக்கும் முக்கிய வேலைகளில் மும்முரமாய் இருப்பார். அடுத்து குளிப்பதற்கான நேரம் சரியாக ஒன்பது மணி. அத்தையின் விருப்பத் தேர்வோடு அனைவரும் உடுத்த வேண்டும், பிறகு சாப்பாட்டு மேசையில் அனைவரும் ஒன்று சேர அமர்ந்து உணவருந்தி விட்டு பின்னர் அவரவர் பணிகளைத் தொடர வேண்டும். 

கெட்டிக்கார அத்தை, (அவரை அப்படித்தான் அழைப்பது வழக்கம்) என்பது அவளுடைய உண்மையான பெயர் அல்ல. அவளுடைய கெட்டிக்காரத் திறமையைக் கண்டு கொண்டவர்கள் அவளை அப்படியே அழைக்கத் தொடங்கினர்.. ஆனால் அப்படியொரு பெயரை அவளுக்கு வைத்தவர் மிகப்பெரிய அறிவாளி என்றுதான் நான் சொல்வேன். அவள் தனது குழந்தைப் பருவத்தில் கூட, அவள் சம்பந்தப்பட்ட விசயங்களில் நேரத்தைக் கடைபிடிப்பவள் மட்டுமல்ல. ஆனால் எல்லோரும் புருவம் உயர்த்தும்படியாக அவளுடைய செயல்கள் அனைத்தும் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் விதமாக அத்தனை ஒழுங்காகவும் நேர்த்தியாகவும் இருக்கும். அதுவே அனைவரது பாராட்டுக்கும் பிரமிப்பிற்கும் உள்ளாகும். வாங்கிய ஒரு பென்சிலானது குறுகி இனிமேல் விரல்களால் பிடிக்க முடியாது என்கிற வரைக்கும் அதைப் பயன்படுத்துவாள். ஆனால், அந்தப் பென்சிலின் ஈயக்-கரித்துண்டு மீண்டும் மீண்டும் உடைந்து தொலைந்து போவதோ அல்லது சரியான நேரத்தில் உதவாமல் கரைந்து தொலைந்து போவதோ அதன் சக்திக்கு அப்பாற்பட்டது அல்லவா. அவள் தனது நான்காம் வகுப்பில் வாங்கிய ரப்பர் அவளுடைய ஒன்பதாம் வகுப்பு வரை வந்ததாம். 

நாட்கள் செல்லச் செல்ல அவள் வளரும் தருவாயில், மிக இள வயதிலேயே மிகுந்த ஆற்றலையும் வயதுக்கு மீறிய முதிர்ச்சியையும் பெற்றிருந்தாள். ஒழுக்க சிந்தனையற்ற வாழ்க்கை என்பதை அவளால் கற்பனை செய்து பார்க்கவே முடியாது. எங்களுக்கு அறிவுரை சொல்லும் தேவை வரும்போதெல்லாம் அப்பா, முன்மாதிரியாய் எங்கள் அத்தையையே சுட்டிக் காட்டிக் கொண்டிருப்பார். பயந்து போன நாங்கள், அதனாலேயே அவள் தன்னுடைய மாமியார் வீட்டுடனேயே இருக்க வேண்டும், இங்கே தங்கிவிடக் கூடாது என்று கடவுளிடம் பிரார்த்தனை செய்தோம். இல்லாவிட்டால் எங்களின் வாழ்வு நிச்சயமாக அதோ கதி தான். 

இதையெல்லாம் தெரிந்து கொண்ட பிறகு, இவ்வாறான சூழலில் என்னுடைய கல்வியின் எதிர்காலம் பொருட்டு அந்த கெட்டிக்கார அத்தையின் வீட்டுக்கு என்னை அனுப்பி வைக்க இவர்கள் முன்மொழியும் போது, எனக்கு ஏற்பட்ட மனக்கொந்தளிப்பு எப்படியிருந்திருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். மேற்கொண்டு நான் படிக்கப்போவதில்லை என்று தடாலடியாய் மறுத்துவிட்டேன். ஆனால் அப்பா என்னுடைய மேற்படிப்பின் மீது மிகவும் பிடிவாதமாய் இருந்ததால், அவருடைய பேச்சை மீறமுடியவில்லை. அவர் என்னிடம் வலியுறுத்தினார். அன்போடும் கருணையோடும் விளங்க வைக்க முயற்சித்தார். திட்டினார். அவர் எடுத்த காரியம் நிறைவு பெறும் வரை கண்டிக்கவும் செய்தார். பிரியமான என் வீட்டிற்கு விடை கொடுத்து, குல தெய்வத்தின் பெயரை உச்சரித்துக் கொண்டே அத்தையின் வீட்டை வந்தடைந்தேன். 

அத்தை என்னை மிகுந்த அன்போடு வரவேற்றாள் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.. ஆனால், இத்தனை நாளாக அவளுடைய கெட்டிக்கார பிம்பத்தைக் கேட்டே வளர்ந்ததால் அவளுடைய பாசமும் கருணையும் மறைக்கப்பட்டு, அவளின் வரவேற்பு என்னுள் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தத் தவறிவிட்டது. ஆனால், நாங்கள் பெரியவர் என்று அன்போடு அழைக்கும் அத்தையின் கணவர், நன்மதிப்புகள் கொண்ட மரியாதைக்குரிய மனிதர். ஆனால் மனதுக்கு நெருக்கமாக, அவர்கள் வீட்டில் எனக்கு மிகவும் பிடித்தது அவர்களின் ஐந்து வயது மகள் அன்னு. 

அந்த வீட்டில் நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன், அந்த சலிப்பான அன்றாட வாழ்க்கையோடு போராடிக் கொண்டு எவ்வளவு விசயங்களை தியாகம் செய்ய வேண்டியிருந்தது என்பதையெல்லாம் எல்லாம் வல்ல இறைவனால் மட்டுமே உணரமுடியும். தொடக்கத்திலிருந்தே அங்கே இதையெல்லாம் அனுபவிக்கும் அந்தச் சின்னஞ் சிறுமி அன்னுவை நினைத்தால் பரிதாபமாய் இருந்தது. வளரிளம் பருவத்து முதிர்ச்சி முன்னமேயே ஆட்கொண்டுவிட்டதால், அந்த ஐந்து வயது சிறுமியால் குழந்தைப் பருவத்திற்கான மகிழ்ச்சிகளை ஒருபோதும் அனுபவிக்க முடியவில்லை. அவள் ஓர் இனம்புரியாத அச்சத்தால் சூழப்பட்டிருப்பது போல் தோன்றியது. அங்கு வந்து சேர்ந்த சில நாட்களுக்குள், அந்த வீட்டின் அடக்குமுறைச் சூழல் என்னுடைய புன்னகை மற்றும் மகிழ்ச்சி அனைத்தையும் பறித்துக்கொண்டு போய் விட்டது. 

அத்தையின் திருமண வாழ்க்கை இருபத்தைந்து வருடங்களை நிறைவு செய்துவிட்டது, ஆனால் வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தையும் பார்க்கும்போது அவையனைத்தும் நேற்றுதான் வாங்கியவை போல் இருந்தன. அந்த வீடு கட்டப்பட்டபோது வாங்கப்பட்ட கண்ணாடி மற்றும் பீங்கான் பாத்திரங்கள் அனைத்தும் இந்தப் பதினைந்து ஆண்டுகள் அன்றாடப் பயன்பாட்டிற்குப் பிறகும், புத்தம் புதியதாய் மிளிர்ந்தன. அவையனைத்தையும் தூய்மையாய் வைத்திருக்கும் பொறுப்புகள் அனைத்தும் அத்தையுடையதே. எவரும் அதில் ஏதாவதொன்றை உடைக்கத் துணிந்ததில்லை இதுவரைக்கும். வீட்டு வேலைக்காரர் ஒருவர் தொட்டியொன்றை ஒருமுறை உடைத்துவிட்ட தவறுக்காக கடுமையாகத் தண்டிக்கப்பட்டார். மோசமாய் அடிகள் விழுந்தன. ஏதாவதொன்று உடைவதையும் அழிவதையும் அவள் வெறுத்தாள், அவையெல்லாம் அவளுடைய சகிப்புத்தன்மைக்கு அப்பாற்பட்டவை. தூய்மையான அவளது வீட்டைப் பற்றி அவளுக்கு எப்போதுமே பெருமை. அந்த வீட்டில் அவள் காலடி எடுத்து வைக்காமல் போயிருந்தால் அந்த ஏழை மனிதனுக்கு என்னவெல்லாம் நேர்ந்திருக்கும் என்று தனக்குப் புரியவில்லை, என்று அவள் அடிக்கடி மாமாவிடம் சொல்வதுண்டு. ‘நிலைமை என்னவாக இருந்தாலும் நாம் அனைவரும் மனிதர்களாகவேனும் இருந்திருப்போமே தவிர, வெறும் களிமண்ணால் செய்யப்பட்ட பொம்மைகள் அல்ல நாம்’ என்று என் தலைக்குள் ஒரு முணுமுணுப்பு கேட்டது. 

சதா விழிப்புடன் இருக்கும் அத்தையின் கண்களையும், உணவின் மீதான அவளுடைய அக்கறை முறைகளையும் மீறி, அன்னுவுக்கு ஒருநாள் காய்ச்சல் கண்டது. எல்லா வகையான சிகிச்சைகளையும் தாண்டி, கிட்டத்தட்ட முழுவதுவுமாய் ஒரு மாதம் கடந்துவிட்டது, ஆனால் அவளுடைய காய்ச்சல் குறையவில்லை. அன்னுவின் உடம்பு வெளிறிப் போன பின்பு அத்தையின் பதட்டம் எல்லையில்லாமல் போனது. எந்த கிருமித் தொற்றும் அவளுக்கு இல்லையென்று அவளைப் பார்த்தபோது தெரிந்தது, ஆனாலும் தனது அம்மாவின் பயம் அவளைப் படிப்படியாக விழுங்கிக் கொண்டிருந்தது. அவற்றால் அவள் அவதிப்பட்டுக் கொண்டிருந்தாலும் பயத்தின் காரணமாக அவளால் எதையும் சொல்ல முடியவில்லை. நாளுக்கு நாள் அவள் இன்னமும் நோயின் பிடிக்குள் உள்ளிழுக்கப்பட்டுக் கொண்டேயிருந்தாள். 

தொடர்ந்த பரிசோதனைகளுக்குப் பிறகு, குழந்தையை மலைப்பாங்கான நிலங்களுக்கு அழைத்துச் செல்லவேண்டும் என்றும், அவள் மகிழ்ச்சியாக இருப்பதற்கான எல்லா செயல்களும் முன்னெடுக்கப்படவேண்டும் என்றும் மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். குழந்தையின் விருப்பப்படி அனைத்தும் நடக்க வேண்டும். அதுவே அவள் நோயிலிருந்து விடுபடுவதற்கான வழியாகும். ஆனால், உண்மையைச் சொல்லவேண்டுமென்றால், அந்த அறியாக் குழந்தையின் மனதில் அவளது சொந்த விருப்பங்கள் என்று ஏதேனும் இருந்ததா? அத்தையின் முன்னால் இதெல்லாம் சாத்தியமில்லை என்ற நிலையிருந்ததால், மாமாவுக்கு இது அச்சத்தோடு கூடிய மிகப் பயங்கரமான சவால் தான். ஏனென்றால், தான் அறியாமல் கூட எவருடைய விருப்பங்களும் அவளை எதிர்த்து நிற்க முடியாது. மாமா ஒருவேளை இதைப்பற்றி மருத்துவரிடம் வெளிப்படையாய் சொல்லியிருந்திருக்கலாம், அதற்கேற்றார்போல் அவரும் மருத்துவரின் அறிவுரையைக் காரணம் காட்டி குழந்தையை அம்மாவிடமிருந்து தனிமைப்படுத்திருக்கலாம். அத்தைக்குத் தயக்கம் தான், ஆனாலும் மருத்துவரை எதிர்க்கத் துணிய மாட்டாள். இறுதியாக அந்த முடிவுக்கு அவள் ஒத்துக்கொண்டாள்.  

அன்னுவும் மாமாவும் மலைப் பிரதேசத்திற்கு செல்வதற்கான ஏற்பாடுகள் தயாராகின. முதலில் இருவருக்குமான ஆடைகளின் பட்டியல், பின் காலணிகள், காலுறைகள், குளிரைத் தணிக்கும் உடுப்புகள், படுக்கை விரிப்புகள் மற்றும் பாத்திரங்கள். அனைத்தையும் பைகளில் பத்திரப்படுத்தும் போது அத்தை தன் கணவரை நோக்கி, ‘இதில் எந்தவொரு பொருளும் தொலைந்து போய்விடக் கூடாது’ என்று அழுத்தம் திருத்தமாக அறிவுறுத்தினாள் – “இங்கே பாருங்க இந்த ஃப்ராக் தைக்கிறதுக்கு ஏழு ரூபா செலவு பண்ணிருக்கேன்.. இந்தக் கோப்பையெல்லாம் உடைச்சிடாதீங்க, ஐம்பது ரூபா நாசமாகிடும்.. அப்புறம், முக்கியத்துவமில்லாத கண்ணாடி தம்ளர்னு சிலதை நீங்க பொருட்டாவே எடுத்துக்கறதில்லனு எனக்கு நல்லாத் தெரியும்.. ஆனா, இதையெல்லாம் நான் பதினைஞ்சு வருசமா ஒரு சின்ன கீறல் கூட இல்லாம பத்திரமா வெச்சிருக்கேன்.. ஒண்ணு சொல்லிக்கிறேன், இதுல எது ஒண்ணு உடைஞ்சாலும் நல்லதுக்கில்ல ஆமாம்.” 

கணவனை நோக்கி, பொருள்களைப் பற்றிய அவளது அனைத்து விதமான கருத்துக்களுக்குப் பிறகு, அன்னுவுக்கான முறை வந்தது. அன்னு – எந்த நாள், என்ன நேரத்தில் எதைச் சாப்பிடவேண்டும்.. எப்போது வெளியே சுற்றிப் பார்க்கச் செல்ல வேண்டும், என்ன உடுத்த வேண்டும், என்று அனைத்தும் திட்டமிடப்பட்டு முடிவெடுக்கப்பட்ட பட்டியலைத் தயார் செய்து வைத்திருந்தாள் அத்தை. இப்படிப்பட்டதொரு அரச பரிபாலனத்தில், இவர்களின் தொலைதூர மலைப்பிரதேசப் பயணத்திற்கு அத்தை எவ்வாறு சம்மதித்தாள் என்பதையே நினைத்துக் கொண்டிருந்தேன். அவளுடைய அறிவுறுத்தல்கள் நிறைவுற்றன என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே, அத்தை தனது கணவனிடம் மெல்லிய குரலில், “நீங்களும் உங்களை நல்லா கவனிச்சுக்கோங்க.. பால், பழமெல்லாம் சரியான நேரத்துக்கு சாப்பிடணும்” என்றாள். இவ்வளவு நீண்ட அறிவுறுத்தல்களுக்குப் பின்னும், அத்தையால் மீண்டும் ஒன்றைத் தெளிவுபடுத்த வேண்டியிருந்தது, “நான் இல்லாம நீங்க எப்படி சமாளிக்கப் போறீங்களோ, எனக்குத் தெரியல,.. இந்த ஏற்பாடே முதல்ல எனக்குப் பிடிக்கல.. நல்லா கவனிங்க, தவறாம தெனமும் ஒரு தபால் போடணும்.”   

கடைசியாக, மாமா, அன்னு மற்றும் ஒரு வேலைக்காரன் அனைவரும் வீட்டை விட்டுக் கிளம்பும் நேரம் வந்தது. அத்தை, அன்னுவை மிகுந்த வாஞ்சையோடு தடவிக் கொடுத்தாள். அழவும் செய்தாள், இதெல்லாம் எனக்குப் புதிதாய் இருந்தது. இரும்பு போன்றதொரு கடுமையான வெளிப்புறத்தின் உள்ளே அவளது இளகிய மனம் ஒளிந்திருப்பதை அன்றுதான் உணர்ந்தேன். இரு சக்கர குதிரை வண்டி (டாங்கா) கண்களிலிருந்து மறையும் வரை பார்த்துக் கொண்டிருந்தாள். அதன் பிறகு சிறிது நேரம் அசையாமல் படுத்துக் கிடந்தாள்.. ஆனால் மறு நாளிலிருந்து அனைத்தும் இயல்பு நிலைக்குத் திரும்பி விட்டது. அன்னுவின் உடல்நிலை குறித்த கடிதம் ஒவ்வொரு நாளும் மாமாவிடமிருந்து வந்து கொண்டிருந்தது. அத்தையும் உடனுக்குடன் பதில் எழுதுவாள்.. தான் இத்தனை நாளும் வாய்மொழியாகச் சொல்லி வந்ததை கடிதத்தில் திரும்பவும் எழுதுகிறாள், அவ்வளவு தான். தேதிகளில் மட்டுமே மாற்றம். “அத்தை, ஏன் தினமும் மாமாவுக்குக் கடிதம் எழுதிக் கஷ்டப்படுறீங்க.. பேசாம மாமாவை ஒரு கடிதத்தை எழுதி அதை ஒரு பெரிய அட்டையில ஒட்டி உங்க படுக்கைக்கு முன்னால ஒட்டச் சொல்லிடலாம். தினமும் காலையில எழுந்ததும் நீங்க படிச்சுக்கலாம்”, அத்தையிடம் இப்படிச் சொல்ல வேண்டுமென்று நினைத்தேன். ஆனால், அவ்வளவு வெளிப்படையாய் அத்தையிடம் சொல்ல எனக்கு தைரியம் போதாது. 

ஒரு மாதம் கடந்திருக்கும். ஒரு நாள் மாமாவிடமிருந்து கடிதம் வருவது நின்றது. அதற்கு அடுத்த நாளும் வரவில்லை. அத்தைக்குக் கவலை பற்றிக்கொண்டது. வீட்டு வேலைகள் எதிலும் மனம் ஒட்டவில்லை. வீட்டின் கடுமையான சட்ட திட்டங்கள் திடீரென்று சரியத் தொடங்கியது போல் தோன்றியது. மூன்றாவது நாளும் கடித வரத்து இல்லாமலேயே கழிந்தது. அத்தைக்கு பதற்றம் தொற்றிக் கொண்டது. அன்றைய இரவு என்னோடு தூங்கிக் கொள்வதற்கு என்னுடைய அறைக்கு வந்தாள். ஆனாலும் இரவு முழுவதையும் கனவுகளுடனோ அல்லது அழுகையோடோ கழித்தாள். பல ஆண்டுகளாய் அவளுக்குள் அடக்கி வைக்கப்பட்டிருந்த பெண்மை உருகி முழு பலத்துடன் வெளியேறுவது போல் இருந்தது. மாமா மட்டும் தனியாக வீடு திரும்புவதாகவும். அன்னு அவருடன் வரவில்லை என்ற பயத்தோடும் தொடர்ந்து முணுமுணுத்துக் கொண்டிருந்தாள். அழுது அழுது கண்கள் சிவந்து போயின. பல்வேறு வழிகளில் அவளுக்கு உறுதியளிக்க முயற்சித்துக் கொண்டேயிருந்தேன். எதையும் அவள் காதில் போட்டுக்கொள்ளவில்லை. அன்னுவின் பொருட்டு போராடிக் கொண்டிருக்கும் அத்தையின் மனநிலையைப் பார்த்து எனக்கு வருத்தமாக இருந்தது. 

அப்படிபட்ட ஒரு சூழலில் ஒருநாள் அத்தைக்கென எழுதப்பட்ட மாமாவின் கடிதத்தோடு வேலையாள் வந்தான். நடுங்கும் கைகளோடு அந்தக் கடிதத்தை பிரித்துப் படிக்க ஆரம்பித்தாள். நான் சப்த நாடியும் ஒடுங்கி அத்தையின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். உடனடியாக அந்தக் கடிதத்தை தூர எறிந்து விட்டு தலையில் அடித்துக்கொண்டு கதறி அழ ஆரம்பித்தாள் அத்தை. எனக்கோ அதிர்ச்சி. அதற்கு மேற்கொண்டு என்னால் எதையும் யோசிக்கவும் முடியவில்லை. பச்சிளம் குழந்தை அன்னுவின் முகம் என் கண்களுக்கு முன்னால் சுழன்றது. ஆகையால். அன்னு தவறிவிட்டாள் என்பது உண்மையா? இதெல்லாம் எப்படி நடந்தது? அந்தக் கடிதத்தைக் கைப்பற்றும் துணிச்சல் இப்போது எனக்கு வந்தது – 

“என் அன்பான ஆளுமையே, 

இந்தக் கடிதத்தை உனக்கு எப்படி எழுதுவது என்று எனக்குப் புரியவில்லை. அந்தத் துன்பகரமான நிகழ்வை எப்படி நான் எடுத்துரைப்பேன்?

என் மகாராணியே! இந்த இழப்பை நீ பொறுமையுடன் தாங்கிக் கொள்வாய் என்று இன்னமும் நான் எதிர்பார்க்கிறேன். சில நேரங்களில், வாழ்வின் கடினமான தருணங்களை நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. அவற்றை நாம் துணிச்சலோடு எதிர்கொண்டு சகித்துக்கொள்வதில் தான் நமது மகத்துவம் இருக்கிறது. இந்த உலகம் அழியக் கூடியது. எவையெல்லாம் படைக்கப்பட்டனவோ, அவை பிறிதொரு நாள் மறைந்தே தீரும். அவ்வாறே, இந்த உண்மையை மனதில் கொண்டே, மாயையான இந்த உலகத்தின் மீதான மோகம் தான் வாழ்க்கையின் எல்லாவிதத் துன்பங்களுக்கும் காரணம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. உன்னுடைய கவனமான அறிவுறுத்தல்கள் மற்றும் என்னுடைய அயராத விழிப்புணர்வு ஆகியவை இருந்தபோதிலும், நமது பிரியமான பொருளை என்னால் காப்பாற்ற முடியவில்லை… அதை எனது துரதிர்ஷ்டம் என்பதைத் தவிர்த்து வேறென்ன சொல்வேன்? அந்த இழப்பிற்கான மொத்த பொறுப்பையும் நான் ஒருவனே ஏற்கிறேன்…”  

கண்ணீர் திரையிட்ட எனது கண்களின் ஊடாக, எழுத்துக்கள் தெளிவின்றித் தெரிந்தன. என்னுடைய கைகள் நடுங்கின. ஒருவருடைய மரணத்தைப் பற்றி நான் கடிதம் மூலமாக படித்துத் தெரிந்து கொள்வது என்னுடைய வாழ்க்கையில் இதுவே முதல் முறை. சொற்கள் அனைத்தையும் கடந்து என் கண்கள் கடிதத்தின் கடைசிப் பத்திக்குச் சென்றன – “ ஆசுவாசம் கொள்.. என் அரசியே.. நடந்தவற்றை மறந்து என்னைப் பொறுத்துக்கொள். நேற்று மாலை நாலு மணிக்கு, ஐம்பது ரூபாய் மதிப்புள்ள செட்டில் இருந்த இரண்டு கோப்பைகள் என்னுடைய கையிலிருந்து நழுவி விழுந்து உடைந்து விட்டன. அன்னு நலமாகி தேறிக்கொண்டு வருகிறாள். விரைவில் நாங்கள் திரும்புவோம்.” 

ஒரு நிமிடம் நான் திகைத்துப் போய் நின்றேன். இது எனக்கு இரண்டாவது அதிர்ச்சி. நடந்ததை உணரத் தொடங்கியவுடனே வெடித்துச் சிரித்து விட்டேன். உண்மையை, நடைமுறையை எப்படி நான் அத்தைக்கு எடுத்துரைத்தேன், எப்படி அவளை சமாதானம் செய்தேன், எவ்வாறு முயற்சி செய்தாலும் என்னால் அவற்றைப் பற்றியெல்லாம் எழுத முடியவில்லை. ஆனால், உண்மை நிலையைத் தெரிந்து கொண்ட பிறகு கண்களில் நீர் கட்டிக் கொண்டிருந்தாலும், அத்தையும் வெடித்துச் சிரித்தாள். ஐந்து அணா மதிப்புள்ள தொட்டியை உடைத்ததற்காக தன் வீட்டு வேலையாளை அடித்த அத்தை, ஐம்பது ரூபாய் செட்டில் இருந்த இரண்டு கோப்பைகள் உடைந்ததை அறிந்த பிறகும் இப்போது சிரிக்கிறாள். மேல் உலகத்தின் பொக்கிஷங்களைக் கண்டுவிட்டது போல் இதயத்தின் ஆழத்திலிருந்து அத்தை சிரிக்கிறாள். 

மன்னு பண்டாரி – இந்தி எழுத்தாளர். 150க்கும் மேற்பட்ட சிறுகதைகள் மற்றும் நாவல்கள் எழுதியுள்ளார். திரைப்படங்களுக்கும் தொலைக்காட்சி நாடகங்களுக்கும் திரைக்கதை எழுதியுள்ளார். இந்தி இலக்கியத்தில் ‘புதிய அலை’ சிறுகதைகளின் முன்னத்தி ஏர். மத்தியத்தர வர்க்கத்து மனிதர்களின் அகச்சிக்கலை நுட்பமாக எழுதிய எழுத்தாளர். பாரதிய பாஷா பரிஷத் விருது வென்றிருக்கிறார்.

*

பாலா இளம்பிறை – இயற்பெயர் ந. பாலச்சந்திரன். திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர். பணி நிமித்தம் சென்னையில் வசிக்கிறார். இரண்டு கவிதை நூல்கள், ஓவியர் புகழேந்தியுடனான நேர்காணல் தொகுப்பு மற்றும் மெஸ்யூர் வான்கா எனும் மொழிபெயர்ப்பு நாவல் ஆகியன இவரது ஆக்கங்களாகும்.

மின்னஞ்சல் : ilampiraibala@gmail.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here