ரமேஷ் ரக்சன்
நான்ஸி!
.
‘தவறுதலாக கை பட்டு வந்துவிட்டது. உடனே துண்டித்துவிட்டேனே அப்படியுமா உனக்கு அழைப்பு வந்ததென’ கேட்டுத் தப்பித்துக்கொள்ளும் வகையில் இருந்தது அந்த அழைப்பு. இந்தியாவிற்கு வருவதாக இருந்தாலும் நாட்கள் இருக்கிறதே! கேள்வியெழவும் திரும்ப அவளுக்கு அழைக்கும் முன், ’வாட்ஸப் பார்’ என்றது உள்ளுணர்வு.
”நான் உன்னோட நினைவுகளோட போராடுறனா இல்ல என்னோட காதலோட போராடுறனான்னு தெரியல”. – காதலில் திளைத்தகாலத்தில் ஆண் சுமக்கத் தகுதியான அனைத்து கிரீடங்களையும் விவேக்கிற்கு சூட்டியிருக்கிறாள். இது மிச்சவாழ்க்கைக்கும் போதுமான கர்வமாக இருந்தது. அதே நேரத்தில், அலட்சியமும் குடிபுகுந்தது. எதை நிராகரிக்கவேண்டுமென்ற தெளிவில்லாமல், வரவேற்பறையிலிருந்து எழுந்து வெளியே வந்தான்.
நானும் இந்தக் காதலை சுமக்கத் தெம்பில்லாமதான் வாழ்ந்துட்டு இருக்கேன் | ஊருக்கு வந்திருக்கியா | இத்தனை வருசமா என்னோட போராட்டமும் இதுதான் | நீ சொல்லிட்ட. எனக்கு இப்படி கனகச்சிதமா சொல்ல வரல | எனக்கு கண் நிறையுது | கடைசியா பேசி ஒன்பது மாதம் ஏழு நாள் ஆகுது | உன்னோட 8 வருட கல்யாண வாழ்க்கைல…
எதைச் சொல்லலாமென்று முடிவெடுப்பதற்குள் அனுப்பியிருந்த செய்தியை அவனுக்கும் சேர்த்து அழித்திருந்தாள்.
”ஒருவாரமாவே நாம பார்ப்போம்னு எனக்கு தோணிக்கிட்டே இருந்தது. ஆனா எந்த நாட்டில் இருக்க? இந்தியா வந்தா எந்த ஊர்ல இருப்ப? எத்தனை நாள் இருப்ப? இப்படி எந்தக் கேள்வியும் இதுக்கு முன்னாடியும் உங்கிட்ட கேட்டுக்கிட்டதில்ல. அதை நீ அனுமதிச்சதும் இல்ல. அதனால அந்த தோணலை நான் மதிக்காம விட்டுட்டேன்”.
”மேடவாக்கம் வீட்ல வாடகைக்கு இருந்தவங்க குடும்பத்துல ஒரு சாவு. வீடு வாங்கினதுல இருந்தே ஒரே குடித்தனம். எல்லா பராமரிப்பும் அவங்களே பார்த்துக்கிட்டாங்க. எங்களுக்கு எந்த செலவும் வச்சதில்ல. இப்ப காலி பண்ணிட்டாங்க. அதான் வீட்டைப் புனரமைச்சி வாடகைக்கு ஆள் பார்த்து விட்டுட்டு போகலாம்னு வந்திருக்கேன். வேலை முடியுற வரைக்கும் இங்க இருப்பேன்”
”பார்க்க வரவா?”
”வேணாம்”
அவளுக்கு அவன் அருகாமை தேவைப்பட்டது. ஒரு சின்ன மீறல். ஆனால் அது அவனது கேள்வியைப் பொருத்தே தீர்மானிக்கப்படவேண்டுமென்பதில் உறுதியாக இருந்தாள். கூடவே அவனைச் சந்திக்காமலே அவனது தத்தளிப்பை ரசிக்கவும் விரும்பினாள். ஆனால் அதைத் தீர்மானிக்கும் உரிமையை, அவனுக்குத் தெரியாமலே அவனிடம் கையளித்திருந்தாள்.
விவேக் தேர்ந்தெடுத்தது “வரவா” என்பதைத்தான்.
அவளுக்கு சிறு ஏமாற்றமும், கூடவே நிம்மதிப் பெருமூச்சும். இந்தத் தனிமையின் மீதெழும் காமத்திற்கு தீனிபோடும் நிர்பந்தம் மிச்சமிருக்கிற நாட்களுக்குள் நிகழ்ந்துவிடக்கூடாது என்று உறுதி பூண்டாள். அதனையொட்டி இன்னும் இரண்டு பதில்கள் அவனிடமிருந்து தேவைப்பட்டன. பெயிண்ட் வாளிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த வரவேற்பறையின் புகைப்படத்தை அனுப்பினாள்.
சுவற்றில் மாட்டியிருக்கும் புகைப்படங்கள், ஓரமாக இருக்கும் தொட்டிச்செடிகள், இருக்கைகள் இப்படி எதுவுமே தெரியாத வண்ணம் மேலிருந்து கீழ்நோக்கி நண்பர்கள் குழுமியிருந்து குடியும், சீட்டு விளையாட்டுமாக அமர்ந்திருக்கும் புகைப்படமொன்றை அவன் எடுத்தான்.
தயக்கத்தோடு வரவா என்றானா..
சந்திக்க விருப்பமில்லாமல் வரவா என்றானா…
இருவருக்குமான உரிமையை இழந்தபிறகு மிச்சமிருக்கும் வேட்கையையும் நினைவுகளையும் வைத்துக்கொண்டு என்ன ஆட்டம் ஆடிவிட முடியும்? தாமதிக்காமல் அந்தப் புகைப்படத்தை அனுப்பி வைத்தான்.
அவனிடமிருந்து அவனது அவஸ்தை நிறைந்த கதையொன்று அவளுக்குத் தேவைப்பட்டது. அதில், அவனுள் அவள் இன்னும் எவ்வளவு நிறைந்திருக்கிறாள் என்பதை அறிந்துகொள்ள விரும்பினாள். அது போதுமா என்றால், நிறைவேறாக் காதலில் அதற்குமேல் எதிர்பார்ப்பது, ஆணிற்கு சாதகமாகவே முடியுமென்ற தீர்க்கத்தை எப்போதோ எட்டியிருந்தாள். உடல் பங்கீடு, பொருளாதார உதவி, அந்தரங்க உரையாடல்கள் இப்படி எதுவும் இல்லையென்றாலும் அனுகூலம் என்னவோ ஆணுக்குத்தான் என்கிற திண்ணம். விவேக் படிக்கும்வரை காத்திருந்து அழித்த அந்த செய்தியும் அதனுள் அடக்கம்.
அவனுக்குப்போட்ட தூண்டில்தானே ஒழிய, தன்னை இழந்துவிடவில்லையென நம்ப வைக்க முயன்றாள். ஆனால், அவனன்றி வேறேதோ அவளை வென்றுவிட்டது. கண்ணுக்குப் புலப்படாத ஏதோ ஒன்றிற்கு தீனி போட்டதற்காக, அல்லது என்னவென ஆராய விரும்பாமல், அவள் சார்ந்த நினைவுகளைப் பதிலீடாக தெரிந்துகொள்ள விரும்பினாள்.
”எனக்குத் தூங்கனும், அதே நேரத்துல உங்கிட்ட கதையும் கேட்கனும். நம்ம மெமரீஸ்ல இருந்து எதாவது சொல்லு”
சென்னையில் மிச்சமிருக்கப்போகிற நாட்களுக்கு, இப்போது விவேக் சொல்லப்போவதுதான், தேநீர், உந்துவிசை, எரிபொருள். போலவே சந்திக்க முன்னெடுக்கும் தன் மனவோட்டத்திற்கான வேகத்தடையாகவும் அது அமையும் என்பதை அறிந்திருந்தாள்.
நம்ம காதலுக்குப் பிறகு, என் கல்யாண வாழ்க்கைக்கு நடுவுல ஒரு affair வந்து போனது. Affair-னு கூட சொல்லிட முடியாது. Flirt – அளவுல நிறுத்திட்டேன். அவகிட்ட கடைசியா சொன்னது “என்னோட காதலி ஞாபகம் வரமாதிரி நீ நடந்துக்ற”.
எனக்கு துரோகம் பண்ற மாதிரி இருந்துச்சா இல்ல உன் பொண்டாட்டிக்கு துரோகம் பண்ணுற மாதிரி இருந்துச்சா? – அவளின் பதிலறிந்து அழித்தான்.
அலுவலகத்தில் எல்லோர் முன்னிலையில், கத்துவதோ, வாக்குவாதத்தில் ஈடுபட்டு சண்டையிடுவதோ ஓர் நல்ல ஆணிற்கு அழகில்லையெனக் கொள்கை கொண்டிருந்த என் அறைத்தோழன், பொறுமையிழந்து கிளை மேலாளரின் மூக்கை உடைத்து ஒருவாரம் ஆகியிருந்தது. மிக நெடிய மனப் போராட்டத்திற்குப்பிறகு அரசு வேலைக்குப் படிப்பதென தீர்மானம் எடுத்தான். அதற்குத் தேவையானவை என்னவென்று தெரிந்துகொண்டான், புதிய பாடநூல்கள் வாங்குவதற்கு ஆகும் செலவைத் தவிர்க்கப் பழைய புத்தகக்கடையை நாடுவெதென முடிவெடுத்து என்னையும் அழைத்துக்கொண்டு சென்றான். என்னென்ன புத்தகங்கள் வாங்கவேண்டுமென்ற குறிப்பு அவனிடமும், அதே குறிப்பு என்னிடம் புகைப்படமாகவும் இருந்தது.
ஞாயிற்றுக்கிழமை மதிய தூக்கத்தை அவனுக்காக தியாகம் செய்தது, மழைக்கான புழுக்கம், மின்சார துண்டிப்பு, பழைய புத்தகங்களின் நெடி, அவனுக்காகப் புத்தகம் தேடுவதில் நாட்டமில்லாமல் ஆக்கியது.
ஒரு ஆள் மட்டுமே போகமுடியும் அளவிற்கு நெருக்கமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புத்தக அலமாரிக்குள் அலைபேசியில் உள்ள டார்ச்சை ஒளிரவிட்டு, ஒவ்வொரு வரிசையாக சென்று வந்தேன். மேலோட்டமாக பார்த்துச்சென்றதில் வேத நூல்களும், பழைய பைபிள்களும் நிரம்பிய அலமாரி கண்ணில்பட்டது. அங்கிருந்ததிலேயே ஆகத்தடிமனான பைபிளை எடுத்து முதல் பக்கத்தைப் புரட்டினேன். அதில் பென்சிலால் எழுதியிருந்த எண்களின் நளினம், தானொரு பெண் என்றது. பெயரிடப்படாத பைபிளின் அடுத்த பக்கத்தைப் புரட்டினேன். அச்சடிக்கப்பட்டிருந்த வருடம் 1991. நீ பிறந்த வருடம்.
இதுவரையில் அவன் தன்னிடம் சொல்லாத கதை. விபரீதம் உணர்ந்தவளாய் சுதாரித்தாள். தன்னை வீழ்த்துவதற்கான அத்தனை அஸ்திரங்களும் நிறைந்திருக்குமென பொறி தட்டியது. ஆனாலும் மனதிற்குள் மட்டுமே அவளால் போதுமென சொல்லமுடிந்தது,
பைபிளின் முகப்பில் பென்சிலால் குறித்து வைக்கப்பட்டிருந்தது, தேர்வு எண். கொஞ்சம் கொஞ்சமாக பக்கங்களை விடுவித்ததில், அதே எண்கள் வட்டவட்டமாக வெட்டிய காகிதத்தில் பல்வேறு வண்ணங்களில் ஆங்காங்கே சொருகி வைக்கப்பட்டிருந்தன.
மேலும் புரட்டியதில், சிறு துண்டுகளாக கிழிக்கப்பட்டு, பக்கத்தின் இடுக்குகளிலும் கொஞ்சம் சிதறியும் இருந்ததைப் பார்த்ததும், அந்தப்பக்கத்தை மனதில் ஏற்றிக்கொண்டு மீண்டும் புரட்டியதில் இன்னோர் பக்கத்தின் நடுவே ’மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க’ – என வரிக்கு மூன்று வீதம் நுணுக்கி நுணுக்கி எழுதி மடித்து வைக்கப்பட்டிருந்த காகிதத்தைப் பிரித்துப் பார்த்தேன். ஏனோ அதில் எழுதப்பட்டிருக்கும் அத்தனை தடவையும் மரியே வாழ்க என்று சொல்லத்தோன்றியது. கேட்கத்தவறிய மன்னிப்புகளும், பகிர்ந்துகொள்ளத் தவறிய செய்திகளும், மரியே வாழ்க மரியே வாழ்க என்றானது. காற்றின் அழுத்தம் அதிகமாகி வெடித்துவிடும் பலூனின் நிலையை எட்டியிருந்தது மனது. மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க. என்று வாய்விட்டுச் சொன்னேன். மறுபக்கத்தை திருப்பினேன். மரியே வாழ்க! முழுவதுமாக சொல்லி முடிக்கும்போது மனதிலேற்றியிருந்த பக்க எண் காணாமல் போயிருந்தது.
*
’ஏதாவது சொல்’ எனக் கேட்டதும், ஞாபகத்திற்கு வந்த அந்தப்பெண்ணின் முகத்தை விவேக் நினைவு கூர்ந்தான். அந்த முகம் என்னவாக எஞ்சியிருக்கிறது? நான்ஸியைப் பழிவாங்கப் பயன்படும் அஸ்திரமா? குற்றவுணர்ச்சியா? தவறவிட்ட வாய்ப்பா?
விவேக், அந்தக் காகிதக்குவியலைக் காண மீண்டும் முதலிலிருந்து பைபிளைப் புரட்டினான். எளிதாக அகப்பட்டது. பைபிளிலிருந்து வெளியிலெடுக்காமல் அதனுள்ளேயே காகிதத்துண்டுகளைப் பரப்பியதில் விடுபடலுக்கான மன்னிப்புக் கடிதம் என்பது புலப்பட்டது. ”Sorry, Please, Love, மன்னிச், உன்னால, எப்படி, இனி, எனக்கு, எல்லாம்” அதிலிருந்து பொறுக்கியெடுத்த சொற்கள்.
*
மீண்டும் பக்கத்தைப் பின்னிருந்து புரட்டியதில் காகிதக்குவியல் நிறைந்த பக்கம் கண்ணில் பட்டது. என்னவென்று அறிந்துகொள்ளும் ஆர்வம் இருந்தும் தயக்கம் மேலோங்கியிருந்தது. எதிரிலிருக்கும் உன்னிடம் கையை நீட்டச்சொல்லி உள்ளங்கையை வருடுவது போல அந்தக் காகிதங்களை அப்போது வருடினேன். உன் அனுமதி இல்லாமலே உன்னைத் தொடுவது போலிருந்தது. இத்தனை வருடங்களாக உன்னிடம் சொல்லாமல் அடிக்கடி மனதிற்குள் ஓட்டிப்பார்த்த்தில் எது உண்மை எது கற்பனையென்று இப்போது மிகவும் குழப்பமாக இருக்கிறது. அது மன்னிப்புக் கடிதம். நீ எழுதினது மாதிரியும் இருந்தது. அதே நேரத்தில் நான் எழுதினது மாதிரியும் இருந்தது. மரியே வாழ்க மட்டும் எப்படி அந்தப் பெண் எழுதியதாகத் தோன்றியதோ அப்படித்தானே இதுவும் அதே பெண் எழுதியதாகத் தோன்றியிருக்க வேண்டும்? இரண்டும் ஒரே கையெழுத்து. நான் எப்போதோ உனக்கு எழுதியிருக்கவேண்டியது. காகிதக்குவியலிடம் மன்னிப்புக்கேட்டேன். எல்லா வாசல்களும் திறந்திருந்தாலும் உள்ளே நுழைய மறுக்கும் அகந்தையை மண்டியிட வைத்து அந்தக் காகிதத்திடம் மன்னிப்புக் கேட்டேன். அந்தப் பக்கத்தில் வைத்திருப்பதற்கு, ஏதேனும் குறிப்பிட்ட காரணங்கள் இருக்குமாவென பைபிளின் அதிகாரத்தைப் பார்த்தேன். வசனங்களை வாசித்தேன்.
நான் இதைச் செய்யாதபடிக்கு, என் தேவன் என்னைக் காத்துக்கொள்ளக்கடவர்;
பிரிந்தது பிரிந்ததாகவே இருக்கட்டுமென்ற முடிவை இருவரும் எடுத்ததாக நினைவு.
நாம் இந்தப் போர்க்களத்தில் கண்டது வெற்றியா தோல்வியா?
மூன்று அலைபேசிகள், ஒரு மடிக்கணினி மாற்றிய பின்னும், தன்வசம் வைத்திருந்த புகைப்படத்தை முதன்முறையாக அவளுக்கு அனுப்பினான். புகைப்படத்தை விரித்துக் குறுக்கினாள். ஏனோ அவள் மனம் அந்த காகிதத்துண்டுகளின்மேல் குவியாமல் புரண்டு படுத்தது. உடனடியாகப் புகைப்படத்தை அழித்தாள்.
தனக்குள் மேலெழும்பிய திசையற்ற எண்ணவோட்டங்களை, உணர்ச்சிப்பிழம்பை தவறவிட்ட கணங்களை நினைத்து வருந்துவதா, இல்லை இந்தச் சுழலிலிருந்து தப்பித்துக்கொள்ளும் வித்தையை கற்றுக்கொண்டதற்காக மூச்செறிவதாவென குழம்பினாள். விவேக் தன்மேல் கோபப்பட விரும்பினாள். கத்த வேண்டுமென்று விரும்பினாள். பழிச்சொல்லை, அவப்பெயரை தூற்றுவது போல நினைத்துப்பார்த்தாள். தன்னை மூர்க்கமாகப் புணர்ந்து அலைக்கழித்துப் போட்டுவிட்டு ஒழிந்தானெனில் இத்தோடு தலைமுழுகிவிடலாம்.
”நான் உன்னோட நினைவுகளோட போராடுறனா இல்லை என்னோட காதலோட போராடுறனான்னு தெரியல. ஒன்னுமட்டும் என்னால உறுதியா சொல்லமுடியும். என்னோட இந்தப் போராட்டத்துக்கும் உனக்கும் எந்த சம்மந்தமும் இல்ல. நான் உனக்கு மெசேஜ் பண்ணியிருக்கவே கூடாது. நீ இந்தக் காதலுக்கு தகுதியானவனே கிடையாது.”
படிக்கட்டுகளில் அமர்ந்திருந்தவன், எழுந்து கழிப்பறைக்குள் நுழைந்து முகத்தைப் பார்த்தான். அவன்போலவே இருக்கும் இன்னொரு அவன். இருவருக்குமான வித்தியாசம் அவள் சொற்களில் இருந்தது. நீராவி படிந்துகிடந்த முகத்தை துடைத்தெடுத்தான். நான்ஸியின் உதாசீனச்சொற்கள், கிரீடத்தில் மின்னின. கண்ணிற்குப் புலப்படாத அவளின் கண்ணீரை தண்ணீர் கலக்காத விஸ்கியைப்போல பருகினான். தான் அவள் நினைவில் மடிந்துபோவதும் நான்ஸி பிழைத்துக் கிடப்பதும் தராசின் ஒரே பக்கத்திலிருப்பதை ஊர்ஜிதம் செய்தான். அதை சமன் செய்ய விரும்பினான்.
“நான் வேணும்னா ’live location’ அனுப்புடின்னு” கேட்டுவிடவா என்று எதிர்தட்டில் ஏறி அமர்ந்தான்.
நான்ஸி வெளியேறினாள்.
***
ரமேஷ் ரக்சன் : திருநெல்வேலி மாவட்டம் தளவாய்புரத்தை சேர்ந்தவர். NBFC துறையில் பணி செய்கிறார். ஐந்து சிறுகதைத் தொகுப்புகளும், இரண்டு நாவல்களும் வெளியாகியிருக்கின்றன. “16” சிறுகதைத் தொகுப்பிற்கு ’கலகம்’ விருதும், “ரகசியம் இருப்பதாய்” சிறுகதைத் தொகுப்பிற்கு ’ஜெயந்தன் விருது’ம் வென்றிருக்கிறார். மின்னஞ்சல் : rameshrackson@gmail.com


