முகம்மது றியாஸ்
[1]
சவுக்கடி தெருவில் எல்லோரது வீட்டு வாசலில் இரண்டு கல்குதிரைகள் உண்டு. அதில் ஒன்றில் அமர்ந்திருந்த சேபக்கருக்கு தன் உடன் பிறந்த றாத்தாவிடம் சமாதானத்திற்கு போய் வந்த மவுமுதாவின் சொற்கள் மனதை போட்டு அறுத்துக்கொண்டிருந்தன. மவுமுதா சேபக்கருக்கு ஒருவகையில் தங்கை முறை என்றாலும் இரண்டு வீட்டுக்கும் அவள் பொதுவானவள் என்பதால் சேபக்கர் இவ்விஷயத்தில் மவுமுதா தயவை நாடியிருந்ததில் பெரிய ஆச்சரியமில்லை தான். இடுப்பு எக்கில் இருந்த ஒரு வெளிநாட்டு சிகரெட்டை எடுத்து பற்ற வைத்தார். அவர் நினைத்திருந்தால் தான் செய்த அத்தனையும் சொல்லிக்காட்டி விடமுடியும் தான்.
‘. என்ன காரணம்னு அவ சொல்லல. அவளப் பத்தி தான் உனக்கு தெரியுமே காக்கா. ஆனாலும் இதுக்கு பொறவு இந்த சம்மந்தம் ஒத்துவரும்னு ஏன் மனசுக்கு தோணல… என்ன மன்னிச்சிக்க … ‘
சுலையம்மா உள்ளே அடுப்பாங்கரையில் ஏதோ சட்டியைப் போட்டு உருட்டிக்கொண்டிருந்தாள்.
சேபக்கர் எட்டு வயதிலேயே மளிகைக் கடைப் பட்டறை ஏறியவர் என்றாலும் உழைக்கும் கரங்கள். தொடாத வேலை இல்லை. மளிகைக் கடைப் பொட்டலங்கள், வெல்ல மூட்டை சிப்பம், அரிசி சிப்பம் எல்லாவற்றையும் தூக்கி சுமந்த உழைப்பாளியின் முதுகு அது. கிடைக்கும் ஊதியத்தை அப்படியே றாத்தாவிடம் கொண்டுபோய் சேர்த்து விடுவார். தாயில்லாத சேபக்கருக்கு றாத்தா மதீனா மற்றும் அவள் பெற்ற பிள்ளைகள் என்றால் பெரும் உலகம்.இதெல்லாம் அவரது திருமணத்திற்கு முன்பு இருந்த கதை.
மதீனாவுக்கு தம்பி பொண்டாட்டியாக சுலையம்மா வந்தாள். எல்லாம் நல்லபடியாக போய் கொண்டிருந்த நேரத்தில் இனி சேபக்கர் வரும்படி இரண்டான போது மதீனாவுக்கு கொஞ்சம் வருத்தம் என்றாலும் யார் கேட்டாலும் அதை வெளியில் காட்டாதபடி ’என் தம்பி நல்லா இருந்தா போதும் எனக்கு …’
ஆனால் சேபக்கர் ஒரு கண்ணில் நெய்யும் ஒரு கண்ணில் சுண்ணாம்பும் வைக்கும் ஆளில்லை. ஒரு பூனம் சேலை என்றாலும் ஒரே மாதிரியாக இரண்டு சேலைகளை எங்காவது புடித்துக்கொண்டு வந்து வெற்றி பெறக்கூடியவர் தான் என்றாலும் மதீனாவுக்கு சுலையம்மா எடுத்த சேலை பூ மீது கண். சுலையம்மாவும் எத்தனை முறை தன் நாத்துனாருக்காக விட்டுக்கொடுப்பாள்? இரண்டு பக்கம் முறுக்கினாலும் சேபக்கர் எப்போதும் தன் றாத்தா பக்கம் போய் நிற்பது வாடிக்கை.
எப்போது சபரிலிருந்து சேபக்கர் வந்தாலும் றாத்தா தான் வெளிநாடு பொட்டியை பிரிக்க வேண்டும் என கண்டிஷனாக சுலையம்மாவிடம் சொல்லிவிடுவார். றாத்தா மீது அவ்வளவு வாஞ்சை.
‘அவ்வளவு உகப்புனா நேரா ஏர்போட்லேந்து பொட்டியை றாத்தா வீட்டுக்கே இறக்கியிருக்க வேண்டியதுதானே…. ‘ இரவு படுக்கையில் சேபக்கர் மீது ஒரு துல்லிய தாக்குதலை அவ்வப்போது சுலையம்மா நிகழ்த்துவாள். அதையெல்லாம் பெரிதாக அலட்டாமல் போய் கல்குதிரையில் அமர்ந்துக்கொள்வார்.
தன் அன்புக்குரிய றாத்தா இராவைக்கு அழைத்து வீட்டு வாசலை பூட்டிக்கொண்டு உள்ளே வெளிநாட்டு பொட்டியை “பிஸ்மி.” சொல்லி பிரித்து தனக்கு வேண்டும் என்பதை எடுத்துக்கொள்வாள். அவளுக்கு பிரியமான லக்ஸ் சோப்பு, கோடாலி தைலம், மொட்டக்கொட்டை மருந்து, கடல் பாசி, பிறை மேத்துண்டு கையில் கிடைத்ததை அப்படியே சுருட்டிக்கொள்ளும் பழக்கம். குளத்தாங்கரையில் யாரும் வெளிநாட்டு சவக்காரம் தேய்த்து குளிக்கும் அவளைக் கேட்டால் கூட,
‘எந்தம்பி சம்பாதிச்சி நான் சவக்காரத்த தேய்ச்சி கரைக்கலனா. வேற யார் கரைப்பயாம்…’ குளத்துப்படிக்கட்டில் அந்த பக்கம் உட்கார்ந்து துணி துவைக்கும் சுலையம்மா காதில் விழும் படி சொல்வாள்.
அப்படியொரு கொள்ளை. எல்லாம் றாத்தா மீது சேபக்கரின் பாசம். அவருக்கு இருக்கலாம் அதற்காக சுலையம்மாவுக்கு இருக்குமா ? அவளுக்கு வாங்கி வந்த சிங்கப்பூர் கம்பி சேலையில் ஒன்னை மதீனா லவட்டிக்கொண்டு போக சபர் வந்த நைட்டே சுலையம்மா சேபக்கரை கல்குதிரையில் உட்கார வைத்து விடுவாள்.
ஒரு சபராளிக்கு பல வருடங்கள் கழித்து ஊர் வந்த முதல்நாளே “கபி கபி” இல்லையென்றால் எவ்வளவு துயர துன்பவியல் ?
எல்லாவற்றையும் தாங்கிக்கொண்டார் எதற்காக ? எல்லாம் தன் ஆசை மகள் பஞ்சும்மாவுக்காக. இனி அடுத்த சபர் எப்படி இருக்கும் தெரியாது, இனி போனால் ரிட்டன் எத்தனை வருடங்கள் ஆகும் அதுவும் தெரியாது, வாசலில் இருக்கும் சவுக்கடி தெரு கல்குதிரைகளுக்கு தெரியும். அதற்கு தோதுவாக தனது அருமை மகள் பஞ்சும்மா வாப்பாவுக்கு தேயிலை ஊற்றிக்கொண்டு வந்தாள்.
மவுமுதா வந்து சொல்லி விட்டு போன பின்பு சேபக்கர் யாரிடமும் பேசாமல் வீட்டுக்கு வெளியே இருந்த கல்குதிரையில் அமர்ந்திருந்தார். வெளிநாட்டு சபரிலிருந்து அவர் திரும்பிய நாற்பது நாட்களில் இன்னும் ஒரு வாரம் தான் விடுமுறை பாக்கியிருந்தது. சவுதியா ஏர்லைன் றிட்டன் டிக்கட் கன்பார்ம் அடிக்க வேண்டும் என ட்ராவல்ஸ் நிஜாம் நேத்து தான் அவரின் பாஸ்போர்ட்டை வாங்கிப்போயிருந்தான். அதற்குள் சின்னவனுக்கு சுன்னத் கலியாணம் செஞ்சி பாத்துவிட்டு விமான ஏறிவிடவேண்டும். ஆசை மகனுக்கு சீதேவி வாப்பா சுன்னத் செய்து கட்டு பிரித்து குளிப்பதற்கும் வாப்பா கிளம்புவதற்கும் ஏழு நாட்கள் போதுமானது என அவருக்குள் ஒரு மனக்கணக்கு. இருக்கும் கொஞ்ச நாளுக்குள் சின்னவனுக்கு தடபுடலாக சுன்னத் கல்யாணம் செய்து பாத்துவிட வேண்டும், மாப்பிள்ளை ஊர்வலத்திற்கு ஆலங்குடி ராவுத்தரின் நாட்டிய குதிரை, இன்னிசை பாடல்களுக்கு அதிராம்பட்டினம் தீன் பைத்து சபாவுக்கு அட்வான்ஸ் எல்லாம் கொடுத்தாகி விட்டது.
தொண்டியிலிருந்து கலியாண தொப்பி, சபாரி சூட், சுன்னத்துக்கு பொறவு மகன் உடுத்த தங்க ஜரிகை போட்ட கைலி, அக்காவுக்கும் சுலையம்மாவுக்கும் ஒரே கலரில் புடவை -பஞ்சும்மாவுக்கு பாவடை தாவணி என ஏகத் தடபுடலான ஏற்பாடுகள் எல்லாம் ரெடி. இதற்கு நடுவில் றாத்தா ஏன் கோவித்துக்கொண்டாள் என ஒரு காரணமும் சேபக்கருக்கு புடிப்படவில்லை.
[2]
‘இந்தா பஞ்சும்மா…’ எனக் கல்குதிரையிலிருந்து மஞ்சப்பையை நீட்டினார். உள்ளே றஸ்தாளி சீப்பு வாழைப்பழங்கள்.
‘நீயும் தம்பியும் சாப்பிடுங்க…உள்ள போங்க…’ என்று மகளை அனுப்பிவைத்து சேபக்கர் கல்குதிரையில் யோசனையில் ஆழ்ந்தார்.
பஞ்சும்மாவுக்கு வயது பதினைந்து என்றாலும் பார்க்க திருமணம் முடிக்க தோதுவான பதுமை அவள். வில் வளைவு புருவங்களும் கிழங்கு போன்ற தேகமும் சுருள் சுருளான முடியையும் யாரும் அவள் அதிகாலையில் நீராடும் பளியாக்குளத்தில் பார்த்தால் சகபாடி பெண்களுக்கே ஏற்படும் பொறாமை நூறு ஆயத்து குர்சி ஓதினாலும் கண்ணேறு இறங்காத அப்படியொரு அழகுப் பதுமை.
வாப்பா அவளது பெருமை மிகு பளியாக்குள் நீராடலின் செம்மேனிக்கு கட்டி கட்டியாக றாணி சோப்பு அனுப்பிவைத்தார்-அனுப்புவார் -இனி யார் வந்தாலும் அனுப்பிவைப்பார். முக்காலத்தில் எக்காலத்திலும் பஞ்சும்மாவுக்கு பிடித்த எது இருக்கோ இல்லையோ வாப்பா வெளிநாட்டு பொட்டியில் அவளுக்காக றாணி சவக்கார கட்டிகள் இருக்கும். அவள் குளித்து விட்டு திரும்பினால் சவுக்கடி தெருவில் அப்படியொரு மணம், மேனிக்கொரு றாணி மணம். தானொரு றாணியை போல் அவள் உணர்வதெல்லாம் அந்த றாணி சவக்கார கட்டியில் மயங்கியபடி தான். அப்படி அவளுக்கே அவளுக்காக வாங்கி வந்த சோப்புகளில் இரண்டு டஜனை மதீனா மாமி பொட்டி பிரிக்கும் படலத்தில் லவட்டியதில் சுலையம்மா-பஞ்சும்மாவுக்கு ஏக வேதனை. வழமையாக உம்மாவும் மகளுமாக சேபக்கர் மீது தாக்குதல் நிகழ்ந்தினர். அசறுவாரா மனுஷன் ? சதாம் உசேன் – குவைத் வளைகுடா போரிலேயே தப்பிப் பிழைத்தவர் ? சவுக்கடி தெரு போருக்கா அசறுவது ?
‘நீலாம் ஒரு ஆம்பிளையா…’ சுலையம்மாவின் ட்ரோன் தாக்குதல் தான். எப்போதும் போல சத்தமில்லாமல் வெளியில் போய் கல்குதிரையில் அமர்ந்துக்கொண்டார். அடுத்த நாள் பட்டுக்கோட்டை போய் ஏதோ ஒரு வெளிநாட்டு சாமான்கள் விற்கும் கடையில் பஞ்சும்மாவுக்கு றாணி சவக்காரம் வாங்கி வந்து வீட்டுக்குழி அலமாரியில் அடுக்கி வைத்தார்.
பஞ்சும்மா எட்டாவது படிக்க பள்ளிகூடம் போகும் வழியில் அருகில் இருந்த ஆலமரத்தில் வயிற்றை பிடித்துக்கொண்டு அமர்ந்த செய்தி வளைகுடாவில் இருந்த சேபக்கருக்கு என்றாலும் இனி மகளுக்கு நாலு நகை தட்டு முட்டு ஆபரணங்களை ரியாத் பத்தா மார்க்கெட்டில் புடித்தால் தான் ஏதாவது பிடிமானத்தோடு மதீனா றாத்தாவிடம் பேசமுடியும். வாப்பா உடன் பிறந்தவள் தான் என்றாலும் ஊர் நடைமுறை என ஒண்ணு இருக்கிறது அல்லவா. அது போக அவளது ஒரே மகன் முஜிபை தன் மகளுக்கு புடிக்க வேண்டுமென்றால் சும்மாவா ? மார்டின் கம்சு சட்டை, சார்லி செண்ட், குறோக்கோடைல் ஜட்டி என மருமகனை அசத்தும் நோக்கில் வெளிநாட்டு சாமான்களை இம்முறை சேபக்கர் இறக்கியிருந்தார். போதாக்குறைக்கு முஜிபு கொறடாசேரியில் வைத்த புது மளிகைக் கடை ஏக ஓட்டம். வியாபாரம் சூடு பிடிக்க முஜிபுக்கும் ஊருக்குள் ஏக கிராக்கி.
மதீனா றாத்தா சேபக்கர் மனசுக்குள் மிதக்கும் பஞ்சும்மா – முஜிபு வள்ளத்தை ஒரு ஆட்டு ஆட்டிப்பார்த்தாள்.
‘சவக்கரு..அதை போடுறோம் இதை போடுறோம்னு வீசை வீடு பேயாடி வீட்டு பொண்ணு எல்லாம் வந்தப்ப எல்லாம் என் தம்பி வீட்ல தான் முடிப்பேன் கட் அண்ட் றேட்டா சொல்லிட்டேன்…’ என மதீனா சொன்னது அவருக்கு உள்ளூர மகிழ்ச்சி தான் என்றாலும் ஊர் நடைமுறை உறுத்திக்கொண்டே இருந்தது. செய்முறையை சரியா செஞ்சிடனுமா இல்லையா ?
பஞ்சும்மாவுக்கும் முஜிபு மச்சான் மீது ஒரு மாதிரியான விருப்பம் தான். அவன் கொஞ்சம் கருப்பு என்றாலும் பாக்க திருமூர்த்தி படத்தில் வார விஜயகாந்த் மாதிரி நெட்டுவாங்கு எடுத்து சீவி இருப்பான் என நீராடலுக்கு போகும் போது பஞ்சும்மாவிடம் தோழி ஒருத்தி கொளுத்தி போட – ஊரில் எங்கு செங்குருவி செங்குருவி பாடல் ஓடினாலும் பஞ்சும்மா அப்படியே ஸ்தம்பித்து விடுவாள். அவளுக்கும் றாணி சோப்பு நுரையளவு மச்சான் மீது ஒரு மயக்கம் தான்.
எல்லாம் ஒரு மய்யதுணாண்டாவ அப்பா மாத வளர்பிறையில் முஜிபுக்கு பஞ்சும்மாவை “இதான் பொண்ணு இதான் மாப்பிள்ளை.’ என் பேசிமுடித்துவிடும் திட்டத்தோடு ! இருவருக்கும் பொதுவாக சின்ன வாப்பா முறையில் வரும் யாசியப்பாவை வாப்பா மதீனா வீட்டுக்கு அனுப்பிவைத்தார் சேவக்கர். எல்லாம் வெற்றி தான்.
பொண்ணு மாப்பிள்ளை முடிவானதும் முதல் வேலையாக தன் றாத்தா மிகவும் உகக்கும் பண்டம் கருப்பட்டி தொதல் சாமான் பதினேழு கிலோ அனுப்பி வைத்தார் சேபக்கர். ஒற்றைப்படையில் எதையும் அனுப்பிவைத்தால் பறக்கத்தானது என்பது சவுக்கடி தெரு வாடிக்கை தான். சும்மா தொதல் சாமான் என்னாத்துக்கு ? றாத்தா நினைத்தாலும் நினைத்துவிடுவாள் என இணைப்பு பண்டமாக நூற்றி பதினோரு சீப்பணியாரமும் – சீனி பதினோறு கிலோவும் வாங்கி சந்தோசஷமாக சீர்வரிசையை யாசியப்பா தலைமையில் அனுப்பிவைத்தார். எல்லாம் இனிப்பா அமையனும் மய்யதுணாண்டவ அப்பா !! சீர் ஓலைக்குட்டானை வேண்டியபடியே பக்கத்து தெரு மதீனா றாத்தா வீட்டுக்கு புறப்பட்டது.
பதிலுக்கு மதீனாகுடும்பத்தோடு அதிகாரபூர்வ சம்மந்தி விஜயமாக சேபக்கர் வீட்டுக்கு வந்த போது றாத்தாவை வெறும் கையாக அனுப்பக்கூடதென மணாக்குடி பேக்கரியில் கூடை கேக் வாங்கி அனுப்பிவைத்தார். இப்பவும் டிவியில் வரும் ஜுவல்லரி கடை ஓனர் போல் சேவக்கர் சிரித்த முகத்துடன் அக்காவை வழியனுப்பி வைத்தார் தான்.
‘மவுமுதா என்னவாம் சொன்னவா….’ சுலையம்மா அடுப்பங்கரையிலிருந்து கல்குதிரைக்கு வந்திருந்தாள்.
‘…ம்ம்ம்…. பேசிப்பாப்பம்டா….’ என்று அந்தப் பக்கம் திரும்பிக்கொண்டார்.
அவருக்கு அவ்வளவாக நம்பிக்கை இல்லை. றாத்தா கதை தெரியும் தானே. மறுபக்கம் இவள் என்ன சொல்லபோகிறாள் என ஒரு பயம் வேறு சேவக்கருக்கு. ஒரு மாதிரியாக கல்குதிரையைக் கெட்டியாக புடித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தார். அவரைப் பார்க்க சுலையம்மாவுக்கு ஒரு மாதிரியாக, பாவமாக இருந்தது. எப்படியும் அடுத்த சபரில் இருவருக்கும் கல்யாணம் முடிச்சிபுடலாம் என எண்ணியிருந்த நேரத்தில் இப்படியொரு மனக்கசப்பு.
‘சிலயம்மா. நேரா நானே போயி றாத்தாட்ட பேசியாந்துறேன்.’ செருப்பை மாட்டிக்கொண்டு கிளம்பினார்,
’எங்க போறீங்க.இங்கினே இருங்க.’ போனவரை பிடிச்சி உட்கார வைத்துவிட்டார். அவளுக்குப் பெருத்த யோசனை என்றாலும் தன் நாத்துனா எப்படியெல்லாம் நடந்துப்பா என எல்லாமும் சுலையம்மா கண் முன்னே வந்து போனது. எல்லாவற்றுக்கும் தன் நாத்துனாவிடம் ஒரு விலை உண்டு அல்லவா ? அதனை சேவக்கரை விட அவள் நன்கு அறிந்தவள்.
‘என்ன நடந்தாயெண்டு ஒன்னும் வெளங்கல. எப்படியும் நாளை பொன்னலாவூருக்கு உங்க றாத்தவையும் அழச்ச தானே. வந்தாலெண்டா பாப்பம். இல்லைனா நாம பேசலாம்…. இப்ப போயி நிம்மதியா போய் தூங்குங்க…‘
‘இது மத்த விஷயம் போலல்ல. பொண்ணு விஷயம் கொஞ்சம் பொறுப்பமே..’ என்ற சுலையம்மா யோசனையும் சேபக்கருக்கு சரியாதான்பட்டது.
வாசலுக்கு மறுபக்கம் இருந்த இன்னொறு குதிரையில் சுன்னத் கல்யாண மாப்பிள்ளை சின்னவன் குதித்து விளையாடிக்கொண்டிருந்தான்
‘பாத்து வெளயாடு வாப்பா. நல்ல நாள் பெரிய நாள் அதுவுமா படாத எடத்துல படப்போகுது.’ சேபக்கர் வாஞ்சையோடு தன் மகனைப் பார்த்துக்கொண்டிருந்தார்.
’ எதுவா இருந்தாலும் காலையிலே தெரியும் …. நீ காலையிலே பொன்னலாவூருக்கு போக வேண்டிய ஏற்பாட செய்…’ சேவக்கர் குதிரையிலிருந்து குதித்தார். இருவரும் என்னப் பேசிக்கொள்கிறார்கள் எனத் தூணுக்கு பின்னால் பஞ்சும்மா ஒட்டுகேட்டுக்கொண்டிருந்தாள்.
‘உள்ள போயி படும்மா. எல்லாம் நல்லபடியா முடியும் ….’ தன் மகளை அப்படி பார்க்க சேவக்கருக்கு முடியவில்லை.
பொன்னலாவூர் கலந்தரப்பா தர்கா நேர்ச்சைக்கு சந்தையில் வாங்கிய சேவல் வீட்டு முற்றத்தில் விடிய விடிய கூவிக்கொண்டிருந்தது. நல்ல சகுணம் தான் மலக்குமாருவ வீட்டுக்கு வந்து போறாங்க போல என சேவக்கர் நினைத்துக்கொண்டார். சேவல் வாங்கும் போது மதீனா வீட்டுக்கு கொடுத்து விட சேர்த்து வாங்கிய இரண்டு வெடைக் கோழி குஞ்சு கத்திக்கொண்டிருந்தது.
மதீனா கோவித்துக்கொண்டிருப்பதாக அரசல் புரசலாக அவர் காதுக்கு தாக்கல் வந்த போதே இது சின்ன பிரச்சனை தான் சரியாகி விடும் என நினைத்திருந்தார். அது இந்தளவுக்கு பெரிய பூதகரமாக வெடிக்கும் என நினைத்துக்கூட பார்த்ததில்லை. உண்மையில் றாத்தா ஏன் தன்னோடு வருத்தமாக இருக்கிறாள் ? தினசரி ஒரு முறையாவது வந்து பார்த்துவிடுபவர் ஏன் சீர் போன அடுத்த நாளிலிருந்து வரவே இல்லை ? அவருக்கு காரணம் புடிப்படவே இல்லை.
எல்லாம் விடிந்தால் சரியாகி விடும். கண்ணேறு தான் !!! சேபக்கர் தடபுடலாக பொண்ணு மாப்பிள்ளை ஏற்பாடு செஞ்சதில் மக்களுக்கு பொறாமை தான். எல்லா கஷ்ட துஷ்டங்களும் பொன்னாலாவூர் போவதில் அடியோடு போய்விடட்டும் யா அல்லாஹ் !! கையை வான் நோக்கி விரித்தபடி உறங்குவதற்காக முற்றத்தில் கயித்து கட்டிலை விரித்தார் சேபக்கர்.
[3]
சேவக்கர் வீட்டிலிருந்து மதீனா றாத்தா வீட்டுக்கு ஓலைக்குட்டானில் ஒன்று யாசீயப்பா வீட்டில் இருந்தது.
‘… இப்படி 111 சீப்பணியாம்ல 55 சுருள யாருக்கு தெரியாம இங்கன எடுத்து வந்துட்டீங்களே … பொண்ணு பேசினா மாப்ள வீட்டுக்கு கொடுத்து வுடுற ஊர் முறை 111 தெரியும் தானே. சேவக்கர் சரியா சீர் அனுப்பலயெண்டு அங்க மதீனா வீட்ல கடும் வருத்தமா அரச புரசல தாக்கல் அடிபடுது …நீங்க என்ன சின்ன வாப்பா தானே. சம்மந்தம் நிண்டு போக போவயாம்…’
’ சின்ன வாப்பா. பொல்லாத சின்ன வாப்பா. சின்ன வாப்பானு அவன் நாலு சுருள் தந்தா என்னவாம் ? எல்லாத்தையும் அவண்ட றாத்தாவுக்கு அனுப்புறான் ? மசிறாண்டி … எனக்கு வாயில்ல.’
’அதுக்கு இப்படியா ? இது ஒங்கட குடும்பத்து எரப்புன்னி புத்தி.’
’.அப்படியொரு பணியாம்டீ. சும்மா மொறு மொறுனு சிவப்பும் நெய் தேங்கா மணமும். யாருக்கு தான் கொடுக்க மனசு வரும்டீ?. சேவக்கரு வீட்டு சீப்பணியாம நான் திங்காம வேற யார் திங்கயாம். நான் அவண்ட சின்னவாப்பா எனக்கு உருத்து இருக்கு.’
சுருளை உடைத்த யாசியப்பா ‘ இந்தா திண்டுப்பாரு …’ செவத்தம்மா வாயில் ஒரு துண்டை போட்டுவிட்டார்.
‘ம்ம்ம்ம்ம்ம்…’ செவத்தம்மா உச்சிகொட்டி நா எச்சில் நீர் வழிந்தது.
***
சேவக்கர் தனக்கு தானே எப்படியும் காலையில் றாத்தா வந்து விடுவார் பேசிக்கொண்டது அருகில் படுத்துகிடந்த சுலையம்மாவுக்கு தன்னட சபுராளி மாப்பிள்ளைய அப்படி பாக்க மனசில்லை. இரவு மட்டும் எப்படியும் ஏழு முறையாவது சேவக்கர் எழுந்திருத்திருப்பார். விடிந்தால் எல்லாம் சரியாகிவிடவேண்டும் என நொந்துக்கொண்டார். சுலையம்மாவுக்கு இதை எப்படியவது தட்டி நேராக்கிடனும் இல்லனா இந்தாளு நெலமை கஷ்டம் !! என ஏதோ உதிப்பு தட்ட நள்ளிரவில் எழுந்து வெளிநாட்டு சாமான்கள் இருக்கும் வீட்டுக்குழிக்குள் போனாள். அலமாரியை திறந்தது குப்பென “றாணி சவக்கார வாசனை.” எல்லாம் அருமை மகள் பஞ்சும்மாவுக்கு வாப்பா வாங்கி வைத்தது. ஒரு பைக்குள் இரண்டு டஜனை உள்ளே தள்ளினாள்.
அடுத்தநாள் காலை சேவக்கர் சுபுஹ் தொழுது விட்டு விடு திரும்பும் போது வீட்டு வாசலில் பொன்னலாவூர் யாத்திரைக்கு செல்ல அம்பாசிடர் கார் நின்றது. சேவல், கம்பு பை, கந்திரி சோறு பேக் டிக்கியில் ஏற்றப்பட்டு கொண்டிருந்தது. முன் இருக்கையில் சுன்னத் கல்யாண மாப்பிள்ளை சின்னவன் தான் ஜம்மென உக்கார்ந்திருந்தான்.
‘ வாப்பாய்…’
‘ ஓ அய்யா… ‘
‘அங்க பாரு யாரெண்டு. மதீனா மாமி வந்திருக்கா….’
கல்குதிரையில் மதீனா றாத்தா உட்கார்ந்திருந்தாள். அவளுக்கு பின்னால் வெள்ளை துப்பட்டியோடு சுலையம்மா. அவரால் நம்பவே முடியல..அதற்கு பின்னால் வெட்கமும் சிரிப்பும் கலந்தபடி பஞ்சும்மா.
மூன்று பெண்களும் ஒத்துமையா நிப்பதை பாத்து சேவக்கர் அவரே அறியாம சொன்னார் “ எல்லாம் பொன்னலாவூர் கலந்தரப்பா கராமத்து …. ‘ – மூவர் அருகே போய் நின்றார். குப்பென றாணி சோப்பு வாசம்.
***
முகம்மது றியாஸ் – புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் சொந்த ஊர். சிங்கப்பூரில் தகவல் தொழில்நுட்ப வல்லுனராகப் பணியாற்றுகிறார். அத்தர், சிக்ரிமார்க்கம் ஆகிய இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் வெளியாகியிருக்கின்றன. இவருடைய சிறுகதைகளில் ஒன்றான முளரி மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்டு அவரின் நேர்காணலுடன் மாத்ருபூமி இதழில் வெளியானது குறிப்பிடத்தக்கது. மின்னஞ்சல்: ping.riyas@gmail.com


