Wednesday, February 18, 2026
Homesliderகலை | காதல் | அறிவு | விடுதலை | அழகியல்

கலை | காதல் | அறிவு | விடுதலை | அழகியல்

ரூபன் சிவராஜா

(ஒடுக்கப்பட்டோருக்கான அரங்கு | தொடர் 14)

தார்த்தத்தை அதன் ஒற்றைக் கண்ணோட்டத்திலிருந்து மீள்தேடலுக்கு ஊடாக மீள்கண்டடைகின்றது கலை. தனித்துவமான கலைஞன் உண்மைகளுடனான தனது உறவின் மூலமும் தனக்கே உரித்தான பார்வை மற்றும் உணர்வுகள் மூலமும் புத்தாக்கப் படைப்புகளை உருவாக்கம் செய்கின்றான். 

ஒடுக்கப்பட்டவர்களுக்கான அழகியல் எனும் அம்சத்தை – ஒடுக்கப்பட்டவர்களுக்கான அரங்கிலிருந்து பிரிக்கமுடியாத அங்கமாகக் கருதுகின்றார் Boal. மிக இன்றியமையாத அம்சமாகவும் முன்வைக்கின்றார். அந்த அழகியல் ஒரு புதிய புரிதலை உருவாக்குகின்றது, குறித்த பேசுபொருளை உள்ளுணரச் செய்ய உதவுகிறது. அது மூளையின் நுண்ணறிவு மூலமாக மட்டுமல்லாமல், புலன்களின் நுண்ணுணர்தல் மூலமாகவும் சமூக யதார்த்தத்தை புரிந்து கொள்ள உதவுகின்றது.

ஒடுக்கப்பட்டவர்களின் அழகியல் ஒற்றைப் பரிமாணமுடையது அல்ல. அது முழுமையான அறிவுச் செயற்பாட்டினைத் தூண்டுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளதோடு அதற்கான தார்மீக நெறிமுறை சார் முடிவுகளையும் கலைஞனுக்கு முன்னால் வைக்கிறது. இது உணர்வுபூர்வமானதும் நுண்ணறிவுசார் தூண்டுதல்களையும் உருவாக்குகின்றது. வார்த்தையின் குறியீட்டு மொழியையும் புலன்களின் சமிக்ஞை மொழியையும் இணைக்கிறது.

‘ஒடுக்கப்பட்டோருக்கான அரங்கு’ தொடரின் இந்தப் பகுதி, Boalஇன் அழகியற் கோட்பாடு, சொற்கள், உணர்வுகள், வெளிப்பாட்டு வடிவங்கள், பிரதிபலிப்புகள் முதல் அழகியல் செயல்முறையிலிருந்து கலைத்துவப் பொருளை அடைதல் வரையான பேசுபொருட்களை மேற்கோள்களுடன் முன்வைக்கின்றது. கலை, மொழி, உணர்வுகள் மற்றும் அறிவு ஆகியவற்றுக்கு இடையேயான இணைப்பினை விவரிக்கின்றது. கலையும் காதலும், கலையும் அறிவும், அழகியலும் நரம்பணுக்களும், மாறுபொருளுணர்த்தலாக அல்லது மொழிபெயர்ப்பாக உருவகம் போன்ற துணைத் தலைப்புளைக் கொண்டிருக்கின்றது. கலையின் அழகியல் எவ்வாறு விடுதலைக்கானதும் சமூக மாற்றத்திற்கானதும் கருவியாக இருக்க முடியும் என்பதை விளக்குகின்றது. கோட்பாடும் நடைமுறையும் சார்ந்த மேற்கோள்களைக் கொண்டு விவரிக்கின்றது.

பொருள் மாறும் சொற்கள் 

மனிதர்களிடையே பரிமாற்றம் மற்றும் உரையாடற் செயல்முறை சாத்தியமாக இருப்பதற்குச் சொற்கள் அடிநாதமாக உள்ளன. இன்னும் குறிப்பாகப் பெயர்கள் (பெயர்ச்சொற்கள்) இன்றியமையாதவை. ஆனால் சொற்கள் பல்பொருட் குறிப்பான்களுமாகும் (Polysemic signifiers). அதாவது சொற்கள் (தகவல்கள், செய்திகள்) ஒவ்வொரு தடவையும் புதிய புதிய பெறுநர்களால் பொருளுணரப்படும்போது, பெரும்பகுதி அர்த்தங்களை இழக்கின்றன. ஒவ்வொரு பெறுநரிடமும் அவை புதிய அர்த்தங்களோடு சென்றுசேர்கின்றன.

அனுப்புநரால் உச்சரிக்கப்படும் போது, அந்தச் சொற்கள் குறித்த அந்த அனுப்புநரின் அனுபவங்கள், நினைவுகள், எண்ணங்கள், விருப்பங்கள் மற்றும் கற்பனை ஆகியவற்றின் அடையாளங்கள் நிறைந்தவையாகத் தோற்றம்பெறுகின்றன. இன்னொருவருக்குக் (பெறுநருக்கு) கடத்தப்படும் போது, அந்தக் குறிப்பான்கள் (Signifiers) தமது அடையாளங்களை மாற்றுகின்றன. கடத்தப்பட்ட சொற்களுக்குள் அதனைப் பெறுபவரின் அனுபவங்கள் உள்ளேற்றப்படுகின்றன.

மொழி என்பது கடத்துகையின் வழிமுறை (கருவி). பேருந்துகள் மற்றும் பாரவுந்துகளைப் போல வார்த்தைகளும் ஒரு போக்குவரத்து சாதனம். பேருந்துகள் மக்களை ஏற்றிச் செல்வது போலவும் பாரவுந்துகள் பொருட்களை ஏற்றிச் செல்வது போலவும், சொற்கள் நம் எண்ணங்கள், ஆசைகள் மற்றும் உணர்ச்சிகளைக் கடத்துகின்றன. சொற்றொடரை எழுதும்போது, வாக்கிய அமைப்புத் தொடரியல் மூலமாக வெளிப்படுத்தும் அர்த்தத்தினைப் பிரதிபலிக்கமுடியும். சொற்றொடரைப் பேசும்போது, குரல்மொழி மூலம் – அதாவது தொனி, உச்சரிப்பு, ஒலிப்பு, ஒலியளவு, சொற்களுக்கிடயிலான இடைநிறுத்தம் ஆகியவை மூலம் அகராதி வரையறுக்கும் அர்த்தத்திற்கு நேர்மாறான பொருளுணத்தும் வகையிலும் நாம் சொற்களைப் பிரயோகிக்க முடியும்.

சொற்கள் அதிகம் துல்லியமானதும் குறைந்தளவு (Abstract) அருவத்தன்மையுடைய பொருளைக் கொடுப்பதற்கு அவற்றுக்கு ஆடையணிவிப்பது இன்றியமையாததாகும். கிரேக்க அவல நாடகங்களில் முகமூடி, மேலங்கி போல – கோவில்களில் வழிபாட்டு முறைகள் போல – இராணுவத்தில் படிமுறை ஒழுக்கம் போல – திரையில் ஒளியமைப்பு, கேமராக் கோணம், காட்சிச் சட்டகங்கள் போல மெருகூட்டல் அவசியப்படுகின்றது. எமது நாளாந்தம் உடைகள், பண்பாட்டு அடையாளங்கள், பேச்சின் தாளகதிக்கேற்ற ஒலிப்புமுறை, உடலமைப்பு ஆகிய ஆடைகளை உடுத்திக்கொள்கின்றன.

மனிதர்களாகிய நாம் பகுத்தறிவைத் தாண்டி உணர்வுபூர்வமான தொடர்பாடல் வெளிகளைத் தேடவேண்டும். அதாவது பகுத்தறிவின் அடிப்படையில் மட்டுமல்லாது, உணர்வுசார், அழகியல்சார் செயற்பாடுகளுக்குரிய தொடர்பாடல் வடிவங்களையும் தேடவேண்டும். பகுத்தறிவிற்கு அப்பாலான இவ்வகை அழகியல் மீறல் நாடகத்திற்கும் அனைத்துக் கலைகளுக்கும் அடிப்படையானதாகும். நாம் பகுத்தறிவு, சிந்தனை, உணர்வு, வடிவம் ஆகியவற்றை ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்கமுடியாது. அவை ஒன்றோடொன்று முரண்பட்டாலும், குறுக்குவெட்டாகச் சந்தித்துக் கொண்டாலும் அவை நிலைகொள் இணைகள்.

சொற்கள் புரியும் தீமை (The evil that words do)

சொற்கள் வலிமையானவை. அவற்றை நாம் உரையாடும் போதோ அல்லது செவிமடுக்கும் போதோ, சில தருணங்களில் எமது சொந்த உணர்தலில் அவை மேலாதிக்கம் செலுத்திவிடக்கூடும். அங்கு சொற்களின் தலையீடு இல்லாமல் நாம் உலகின் சமிக்ஞைகளை மேலும் துல்லியமாகப் புரிந்துகொள்ளும் வாய்ப்புள்ளது. சொற்களைப் புரிந்துகொள்ளுகின்ற எமது செயன்முறை தாமதமானது, ஏனெனில் சொற்களின் அர்த்தத்தினை உடனடியாகப் புரிந்துகொள்ளக்கூடிய உணர்வுகளுக்கு மாறாக நாம் நமது மூளைக்குள் மொழிபெயர்க்க (Decode)வேண்டும். இதுவே குறியீட்டு மொழிக்கும் குறியீட்டுக்கும் சமிக்ஞைக்கும் இடையிலான வேறுபாடாகும். இதனைப் பிரெஞ்சு மொழியில் ‘சிக்னலடிக்’ (Signaletique) என்று கூறுகின்றனர். நாம் ஒரு வார்த்தையைக் கேட்டால், அது எதுவாக இருந்தாலும், அதன் அர்த்தத்தையும் அதன் நோக்கத்தையும் புரிந்துகொள்ள எமக்குச் சிறிது நேரம் தேவை. ஆனால் நாம் எமது விரலை காப்பிடப்படாத மின்சாரக் கம்பியில் வைத்தால் ஏற்படும் அதிர்ச்சிக்கு சிறப்பு மொழிபெயர்ப்பு எதுவும் தேவையில்லை. நாம் கத்துகிறோம் அல்லது அலறுகிறோம்.

அழகியல் செயல்முறையிலிருந்து கலைத்துவப் பொருளை அடைதல் (From Aesthetic process to artistic product)

கலைஞன் என்பவன் ஒப்புமைகள் (Analogies) மற்றும் நிரப்பிகள் (Complementarities) மூலம் ஒரே மாதிரியாக இல்லாதவற்றையும் ஒன்றிணைக்கும் தொகுப்புகளைக் (Sets) காணும் திறன் கொண்டவன். கலைஞர்கள் வழக்கமான ஒன்றிணைந்த பார்வையில் (மொழி, குறியீடுகள் வழியாக) யதார்த்தத்தைப் புரிந்து கொள்கின்ற எல்லைக்குள் தங்காமல், தனது கலைச்செயல் மற்றும் தனது படைப்பாக்கத்தின் மூலம் கலைஞன் அதைக்கடந்து செல்கிறான். அங்கு சொற்கள் நிரப்பிகளைப் பிரதிபலிக்கும் குறியீடுகளாக உள்ளன. 

கலைஞர்கள் தமது அழகியல் வழிமுறையில் விடயங்களை முன்னெடுப்பதிலும் (ஆய்வு, செயல், படைப்பாக்கப் பரிட்சார்த்த முன்னெடுப்புகள், தோல்வி) அவர்களின் கலை உருவாக்கத்திலும்; (முடிக்கப்பட்ட கலைப் படைப்பு) ‘கவசங்கள் பூசப்பட்ட யதார்த்தத்தின்’ உணர்தல்கள் – தனித்துவமான அம்சங்களில் யதார்த்தபூர்வமாகவும் – வெளிப்பாட்டுத்திறனுடனும் முன்னேறுகின்றனர். ஒரு கலைஞன் அவற்றைப் பெயரிடும் மொழியை எளிமைப்படுத்துவதன் மூலம் மறைந்திருக்கும் ஒற்றுமைகளை உணர்ந்து வெளிப்படுத்துகிறான்.

கலைஞன் தன் முழுமையைத் தேடுவது போலவோ, அல்லது தன்னைத் தானே தேடுவது போலவோ, தன் அடையாளத்தைத் தேடுவது போலவோ, உயிரினத்தின் ஒற்றுமையை ஊடுருவிச் செல்கிறான். இந்த ஆற்றல்மிக்க உணர்வு ஒருபோதும் நிறுத்தப்படுவதில்லை, மாறாக தீவிரமாக அதிகரிக்கிறது அல்லது குறைகிறது, கலைஞரைப் பொறுத்தவரை எப்போதும் இவ்வுணர்வு மிதந்துகொண்டிருக்கும்.

சில மனிதர்கள் மட்டுமே கலைஞர்களாக அடையாளம் பெறுகின்றனர். ஆனால் உண்மையில் ஒவ்வொரு மனிதரும் அடிப்படையில் ஒரு கலைஞன்தான். கலையை உருவாக்குவதன் மூலமோ அல்லது காதல் செய்வதன் மூலமோ ஏதோவொரு திறனை ஏதோவொரு அளவில் ஒவ்வொரு மனிதரும் கொண்டிருக்கின்றனர். உருவாக்கம், அதாவது அழகியல் செயல்முறை மற்றும் ஏற்கனவே முடிக்கப்பட்ட பொருள் அல்லது கலைப் படைப்பு ஆகியவற்றுக்கு இடையே Boal முக்கியமான ஒரு வேறுபாட்டினைக் கவனிக்கக் கோருகின்றார். செயல்முறை மற்றும் உருவாக்கப்பட்ட பொருள் (படைப்பு) இரண்டும் சார்ந்து சிந்திக்கும் போது படைப்பினை அடைவதற்குரிய செயல்முறை அவசியம். அழகியல் செயல்முறையானது ஒரு கலைப் படைப்பினை உருவாக்குவதை எல்லா நேரமும் பெறுபேறாகக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை என்றாலும் – அது குறித்த பெறுபேற்றிற்கு இட்டுச்செல்லாமற்கூட விடலாம். இருப்பினும், அதுவே எமது குறிக்கோளாக இருந்துகொண்டிருக்கின்றது என்கிறார் Boal.

ஒடுக்கப்பட்டவர்களுக்கான அரங்கின் அழகியலைப் பொறுத்தவரை, மிக முக்கியமான விஷயம் அழகியல் செயல்முறையாகும் (Aesthetic process). பயிற்சிகளின் போது அச்செயல்முறை நபரின் உணர்தலை(புரிதலை) வளர்க்கிறது. இருப்பினும் அது ஒரு கலைப்பொருளாக (முடிக்கப்பட்ட கலைப்படைப்பாக) வலிமைமிக்க சமூகத்திற்கான சக்தியாக உருவாகுவது விரும்பத்தக்கதாகும். கலைப் படைப்பாகப் பரிமாணமடைகின்ற அந்த இலக்கு ஊக்கமளிக்கக்கூடியது. இது கனவுக்கான தேடலைப் போல, சொர்க்கத்திற்கான தேடலைப் போல செயல்படுகிறது. அச் செயல்முறை இவ்வாறாக உச்சக்கட்டத்தை அடையும் போது, அதன் படைப்பாளர்கள் ஏனையவர்களின்; அங்கீகாரத்தின் அநுகூலங்களைப் பெறுகிறார்கள். இது மேலும் முயற்சிகளை மேற்கொள்ள அவர்களை ஊக்குவிக்கிறது. 

அழகியற் செயல்முறையானது மனிதர்கள் பொதுவான வாழ்க்கைச் சூழலில் மறுக்கப்படும் செயல்களிற் தங்களை ஈடுபடுத்தத் தூண்டுகின்றது-அனுமதிக்கிறது. இதனால் அவர்களின் வெளிப்படுத்தல் மற்றும் புலனுணர்வுச் சாத்தியங்கள் விரிவடைகின்றன. 

மனிதச் செயற்பாட்டின் ஒரு பகுதியுடன் தொடர்புடைய பெருமூளை மூளையின் அருகிலுள்ள அல்லது தொடர்புடைய பகுதிகளைத் தூண்டுகிறது: மூளை ஒரு சூழலியல் அமைப்பு. அது கணினியின் வன்தட்டு நினைவகம் அல்ல. இதன் பொருட்டு அழகியற் செயல்முறை தனக்குத்தானே பயனுள்ளதாக இருக்கும், அத்தோடு பிற நபர்களுடன் பகிர்ந்து கொள்ளக்கூடிய ஒரு கலைப்பொருளை(கலைப்படைப்பு) உருவாக்கம் செய்யும் போது அது மேலும்; பயனுள்ளதாக ஆகுகின்றது.

கலைப்பொருள் விழிப்புணர்வுக்கு இட்டுச்செல்லும் ஆற்றலுடையதாக இருக்கவேண்டும். ஒரு கலைஞனை படைப்புருவாக்கத்திற்கு இட்டுச் சென்ற கருத்துக்கள், உணர்வுகள், எண்ணங்கள் மற்றும் அழகியல் செயற்பாட்டில் பங்கேற்காதவர்களிடமும் கூட, அக்கலைப்படைப்பு தாக்கத்தினை ஏற்படுத்தவல்லதாக இருக்க வேண்டும். அழகியற் செயல்முறையின் முக்கியத்துவமும் மதிப்பும் அதன் தூண்டுதல் மற்றும் புலனுணர்வு, படைப்பாற்றல் திறன்களின் வளர்ச்சியில் தங்கியிருக்கிறது. ஒவ்வொரு அநுபவமும் யதார்த்தத்தை உருவகப்படுத்துகிறது. நாம் அனைவரும் கலைஞர்கள், ஆனால் எம்மிற் சிலரே எமது அழகியற் திறன்களைப் பயன்படுத்துகின்றோம் என்கிறார் Boal.

கலையும் காதலும் (Art and Love)

கலை என்பது காதல். காதலர்களுக்குப் பரஸ்பரம் தாம் காதலிக்கும் – தம்மைக் காதலிக்கும் நபர் மட்டுமே கண்களுக்குத் தெரியும். காதலிப்பவரை ஈடுசெய்யமுடியாதவராகவும் மீளுருவாக்கமுடியாதவராகவும் நாம் பார்க்கின்றோம். நாம் காதலிக்கும் போது, ஒரு சிக்கலான தனிநபர் பிரபஞ்சத்தின் (One-person universe), நிலையான இயக்கத்திற்குட் பிரவேசிக்கின்றோம். இந்த இயக்கம் நிலையானது. காதல் அப்படியல்ல. அதனால்தான், இப்போது மறந்துவிட்ட தனது முன்னாள் காதலை மீண்டும் சந்திக்கும் போது ஒருவரால் அவளை-அவனை அந்நியமாகவும் உணர முடிகிறது, நினைவுகளை மட்டுமே மீட்க முடிகிறது. ஆனால், ஒரு காலத்தில் அவர்கள்; ஒருவரையொருவர் நேசித்தவர்களாக, ஒன்றாக இருந்தவர்கள். காதல் நிலைத்தன்மை அற்றது. அதற்கான உத்தரவாதம் எதுவும் இல்லை. கலைப் படைப்புருவாக்கத்திற்காக அதன் மீது காதலுடன் எம்மை நாம் அர்ப்பணிப்பது போல, காதலை வளர்ப்பதும் ஒரு கலைதான் என்கிறார்.

காதல் நிலைத்தன்மைக்குரிய எவ்வித உத்தரவாதத்தையும் கொண்டிருப்பதில்லை. ஆனால் நாம் கலையைக் காதலுடன் வளர்த்தெடுப்பதுபோல, காதலை வளர்த்தெடுப்பதும் ஒரு கலையே என்ற Boalஇன் காதலினதும் கலையினதும் அழகியலை கவித்துவமாக வெளிப்படுத்துகின்றது.

காதல் என்பது ஒரு அழகியல் அனுபவம் என நடைமுறையில் நிறுவப்பட்டாலும், அது கற்பனையின் ஒரு வெளிப்பாடு அல்லது தூண்டுதல்: காதலில்; நாம் காதலிக்கும் நபரை மட்டுமல்ல, அவர் தொடர்பாக நாம் செய்யும் கணிப்புகளையும் விரும்புகிறோம். அவை எமது உருவாக்கங்களாகவும் எம்மில் ஒரு பகுதியாகவும் உள்ளன. 

எமது கற்பனையானது காதலிப்பவர் மீது அவர் கொண்டிராத தீய மற்றும் நற்பண்புகள் தொடர்பான மதிப்பீடுகளை உருவாக்குகின்றது. ஆனால் அவை எமது விருப்பங்கள் அல்லது பயங்களினால் உருவாக்கப்படுகின்றன. காதலிக்கப்படுவதற்கு ஏன் பலர் பயப்படுகிறார்கள் என்பதை இது விளக்குகிறது: காதல் என்பது தம்மீது உருவாக்கப்படும் மதிப்பீடு என்று எண்ணுவதோடு, அது அவர்களைக் கட்டிப்போடுவதாகவும் அந்த மதிப்பீட்டிற்குள் அவர்களைத் தத்தெடுத்துக் கொள்வதாகவும் அவர்கள் கருதுகின்றார்கள்.

மைக்கேலேஞ்சலோ அன்டோனியோனி (Michelangelo Antonioni) தனது L’Avventura திரைப்படத்தில், ஒரு பெண் தன்னைக் காதலிப்பதாக உணரும் ஒவ்வொரு முறையும் ஓடிப்போகும் ஒரு மனிதனைக் காட்டுகிறார். இது அவனால் தாங்கிக் கொள்ள முடியாதது. அப்பெண் அவனைப் பற்றித் தான் கட்டமைத்த நிலையான உருவகத்தை விரும்புகிறாள். அடிப்படையில் எந்தவொரு மனிதரிடமும் ஒரு தொடர்ச்சியான மாற்றம் நிகழ்ந்துகொண்டிருக்கும் இருக்கும். அத்திரைப்படத்தில் அந்நாயகன் ஒரு பாலியல் தொழில் புரியும் பெண்ணுடன் உறவு கொள்கிறான். அவளுக்குப் பணம் செலுத்தி ஒரு வாடிக்கையாளனாகவும் ஆகுகின்றான்.

காதலிப்பதென்பது ஒரு கலை, கலை என்பது காதல். இந்த இரண்டு செயல்முறைகளும் ஒன்றோடொன்று இணைந்தவை. காதலிதத்தல், மற்றும் உயிருள்ள எவற்றினதும் அல்லது பொருளாக இருந்தாலும் அவற்றின் அழகியலை உணர்ந்துகொள்வது முற்றிலும் ஒரே மாதிரியானவை. காதல் என்பது மின்மாற்றுசக்தியின் ஓட்டத்தை நிகர்த்ததும்; கடல் போன்றதுமாகும். நிலையான அல்லது கணிக்கக்கூடிய தாளங்களுக்கு அங்கு எந்த உத்தரவாதமும் இல்லாமல் – ஒருபோதும் ஒரே மாதிரியாக இல்லாமல் – எப்போதும் தொடர்ச்சியான மாறுதல்களோடு அவை இயங்குகின்றன. 

நித்தியக் காதல்கள் உள்ளன – அவை குறிப்பாக அதீத அவலத்தில் முடிவடையும் வகையைச் சேர்ந்தவை. அது வற்றாத கலைப்படைப்புகளைச் செய்கிறது. ஆனால் நேசித்த நபரோ அல்லது போற்றப்படும் வேலையோ, ஒரு நிலையான தீவிரத்துடன் நேசிக்கப்படுவதில்லை அல்லது போற்றப்படுவதில்லை. அதே காரணங்களுக்காக எந்த நேரத்திலும், காதலிலும் கலையிலும் நிலையின்மை என்பது மட்டுமே நிலையானது. காதல் ஒரு சந்திப்பு அல்ல. அது ஒரு நாட்டம்! எப்போதும் மாறிக்கொண்டே இருக்கும் ஒரு நபர், தன்னைப் போன்றே இல்லாத மற்றொரு நபரைத் தொடர்கிறார். காதல் ஸ்திரத்தன்மைக்கு உத்தரவாதம் அளிக்காது. ஆகையால் காதலுடன் கலையை வளர்க்க வேண்டும், காதலை வளர்ப்பதும் ஒரு கலை.

ஒடுக்கப்பட்டவர்களுக்கான அழகியல் அதன் செயல்முறையில் (Process) அதனை முன்னெடுப்பவரின் பார்வை, புலனுணர்தலை வளர்த்துச் செல்லக்கூடியது. அது ஒரு கலைப் படைப்புருவாக்கத்தின் உச்சம் பெறுதலை-அடைதலை இலக்காகக் கொண்டிருந்தாலும், சமாந்தரமாக சமூகவலுவினைப் பெருக்குகின்றது. 

கலையும் அறிவும் (Art and Knowledge)

கலைஞர்களைப் பொறுத்தவரை புலனணர்தலுடன் தொடர்புடைய அழகியற் செயற்பாடுகள் தனித்துவமான யதார்த்தங்களை அறிய உதவுகின்றன. அழகியற் செயல்முறையிலும் கலைத்துவச் செயலிலும் ஒரு எழுதிமுடிக்கப்பட்ட கட்டுரைபோன்று – கலைப் படைப்பானது மனிதமனதில் யதார்த்தத்துடனான தொடர்பை உணரவைக்கின்றது. 

இந்த வகையில் கலை அறிவுக்கான ஒரு சிறந்த வடிவமாகவும் ஆகுகின்றது. விஞ்ஞானபூர்வமானதாக அல்லாமல், அகநிலை, உணர்வுநிலை சார்ந்த அறிவாக ஆகுகின்றது. அதற்காக வேறு அறிவுசார் வடிவங்களைவிட கலைசார் அறிவு மேலானது என்பதல்ல. ஆனால் தனித்துவமானது. படைப்பாக்கத்தின் போது கலைஞன் யதார்த்தத்தின் சாரத்தினைத் தொகுத்து, புதிய நிரப்புத்தொகுதிகளை உருவாக்குகின்றான். 

‘நான்’ என்பது ‘நாம்’ எனவாக மாறுகின்றது. அது அசாதாரணமான பாய்ச்சல். இந்த ‘நாம்’இலும் ஒவ்வொரு ‘நான்’ இலும் கலைஞன் உருவாக்கிய அடைவுகளைப் பார்வையாளர்கள் கண்டடைகின்றனர். ‘நாம்’ பற்றிக் கதைக்க முடிகின்ற பொழுதுகளில் நாம் எமது எல்லா உறவுகளினதும் கூட்டுத்தொகையாக ஆகுகின்றோம். 

யதார்த்தத்தை அதன் ஒற்றைக் கண்ணோட்டத்திலிருந்து மீள்தேடலுக்கு ஊடாக மீள்கண்டடைகின்றது கலை. தனித்துவமான கலைஞன் உண்மைகளுடனான தனது உறவின் மூலமும் தனக்கே உரித்தான பார்வை மற்றும் உணர்வுகள் மூலமும் புத்தாக்கப் படைப்புகளை உருவாக்கம் செய்கின்றான். 

‘அறிவியல்’ என்பது அடிப்படையில் ஒரு கலை. ஆனால் கலை என்பது அறிவியல் அல்ல. கலை உண்மையானதும் யதார்த்தமானதுமான அனைத்திற்கும் விளக்கம் கொடுக்கும் கருவியுமல்ல. ஆனால் அது அசலான யதார்த்தம். 

அழகியலும் நரம்பணுக்களும் (Aesthetic and Neurons)

ஒடுக்கப்பட்டோருக்கான அழகியல் ஓர் அறிவியல் உண்மையை-தரவினை அடிப்படையாகக் கொண்டது. எந்தவொரு மனிதனுக்குள்ளும் அவனது நுண்ணுணர்வு-கலங்கள்-நரம்பணு அமைப்பியல் செயற்படும்போது படைப்பாற்றலைக் கண்டடைவதற்கான கற்பனை தூண்டப்படுகின்றது. கற்பனை என்பது ஆசைகள், விருப்பங்களாற் தூண்டப்படுகின்ற நினைவுகளாகும். அநுதாபம் இலத்தீன் மொழியில் Empatheia எனப்படுகின்றது. இதன் பொருள் தற்காலிக இட்டுநிரப்பல் உணர்வு அல்லது அநுபவம். சகமனிதர்கள் பற்றி இன்னொரு மனிதனின் உணர்வு மற்றும் எண்ணங்களில் தொற்றவைக்கப்படுகின்ற-உள்ளுணர்த்தப்படுகின்ற ஒரு தற்காலிக இட்டுநிரப்பல் உணர்வினை அது குறிக்கின்றது. இந்த இட்டுநிரப்பல் நிகழ்த்துகலைகளில் (Performaning art) அதிகம் சாத்தியப்படுவன. அரங்கக் கலைப் படைப்புகளின் பாத்திரங்களாக இருக்கலாம். ஆல்லது நாளாந்த வாழ்விற் சந்திக்கின்ற ஒரு சக மனிதராக இருக்கலாம். குறிப்பாக ஒரு துன்பியல் நாடகத்தின் முதன்மைப் பாத்திரத்தினைப் பார்வையாளர் மனங்களுக்கு இலகுவிற் கடத்துவதும் அழுத்தமாய்ப் பதியவைப்பதும் இந்த அநுதாபமேயாகும்.

மாறுபொருளுணர்த்தலாக அல்லது மொழிபெயர்ப்பாக உருவகம் (Metaphor as translation Or Trans-substantiation) 

பரந்த அர்த்தத்தில் உருவகத்தின் மொழிபெயர்ப்பு எல்லா வகையான குறியீட்டு மொழிகளையும் உள்ளடக்கியதாகும். சொல்லாடல்களை உள்ளடக்கிய கதையாடல்கள் மற்றும் உருவகக் கதைகள், நீதிக் கதைகள் என்பன இத்தகைய தன்மையுடையவை. யதார்த்தத்தை மறுவுருவாக்கம் செய்வதைத் தவிர, அனைத்துக் கதைகளும் இந்த வகைக்குள் உள்ளடங்கக்கூடியவையே.

காண்பியற் கலையில் (Visual art) கோடுகள், நிறங்கள், வடிவங்கள் (Line, colour, Volume) கையாளப்படுகின்றன. இசையில் ஒலியும் நிசப்தமும் பயன்படுத்தப்படுகின்றன. நடனத்தில் இசைக்கு இசைகின்ற உடலசைவு பயன்படுத்தப்படுகின்றது. கோடுகள், நிறங்கள், வடிவங்கள் காண்பியற் கலையின் கட்டுமானத் தொகுதிகள். அழகியல் நரம்பணு இந்தச் செயல்முறையின் கூட்டியக்கத் தூண்டுதல். 

எண்ணங்கள், உணர்வுகள், நினைவுகள், புறச்சூழற் தாக்கங்கள், கற்பனைகளின் கூட்டியக்க விளைவாகப் படைப்பூக்கம் நிகழ்கின்றது. 

இந்த நரம்பணுக்கள் புதிய தூண்டுதல்களாற் செயற்படுத்தப்படும் போது, உருவகங்கள் உருவாக்கப்படுகின்றன, படைப்பாக்கம் நிகழ்த்தப்படுகின்றது. அனைத்து உருவகங்களும் மொழிபெயர்ப்புகள் அல்லது மாறுபொருளாக்கம் Translation or trans-substantiation), அதாவது புதிய யதார்த்தங்களைப் படைப்பது என்ற பொருளை இது உணர்த்துகின்றது. 

உருவகங்களைப் படைக்கும் ஆற்றல் கொண்ட ஒரே விலங்கு மனிதன் மட்டுமே. மனிதனுள் எவ்வளவு அதிகம் உருவகப்படுத்தல்கள் நிகழ்கின்றனவோ அவ்வளவு அதிகம் மனிதம் மேம்படுகிறது. அனைத்துக் கலைகளும் உருவகப்படுத்தல்களே. மனிதர்கள் மட்டுமே கலைஞர்கள் என்ற கருத்தினை Boal வலியுறுத்துகின்றார்.

ஒரு குறித்த விடயத்தில் அறிவியலுக்கும் திட்டவட்டமானதோ அல்லது கேள்விக்கிடமற்றதானதோ விளக்கம் (அறிவார்ந்த பதில்) இல்லை. ஆயினும் அங்கு கவித்துவ வியாக்கியானத்திற்கான (Poetic interpretation) வெளி உருவாகுகின்றது. அழகியல் நரம்பணு பலதரப்பட்ட செயற்பாடுகளைக் குவிமையப்படுத்தும் தன்மையுடையது. மேலும் ஆழ் மன உணர்வுகள், சிக்கலான எண்ணங்கள், சொற்கள், குறியீடுகள், உடலினூடாகக் கடத்தவும் உள்வாங்கவுமான திறன் கொண்டவை அழகியல் நரம்பணுக்கள். 

எவ்வளவு அதிகம் அறிகின்றோமோ அறிதற்திறன் மேலும் வளர்கிறது. ஓவியத்தில் அதிகம் ஈடுபடும் ஒருவர், தூரிகையையும் நிறங்களையும் கையாளும் திறனை நுணுக்கமாகக் கண்டடைகின்றார். பாடகர் தொடர்ச்சியான பயிற்சி, பாடுதல் அநுபவங்கள் மூலம் தனது குரலின் உச்சத்தை, தன்னால் எட்டக்கூடிய உச்சஸ்தாயியை (Voice range) அறிந்துகொள்கின்றார். கவிஞனின் உதட்டிலும் தாள்களிலும் எவ்வளவுக்கெவ்வளவு சொற்களும் படிமங்களும் நடனமிடுகின்றனவோ அவ்வளவுக்கவ்வளவு கவிதைகள் மீதான நேசிப்பும் பரிச்சயமும் அதிகரிக்கின்றது. அறிதல் என்பது எமது திறனை அடையாளம் காணவும் கண்டடையவும் கற்றுக்கொள்ளவும் அடிப்படையான அம்சம். அநுபவங்களும் பரிசோதனை முயற்சிகளும்கூட அறிதலின் அம்சங்களே. அவை எமது தேடல்களுக்கும் அப்பால் நாம் தேடாதவற்றோடும் எம்மை முகத்துக்கு நேரே சந்திக்கவைக்கின்றது. 

பொதுவாக மனிதர்கள் தாம் தேடுவதைக் கண்டடைவதற்காகத் தம்மை அர்ப்பணிக்க வேண்டும், ஒப்புக்கொடுக்க வேண்டும். அர்ப்பணிப்பு என்பது நேரச்செலவு, உழைப்பு, ஈடுபாடு என்பவற்றைக் குறிக்கின்றது. எதைக் கேட்க முனைகின்றோமே அதற்காகச் செவிகொடுக்க வேண்டும். தொடுகின்றவற்றை உணரவும், எண்ணங்களை எழுதுவதற்கும் எம்மை அர்ப்பணிக்கவேண்டும்.

(தொடரும்)

***

ரூபன் சிவராஜா – நார்வேயில் வசிக்கும் இவர் கவிதைகள், கலை இலக்கியத் திறனாய்வு மற்றும் அரசியல் கட்டுரைகள் எனத் தொடர்ந்து எழுதி வருகிறார். ‘அதிகார நலனும் அரசியல் நகரவும்’, ‘எதிர்ப்பரசியல்’ (சர்வதேச அரசியல் ), ‘கலைப்பேச்சு’ தொகுதி 1, தொகுதி 2 (திரை | நூல் | அரங்கு பற்றிய திறனாய்வு ), ‘எழுதிக் கடக்கின்ற தூரம்’, ‘சொற்களைச் செமிக்கும் கடல்’ (கவிதைகள் ) என இதுவரை 6 நூல்கள் வெளிவந்துள்ளன. மின்னஞ்சல் – svrooban@gmail.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here