எவரையும்
கிட்ட நெருங்கவிடாமல்
தன் கதகதப்புக்குள்
அலகால் நகர்த்திநகர்த்தி
முட்டைகளை அடைகாத்த
எத்தனையோ
குஞ்சித்தாய்க்கோழிகளின்
வாழ்ந்த அடையாளம்
தாங்கியிருக்கிறது…
முட்டைகள்
ஒவ்வொன்றாய் கூடுடைக்க
விடுதலையாகி வெளிவந்த
குஞ்சுகளின் இறக்கைகள்
வலுப்படும் காலம்வரை
அடைக்கலம் தந்த கோட்டையிது…
அப்பிய செல்கள்
வேறெங்கும் பரவிடாதபடி
எருக்கிலைகளை ஒடித்துவந்து
கூடை சுற்றிலும் பரப்பிவிடும்
அம்மாவையும்
நினைவுபடுத்த மறக்கவில்லை
பஞ்சாரக்கூடை…
– வத்திராயிருப்பு தெ.சு.கவுதமன்
சொந்த ஊர் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகேயுள்ள வத்திராயிருப்பு, ஊடகத்துறையில் பணியாற்றுகிறார். தற்போது சென்னையில் வசித்து வருகிறார். ஐந்திற்கும் மேற்பட்ட கவிதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. தொடர்புக்கு – [email protected]