Thursday, March 28, 2024
Homeஅரசியல்“GDP- ம் தேச பக்தர்களும்”

“GDP- ம் தேச பக்தர்களும்”

பழனிக்குமார்

சில இணையங்களை உற்று நோக்கினால் ஒரு செய்தி பல மேதைகளால் பரப்பப்படுகிறது. 2021-2022-ம் ஆண்டில் நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி அபரிமிதமாய் இருக்கும் என்று. இது எப்படி இருக்கிறது என்றால்,  நீங்கள் சராசரியாக மாதமாதம் நூறு ரூபாய் சம்பாதிக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்.  ஒரு மாதம் நீங்கள் வேலைக்குப் போகவில்லை. உங்களுக்கு வரவேண்டிய நூறு ரூபாய் கிடைக்கவில்லை. இப்படிப் பல மாதங்களாய் வேலைக்குப்போகாமல் சம்பளமற்று இருக்கிறீர்கள், திடீரென ஒரு மாதத்தில் வேலைக்குப் போகும்போது உங்களுக்கு ஐம்பது ரூபாய் சம்பளம் தருகிறார்கள், உடனே உங்கள் மனைவியோ/கணவனோ, பாருங்கள்.. போன மாதத்தோடு ஒப்பிடுகையில் இந்த மாதம் எங்காளு அதிகமாய்ச் சம்பாதிக்கிறார் என்பது போல் இருக்கிறது இந்த ஒப்பீடு. இன்னும் தெளிவாகச் சொல்கிறேன். 

நான் வேலை பார்த்த மருந்து நிறுவனங்களில் ஒரு கூத்து நடக்கும். 

ஒரு மெடிக்கல் ரெப் வேலை  பார்க்கும் ஊரில் தொடர்ந்து அவர்க்கு வழங்கப்பட்டிருக்கும் டார்கெட் நடக்காது. மாதாந்திரக் கூட்டத்தில் அவரது விற்பனையை GRAPH PRESENTATION போட்டுப் பார்த்தால் முந்தைய வருடத்தைவிட நெகட்டிவாய் போய்க்கொண்டிருக்கும். அந்த நிதியாண்டு முடிந்ததும், அந்த ஊருக்கு முந்தைய வருடத்தின் டார்கெட்டையே தருவார்கள். அடுத்த வருடம் அந்த ஊர் விற்பனைப் பிரதிநிதி டார்கெட் செய்ய ஆரம்பிப்பார். அப்பொழுது அதே பாணியில் GRAPH போட்டால் முந்தைய ஆண்டு சேல்ஸ் குறைந்து இருக்கும், ஆதலால் பாசிட்டிவில் இருக்கிறார் என்று கூட்டத்தை மேலாளர் கை தட்டச் சொல்வார். 

எடுத்துக்காட்டாக, 

2018-ல் 100 ரூபாய்க்கு விற்றவனுக்கு 

2019-ல் 120 ரூபாய் டார்கெட் தந்தோம் என்றால், அந்த ரெப் 

2019-ல் 75    ரூபாய் தான் பண்ணிருப்பார். 

2020-ல் 100   ரூபாய் போதும் என டார்கெட் தருவார்கள்.

2020-ல் 100 ரூபாய் சேல்ஸ் நடக்கும். உடனே கூட்டம் கடந்த வருடத்தை விட அதிமாய் வளர்ச்சி என்று கைதட்டும். அந்த மேலாளர் அப்படித்தான் வித்தை காட்டுவார்.  அவன் 2020-ல் 100 ரூபாய் விற்பது ஒரு  வளர்ச்சி என்பது 2018-லேயே செய்து காட்டப்பட்ட ஒன்று. விழுந்து விட்டு எழுவது என்பது பழைய நிலையை அடைவதே தவிர வளர்ச்சி என்று ஆகாது. 

அதே கதை தான் இப்பொழுது பொருளாதார வளர்ச்சி 2021-22-ல் பிரகாசமாய் இருக்கும் என்று மேதைகள் கூறுவதும். 

மத்திய புள்ளியியல் துறையின் தரவுகள் படி நடப்பு நிதியாண்டு ( ஏப்ரல் 20 முதல் மார்ச் 21 முடிய உள்ள காலகட்டம் தான் நடப்பு நிதியாண்டு) க்கான முதல் காலாண்டு (ஒவ்வொரு மூன்று மாதங்களையும் காலாண்டாகப் பிரிப்பார்கள். ஏப்ரல் மே ஜூன் (முதல் காலாண்டு) ஜூலை, ஆக, செப்( 2ம் காலாண்டு) அக், நவ, டிச ( 3-ம் காலாண்டு) ஜன, பிப், மார்ச் (4-ம் காலாண்டு)) 

அதாவது ஏப்ரல் 20 முதல் ஜூன் 20 வரையிலான GDP  மைனஸ் 23.9 சதவீதம். அதாவது எதிர்மறையாய் விழுந்துள்ளது. 

உடனே நம் தேசபக்தர்கள் உலகம் பூராவும் கொரோனா வந்து ஆட்டிப்படைத்ததில் தான் இப்படி என்றும், இல்லாவிட்டால் அவர்களது ஜீ GDP-யை ஒட்டு மொத்தமாக நீட்டி நிமிர்த்தியிருப்பார் என்றும் முட்டு கொடுப்பார்கள். அவர்களுக்கானப் பதில் 

2016-2017 ஆண்டிற்கான GDP  8.3 சதவீதமாய் இருந்த வளர்ச்சி

2017-2018 ஆண்டில்  GDP 7  சதவீதமாய் குறைந்தது. (அப்பொழுது ஆட்சி யாருடையது) 2018-2019  ஆண்டில் அதே GDP 6.1 ஆகக் குறைந்தது.  

8.3, 7 பிறகு 6.1 என்று வரவர மாமியார் கழுதை போல் ஆனாராம் என்று எங்கூரில் சொலவடை உள்ளது போல் G D P  குறைந்த வளர்ச்சி ஆனதற்குக் காரணம் கொரோனா இல்லை. 

2019- 2020 ஆண்டில் கூட வளர்ச்சி 4.2 சதவீதமாகக் குறைந்தது. மார்ச் 24-க்குப் பிறகுதான் பொது முடக்கம். அந்த ஆறு நாட்களில் ஒட்டு மொத்த 361 நாட்களின் முடங்கிப்போன தேசத்தின் G D P-ஐ மறைக்கப் பார்க்கிறார்கள். ஆக, தேசத்தின் வளர்ச்சி 2016 ஆண்டின் தொட்டே அழிவு நிலைக்கு வந்திருக்கிறது . 

2019-20-ம் ஆண்டு நிதி நிலை மோசம் என்று எதிர்கட்சிகள் கூறியதற்கு நாம் பொருளாதார வளர்ச்சியில் சற்றே பின்தங்கியுள்ளோம், ஆனால் பொருளாதார மந்த நிலை இல்லை என்று கொக்கரித்தார் மாண்புமிகு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். 

ஒரு பொருளாதார மாணவனிடம் பொருளாதார மந்த நிலை என்ன என்று இரண்டு மார்க் கேள்வியைக் கேட்டுப்பாருங்கள். எந்த நிறுவனத்தின் (இந்தியா தனியார்களின் நிறுவனம் தானே?!) தொடர்ச்சியான இரண்டு காலாண்டின் வளர்ச்சி விகிதம் எதிர்மறையாக ( நெகட்டிவ்) இருக்கிறதோ அதுவே பொருளாதார மந்த நிலை என்று பொருள்படும் என்று கூறுவான். 

அப்படிப் பார்த்தால் நடப்பு நிதியாண்டு (2020-2021) ஆண்டின் முதல் இரண்டு காலாண்டுகள் நெகட்டிவாகத்தான் இருந்துள்ளன. அப்படியானால் நம் இந்திய தேசம் மேதகு பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் வளர்ச்சிப் பாதையை விட்டுவிட்டு எதிர்மறைக் குழிக்குள் விழுந்துள்ளது. 

கடந்த வருடம் அதாவது ( 2019-20) 4.2  சதவீதம் வளர்ச்சி என்பது அதற்கு முந்தைய 11 வருடங்களில் மோசமான வளர்ச்சி என்பதாகும். 

ஆசியாவில் மிக முக்கியமான பொருளாதார நாடு, உலகளவில் வேகமாய் வளரும் பொருளாதார நாடு என்று கொக்கரித்தத் தருணத்தில் மோடி தலைமையேற்று கடந்த வருடம் 11 வருடங்களுக்கு முந்தைய இந்தியாவாக மாற்றி விட்டார். இந்த வருடம் கொரோனா மேல் பழிபோட்டுக் கொண்டிருக்கிறார்கள். 

ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான GDP ம் நெகட்டிவ் தான். ஆனால் அறிவார்ந்தவர்கள் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான GDP-க்கு இது பரவாயில்லை. பாதிப்பு குறைவாயிருக்கிறது என்றிருக்கிறார்கள். அப்படி விழுந்த எல்லாத் துறைகளிலும் வேகமாய் எழுந்த முதல் துறை எது தெரியுமா நண்பர்களே.. விவசாயம் தான். ஆம், அது சார் விவசாயிகளைத்தான் மத்திய அரசு தடுத்தும், நீர்பாய்ச்சியும் அவர்களது மூலதனத்தைக் கொள்ளையடிக்கவும் கார்ப்பரேட்டுகளுக்குத் தாரை வார்க்கவும் முற்படுகிறது. 

RBI மூலமாக வட்டி விகிதங்களைக் குறைக்கும் வித்தை எல்லாம் போன வருடத்தில் செய்து பார்த்தாகி விட்டது. அப்படியும் GDP கீழே விழுவதை நிதியமைச்சர் மாண்புமிகு நிர்மலா சீதாராமன் அவர்களாலோ மாண்புமிகு மேதகு பன்முக வித்தகர் மோடி ஜீ அவர்களாலோ காப்பாற்ற முடியாமல் வெறுமனே  வாய் மட்டுமே பார்க்க முடிந்தது. 

G D P என்பது ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி. உற்பத்தி செய்யப்படும் பொருள்களின் மதிப்பு, அதற்கானச் சேவைகளின் மதிப்பு, அதை வாங்கும் மக்களின் வாங்குதிறன், அரசு செலவீனங்கள், தேசத்திற்குள் நடக்கும் முதலீட்டு மதிப்பு, மற்றும் ஏற்றுமதி இறக்குமதி விகிதம் இவற்றைப் பொறுத்துத்தான் அமையும்.  

60 சதவிகிதம் உள் நாட்டிற்குள் நம் மக்களால் நுகரப்படும் விகிதத்தை வைத்துத்தான் G D P மாறுபடுகிறது. GDP குறைகிறது என்றால், மக்களின் வாங்குதிறன் குறைகிறது என்று பொருள். கார்ப்பரேட்டுகளுக்குக் கடன்சுமை குறைப்பவர்கள், எப்படி சாமான்யர்களின் கடனைத் தந்து பணப்புழக்கத்தை அதிகரிக்கச் செய்து பொருளாதாரத்தைச் சரி செய்வார்கள்.? 

இப்பொழுது இந்தக் கட்டுரையின் மூன்றாவது பத்தியை மறுபடியும் படியுங்கள். அப்படித்தான் அடுத்த வருடம் பிரகாசமாய் இருக்கும் என்கிறார்கள். உடனே தேச பக்தர்கள், மோடி ஜீ யிடம் ஒரு ப்ளான் இருக்கிறது அதைச் செயல்படுத்தினால் பிரகாசமாய் தேசம் ஒளிரும் என்பார்கள். இந்தப் பொருளாதார விஞ்ஞானிகள் சொல்லும் GDP எல்லாம் முறைப்படுத்தப்பட்ட தொழில்களை வைத்துத்தான். முறைசாரா அதாவது அமைப்பு சாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள சாதாரண சாமான்யனின் நிலை இதைவிட மோசமாகத்தான் இருக்கிறது. 

சொல்வதற்கு ஒன்று தான் இருக்கிறது. உலகப் பொருளாதாரத்தில் கொம்பனாக இருக்கும் G20 நாடுகளில் நாம்தாம் மிகவும் மோசமான நிலையில் இருக்கிறோம். கொரோனா எல்லோருக்கும் தான் வந்தது. நாம் மட்டும் மோசமாக இருக்கிறோம் என்பது குறிப்பிடத்தக்கது. தேச பக்தர்கள் சொல்வது போல் கொரோனா கிருமி மட்டுமே தேசத்தின் பொருளாதாரத்தைச் சீரழித்தது என்றால் 2016-ம் வருடத்திலிருந்து தொடர்ந்து பொருளாதாரம் சீரழிய எந்தெந்தக் கிருமிகள் காரணம் என்று வர்ணிக்க அவர்களுக்குத் தார்மீகக் கடமை இருக்கிறது. 

ஆனால் இப்படிப் பொறுப்பாய் பேசுவதை விட ஆளும் பிஜேபிக்கு  மதங்களின் பெயரைச் சொல்லி யாத்திரை நடத்தவும், புழக்கத்தில் இல்லாத மொழிக்கு செய்திகள் வாசிக்க அனுமதி கோரவும் தான் நேரம் இருக்கிறது. அவர்களைச் சொல்லி என்ன ஆகப்போகிறது? ஆக்கப்பூர்வமாய் செயல்படத் தெரிந்தவர்களாய் இருந்தால் ஏன் இப்படி வித்தை காட்டப்போகிறார்கள். 

கட்டுரை எழுத உதவியாய் இருந்தவை :

 1)  மத்திய அரசின் புள்ளியியல் துறை தரவுகள்

 2)  பிபிசி இணையத்தில், ஹிந்து இணையத்தில் வந்த பொருளாதார நிபுணர்களின் தொடர் இரண்டு வருட அவதானிப்புகள், விமர்சனங்கள், புள்ளிவிவரங்கள்

மற்றும் 

 3) தேசத்தின் மீது இருந்த தேசபக்தி

ஜெய் ஹிந்த். 

***

பழனிக்குமார் – ஆசிரியர் தொடர்புக்கு – [email protected]

RELATED ARTICLES

2 COMMENTS

  1. ஆனால் இப்படிப் பொறுப்பாய் பேசுவதை விட ஆளும் பிஜேபிக்கு மதங்களின் பெயரைச் சொல்லி யாத்திரை நடத்தவும், புழக்கத்தில் இல்லாத மொழிக்கு செய்திகள் வாசிக்க அனுமதி கோரவும் தான் நேரம் இருக்கிறது. அவர்களைச் சொல்லி என்ன ஆகப்போகிறது? ஆக்கப்பூர்வமாய் செயல்படத் தெரிந்தவர்களாய் இருந்தால் ஏன் இப்படி வித்தை காட்டப்போகிறார்கள். – நிஜம். எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி & வாழ்த்துகள் திரு Palani Kumar

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular