Friday, March 29, 2024
Homeஇதழ்கள்2022 இதழ்கள்தளராக் குரலில் முணுமுணுக்கும் தீமையின் மலரான நவீன முகத்தின் முதல் கவிஞன்

தளராக் குரலில் முணுமுணுக்கும் தீமையின் மலரான நவீன முகத்தின் முதல் கவிஞன்

வேதநாயக்

முதல் நவீன கவிஞர்” என்றும் “நவீன விமர்சனத்தின் தந்தை” என்றும் அழைக்கப்படும் சார்லஸ் போத்லேர் போன்ற சில எழுத்தாளர்கள் மட்டுமே அடுத்தடுத்த தலைமுறைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளனர். உலகெங்கிலும் மிகவும் பரவலாகப் படிக்கப்படும் பிரெஞ்சுக் கவிஞராக அறியப்பட்ட இவரது படைப்புகள் மேற்கு நாடுகளில் செல்லம் கொஞ்சத் தடையென்று சொல்ல எதுவுமே இல்லை. ஆயினும்கூட நீண்ட காலமாக(அப்போதிலிருந்து இப்போது வரை) போத்லேரின் இலக்கிய உருவம் அவர் ஓர் அவதூறு மிகுந்த எழுத்தாளர் என்ற ‘நற்பெயரால்’ குறிப்பிடப்பட்டே வந்திருக்கிறது. அவரது சிற்றின்பம் சார் தீய எண்ணங்கள் மீதான வெளிப்படையான மோகம் ஒழுக்கவியல் சிந்தனையாளர்களைச் சீற்றப்படுத்தியது. 1857-ம் ஆண்டில் “பொது மற்றும் மத ஒழுக்கங்களுக்கு எதிரான குற்றங்களுக்காக” அவரும் குஸ்தவ் ஃப்ளூபெர்ட்டும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர் – மேடம் பவாரிக்காக ஃப்ளூபெர்ட்டும் அப்போது வெளியிடப்பட்ட கவிதைப் புத்தகத்திற்காக (Les Fleurs du mal) போத்லெரும்.

Charles Pierre Baudelaire (9 April 1821 – 31 August 1867) 

நியாயமான பொருளைத் தரும் என்று விரும்பியதாலோ என்னவோ Les Fleurs de Mal (தீமையின் மலர்கள்) என்று தனது தொகுப்புக்கு தலைப்பிட்டிருந்தார். மற்றவர்களை அதிர்ச்சியடைய வைக்க நினைத்து இக்கவிதைகளை எழுதியதாகத் தெரியவில்லை. ஏனெனில் அவர் தனது தனிப்பட்ட ஆன்மிக, சிற்றின்ப வேதனையை வலிமிகுந்த தெளிவான காட்சிகளாய் இக்கவிதைகளில் நெடுகப் பார்க்கக் கிடைக்கிறது. மனித இயல்பு வீழ்ச்சியடைந்து, சிதைந்து விட்டதாக மதரீதியாகக் கட்டமைக்கப்பட்ட பார்வையால் வேட்டையாடப்பட்ட அவர் தனது பலவீனங்களையும், சமூகத்தில் அவர் கண்டறிந்த பாசாங்குத்தனங்களையும் பாவங்களையும் தெளிவாகப் பகுப்பாய்வு செய்ததால் காமம், வெறுப்பு, சோம்பேறித்தனம், எல்லா உணர்ச்சிகளையும் ஆழக்காணுதலால் தோன்றும் சலசலக்கும் சுய-அறிவு, மரணத்துடன் கூடிய சிதைவின் திகில், இறுதியாக மற்ற எல்லா தீமைகளையும் விழுங்கும் அக்கறையின்மையுடன் இழந்துவிட்ட ஏதேன் பற்றியதான கனவுகளுடன் கசப்பாக மாற்றி இருந்ததை வெளிக்கொணர வைப்பதான சொற்சித்திரங்களாக இக்கவிதைகள் இருக்கிறது. அத்துடன் அல்லாமல் இக்கவிதைகளையும் தாண்டி பரிபூரணமானது தொலைதூரத்தில் இருப்பதாக மட்டுமே நினைத்திருந்தார்.

Les Fleurs Du Mal – Flower of evil தமிழில் வேதனையின் மலர்கள் என்று நாகரத்தினம் கிருஷ்ணா கூறுகிறார். துன்பத்தின் பூக்கள் என்கிறார் க.வாசுதேவன். இங்கே தமிழுக்கு வரும்போது ஐந்தாம் வேற்றுமை உருபு தொக்கி நிற்குமென்று படுகிறது எனவே துன்ப மலர்கள் எனவும் நாகார்ஜுனன் கூறுகிறார். இறுதியாக தமிழில் வந்த தொகுப்பின் பெயர் தீமையின் மலர்கள்(க்ரியா).

இக்கவிதைகளில் சிற்றின்பக் காதல், தொலைதூரப் பயணங்கள், கலை அழகு போன்றவைகளைப் பற்றிய காட்சிகளில் பெரும்பான்மை அவலட்சணமான தன்மையோடும் கசப்பான யதார்த்தத்திலிருந்து உருவாக்கப்பட்டும் உருவகமாகவும் மாறியுள்ளது. பெரிய குறியீட்டு எல்லைகளுக்குள் யதார்த்தமான விவரங்களை முன்வைக்கும் போத்லேயரின் திறன் அவரது கற்பனைக்கும் அதன் தொடர்ச்சியான பயன்பாட்டு விகிதத்துக்குமான அவரது முழுமையான கைவினைத்திறனை புலப்படுத்தும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளமை வியப்பிலாழ்த்தும் தன்மையினைக் கொண்டது. அத்துடன் அவ்வரிகளின் தீவிர இசைத்திறனே அவரை குறியீட்டின்(symbolism) முன்னோடியாக மாற்றி அமைத்தது. டி எஸ் எலியட்டின் வார்த்தைகளில் சொல்வதானால் “நவீனத்தில் மிகச்சிறந்த முன்மாதிரி“.

இக்காலகட்டத்தில் (19-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில்) மேற்கு ஐரோப்பாவை மையமாகக் கொண்ட கலை மற்றும் இலக்கிய இயக்கமாக Deadent இயக்கம் இருந்தது. இதனைத் தழிழ்ப்படுத்தினால் நலிந்த, நலிவுற்ற என்ற பொருளை அளிக்கிறது. அதிகப்படியான மிகையைக் கொண்டிருத்தலும் செயற்கைத்தன்மையின் அழகியல் சித்தாந்தத்தைப் பின்பற்றியதுமான மூவ்மெண்டாக இது இருந்தது. காட்சிக் கலைஞர் ஃபெலிசியன் ரோப்ஸின் (Feliien Rops-Pornokrates) படைப்புகளும் ஜோரிஸ்-கார்ல் ஹூய்ஸ்மன்ஸின் எகெய்னஸ்ட் நேச்சர் (Joris Karl Huysmans- A rebours – Against Nature 1884) நாவலும் Deadent இயக்கத்தின் முதன்மையான எடுத்துக்காட்டுகளாகக் கருதப்படுகின்றன. இவ்வியக்கம் முதலில் பிரான்ஸில் செழித்து பின்னர் ஐரோப்பா மற்றும் அமெரிக்கா முழுவதும் பரவியது. இந்த இயக்கம் சுய வெறுப்பு, நோய், சந்தேகம், வக்கிரத்தில் மகிழ்ச்சி அத்துடன் கொச்சைத்தனம் மிகு நகைச்சுவையுடனான தர்க்கம், இயற்கை, உலகத்தை விட மனித படைப்பாற்றலின் மேன்மையின் மீதான நம்பிக்கை ஆகியவற்றால் வறையறைப்படுத்தப்பட்டது.

Deadent இயக்கத்தின் மையமானது உயிரியல் இயல்பு, அதன் தரநிலை, இயற்கை, ஒழுக்கம், வீழ்ந்துபட்ட பாலியல் நடத்தை ஆகிய அனைத்திலும் கலை என்பது இயற்கையை முற்றிலும் எதிர்க்கும் தன்மையினை கொண்டது என்கிறது. இக்கால கட்டத்தில் லத்தீன் அறிஞர் Désiré Nisard பிரெஞ்சு இலக்கியத்தின் பக்கம் திரும்பியபோது அவர் விக்டர் ஹ்யூகோவையும் ரொமாண்டிசிஸத்தையும் பொதுவாக ரோமானியச் சீரழிவுடன் ஒப்பிட்டார். ஆண்கள் தங்கள் எழுத்து சார்ந்த கலைகளையும் கலாச்சார விழுமியங்களையும் இன்பத்திற்காக தியாகம் செய்தனர். விவரிப்பதில் ஆர்வம், இலக்கியம் கலையின் மரபு விதிகளைக் கடைப்பிடிக்காதது, ஊதாரித்தனமான அளவிற்கு மொழியின் மீதான காதல் போன்ற போக்குகளும் அவர் அடையாளம் கண்டுகொண்டது Deadent இயக்கத்தின் இயல்புகளாகக் கருதப்படுகிறது.

Deadent இயக்கம் பெரும்பாலும் ஒரு பிரெஞ்சு நிகழ்வாக இருந்தபோதிலும் அதன் தாக்கம் பரந்த அளவில் தன் செல்வாக்கைப் பெற்றிருந்தது. பொதுவாக இன்பத்தில் ஆர்வம், பரிசோதனைப் பாலுணர்வில் ஆர்வம், வினோதமானவற்றின் மீதான ஈர்ப்பு என வறையறுக்கப்பட்டாலும் இவை அனைத்தும் சற்றே அதிகாரத் தொனியிலான ஆன்மாவையும் பொருள் மிகுதியை மதிப்பிடும் அழகியலாலும் தொகுக்கப்பட்டுள்ளன. Deadent இயக்கம் கலையில் அதன் சொந்த நலனுக்கான அழகியல் முக்கியத்துவத்தைக் கொடுத்ததால் பலர் பாதிக்கப்பட்டனர்.

தூய கலைஞர்களான, உதாரணமாக ஷேக்ஸ்பியர் போன்றவர்கள் தனித்தன்மை வாய்ந்தவர்கள். தூய கலைஞன் ஒருபோதும் எதையும் வலியுறுத்தி சொல்வதில்லை. மாறாக Baudelaire-ஐப் பொறுத்தவரை அரிதாகவே சில விஷயங்களை வலியுறுத்துவதும் பரிந்துரைப்பதுமாய் இருப்பதும் புலனாகிறது. போத்லேர் தன்னிடம் எப்போதும் இருக்கும் சரியான, நேர்த்தியான, நேர்மையான மனிதனை அவரது கூரிய பார்வையால் வெளிக்கொணர்கிறார். அவர் மிக முக்கியமான எதையுமே இழக்கவில்லை என்றும் சொல்லலாம். அவரது நுட்பமான சலித்த உரைநடை(!) மூலம் சரியான மனிதனை சரியான வழியில் சித்தரிப்பதில் அரிதாகவே தோல்வியடந்தவராக அறியப்படுகிறார். தவறான மனிதனை – கலைஞனாக இல்லாத மனிதனை – முரண்பாடான கண்டனத்தின் வடிவங்களில் பல்வேறு வடிவங்களில் காட்சிப்படுத்துகிறது அவரது கவிதைகள்.

ராபர்ட் பிரவுனிங் தனது முன்னுரைகளில் ஒன்றில் அவரது வாசகர்கள் மற்றும் விமர்சகர்கள் குறித்து அறிவித்தது போல், “வேண்டுமென்றே தெளிவற்ற, மனசாட்சியின்றி கவனக்குறைவாக அல்லது வக்கிரமாக, கடுமையான குற்றச்சாட்டுகளை” அனைவரும் புரிந்துகொள்ள வேண்டியிருந்தது. அவர் கூறியது போல் போத்லேர் இதையும் கூறியிருக்கலாம்: “அப்போதும் அதற்குப் பிறகும் என்னால் முடிந்ததைச் செய்த எதையும் நான் குறை கூறவில்லை, குறைந்தது என்னையே” என்று.

“ஒன்றுக்கும் மேற்பட்ட வழிகளில் மனிதர்கள் கலகக்கார தேவதைகளுக்கு(சாத்தான்களுக்கு) தம்மை தியாகம் செய்கிறார்கள்” என்கிறார் செயிண்ட் அகஸ்டின். எந்த ஒரு பிரபல எழுத்தாளரின் கவிதையையோ அல்லது உரைநடையையோ அணுகும்போது, அவருடைய ஆளுமையை நாம் அவசியம் அணுக வேண்டும்; அதைக் கண்டுகொள்வதால் நாம் அவரை அடைகிறோம், நிச்சயமாக அவரை நேசிக்காமல் நாம் அதை நேசிக்க முடியாது. போத்லேயரைப் பொறுத்தவரை, ஞானிகள் அல்லது ஞானமற்றவர்களின் தீர்ப்பின்படி ஒருவர் அந்த மனிதனை வெறுக்கலாம் அல்லது நேசிக்கலாம். வெறுக்கப்படுவதை விட அவர் மிகவும் அன்பானவனாகக் தெரிவதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். “இனிமையான, அரிதான ஒன்றான இழந்த அப்பாவித்தனம், கண்களில் ஒளிர்கின்ற நேர்மை, குழந்தையைப் போன்ற மகிழ்ச்சியான ஆச்சரியம், பொறுமை. இவைகள் நம்மை ஒரு கணத்தில் பாதிக்கின்றன. மன்னிக்க முடியாத தவறுகளை நாம் பகிர்ந்து கொள்ள வேண்டும் படைத்த கடவுளோடும், நம்மைக் கண்டுபிடித்த மனிதனோடும்”.

போத்லர் ஏப்ரல் 9, 1821-ல் பாரிஸில் பிறந்தவர். அவருக்கு ஆறு வயதாக இருந்தபோது அவரது தந்தை இறக்கிறார். அவரது விதவைத் தாய் ஒரு வருடம் கழித்து கேப்டன் (பின்னர் ஜெனரல்) ஜாக் ஆபிக் என்பவரை மணந்து கொள்கிறார். 1832-ல் குடும்பம் லியோன்ஸுக்கு குடிபெயர்கிறது. இளம் சார்லஸ் பள்ளியில் சேர்க்கப்படுகிறார். 1836-ல் ஆபிக்கும் அவரது குடும்பத்தினரும் பாரிஸுக்கு குடிபெயர்கின்றனர். அவரது வாழ்நாள் முழுவதும் போத்லேர் தனது தாயுடனே இணைந்திருந்தார். இளம் வயதில் அவர் ஒரு கலகக்காரனாகவும் ஏற்றுக்கொள்ள முடியாத நபராக வாழ்ந்திருக்கிறார். வழக்கத்திற்கு மாறான நடத்தைகளும் ஆடம்பரமான வாழ்க்கை முறையும் அவரது குடும்பத்தை தொடர்ந்து கவலையடையச் செய்தது. 1844-ம் ஆண்டில் குடும்பத்தினர் அவரது நிதிகளை மேற்பார்வையிட நீதிமன்ற உத்தரவைப் பெற்று, அன்றிலிருந்து கவிஞர் நோட்டரி வழங்கிய கொடுப்பனவுகளில் வாழ்ந்தார் என்று வாழ்க்கைக் குறிப்பு சொல்கிறது.

1845-க்கு பிறகான சில ஆண்டுகளுக்குப் பின் கப்பல் மூலமாக இந்தியா சென்றுவருமாறு (குறிப்பாக கல்கத்தா) அவரது தாயாரால் கேட்டுக்கொள்ளப்பட்டு, புறப்பட்டு, பாதிவழியிலேயே மொரீஸியசில் இறங்கி அங்கிருந்துவிட்டுத் திரும்பியதும் அவரது வாழ்வில் நிகழ்ந்த மற்றொரு முக்கிய நிகழ்வே. ஏனெனில் கீழைத்தேய மனநிலை அமைப்பு கொண்ட நித்ய, அநித்ய, மாயா, இருப்பு, தனித்த மனம், இருண்மை சார்ந்த கவிதைகள் படைத்த (அவரை மீறியே) அவர் இந்தியாவிற்கு வந்திருந்தால் எதையுமே எழுதாமல் கூட அமைதியாக இருந்திருக்கச் சாத்தியங்கள் உள்ளதல்லவா.

அதன் பின்னர் பாரிஸில் வசித்த அவர் மற்ற எழுத்தாளர்களுடன் கலந்துரையாடுவதில் பெரிதும் விருப்பத்துடனே தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். இயற்கையின் மீதான காதல், வனப்புமிகு காட்சிகளைக் கொண்ட ரொமாண்டிஸத்துக்கு நேர்மாறாக போத்லேர் நவீன நகர்ப்புற வாழ்க்கையின் பல்வேறு உற்சாகத்தால் ஈர்க்கப்பட்ட ஒரு நகரக் கவிஞராக இருந்தார். கலை மேலிருந்த பற்று காரணமாக ”Before everything else, before my hunger, before my pleasure, before my mother” என்கிறார். தன்மை முன்னிலையாக இருத்தல், சமூகப் பிணைப்புகளை விட்டு விலகியிருத்தல், குடும்பம், நாடு, நட்பு இவற்றிலிருந்து விலகி சுதந்திரமாயிருத்தல் போன்றவற்றின் விதிகளாயிருந்த Dandyism-த்தின் மேல் அப்போது பற்று கொண்டிருந்தார்.

கவிதைகளில் போதனைகள் அற்றுப்போக விரும்பினார் போத்லேர். அரசியல், பொருளாதாரம், மற்ற எல்லா துறைகளின் போதனைகளிலிருந்தும் கவிதையானது விடுபட வேண்டுமென்று நினைத்தார். வறியவர், ஆதரவற்றோர், பிச்சைக்காரர்கள் போன்றோரின் கையறுநிலை, அவர்களின் தீப்பேறு ஆகியவைகளிலிருந்து அழகைப் பிரித்தெடுக்க முனைந்தார். இலட்சியங்களை உருவாக்குதல் பற்றிய நோக்கமே இல்லாமல் அசிங்கமானதை அதை அப்படியே சொல்வதிலும், நன்மையும் தீமையும் ஒன்றிணைந்து இசைவானதொரு முரண்பாட்டைக் கொண்டதே வாழ்வு என்பதை உணர்ந்தே தன் படைப்புகளில் வெளிப்படுத்தினார். தன் அனுபவத்தை உருவகங்கள், குறியீடுகள் வழியே யதார்த்தத்தின்படி காட்ட முனைந்தார்.

எண்ணிக்கைகளில் நம்பிக்கை இல்லாத அவர் நிறைய எழுதுவதில் ஆர்வம் காட்டவில்லை. எதைச் செய்தாலும் அது ஒப்பற்ற ஒன்றாக இருக்கவே விருப்பப்பட்டார். Flower of Evil-ஐ 1950-ல் எழுதத் தொடங்கிய அவர் அதன் குறைகளைக் களைந்து பத்தாண்டுகள் திருத்தி எழுதி அதனைப் பொலிவுறச் செய்து 1961-ம் ஆண்டு இறுதி வரைவினை அடைந்திருக்கிறார்.

The first edition of Les Fleurs du mal with author’s notes

1857-ல் போத்லேரின் முக்கியப் படைப்பான தி ஃப்ளவர்ஸ் ஆஃப் ஈவில் வெளியானது. அந்நேரத்தில் குஸ்தவ் ஃப்ளூபெர்ட்டின் (மேடம் பவாரிக்காக) விடுதலையால் ஏற்கனவே கோபமடைந்திருந்த பிரெஞ்சு அதிகாரிகள் Flower of Evil புத்தகத்தை உடனடியாகக் கைப்பற்றினர். இரண்டு மாதங்களுக்குள் போத்லேரும் அவரது பதிப்பாளரும் அபராதம் செலுத்தவும் ஆறு கவிதைகளை நீக்கவும் கண்டிக்கப்பட்டனர். 1861-ல் அதிகமான கவிதைகளுடன் இரண்டாவது பதிப்பு வெளிவந்தது. மேலும் புதிய பாடல் வரிகள் பின்னர் அச்சிடப்பட்டதில் சேர்க்கப்பட்டன.

கவிதைகள், மொழிபெயர்ப்புகள் மற்றும் விமர்சனங்களை வெவ்வேறு பத்திரிகைகளில் வெளியிட்டார். எட்கர் ஆலன்போவை அவர் முதன்முறையாகப் படித்தபோது அவர்கள் இருவருக்குமான கருத்துகளின் ஒற்றுமையால் அவர் பாதிக்கப்பட்டார். அழகுக்கான எட்கர் ஆலன் போவின் அர்ப்பணிப்பு, வினோதமான படங்கள், மரணத்தின் மீதான அவரது ஈர்ப்பு, எல்லாவற்றிற்கும் மேலாகக் கைவினைத்திறனுடன் முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்ட கலைக்கு முக்கியத்துவம் கொடுத்தது. 1856 முதல் 1865 வரை வெளியிடப்பட்ட ஐந்து தொகுதிகளில் சேகரிக்கப்பட்ட Poe, Baudelaire தொகுதிகளில் கான்சியா மொழிபெயர்ப்புகள் மிகவும் பிரபலமானவை. ஐரோப்பிய வாசகர்களுக்கு போத்லேரை நல்லவண்ணம் அறிமுகப்படுத்த அது உதவியது.

அதன்பிறகு சார்லஸ் ஒரு விமர்சகராகவும் அறியப்பட்டார். அவர் தனது கலை விமர்சனத்தில் நவீனத்துவத்தின் உணர்வை விளக்கி நிலைநிறுத்தினார். ஓவியர்களான யூஜின் டெலாக்ரோயிக்ஸ் மற்றும் கான்ஸ்டன்டின் கைஸ் ஆகியோரைப் பற்றிய குறிப்பிடத்தக்க ஆய்வுகளும் அதில் அடக்கம்.

1860-களின் தொடக்கத்தில் உரைநடைக் கவிதைகளை வெளியிடத் தொடங்கினார். பிரான்சிலேயே கிட்டத்தட்ட அறியப்படாத ஒரு புதிய வடிவத்தைப் பரிசோதித்தார் எனலாம். அதில் அவர் – ‘கவிதையானது உரைநடையின் அதிசயத்தை தாளமோ ஒழுங்கோ இல்லாத இசையுடன் ஆன்மாவுக்கு ஏற்ப மாற்றிக்கொள்ள முடியும்‘ என்று தான் நம்பியதைக் குறிப்பிடுகிறார்.

1862-ல் போத்லேர் துர்கனவுகளையும் மோசமான உடல்நிலையையும் அனுபவிக்கத் தொடங்கினார். தொடர்ச்சியான விரிவுரைகளை வழங்குவதற்காக 1863-ல் பாரிஸை விட்டு பிரஸ்ஸல்ஸுக்குச் சென்றார். தனது அழிவை நோக்கிச் செல்வது போன்ற தூண்டலில் ஒழுக்கமின்றி மிதமிஞ்சிய குடி, போதைப் பொருட்களை எடுத்துக்கொள்ளல் போன்றவற்றால் உடல்நிலை சீர்கேடு அடைந்தது. நோயும் வறுமையும் பைத்தியம் பிடித்துவிடுமோ என்ற பயமும், தற்கொலை செய்துகொள்ளலாமா என எண்ணுதலுமான எண்ணங்களுக்கு இடையில் ஆதரவற்ற நிலையோடு அவர் பெயரே அவருக்கு நினைவில் இல்லாதது, அவரது முகத்தையே அவரால் கண்ணாடியில் அடையாளம் காண முடியாதது எல்லாம் அவருக்கு பெரும் துன்பமாக இருந்தது. அங்கு பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். இதன் விளைவாக முடக்குவாதம் ஏற்பட்டது. ஆகஸ்ட் 31, 1867-ல் தனது நாற்பத்தாறு வயதில் சார்லஸ் பாரிஸில் இறந்தார். அப்போது மருத்துவர்கள் மரணத்திற்கான காரணங்களைக் குறிப்பிடவில்லை என்றாலும், சிபிலிஸ் அவரது இறுதி மூச்சை நிறுத்தச் செய்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

அவரது வாசகர்கள் போத்லேயரின் மனதிலிருந்து வெகு தொலைவில் இருப்பதாக நினைக்கவில்லை. அவரது அதிர்ச்சியடையவும், திடுக்கிடவும், நேசத்துக்குரிய கருத்துக்களைச் சார்ந்த மதிப்புகளையும் கூட வாசகர்களை மறுபரிசீலனை செய்யத் தூண்டினார். The Flowers of Evil, To the Reader என்ற நூலுக்கான முன்னுரையில் போத்லேர் தானும் வாசகனும் ஒரு பொதுவான குற்ற உணர்ச்சியில் சிக்கியிருப்பதை வலியுறுத்துவதன் மூலம் மனிதத் தீமைகளின் பட்டியலை வைக்கிறார்: “நீ நயவஞ்சக வாசகன்-என் இரட்டை-என் சகோதரன்!” என்ற கவிஞரின் வலியுறுத்தும் கருப்பொருள் புத்தகத்தின் முன்னுரையாய் குறிப்பிடப்பட்டுள்ளது.

மனச்சோர்வின் நிலைத்தன்மையே மனிதர்களை நன்மைக்காகவோ அல்லது தீமைக்காகவோ செயல்படவிடாமல் தடுத்து, தேர்ந்தெடுக்கும் பகுதிக்கு வெளியே நிற்க வைக்கிறது. மனித குலத்திற்கு எதிரான சாத்தானின் மிகவும் பயங்கரமான ஆயுதம் மிகவும் வண்ணமயமாக விவரிக்கப்பட்டுள்ள பாவங்களின் வழிபாட்டு முறை அல்ல, மாறாக செயலின் சாத்தியத்தை குறைக்கும் திறன் என்று To the Reader(Au Leteur)-ல் போத்லேர் வாதிடுகிறார். தொகுப்பின் முடிவில் போத்லேயரால் வைக்கப்பட்டுள்ள பகுதியானது மனதின் மந்தநிலையின் எதிர்நிலையை விவரிக்கிறது. இலக்குகளுக்கான செயலில் தேடல் எப்போதும் அடைய முடியாதது என்றும் கூறுகிறது.

எட்டு பிரிவுகளில் எழுதப்பட்ட ஒரு நீண்ட கவிதை கவிஞரின் கூற்றுப்படி, மனித முன்னேற்றத்தில் தற்போதைய நம்பிக்கையைச் சீர்குலைக்கும் வகையில், The Voyage என்பது ஏமாற்றத்திலும் வெறுப்பிலும் முடிவடையும் தற்காலிக முன்னேற்றங்களின் தொடராக விவரிக்கிறது. இதனைப் போன்ற சிறிய சாதனைகள் – புதிய நிலங்களைக் கண்டுபிடிப்பது, புதிய ஆடம்பரங்களைக் கண்டுபிடிப்பது, புகழையும் செல்வத்தையும் பெறுவது, சோகம் மற்றும் சிற்றின்பத்தில் பரவசத்தைத் தேடுவது – இவை அனைத்தும் ஏமாற்றத்தில் கட்டுப்பட்டவை, ஏனென்றால் அவை ஒரு பெரிய முடிவில்லாத பயணத்தின் அடையாளங்களாக எல்லையற்ற தேடலில் மட்டுமே உள்ளது. மனிதர்களின் உள் மனம் எல்லையற்றவைகளால் ஆனதால் அவர்களால் எந்த வரம்புகளிலும் திருப்தி அடைய முடியாது, அத்துடன் அறியப்படாததையும் புதியதை நோக்கியும் தொடர்ந்து பயணிக்க வேண்டும் என்றும் அறிவிக்கிறார். கடைசி வரி, “தெரியாத ஆழத்தில், புதியதைக் கண்டுபிடிப்போம்!”. இதுபோன்ற வரைபடம் ஆக்கப்படாத எல்லைகளை ஆராயும் சிந்தனைகள் புதிய புதிய நுண்ணறிவுகளைத் தேடும் தலைமுறைகளுக்கு அது கைமாறியது.

போத்லேர் மனச்சோர்வுக்கும் மகிழ்வின் தருணங்களுக்கும் இடையில் மாறி மாறி வாழ்நாள் முழுதும் இருந்திருக்கிறார். இங்கே கவிஞன் உணர்ச்சியில் தன்னைக் கைவிட்டு, இருளில் மூழ்குவது நடக்கத்தான் செய்கிறது. போத்லேரின் கவிதையானது அவரது சிக்கலான கற்பனைப் பிரபஞ்சத்தின் மூலப்பொருளுக்காக உலகில் எவ்வளவு தொலைவு சென்றாலும், வலுவான அகநிலைத் தூண்டுதல் மூலம் மேற்பார்வையிடுகிறது. “ஒவ்வொரு நல்ல கவிஞரும் எப்பொழுதும் ஒரு யதார்த்தவாதியாகவே இருந்திருக்கிறார்கள்” என்று போத்லேர் உறுதியாகவே நம்பினார்.

மேலைநாட்டுக் கவிஞர்களிலேயே மரணத்தைக் குறியீட்டுப் படிமமாக மட்டுமே விவரிக்காமல், முதன் முறையாக மரணத்தையே தன் கவிதைகளுக்குச் சாரமாக எடுத்துக்கொண்ட கவிஞர் போத்லெர் என்றுகூடச் சொல்லலாம். ஏனென்றால் அவரைப் பொறுத்தவரை மரணம் என்பது அருவமான, சூட்சுமமான கருத்தாக்கம் மட்டுமல்ல; அது எப்போதும் நம் கண்முன்னே ஒரு காட்சிப் பொருளாக இருந்துகொண்டு, மனிதனின் பிரக்ஞையின் எல்லைகளை விரிவுபடுத்திக் கொண்டிருக்கிறது. – குமரன் வளவன்-தீமையின் மலர்கள்(க்ரியா) குறிப்புரையிலிருந்து.

வழக்கமான யதார்த்தவாதத்திற்கு அப்பாற்பட்ட விளைவுகளுக்குப் பயன்படுத்தப்படும் அசாதாரண விவரங்களில் தேர்ச்சி பெற்றவர் போத்லேர். “The Carcass“-ல் ஒரு இறந்த உடலின் மீது புழுக்கள் திரள்கின்றன. அழுகும் விலங்கு சடலத்தில் வெளிப்புறங்களில் மங்கலான, மிகைப்படுத்தப்பட்ட, சலசலக்கும், அதிர்வுறும் புதிய வாழ்க்கையின் தூண்டுதலில் ஒரு விசித்திரமான அழகைப் பற்றி கூர்மையாகச் சொல்கிறது. கவிதையின் வெளித்தோற்றமான கருப்பொருள், “நாளைக் கைப்பற்று” அல்லது “எதிர்காலத்தைப் பற்றி சிந்தித்து இப்போது என்னை நேசி” என்பதாகும். ஏனெனில் ஒரு கவிஞனால் மட்டுமே அழகைப் பாதுகாக்க முடியும் என்பதை உறுதியாக நம்பினார். சத்தமில்லாத மழை பொழிவுகள், கார்க் செய்யப்படாத வாசனை திரவிய பாட்டில்கள், மாங்கி பூனைகள், சீட்டுக்கட்டுகள், பழங்கால ஆடைகள், போன்ற சாதாரண பொருட்களை போத்லேர் தம் கவிதைகளுக்கிடை செருகி வைக்கிறார்.

இத்தகைய விவரங்கள் ஒரே நேரத்தில் புராணீக உருவகக் காட்சிகளுக்கும் பொருளைக் கொடுக்கின்றன. Spleen LXXVIII-ல் உள்ள தண்ணீரைப் பற்றிய முழுமையான நடைமுறைக் குறிப்புகளின் வரிசையிலிருந்து இறப்பு பற்றிய ஒரு குளிர்ச்சியான வெளிப்பாடு காட்சிப்படுகிறது, நகரத்தில் மழையானது மூடுபனியுடன் தொடங்குதல், பூனை ஒன்று சௌகரியமாக முறுக்கிக் கொண்டு திரும்புவது, மழைப்பொழிவின் சத்தம், ஈரமான மூச்சுத்திணறல், மரம், ஈரமான கடிகார ஊசல், இறந்த ஒரு வயதான பெண் விட்டுச் சென்ற சீட்டுக்கட்டு ஆகியவை காட்சிப்படுகிறது.

பாரிஸ் ப்ளீனில் சிறிய கவிதைகள் என வெளியிடப்பட்ட உரைநடைக் கவிதைகளிலும் இதே போன்ற கருப்பொருள்கள் காணப்படுகின்றன. இக்கவிதைகள் பொதுவாக உரைநடைக் கவிதையின் முதல் முக்கிய எடுத்துக்காட்டு என விமர்சகர்களால் பார்க்கப்படுகிறது, இருப்பினும் போத்லேயர் உண்மையில் திட்டமிட்டு ஒரு வகைமையைத் தோற்றுவிக்கவில்லை. ஆனாலும் கவிதையின் உரைநடை அதன் சொந்த வழியை ‘ரைம் இல்லாமல்’ இசையாகக் கண்டறிய வேண்டியதன் அவசியத்தை அவர் நன்கு அறிந்திருந்ததால் சரணங்கள் பத்திகளாகின்றன; வாக்கிய நீளம், தொடரியல் மற்றும் ஒலி வடிவங்களில் உள்ள மாறுபாடுகள் மூலமாகவும் காட்சிகள் மற்றும் டோன்களின் ஒத்திசைவு மூலமும் உருவாக்கப்பட்டிருப்பது புலனாகிறது. ரிதம் மறுக்கமுடியா அளவுக்கு தெளிவாக இருந்து சிறப்புத்தன்மையை தானே உருவாக்கிக் கொண்டிருப்பது புலனாகிறது. தீமையின் மலர்கள் பாடல் வரிகளில் பெரும்பாலும் புதைந்து கிடக்கும் எதார்த்தம் உரைநடைக் கவிதைகளில் மேலோட்டமாகத் தோன்றுகிறது. போத்லேர் தி வோயேஜின் புதிய அனுபவங்களுக்கான முடிவில்லாத தேடலை எனிவேர் அவுட் ஆஃப் தி வேர்ல்டில் ஒரு கற்பனை உரையாடலாக மாற்றி மறுபரிசீலனை செய்கிறார்.

எல்லா சந்தர்ப்பங்களிலும் கலைஞன் தனிமையிலேயே இருக்கிறான். மண்ணீரலின்(Spleen) மனச்சோர்வை கலையின் கற்பனையில் மகிழ்ச்சியை ஊடுபாவாக்கி அனுபவிக்கிறார். அது அதன் சொந்த உலகத்தை உருவாக்கி பிரும்மாண்டப்படுத்துகிறது. கவிதையிலோ உரைநடையிலோ கனவுக்கும் நிஜத்திற்கும் இடையேயான மாற்றம் தொடர்ந்து நடைபெறுகிறது.

போத்லேர் ஒரு சிக்கலான, முரண்பாடான கவிஞர். காதல் முரண்பாட்டின் வாரிசு. அவர் மனித இருப்புக்கு எதிரான அனைத்து எதிர்நிலைகளையும் தழுவ விரும்பினார். நன்மை-தீமை, அன்பு-வெறுப்பு, சுய-பிற, கனவு-யதார்த்தம், அவனுடைய உறவுகள், மனதின் எதிரொலிகள் இவற்றைப் பற்றியே திரும்பத் திரும்ப தம் கவிதைகளில் நகர்த்திச் செல்கிறார். Sonnet வடிவிலமைந்த Correspondances கவிதை இயற்கையின் அனைத்து மாய ஒற்றுமையின் பார்வையை விவரிக்கிறது. இஃது நமது ஐந்து புலன்களின் பரஸ்பரத்தன்மையால் நிரூபிக்கப்பட்டுள்ளதை ஒப்புநோக்கலாம். நிரந்தர ஒப்புமைகளின் அமைப்பில் ஒன்று எப்போதும் மற்றொன்றுடன்(இயற்பியல் பொருள்களுடன்) ஒத்துப்போவதைச் சொல்கிறது.

ஆன்மிக யதார்த்தத்திலிருந்து உடலுக்கான யதார்த்தம் வரை ஐந்து புலன்கள் (சுவை, வாசனை, தொடுதல், பார்வை மற்றும் செவிப்புலன்) ஆகியவை தங்களுக்குள் “கசப்பானவை”, “மென்மையான தோற்றம்” அல்லது “அதுபோன்ற கலவைகளை” உருவாக்குகின்றன. மனிதர்கள் பொதுவாக “உலகளாவிய ஒப்புமை” பற்றி அறிந்திருப்பதில்லை. பொது மனிதர்களான நம்மை அறியாமலேயே நம்மைப் பார்க்கிறது. ஆனால் ஒரு பார்வையாளராகவும் வழிகாட்டியாகவும் கவிஞன் இங்கே செயல்படுகிறான். இவை இரண்டும் இருக்கும் விழிப்புணர்வு நிலையை நோக்கி நம்மைத் தூண்டுகிறான். மனமும் புலன்களும் வேறொரு பரிமாணத்தில் இணைகின்றன. இது பரவசமான விழிப்புணர்வின் நிலையை விவரிக்கிறது என்றாலும், அது தர்க்க வாதத்தின் நிலைகளில் செயல்படுகிறது.

மனதின் நல்லிணக்கத்திற்கான போத்லேரின் ஏக்கம் உண்மையில் ஒரு தளத்தையோ அல்லது புத்திசாலித்தனத்தின் கடுமையான பயன்பாட்டையோ புறக்கணிக்கவில்லை. இலட்சியவாதப் பார்வை, யதார்த்த விவரம், கலை ஒழுக்கம் ஆகியவற்றின் கலவை அவரை பத்தொன்பதாம் நூற்றாண்டின் மிகவும் செல்வாக்கு மிக்க கவிஞராகவும் நவீன யுகத்தின் முதல் கவிஞராகவும் அறியப்படச் செய்தது. வெற்று பாவனைகளோ, நடிப்போ, பின்வாங்குதலோ இல்லாமல் தனக்கு நிகழ்ந்தவற்றை ஆழமாகவும் நேர்மையாகவும் பதிவுசெய்ததன் வாயிலாக கவிதைக்கான நுணுக்கத்தை விட அது ஏற்படுத்திய மனப் பதிவுகளின் உறுதியே அவரது பெரும் பலமாகத் தெரிகிறது.

அவரது உரைநடைகள், உரைநடைக் கவிதைகள் பல்வேறு நவீன கவிஞர்களாலும் பெயர்ப்பாளர்களாலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. பிரஞ்சு உரைகளில் குறிப்பாக முக்கியத்துவம் வாய்ந்த கூறுகளாக அடிக்குறிப்புகள் அவ்வப்போது சுட்டிக்காட்டுகின்றன.

Lois Boe Hyslop, Charles Baudelaire Revisited (1992), ஒரு பயனுள்ள அறிமுக ஆய்வு. Enid Starkie, Baudelaire (1953), ஆங்கிலத்தில் முழுமையான சுயசரிதை. Henri Peyre, ed., Baudelaire: A Collection of Critical Essays (1962), The Flowers of Evil பற்றிய பதினொரு கட்டுரைகளைக் கொண்டுள்ளது, இதில் ப்ரூஸ்ட் உட்பட முக்கிய எழுத்தாளர்களின் தேர்வுகள் அடங்கியவை. Harold Bloom, ed., Charles Baudelaire (1987), Boudelare-ன் கருப்பொருள்கள், இலக்கியம் மற்றும் கலை விமர்சனம், தேர்ந்தெடுக்கப்பட்ட நூல்கள், எட்கர் ஆலன் போ தொடர்பான பத்து சமகாலத்தவர்களை விமர்சிக்கிறார். Patricia Clements, Baudelaire and the English Tradition (1985) – ஸ்வின்பர்னிலிருந்து T. S. எலியட் வரையிலான ஆங்கில இலக்கியத்தில் Baudelare-ன் செல்வாக்கு மிக்க உயர்தரமான பகுப்பாய்வு (இது மறைக்கப்பட்ட குறியீட்டு பாரம்பரியத்துடனான ஒப்பீடுகளுடனான முரண்பாடுகளையும் உள்ளடக்கியது), Margery A. Evans, Baudelaire and Intertextuality: Poetry at the Crossroads (1993) – உரைநடைக் கவிதைகளில் கையாளப்பட்ட இலக்கிய மரபுகளை பகுப்பாய்வு செய்கிறது. Rosemary Lloyd’s Selected Letters of Charles Baudelaire: The Conquest of Solitude (1986) – இலக்கியக் கடிதங்களின் வரம்பைக் கொண்டது. லாரன்ஸ் எம். போர்ட்டர், தி க்ரைசிஸ் ஆஃப் பிரெஞ்ச் சிம்பாலிஸம் (1990), F. W. Leakey, Baudelaire, Les Fleurs du Mal (1992) – போத்லேரின் முக்கிய படைப்புகளுக்கான ஒரு சிறிய வழிகாட்டி.

1840-ம் ஆண்டு எட்கர் ஆலன் போவின் படைப்புகளை போத்லேர் காண நேர்கிறது. அமெரிக்க எழுத்தாளரின் சிந்தனைக்கும் மனோபாவத்திற்கும் அவரது சொந்த சிந்தனைக்கும் உள்ள ஒற்றுமைகளைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் தனது வாழ்நாள் முழுவதும் தனது வழக்கமான தொழிலைப் (வேறென்ன?.. கவிதை, கட்டுரைகள் உருவாக்குதல்தான்) பார்ப்பதற்கும் வருமானம் ஈட்டவும் அவர் மொழிபெயர்ப்பின் பணியைத் தொடங்கினார். எட்கர் ஆலன் போவின் Mesmeric Revelation-ன் போத்லேரின் மொழிபெயர்ப்பு ஜூலை 1848-ல் வெளிவந்தது, அதன்பின் மொழிபெயர்ப்புகள் Histoires extraordinaires (1856; “Extraordinary Tales”) and Nouvelles Histoires extraordinaires (1857; “New Extraordinary Tales”) புத்தக வடிவில் தொகுக்கப்படுவதற்கு முன்பு மதிப்புரைகளில் தொடர்ந்து வெளிவந்தன. ஒவ்வொன்றும் போத்லேயரின் முக்கியமான விமர்சன அறிமுகத்திற்கு உதவியது. இவற்றைத் தொடர்ந்து Les Aventures d’Arthur Gordon Pym (1857), Eurêka (1864) மற்றும் Histoires grotesques et sérieuses (1865; “Grotesque and Serious Tales”) மொழிபெயர்ப்பாக இப்படைப்புகள் பிரெஞ்சு உரைநடையின் உன்னதமான சிறந்த ஒன்றாக விளங்கியது அத்துடன் அல்லாமல் எட்கர் ஆலன்போவுக்காக எழுதப்பட்டபோதும் போத்லேருக்கு அவரது சொந்த அழகியல் கோட்பாடுகளுக்கும் கவிதையின் இலட்சியங்களில் அதிக நம்பிக்கையையும் அளித்த வகையில் இதை முக்கியமான நிகழ்வாகவே கருதிக் கொள்ளலாம். இவற்றைத் தொடர்ந்து Les Aventures d’Arthur Gordon Pym (1857), Eurêka (1864) மற்றும் Histoires grotesques et sérieuses (1865; “Grotesque and Serious Tales”). மொழிபெயர்ப்பாக இந்தப் படைப்புகளும் பிரெஞ்சு உரைநடையின் உன்னதமானவையாகக் கருதப்படுகிறது.

அதற்குப் பிறகு போத்லேர் பழமைவாத கோட்பாட்டாளர் ஜோசப் டி மேஸ்ட்ரேவின் பணிகளையும் படிக்கத் தொடங்கினார். அவர் போவுடன் சேர்ந்து இயற்கைக்கு எதிரான மற்றும் மனிதநேயத்திற்கு எதிரான திசையில் அவரது சிந்தனையைத் தூண்டினார். 1850-களின் நடுப்பகுதியில் இருந்து போத்லேர் தன்னை ஒரு ரோமன் கத்தோலிக்கராகக் கருதிக் கொண்டார். ஆனாலும்கூட நிஜமான பாவம், சாத்தானைப் பற்றியதும் கடவுளின் மன்னிப்பு – இவையெல்லாம் அன்பின் மீதான நம்பிக்கையால் அதையெல்லாம் ஒரு பொருட்டாகவே எண்ணாமல் இருந்தார்.

இதற்கிடையில் போவின் மொழிபெயர்ப்பாளராகவும் கலை விமர்சகராகவும் போத்லேர் நற்பெயர் பெற்றதன் மூலம் அவரது சில கவிதைகளை வெளியிட வாய்ப்பு அமைந்தது. ஜூன் 1855-ல் Revue des deux mondes அவரது 18 கவிதைகளின் வரிசையை Les Fleurs du mal என்ற பொதுத் தலைப்பின் கீழ் வெளியிட்டார். அசலான பாணி, திடுக்கிடும் கருப்பொருள்களுக்காகத் தேர்ந்தெடுத்த கவிதைகள் அவருக்குப் புகழ் சேர்த்தன. அதற்கடுத்த ஆண்டு போத்லேர் அந்தத் தலைப்புடன் ஒரு முழுநீளக் கவிதைத் தொகுப்பிற்காக வெளியீட்டாளர் Poulet-Malassis உடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். Les Fleurs du mal-ன் முதல் பதிப்பு ஜூன் 1857-ல் வெளியிடப்பட்டபோது, அதனுள் இருந்த 100 கவிதைகளில் 13 கவிதைகள் மதத்திற்கும் பொது ஒழுக்கத்திற்கும் முரணாக உள்ளது என்ற குற்றங்களுக்காக வழக்குத் தொடரப்பட்டது.

ஆகஸ்ட் 20, 1857-ல் ஒருநாள் விசாரணைக்குப் பிறகு, ஆறு கவிதைகளை ஆபாசத்தின் அடிப்படையில் புத்தகத்திலிருந்து நீக்குமாறு உத்தரவிடப்பட்டது. ஆறு கவிதைகள் முதன்முதலில் பெல்ஜியத்தில் 1866 ஆம் ஆண்டு Les Épaves (“ரெக்கேஜ்”) தொகுப்பில் மீண்டும் வெளியிடப்பட்டன, மேலும் அவற்றின் மீதான அதிகாரப்பூர்வ தடை 1949 வரை திரும்பப் பெறப்படவில்லை. இந்தச் சூழ்நிலைகளின் காரணமாக, Les Fleurs du mal என்பது சீரழிவுக்கான ஒரு சொல்லாக மாறியது. நோயுற்ற தன்மை, ஆபாசம், எதிர்ப்பாளர் அத்துடன் ஆபாசக் கவிஞராக போத்லேரைப் பற்றிய புராணக்கதைகள் உருவாகத் தொடங்கியது எனலாம்.

அவர் மிகவும் எதிர்பார்த்திருந்த Les Fleurs du mal-ன் தோல்வி, Badelaire-க்கு ஒரு கசப்பான அனுபவமாக மாறியிருந்தது. அத்துடன் அவரது சொந்த வாழ்க்கையில் வளர்ந்து வந்த தோல்விகள், ஏமாற்றம், விரக்தியின் உணர்வு போன்றவைகளால் அவரது மனம் இருண்டிருந்தது.

இந்த ஆண்டுகளில் போத்லேர் தனது சிறந்த படைப்புகளில் சிலவற்றை எழுதியிருந்தாலும் சிலதே புத்தக வடிவில் வெளியிடப்பட்டன. உரைநடைக் கவிதையில் தனது ஆரம்பகாலச் சோதனைகளை வெளியிட்ட பிறகு தீமையின் மலர்கள் இரண்டாவது பதிப்பைத் தயாரிக்கத் தொடங்கினார். 1859-ம் ஆண்டில் செயின் நதி முகத்துவாரத்தில் உள்ள ஹொன்ஃபிளூரில் தனது தாயுடன் வசித்து வந்தபோது, 1857 ஆம் ஆண்டில் ஆபிக் இறந்தபின் அவர் ஓய்வு பெற்றபோது, போத்லேர் ஜனவரியில் “லே வோயேஜ்” இல் தொடங்கி, பரந்த அளவில் உச்சக்கட்ட கவிதைத் தலைசிறந்த படைப்புகளைத் தொடர்ச்சியாக எழுதியிருந்தார். ‘தி ஸ்வான்’ அவரது சிறந்த தனிக் கவிதையாகக் கருதப்பட்டது.

அதே நேரத்தில் அவர் கலை விமர்சனத்தில் மிகவும் முக்கியமான இரண்டு கட்டுரைகளை எழுதினார். அதில் ஒரு கட்டுரை இம்ப்ரெஷனிஸ்ட் பார்வையையும் அப்பாணியின் முக்கிய கூறுகளின் தீர்க்கதரிசன அறிக்கையாகவும் பரவலாகப் கவனிக்கப்பட்டது. 1860-ம் ஆண்டு Les Paradis artificiels வெளியிடப்பட்டது. ஆங்கில கட்டுரையாளர் Thomas De Quincey-வின் Confessions of an English Opium-Eater-ன் பகுதிகளை Baudelare மொழிபெயர்த்தார்.

பிப்ரவரி 1861-ல் தீமையின் மலர்கள் மேலும் பெரிதாக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டது. அத்துடன் தியோஃபில் காட்டியர் (1859), ரிச்சர்ட் வாக்னர் (1861), விக்டர் ஹ்யூகோவையும் பிற சமகால கவிஞர்கள் (1862), மற்றும் டெலாக்ரோயிக்ஸ் (1863) பற்றிய முக்கியமான விமர்சனக் கட்டுரைகளையும் ஒரே நேரத்தில் போத்லேர் வெளியிட்டார்.

Me Spleen de Paris 1867-ல் வெளிவருகிறது. Spleen என்பதை போதலேர் melancolie (ஆங்கிலத்தில் melancholy) என்ற பொருளில் கையாள்கிறார் எனலாம். Spleen என்றால் மண்ணீரல் என்று இன்னொரு பொருளும் உண்டு. மேற்கத்திய மருத்துவ, ரசவாத மரபை எடுத்துக்கொண்டால், உடலின் உணர்வு-நிலைகளாக, ஐயங்களாக (humours) நான்கை ஏற்கிறார்கள். அவை melancholic, phlegmatic, choleric, and sanguine. முறையே black bile, phlegm, yellow bile, blood ஆகியவற்றால் ஏற்படும் ஐயங்கள் எனலாம். உதாரணமாக, பதினாறாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், இவற்றைக் குறிப்பதாக, ஜெர்மன் கலைஞர் ஆல்ப்ரெக்ஹ்ட் ட்யூரெர் (Albrecht Diürer) செதுக்கிய நான்கு சித்திரங்கள் உண்டு – Meloncholia என்கிற சித்திரம் உட்பட. இந்த உணர்வு-நிலைகள், இந்திய / தமிழ் மரபுகளில் பித்தம், கபம், வாதம் மற்றும் மூத்திரம் என்ற நான்காக இருக்கின்றன. ஆயுர்வேதமும் சரி, சித்த மருத்துவமும் சரி இவற்றை ஏற்கின்றன. இவற்றில், பித்த நீரும் அதையொட்டிய பித்த உணர்வும் சுரப்பது, மண்ணீரல் உள்ளிட்ட ஈரற்குலைப் பகுதியில்தான் என்பதால், melancolie என்ற ஒருவகைத் தனிமைவாச சோகம் நிரம்பிய உணர்வை, புதுமைப்பித்தமாக, கவிதை-உரைநடை இரண்டும் கலந்ததாக ஏற்கிறார் போதலேர். (உயிர் எழுத்து-May 2008 இதழில் நாகார்ஜுனன்)

இவை அனைத்தும் L’Art romantique-ல் அவரது மரணத்திற்குப் பிறகு சேகரிக்கப்பட்டன. Fusées (’ராக்கெட்ஸ்’) மற்றும் Mon coeur mis à nu (“My Heart Laid Bare”) என்ற தலைப்பிலான சுயசரிதைத் துண்டுகள் 1850-கள், 60-களின் முற்பகுதியில் இருந்து எடுக்கப்பட்டும் சேர்க்கப்பட்டது.

தமிழில் தீமையின் மலர்கள் என்ற தலைப்பில் போத்லேரின் கவிதைகள் க்ரியா வெளியீடாக குமரன் வளவன் மொழிபெயர்ப்பில் வெ.ஸ்ரீராம் அவர்களின் ஆலோசனையின்படி மிக அழகிய முறையில் குறிப்புகளோடு வெளிவந்திருக்கிறது.

கீழே இரண்டு வெவ்வேறு மொழிபெயர்ப்புக் கவிதைகள்:

இலையுதிர்காலப் பாடல்

1
விரைவில் மூழ்குவோம்
குளிரின் பனிப்போர்வையில்.
சுருங்கிவிட்ட ஜூலையின்
ஜுவாலைகளுக்கு விடைதந்து.
அடுத்த வளாகத்தில்
வீழும் விறகு பலதின்
இறுதி ஊர்வலத்தை
இப்போதும் கேட்கிறேன்.

இன்னும் ஒருமுறை
குளிர்காலம் என்மீது உருளட்டும்.
வன்மம் வெறுப்பு
நடுங்கும் பதற்றம்
உழைப்பின் சபித்த பேராசை
மற்றும்
துருவமெனும்
தன் தூர நரகத்தின்
சூர்யனைப் போலாகட்டும்
என் இதயம்
செவ்வெரிப் பனிக்கட்டியாய்.

சப்தத்துடன்
வீழ இருக்கும் விற்கு
ஒவ்வொன்றுக்குமாய்
அதிர்ச்சியுடன்
காத்திருக்கிறேன்.
இப்படித்தான்
எழும் தூக்குக்கயிறு முன்
தலைகுனிவர் குற்றவாளிகள்.
ஓ, தகர்க்க மோதும் தூணே!
கொந்தளிக்கும் என் ஆன்மா

நடுங்கி வீழ அலையும்
நொறுங்கும் கோபுரமாய்.
பித்தமாய்
சவப்பெட்டி முடிக்கும்
சுத்தியலாய்
என் கனவுவரை
தாலாட்டும் எதிரொலி பல.
யாருக்காக?
நேற்றுத்தான் ஜுன்.
இன்றோ இலையுதிர்காலம்.
மர்ம ஒப்பாரியே,

இறந்ததும் யாரிங்கே?

2
தூக்கம் தழுவும் தீக்கொண்ட
உன் நீண்ட பைங்கண்ணை
நேசிக்கிறேன்.
இனியவளே, எல்லாமே கசக்கும் எனக்கு.
உன் அறையோ
அடுப்போ ஆசையோ
கடலில் தெறிக்கும்
சூர்ய ஒளிக்கு ஈடல்ல.

மெல்லிதயமே
என்னை நேசி.
நன்றியற்றவர் கொடியவர்
எவருக்கும்
தாய் காதலி சகோதரி நீ!
சிறிதே இலையுதிர்காலமாய்,
படுங்கதிராய்
இனிதாய் என்னை நேசி.

நேரம் அதிகமில்லை.
காத்திருப்பதோ
பசித்த கல்லறை.
என் நெற்றி சற்றே
தொடட்டும்
உன் முழங்காலை.

ஜூனின் வறண்ட சூட்டுக்கு
வருந்தும் நான்
சுவைக்கட்டும்
சட்டென மறையுமுன்
மெல்லிய
இந்த அக்டோபரை.

Charles Baudelaire, Chant d’Automne, Fears du Mal, Paris, 1857
-நாகார்ஜுனன் Aug 19- 2008

பிணைத்தொகை

தன்னுடைய பிணைத்தொகையைச் செலுத்த மனிதனிடம்
அக்கினிப் பாறைகள் நிறைந்த இரண்டு களங்கள் உண்டு;
அந்தப் பாழ்நிலங்களை அறிவின் கொழுவால்
அவன் உழுது சீராக்க வேண்டும்;

சிறிய ரோஜா மலர் கிடைக்க,
சில கதிர்களைப் பறிக்க,
அவன் சாம்பல் நிற நெற்றியின் உப்புக் கண்ணீரை
இடைவிடாது அங்கு பாய்ச்ச வேண்டும்.

ஒரு களம் கலை, இன்னொன்றோ காதல்.
கறாரான நீதி வழங்கப்படும்
அந்தப் பயங்கர நாளில்
நீதிபதியின் பரிவைத் தூண்ட,

அறுவடையால் நிரம்பிய களஞ்சியங்களையும்
தேவதைகளின் வாக்குகளை வெல்லக்கூடிய
வண்ணமும் வடிவமும் கொண்ட மலர்களையும்
அவன்முன் வைக்க வேண்டும்.

La Rançon – குமரன் வளவன் – தீமையின் மலர்கள்(க்ரியா)

தீமை ஒரு பொது அர்த்தத்தில் அது எதுவல்ல என்பதன் மூலம் வரையறுக்கப்படுகிறது – நன்மையின் எதிர் அல்லது இல்லாமை. இக்கருத்து மிகவும் பரந்த அளவில் எல்லா இடங்களிலும் இருக்கலாம், இருப்பினும் அன்றாட பயன்பாட்டில் ஆழமான தீமையும் பொது நன்மைக்கு எதிராக பேசுவதற்குமே பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக வார்த்தையுடன் தொடர்புடைய தனிப்பட்ட தார்மீக தீமை, ஆள்மாறான இயற்கை தீமை, மதம் சார்ந்த சிந்தனையில் சாத்தான் அல்லது இயற்கைக்கு அப்பாற்பட்ட / நித்தியத்தின் வடிவம் போன்ற பல சாத்தியமான வடிவங்களை எடுப்பதாக இருக்கிறது. எல்லா மதங்களும் அதற்கென தனித்த கண்ணோட்டங்கள், தத்துவங்கள் “நன்மை-தீமை”கள் மீது கவனம் செலுத்துகின்றன. வேறு சில மதங்களோ தீய இருப்பையும் மக்களை விவரிப்பதிலான பயனையும் மறுக்கின்றன.

எல்லா நற்குணநலனும் பொருந்திவருவதில்லை தனிநபர்களுக்கு, ஆனாலும் தனித்தன்மையின் ஒருதுளியையேனும் ஒவ்வொருவரும் தமக்கானதாய் மாற்றியமைக்கின்றனர் சிலர். அவர்களில் போத்லேரும் ஒருவர். தம் வாழ்நாளில் மிகக்குறைவான படைப்புகளையே நல்கியிருப்பினும் அந்த மிகச் சிலதே தனி இயக்கமாக, நவீன கவிதையின் முகத்துவாரமாக, நவீன கலை விமர்சனத்தின் ஊற்றுவாயாக, நுண்மை வாசிப்பாக மாற்றிக் காட்டியதே இவரது பெரும் சாதனையெனக் கொள்ளலாம்.

மொழியின் பயன்பாடு தொடர்புகொள்ளலைத் தாண்டியும் சிலவற்றை முன்னணிப்படுத்தியும் புனைவின் வழி இன்னொரு தளத்தினைச் சுட்டியும் ஏற்கனவே இருந்த கவிதைக்கூறுகளை விளக்கியுமே எழுதப்பட்டுவந்த காலத்திலேயே, அறியப்படாத மன இருட்டுகளின் மூலைகளில் வெளிச்சத் தீப்பந்தத்தினை உயர்த்திப் பிடித்த கரங்கள் போத்லேருடையது. வானில் நச்சும் குப்பைகளும் ஒவ்வாத துர்மணக் கசிவுகளும் பெருகிக் கிடக்கையில் ஒளிர்வது போலே இலக்கிய உலகத்தில் பழையது கூறல், மிகையாகக் கூறல், அழகியலோடு மட்டுமே கூறுதலால் ஆன குப்பைகளை எரிக்கவென்றே தோன்றிய தூமகேது தான் போத்லேரும் அவரது ஆக்கங்களும். இதனை தீமையின் சுடராக ஒப்பு நோக்காமல் பழையதை எரிக்க முனைவதற்கு இணையாகப் பொருத்திக் கொள்ளலாம். எல்லா விதத்திலும் யாருடையது போலவும் அன்றி, எதைப் போலவும் இல்லாமல், யாராலும் பிரதி எடுக்கவே முடியாத அழுத்தமான தைலவண்ண ஓவியங்கள் அவருடைய படைப்புகள்.

***

வேதநாயக்

தேவதா உன் கோப்பை வழிகிறது என்கிற ஒரு கவிதைத் தொகுப்பு வெளிவந்துள்ளது. அவ்வப்போது இணைய இதழ்களிலும் இலக்கியம் சார் சஞ்சிகைகளிலும் இவரது கவிதைகளும் கட்டுரைகளும் வெளியாகிறது. மின்னஞ்சல் முகவரி: [email protected]

RELATED ARTICLES

2 COMMENTS

  1. மிகச்சிறந்த முறையில் சிரத்தையுடன் எழுதப்பட்ட போத்லர் பற்றிய கட்டுரை அவரைப் பற்றிய புதிய திறப்புகளை செய்கின்றது. வாழ்த்துக்கள் கவிஞர் வேதாநாயக்

  2. யாவரும் மின்னிதழில் வெளியாகியிருக்கும் கவிஞர் வேதா நாயக் அவர்கள் எழுதிய சார்லஸ் போத்லர் குறித்த கட்டுரை கவன ஈர்ப்பலைகளை வாசகர்கள் பால் செலுத்தும் சிறப்பு மிக்கது.

    போத்லர் குறித்த பல தகவல்களை உள்ளடக்கிய இக்கட்டுரை பல புதிய திறப்பு களை செய்கிறது.

    முதல் நவீன கவிஞர்” என்றும் “நவீன விமர்சனத்தின் தந்தை” என்றும் அழைக்கப்படும் சார்லஸ் போத்லேர் போன்ற சில எழுத்தாளர்கள் மட்டுமே அடுத்தடுத்த தலைமுறைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
    அறியப்படாத மன இருட்டுகளின் மூலைகளில் வெளிச்சத் தீப்பந்தத்தினை உயர்த்திப் பிடித்த கரங்கள் போத்லேருடையது. என்று கூறும் வேதா அவரது கவிதைகள் சிலதை நமக்கு வாசிக்க கொடுத்திருக்கிறார். அதில் எனக்குப் பிடித்த வரிகளை உங்கள் வாசிப்புக்கு விட்டு விட்டு விலகிக் கொள்ள விழைகிறேன். அரிய கட்டுரை. வாசிக்க தவறக் கூடாத நான் ஃபிக்ஷன் வகையைச் சார்ந்த இலக்கிய படைப்பு. வாசியுங்கள் ?

    இலையுதிர்காலப் பாடல்கள்

    “ஓ, தகர்க்க மோதும் தூணே!
    கொந்தளிக்கும் என் ஆன்மா
    நடுங்கி வீழ அலையும்
    நொறுங்கும் கோபுரமாய்.
    பித்தமாய்
    சவப்பெட்டி முடிக்கும்
    சுத்தியலாய்
    என் கனவுவரை
    தாலாட்டும் எதிரொலி பல.”

    தன் ஆன்ம தாலாட்டை எத்தனை எத்தனை உவமைகள் மூலம் நிறுவுகிறார். அத்தனையும் வித்யாசமான கவர்ச்சியில் மனதை ஈர்க்கும். அதிலும் “சவப் பெட்டி முடிக்கும் சுத்தியலாய்” என்று இலையுதிர் காலத்தை
    மனித வாழ்வின் அஸ்த்தமனத்துடன் தொடர்புப் படுத்தியிருக்கும் வரிகள் அருமை ❤️

    “தூக்கம் தழுவும் தீக்கொண்ட
    உன் நீண்ட பைங்கண்ணை
    நேசிக்கிறேன்.”

    இந்த மெட்டாஃபர் ஏற்படுத்தும் இரசனை மிகு அதிர்வலைகள்
    கவிதைகள் வாசிப்பதன் நோக்கத்தை அறுதியிடுகிறது.
    In schools poetry is included in syllabus. The aim of teaching/reading poetry is for enjoyment appreciation.

    பிணைத்தொகை என்ற கவிதையில் வரும் இந்த வரிகள் உலகம் முழுவதும் விவசாயிகள் படும் துன்பங்களை கச்சிதமாக மிக நேர்த்தியான இந்த வரிகள் மூலம் காட்சிப் படுத்தியுள்ளார்

    “சிறிய ரோஜா மலர் கிடைக்க,
    சில கதிர்களைப் பறிக்க,
    அவன் சாம்பல் நிற நெற்றியின் உப்புக் கண்ணீரை
    இடைவிடாது அங்கு பாய்ச்ச வேண்டும்.”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular