Thursday, March 28, 2024
HomesliderBrexit: பின்-விலகல் வணிக உடன்படிக்கையும் எதிர்காலமும் (கட்டுரை)

Brexit: பின்-விலகல் வணிக உடன்படிக்கையும் எதிர்காலமும் (கட்டுரை)

ரூபன் சிவராஜா

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியாவின் விலகலுக்குப் பின்னான வணிக உடன்படிக்கை தொடர்பான பேச்சுவார்த்தைகளில் தொடர்ந்தும் இழுபறி நிலவி வருகின்றது. டிசம்பர் 9-ம் திகதி பின்-விலகல் வணிக உடன்படிக்கைக்கான (Post-brexit trade deal) பேச்சுவார்த்தையின் இறுதிச்சுற்றுக்காக பிரித்தானியப் பிரதமர் Boris Johnson, ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்தின் தலைவர் Ursula von der Leyen ஆகியோர் பெல்ஜியத் தலைநகர் டீசரளளநடளஇல் சந்தித்தனர். இருப்பினும் இருதரப்பிற்குமிடையிலான இடைவெளி பெரிதாகவே இருந்து வந்துள்ளது. உடன்படிக்கையுடன் (With Deal) விலகுவது அல்லது உடன்படிக்கை இல்லாது விலகுவது (No-deal) என்ற தெரிவுகள் பிரித்தானியா மத்தியில் உள்ளன. உடன்படிக்கை எட்டப்படாது விலக நேரிடுமாயின் உலக வர்த்தக நிறுவனத்தின் (World Trade Organization, WTO) விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்டதாக ஐரோப்பிய ஒன்றிய – பிரித்தானிய வணிக உறவு அமையும். உடன்படிக்கை இல்லாத விலகலைத் தவிர்ப்பதற்கு இந்த ஆண்டு இறுதிக்குள் இணக்கப்பாடுகள் எட்டப்பட வேண்டும் என்பதற்கு அப்பால் அந்தத் தீர்மானங்கள் ஐரோப்பிய நாடாளுமன்றத்திலும் பிரித்தானிய நாடாளுமன்றத்திலும் பெரும்பான்மையைப் பெற வேண்டும்.

2016-இல் பொதுஜன வாக்கெடுப்பு மூலம் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவது தொடர்பான முடிவு எட்டப்பட்டது. 51,9 வீதமான மக்கள் விலகலுக்கு ஆதரவாக வாக்களித்தனர். 2017-இல் அன்றைய பிரதமர் Theresa May விலகலுக்குரிய உத்தியோகபூர்வ செயற்பாடுகளை முன்னெடுக்கத் தொடங்கினார். ஆனபோதும் விலகல் ஒப்பந்தத்திற்குரிய பெரும்பான்மையை விதிக்கப்பட்ட கால எல்லைக்குள்; (29.மார்ச் 2019), பிரித்தானிய நாடாளுமன்றத்தில் எட்ட முடியவில்லை. மூன்று தடவைகள் பெரும்பான்மையைப் பெறமுடியாமல் நிராகரிக்கப்பட்டு விலகல் தள்ளிப் போடப்பட்டது. 2019 நடுப்பகுதியில் Boris Johnson பிரதமராகப் பொறுப்பேற்றதை அடுத்து ஒக்ரோபரில் விலகல் உடன்படிக்கை எட்டப்பட்டது. வட-அயர்லாந் எல்லை நடைமுறைகள் தொடர்பான பிரித்தானியாவின் விட்டுக்கொடுப்பு இழுபறியை முடிவுக்குக் கொண்டு வந்து விலகல் உடன்படிக்கைக்கு வழிகோலியது. டிசம்பரில் நடைபெற்ற புதிய தேர்தலில் கென்சர்வற்றிவ் கட்சி வெற்றி பெற்றதையடுத்து விலகல் உடன்படிக்கை நாடாளுமன்றப் பெரும்பான்மையுடன் அங்கீகரிக்கப்பட்டது.

2017-லிருந்து இரண்டாண்டு காலத்திற்கும் மேலான இழுபறிகளை அடுத்து 2020 ஜனவரி இறுதியில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகியது. 2020 டிசம்பர் இறுதி வரையான பதினொரு மாதங்கள் நிலைமாறு காலமாக (Transition period இணக்கம் காணப்பட்டது. அதன் பொருள் நிலைமாறு காலத்து வணிக உறவுகள் ஐரோப்பிய ஒன்றியத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டதாகவே இருந்தன என்பதாகும். 2020 டிசம்பர் 31-ம் திகதிக்கு முன்னர் பின்-விலகல் உடன்படிக்கை எட்டப்பட வேண்டுமென்பதற்கு அமைய அதனை இலக்காகக் கொண்டு மார்ச் 2020-இலிருந்து பலசுற்றுப் பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வந்தன.

விலகல் உடன்படிக்கை

‘விலகல் உடன்படிக்கை’ (Withdrawal agreement) வேறு – பின்-விலகல் உடன்படிக்கை (Post-brexit trade deal) என்பது வேறு. விலகல் உடன்படிக்கை என்பது ஏற்கனவே இருந்த நடைமுறைகள், வணிக உறவுகளிலிருந்து வெளிவருவதற்கானது. அவற்றை ஒரு ஒழுங்குமுறைக்கேற்ப முறித்துக் கொள்வது தொடர்பானது. எளிமைப்படுத்திச் சொல்வதானால் முன்னையது விலகல் முடிவினை இருதரப்பும் ஏற்றுக்கொள்கின்ற ஒப்புதல்களும், இடைக்கால ஏற்பாடுகளோடு நிலுவையில் உள்ள கொடுக்கல் வாங்கல்களுக்கான தீர்வுகளையும் முடிவுகளையும் எட்டுதல். அதன் முக்கிய அம்சங்களாக நிதிநிலமைகள் சார்ந்த தீர்வு, வெளியேற்றம் எவ்வாறு நிகழவேண்டும், பிரித்தானியாவில் வாழும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளைச் சேர்ந்த பிரஜைகளின் உரிமைகள், ஐரோப்பிய நாடுகளில் வாழும் பிரித்தானியப் பிரஜைகளின் உரிமைகள், வட-அயர்லாந் எல்லை தொடர்பான விவகாரங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன.

பின்-விலகல் உடன்படிக்கை

பின்-விலகல் உடன்படிக்கை என்பது எதிர்கால வணிக உறவுகளுக்கான பரஸ்பர இணக்கப்பாடுகளைக் குறிப்பது. அதாவது விலகலுக்குப் பின்னரான நீண்டகால ஏற்றுமதி, இறக்குமதி, உற்பத்தி, தொழில்வளங்கள், தொழிற்துறைப் போட்டிக்கான நிபந்தனைகள், எல்லை நடைமுறைகள் சார்ந்த உடன்படிக்கைகள் பற்றியது. பொருட்களின் விற்பனை, கொள்வனவு, விலைநிர்ணயம், வரி நடைமுறைகள் இதில் முக்கியமானவை. அத்தோடு மீன்பிடி, விவசாயம், பாதுகாப்புச் சார்ந்த கூட்டுச் செயற்பாடுகள், வான் போக்குவரத்து, கல்வி மற்றும் அறிவியல், தகவல் பரிமாற்றம் சார்ந்த விடயங்களுக்காக விதிமுறைகள், நடைமுறைகளையும் உள்ளடக்கியதான உடன்படிக்கை பற்றிய பேச்சுவார்த்தை இது.

இழுபறியின் மையம்

தற்போதைய பேச்சுவார்த்தையின் இழுபறிப் புள்ளிகளில் முக்கியமான விவகாரம் பிரித்தானியக் கடற்பிராந்தியத்தில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கான மீன்பிடி உரிமை சார்ந்தது. அதிலும் விலகலுக்குப் பின்னர் மீன்பிடி உரிமையின் காலஅளவு மற்றும் விதிமுறைகள் பற்றியது. தனது கடற்பிராந்திய மீன்பிடி உரிமையை ஐரோப்பிய ஒன்றியத்தின் கட்டுப்பாட்டுக்குள் அனுமதிக்கக் கூடாது என்பதில் பிரித்தானியா முனைப்புக் கொண்டுள்ளது. அந்த வகையில் கடல் ஆளுகை, கடல் மீதான இறைமை பற்றிய விடயத்தினைப் பிரித்தானியா முக்கியமானதாக முன்வைக்கின்றது. தனது கடல்வளத்தினை ஏனைய ஐரோப்பிய நாடுகளுடன் பகிர்வதில் பிரித்தானியாவிற்கு உடன்பாடில்லை. முழுமையாகத் தனது கட்டுப்பாட்டில் இருப்பதையே விரும்புகிறது.

பேச்சுவார்த்தையின் இன்னுமோர் இழுபறி வணிக உறவின் சச்சரவுகளுக்கான தீர்வுப் பொறிமுறை பற்றியது. அவை சட்டரீதியாக ஐரோப்பிய நீதிமன்றத்தினால் (European Court of Justice) கையாளப்பட வேண்டுமென்பது ஒன்றியத்தின் நிலைப்பாடு. இதுவிடயத்தில் தனியான பொதுச் சட்டப் பொறிமுறையைக் கோருகின்றது பிரித்தானியா.

வட-அயர்லாந்த் எல்லை விவகாரம்

பேச்சுவார்த்தையின் இழுபறியின் மற்றுமோர் விவகாரம் வட அயர்லாந்த் – அயர்லாந்த் இடையிலான எல்லையை விலகலுக்குப் பின் எவ்வாறு பேணுவது என்பது தொடர்பானது. 2020 ஜனவரி வட-அயர்லாந்த் எல்லை நடைமுறை தொடர்பான புதிய இணக்கம் (Northern Ireland Protocol) ஏற்படுத்தப்பட்டது. வட-அயர்லாந் எல்லையானது அயர்லாந்திற்கும் பிரித்தானியாவிற்கும் திறந்த எல்லையாகப் பேணப்படும் என்ற இணக்கமும் எட்டப்பட்டுள்ளது. வட-அயர்லாந்திற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்குமிடையில் உள்ளக சந்தையில் உள்ளடக்கப்படுவது சார்ந்த சில விசேட ஏற்பாடுகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதான தகவல்களும் வெளிவந்துள்ளன. ஐரோப்பிய சுங்க ஒன்றித்தில் வட-அயர்லாந்த் நீடிப்பது தொடர்பான இணக்கமும் எட்டப்பட்டுள்ளது.

அயர்லாந்திற்கும் – வட அயர்லாந்திற்குமிடையிலான எல்லையே பிரித்தானியாவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான ஒரேயொரு தரைவழி எல்லை. அயர்லாந் ஐரோப்பிய ஒன்றிய நாடாகவும், வட அயர்லாந் உள்ளக-சுயாட்சியுடைய பிராந்தியமாக பிரித்தானியாவின் கீழ் உள்ளமையும் இந்த எல்லை பற்றிய சர்ச்சைக்கான மூலமாகும். இதன் எல்லையூடாகவே ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கான தரைவழிப் போக்குவரத்து இடம்பெறுகிறது. பயணிகள், வாகனங்கள், பொருட்கள் ஏற்றிச்செல்லும் பார உந்துகள் இந்த எல்லைகளிலேயே சோதனையிடப்படுகின்றன. 500 கி.மீ நீளமான எல்லை இது.

1998-ல் அயர்லாந்திற்கும் பிரித்தானியாவிற்குமிடையில் ஏற்படுத்தப்பட்ட சமாதான உடன்படிக்கையின்படி அயர்லாந் – வட அயர்லாந்திற்கு இடைப்பட்ட எல்லை நடைமுறையில் கண்காணிப்பும் சோதனைச் சாவடிகளும் அற்றதாகப் பேணுவதென்று இருதரப்பினாலும் இணங்கப்பட்டது. அயர்லாந்தும் பிரித்தானியாவும் ஐரோப்பிய ஒன்றியத்தின் அங்கமாக இருந்தபோது அந்நடைமுறையைப் பேணுவதில் சிக்கல் இருக்கவில்லை. இரு நாடுகளுக்குமிடையில் மனிதர்களின் நடமாட்டமும் பொருட்கள் கொண்டு செல்லப்படுவதும் சுதந்திரமாக இயங்க முடிந்தது. பிரித்தானியாவின் விலகல் எல்லைக் கடப்புத் தொடர்பான புதிய ஏற்பாட்டினைக் கோரி நிற்கின்றது.

யார் தீர்மான சக்தி?

ஐரோப்பிய ஒன்றியமானது ஒரு வணிக உடன்படிக்கை மூலம் ஐரோப்பிய ஒன்றியத்தினது வணிக விதிகளையும் கட்டுப்பாடுகளையும் பின்பற்றச் செய்வதில் முனைப்புக் காட்டுகிறது. பொருளாதார உறவுகளில் ஐரோப்பிய ஒன்றியத்திற்குக் கட்டுப்படாமல் தீர்மான சக்தியாக தானே இருக்க வேண்டுமென்பது பிரித்தானியாவின் அவா. தனக்குக் கட்டுப்பட்டதாக இருக்க வேண்டுமென்பது ஐரோப்பிய ஒன்றியத்தின் அவா. எனவே இங்கு பொருளாதார அதிகாரம், அதாவது பொருளாதார நலன் சார்ந்த தீர்மானங்களை யார் எடுப்பது என்பது உடன்படிக்கையின் இழுபறி முறுகலுக்கான முதன்மைக் காரணி எனலாம்.

அத்தோடு ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதார அரசியலின் மாற்றங்களுக்கு பிரித்தானியா இசைந்து போகும்படியான ஒரு உடன்படிக்கைக்குள் கொண்டு வருவது ஒன்றியத்தின் இலக்கு. அதாவது ஒன்றியத்திற்குள் அங்கம் வகிக்காத நோர்வே, ஐஸ்லாண்ட், Liechtenstein போன்றன அங்கம் வகிக்கும் அதன் பொருளாதாரக் கட்டமைப்பான European Economic Area தொழிற்படுவது போன்ற வணிக நடைமுறைகளுக்குள் உள்ளடக்கப் பார்க்கின்றது.

ஐரோப்பிய பொருளாதாரக் கூட்டுறவும் கட்டமைப்புகளும்

ஐரோப்பிய ஒன்றியமானது அங்கத்துவம் வகிக்காத பல நாடுகளுடன் வெவ்வேறு பொருளாதார ஒப்பந்தங்களைக் கொண்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றித்தில் அங்கத்துவம் விண்ணப்பித்த பல நாடுகள் பல்வேறு காரணங்களால் இன்னமும் இணைக்கப்படாத சூழல் நிலவுகின்றது. இவ்வகை ‘விண்ணப்பித்த நாடுகள்’ (Accession countries) ஒன்றித்துடன் சில வணிகக் கூட்டுறவு ஒப்பந்தங்களைக் கொண்டுள்ளன. உள்ளகச் சந்தையின் சில துறைகளில் மட்டுப்படுத்தப்பட்ட பங்கேற்பினைக் கொண்டுள்ளன. அப்பேனியா, போஸ்னியா- ஹர்சகோவினா, கொசவோ, வட மகடோனியா, மொன்ரநீக்றோ, மற்றும் சேர்பியா ஆகியன இதில் அடங்குகின்றன. அத்துடன் Deep and Comprehensive Free Trade Area (DCFTA) என்ற உடன்படிக்கை ஊடாக முந்நாள் சோவியத் தாடுகளான ஜோர்ஜியா, மல்டோவா, உக்ரைன் ஆகியனவும் சில தேர்வு செய்யப்பட்ட துறைகளில் ஒன்றித்தின் உள்ளக சந்தையில் மட்டுப்படுத்தப்பட்ட வகையில் உள்வாங்கப்பட்டுள்ளன.

பிரித்தானியாவோ ஐரோப்பிய ஒன்றியமும் கனடாவும் செய்துகொண்ட (EU-Canada Comprehensive Economic and Trade Agreement (CETA) பொருளாதார உடன்படிக்கையை ஒத்த ஒரு ஏற்பாட்டினை விரும்புகின்றது. (இவ்வுடன்படிக்கை 2017 இறுதியிலிருந்து நடைமுறைக்கு வந்தது. கட்டணங்கள், வரிகளைக் குறைத்து, பொருட்கள் மற்றும் சேவைகளின் பரஸ்பர ஏற்றுமதி-இறக்குமதியை எளிதாக்குவது இதன் நோக்கம்.)

கனடாவுடனான ஒன்றியத்தின் வணிக உடன்படிக்கையை ஒத்த உடன்படிக்கை தொடர்பான பிரித்தானியக் கோரிக்கையை ஒன்றியம் நிராகரித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்திருந்து, பாரிய வணிக உறவினைக் கொண்டிருந்த பெரிய நாடு என்பதோடு அதன் அமைவிட அருகாமையும் நிராகரிப்பிற்கான காரணிகள். பிரித்தானியக் கடலில் மீன்பிடி தொடர்பான சர்ச்சையும் பேச்சுவார்த்தையைக் கடினமாக்கிய அம்சங்களில் ஒன்று.

ஐரோப்பிய உள்ளகச் சந்தை

பிரித்தானியாவைத் தனது தரநிர்ணயங்களுக்கும் விதிமுறைகளுக்கும் கட்டுப்படுத்தக்கூடிய ஒரு உடன்படிக்கை எட்டப்படுவதில் ஐரோப்பிய ஒன்றியம் முனைப்புக் கொண்டுள்ளது. ஐரோப்பிய உள்ளகச் சந்தையின் (European single market) சாதகமான வாய்ப்புகளை உள்ளடக்கிய ஒரு வணிக உடன்படிக்கையை எட்டுவதிலும் பிரித்தானியா முனைப்புக் கொண்டுள்ளது. அத்தோடு ஒன்றியத்தின் தர நிர்ணயங்களுக்குக் கட்டுப்படுவதில் பிரித்தானியா விருப்பம் கொண்டுள்ளது. ஆனால் ஒன்றியத்தின் நடைமுறைகளையே எதிர்காலத்தில் பின்பற்ற வேண்டுமென்பதை ஏற்றுக் கொள்ளவில்லை. இது எதிர்காலத்தின் இறைமையை முற்றுமுழுதாக விட்டுக்கொடுப்பதற்கு ஒப்பானதாகும். பிரித்தானியாவைப் பொறுத்தவரை வணிக பொருளாதார, உற்பத்தி, குடிவரவு, வேலைவாய்ப்பு உட்பட்ட இன்னபிற நலன்கள் என்பதோடு ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதன் மூலம் அதன் ஆதிக்கத்திலிருந்து விடுபடுவதும் பிரித்தானியாவின் இலக்கு.

ஐரோப்பிய ஒன்றியத்தின் உள்ளகச் சந்தை அமைப்பில் பிரித்தானியா அங்கம் வகிப்பதாயின் ஒன்றியத்தின் விதிமுறைகளை அனைத்துத் துறைகளிலும் பின்பற்ற வேண்டும். வணிகத் தகராறுகள், முரண்பாடுகளுக்குத் தீர்வு காண்கின்ற பொறுப்பு ஐரோப்பிய நீதிமன்றத்தினுடையதாக இருக்கும். விலகலுக்குப் பின்னர் பிரித்தானியா ஐரோப்பிய நீதிமன்றத்திற்குக் கட்டுப்பட்டதாக இருக்க மாட்டாது. எனவே வணிகத் தகராறுகள் சார்ந்த சட்ட ரீதியான பொறிமுறை அவசியமாகின்றது. பின்-விலகல் உடன்படிக்கையில் இவ்விடயம் சார்ந்த பொறிமுறை பற்றிய இணக்கம் எட்டப்பட வேண்டும்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் உள்ளகச் சந்தை நடைமுறை என்பது 1993-இல் அங்கத்துவ நாடுகளுக்கிடையில் ஏற்படுத்தப்பட்ட வணிக இணக்கப்பாடாகும். இது அங்கத்துவ நாடுகளுக்கிடையிலான உற்பத்தி மற்றும் வணிகம் சார்ந்த இணைவாக்கத்தை வலுப்படுத்துவதற்கான கட்டமைப்பு. ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதார அரசியல் நலனைப் பிரதிபலிக்கும் முக்கிய பொறிமுறை. அங்கத்துவ நாடுகளின் உற்பத்தி விதிமுறைகள் குறித்த சில பொதுவான கொள்கைகள் மற்றும் உற்பத்திகளுக்கான மூலதனம், தொழிலாளர், பொருட்கள், நிறுவன மற்றும் சேவைகளின்; சுதந்திர இயக்கம் மற்றும் நடமாட்டத்திற்குரிய சாதகமான விதிமுறைகளைக் கொண்டுள்ளது. அங்கத்துவ நாடுகளிடையே எல்லைகள், தொழில்நுட்பத் தரநிலைகள் மற்றும் வரி சார்ந்த தடைகள் முடிந்தவரை நீக்கப்பட்டுள்ளன.

உடன்படிக்கை இல்லாத விலகல்? – பொருளாதார, அரசியல் வீழ்ச்சி

உடன்படிக்கை எட்டப்படா விட்டால் பிரித்தானியா உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் ஒரு பொருளாதார, அரசியல் வீழ்ச்சியைச் சந்திக்கும் என்ற கருத்துகள் மேலோங்கியுள்ளன. உடன்படிக்கை இல்லாத விலகல் நிகழுமாயின் கோவிட் பெருந்தொற்றுக் காரணமாக ஏற்கனவே பாதிக்கப்பட்டிருக்கும் பொருளாதாரம் மேலும் மோசமாகப் பாதிக்கப்படும். உற்பத்தி, நிதிச்சேவை, விவசாயம், தொழிற்துறைகளிலும் பாதிப்பு ஏற்படுமெனவும் எச்சரிக்கப்படுகின்றது.

30 வீதமான உணவுப் பொருட்கள் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றது. அதில் 10 வீதம் கடல்வழியாகக் கொண்டு செல்லப்படுகின்றது. இந்நிலையில் உள்நாட்டில் பொருட்களின் விலையேற்றம், கட்டண அதிகரிப்பு, விநியோகச் சங்கிலியில் சீர்குலைவு உட்பட்ட விளைவுகள் தொடர்பான அச்சங்களும் வெளிப்படுத்தப்படுகின்றன. விலையேற்றம், கட்டண உயர்வுகளால் குறைந்த வருமானமுடைய நடுத்தரக் குடும்பங்கள் வெகுவாகப் பாதிக்கப்படுவர். ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தொழிலாளர்களோ, பிரித்தானியத் தொழிலாளர்களோ தத்தம் நாடுகளுக்கு வெளியில் தொழில் நிமித்தமாகச் சுதந்திரமாகச் சென்று வேலைவாய்ப்பினைப் பெற்றுக்கொள்ள முடியாது. விலகலுக்கு முன்பு தொழில்நிமித்தம் குடிபெயர்ந்தவர்கள் இதில் விதிவிலக்கு. அவர்களின் தொழில்சார் மற்றும் வதிவிட உரிமைகளுக்கு உத்தரவாதமுண்டு.

மிகப்பெரிய பொருளாதார அதிர்ச்சியைச் சமாளிக்கும் அதே வேளையில், வணிக நிறுவனங்கள் எவ்வாறு விலகலுக்குத் தயாராகின்றன என்பது பற்றிய புதிய தகவல்கள் வெளிவந்துள்ளன. பத்தில் ஏழு தொழில் நிறுவனங்கள் உடன்படிக்கை இல்லாத விலகல் தமது வணிகத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்ப்பதாக டிசம்பர் ஆரம்பத்தில் London School of Economics Centre for Economic Performance வெளியிட்ட அறிக்கையை மேற்கோள் காட்டி ஊடகத் தகவல்கள் வெளிவந்துள்ளன. 59 விதமான வணிக நிறுவனங்கள், உடன்படிக்கையில்லாத விலகலுக்குத் தம்மை ‘ஓரளவு தயாராக’ வைத்திருப்பதாகக் கருதுவதாகவும் அந்த அறிக்கை மேலும் கூறுகிறது. எனவே உடன்படிக்கை இல்லாத விலகல் பாரிய நேர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் என்பதோடு கொரோனா பெருந்தொற்றுப் பரம்பல் உடன்படிக்கையின் இன்றியமையாமையை மேலும் வலியுறுத்தியுள்ளது.

***

ரூபன் சிவராஜா

“அதிகார நலனும் அரசியல் நகர்வும்” நூல் ஆசிரியர். [email protected]

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular