Wednesday, February 18, 2026
Homeஇதழ்கள்2025 இதழ்கள்அவர்கள் அந்த இடத்தைச் சேர்ந்தவர்கள்

அவர்கள் அந்த இடத்தைச் சேர்ந்தவர்கள்

(பாலஸ்தீனத்தின் அழிவுக்கெதிரான வரலாற்றுக் குரல்கள்) 

ஆர். பாலகிருஷ்ணன் 

டந்த நூறு ஆண்டுகளுக்கு மேலான பாலஸ்தீனத்தின் வரலாறு என்பது அதன் மீது ஏவி விடப்பட்ட இன அழிப்பின் வரலாறு மட்டுமே. பல்போர் பிரகடனம் செயல் படுத்தப்பட்ட நிலையில் (1917), குடியேற்றக் காலனியம் அங்கு துவங்கிய பின் தொடர்ச்சியான வன்முறைகள் பாலஸ்தீனர்கள் மீது ஏவி விடப்பட்டுள்ளன. கிராமங்கள் அழிக்கப்பட்டுள்ளன. மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் . ஊடகப் பணியாளர்கள் குண்டு வீசித் தாக்கப்பட்டுள்ளனர். சியோனிசப் பயங்கரவாதிகளால் பெரிய கட்டுமானங்கள் அவற்றுள் வெடிகுண்டுத் தாக்குதல்கள் மற்றும் பொது இடங்களில் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடந்துள்ளன. இது குறித்து நன்கு அறிந்த அப்போதைய அரசியல் ஆளுமைகள், சிந்தனையாளர்கள், பாலஸ்தீனத்தின் மீதான இன அழிப்பு நிறுத்தப்பட வேண்டும் என்று கூறியுள்ளனர். அதில், மால்கம் எக்ஸ், மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, டோனி மாரிசன், நெல்சன் மண்டேலா, அருந்ததி ராய் இப்படிப்பட்ட ஆளுமைகளின் பட்டியல் மிக நீளம். இன்றைய மேற்கத்திய மற்றும் ஹாலிவுட் திரைப் படைப்பாளிகள், கலைஞர்களில் பெரும்பாலானோர் சேவியர் பர்த்தேம், ஜோகுயின் ஃபோனிக்ஸ், சூசன் சரண்டன், மார்க் டேவிஸ், மார்க் ரஃப்பாலோ, கேட் பிளான்செட், பென் ஆப்ஃலெக், கிலி மினாக் போல் பலர் பாலஸ்தீன ஆதரவுக் குரலை ஒலித்து வருபவர்களே. 

ஹிந்த் ரஜாப் என்ற பாலஸ்தீனச் சிறுமி ஐ டி எப் வீரர்களால் கொல்லப்பட்டதை விளக்கும் ஆவணப் படம் வெனிஸ் மற்றும் டொரோண்டோ திரைப்பட விழாக்களில் (2025)திரையிடப்பட்டது. இக்குரல்கள் மானுட அழிவை, இன அழிப்பை உடனடியாக நிறுத்தச் சொல்லும் அடிப்படை மனிதாபிமானம் சார்ந்தன என்றாலும் அரசியலுணர்வோடு எழுப்பப்பட்ட குரல்கள் இன்னும் முக்கியத்துவம் வாய்ந்தவை. பாலஸ்தீனச் சிறுமி ரஜாபை, அவர் தன்னுடைய பெற்றோருடன் அழிக்கப் பட்டத்தை ஆய்வு செய்து கடந்த வாரம் (September 2025) அந்தக் குற்றத்தில் ஈடுபட்ட ராணுவக் குற்றவாளிகள் அம்பலப்பட்டுள்ளனர். 

மஹாத்மா காந்தியின், ’’எவ்வாறு பிரிட்டன் ஆங்கிலேயருக்குச் சொந்தமோ, பிரான்ஸ் பிரெஞ்சுக்காரர்களுக்குச் சொந்தமோ அவ்வாறு பாலஸ்தீனம் அராபியர்களுக்குச் சொந்தம்’’என்ற கருத்து மிகவும் புகழ் வாய்ந்தது. 

போலவே, இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல் தொடர்பான பெர்ட்ராண்ட் ரஸ்ஸலின் கருத்து முக்கியத்துவம் வாய்ந்தது . இது ஜனவரி 31, 1970 தேதியிட்ட ஒரு கடித வடிவில் உள்ளது. மற்றும் ரஸ்ஸலின் மரணத்திற்கு அடுத்த நாள் பிப்ரவரி 3 அன்று கெய்ரோவில் நடந்த சர்வதேச நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாநாட்டில் அவருடைய இந்தக் கடிதம் வாசிக்கப்பட்டது. 

அதன் சாராம்சம்:

‘’மத்தியக் கிழக்கில் அறிவிக்கப்படாத ஒரு போர் நடந்து வருகிறது. அதன் இன்றைய நிலை வரலாற்றுத் தவறு ஒன்று நிகழ்ந்து வருவதற்கான உதாரணமாக உள்ளது. எகிப்து உள்ளிட்ட பகுதிகளில் நடக்கும் குண்டுவீச்சு மக்களின் உணர்வுகளைப் பயமுறுத்தி அடக்கிட இயலாது. மாறாக அவர்கள் வெகுண்டு ஆவேசமாக எதிர்ப்பார்கள். ஏற்கனவே வியட்நாமில் அமெரிக்காவுக்குக் கிடைத்த பாடம் இங்கும் கிடைக்கலாம். ’’ 

Bertrand Russel

ரஸ்ஸலின் சொற்களில் இவ்வாறாக இது உள்ளது:

”பல ஆண்டுகளாக அமெரிக்காவின் கடுமையான குண்டுவீச்சைத் தாங்கிய வியட்நாமியர்கள் சரணடைவதன் மூலம் அல்ல, மாறாக அதிகமான எதிரி விமானங்களைச் சுட்டு வீழ்த்துவதன் மூலம் பதிலளித்துள்ளனர். 1940 இல் எனது சொந்த நாட்டு மக்கள் ஹிட்லரின் குண்டுவீச்சுத் தாக்குதல்களை முன்னோடியில்லாத ஒற்றுமை மற்றும் உறுதியுடன் எதிர்த்தனர். இந்தக் காரணத்திற்காக, தற்போதைய இஸ்ரேலிய தாக்குதல்கள் அவற்றின் சரியான நோக்கத்தில் தோல்வியடையும், ஆனால் அதே நேரத்தில் அவை உலகம் முழுவதும் கடுமையாகக் கண்டிக்கப்பட வேண்டும். ”

மேலும் கூறுகையில் அவர், இஸ்ரேல், மத்தியக் கிழக்கில் உருவாக்கி வரும் நெருக்கடியின் வளர்ச்சி ஆபத்தானது என்றும் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இஸ்ரேல் ஆயுத பலத்தால் விரிவடைந்துள்ளது என்றும் குறிப்பிடுகிறார். இதற்கு ஏகாதிபத்தியங்களின் தூண்டுதல் காரணம் என்றும் அவர் உறுதி படக் கூறுகிறார். பேச்சு வார்த்தைகளில் இஸ்ரேல் நேர்மையாக நடந்து கொள்ளவில்லை என்றும் அவர் கூறுகிறார். அடையும் வெற்றிகள், ஏகாதிபத்தியங்கள், அவற்றால் துணை நிற்கும் இஸ்ரேல் ஆகியவற்றை வலுப்படுத்துகின்றன. இதனால் பேச்சு வார்த்தையில் அவர்கள் மேலாதிக்க மனோபாவத்துடன் செயல்பட்டு அதிகார வரம்பை நீட்டிக்கின்றனர் . 

”இது முந்தைய ஆக்கிரமிப்பின் அநீதிகரமான செயலைப் புறக்கணிக்கிறது. இஸ்ரேல் செய்த ஆக்கிரமிப்பு கண்டிக்கப்பட வேண்டும், ஏனெனில் எந்தவொரு அரசுக்கும் அந்நிய நாட்டின் வெளியை இணைக்க உரிமை இல்லை, ஆனால் ஒவ்வொரு விரிவாக்கமும் உலகம் எவ்வளவு அதிகமாக ஆக்கிரமிப்பைப் பொறுத்துக்கொள்ளும் என்பதைக் கண்டறியும் ஒரு பரிசோதனையாகும். ”

”பாலஸ்தீன மக்களின் சோகம் என்னவென்றால், அவர்களின் நாடு, ஒரு வெளிநாட்டு சக்தியால் (UK) முற்றிலும் மாறுபட்ட மக்களுக்கு ஒரு புதிய அரசை உருவாக்குவதற்காக ‘வழங்கப்பட்டது’(வாரிக் கொடுக்கப்பட்டது). இதன் விளைவாக, பல லட்சக்கணக்கான அப்பாவி மக்கள் நிரந்தரமாக வீடற்றவர்களாக மாற்றப்பட்டனர்’’ என்று அவர் யதார்த்தமான நிலையைக் குறிப்பிடுகிறார். 

பாலஸ்தீனர்களின் தாயக ஏக்கம், அவர்கள் திரும்பி வரும் உரிமை ஏற்றுக் கொள்ளப்படவேண்டும் என்று அவர் குறிப்பிடுகிறார். நாசிகளால் இஸ்ரேலியர் துன்புறுத்தப் பட்டுள்ளனர். அது கவனத்துக்கு உரியது என்றாலும் அவர்கள் அதே அநீதியைப் பாலஸ்தீனர்களுக்கு இழைப்பதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று அவர் கூறுகிறார். கணிதம், தத்துவம், விஞ்ஞானம் ஆகியவற்றில் நுண் புலமையும் ஆதிக்கத்துக்கு எதிரான தன் குரலை எப்போதும் பதிவு செய்பவருமான ரஸ்ஸலின் இந்தக் கருத்து சிறப்பு வாய்ந்தது. இறுதியாக 1967 ஆம் ஆண்டு முன் மொழியப்பட்ட ஐ நா முன்னிலை பெற்ற அமைதித் தீர்மானத்தை ஏற்றுக் கொண்டு அமைதி காண இஸ்ரேலை, ரஸ்ஸல் வலியுறுத்துகிறார். 

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் குறித்த தனது இறுதி அறிக்கையை பெர்ட்ராண்ட் ரஸ்ஸல் ஒரு பத்திரிகையிலோ அல்லது செய்தித்தாளிலோ எதிலும் வெளியிடவில்லை. அவர் இந்த உரையை ஜனவரி 31, 1970 அன்று, இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு எழுதினார், மேலும் அது பிப்ரவரி 3, 1970 அன்று கெய்ரோவில் நடந்த சர்வதேச நாடாளுமன்ற உறுப்பினர்களின் மாநாட்டில் வலுத்த குரலில் வாசிக்கப்பட்டது. 

”ஈஜிப்ஸியன் கெஜெட்” ஏட்டில் செப்டம்பர் 17, 1964 ஆம் ஆண்டு மால்கம் எக்ஸ் எழுதிய ஜியோனிஸம் பற்றிய கருத்து பெரிதும் வாசிக்கப் பட்ட ஒன்று. அவர் காசா பகுதிக்கு நேரில் சென்று வந்த பின்பு எழுதப்பட்ட இந்த உரை அவரது நேரடி அனுபவம். அது இஸ்ரேலிய ஜியோனிஸப் போலித்தனத்தைத் தோலுரித்துக் காட்டுகிறது. இவ்வுரை நமக்கு 1964 ஆம் ஆண்டில் கான் யூனிஸ் அகதி முகாமுக்கு அவர் சென்று வந்த பின் எழுதப்பட்டது என்பதால் இஸ்ரேலின் நடவடிக்கைகளை இன்று பார்க்கும் போதும், குறிப்பாக 2002 ஆம் ஆண்டுக்குப் பின் அது காசாவைத் திறந்த வெளிச் சிறைச் சாலையாக ஆக்கி விட்ட பின்னும் மால்கம் எக்சின் சொற்கள் எவ்வளவு தொலை நோக்குக் கொண்டவை என்பதை விளக்குகின்றன . 

“இஸ்ரேலிய சியோனிஸ்டுகள் தங்கள் புதிய வகைக் காலனித்துவத்தை யாரும் அறியாமல் வெற்றிகரமாக மறைத்துவிட்டதாக உறுதியாக நம்புகிறார்கள் ; (இஸ்ரேல் அந்நாள்களில் சில மீட்பு நடவடிக்கைள் மேற்கொன்டு வந்தது. ஆனால் அவை நேர்மறையானவை அல்ல, என்று மால்கம் எக்ஸ் கருதுகிறார்). அவர்களின் காலனித்துவம் மிகவும் “கருணை மிக்கது”, என்று தோன்றுகிறது, இந்த வகையில் அவர்கள் தங்களால் இயன்ற அளவு, தங்கள் நட்புரீதியான பொருளாதார “உதவி” மற்றும் பிற கவர்ச்சிகரமான பரிசுகளை ஏற்றுக்கொள்ள வைப்பதன் மூலம் ஆட்சி செய்ய விரும்புகிறார்கள், அவர்கள் புதிதாகச் சுதந்திரம் பெற்ற ஆப்பிரிக்க நாடுகளின் முன் தங்கள் பொது நல நடவடிக்கைளை அழகுபடுத்தித் தொங்க விடுகின்றனர். உண்மையில் அந்த நாடுகளின் பொருளாதாரம் கடினமான சூழ்நிலைகளை அனுபவிக்கின்றது. மேலும், இந்தப் புதிய வகை சியோனிச காலனித்துவம் வடிவம் மற்றும் முறையில் மட்டுமே வேறுபடுகிறது, ஆனால் ஒருபோதும் நோக்கத்திலோ அல்லது குறிக்கோளிலோ வேறுபடுவதில்லை. ”

Toni Morrison

டோனி மோரிசன், ஜிலாட் சாலிட் என்ற இஸ்ரேலிய வீரர் ஹமாஸால் கடத்தப் பட்டபோது (நான்காண்டுகள் வரை அவர் கடத்தப்பட்டுச் சிறை வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது)அதனைப் பெரிதுபடுத்தாமல் இஸ்ரேல் மேற்குக் கரையைக் கைப்பற்றி விரிவு படுத்திக் கொண்டிருந்ததையும், பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் இஸ்ரேல் சிறையில் வாடுவது பற்றியும் அவர் எழுதினார்—18 எழுத்தாளர்களுடன் இணைந்து அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். ஜெருசேலம் போஸ்ட் ஏட்டில் இது, இவர் ஒரு இனவாத ஆதரவாளர் என்று விமர்சிக்கப் பட்டது. அதாவது யூதர்களுக்கு எதிரான உரையாடலை இனவாத எதிர்ப்பாளரான மோரிசன் முன் வைக்கிறார் என்று!

ஜெருசலேம் போஸ்ட் ஏடு, மோரிசனின் இஸ்ரேல் மீதான விமர்சனத்தை ஒரு போலி, தலைகீழ் இனவெறியராகச் சித்தரிக்க அபத்தமாகப் பயன்படுத்திய அதே வேளையில், அவர்கள் அறியாமலேயே பாலஸ்தீனியக் கலைஞர்கள் மற்றும் கடிதங்களுடனான அவரது தொடர்பையும் சுட்டிக்காட்டினர் – “அங்கு எழுத்தாளர்கள் அடக்குமுறையால் தீர்மானிக்கப்பட்ட எதிர்காலத்திற்குப் பதிலாக போராட்டத்தால் அறிவிக்கப்பட்ட எதிர்காலத்திற்காக ஆக்கப்பூர்வமாக உழைக்கிறார்கள்.”

மோரிசன் ஒரு பாசிச எதிர்ப்பாளர் என்பது குறிப்பிடத் தக்கது. ஒடுக்கப் பட்டவர்களின் மீதான தணிக்கை குறித்துப் பேசும் போது பாசிசம் பற்றி அவர் குறிப்பிடுகிறார். சக எழுத்தாளரான ஜூன் ஜோர்டான், லெபனான் மீதான இஸ்ரேலின் 1982 ஆம் ஆண்டுப் படையெடுப்பு, அமெரிக்க வரிப் பணத்தில் நிகழ்ந்தது என்று குறிப்பிடுகிறார். அமெரிக்கர்களால் கொடுக்கப் பட்ட வரிப்பணத்தைக் கொண்டு அரசு இஸ்ரேலுக்கு ஆதரவான தளவாட, தொழில் நுட்ப உதவிகள் வழங்குவதை அன்றே எதிர்த்தவர் மோரிசன் மற்றும் அவர் தோழி ஜோர்டான் ஆகியோர். 

பாலஸ்தீனத்தில் யூதர்கள் மகாத்மா காந்தி எழுதி ஹரிஜன் ஏட்டில் 26-11-1938. அன்று வெளியிடப்பட்டது (அறிமுகமும் மொழி பெயர்ப்பும். ஆர் . பாலகிருஷ்ணன்)

இறைவனால் கையளிக்கப் பட்ட புனித நிலம் என்று கூறப்படும் பாலஸ்தீனம்—அது இன்று போரால் சிதைந்துள்ளது. அந்நிலம் இவ்வாறாக நூறாண்டுகளாக இருந்து வருவது பூமியின் பெருந்துயராய் அறியப் படுகிறது. பாலஸ்தீனக் கவிஞர் தர்வீஷ் துயருறும் குரலில் சித்தரித்தது போல அப் ”பூமி அவர்களுக்குக் கதவை மூடி வருகிறது”. கிட்டத்தட்ட 1917 குப் பின் யூதர்கள் முதலாம் உலகப் போரால் துன்புறுத்தலுக்கு ஆளான பின் அவர்கள் பாலஸ்தீனத்தை நோக்கிப் புலம் பெயர்ந்து வந்தனர். பிரிட்டனின் ஒரு பிரகடனம் அவர்களுக்கான இந்நிலத்தை உரிமையாக்கியது. ஆனால் 1925 க்குப் பின் உள்நாட்டு மோதல்கள் ஆரம்பமான நிலையில் யூதர்களுக்கான நிலம் என்பதைப் பாலஸ்தீனத்தில் அவர்கள் ஒன்றாக இருந்து வாழ்வது தான் என மதச் சார்பற்ற பல தலைவர்கள் முன் மொழிந்து வந்தனர். புரட்சி முடிவுற்ற காலத்திற்குப் பின் இருந்த ரஷ்யா இதில் அவ்வளவு ஆர்வம் காட்டவில்லை. பிரெஞ்சு, ஆங்கில அரசுகள் தம் கட்டுப் பாட்டில் இருந்த நிலங்களில் யூதர்கள் எப்படிக் குடியமர்த்தப் பட வேண்டும் என்று உரையாடி வந்தனர். இச்சூழலில் காந்தி அடிகள் தம் கருத்தை ஒரு மனிதாபிமான அடிப்படையில் வெளிப் படுத்துகிறார். அவரது இக்கட்டுரை மொழி பெயர்ப்பாகத் தரப் படுகிறது. 

காந்தியாரின் கட்டுரை

பாலஸ்தீனத்தில் அரபு-யூத பிரச்சினை மற்றும் ஜெர்மனியில் யூதர்கள் துன்புறுத்தப்படுவது குறித்து எனது கருத்துக்களை வெளியிட வேண்டி எனக்குப் பல கடிதங்கள் வந்துள்ளன. இந்தக் கடினமான கேள்வியில் எனது கருத்துக்களைத் தெரிவிக்க நான் எவ்விதத் தயக்கமும் இன்றி இப்போது அதனை வெளியிடுகிறேன். 

எனது அனுதாபங்கள் அனைத்தும் யூதர்கள் மீதுதான். தென்னாப்பிரிக்காவில் நான் அவர்களை நெருக்கமாக அறிந்திருக்கிறேன். அவர்களில் சிலர் இப்போது எனக்கு நெருக்கமாக மாறிவிட்டனர். இந்த நண்பர்கள் மூலம் நான் அவர்களின் மீதான பல வருடத் துன்புறுத்தல்களைப் பற்றி அறிந்துகொண்டேன். அவர்கள் கிறித்துவத்தால் தீண்டத்தகாதவர்கள் என்று கருதப் படுபவர்கள். கிறித்தவர்கள் அவர்களை நடத்துவதற்கும் இந்துக்கள் தீண்டத்தகாதவர்களை நடத்துவதற்கும் இடையிலான ஒற்றுமை மிக நெருக்கமானது. 

அவர்களுக்கு வழங்கப்படும் மனிதாபிமானமற்ற நடத்தையை நியாயப்படுத்த இரண்டு நிகழ்வுகளிலும் மத அதிகாரமே பயன்படுத்தப்பட்டுள்ளது. நட்பைத் தவிர, யூதர்கள் மீதான எனது அனுதாபத்திற்கு மிகவும் பொதுவான உலகளாவிய காரணம் கூட உள்ளது. ஆனால் எனது இத்தகைய அனுதாபம், வழங்கப் பட வேண்டிய நீதியின் தேவையின் பொருட்டு என்னைப் பார்வையற்றவனாக நிறுத்தவில்லை. யூதர்களுக்கான தேசியத் தாயகம் என்ற குரல் எனக்கு நீதியின் குரலாகப் படவில்லை. பாலஸ்தீனத்தில் இருந்து துண்டாக தங்கள் நாட்டை உருவாக்கும் அனுமதி பைபிளில் தெரிவிக்கப் பட்டுள்ளதாகவும் அவ்வித முயற்சியில் பாலஸ்தீனத்துக்கு யூதர்கள் திரும்பியதும் அக்குரல் அழுத்தமாக, வலிய முயற்சியின் குரலாக ஒலிப்பதை நாம் அறிய முடிகிறது. 

பூமியின் மற்ற மக்களைப் போல, எவ்வாறு அவர்கள் தங்கள் பிறந்த நாட்டை அவர்கள் சொந்த நாடாகக் கணக்கில் கொண்டு அடிப்படைகளை உருவாக்கிக் கொள்கிறார்களோ அவ்வாறு ஏன் அவர்கள் உருவாக்கிக் கொள்ளக்கூடாது? இங்கிலாந்து எப்படி ஆங்கிலேயர்களுக்குச் சொந்தமானதோ அவ்வாறே பிரான்ஸ் பிரெஞ்சுக்காரர்களுக்குச் சொந்தமானதோ – என்பது போலவே பாலஸ்தீனம் அரேபியர்களுக்குச் சொந்தமானது. யூதர்களை அரேபியர்கள் மீது திணிப்பது தவறானது மற்றும் மனிதாபிமானமற்றது. இன்று பாலஸ்தீனத்தில் நடப்பதை எந்த ஒழுக்க நெறிகளாலும் நியாயப்படுத்த முடியாது. கடைசியாக அங்கு நடந்த போர் தவிர இவ்வாறு ஒரு நாட்டை உருவாக்க எந்த அனுமதியும் அங்கு இல்லை. பாலஸ்தீனத்தை ஓரளவு அல்லது முழுமையாக யூதர்களுக்கு அவர்களின் தேசியத் தாயகமாக மீட்டெடுக்கும் வகையில் பெருமைமிக்க அரேபியர்களை அங்கிருந்து நீக்குவது,வாழ்விடத்தைச் சிறிதாக்குவது நிச்சயமாக மனிதகுலத்திற்கு எதிரான குற்றமாகும். யூதர்கள் எங்கு பிறந்து வளர்ந்தாலும் அவர்களை நியாயமாக நடத்த வேண்டும் என்று வலியுறுத்துவதே உன்னதமான போக்காகும். பிரான்சில் பிறந்த கிறிஸ்தவர்கள் பிரெஞ்சுக்காரர்கள் என்பது போலவே பிரான்சில் பிறந்த யூதர்களும் பிரெஞ்சுக்காரர்கள் தான் . 

யூதர்களுக்குப் பாலஸ்தீனத்தைத் தவிர வேறு புகலிடம் இல்லையென்றால், அவர்கள் ஏற்கனவே குடியேறிய உலகின் பிற பகுதிகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் இருப்பதை அவர்கள் விரும்புவார்களா? அல்லது அவர்கள் விருப்பப்படி இரட்டைத் தேசம் என்ற உரிமை –இத்தகு தேசிய இருப்பிடத்திற்கான இந்தக் கூக்குரல், யூதர்களை ஜெர்மனி வெளியேற்றியதற்கு ஒரு நிறப் பூச்சு கொண்ட (இனவெறிக்கான) நியாயத்தை அளிக்கவே செய்யும். ஆனால் யூதர்களை ஜெர்மன் துன்புறுத்துவதற்கு வரலாற்றில் எந்த ஈடு இணையும் இல்லை. ஹிட்லர் மேற்கொண்ட வெறித்தனம் போல் பழைய காலக் கொடுங்கோலர்கள் ஒருபோதும் வெறி கொண்டதில்லை. அவர் அதை மத ஆர்வத்துடன் செய்கிறார். ஏனென்றால், அவர் பிரத்தியேக மற்றும் போர்க்குணமிக்க தேசியவாதத்தின் ஒரு புதிய மதத்தை முன்வைக்கிறார், அதன் பெயரில் எந்தவொரு மனிதாபிமானமற்ற தன்மையும் மனிதகுலத்தின் செயலாக மாறும், இதன் மூலம் இங்கேயும், இனியும் அத்தகு நடவடிக்கைகள் இயல்பாக மாறும். . 

ஒரு பைத்தியக்காரத்தனமான ஆனால் துணிச்சலான இளைஞன் மேற்கொள்ளும் குற்றம் அவரது இனத்தின் முழுமையான அடையாளமாக நம்பமுடியாத மூர்க்கத்தனத்துடன் வெளியாகிக் கொண்டிருக்கின்றது. மனிதகுலத்தின் பெயரிலும், மனிதகுலத்திற்காகவும் ஒரு நியாயமான போர் இருக்க முடியுமானால், ஒரு முழு இனத்தின் மீது வேண்டுமென்றே நடத்தப் படுகிற துன்புறுத்தலைத் தடுக்க ஜெர்மனிக்கு எதிரான போர் முற்றிலும் நியாயமானதாக இருக்கும். ஆனால் நான் எந்தப் போரையும் நம்பவில்லை. அத்தகைய போரின் நன்மை தீமைகள் பற்றிய விவாதம், எனது சிந்தனைகளின் எல்லைக்கோ அல்லது பெரும் பரப்பிற்கோ அப்பாற்பட்டது. 

ஆனால், யூதர்களுக்கு எதிராக நடக்கும் குற்றத்திற்குக் கூட, ஜெர்மனிக்கு எதிராக எந்தப் போரும் நடக்காவிட்டால் என்ன ஆகும்? நிச்சயமாக அதனை ஆதரிக்கும் அணியில் யாரும் இருக்க முடியாது. நீதி மற்றும் ஜனநாயகத்திற்காக நிற்பதாகக் கூறும் ஒரு தேசத்திற்கும், இரண்டிற்கும் அறிவிக்கப்பட்ட எதிரியான, ஒரு தேசத்திற்கும் இடையே எப்படி கூட்டணி இருக்க முடியும்? அல்லது இங்கிலாந்து ஆயுதமேந்திய சர்வாதிகாரத்தையும் அதன் அனைத்து வழிகளையும் நோக்கி நகர்கிறதா? (இங்கே காந்தியடிகள் எவ்வாறு இன ஒடுக்கத்தை ஜெர்மனி மேற்கொள்கிறதோ அதோ வகையில் பாலஸ்தீனத்துக்கு எதிரான செயல் மூலம் இங்கிலாந்தும் மேற்கொள்ளக் கூடாது என்கிறார்-மொழிபெயர்ப்பாளர்). 

மனிதாபிமானம் என்ற போர்வையில் எந்தப் போலித்தனமும் அல்லது பலவீனமும் அதனைத் தடுக்காத போது, வன்முறை எவ்வளவு திறமையாகச் செயல்பட முடியும்? என்பதை ஜெர்மனி உலகிற்குக் காட்டுகிறது. அதன் ஆடைகள் களையப்பட்டு, அது எவ்வளவு அருவருப்பானது, பயங்கரமானது மற்றும் திகிலூட்டும் என்பதையும் இது காட்டுகிறது. இந்த ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் வெட்கமற்ற பிற இனத்தின் மீதான துன்புறுத்தலை யூதர்கள் எதிர்க்க முடியுமா? தங்கள் சுயமரியாதையைப் பாதுகாக்கவும், உதவியற்றவர்களாகவும், புறக்கணிக்கப்பட்டவர்களாகவும், துக்கப்படுபவர்களாகவும் உணராமல் இருக்கவும் ஒரு வழி இருக்கிறதா? இருக்கிறது என்று நான் இங்கே உறுதியளிக்கிறேன் . உயிருள்ள, கடவுள் மீது நம்பிக்கை கொண்ட எவரும் உதவியற்றவர்களாகவோ அல்லது துக்கப்படுபவர்களாகவோ உணர வேண்டியதில்லை. யூதர்களின் யெகோவா என்பவர், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் அல்லது இந்துக்களின் கடவுளை விட மிகவும் அவர்களுக்கான கடவுள். இருப்பினும் உண்மையில், சாராம்சத்தில், அவர் அனைவருக்கும் பொதுவானவர், விவரிக்க முடியாதவர். ஆனால் யூதர்கள் கடவுளுக்கு ஆளுமையைக் கற்பித்து, அவர்களின் ஒவ்வொரு செயலையும் அவர் ஆள்கிறார் என்று நம்புவதால், அவர்கள் உதவியற்றவர்களாக உணரக்கூடாது. 

நான் ஒரு யூதனாக இருந்து ஜெர்மனியில் பிறந்து அங்கு என் வாழ்வாதாரத்தை உருவாக்கிக் கொண்டால், மிக ஆற்றல் வாய்ந்த ஜெர்மானிய சக்தியாக இருந்தாலும், எவ்வளவு அரக்கத் தன்மை கொண்டதாக அது இருப்பினும், ஜெர்மனியை என் வீடாகக் கூறி, என்னைச் சுடவோ அல்லது இருட் சிறையில் தள்ளவோ முயன்றால் அதற்கு எதிராகச் ​​சவால் விடுவேன்; நான் வெளியேற்றப்படவோ அல்லது பாரபட்சமான சிகிச்சைக்கு ஆளாகவோ என்னைத் துன்புறுத்தினால், நான் அதனை மறுப்பேன். இதைச் செய்ததற்காக சக யூதர்கள் குடிமை நியாயங்களுக்கான எதிர்ப்பில் என்னுடன் சேர வேண்டும் என்று நான் காத்திருக்கக்கூடாது, ஆனால் இறுதியில் மீதமுள்ளவர்கள் என் முன்மாதிரியைப் பின்பற்றுவார்கள் என்ற நம்பிக்கை மிஞ்சி இருக்கும். 

ஆனால் பாலஸ்தீனத்திலுள்ள யூதர்களிடம் ஒரு வார்த்தை –அவர்கள் தவறான வழிகளைப் பின்பற்றுகிறார்கள் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. பைபிள் கருத்தாக்கத்தின் பாலஸ்தீனம் ஒரு புவியியல் பாதை அல்ல. அது அவர்களின் இதயங்களில் உள்ளது. ஆனால், அவர்கள் பாலஸ்தீனத்தின் நில வரைபடத்தைத் தங்கள் தேசிய இருப்பிடமாகப் பார்க்க வேண்டும் என்றால், பிரிட்டிஷ் துப்பாக்கியின் நிழலின் கீழ் அதில் நுழைவது தவறு. ஒரு மதச் செயலைத் துப்பாக்கியின் கூர்முனை (பயோனெட்) அல்லது வெடிகுண்டின் உதவியுடன் செய்ய முடியாது. அரேபியர்களின் நல்லெண்ணத்தால் மட்டுமே அவர்கள் பாலஸ்தீனத்தில் குடியேற முடியும். அவர்கள் அரபு இதயத்தை மாற்ற முயற்சிக்க வேண்டும். 

யூத இதயத்தை ஆளும் அதே கடவுள் அரபு இதயத்தையும் ஆளுகிறார்… அவர்கள் தங்கள் மதத்தின் மீதான அதி விருப்பத்தின் பேரில் உலகின் கருத்தைத் தங்களுக்குச் சாதகமாகக் காண்பார்கள். பிரிட்டிஷ் துப்பாக்கியின் முனைகள் உருவாக்கும் அடிப்படைகளை விடுத்து வேறு வழிகளை நாடினால், அரேபியர்களுடன் இணங்க மற்றும் நியாயப்படுத்த நூற்றுக்கணக்கான வழிகள் உள்ளன. அது போலவே, தங்களுக்கு எந்தத் தவறும் செய்யாத மக்களைச் சிதைப்பதில் அவர்கள் பிரிட்டிஷாருடன் இணைப் பங்காளிகள் ஆகிவிடுவர். நான் அரேபிய அத்து மீறல்களை நியாயப் படுத்தவில்லை. தங்கள் நாட்டின் மீது நியாயமற்ற அத்துமீறல் என்று அவர்கள் சரியாகக் கருதியதை எதிர்ப்பதில் அவர்கள் அகிம்சை வழியைத் தேர்ந்தெடுத்திருந்தால் நான் அதனை விரும்புவேன். ஆனால் சரி, தவறு பற்றிய ஏற்றுக்கொள்ளப்பட்ட நியதிகளின்படி, பெரும் முரண்பாடுகளுக்கு மத்தியில் அரபு எதிர்ப்பை மீறி நான் எதுவும் கூற முடியாது. 

யூதர்கள் கடவுளால் தேர்ந்தெடுக்கப் பட்ட மக்கள் என்றால் அவர்கள் வன்முறையைக் கைவிட்டு அஹிம்சையைப் பேண வேண்டும். தங்கள் நிலத்தின் மீதான உரிமையை அவ்வழி நாட வேண்டும். புவியின் மீதுள்ள ஒவ்வொரு நாடும் அவர்கள் அன்பின் அரவணைப்பில் அவர்கள் சொந்த நாடுகளே. வன்மத்தால் அல்ல. ஒரு யூத நண்பர் எனக்கு ஒரு நூல்—சிசில் ரோத் எழுதியதைப் பரிசளித்தார். அதில் யூதர்கள் எவ்வாறு கலை, இலக்கியம், இசை, நாடகம், அறிவியல், மருத்துவம், வேளாண்மை ஆகியவற்றுக்குப் பங்களித்தவர்கள் என நாம் அறியலாம். ஆர்வம் இருந்தால், யூதர்கள் மேற்கத்திய நாடுகளால் புறக்கணிக்கப்பட்டவர்களாக நடத்தப்படுவதையும், வெறுக்கப்படுவதையும் அல்லது ஆதரிக்கப்படுவதையும் அவர்களே நம்பிக்கையுடன் மறுக்க முடியும். கடவுளால் கைவிடப்பட்ட மிருகத்தனத்தில் மூழ்குவதற்குப் பதிலாக, கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட, அவரால் படைக்கப் பட்டவர்களாக இருப்பதன் மூலம் யூதர் உலகின் கவனத்தையும் மரியாதையையும் பெற முடியும். அவர்கள் உலகிற்கான தங்கள் பல பங்களிப்புகளில் அஹிம்சை என்ற ஒன்றை அவர்களின் சிறந்த பங்களிப்பாகச் சேர்க்கலாம். 

மேற்குறிப்பிட்ட ஆளுமைகள் யாவரும் வன்முறையில் நம்பிக்கை கொண்டவர்கள் அல்ல. ஆனாலும் அவர்கள் ஏன் ஜியோனிசத்தைத் தெளிவாக, வல்லமையோடு எதிர்த்துள்ளார்கள் என்பது ஆழ்ந்து சிந்திக்கத் தக்கது. அவர்களின் பார்வையின் தொலைநோக்கு வியப்பை அளிக்கிறது—குறிப்பாக காசாவில் ஒவ்வொரு குழந்தையின் அழுகுரலும் அனாதைக் குரலாக ஒலிக்கும் போது. 

***

ஆர்.பாலகிருஷ்ணன் – தமிழில் முப்பது ஆண்டுகளாக எழுதி வரும் ஆர் .பாலகிருஷ்ணன் ஒரு ஆங்கிலப் பேராசிரியர். கோவையிலுள்ள தனியார் கல்வி நிறுவனங்களில் பணியாற்றியவர். தற்போது வருகை தரு பேராசிரியராக, மொழிபெயர்ப்பாளர் ,விமர்சனக் கட்டுரை என ஆங்கிலம், தமிழ் மொழிகளில் எழுதி வருகிறார். இதுவரை 20 க்கும் மேற்பட்ட மொழி பெயர்ப்பு நூல்கள் தமிழ் ஆங்கில மொழிகளில் வெளியாகி உள்ளன. ஆவணப் படங்கள், மலையாளத் திரைப்படங்களுக்கான திரைக்கதைகள் எழுதுவதையும் இப்போது கூடுதலாக மேற்கொண்டு வருகிறார். பன்னாட்டு ஏடுகளில் இவரது இரண்டு ஆய்வுக் கட்டுரைகள் வெளியாகி உள்ளன. அவற்றுள் ‘சேலஞ்சிங் ஆர்கனைசேஷன்ஸ்’ என்ற வியன்னாப் பல்கலைக்கழக ஏட்டில் இவர் எழுதி வெளிவந்த கட்டுரை முக்கியமானது. பாலஸ்தீனம் பற்றிய அக்கறை இவருக்கு 80 களின்  பிற்பகுதியில்–மாணவப் பருவத்தில்,  இங்கு பாலஸ்தீன விடுதலை இயக்கத்தைச் சார்ந்த வீரர்கள் சிலரைச் சந்தித்து உரையாடிய போது நேர்ந்தது. தொடர்ந்து பாலஸ்தீன் பற்றிய வாசிப்பு ஆய்வுகளில் ஈடுபாடு கொண்டு வரும் இவர் யமுனா ராஜேந்திரனுடன் இணைந்து மஹ்முத் தார்விஷ் கவிதைகளை மொழி பெயர்த்து வெளியிட்டு வருகிறார். மின்னஞ்சல்: rdada2001@gmail.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here