1.
ஒழுகிக் கொண்டிருக்கும்
நேரத்தைக்
கடத்திவிட முடியாத இரவு
மேலிறங்கிக்
கனமாக அழுத்துகிறது
விசும்பின் நதியாய் தோன்றிவிட்ட முதல் முத்தம்
நம் இருதயங்கள்
சப்தித்ததை விடவும்
குறைந்த ஒலியில்
பிறப்பித்த ஆணைகளைச்
செவ்வனே செய்து கொண்டிருக்கிறது
கிடந்த கோலத்தில்
ஊற்றெடுத்த காதல்
கையாலாகாத இருளை
கண்டம் இறுக்கி அழித்துவிட முயற்சித்து முயற்சித்துத் துவள்கிறது
2
இதற்கு முன்பும் உன்னைத் தெரியும்
அப்போது நாம்
இடத் தவறிய முத்துக்களின் கணக்கை நேர் செய்யும் பொருட்டு தற்போது சந்திக்கிறோம்
பகலும் இரவுமென
உயிர்கள் உழல
செவ்வனே
நட்சத்திரங்களின் நிழலில்
இணக்கம் கொண்டு
முயங்கியிருந்தோம்
விண்ணில்
பால்வெளி பளிச்சிட்டது
விண்மீன்களின் ஒளியினூடே நடனமாடும் நம்மைக் காண
காத்திருந்த இருளில்
அவர்கள் மிச்சத்தைப் பேச வேண்டும்
கோப்பை மது கொண்டு வா
அறியா இதழ்கள்
நன்னீர் ஆசியுடன்
ரேகைகள் சிவக்க
களித்துச் சுவைக்கட்டும்
*
3.
கடும் கோடையின்
பின்னிரவில்
விண்மீன்கள்
இருளுக்கு மகுடம் சூட்டி
மகிழ்ந்து கொண்டிருந்தன
முந்நூறு மைலுக்கு அப்பாலிருந்து
இரவின் வன்மையை அதிகப் படுத்தியிருந்தாய்
தரையில் படுத்திருந்தவளை
இருள் முழுதுமாய் கையகப்படுத்தியிருந்தது
தரை நழுவியிருந்தது
பின்னிரவின் குளிர்மை பரவத் தொடங்கியிருந்தது
பசுங்கொடியில்
விழித்துக் கொண்ட மலர்களை
என் செய்வது…
முந்நூறு மைலும் இருளை இறுக்கியது
சூரியன் எழுந்தது
மகுடம் தரையில் விழுந்து சிதறுகிறது
*
அகராதி
[email protected]