Tuesday, March 19, 2024
Homesliderவெஞ்சினம்

வெஞ்சினம்

கார்த்திக் புகழேந்தி

1

மேற்கே மலையடிப்பாதையில் பத்து மைல் தூரத்துக்குக் குறையாமல் பயணம் பண்ணினால், நான்கு மலைகளுக்கும் நட்டநடுவாக பரந்த எல்லைகளுக்குள்  காடாய் விரிந்து கிடக்கும் நாகுப்பிள்ளை தோப்பு. செவேல் நிறக்குதிரைப் பூட்டின கூரை வண்டியில்  ஏறினால் மூணு நாழிகைக்குள் தோப்பை அடைந்து விடலாம். ஒரு காலத்தில் ஊத்தாய்ச் சுரந்த மலைகள், மரமெல்லாம் வெட்டித் தின்ற பிறகு மொட்டையும் கட்டையுமாய் காய்ந்து போனது. காட்டாறு ஓடின பாதையில் கரடி நடந்து போன தடங்களைத் தான் பார்க்க முடிகிறது.

ரொம்பக் காலம் முந்தி மொத்த மலைகளும் சமீந்தார் மாளிகைக்கே பாத்தியதையாகவே இருந்தன. தெக்கத்தி மண்ணில் காங்கிரசு பார்ட்டி வரவேற்பு பெற்ற நேரத்தில் இங்கிருந்த சொல்லத்தக்க பேருள்ள ஆளாக சமீந்தார் மாத்திரமே இருந்ததால் ஜாகையை பட்டினத்துக்கு மாற்றிக் கொண்டார். ஊரோடு இருந்த மாளிகையையும் நிலபுலன்களையும் எட்டிப் பார்க்கவே நேரமில்லாமல் போனவர், பிறகு, மலை மேலிருந்த வேலிகளைப் பராமரிக்கும் பொறுப்பை நாகுப்பிள்ளை வசம் ஒப்படைத்துவிட்டார் சமீந்தார்.

நாகுப்பிள்ளை நல்ல விசுவாசி. பரம ரகசியங்கள் என்று சொல்லப்பட்டவை பலதும் அறிவார்.  அதனாலே(யே), எப்போதாவது பட்டினத்திலிருந்து, பியூக் காரில் வந்திறங்கும் சமீந்தார் குடும்பத்தை விட, நாகுப்பிள்ளையின் குடும்பமே சமீனின் மலைக்காணி மொத்தத்தையும் ஆண்டு அனுபவித்து வந்தது. அவ்வப்போது விளைச்சல் கணக்கு காட்டிக்கொண்டு, மேல் செலவுகளை எழுதி வைத்து, நேரம் கிடைக்கையில் எல்லாம் பெட்டி பெட்டியாகக் குடந்தைச் சீவலை அசை போட்டபடி ஏவல் சொல்லிக்கொண்டு சமீன் சொத்தை பூதம் புதையல் காப்பதுபோல காத்துக் கொண்டிருந்தார் நாகுப்பிள்ளை.

அந்த சமயத்தில் தான், ஆயிரத்து தொளாயிரத்து அறுபதாம் வருசத்தில் மதராஸ் நில நிர்ணயச் சட்டம் ஒன்று உருப்பெறும் பேச்சுக்கள் மெல்ல காங்கிரசுப் பெரிய மனிதர்களின் தூக்கத்தைக் கெடுத்தது. வங்காளத்திலும் மலபாரிலும் நடந்தது போல பெரிய பெரிய நிலக்குவியலை எல்லாம்  அரசாங்கம் கையகப்படுத்தப் போகிறது என்ற பீதியில் சமீந்தாரும் நேரம் கெட்ட நேரத்திலெல்லாம் வண்டி கட்டிக்கொண்டு வக்கீல்கள் ஆபீசுக்கும் மாஜிஸ்திரேட் வீட்டுக்கும் அலைந்து கொண்டிருந்தார்.

‘ஐந்துபேர் கொண்ட குடும்பத்துக்கு முப்பது ஸ்டாண்டர்டு ஏக்கருக்கு மேலே சொத்து வைக்கக் கூடாது’ என்று முதலில் வெருட்டிய வக்கீல்கள், பிறகு ஆற அமர நிலபுலன்களை டிரஸ்டு சொத்தாக்குவது பற்றியும், இனாம் கிரையம் பண்ணிக்கொடுத்து பதுக்குவது பற்றியும் யோசனை சொல்லிக் கொடுத்து அதற்கு பீஸாக தங்கள் பேரில் ஒரு பங்கு நிலத்தை ஊர் பேர் தெரியாத இடங்களில் பத்திரம் போட்டு வாங்கிக் கொண்டார்கள். 

எதிர்பாரா விதமாக அரசாங்க ஆ(ர்)டரில், சமீனின் மலைக்காணிகள் மொத்தமும் ஜென்ம நிலங்களுக்குள் அடங்கி விட்டது. சங்கிலிப் பெட்டிகளைத் தூக்கிக்கொண்டு புதுசு புதுசாக வேலைக்கு அமர்த்தப்பட்ட சர்வேயர்கள் நாலாபுறமும் மலையை அளந்துவிடத் தயாராய் வந்திறங்கியிருந்தார்கள். அவர்களில் தனக்குச் சரிப்பட்டு வந்தவர்களைச் சரிகட்டி, வராதவர்களை வாயடைத்து, சமீன் தன்வசமிருந்த மலைக்காணிகளை அங்கங்காகப் பிரித்து, முப்பது, முப்பது ஏக்கரெனத் தன் விசுவாசிகளுக்கு எழுதிக் கொடுத்து மிச்சம் மீதியென மீந்தவைகளைத் தனக்குக் கட்டுப்பட்டவர்கள் வசமே ஒப்படைத்து விட்டார்.

அப்படியாக நாகுப்பிள்ளை குடும்பத்திற்கென மொத்தமாகக் கிடைத்த இனாம் தான் அந்த முழுத்தோப்பும். நாகுப்பிள்ளைக்குப் பிறகு வாரிசுரிமைப்படி, இளையவடியாள் மகனும் கடைக்குட்டியுமான கனகுப்பிள்ளையின் கைகளுக்கு சொத்து வந்து சேர்ந்தபோது, ஜமீன் வாரிசென்று இதுவரை ஏழெட்டுப்பேர் கிளம்பி வந்து, தோப்பைத் திரும்ப தங்கள் பேருக்கு எழுதித்தரச் சொல்லி மிரட்டிவிட்டுப் போயிருந்தார்கள்.  யார்கிட்டேயும் எந்த தாஸ்தாவேஜோ, பட்டயமோ, பத்திரமோ கிடையாது என்பது கனகுப் பிள்ளைக்கும் தெரியும். பிறகு இந்த மலங்காட்டில் வந்து அவரை அதிகாரம் பண்ணிவிட்டுத் திரும்புவதும் அவ்வளவு எளிய காரியமாக இருக்கவில்லை.

அந்நாளைகளில் நாகுப்பிள்ளை குடும்பம் இருந்த இருப்புக்கும், செழிப்புக்கும் இப்போது கைமேல் வசமாய் இருக்கும் இந்தத் தோப்பு ஒன்றுதான் ’பூர்வீகச் சொத்து’. அதுவும் மலைவழிப் பயணத்துக்கு ஒரு கோவேறு பூட்டின பழைய வண்டி, ரெண்டு காவல் கூலிகள், ஒரு சிப்பிப்பாறை வளர்ப்பு, நாலு மண்வெட்டிகள், பத்திருவது சுமை கூடைகள், சாக்கு கோணி இவ்வளவுதான் மொத்த தளவாடங்களே. ஆனால் விளைச்சல் என்று வாய் வைத்துவிட்டால் போதும் பேய் பேய் எனத் தடித்துப் பழுக்கும் எலுமிச்சைகளைக்கூட, சாக்கு போட்டுக் கட்டி மாள முடியாது. இதில் பயிர் வைத்து பறிக்கும் பனிவரகும், கேழ்வரகும், சிட்டஞ்சாமையும், பெருஞ்சாமையும், சடைசாமையும் சிப்பம் சிப்பமாக அடித்து பொலித்தால் எப்படியும் இருமாசம் வேலை வைக்கும். இதை கைக்குமில்லாமல் வாய்க்குமில்லாமல் பிடுங்கிக்கொண்டு விட்டுவிட்டால் எங்கே போவது யாரைக் கேட்பது என்ற கவலையில் நல்ல விலைக்குக் கைமாற்றிவிடும் தீவிரத்தில் இருந்தார் கனகுப்பிள்ளை.

2

னகுப்பிள்ளை தோப்புக்குத் தன் பேரன் சுந்தரனை இம்முறை அழைத்து வந்திருந்தார். புதிதாக வந்திருக்கும் இன்னொரு நபரைக் கண்டவுடன், ‘சுருளி’ பழியாய்க் குலைத்துக் குதிக்கத் துவங்கிவிட்டது. சுந்தரன் அதன் திரட்சியான கால்களையும், உமிழ் வடியும் நீண்ட இளஞ்சிவப்பு நாக்குகளையும் பார்த்ததுமே சற்று மிரண்டு போயிருந்தான். சுருளியின் வலுவுக்குப் பலங்கொடுத்து அதன் சங்கிலியில் இழுத்துக் கட்ட கனகுப்பிள்ளைக்குச் சத்தோ, துணிவோ கிடையாதுதான் என்றாலும்.. ‘ஏய் ஏய்..’ என்ற அவரது ரெண்டே அதட்டில் அதுவரை அந்தரத்தில் எவ்விய கால்களைத் தரையில் பதித்து பம்பரமாய் சுழன்றடங்கியது சுருளி.

“ஒண்ணுஞ் செய்யாது வா எம்பொறத்தாடி.. ஏவே.. எங்கனெ போய் ஒழிஞ்ச.. ஓவ்.. அங்கன ஆரு நிக்கது.. இந்தக் கழுதைய கொண்டுபோய் கட்டிப்போடு மொதல்ல”

வண்டிச்சத்தம் கேட்ட போதே சாமி சேர்வை புரிந்து கொண்டார். சுருளி குரைத்த வேகத்தில் கைகாலைக் கழுவிக்கொண்டு, துவரைக் குச்சிகள் வேய்ந்த படலை விலக்கியபடி தோப்பின் முற்றத்துக்கு வந்து கொண்டிருந்தார். அதற்குள் பெரியவர் சத்தம் கொடுத்து விட, நேரே  தன் வருகையை அறிவிக்கும் விதம்  ஒரு ஏல் சொல்லிவிட்டு சுருளியை அவிழ்த்துக் கொண்டு போய் நிழலிலாழ்த்தினார்.

“என்னப்பா… வேலை ஆகுதா!”

“அந்தால காட்டுக்குள்ள காய் பறிப்பு நடக்குதுங்க. பொழுது சாயுறதுக்குள்ள கீழ கொண்டு போகணுமின்னு ஆள்வள பத்திக்கிட்டு நின்னேன். வர்ற சத்தம் கேட்டதும் ஓடியாறேன்..”

“அதான சரி, ஆமா நேத்தெல்லாம் என்ன ஆஞ்சிய?”

“நேத்து நெல்லியக் கட்டி கீழ எறக்கி கொடுத்துவுட்டோமே. முக்கா வண்டி ரெம்பிருக்கும். பதமான கனிங்க”

பிள்ளைவாளுக்குப் பதில் கொடுத்துக் கொண்டே, நார்க்கட்டிலைக் கொண்டு வந்து பாக்குத்தடி வரிசையில் குறுக்கு வசமாய்ச் சாய்த்துப் போட்டுவிட்டார் சேர்வை.

“இதில இரிங்க…”

“இருக்கட்டும், விடப்பா.. ஏ.. சுந்தரம்பிள்ளே வா வந்து தாத்தாகிட்ட உக்காரும்… ஆருன்னு தெரியுதா.. மகன்வழிப் பேரன்”

“சாடை அச்சில அடிச்ச மாதிரில்ல இருக்காரு. வந்தமேனிக்கி நம்ம ச்சுர்ளிய கண்டு அசந்துட்டாரு போல.. பழகிட்டா ஒண்ணுங் செய்யாது. என்ன… சின்னவரே  சொகந்தானா!”

சுந்தரம் மெலிதாகச் சிரித்து வைத்தான். அவனுக்குச் சாமிச் சேர்வையிடம் எந்தப் பிடிப்பும் ஏற்படவில்லை. கிடா தடிக்கு மீசை, ஆளை அச்சமூட்டுவது போலிருக்கும் இருங்குத்திப் பார்வை, தடித்த கைகள், கொஞ்சமும் தன்மை இல்லாத வறட்டு மனிதன் என்றே முடிவு கட்டிக் கொண்டான்.

மண் கும்பான் நிறையத் தண்ணீரைக் குடித்து  முடித்ததும், தனக்கு எதிரே இருந்த கல்திண்டில் சாமிச் சேர்வையை உட்காரச் சொன்னார் கனகுப்பிள்ளை. ஊரில் யார்கிட்டேயும் அதிகம் பேச்சு வளப்பு வைத்துக் கொள்ளாத கனகுப் பிள்ளையும் சாமிச் சேர்வைகிட்டே மட்டும் வாய்க்கா, வரப்பு, தண்ணி, தாவணி, பஞ்சு, பருத்தி, பாண்டவர், கௌரவர் என்று எல்லாப் பழங்கதைகளும் பேசித் தீர்ப்பார். ரெண்டு பேருமாக வாய் வயனங்களும், ஆவலாதிகளும் பரிமாறிக் கொண்டிருந்த நேரத்தில், சுந்தரன் தோப்பு விடிலிக்குள் நுழைந்து உடை மாற்றிக் கொண்டு கிணற்றில் பாய்ந்து ஒரு நல்ல குளியல் போடலாமெனப் பதம் பார்த்துக் கொண்டிருந்தான்.

பால்போல் பொங்கி நிற்கும் தூசுதும்பு காண முடியாத அந்தக் கிணற்றுத் தண்ணீரில், ஓங்கி விழுந்து, குதித்துச் சாடி, விழுந்த வேகத்திலே ஆழத்தில் முங்கி, உந்திக்கொண்டு மேலேறி, கைகளை அசைத்து உடம்பை மிதவை ஆக்கிக்கொண்டு நெடுநேரம் ஊறிக் கிடந்தால், சொடக்கெடுத்த மாதிரி உடம்பெல்லாம் தளர்ந்து போகும். பசி கண்மண்ணைப் பிடுங்கும். சில மணிகளில் எல்லாம் சுந்தரன் ஆள் இளைத்து பருத்தது போல் ஆகிப் போனான். ஈரம் சொட்டச் சொட்ட அவன் கரையேறியபோது, திக்கறியாத விறகடுப்புப் புகையும், கறியைச் சுடும் கமறல் வாசனையும் அவனைக் கிறங்கடித்தன.

கனகுப்பிள்ளைக்குமே தோப்புக்கு வந்துவிட்டாரென்றால் எப்படியும் மங்கா அறுத்துக் கொதிக்கவிடும் சேவல்கறியும், அதன் காரத்தை தணித்துக் கொள்வதற்கு சீமைச் சாராயமும் கட்டாயம் வேண்டும். அதென்னமோ ஊரிலும் வீட்டிலும் சரி சைவப்பிள்ளையாக உலா வந்தாலும், ரகசியமாகப் பொத்தி வைத்திருக்கும் தன் நா ருசிக்கிடைக்கைகளை இங்கே வந்து திறந்து போட்டு, லம்பமாய் ஒரு ஆட்டம் ஆடிக்கொள்வார். பிறகு சந்தனமும் ஜவ்வாதும் பொக்காமல் பூசிக்கொண்டு, அப்போதுதான் ’எம்பாவாய்’ பாடி முடித்த வாயாக மலர மலர மலையை விட்டுக் கீழிறங்குவார்.

வெயில் அன்று அம்பலத்தில் ஏறி ஆடிக் கொண்டிருந்தது. முற்றம் வரைக்கும் தாழ்ந்து, கைநீட்டிக்கிடந்த மாமரக் கொப்புகளிலும் கிளைகளிலும் வெள்ளை வெள்ளையாய் பூப்பிடித்திருந்தன. இந்தப் பூக்கள் ஒவ்வொண்ணும் காய் கண்டு, காய்களெல்லாம் பழங்கண்டு தின்னுவிட வேணுமென்ற ஆசையில் பச்சைக்குளவிக் கூட்டமொன்று ஒய்ய்ங்கென்று இரைந்துக் கொண்டிருக்க, சுருளி அந்த வண்டுகளைக் கவ்விப் பிடிப்பது போல மிரட்டிக் கொண்டிருந்தது. தாத்தா கனகுப்பிள்ளைக்கும் தனக்கும் சாப்பாடு பரிமாறுவதற்கென்று வாழை இலைகள் ரெண்டை அரிந்து கொண்டு வந்து சேர்ந்தார் சாமிச்சேர்வை.

“ஏம்மா.. சோற்று சட்டிவள எடுத்துட்டாமா..” என்று அவர் குரல் கொடுக்கவும் கிழக்குப் பக்கமிருந்த கொட்டாரிலிருந்து மரகதப் பச்சையில் வெள்ளைப்பூ போட்டச் சீலையை நாட்டு உடுப்பாகச் சுற்றிக்கொண்டு, இரண்டு கைகளில்  சமைத்த கறிச்சட்டிகளோடு ஒயிலாக நடந்து வந்தாள் மங்கா.

மங்கா சாமிச்சேர்வை தனக்கென்று ரெண்டாவதாகச் சேர்த்துக்கொண்ட பெஞ்சாதி. மூத்தவடி பற்றி அவரிடம் எந்தக் குறிப்பும் கிடையாது. அதேமாதிரி இவளுக்கும் பிள்ளைகள் பூச்சிகள் என்று எதுவும் படவில்லை. ‘பின்ன என்னத்துக்கு இந்தக் கிழவனைக் கட்டீகிட்டு இந்தக் காட்டுக்குள் வந்து கிடக்காளோ இந்த ஓடுகாலி முண்ட’ என்று கனகுப்பிள்ளை ஏங்கு மூச்சாக யார் காதும் படாமல் தனக்குள் முணங்கிக் கொள்வதுண்டு.

தோப்புக்கு உள்ளாக அரை குறுக்கத்தில் பனமட்டையும் கம்பங் குச்சிகளும் சாக்குப் பாய்களும் கொண்டு சேர்வை உண்டாக்கின கொட்டாரில்தான் பல வருசங்களாய் மங்காவின் குடிபிழைப்பு. ஒன்று அதிர்ந்து ரெண்டாகத் தெரிகிற மாதிரி ஒரு சொல்லும் சாமிச்சேர்வை அவளிடம் பேசியதில்லை. சொந்த ஊருக்கோ அக்கம்பக்கத்து இடங்களுக்கோ ரெண்டு பேரும் சேர்ந்தாக்கில் புறப்பட்டுப் போனதாகவும் செய்தி கிடையாது.

தோப்பின் தென்கோடியில் மங்கா அவளுக்கென்று உண்டாக்கிக் கொண்ட குலச்சாமியான பூவாத்தாளைக் கும்பிடுவாள். அதிசயமாக அடிவாரத்தில் உக்கார்ந்திருக்கும் முனிக்குச் சாத்து கொடுக்கும் நாளையில் மட்டும் தனியாளாக ஓய்வொழிச்சல் பார்க்காமல் கீழிறங்கி தலையைக் காட்டிவிட்டுத் திரும்புவாள். மற்றபடி இந்த சாமி காரியங்கள் தவிர்த்து மங்கா என்றொருத்தி அங்கே உயிரோடு உலாவுவது பற்றி எந்த சொற்களும் வேலி தாண்டியதில்லை.

”உனக்கு சேவல் கறி ஒத்துக்குமா.. இல்ல மரக்கறி வேணுமா?”

எடுத்ததுமே ஒருமையும் அதிகாரமும் தொனிக்க தன்னிடம் கேள்வி கேட்கிறாள் என்ற வேகம் சுந்தரனை ஒரு அசை அசைத்துவிட்டது. இவ்வளவு பெரிய தோப்புக்கும், கிழவனின் சகல சொத்துக்களுக்கும் அதிகாரம் செலுத்தப் பாத்தியதைப்பட்டவன், நகரத்தில் படித்தவன், நாகரிக உடை உடுத்துபவன். நளினமாக மேலை மொழியில் பேசத் தெரிந்தவன். ஆங்கில நாளேடுகளில் எல்லாம் பக்க அளவில்லாமல் கட்டுரைகள் எழுதிக் குவிப்பவன் இன்னும் எவ்வளவோ அவனைக் குறித்து  அவனே மதிப்பீடு செய்து வைத்திருந்த பிரமாணங்களை எல்லாம் ஒரே அடியாக தரையில் தூக்கி அடிப்பது போல, “ஒக்காரு.. கைய நீட்டு.. இலையக் கழுவு..” என்று அவள் பாட்டுக்குக் அடுக்கிக் கொண்டே போனாள்.

யார் இந்த மங்கா? இவளையும் சாமிச்சேர்வையையும் பக்கம் பக்கமாக நிறுத்தினால் அப்பனும் மகளும் போலல்லவா  இருப்பார்கள். இவர்கள்தான் தாத்தா சொன்ன கணவனும் மனைவியுமா? யானையைக் கொண்டு வந்து கிட்டத்தில் நிப்பாட்டினால் இவளும் யானையும் ஒரே கருப்பில் தான் இருப்பார்கள். கலங்கல் இல்லாத முகம்தான். ஆனாலும் அதில் அப்பட்டமான பட்டிக்காட்டுத்தனம். தந்தத்தில் சீவின வளரித் தண்டுபோல கள்ள வீட்டுப் பெண்களுக்கே உண்டான திடகாத்திரமான உடம்பும், குணமும்… இருக்கட்டுமே என்ன திமிர்த்தனம் இவளுக்கு…

தனக்கு முன்னால் கனகுப்பிள்ளை உட்கார்ந்திருப்பது பற்றிக் கூட அவள் சட்டை செய்யவில்லை என்பதை யோசித்தபோது, யார் இந்த கருப்பு அரக்கி என்று அவன் மனம் துள்ளத் துடித்துக் கொந்தளித்தது.

 3

திராவிட முற்போக்குக் கட்சியின் சொத்து பாதுகாப்புக் கமிட்டியில் முக்கியப் பதவியில் இருந்தவருக்குச் சொந்தமான அந்த நிறுவனம், ஊருக்கு மேற்கேயுள்ள அகண்ட நிலபுலன்களை எல்லாம் சத்தமில்லாமல் வாங்கிப் போட்டபடியிருந்தது. விதைப்பும் விளைச்சலும் பட்டுப்போய், தொழில்வெளி என்று எதுவும் அமையாத பூமியில் கல்குவாரிகளும், செங்கல் சூளைகளும் நாளும் பொழுதும் கிளைத்து எழ, மேற்படியார் காதுக்கு, கண்ணுக்குக் குளிர்ச்சியாய் தோப்பு ஒன்று மலைக்கு மேலாக பழைய விவகாரங்களுடன் விற்பனைக்குக் காத்திருப்பது குறித்த செய்தி வந்து சேர்ந்தது. ‘நிறுவனம்’ வழக்கம் போல சொத்தின் பூர்வீகங்களை விசாரிக்க ஆரம்பித்தது.

மாடிப்படியில் இருந்து இறங்கும் போது, கனகுப்பிள்ளைக்கு கணுக்கால் நரம்பு சுண்டிவிட ரொம்ப தொலைவுக்குக் காலை தொங்க போட்டுக்கொண்டு பிரயாணம் செய்யவோ, நடக்கவோ கூடாது என்று குடும்ப டாக்டர் கண்டிப்பு போட்டு விட்டார். அந்த ஆடி மாதத்தின் போக்கு வரவுகளை வைத்து தோப்பு விளைச்சலை வீடேற்றிவிட்டு, அதே வேகத்தில் அதனைக் கைமாற்றிவிடலாம் என்று நினைத்திருந்தவருக்கு டாக்டரின் இந்த கண்டிப்பு இடுக்காய் வந்து சேர்ந்தது. சுந்தரன்தான் எதைப் பற்றியும் கவலைப் படவேண்டாம் நானே போய் தங்கியிருந்து எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு வருகிறேன்’ என்று கனகுப்பிள்ளைக்கு நம்பிக்கை கொடுத்திருந்தான்.

ஆடிக் காற்றாடியில் மலை வழியாகப் பேரன் போகிறானே என்று நல்ல குதிரைக்கட்டுள்ள வண்டி ஒன்றை ஏற்பாடு சொல்லி, நாள் வீதம் எட்டணா சத்தம் பேசி போக்குவரத்துகளுக்குச் சலிக்காமல் உடன் இருந்து கவனித்துக்கொள்ள வேண்டும் என்று வழியனுப்பி வைத்திருந்தார் கனகுப்பிள்ளை.

முதல்நாளிலே சாமிச்சேர்வையாரின் எல்லா ஆகிருதிகளையும் மொத்தமாக சுந்தரன் அனுபவித்தான். சாராயத்தின் ஒவ்வொரு மடக்குக்கும் ஒரு வண்டி சுருட்டுப் புகையை ஊதித்தள்ளிக்கொண்டு, அது வெட்டவெளி முழுக்கச் சூழந்தடிக்க, உற்சாக போதையின் மிதப்பில் கனகுப்பிள்ளைக்கும், தனக்குமான நெடுங்காலத்துப் பழக்கங்கள், அவரை ஏய்த்து அழிக்க நினைத்தவர்களுக்குத் தான் கொடுத்த அடிகள், அதற்கான கோர்ட்டு வழக்குகள், சாபங்கள், விமோசனங்கள் என்று கதை கதையாய் அவிழ்த்துக் கொட்டினார் சாமிச்சேர்வை. பிறகு, ஒரு வளர்த்தியான கொட்டான் நிறைய இன்னும் கொஞ்சம் சாராயத்தை ஊற்றிக்கொண்டு தோப்பின் முக்கத்துக்குப் பக்கமுள்ள பரம்பில் ஏறி, காவலுக்குப் போய் உட்கார்ந்துக் கொண்டார். 

மங்கா வேலைகளை முடித்துவிட்டு, பூவாடை மணமணக்க கொட்டாருக்குத் திரும்பியிருந்தாள். சுந்தரனுக்கு அரங்கில் படுப்பதற்கு வசம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருந்தாலும் இன்னும் தூங்கப் போகாமல் திண்ணையில் வந்து ஒருக்களித்துச் சாய்ந்து உட்கார்ந்து டிக்கின்சனின் “டே ஆப்டர் டுமாரோ’ வாசித்துக் கொண்டிருந்தான். அவனது தலைமாட்டுக்குப் பக்கம் இருந்த கரடி விளக்கைத் தூண்டிவிட்டுக் கொண்டே, “வேற என்னமும் வேணுமா” என்று மெலிதான குரலில் கேட்டாள் மங்கா. தூங்கும் கிணற்றை மீன்கள் அசைத்தது போலக் கலைந்துபோய் திரும்பிப் பார்த்தான்.

”இல்ல ஒன்னும் வேண்டாம்”

“சரி…”

அவள் திரும்பிப் போகவிருந்தாள். ஒரு பேச்சுக்குக் கூட அடுத்த வார்த்தை எதுவும் அவளிடமிருந்து ஏற்பட்டிருக்கவில்லை. என்ன மனுசி இவள் என்று நினைத்துக் கொண்டே, “ம்க்கும்..  லைட்டர் எங்கயோ வச்சுட்டேன். தீப்பெட்டி கிடைக்குமா?” என்றான்.

“கை எட்டும் தூரத்திலே விளக்கு எரியுதே..” என்று திரும்பி நின்று கேட்டாள்.

பதில் பேசாமல் தன் பாக்கெட்டுக்குள்ளிருந்த சிகரெட் பட்டியைத் திறந்து ஒன்றை அதில் பற்ற வைத்தான். நின்ற இடத்தில் இருந்தபடியே அவன் செய்கையை அவள் கவனித்தாள்.

”என்ன வாசிக்கிற..”

“சொன்னா உனக்குப் புரியுமா…”

“புரியுற மாதிரி சொல்லத் தெரியாதா?”

சுந்தரனுக்கு கடுமென்றானது. பட்டிக்காட்டுத்தனம் என்று எடைபோட்டிருந்த அவன் கணக்கு மூட்டையைக் கிணற்றைப் பார்த்து எரிந்தவன் போல, “தூக்கம் இன்னும் வரலை. நீ எதாவது சொல்லேன் கேட்கலாம்” என்று இமைகூட அதிராத முகபாவனையில் கேட்டான். அது வழக்கமான அவனது திமிர்த்தொனியோடான பேச்சில்லை என்பதை மங்காவும் புரிந்து கொண்டவளாக முறுவலித்தாள்.

“எங்கிட்ட கேட்டு உனக்கு என்ன தெரியணும்!”

அவள் தனக்குச் சரிக்குச் சமமாகக்கூட அல்ல அதற்கும் மேலேறிச் சென்று தன்னைச் சீண்டுவதை உணர்ந்தாலும் அவனுக்குள் ஏற்படும் இந்த மன உபாதையின் வலிமையை அனுபவித்துவிடத் துடிப்பவனாக திரும்பவும் பேச்சை வளர்த்தான்.

“உனக்குத் தெரிஞ்ச கதை எதாச்சும் சொல்லு”

“ம்… சொல்லலாமே.. இரு சுருளி பசியோட இருக்கும். அதுக்கு சோறு வச்சுட்டு வந்து, நிதானமா உனக்குக் கதை சொல்றேன்.”  

நாய்க்குச் சோறு வைத்துவிட்டு பிறகு என்னோடு வந்து பேசுகிறேன் என்கிறாள். நாயும் நானும் ஒன்றா? இல்லை.. இவள் நாய்க்கும் கீழாக என்னை இறக்கிப் போட்டு  துவம்சம் பண்ணுகிறாள். அரக்கி அரக்கி இவளை….

4

ரிசங்காட்டில் மிளகாய், பருத்தி விளைச்சல் சக்கைப்போடு போட்ட நேரத்தில் அடிவாரம் வழியாக மேற்கே வண்டி கட்டிக்கொண்டு போகிற வியாபாரிகள் எண்ணிக்கை பார தூரமாய் அளந்துவிட முடியாதபடி இருக்கும். ஒரு பக்கமிருந்து கருப்பட்டி பாரமும், இன்னொருபுறம்  பருத்திப் பொதிகளும், வேறு வேறு ஊர்களில் இருந்து வந்துசேரும் சரக்கு வண்டிகளும்  எதிரெதிர்பட நுழைந்து வெளியேறும் பரபரப்பான கணவாய்ப்பாதை அது. கண்ணுக்கு நேராக முகடுகள் நின்று முட்டுவதுபோலத் தோற்றம் தரும் அந்த கணவாய் ஏற்றத்தில் தான் சமீப காலமாகச்  சேட்டை அடித்துக் கொண்டிருந்தது முனி. 

முனி நடமாட்டம் பற்றின பேச்சுக்கள் பரவினதும் வம்பும், நட்டமும் எதற்கென்று வியாபாரிகள் மலையைச் சுற்றி எட்டூர் தாண்டி நாடு சுற்றிப் போகும் ஆற்றங்கரை வழிக்கு வண்டிகளை மா(ற்)றிக் கொண்டார்கள். இந்த சங்கதியைக் கேள்விப்பட்ட ஊராண்ட தளவாய்க்கு இது பெருத்த அவமானத்தை ஏற்படுத்தியது.

“காட்டுக் களவழி போறவரின் கண்ணுக்குச் சிக்காது நிழல் போலக் காவல் காக்கும் நம்மோட ரேணுகை உடனிருக்க ஏமாப்பு காட்டும் இந்த இளைய முனி யாரடா? அவனை ஒரு கை பார்த்துவிட வேண்டாமா!” என்று கொந்தளித்தார் தளவாய் கோபாலன்.

“நூறு கொல்லவாருக்களை இழந்தாலும் அந்த ரத்தத்திலே நடந்துபோய் இன்றிரவே அந்த முனியைப் பலியெடுப்பேன். வருசமலைக்கு வழி திறப்பேன். இது அந்த ரேணுகையின் மீது ஆணை” என்று மாசி அமாவாசை தினத்தில் பாளையத்து ராசாமார்கிட்டே உத்தரவு வாங்கிக்கொண்டு மாடு மேய்க்கிற கூட்டம் போல மலையடிவாரத்தில் மொத்தமாக இறங்கியது தளவாயின் படை.

குதிரைகாரன் ரசல்தார் ராவுத்தருடன், கூடைக் கருப்பனையும் அவனோடு நாலுபேர் கொண்ட கொத்தையும் அனுப்பி, அடிவாரத்தை ஒரு சுற்றிக் கண்ணோட்டம் பார்த்துவரக் கட்டளை இட்டிருந்தார் தளவாய் கோபாலன். ஆறு நாழிகை கழித்துத் திரும்பி வந்த ரசல்தாருக்கு வாயிலிருந்து பேச்சு எழவில்லை. கூடைக் கருப்புதான் கண்ட கோலங்களை விவரிக்கத் தொடங்கினான்…

“ஆடிச் சலங்கை மின்ன.. அங்கமெல்லாம் சல்லியம்போல்  சுடலைப் புழுதி, தேர் போல ஏறு நெத்தி, அதில் சாமுண்டியாகப் புரளும் சடை, பிங்கலப் புண் பூட்டின கையிரண்டும் கெட்டிப்பனை, காலிரண்டும் கருமருது, மலையெல்லாம் படைதிரண்டு எட்டியெட்டி அடியெடுத்து, எரியும் கொள்ளி கொழுந்தாய் எந்திரிச்சு அலையுது முனி…” என்று கூடைக் கருப்பன் கண்டு வந்த கண்ணோட்டத்தைச் சொல்ல, தளவாயோட சேர்த்து மொத்த கூட்டத்துக்கும் திகிலடித்துப் போனது. ஆனாலும், சூளுரைத்து வந்த வரைக்கும் வழிமடக்கி ஒரு கை மடக்கு மடக்கிப் பார்த்துவிட்டுத்தான் திரும்புவது என்ற முடிவோடு இருந்தார் தளவாய்.

மேய்ச்சங் காட்டு மாடுகளை எல்லாம் கணவாப் பாதைக்குள் பத்தி விட்டு முதலில் வழியைத் துப்புரவு பண்ணிவிட முடிவெடுத்தார். முனிக்குப் பயந்து  ரஸ்தாவிலே வணிகர்கள் விட்டுவிட்டு ஓடிப்போன சக்கடை வண்டிகளின் பைதாக்களை ஒன்னு ஒன்னாகக்  கழற்ற உத்தரவிட்டார். சும்மாடாய்க் கட்டின காடாத்துணியால் அதை அங்குல அங்குலமாய் சுற்றி, எரிகாலி எண்ணையைக் குளுர ஊற்றிவிட்டு, வண்டிப் பைதா மொத்தத்தையும்  திக்குக்கு ஒன்றாக நிறுத்தச் சொன்னார். இன்னொரு பக்கம் உருளியில் புலச்சி உப்பும், கரித்தூளும் தட்டி இடித்து நெருக்கி, வேட்டு வெடிக்கச் சொன்னார்.

வேட்டு வெடிச்சத்தம் கேட்டு மாட்டுக்கூட்டம் மொத்தமும் மிரள ஆரம்பித்தது. சரியாக அந்த நேரத்தில் தடதடவெனத் தப்பைத் தட்டிக் கொண்டே படைகளும் புக, நாலா பக்கமிருந்தும் தீப்பைதாவை கணவாய் நோக்கி உருட்டச் சொன்னார் கோபாலன். வழியெங்கும் புல்லு செத்தைகளை எரித்துக்கொண்டு பைதாக்கள் திரண்டு உருண்டன. வேட்டுச் சத்தத்தில் மிரளச்செய்து, தப்புத் தாளத்தால் அகலத்தைக் குலைத்தும், தீயைக் கண்டு திக்கு முக்காடவும் விட்டதில் திமுதிமுவென்று வேகமெடுத்து, பாறைச் சண்டுமுண்டுகளை எல்லாம் இடித்துத் தள்ளிக்கொண்டு மறித்துக் கிடந்த தடுப்புகளை எல்லாம் உடைத்துத் தள்ளிக்கொண்டு ஒரே போடாக மலையை நொறுக்கிவிடக் கிளம்பியது போல முன்னேறியது மாட்டுக்கூட்டம். ஒன்னு மீது ஒன்னாக ஏறி விழுந்து, பூதங்கள் ஒவ்வொன்னும் மொத்த மொத்தமாகக் குகைகளை விட்டு ஒரே காலத்தில் புறப்பட்டுப் போவது போல,  கரடிக்கூட்டம் மல்லன் சண்டையில் ஒன்றை ஒன்று அடித்து குத்திக்கொண்டு சாவது போல அந்த இடமே அப்படி ஒரு சமர்க்களமாய் மாறியது.

தளவாய் முகத்தில் புன்னகை அரும்பியது. ஏக காலத்தில், வண்டிப்பாதையை அதுநாள் வரை அடைத்துக் கொண்டு உபத்திரவம் பண்ணிக் கொண்டிருந்த முனியை நேரே மோதாமலே சாய்த்து விட்ட தோரணை அவரிடம் அகப்பட்டது. அதேநேரம், கிளம்பின புழுதியிலும் எரிந்த தீயின் வெளிச்சத்திலும் ஆங்காரப்பட்டு மந்தையைக் குலைத்துக் கொண்டு உள்ளே நுழைந்து அடிவாரத்திற்கு இறங்கி வந்து நின்றது முனி.

ஓங்காரமாய் துள்ளிக் குதித்து, முள்ளி, வேல மரங்களை  எல்லாம் வேரோடு பிடுங்கி வீசி, பாறைக் குன்றுகளைப் பொடிப்பொடியாய் போட்டுடைத்து, அப்படியும் ஆத்திரம் அடங்காமல் ஓடிவந்த மாடுகளை எல்லாம் திமிலைப் பிடித்து தூக்கி எறிந்து பந்தாடி… முனி செய்த இந்த அட்டகாசங்களை எல்லாம் கண்ணால் பார்த்த மாத்திரத்தில் தளவாய், “இதுவரை கண்டெடுத்த ஏழு முனி மாதிரியில்ல… ஏழுக்கும் அப்பன் இந்த எட்டாம் முனி. இதை நேரடியில் நின்னு அடிக்கணும். தாய் ரேணுகை நமக்கு பலம் கொடுப்பார்”  என்று மண் நோக்கிக் கும்பிட்டார்.

அந்த நேரத்தில் கூடே இருந்த ஆனையூரானான கூடைக்கருப்பு, நெனைப்பது போல் இல்லை, இது காவலுக்கு மீறி சவுக்கடிபட்ட கழுவனோ, கோட்டைக்குக் கல்லெடுக்க மலை மலையா அலையும் கள்ளனோ அல்ல. இந்த முனி ராசமுனி. அதோட தேட்டம் என்னன்னு தெரியாம அழிக்க நெனைக்கிறது  அதிகிட்டயே நம்ம உசிர அடமானம் வைக்கதுக்குச் சமம். அணைஞ்சு பேசி அது என்ன சாத்து கேக்குதோ அதக் குடுத்துட்டு இங்கயே அடிவாரத்துலே அதைக் குடியமர்த்துவது தான் நாம் காணும் நல்ல வழி” என்று  தன் குறியைச் சொன்னான்.  

குழப்பி அடித்த மனசோடு தளவாய் கோபாலன் அந்தத் திட்டத்துக்குச் சம்மதித்தார். பொதினிக்கும் வருச மலைக்கும் நேர் நடுவே கணவாய்க்கும், அடிவாரத்துக்கும் நட்டநடுவே கிடாரியும், கன்றும், கெடாவும் பலி விட்டு, பொன், பொருள், பூமி என்று கேட்டதெல்லாம் கொடை கொடுத்து, சந்தனப்பொட்டு வைத்து, கடைக்கண் மையிட்டு, கல்கட்டு மோதிரம், கண்டி, சரப்பணி, மோகன மாலைகள், வண்டிக் கடுக்கண் அணிவித்து, இடையில் குறுவாளும், கையிலே வேல்தடியும், குறுக்காய் புஷ்ப மாலை சூட்டி, யானையும், ஒட்டகமும் முன்னால் செல்ல, மேல்முரசும், பேரிகையும், வாங்கும் ஒலிக்க, பன்றிக் குதிரைகளை நாட்டியம் ஆடவிட்டு, பாய்ச்சல் குதிரைகளை வீதியில் ஓடவிட்டு கொண்டாட்டமாய் கொடுக்கப்பட்டது எட்டாம் முனி கேட்ட அத்தனை சாத்தும். எல்லாம் கொடுத்தும் முடித்த பிறகு தளவாயைப் பார்த்து, “கேட்டதெல்லாம் கொடுத்தாய் ஆனாலும் ஒரே ஒரு மனக்குறை” என்று சுண்டி முகம் சுருக்கியது முனி.

“தொலைத்த பொருளை தேடித்தான் இந்த மலைக்கு வந்தேன். வந்துமென்ன என் வேலை ஆன பாடில்லை. எங்கேயோ யாரோ என் பொருளை அபகரித்துக் கொண்டு போய் அடைத்து வைத்திருக்கிறார்கள். அதைத் திரும்பப் பறிக்காமல் எனக்குத் தூக்கமில்லை. நீ கொடுத்த ஊட்டுக்கு உன் பாதையை உனக்குத் திறந்து கொடுத்தேன். அதன் காவலும் ஆகி காத்து நிற்பேன். என் ஒரே ஒரு கோரிக்கை இந்த வழிப்பாதையில் போகும் வண்டி சனமெல்லாம் தான் கொண்டு போகும் பொருள் இன்னது தான் என்று எனக்குத் திறந்து காட்டிவிட்டே நாடு கடந்து போகணும் என்ற ஒரே ஒரு தேட்டம் கொடு எனக்குப் போதும் என்றதும், ‘சொன்னது சொல்லாக அப்படியே ஆகும்’ என்று மனமுவந்து அந்த இடத்திலே எட்டாம் முனிக்குக் கோயில் கட்டிக் கொடுத்துச் சென்றார் தளவாய் கோபாலன்.

5

லைகளும் சருகுகளும் காய்ந்து கிடந்த தடத்தில் மங்கா நடந்து போவதும், ஏனத்தில் சோற்றைப் போட்டுவிட்டுச் சுருளியை உசுப்ப, அது தன் சங்கிலியை அத்துவிடும் வேகத்தில் தட்டைப் பார்த்துப் பாய்வது வரையிலான சங்கதிகளை அந்தக் கும்மிருட்டிலும் அதனதன் ஓசைகளிலிருந்தே சுந்தரன் புரிந்து கொண்டான். கேதுகளின்றி வானத்தில் சந்திரமானம் அசைவின்றி தெளிந்து  நிற்க, இரண்டாவது சிகரட் புகை அவன் கையிலிருந்து துவங்கி மேலெழும்பிக் கொண்டிருந்தது. சருகுகள் இப்போது மங்கா நெருங்கி வரும் ஓசையை அறிவிக்க, “இன்னைக்குள்ள வந்துடுவன்னு நம்பல” என்றான்.

அவன் சீண்டலுக்கு எந்தப் பதிலும் சொல்லாமல் கொட்டாருக்குள் நுழைந்து, ஒரு நீளமில்லாத கோணியை எடுத்துக்கொண்டு திண்ணை அருகே வந்து சுவரோடு சுவராகச் சாய்ந்து வாகாக உட்கார்ந்தாள் மங்கா.

சுந்தரன் அவள் முகம் பார்க்க எதிரே சாய்ந்து உட்கார்ந்து கொண்டு அப்போது கால்மாட்டுக்கு வந்துவிட்ட கரடி விளக்கைக் காலாலே கிட்டத்தில் இழுத்து, அவள் உட்கார்ந்திருக்கும் இடத்தில் வெளிச்சம்படும்படி வைத்துக் கொண்டான்.

“ம்ம் சொல்லு..”

மதகின் வால்வுகளைத் திருகியதும் சீறிப் பாய்ந்து கொண்டு தண்ணீர் வெளியேறுவது போல அவள் ஒரு கதையைச் சொல்லத் துவங்கினாள்.

“ரொம்பக் காலத்துக்கு முன்ன, இந்த மலை அடிவாரத்தில வாழ்ந்த காவல்காரங்கதான் வம்சாவளியா கோட்டை காவலுக்குப் போவாங்களாம்… அப்படி காவல் காக்குற கூட்டத்தோட தலைவருக்கு ஒரு அழகான மக இருந்தாளாம். அவ பேரு பூவாத்தா”

“ம்ம்…”

”அவ ஆளு நடையில அன்னமயில், நிறத்துல கோவப்பழம், கரண்டக்கால் வரைக்கும் கருகருன்னு கூந்தல்.”

டிக்கின்சன் வாசிக்கும் மமதையோடு, “காலு வரைக்குமா..” என்று அவன் அவளைச் சீண்டினான்.

“ஆமா.. அவ்ளோ நீட்டத்துக்கு வச்சிருந்தா. ஒருநா அவ குளத்துக்கு குளிக்கப் போனப்ப ஒரு பெரிய சூறக்காத்து வந்து அவளச் சுத்திடுச்சு..”

எந்தத் தடையீடும் இல்லாமல் இயங்குவது போல, அவன் கேட்டதற்குப் பதில் சொன்ன வேகத்தில் எந்த நிறுத்தமும் இல்லாமல் அதே தொனியில் அவள் தன் கதையைத் தொடர்ந்து கொண்டிருந்தாள். சுந்தரனும் அத்தோடு சேட்டைகளை நிறுத்தியவன் போல அவள் சொல்லின் மிதிகளைப் பற்றி பின் நடப்பவனாக அமைதிப்பட்டான்.

“காத்தடிச்ச வேகத்துக்கு காய வச்சிருந்த அவ தலமுடி வேலிக் கள்ளில போய் மாட்டிடுச்சி. இதை எட்ட இருந்து பார்த்த உன்ன மாதிரி ஒரு ராசா வீட்டுப் புள்ள, கிட்டப் போய் ஒதவப் போனார்.”

“…”

“அப்போ அந்த பூவாத்தா அந்நிய ஆம்பளை என் கூந்தல தொடக் கூடாது.. நீங்க கிட்ட வராதீங்கன்னு தடுத்திட்டா”

“ம்ம்..”

”அவ சொன்னதைக் கேட்டதும் என்னை யாருன்னு உனக்குத் தெரியுமான்னு ராசா மகன் கேட்டான், “உங்க கோட்டையைக் காவல் காக்கும் தலைவன் மகளுக்கு, ராசா மகன் யாரு, களவாணிப் பயல் யாருன்னு கூடவாத் தெரியாமப் போகும். தெரிஞ்சித்தான் சொல்லுதேன் தொடாதீங்கன்னுட்டா..”

“ஓஹ்..”

”நாம இன்னார்னு தெரிஞ்சும் இவ தன்னோட கூந்தலத் தொடக்கூடாது எட்ட நில்லுன்னு சொல்லிட்டாளேன்னு ராசா மகனுக்கு மட்டமான கோவம். ஆத்திரத்துல என்ன செஞ்சாரு தெரியுமா? தாங் கையில இருந்த அரிவாள எடுத்து, அதாலயே கள்ளியில மாட்டியிருந்த பூவாத்தா கூந்தல அப்படியே அறுத்து விட்டுட்டாரு.”

 “சரியாத்தான செஞ்சிருக்கான்!”

மங்கா சுந்தரனைத் திருத்தமாக நேருக்குநேர் ஒரு பார்வை பார்த்துவிட்டுக் கதை சொல்வதைத் தொடர்ந்தாள்..

“நமக்குச் சரியானது எல்லாம் நம்மளைச் சுத்தி இருக்குறவங்களுக்கும் சரின்னு நினைச்சுக்கக் கூடாது… புரியுதா?”

அவன் பேசவில்லை.

கதை சொல்கிறேன் பேர்வழி என்று இவள் தன்னைக் கட்டு மந்திரம் போட்ட நாய்க்குட்டி மாதிரி அல்லவா அடக்கிக் கொண்டிருக்கிறாள் என்ற எண்ணம் சுந்தரத்தின் அடிமனத்தில் தத்துவப் போர் ஒன்று துவங்கியது. கணத்தில் அவள் தன்னை நாய்க்கும் கீழாகத்தான் நடத்துவாள் என்ற எண்ணம் மேலிட்டுவிட மறுவார்த்தை எதுவும் பேசாதவனாக அவன் நனவிலியாகித் தொடர்ந்தான்.

“ஆசையா வளர்த்த கூந்தலை ராசாமகன் வெட்டிட்டாரேன்னு கலங்கிப்போய் தன் வீடு திரும்பினவ “நடந்த கதை’ ஒன்னு விடாமல் அப்படியே தன் ஐயாமார்கள் கிட்டேச் சொன்னா. ”

“அவங்க என்ன பண்ணாங்க?”

”அவங்க என்ன பண்ண முடியும்? ராசா மகன எதிர்க்க முடியுமா? இல்ல வயசுப் பொண்ணோட கூந்தலை இப்படி ஆய்ஞ்சு விட்டீங்களே இது முறையான்னு கேட்கத்தான் முடிஞ்சதா? விசயம் வெளியிலே  தெரியாம உள் மனசுக்குள்ளே(யே) போட்டு  பூட்டி வச்சுட்டாங்க…”

“ம்ம்…”

“இதுக்கிடையில், கோட்டையிலேருந்து ராசாவோட தளபதிகள், கோட்டைக்காவல் தலைவனைக் கூப்பிட்டு அனுப்பி விட்டார். ’இப்படி உங்க வீட்டுப் பொண்ணு ஒன்னை ராசாமகன் ஆசப்படுறாரு. இன்னும் ஒரு வாரத்தில உங்க சம்மதத்தைச் சொல்லி அனுப்புங்க’ன்னு கட்டளை வச்சிட்டாரு”

“…”

“என்னடா இது மகன் நம்ம வீட்டுப் பிள்ளைய அவமானப்படுத்தி அனுப்பினான் அன்னைக்கு. பொறுத்துகிட்டம். இப்ப அவளை பொண்ணு கட்டிக்கொடுன்னு கெடு வைக்கிறாரே ராசான்னு ஒரே கோபமும் கொந்தளிப்புமா இருந்தார் கோட்டைகாவ தலைவர். அவரை விட பூவாத்தாளுக்கு முறைப்பட்ட மாமனுக்கும் அவள் அண்ணன்காரனுக்கும் பலியான கோவம். எல்லாருமா சேர்ந்து அவங்க ரெண்டு பேரையும் அடக்கி வைக்க, மொத்த குடும்பத்துக்கார பெரிய ஆம்பளைகளையும் கூப்பிட்டு அனுப்பினாரு காவல் குடும்பத்து மூப்பரு.”

“…”

“இந்த ராசா குடும்பத்துக்கு நன்றியே இல்லை. நாம தலைமுறை தலைமுறையா உயிரப் பணயம் வைச்சி இந்த ராசாங்கத்த காபந்து பண்ணியிருக்கோம். ஆனா இவங்க நம்ம வீட்டுப் புள்ளய நம்மளயே தூக்கிக் கொடுக்கச் சொல்லுறாங்க. என்னதான் நாட்ட ஆளற ராசான்னாலும்  அவங்க சனமும் சாதியும் வேற; நம்மளோடது வேற. இன்னைக்கு மழவராயர் வீட்டுப் பொண்ணைக் கேட்பாரு. நாளைக்கு வதும்பார் வீட்டுப் பொண்ணக் கேட்பாரு. குடுத்துட்டேவா இருக்க முடியும். அதனால நாம இந்த விசயத்துல ராசா சொல்படி நடக்கக் கூடாது. அதேநேரம், ஆத்தரத்துல அறிவ விலக்கவும் கூடாது. நா ஒரு முடிவு கட்டிருக்கேன். நீங்க எல்லாரும் கட்டுப்படுறீங்கன்னா அது என்னன்னு சொல்றேன் என்று எல்லாரையும் பார்த்துக் கேட்டாரு மூப்பன்.”

“அவங்கல்லாம் என்ன சொன்னாங்க..?”

“என்ன சொல்வாங்க பெரிய ஆம்பளைங்க எல்லோருமா கலந்து பேசி, “நமக்கு நம்மச் சாதியோட கௌரவம்தான் முக்கியம். ராசா மகனுக்கு நம்ம பொண்ண கட்டி கொடுக்கக் கூடாது. அதே சமயம் அவரப் பகைச்சிட்டு வாழவும் முடியாது. அதுபடிக்கு நாள மறுநாள் வார வெள்ளிக்கிழமை ராத்திரியில எங்கள் வீட்டு பொண்ண வில்வண்டில  வச்சி அனுப்புறோம். அவளுக்குச் சீரா ஆடு, கோழி, அரிசிப் பெட்டி, வெல்லம், வாழைப்பழம், வெற்றிலையோட மஞ்சளும் முக்கோணப் பதக்கம் வச்சத் தாலியும் கொடுத்தனுப்பவம். ஆனா, கூட நாங்க யாரும் வரமாட்டோம். வண்டிக்காரன் மட்டும்தான் வருவான்னு சொல்லி அனுப்புவோம்னாங்க.”

“கட்டிக் குடுக்க மாட்டோம்னு தானே மொதல்ல பேசினாங்க!”

“ஆமா, ஆனா அவங்க போட்ட திட்டம் தான் இது!”

“என்ன திட்டம்…”

“வெள்ளிக்கிழமை அன்னக்கி காலையில, பூவாத்தாளை குளிப்பாட்டி, புதுச்சேலை உடுத்தச் சொல்லி, அழகா சோடிச்சு, சாமி கும்புடச் சொன்னாங்க. ஆனா, பூவாத்தாளுக்கு நம்மளை தன் ஐயாவும் அண்ணமாரும் என்ன செய்யப் போறாங்கன்னே ஒண்ணும் புரியலே.”

“ம்ம்ம்..”

“காவக்காரங்களோட மூப்பன் வீட்டுல ஒரு பெரிய மரிசல் இருக்குமாம்.”

“மரிசல்னா?”

“மரிசல்னா, தானியம்லாம் போட்டு சேர்த்து வைக்கிற பெரிய கூடம். மூப்பன் வீட்டுல இருந்த மரிசல், ரொம்ப பெரிசு. அதுல நூறு இருநூறு கோட்டைத் தானியம் வீசலாம். மகாராசாவுக்கு வரிக்குப் பதிலா அளந்து வாங்குற தானியத்தையெல்லாம் அதுலதான் போட்டு வைப்பாங்க. அந்த வருசம் வரி பிரிச்ச காடக்கண்ணியை மரிசல் முழுக்க நெரப்பி வச்சிருந்தாங்க. காடக்கண்ணியோட தொலி வழுவழுன்னு பட்டுமாதிரி உருட்டையா இருக்குமா! அது குமிஞ்சி கிடக்கிற இடத்துல காலையே வைக்க முடியாது. ஒரு சாக்கு நிறைய காடக் கண்ணிக்குள்ள ஒரு பனங்காயைத் தூக்கிப் போட்டா, அது வழுவி வழுவி சாக்குக்கு அடிலே போயிரும். அப்படி வழுக்கும். பூவாத்தாளை கூட்டிட்டுப் போன மூப்பன் அவரு வீட்டுல இருந்த காடக்கண்ணி மருசல்மேல அவள ஏறி நிக்கச் சொன்னாரு. நின்னவள வானத்தப் பார்த்து கும்புடுன்னு சொல்லிட்டு அவ காலடில இருந்த பலகையை ஓங்கி ஒரு தட்டு தட்டினாரு மூப்பன். அவ்ளவுதான் பலகை தாந்து விழவும் பூவாத்தா மரிசல் உள்ள விழுந்துட்டா.”

“த்சோ…”

“உள்ள முங்கி முங்கி மரிசலுக்குக் கீழே அடியாழத்துக்குப் போனவ, தன்னைக் கொல்லத்தான் இத்தனை வேலையும் பார்த்தாங்களா தன்னோட அப்பனும் அண்ணன்மாரும். அட சண்டாளப் பாவிங்களா.. இதுக்கு என் தலமுடிய வெட்டினாலும் என்னையே கட்டிக்கிறேன்னு சொன்ன அந்த ராசா எவ்வளவோ மேலயேடான்னு கத்திக்கிட்டே மூச்சுத் திணறி செத்துப்போனா!”

“செத்தே போய்ட்டாளா!”

“ஆமா…”

“…..”

“பூவாத்தாளை கொன்னுட்டு, அன்னக்கி ராத்திரி மூப்பன் வீட்டு வில் வண்டியில ஒரு பெரிய பெட்டிய ஏத்தி, அதுக்குள்ள ஒரு பொட்டைக் கழுதையை வச்சு பூட்டி அரண்மனைக்கு அனுப்பி விட்டுட்டாரு.”

“கழுதையவா!”

“ஆமா, ராசா மகனுக்குப் பொண்ணா, வண்ணான் கழுதையப் புடிச்சு கட்டி அனுப்பி வச்சாங்க. அதோட காவக்காரங்க குடும்பம் எல்லாம் ராவோடு ராவா, ஊரையே காலி பண்ணிட்டு போய்ட்டாங்க. அப்படிப் போனவங்க எல்லாரும் அவங்க போன ஒவ்வொரு எடங்கள்ளயும் பூவாத்தாள வேற வேற பேர்ல சாமியாக்கி, படையல் வச்சி, காடக்கண்ணிய இடிச்சி மாவிளக்குப் போட்டும் கும்புட ஆரம்பிச்சாங்க..”

“அவங்க போய்ட்டாங்க சரி, அந்த ராஜா மகனுக்கு பூவாத்தா என்ன ஆனான்னு கண்டுபிடிக்கத் தோணலயா?”

“தோணாமலா… கழுதையப் பார்த்து பொல்லாத கோவம் வந்து, அத்தன பேரையும் கொல்லணும்னு கிளம்பினாரு. ஆனா, மொத்த ஊரும் காலியா கிடந்த சேதி அவர இன்னும் கோவப்படுத்துச்சி. மொத்த கோபமும் ஒன்னா சேர்ந்தாலும் அவர் அடிமனசுக்குள்ள பூவாத்தா எங்க எங்கன்ற கேள்விதான் அரிச்சுக்கிட்டே இருந்துச்சு.. அவள எப்படியும் கண்டுபிடிச்சே ஆகணும்னு ஊரைவிட்டுப் ஓடிப்போன ஒவ்வொருத்தரோட காலடியையும் பின்னால் விட்டு ஆளனுப்பி தானும் கிளம்பிப் போனாரு. போனது மட்டுமா போன இடங்கள்ல அவர் செஞ்ச தும்பமும் கொடுமயும் ஒண்ணா ரண்டா?”

“என்ன பண்ணாரு ராசா.. சொல்லு…”

“அத இன்னொரு நாளைக்கு சொல்லுறேன் இப்ப நீங்க தூங்குங்க.. பனி முட்டிகிட்டு வருது. காலயில வண்டிகட்டிக் கிளம்பணும்ல..” என்றபடி எழுந்து தன் கொட்டாரை நோக்கி நடக்கத் துவங்கினாள் மங்கா.

“ஏ.. சொல்லிட்டுப் போ.. எனக்கு இன்னைக்கு தூக்கமே வராது… இப்படிப் பாதில விடாத..” என்று மங்காவை ஏசத் துவங்கினான். அவள் சுந்தரனை ஒரு எறும்பாகக்கூட மதியாதவளாக விசிரென்று இருளில் மறைந்து காணாமல் போனாள்.

6

லையின் தென்திசையில் கல்லாற்றின் ஒரு புடையுள் ஆள் நுழைய அஞ்சும் நாகங்கள் வாழும் தாழம் புதர்களுக்கு மத்தியில், மஞ்சளும் செஞ்சாந்தும் பூசி, குமித்து வைத்திருக்கும் பூக்குவியல்களுக்கு நடுவே அலங்காரப் பொலிவாய் முகம் பூத்திருந்தாள் பூவாத்தாள்.

நாலாம் மனிதர்கள் எட்டிப் பார்த்திராத அந்த ஈற்றுப்புரை முற்றத்தில் பொட்டு வைத்து, பூ முடிந்து, பட்டு உடுத்திக்கொண்டு புகைக்கு மத்தியில் பொங்கல் விட்டுக் கொண்டிருந்த மங்காவை அதற்குமுன் அப்படியொரு தோரணையில் யாரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை.

தூங்கி எழுந்திரிந்து, தன் காலடியில் ஏழெட்டு குஞ்சுகளைச் சேர்த்துக் கொண்டு மேயும் தாய்க்கோழியையே பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தான் சுந்தரன்.

“பல் தேய்க்க வேப்பங்குச்சி கொண்டாரவா..”

புடணிக்குப் பின்னாலிருந்து சாமிச்சேர்வையின் வெங்கலக் குரல் வந்து விழுந்தது. நேர்கொண்டு அவரைப் பார்க்காமலே, ‘இல்ல, நானே வரேன்’ என்று எழுந்து நடந்து போனான் சுந்தரன்.

மங்கா எப்படியும் தனக்கு முன்பாக எழுந்திருப்பாள். இங்கேதான் எங்கேயாவது நின்றுகொண்டு தன்னைக் கவனித்துக் கொண்டிருப்பாள் என்ற  யோசனையோடு கிணற்றடியில் முகங்கழுவி, வாய்க் கொப்பளித்துக் கொண்டே கொட்டாரின் வாசலை கண்களால் ஒரு அலசு அலசினான்.

”இந்தாங்க வெறும் வவுத்தோட இதை ஒரு நாலு மடக்கு குடிங்க.. ”

சேர்வை தட்டில் வைத்துக் கொண்டுவந்து கொடுத்த நீத்துபாகத்தையும் கருப்பட்டியையும் மறுக்காமல் வாங்கிக்கொண்டு திர்ணையில் போய்ச் உட்கார்ந்தான்.

“ராவுல ஒறக்கம் நல்லமாரியா வந்துதா”

“ம் வந்துது”

“எங்கன ஒரே வம்பா அளந்துட்டு இருந்தாளா ஒறங்க வுடாம…”

“அதல்லாமில்ல.. கததான் சொன்னது”

“அந்தக் கூறுகட்டதுக்கு என்ன தெரியும்னு அவ வந்து உங்களுக்குக் கத சொன்னாளாம்.”

“உங்க சாமிக் கததான்.”

“எங்க சாமிக்கதயா.. அந்தச் சிறுக்கிக்கு அதெல்லாமெங்க தெரியும். என்னமாது ஔறிருப்பா” என்றபடி தன் தலையைச் சுற்றின வேட்டவாளியைத் துண்டை உதறித் துரத்தினபடி கிணற்றடியை நோக்கி நடந்து போனார் சேர்வை. அந்த நேரத்தில் மாஞ்சோலைக்குத் தென்புறத்திலிருந்து கணகணவென வெங்கல மணிச்சந்தம் ஒலிக்க மங்கா இருக்கும் இடத்தை சுந்தரனுக்குப் பிடிபட்டது.  இந்த விடிவெளிச்சத்தில் புதர்மண்டின காட்டுக்குள் தனியே போய் என்ன செய்து கொண்டிருப்பாள், நேரில்போய் பார்க்கலாமா வேண்டாமா என்ற யோசனையோடே தன்போக்கில் பூவாத்தாளை நோக்கி நடக்கத் துவங்கினான் சுந்தரன்.

சித்திரையில் மலர்ந்து குவிந்த வேப்பம்பூக்கள் பாதையெங்கும் சிதறிக் கிடந்தன. அதன் நறுமணம் காட்டுயிர்களுக்குக் காமவேட்கையும் களிப்பையும் எழுப்பும் என்று எங்கோ வாசித்தது அவன் நினைவுக்கு வந்தது. இடதுபக்கக் கல்கட்டில் அரச மரமும் வேம்பும் ஒன்றை ஒன்று பின்னிக்கொண்டு நின்றன. வட இந்தியர்கள் அரச மரத்தை விருகடிராஜா என்று அழைப்பது அவனுக்கு நினைவுக்கு வந்தது. ராஜாவுக்குப் பெண்ணை மணம் முடித்துக் கொடுப்பது போல வேம்புக்கும் அரசமரத்துக்கும் தாலி கட்டும் சடங்குகள் மலைக் கிராமங்களில் நிலவுவது பற்றி அவன் அறிந்திருந்தான். இரண்டு மரங்களும் தழுவிக்கொள்ளும் காலத்தில் பெண்கள் கருவுறுவதும், அதை அறிவிக்கும் விதமாக வேட்டாளிக் குளவி அம்மரங்களில் கூடு கட்டுவதையும் நாட்டுப்புற பாடலான தோட்டுக்காரி கதையில் கோனாண்டி ராசன் மனைவி கனவில் காண்பதையும் கூட நினைத்துக் கொண்டான். தனக்கு எங்கிருந்து இந்த எண்ணங்களெல்லாம் வரிசைக் கிரமமாகக் கிளர்ந்து எழுகிறது என்று அவனுக்கே புரிபடவில்லை. நித்தியமில்லாத மனோநிலைக்குள் சஞ்சரிப்பது போல அந்தச் சூழல் அவனை விழுங்கடித்தது.

தாழம்பூக்களின் வாடை நாசியில் சுர்ரென்று ஏறியபோது, இலுப்பை மரக்கட்டையில் மஞ்சணை தேய்த்துக் கொண்டிருந்த மங்காவை அவன் கண்டிருந்தான். வாதைகளும் இயக்கிகளும் சண்டைக் கோலம் பூண்டு அசுரர் முன்னால் நிற்பது போலே எந்நேரமும் அவனைக் கர்வத்தால் கலைத்து விளையாடுகிறவள் அப்போது மெல்லியப் பூஞ்சிரிப்போடு அவனை எதிர் கொண்டாள். அவளுக்கு எதிர்த்திசையில் நாகமணி சிலம்பணிந்து நல்ல முகம் காட்டியபடி இருந்த பூவாத்தாளையும் சுந்தரன் கவனித்தான். இரண்டு பேரின் சிரிப்பும் அச்சில் வார்த்தது போல் ஜொலிஜொலித்தது.

விக்கித்துப் போன தொண்டையை எச்சிலை விழுங்கிக் கொண்டே ஆற்றுப்படுத்திக் கொண்டே கேட்டான், “அந்த ராஜாவோட மகனைப் பத்தி பாதி சொல்லிட்டு நிறுத்திட்ட ஏன்?” என்றான்…

“இன்னுமா உனக்கு அந்த ராசா மகன் யாருன்னு தெரியல..” என்று அமைதியான குரலில் கேட்டுவிட்டு பூவாத்தாள் சத்தம் போட்டுச் சிரிக்க ஆரம்பித்தாள்.

7

ரு அறுபது அறுபத்தஞ்சு ஏக்கருக்கு மேல வரும்ங்க. சுத்தியும் காடுதான். நெல்லிக்கா, மாங்கா, எலுமிச்சாங்கான்னு மனம்போக்குல விளையுது. ஆனா லேசுல அள்ளி முடிஞ்சிற முடியாத மாதிரி வெளைச்சல். மலைமேல கேட்டீங்களா. பழைய கட்டடம் ஒன்னும் காவக்காரனும் மாத்திரந்தான் கிடக்காங்க.  இன்னாரு பேருலதான்னு இல்ல. பூர்வீகமா அனுபவச்சிட்டு வர்ற குடும்பந்தான் விலை பேசிகிட்டு இருக்காங்க. அதுக்கும் குடும்பத்துக்குள்ளே மூத்தவடியா இளையவடியா பிள்ளைங்கன்னு போட்டி இருக்கு. வாங்கிப் போட்றத பத்தி பிரச்சனை இல்ல. தெக்கம் பக்கத்துல அந்தவூட்டு பையனொருத்தன் செத்துப் போய்ட்டானுங்களாமா. பேப்பருலல்லாம் வந்திருக்கு. அதுல இருந்துதான் வித்துப் போடணும்னு துடிக்காங்க. மேப்படி வெபரம் எல்லாம் வி.ஏ.ஓ ஆபீஸ்ல இருந்து எடுத்தாச்சு. அண்ணாச்சி ஒரு எட்டு வந்து பாத்துட்டாங்கன்னா பவர் வாங்கி போட்டு வச்சிக்கிரலாம்ங்க…. ஹலோ.. ஹலோ லைன்ல இருக்கீங்களா.. ”  

“ம்ம் இருக்கேன்”

***

கார்த்திக் புகழேந்தி – பூர்வீகம் நெல்லை. தற்பொழுது காஞ்சிபுரம் மாவட்டத்தில் வசித்து வருகிறார். மூன்று சிறுகதைத் தொகுதிகள், இரண்டு கட்டுரைத் தொகுப்புகள் இதுவரை வெளிவந்துள்ளன. தொடர்புக்கு [email protected]

RELATED ARTICLES

5 COMMENTS

  1. மண்வாசனை வீசும் அருமையான கருக்கொண்ட கிராமத்துக் கதை.கதை படிக கப் படிக்க அந்தக்கதா பாத்திரங்களை அப்படியே பக்கத்தில் இருந்து வேடிக்கை பார்த்த உணர்வு தென்பட்டது. மங்காவின் குலதெய்வமான பூவாத்தா கதை பிரமாதம் . சமீனதார் ஒழிப்பு, நில உரிமை பறிப்பு, பினாமி பெயரில் விசுவாசிகளின் பெயரில் சொத்து மாற்றம் , கனகு பிள்ளையின் அந்தரங்க வாழ்க்கை, மக வயதில் மங்கா சாமிசேர்வையின் இளயவடியாள், தளவாய் க்களின் முனிவிரட்டு , பின் பணிந்து சாத்துமுறை செய்து சாந்தப்படுத்துதல், மகராசா மகனே ஆனாலும் தன் மகளை பெண் கொடுக்க மறுத்து, வரியாக வசூலித்து பாதுகாத்து வந்த காடக்கண்ணி குலுக்கைக்குள் தள்ளிவிட்டு கொன்ற
    சம்பவம் ராசாவே எதிர்க்க முடியாமல் பெற்ற மகளையே கௌரவ கொலை செய்து ஊரை காலி செய்து போன காவல் பரம்பரையரின் இனமான உணர்வு, வெளிநாட்டு படிப்பு முடிந்த கனகுப்பிள்ளையின் பேரன் சுந்தரம் அடக்கவொடுக்கமாக மங்காவிடம் கதை கேட்ட விதம், இளையவடியா மூத்தவடியா பிள்ளைகள் பற்றிய விசாரிப்புகள், வில்லங்கமில்லாமல் கனகுபிள்ளை சொத்துக்களை விலை பேச எடுக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களின் உத்திகள் என இக்கதையின் ஆழம் தோண்ட தோண்ட சென்று கொண்டே போகிறது. கற்பனை கதை என்றாலும் அக்கால வழக்கு சொற்களை இவ்வளவு நேர்த்தியாக கையாளும் ஆற்றல் உங்களுக்கே உரிய கலை. நல்ல கதையை படித்து முடிக்க உதவிய கொரானாவிற்கு கோடான கோடி நன்றிகள் தங்களுக்கு சேர்த்துத் தான்.
    என்றும் அன்புடன்
    உங்கள் நண்பன்
    இராமர், நிலை.2.

  2. அற்புதமான ஓட்டம்…

    சுத்தரத்துக்கு கதை சொன்னது மங்கா வா ?இல்ல பூவாத்தா வே வந்தாலா??

    இடையில் வரும் முனிக்கதை பிரமாதம்…

    வாழ்த்துகள் சகோ…

  3. சிறப்பான கதை வாழ்த்துகள் அண்ணா

  4. நல்ல கதையோட்டம்.இயல்பாக வாசிப்பிற்குள் இழுத்துச் செல்கிறது.வாழ்த்துகள் கார்த்திக்புகழேந்தி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular