Thursday, March 28, 2024
Homesliderயாளியின் சுவிஷேச நேரம் (Season - 2) // டல்கோனா காஃபியும் அமைதியின் வடிவமும்

யாளியின் சுவிஷேச நேரம் (Season – 2) // டல்கோனா காஃபியும் அமைதியின் வடிவமும்

!@#$!%!@%^%#&%^#*# !@#$!%!@%^%#&%^#*# !@#$!%!@%^%#&%^#*#

மன்னிக்கணும் யாளி.. நான் உன்னை ம்யூட்ல போட்ருந்தேன். நீ சொன்னது எதுவுமே எனக்குக் கேட்கவில்லை. கொஞ்சம் தனித்து இருக்கிறேன் அல்லவா அதான். எல்லாவற்றையும் இப்படி செட்டிங்ஸில் மாற்றிவிட்டேன். சரி நாம் தொடரை ஆரம்பிக்கலாம். படிக்கட்டுகளில் இருந்து கீழிறங்கினேன்.

என்ன துதியை ஆரம்பிக்கட்டுமா?

தலையை அசைத்து ஆமோதித்தது.

ம்ஹ்க்க்க்ஹ்ஹ்ம் தொண்டையை இருமிக்கொண்டேன்

வசந்த மண்டபத்தின் தூணிலிருந்து யாளி பேசுகிறது..

ம்ஹூம்

வேணாமா? சரி மாத்திப் பாடுறேன்

வார்னீஷ் பூசப்பட்ட தூணிலிருந்து… இல்ல்லை இல்லை… ஸேண்ட் ப்ளாஸ்ட் செய்து வார்னிஷ் பூசப்பட்டிருந்த வசந்த மண்டபத்தின் தூணிலிருந்து… என்ன இது ஓகேயா? இல்லை ஸ்பான்ஸர் செய்த ஆளையும் உபயகுஸலோபர்னு சொல்லணுமா.?

பலமாகப் பக்கவாட்டில் தலை அசைத்தது… ஓ உனக்கு தற்கால த்வனி வேணும் அதானே. அதன் பதிலுக்கு காத்திராமல் புரிந்து கொண்டவனாக..

பல நூறு ஆண்டுகளாய் ஸோஸியல் டிஸ்டன்ஸில் இருக்கின்ற புராதனமிக்க ஸேண்ட் ப்ளாஸ்ட் செய்து வார்னீஷ் பூசப்பட்டிருந்த வசந்த மண்டபத்தின் தூணிலிருந்து யாளி பேசுகிறது…. இப்ப ஓகேயா?

ஃபலூடாவைப் பார்க்கும் குழந்தை போல் மேலிருந்து கீழாக தலையசைத்தது.

**

அதான் சொல்லிட்டனே, விசயத்துக்குப் போவோமா. ரொம்ப நாள் கழிச்சுப் பேசறோம் இல்லையா?

திருத்தம் :  ரொம்ப நாள் கழித்து என்னிடம் பேச வந்துருக்க

சரிப்பா ரொம்ப கோச்சுக்காத, தொழில் கஷ்டம் இடையில கல்யாணம் வேற பண்ணிக்கிட்டேன்.

கஷ்டம்னு சொன்ன அப்றம் கல்யாணம் கட்டிக்கினேன்ற, சரி அதான் கட்டினுருக்கன்னு வச்சுப்போம். விஷயத்துக்கு வா. உன் சோஷியல் டிஸ்டன்சிங் எப்படி இருக்கு.

உங்க காலத்து நிலைமை போல ஆகிவிடும் போல, இந்த அரசியல் சூழ்ச்சி மிக்க இந்த வாழ்த்தை உலகம் முழுதும் இருக்கும் மானிடக் குழுக்களை பல்வேறு விதங்களில் பிரித்து, தனிமைப்படுத்தி, கீழிறக்கி, பாகுபாடுகளை உண்டாக்கி அநீதியான ஒரு அளவுகோலைத் தந்துவிடும் என்கிற அச்சமிருக்கிறது.

சரி கரோனா வருவதற்கு முன் நீ எந்த அளவில் இந்த தனிமைப்படுத்துதலுக்கு எதிராக இருந்தாய் என்றுசொல்லு, மனதளவில் இருந்த/இருக்கின்ற விலக்கங்களைக்கூட கணக்கிலெடுத்துக் கொள்.. ..  என்ன பதில் சஞ்சலப்படுத்துகிறதா.? இந்த accountability,எப்போதும் மனிதர்கள் மட்டும் தான் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படணுமா. அப்படிப்பார்த்தா கூட அழிப்பு, இழப்பு என்று இரண்டு பட்டியல் போடணுமே அது உங்ககிட்ட இருக்கா?

என்ன யாளி!! இப்படிப் பேசுற? இதைப் பேசும் நேரம் இதுதானா? ஆயிரமாயிரம் பேர் உணவில்லாம சாகுறாங்களே அந்த எண்ணிக்கை தானே இப்ப பிரதானமா பேசப்பட வேண்டிய கேள்வி?

நிச்சயமா மறுப்பேதுமில்லை, மனிதர்கள் தங்களைத் தாங்களே கேட்டுக்கொள்ள வேண்டிய பகுதி. உணவில்லாமல் சாகும் ஒரு உயிர்கூட வைரஸின் கணக்கில் வைக்கப்படாது. தவிர பாதிக்கின்ற மற்ற எல்லா உயிர்களுக்கும் கூட மனிதர்கள் தான் பொறுப்பு. உண்மையில் பசியால், சுரண்டலால், நோய்மையால் கொல்லப்படும் மனிதர்களைத் தவிர்த்து, சூழல், யதார்த்தம் போன்ற பல விசயங்கள் மாறியிருக்கிறது. அதில் இருக்கின்ற நல்ல விசயங்களைக் கூட மனிதனின் கணக்கில் வைக்க முடியாது.

அதெப்படி மக்களுக்கு இருக்கின்ற ஒழுங்கு தானே இந்த மாற்றங்களையெல்லாம் விவாதிக்கக் கூட காரணமானது.

 மெய் அது இல்லை, மக்களுக்கு இருக்கின்ற அச்சம், மக்களுக்கு இருக்கின்ற உயிர் பிழைத்தல் என்கிற அடிப்படை எண்ணம். சர்வைவலுக்கானப் போராட்டம் தான் அறம், புத்தாண்டு, தலைப்புச் செய்தி, மாஸ்க்குகள் – மருந்துகள் பற்றாக்குறை இத்யாதிகள். இதில் மருத்துவர்களிடமே தீண்டாமை செய்யும் அற்ப மானிடர்களும் அடக்கம்.

 என்னாச்சு திடீர்னு இப்படி, ரொம்ப ப்ளண்ட்டா நேரடி அரசியல் பேசுற. நீ கலைக்கான ஆளா? அறிவியலுக்கான ஆளா?

இழுத்து மூச்சுவிட்டபடி அடுத்த தலைப்பிற்குத் தயாரானது. மெதுவாக நடந்து சென்று கோயிலின் அர்த்த மண்டபத்தில் உள்ள தூண்களை ஒவ்வொன்றாகத் தடவிப் பார்த்துக் கொண்டிருந்தது.

***

நீ அமைதிய உணர்றியா?

ஆமா போக்குவரத்து இல்லை, நானும் பயணிக்கலை, சப்தமிட்டு சிரிக்கவோ, அதிகாரம் பண்ணவோ கூட மனுஷங்க இல்லை, தொழிற்சாலை இல்லை, எந்த அவசரமும் இல்லை. அதைத்தானே நீ கேக்குற?

நீ சொல்றது எதெல்லாம் இல்லைன்னு. நான் கேட்கிறது இருக்கா… அமைதி இருக்கிறதா?

இதெல்லாம் இல்லைன்னாலே அமைதி தான, நீ தான சொல்லிருக்க இருளை அகற்ற ஒளி போதும். அகற்றுவது என்பது ஒன்றில்லை என்று.

சப்தமிட்டே சிரித்தது. கொஞ்சம் எக்காளத் தொனியுடன்

இப்பவும் அதே தான கேட்கிறேன். உண்மைக்கே இல்லாமல் போன இரைச்சல்கள் மட்டுமா உனக்கு.. நல்லா யோசிச்சு  பதில் சொல்

ம்ம்ம்.. அதுக்கு மேல என்ன யோசிக்க. .. ஆனா சப்தங்கள் குறைந்திருப்பது உண்மைதான?

யாளி என்னை ஏதும் மறுத்துப் பேசவில்லை.

ஆனா உண்மையில் அது அமைதியா? நான் உண்டாக்கும் சிறு ஒலியே என் அமைதியைக் கெடுக்க போதுமானதாக இருக்கிறதே. உண்மையில் நீ எதனைச் சொல்கிறாய். என்னை விட்டு வெளிய வந்து பார்க்கணுமா அல்லது எனக்குள்ள இருந்தே பார்க்கணுமா?

சபாஷ்!! இப்பதான் நீ சரியா பயணப்படுற. ரெண்டு உபாயமும் இருக்கு. எப்படி தரிசிக்கப் போற உன் அமைதிய

உன் கேள்வியின் சலனத்தோடு உள்ளே புகுந்தாலே,

நம்பிக்கை அற்றவனாய் பயணிக்கிறேன். எல்லா சப்தங்களும் இருக்கு – கர்ஃப்யூக்கு முன்னாடி கடைசியா சாப்பிட்ட டால் ஃப்ரை இருந்த பீங்கான் சப்தத்திலிருந்து, ம்ம்ய்ஈ என்று என்னை கதவைத் திறந்துவிடச் சொல்லும் பூனையின் சப்தம், நான் பூட்டிவைத்துவிட்ட என் காதலின் சங்கிலி உருட்டல், அம்மா செய்கின்ற அடைதோசை முறுகும் சப்தம், அநிருத்தின் அடித்தொண்டைப் பிளிறல் சப்தம், ”ஜேக்.கே” என்று தரையில் கொட்டிய காபியின் கறைக்கான மீனாட்சியின் அதிகாரச் சப்தம், தவறியும் செய்யக்கூடாத பாவங்களைத் தூண்டும் என் முட்டாள்தனமான கோபங்களின் குரலொலி, பாகுபாடுகளுடைய செக்யூலரிஸ கோஷங்களும், அடிப்படைவாத வெற்றிக்களிப்புகளும், கைதட்டல்களும், ஹமாரா தேஷ்மே என்று அடியோடு நம்பிக்கையைக் குலைக்கின்ற நாசகார சப்தங்களும் என எதுவுமே என்னை விட்டு அகலவில்லையே, யாளி.

வெளி வந்தால் மட்டுமென்ன, பசியை பல்வித உயிர்களும் உணர்த்த ஆரம்பித்துவிட்ட சப்தம் கேட்க ஆரம்பிக்கின்ற போதே  எதிர்காலம் கொண்டிருக்கின்ற சப்தங்களாக : மிக அருகில் வந்துவிட்ட, எழப்போகின்ற வன்முறைகள், அடக்குமுறைகள், புரட்சிகளின் முழக்கங்களும், முனகல்களும், இன்னும் பெயிண்ட்டடிக்கப்படாத மருத்துவமனை கட்டில்கள் சப்தம், தேய்ந்து தேய்ந்து ஓய்ந்து போன கிரடிட் கார்ட் சப்தம், வேலை செய்யாத ஏ.டி.எம் சப்தம், குப்பை ஒரு பெரிய கிடங்கில் லாரியில் வந்து கொட்டப்படும் சப்தம், அது குப்பைக்கு பதிலாக…. என கேட்க ஆரம்பிக்கிறதே

இல்லை ..

எனக்குள் அமைதியில்லை . ஒரு கேள்வியால் துளைத்தெடுக்க முடிகின்ற ஓட்டை வழி என் நம்பிக்கைகளும் அவநம்பிக்கைகளும் காவேரியில் கலக்கும் சாயமாக வந்துக் கொண்டிருக்கிறது. உண்மையில் இவை முன்பிருந்தே கசிந்து கொண்டுதான் இருந்தது. நீயிட்ட துளையினால் இப்போது அதிக சலனத்தோடு வெளியேறுகிறது. இது என் தற்காலிக அமைதியைக்கூட அழித்து விட்டது.

உனக்கு இரண்டு உபாயங்கள் இருக்கின்றன

அவை என்னென்ன?

ஒன்று அந்தத் துளையை அடைத்துவிடு, தேக்கி வைத்துவிட்டாலும் தளும்பாது, முழுவதுமாக வெளியேற்றினாலும் தளும்பாது. நீ எதைத் தேர்ந்தெடுப்பாய்?

தேர்வு செய்வதன் குழப்பத்தை விட, தண்டனை அல்லது விளைவுகளின் வலி சிறிது தானோ.

தத்துவம் ஒரு பெருநோய்

நீயுமே அப்படியான ஒரு வெளிப்பாடு தான்.

சிரித்தது.

நீயென்ன ஷின்ஷானா. அமைதி, அமைதியோ அமைதி என்று கிண்டலடிக்கிறாய்.

என்றுமே கிடைக்காத ஒன்று என்பதை நீங்கள் எள்ளல் தானே செய்வீர்கள்

அமைதியா கடவுளா

இரண்டும் தான். மத நிறுவனங்களை உருவாக்கி அடித்துக் கொள்வதும், கொல்வதும். ஷின் செய்யும் கிண்டல் தானே

சிரித்தது.

ரொம்ப இம்சிக்காதே. சரி நான் என்ன தான் செய்யட்டும்.

நீ யார்?  நான் யார்? எனச் சொல்லு கேட்கிறேன்

சொல்லி முடித்தேன்.

 மொத்தம் இரண்டு பேர் என்று சொல்கிறாய். அப்படியென்றல் இந்த பூமி முழுக்க ஒவ்வொன்றையும் பாகுபாடு இல்லாமல் தனித்தனியாய் கேட்டுப்பார் இல்லை அனைவரையும் ஒன்றாகச் சேர்த்துக் கேட்டுப்பார். அமைதி இருக்கிறதா இல்லையா என

 நான் ஒருவன் எப்படி எல்லா ஜீவராசிகளையும், தத்துவங்களையும், நதிகளையும், மலைகளையும், மரங்களையும் கேட்க முடியும். நான் வேண்டுமானால் மனிதனின் பிரதிநிதியாக மட்டுமே பதில் சொல்லலாம்.

அது உன் தேர்வு. ஆனால் இந்த தேர்வில்  ஏதோ ஒன்றில் தான்  உன் அமைதி தெரிய வரும்

என்ன சொல்ற நீ…  அப்போ.. .. .. ?

ஆமா.. அதேதான். உன்னால் அமைதிய தரிசிக்க முடியுதா..

இல்…… ஆனா…. ஆமா.

என்னாலும் தரிசிக்க முடியும் போலயே. நீ சொல்றது உண்மை தான். ஜஸ்ட் என்னை இடம் தான் மாற்றினேன்.

 கண்மூடிப் பார்க்கலானேன்.

என்ன அது

ஆம் அது புதிதாய் தொடங்கி இருக்கின்ற ஒன்று. அது அதுவாகவே இருக்க ஆரம்பித்துவிட்டது. அது அமைதியும் ஆகின்றது. அமைதியை உணர்கிறேன் யாளி. இது அற்புதம்!!

கண் திறந்து பார்க்கையில் யட்சி இருக்கின்ற தூணிற்கு தாவிக்கொண்ட யாளி, மேலிருந்து கீழே பார்த்தபடி சிலையாகவே சமைந்தது.

***

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular