Thursday, March 28, 2024
Homesliderயாரோ தொலைத்த இசைத்தட்டு

யாரோ தொலைத்த இசைத்தட்டு

தமயந்தி

ப்படியொரு அதிகாலைல போலீஸ் வீட்டுக்கு வரும்னு அப்பா எதிர்ப்பார்க்கல. ஏட்டைப் பாத்து “என்ன என்ன”னு பதறிக் கேட்டாரு. வாசல்ல தினத்தந்தி படிச்சிட்டு இருந்தாரு. ஏட்டு  சித்தப்பா பேரு சொல்லி “சார் இருக்காரா”னு கேட்டாரு. அவர் ரொம்ப சவாதானமா இருந்ததுல வேற அப்பாவோட பதட்டம் கூடிடுச்சு.

“மொதல்ல என்னனு சொல்லுங்க சார்”னு கேட்டார்.

“ஒரு கம்ப்ளெயிண்ட் வந்திருக்கு சார்”

“யாரு.. யாரு கொடுத்திருக்கா?”

“யாரோ கமலாவாம்”.. என்றவர் பேப்பர் ஹெட்லைன்ஸைப் பாத்து, நெடுஞ்செழியன முதலமைச்சரா ஆக்கிட்டாக.. எல்லாத்துக்கும் மச்சம் வேணும் சார். அவரே கூட இதெல்லாம் யோசிச்சிருக்க மாட்டார்”னு சொன்னார்.

தூக்கக் கலக்கத்தோட  சித்தி தான் கதவத் தெறந்தா. கொண்டையை ஒரு சுருள் மாரி அள்ளி சொருகிட்டு “பெரியவரே”னு ஆச்சர்யமா சொன்னாக. அப்பா பதட்டாமா இருந்ததப் பாத்து “அவுகள எழுப்பணுமா”னு கேட்டா அப்பா உள்ளயே போய் சித்தப்பாவ எழுப்பினார்.

சித்தப்பா மருண்டு எந்திரிச்சு உட்கார்ந்து “என்ன அண்ணே”னு சொல்லவும் அப்பா அவர்ட்ட “கமலான்னா யாருடா… உம் மேல ஏதோ கம்ப்ளெயிண்ட் கொடுத்திருக்கானு போலீஸ்காரர் வந்திருக்கார்ல”னு சொன்னார். அப்பா ரொம்ப பதட்டத்துல இருந்ததப் பாத்து சித்தப்பா பதில் சொல்லாம துண்ட மார்புக்குக் குறுக்கா போட்டுக்கிட்டு வெளிய வந்தார்

“கேக்கேப்லா யார் அவ?”

சித்திக்கு இப்பதான் ஏதோ பிரச்னைங்கிறது புரிஞ்சி “என்னது பெரியவரே”னுட்டே பின்னால போறா. அதுக்குள்ளயே ஏட்டு சித்தப்பாட்ட என்னமோ பேசிக்கிட்டே இருந்தார். எனக்கு என்னமோ நடக்கப் போகுதுனு தோணுச்சு. இப்படித்தான் போன வாட்டி ஆடிப்பெருக்குக்கு ஆத்துக்குள்ள நின்னு கற்கண்டு சாதம் வாய்லப் போடுறப்ப தோணுச்சு. அம்மா பாறைல கால் வச்சி விழுந்தா. அந்த மாரி எதுவும் ஆயிடக் கூடாதே இயேசப்ப்பானு வேண்டிக்கிட்டேன்.

சித்தப்பாவோட முகம்லாம் வெளிறிப் போயிருந்துச்சு. அப்பா அவர்ட்ட ரொம்ப சீரியசா பேசிக்கிட்டு இருந்தார். நான் பக்கத்துல போனோன். அப்பா “கொஞ்சம் தண்ணி கொண்டு வாப்பா”ன்னார். என்ன போகச் சொல்லுதாரேனுட்டு நான் விசும்பி நகர்றப்ப “மாமாக்கு காப்பித் தண்ணி தர சொல்லுல அம்மாட்ட”னு சொன்னார். சமையலறைல காப்பி பாத்திரத்த அம்மா விளக்கிட்டு இருந்தா. நான் பின்னால போய் “யம்மா”ன்னு சொன்னோன் ”வாரேன் ராசா.. இதோ பூஸ்ட் போடுதேன் செல்லக்கண்ணுக்கு”ன்னார்.

ம்ம்மா சித்தப்பாவ பாக்க போலீஸ் வந்திருக்குனு சொன்னேன்.. அவ சட்டுனு வெளிய வந்து போலீஸ்காரரப் பாத்து மருண்டுப் போய் நின்னா. அப்பா இப்ப தலைல கைய வச்சிட்டு உக்காந்து இருந்தாரு. சித்தி “ஓ”ன்னு அழுதுட்டு இருந்தா. அந்த போலீகாரர் இப்பவும் பேப்பர் வாசிச்சிட்டு இருந்தார்.

அவர்ட்ட அப்பா “இப்ப என்ன செய்யலாம்”ன்னாரு

“அட போங்க சார்.. ட்டென்ஷன் ஆவாதீங்க. சாட்சிக்காரன் கால்ல வுழுறத வுட சண்டைக்காரன் கால்ல வுழலாம். போய் அந்தம்மாட்ட பேசுங்க சார்”..

அப்பா அமைதியா இருக்க, சித்தி உள்ள போய் கதவ சாத்திக்கிட்டா. சித்தப்பா அத அப்படியே பாத்துட்டு இருந்தாரே தவிர அவர் சித்தியத் தடுக்கல. அம்மா கண்ணாலேயே ‘என்ன’னு அப்பாட்ட கேட்டா.

அப்பா ஒன்னுஞ் சொல்லாம ஏட்டுக்கிட்ட “உங்க பேர் என்ன அண்ணாச்சி”ன்னார். அவர் அப்படி கூப்பிட்டோன்ன ஏட்டு ரொம்ப சந்தோஷமாகி ’கிரிதரன்”ன்னு சொல்லிட்டு “கவலப்படாதீங்க சார்.. ஒரு பத்து மணி போல ஸ்டேஷன் வாங்க. முடிச்சிடலாம்”ன்னார். பிறகு “கெளம்புறே”ன்னு ஏதோ உறவுக்காரங்க சொல்ற மாரி சொல்லிட்டுப் போனவர், சைக்கிள் சாவி தேடி திரும்ப வந்து திண்ணைல பேப்பர் பக்கம் இருந்தத எடுத்தார்.

“காப்பி குடிச்சிட்டுப் போங்க அண்ணாச்சி”ன்னார் அப்பா.

“அட.. நம்ம வூடு தான. எப்பனாலும் வாரேன்”னுட்டு, “இந்தப் பேப்பர் எடுத்துக்கிரேன்”ன்னு சொல்லிட்டு அவர் போனார். அவர் போனப்பிறகு அப்பா சித்தப்பாவ ‘டப்ப்’ன்னு அடிச்சார். சித்தப்பா அப்பாவ அப்படியே கண்ணீர் மல்கப் பாத்து தலையக் குனிஞ்சிக்கிட்டார்.

“ஏம்ல ஒன் புத்தி இப்படி போச்சு..போ..அவ கிட்ட பேசு”ன்னார்

சாவி கொடுத்த பொம்மை மாரி சித்தப்பா நடந்து போய் சித்தி இருந்த அறையத் தட்டுனார். அவங்க திறக்கவே இல்ல. அம்மாவும் கூட சேந்து வேகமா தட்டி “தெற”ன்னு சொல்லிக்கிட்டே இருந்தா.

சித்தப்பா பயம் வந்து ஜன்னல் வழியா பாக்க பக்கத்து சந்து வழியா ஓட அப்ப சித்தி கதவைத் தெறந்தா. அவ கண்ணு நிலைக்குத்தி இருந்துச்சு. அப்பாவப் பாத்து “நான் இனிம இந்த வூட்ல இருக்க மாட்டேன் பெரியவரே”ன்னா. அவ அழல. ரொம்பத் தெளிவா பேசினா. சித்தப்பா அவ சத்தம் கேட்டு உள்ள வந்து அமைதியா நின்னாரு.

“என்ன ஆச்சு”ன்னா அம்மா.

“இவனப் பத்தி கமலான்னு ஒருத்தி கம்ள்யிண்ட் பண்னிருக்கா…போதும்மா? அந்தக் கேவலத்த என் வாய்ல வேற சொல்லணுமா”ன்னார் அப்பா.

சித்தி குத்துக்காலிட்டு உக்காந்து கொண்டா. அம்மா யோசிச்ச மாரியே என்னக் கூட்டிட்டு சமையலறைக்குப் போய் காப்பி சட்டில தண்ணிய ஊத்தி அடுப்புல ஏத்தினா.

“என்ன எழவுல நடக்கு.. உஞ்சித்திய நான் கூப்பிட்டே”ன்னு சொன்னா. நான் சைக்கிள் வுட்ட மாரி முன்னால போய் சித்திக்கிட்ட “அம்மா கூப்பிடுறா”ன்னேன். அவ அப்பாவ ஒருவாட்டிப் பாத்துட்டு என் பின்னாலயே வந்தா. சமையலைறைல அம்மா காப்பித் தூளை போட்டுட்டா போல. அவ்ளோ வாசனை வந்திச்சி அங்க. சித்தி உள்ளாற போய் மேடைல சரிஞ்சி நின்னா.  அடிச்ச புயல்ல இப்படி தான் மூனாவது தெரு மரம் சரிஞ்சி நின்னுச்சு.

“ஒனக்கு முன்னமே தெரியுமா”ன்னா அம்மா.

“இல்லக்கா”ன்னா.. சித்தி அம்மாவ அக்கானு கூப்பிட்டது எனக்கு ரொம்பப் புடிச்சிது. எனக்கு கிட்டத்தட்ட எல்லாமே புரியற மாரி தான் இருந்துச்சு. ஆனா கமலா என்ன கம்ளெயிண்ட் கொடுத்திருக்கானு மட்டும் தெரில. ஒரு பூனை மாரி நின்னு பாத்துட்டே இருந்தேன். சித்தி அழாம இருந்தது எனக்கு ஆச்சர்யமாருந்துச்சு.

“தெரியாது”ன்னா சித்தி. இப்ப அவ கண்ணு கலங்குற மாரி இருந்துச்சு. அம்மா காப்பித்தண்ணில சீனியப் போட்டு கலக்கி அம்மா இறுத்தா. பின்னால அதுல பால ஊத்தி ஆத்தினா. உலகத்தையே ஒரு கிண்ணிக்குள்ள போட்டு ஆத்துற மாரி இருந்துச்சு எனக்கு. ஒரு வா நாக்கு நுனில வுட்டுப் பாத்து எங்கிட்ட “தம்ளர எடு”ன்னா.

“இந்தக் கட்சி எழவ ரெண்டுப் பேரும் வுட்டு ஒழிஞ்சா தான் உருப்படும்”ன்னு அம்மா சொல்ல சித்தி ஜன்னல் வழியா கொய்யா மரத்த வெறிச்சா. நான் எட்டிப் பாத்தப்ப அங்க ஒரு சிட்டுக்குருவி உக்காந்திருச்சு. சித்தி கண் கொட்டாம அதையே பாத்தா. அவ மனசுல என்ன யோசிருப்பான்னு தெரில.

“அவ கட்சிக்காரியாமா?”

சித்தி வெறுமனே உதட்டைப் பிதுக்கினா. அம்மா அவளை உத்துப் பாத்தா. அவ கண்களாலேயே சித்திய கட்டிப் புடிச்சி தைரியம் சொல்றாப்ல இருந்துச்சு. அம்மா சித்தி கையவாச்சும் பிடிச்சிக்கலாம்னு தோணுச்சுது. ஆனா ரெண்டு பேரும் தள்ளித்தள்ளி கிட்டக்கிட்ட இருந்தாங்க.

“இப்ப தான் தெரியுமா ஒனக்கு”ன்னு கேட்டாங்க அம்மா மறுபடி. சித்தி இறுக்கமா இருந்தாங்க.

என்ன காப்பி தாரியா? நாங்க போகட்டுமான்னார் அப்பா வாசல்ல நின்னு. அம்மா அவசர அவசரமா காப்பித் தம்ளரைக் கொடுத்தா. அப்பா அத வாங்கிக்கிட்டு மளமளனு குடிச்சி “அவள வேணா அவங்க வூட்டுல இருக்க சொல்லு.. இந்த பிரச்னைய முடிச்சிட்டு பேசுவோம்”ன்னார்.

சித்திக்கு வெப்புராளம் வந்து “நான் ஏன் போனும்? இதென்ன நியாயம் அக்கா? என்ன நடந்துச்சுன்னு எனக்கும் தெரியணும் இல்லே?”ன்னா… அம்மா மெல்லிசா “அவ சொல்றதும் சரி தானன்னு அப்பாட்ட சொன்னா. ஒரு நிமிஷத்துல எல்லோரும் மாறிப் போன மாரி இருந்துச்சு எனக்கு.

ஆனா கூட சித்தப்பா ரொம்ப இறுக்கமா தான் இருந்தாரு. அம்மாக்கு உள்ளூற சந்தோஷம் இருக்குமோனு கூட எனக்குத் தோணுச்சு. அம்மா படில உக்காந்து காப்பி உறிஞ்சிட்டு சித்தியப் பாத்து – “அவுக ஸ்டேஷன் போயிட்டு வரட்டும்”ன்னா. அப்பா டம்ளர வச்சிட்டு கிளம்ப சித்தப்பா காப்பி குடிக்கல. யாரும் இல்லனா அழுவாரோனு கூட தோணுச்சு.

“காப்பி குடிங்க நீங்க”ன்னு அம்மா சொன்னா. அவர் கேட்ட மாரியே இல்லாம அப்பா பின்னாலேயே போனாரு. அம்மா சித்தியப் பாத்து “நீ குடி.. அவுக செய்றதுக்கு நாம ஏன் பட்டினி கிடக்கணும்னா. சித்தி காப்பிய மறுபடி ஆத்தினா.

“அது ஆறித்தான கெடக்கு”ன்னா அம்மா

“நீ வெளையாடப் போகலயா”ன்னு கேட்டா அம்மா.. நான் பதில் சொல்லாம அவ மடில படுத்துக்கிட்டேன். அம்மாக்கு நான் படுத்துக்கிட்டா ரொம்பப் புடிக்கும். அதுக்கு அப்புறமா அவ தலையைக் கோத ஆரம்பிப்பாளே தவிர அடுத்ததா ஏதும் பேச மாட்டா. அம்மாக்குப் பக்கத்துல ஒரு பன்னீர்ப்பூ உதிர்ந்து கிடந்துச்சு. அம்மா அத எடுத்து மோந்துப் பார்த்தா. சித்தி இப்ப மடக் மடக்குன்னு உலகத்தைக் கரைச்சிக் குடிச்ச மாரி மிடறு விழுங்காம காப்பியக் குடிச்சா. பக்கத்து வீட்டு மங்காக்கா எட்டிப் பாத்து,

“ஒன்னுமில்லயே…போலீஸ்லாம் வந்த மாரி இருக்கே”ன்னா

“ஆமாக்கா.. உங்க புருஷன் குடிச்சிட்டு தெனம் கத்துறார் இல்லே.. அதான்..”

மங்காக்கா அப்படியே தலையை இழுத்துக்கிட்டு போயிட்டா. “இவளுகளுக்கு வேற வேல இல்ல”ன்னா அம்மா. சித்தி தம்ளரை வச்சிட்டு “நான் என் தம்பியக் கூப்பிடவாக்கா”ன்னு சொன்னாங்க

“இரு பாப்போம்.. என்னாகுதுன்னு.. தேவைனா கூப்பிடுவோம்”

“இப்படி என் தலைல மண் அள்ளிப் போட்டுட்டாரே”

“வேண்டிக்கோ தாயீ.. வேறென்ன சொல்ல?

சித்தி ஏனோ அம்மா சொல்லி முடிக்கும் முன் அழுதாள். ஒரு ராத்திரி பொழுது ஹீனமா கேக்குற சில்வண்டு மாரி சத்தம் வந்துச்சு. எனக்கு அங்க இருக்க சங்கடமா இருந்துச்சு. அம்மா இன்னும் அந்தப் பன்னீர்ப்பூவை மோந்துப் பார்த்தபடி இருந்தா. அம்மா அப்படியே உட்கார சித்தி அங்கயே சரிஞ்சிப் படுத்தா. அதுக்கப்புறமா அவ கண்ணுலருந்து கண்ணீர் நிக்கவே இல்ல..

அம்மா தான் கால் மணிநேரத்துக்கு ஒரு தடவை வாசலுக்குப் போயிட்டு, போயிட்டு வந்தா. பத்து மணி போல இருக்கும். சித்தி நிமிர்ந்து “வந்துட்டாவளா”ன்னு கேட்டா

“இல்ல.. நீ படு”ன்னா

சித்தி ஒரு நிமிஷம் பார்த்துட்டு “க்கா.. நீங்க என் இடத்துல இருந்தா என்ன செய்விய”?ன்னு கேட்டா. அம்மா கைலருந்த வாளிய அப்படியே வச்சிட்டு உறைஞ்சிப் போன மாரி ஆயிட்டா.

“ஏன் இப்படி சொன்ன? எனக்கு ஏன் வரணம்?”னு சொன்னா. சித்தி இப்ப முன்ன விட தேம்பி அழுதா.. “என்னால தாங்க முடிலக்கா.. அவரு எனக்கு துரோகம் பண்ணார்னு நெனைக்க கூட முடிலக்கா”

சித்தி அழுதப்பவே அவளுக்கு வலிப்பு வந்துச்சு. அம்மா “ஏட்டீ ஏட்டீ.. இயேசுவே.. நான் என்ன செய்வே”ன்னு அலறினா. சத்தம் கேட்டு மங்காக்கா உள்ள ஓடி வந்தா. சித்தி வாய்ல இரும்பத் திணிச்சா. அதோட சேர்ந்து நுரைத் தள்ளுச்சு.

மங்காக்கா தெருக்கு ஓடினா. நான் பயந்து சமையலறைக்குள்ள ஓடிட்டேன். சித்தி செத்துப் போயிடுவார்னு தோணுச்சு. அப்ப சித்தப்பா என்ன செய்வார்? வேற யார கல்யாணம் பண்ணிக்கிட்டு இந்த வீட்டுல வாழ்வார்னு யோசிச்சேன். எனக்கு சாயர்புரம் எஸ்தர் சித்திய அவருக்குக் கட்டி வைப்பாங்கனு தோணுச்சு.

அம்மா தடால்னு உள்ள வந்து தண்ணி எடுத்துட்டு ஓடினா. கொஞ்ச நேரத்துல டாக்டர் வந்து ஏதோ ஊசிலாம் போட்டாரு. சித்திக்கு மூச்சு ஏறி இறங்குதான்னு பாத்தேன். மெல்லிசா தெரிஞ்சிது. அப்பாவும் சித்தப்பாவும் உள்ள வந்து அப்படியே இறுக்கமா நின்னாங்க. சித்தப்பா சித்தி கட்டில் பக்கத்துல போய் அவ கையை லேசா தொட்டார்.

“வெக்கமா இல்ல.. தொடுதிய..”ன்னு கத்தினா சித்தி. கையும் காலும் மறுபடி இழுக்க ஆரம்பிச்சிது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular