Friday, March 29, 2024
Homeஇதழ்கள்2021 இதழ்கள்ப.தனஞ்ஜெயன் கவிதைகள்

ப.தனஞ்ஜெயன் கவிதைகள்

1

365 நாட்களிலும் மழை

வேண்டும் என்ற தருணத்தில்
வானம் பார்த்து வேண்டினார்கள்
கடுமையாகக் காய்ந்து கெடுத்தது
வேண்டாம் என்ற பொழுது
தீவிரமாகப் பெய்து கெடுத்தது
எப்பொழுதும் துயரத்தோடு
அழுது தீர்க்கும்
உழவனின் கண்களில்
என்றுமே ஓயாது
பெய்து வருகிறது

வருடம் முழுவதும்
கண்ணீர் மழை

எந்த பருவத்திலும்
அவர்களின் இமைகள் ஈரத்தோடும்
இதயம் காயத்தோடும் தவிக்கிறது

துளிர்த்துக் காய்ந்தும்
அழுகியும் போகும்
விதைகள் அவர்கள்

*

2

நதி சேர்ந்த கண்கள்
இசை தொடும் மனம்

எங்கிருந்தோ அடித்து வரப்பட்ட கூழாங்ல்லை இன்று பார்த்தேன்

அழகான புன்முறுவலோடு
இசைத்தது அதன் இசையை

நீர் போக்குவரத்தோடு
பார்த்துவிட்டு வந்த பிறகும்

அந்த கூழாங்கல்லின் இசை
ஓடிக்கொண்டே இருக்கிறது

என் உடல் நதியில்
நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது

மீண்டும் மீண்டும் இடம் பெயர்தல்

*

3

தொடர்

துளித்துளியான மழை
பறவையின் எச்சங்கள்

துவண்ட மனதோடும்
துள்ளலோடும் விழும் பாதச்சுவடுகள்

என அனைத்தையும் செரித்தும்
சாம்பலாக்கியும் கடக்கும்

இடைவெளியில்

பூத்துக் களிக்கும் நிலம்
பிரபஞ்சத்தின் சிறிய அறை

இந்த பூமி எனும் சிறிய அறையில்
பறந்து வந்து தங்கி
மீண்டும் பறந்து போகும்
தூரம்தான் இந்த வாழ்வு

சொற்குறிப்புகளை நிரப்பிவிட்டு
பறக்கிறது ஒவ்வொரு பறவையும்

சொற்கள் இறந்துவிடாமல் பற்றிக்கொள்கிறது உடல்

*

4

அணு விதைத்த அறுவடையில்
ஆள் மயங்கி தடம் பதித்தது
ஒரு பாதை

பாதை வழியே மெல்ல நகரும்
மனப்பந்து

உயிர் மலர்ந்து
திரை நீக்கி

உதிர்கிறது வாழ்க்கைப் பூ

நரை நகர்த்தி
கரை அமர்ந்து ரசிக்கிறது
மன அலை

கரையருகே அழகான வண்ணத்துப்பூச்சி
உச்சி முகர்ந்தது உவர்க்கும் சமுத்திரத்தை
ருசி பார்த்தது

கடலில் தேன் எடுக்க முடியாமல்
கரையருகே
பூவைத் தேடியது

மனமோ வாழ்வைத் தேடுகிறது

இன்னும் உவர்க்கும் சமுத்திரத்தில்
வாழ்வின் பயங்கரம்
அடிமனதின் ஆழத்தில்
நிழலாய் நகர்கிறது

எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டே
யாருடைய நிழலையும் விரும்பாமல்
சுற்றி வருகிறது சூரியன்

*

5

இந்த இரவு அவ்வளவு
அழகாக இல்லை
அவளை விரும்பினேன்

இது மோன இரவு

தூங்கும் மலரைத் தட்டி எழுப்பி
முத்தம் தருவதைப்போன்ற இரவு

அவள் தூங்குவதைப்போல் நடிக்கிறாள்
மெத்தையில் பூக்கள் பூத்துக்கொண்டேயிருந்தன

அவ்வளவும் வாசனை

அது உன் வாசனை மாயா

நீ கனவில் அடிக்கடி வந்தாய்
உன்னைக் காதலி என்று
அழைத்துவிட்டேன்

அதனால் உன் கோபம்
எனக்குப் புரிகிறது

அறை முழுவதும் உன் நினைவுகள்

மாயப் பூக்களோடு போரிட
என் இதய ஆயுதத்தை
சுதர்சனமாக்கி எரிந்து விட்டேன்

பூக்களை உதிரச்செய்யும் அளவிற்கு
காதல் செய்கிறது காம சக்கரம்

ஆடையற்ற இந்த இரவை
ஒளி குடிப்பதைப் போல்

நான் உன்னைக் குடித்துக்கொண்டே
இருக்கிறேன்

மன்னித்துவிடு மாயா

உன் அனுமதி இல்லாமலேயே
உன்னைக் குடிப்பதற்கு

*

6

அழகான வெள்ளை இதயமும்
வெள்ளை இரத்தமும்
கருப்பு ரத்தத்தைக்
தனக்குள் அடக்கி
அழகுபார்க்கிறது

தன் தூய்மையான முகத்தில்
எழுதித் தீர்க்கும் வரிகளைச் சுமந்து
வேதனையோடும்
இன்பத்தோடும்

புத்தக உடலாக நீள்கிறது

எரிந்து சாம்பலாகி
ஆற்றலை வெளிப்படுத்தும்
ஒவ்வொரு பக்கத்திற்குள்ளும்
வெள்ளைத்தாளும்
கருப்பு மையும் விளையாடி மகிழ்ந்து

எடிட்டர்களோடு கருப்பு மை
தன்னை சரிசெய்து கொள்கிறது

வெள்ளைத்தாள் எப்பொழுதும் மேகம் போன்று
எழுத்தைப்பொழியும்

வெள்ளைத்தாளின் கர்ப்பத்தில்
எத்தனையோ எழுத்துகள் மழைபோல் பிறக்கிறது

மனிதர்களைப்போலப் பேசவும் செய்கிறது
கனத்த இதயத்தோடு

காகிதங்கள் இசைக்குறிப்பின் தீராத பக்கங்களாய் அசைகிறது.

***

ப.தனஞ்ஜெயன்
[email protected]

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular