பிரித்துத் தைத்தவை

0

அனில் குற்றிச்சிறா (மலையாளத்திலிருந்து தமிழில்: மீரா மீனாட்சி)

இறந்த பின்
புதியதும் பழையதுமான
அவனின் உடைகள்
எனக்குக் கிடைத்தன

புத்தம்புது ஏடுகள் கிடைத்த
சிறுவனின் வெகுளித்தனத்துடன்
ஒவ்வொன்றையும் அணிந்து
கண்ணாடி முன் சரிபார்த்தேன்
எதுவுமே பொருந்தி வரவில்லை

எனக்குப் பிடித்த கரும்நீலம்
திருமண ஆல்பத்தில் அவனை
பளிச்சென்று நிறைத்த தீ-மஞ்சள்
அவனுடைய பிறந்தநாளில்
அவள் பரிசளித்த பச்சை
இப்படி இறுக்கமானதும்
தளர்வானதுமாக

இறப்பதற்கு முன்
அவனுடன் பகிர்ந்துகொண்ட
தேநீர் வாயில் கசக்கிறது
அப்போதும் அவன்
தீவிரமாக வாழ்க்கை
வாழ்க்கையென்றபடி இருந்தான்

1 A முதல் 4 A வரை
5 C முதல் 7 D வரை
இருவரும் ஒரே வகுப்பறையில்

பள்ளி விட்டதும்
ஒன்றாக விசிலடித்து
சூதாட்டத்தில் திளைத்து
கிடைத்ததெல்லாம்
பணயம் வைத்தோம்

பிரித்துத் தைத்து
துவைத்து சலவைசெய்தும்கூட
அவ்வுடையிலெல்லாம்
அவன் வாசமே மீந்தது

இன்று
என்னவளும்
என் உடைகளை
தானமிடுகிறாள்

பிரித்துத் தைத்து
மீண்டும் அவன் வாசனை
தெருவில்
எங்கெங்கோ
திசையற்றுப் பாய்கிறது

***

அனில் குற்றிச்சிறா, கேரளாவில் உள்ள வயநாட்டைச் சேர்ந்தவர். நீர்மாதளம் புக்ஸ் என்ற பதிப்பகம் வைத்திருக்கிறார். கவிதைகள், கதைகள் , கட்டுரைகள் என பல பத்திரிகைகளில் எழுதி வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here