Tuesday, March 19, 2024
Homeஇலக்கியம்பஞ்சுமிட்டாயும் பால்ராஜ் அண்ணனும்

பஞ்சுமிட்டாயும் பால்ராஜ் அண்ணனும்

  • ராம்தங்கம்

ண்களை மூடிப் படுத்திருந்த ஜீவாவுக்கு உறக்கம்  வரவில்லை. மூளை பல சம்பவங்களை மீட்டு அலசிக் கொண்டிருந்தது. தொய்ஞ்சி போன கொச்சங்கயிற்றுக் கட்டிலில் படுத்திருந்த, அவனது அப்பா சத்தியதாஸின் குறட்டைச் சத்தம் இடைவிடாமல் எழுந்து கொண்டிருந்தது. கறைத்துணி கிழிந்துபோன கோரைப்பாயில் ஒருக்களித்துப் படுத்தான் ஜீவா.

 மணி இரவு ஒன்பதரை இருக்கும். தூர்தர்ஷன் பொதிகையில் வெள்ளிக்கிழமை என்பதால் தமிழ்ப்படம் போட்டிருப்பார்கள். தலைமாட்டில் ஒன்பது மரக்கட்டைத் துண்டுகளால் ஆணி வைத்து அடித்து, அப்பா செய்த மர ஸ்டூலில் சின்ன பிளாக் அன் ஒயிட் டிவி இருந்தது. இதற்கு முன்னால் மரக்கள்ளிப் பெட்டியின் மேல் டிவியை வைத்திருந்தபோது பெட்டி நெளிந்து டிவி கீழே விழுந்தது. அதன்பின் டிவி ஓடவில்லை. டிவியின் சுவிட்ச் போட்டால் அதன் குறுக்காக நடுமத்தியில் வெள்ளைக்கோடு விழுந்து ‘கிர்’ எனச் சத்தம் கேட்கும்.

   டிவி ஓடிய காலத்தில் குளிமுறிக்குப் பக்கத்தில் காத்தாடிக் கம்பியில் மாட்டியிருக்கும் ஆண்டனாவைத் திருக்கிக் கொண்டு இரைச்சல் இல்லாமல் சக்திமானையும், செய்திகளையும் பார்த்ததுண்டு. காணாமல் போன அறிவிப்பு தினம்தோறும் வரும்போது ஜீவாவுக்கு ஒருவித பயம் தொற்றிக் கொள்ளும்.

   ஜீவாவின் வீடு சின்ன வீடுதான். மேற்கு பார்த்த வாசலுக்கு பாமாயில் டின்னைக் கீறிப்பிளந்து, விரித்து, பட்டி அடித்த தகரக் கதவு தான். உள்பக்கக் கொண்டியைப் போடும்போது ‘டொக்’ எனச்  சத்தம் கேட்கும். ஒரே ரூம்தான். அதில் இடது பக்க உள்மூலையில் விறகு அடுப்பு இருக்கும். அந்த பக்கச்சுவர் மட்டும் புகைக்கரியால் கருப்பாக இருக்கும்.  ஒரு அட்டைப்பெட்டியில் அழுக்குத் துணியும், ஒரு கள்ளிப்பெட்டியில் தோய்ச்ச துணியும் இருக்கும். வீட்டுக்குள் ஆறு எட்டுதான் வைக்க முடியும். பனைமரத் தடிகளால் ஆன  வீட்டின் உத்திரத்தின் மேல், தென்னை ஓலைக்கூரை போட்டிருக்கும். 

     ஜீவாவின்  வீட்டுக்கு எதிரே ஒரு திண்ணை வீடு. அதற்கு அடுத்து ஒரு வீடு. ஜீவா வீட்டுக்கு இடது பக்கம் ஒரு வீடு. இந்த நாலு வீடுகளும் சேர்ந்ததுதான் நடுத்தெரு வாத்தியார் காம்பவுண்ட். எதிரே உள்ள ரெண்டு வீட்டுக்குள்ளும் கக்கூஸ் உண்டு.  ஜீவா வீட்டுக்கும் அதை அடுத்த வீட்டுக்கும் கக்கூஸ் கிடையாது. குளிமுறிதான் உண்டு. பகலில் ஒண்ணுக்கு வந்தால் குளிமுறியில் போய் மோண்டுவிட்டு நெளிந்துபோன அலுமினிய வாளியில் நிரம்பியிருக்கும் அடிபம்புத் தண்ணியை ஒரு செரிலாக் டப்பா நிறையக் கோரி விடுவார்கள். வீட்டுக்குப் பின்பக்கம் போகும் மடை வழியாக தெருவில் போகும் சாக்கடையில் மூத்திரமும் தண்ணீரும் சேர்ந்துபோய் கலக்கும். அப்போது சாக்கடையின் நாற்றம் மேலெழும்பும்.

   வீடு செம்மண் கட்டு என்பதால் பின்பக்க மடையை ஒட்டி வீட்டுக்குள் எலி துளை எடுத்து யாருக்கும் தெரியாமல் வந்து போய்க் கொண்டிருக்கும். எலித்துளையை அடைக்க ஜீவா அடிக்கடி சின்ன சைஸ் கருங்கல்லைக் கொண்டுவந்து அடைத்து வைப்பான். எலி வீட்டுக்குள் அங்கும் இங்கும் ஓடுவதில் சின்னச் சின்னப் பாத்திரங்கள் சிதறிக் கிடக்கும். கழுவிய பாத்திரங்களைச் சுவரில் ரெண்டு பெரிய ஆணி வைத்து அடித்து, அதில் ரெண்டு துண்டு கொச்சங்கயிறு கட்டி கயிற்றின் குறுக்கே கொஞ்சம் வீதிப்பலகையை சொருகி, அதில் அடுக்கி வைத்திருப்பார் சத்தியதாஸ்.

      அதனிடையில் பாதிமுறித் தேங்காயை மறைத்து வைத்திருப்பார். அதைத் தேடிப்போய் எலி கரம்பிவிடும். கரம்பிய தேங்காய் முறியைப் பார்த்ததும், ‘தேவுடியா பயலுக்க எலியக் கொல்லாம வுடக்கூடாது’ எனத் திட்டிக்கொண்டே எதிர் வீட்டு ராணி அக்காவிடம் எலிப்பொறியைக் கேட்டு வாங்கி, அதில் ஒரு துண்டுத் தேங்காயைச் சுட்டு மாட்டி வைப்பார். ராத்திரியில் சர்வ சாதாரணமாக வந்துபோகும் எலி, பகலில் பொறியில் மாட்டி விடும். பள்ளி முடிந்து வீட்டுக்கு வரும் ஜீவா கதவைத் திறந்ததும் குடுகுடுப்பைக்காரனின் உடுக்குச் சத்தம் போல பொறியில் மாட்டிய எலி அலைமோதும் சத்தம் கேட்கும்.

   சிரித்தபடியே வலது கையில் விறகுக் கட்டையை எடுத்துக்கொண்டு இடது கையால் எலிப்பொறியைத் தூக்குவான். மெதுவாக வெளியே வந்து குத்த வைத்து பொறியைத் திறக்க, வெளியே வரும் எலியை அடிக்க கட்டையை ஓங்குவான். பொறி லேசாகத் திறந்ததும் சுதாகரித்துக் கொண்ட எலி, ஒரே பாய்ச்சலில் சாக்கடைக்குள் விழுந்து மடை வழியாக ஏறி வீட்டின் ஓட்டை வழியாக மறுபடியும் ஜீவா வீட்டுக்குள் சென்று மறையும்.

     இது ஒருமுறை அல்ல. அவன் எப்போதெல்லாம் எலிப்பொறியைத் தூக்குகிறானோ அப்போதெல்லாம் இப்படித்தான். அப்பா சத்தியதாஸ் பல எலிகளைக் கொன்றிருக்கிறார்.  அதுபோல ஒரு எலியையாவது கொன்றுவிட வேண்டும் என ஜீவா முயன்று தோற்றே இருக்கிறான்.

      வீட்டில் சணல் சாக்கு விரித்து அதன்மேல் ரெண்டு மைதாமாவு சாக்கில் புளி இருக்கும். சத்தியதாஸ் சைக்கிளில் புளி வியாபாரம் செய்கிறார். அதனால் எப்போதும் வீடு நிறைய புளி மணம் நிறைந்திருக்கும். பெரிய பனைஓலைக் கிடவத்தில் வைத்து தெருத்தெருவாகப் புளி விக்கக் கொண்டு போனால் சாயங்காலக் கருக்கலில்தான் வீடு வருவார். வந்ததும் மேல் கழுவிவிட்டு அரிசி கழுவி, சோறு பொங்கி எதாவது குழம்பு வைத்துவிடுவார். பாதிநாள் ரசமும் சோறும்தான் இரவு உணவு. 

     சிலநேரம் புளி கரைச்சி, அதில் அஞ்சி சொட்டு தேங்காய் எண்ணெய் விட்டு, ரெண்டு சின்ன உள்ளியும் பச்ச மிளகாயும் அரிஞ்சி போட்டு கலக்கி, சுடுசோறும் சுட்ட சாளைக் கருவாடுமாகத் தின்னும்போது அது மணிமேடை ஆசாத் ஓட்டல் பிரியாணிக்கு நிகராக ஜீவாவுக்கு இருக்கும். 

    ரெண்டு ஆண்டுகளுக்கு முன்புவரை தினம் தோறும் மீன்குழம்பு, ரசம், பருப்பு, சாம்பார் என விதவிதக் குழம்புகளாய் ஜீவாவுக்கு அம்மா ஜெயா ஆக்கிப் போட்டாள். ஜீவா  மூன்றாம் வகுப்பு படிக்கும்போது ஒருநாள் அவர்கள் குடியிருக்கும் காந்திநகர் நடுத்தெருவில் உள்ள பார்வதி அக்கா வீட்டில் அலறல் சத்தம் கேட்டது. மதியம் என்பதால் தெரு கொஞ்சம் அமைதியாக இருந்தது. வீட்டுக்கு வெளியே பாத்திரம் கழுவிக் கொண்டிருந்த ஜெயா , பார்வதி அக்கா வீட்டுக்கு ஓடிப் போனாள். கதவு திறந்து கிடந்தது.         

      உள்ளே ஒருவன் அரிவாளோடு ஆவேசமாக  நின்று கொண்டிருந்தான். பார்வதி பன்னிரெண்டாவது படித்து முடித்துவிட்டு காலேஜூக்கு படிக்கப் போகவில்லை. பள்ளிக்கூடத்தில் படிக்கும்போதே ஒருவன் லவ் பண்ணுகிறேன் எனத் தொந்தரவு பண்ணியிருக்கிறான். அவன்தான் விரக்தியில் பார்வதி அக்காவை வெட்ட வந்திருக்கிறான். ஜெயா வீட்டுக்குள் போனதும் அவன் பதற்றமடையாமல் ‘தேவுடியா, ஒன்னக் கொல்லாம விடமாட்டேன்டி  என அரிவாளை வீசியபடியே நின்றான். ஜெயா பயப்படாமல் பார்வதியை அணைத்தாள். பார்வதி ஜெயாவின் பின்னால் ஒளிந்து கொண்டாள். அவன் கோவத்தில் பார்வதியை வெட்ட அரிவாளை வீச, அது ஜெயாவின் கழுத்தில் வெட்டிச் சொருகிக் கொண்டது. வெட்டியவன் வேகமாக ஓட்டம் பிடித்தான்.

       பார்வதி அலறியபடியே மூலையில் உட்கார்ந்தாள். ஜெயா கழுத்தில் அரிவாளோடு அப்படியே தரையில் விழுந்தாள். அவளின் ரத்தம் தரையில் படர்ந்து கொண்டிருந்தது. பக்கத்து வீடுகளில் இருந்து வந்தவர்கள் ஜெயாவைத் தூக்கினார்கள். கோழியின் தலையை வெட்டும்போது துடித்து அடங்குவதுபோல ரெண்டு தடவை ஜெயாவின் உடல் துடித்து அடங்கியது. உயிர் பிரிந்தது. ஆனால் கண்கள் மூடவில்லை. அப்போது ஜெயா ஆறுமாதக் கருவை வயிற்றில் சுமந்திருந்தாள்.

      ஜெயாவின் இறப்புக்குப் பின் சத்தியதாஸ்தான் சமையல். ஜீவா  அது வேணும், இது வேணும் என்று கேட்பது இல்லை. தினமும் சாயங்காலம் சோறு பொங்கி ரெண்டு பேரும் சாப்பிட்டு மீதி பழையதை மறுநாள் காலையிலும், மத்தியானத்துக்கு வாளியிலும் சத்தியதாஸ் கொண்டு போவார். ஜீவா மதியம் பள்ளியில் சாப்பிடுவான். 

    காலையில் தினமும் கள்ளர் குளத்தில் குளிக்க  சத்தியதாஸ் ஜீவாவைக் கூட்டிக்கொண்டு போவார். கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கூர் சமஸ்தானத்தோடு இருந்தபோது நாகர்கோவில் ஜெயிலில் உள்ள கள்ளர்களையும், மற்ற கைதிகளையும் காந்திநகர் குளத்துக்குதான் குளிக்க அழைத்து வருவார்கள். அதனாலேயே காந்திநகர் குளத்துக்குக் கள்ளர்குளம் என்று பெயர் வந்துவிட்டது.  

       வடசேரி பில்டர் ஹவுசில் உள்ள தண்ணீர்தான் கள்ளர் குளத்துக்கு வரும். குளம் அரை கிலோமீட்டர்  நீளத்துக்கும் அதிகமாக இருக்கும். குளத்தைச் சுற்றி பன்னிகள் மேய்ந்து கொண்டிருக்கும். நேரம் வெளுக்கும் முன்பே பெரிய ஆண்களும், பொழுது விடிஞ்சதும் சிறுவர்களும் கள்ளர் குளத்தின் இடதுகரையில் பேண்டு கொண்டிருப்பார்கள். காந்திநகர் தொடக்கத்தில் பொம்பள கக்கூஸ் பெரிய ஓடையின் மேல் கட்டியிருக்கும். அதில் இருக்கும் அஞ்சு தனித்தனி கக்கூஸில் பெரிய பொம்பளைகளும், சின்ன பொம்பளப் பிள்ளைகள் ஓடையின் அருகிலும் பேளுவார்கள். சடங்கான பிள்ளைகள் மட்டும் எங்கே கக்கூசுக்குப் போவார்கள் எனத் தெரியாது. ராத்திரி பத்துமணிக்கு மேல் குத்த வைக்கிற சாக்கடையும், காலி இடமும் கக்கூஸ்தான். பக்கத்து வீட்டுக்காரர்கள் தங்கள் கக்கூசுக்கு வந்து பேண்டு விடக்கூடாது என்றுதான் கக்கூஸ் கட்டி வீடு போட்டவர்களுக்குக் கவலையாக இருக்கும். எல்லாரும் வந்து பேண்டால் கக்கூஸ் நிறைஞ்சிரும் என்கிற நினைப்புதான்.

     குளத்தங்கரையில் கிடக்கும் பீயைத் தின்பதற்காகவே பன்னிகள் கூட்டம் கூட்டமாக உலாவும். பீ வாடையும் பன்னி உட்டை வாடையும் சேர்ந்து குளத்தங்கரையின் இடதுபகுதி அகோர வாடை வீசும். பீ மிதித்து விடாதபடி நடந்து, பீ இல்லாத இடத்தில் குத்த வைக்கும்வரை குடலுக்குள் இருக்கும் பீ பொறுமை காக்க வேண்டும் என்பதுதான் குளத்தங்கரை வரும் ஆண்களின் வேண்டுதலாக இருக்கும். ஆசுவாசமாக பேண்டு கொண்டிருக்கும்போது யாரோ பின்னால் இருந்து இடித்துத் தள்ளி பீ மேல் விழுந்தவர்கள் காந்திநகரில் அதிகமுண்டு. பின்னால் இருந்து இடித்து தள்ளுபவர் வேறுயாருமல்ல, பன்னிதான். 

         பச்சைப் பீ திங்கும் ஆவேசத்தில் பன்னி முட்டித் தள்ளிவிடும். இப்படி பீ தின்று வளரும் சில பன்னிகளை வாரம்தோறும் சனிக்கிழமை ராத்திரி பிடித்து கால்களைக் கட்டிக் குளத்தங்கரையின் வலதுபக்கம் இருக்கும் நேருநகர் ரோட்டுக்குக் கொண்டுபோய், பன்னியின் கழுத்தை அறுத்துவிட்டு தென்னைஓலை தீப்பந்தம் கொண்டு பன்னியின் முடிகளை வக்கிவிட்டு கொதிக்கக் கொதிக்க  வெந்நீர் ஊற்றி, பார்பர் தாடி செரைக்கும் சவரக்கத்தி கொண்டு பன்னியின் உடலை நன்றாக மழித்து, மறுபடி வெந்நீர் ஊற்றிக் கழுவி நேர் பாதியாக அறுத்து, ஞாயிற்றுக்கிழமை காலேஜ் ரோட்டில் கடை போடுவார்கள்.

     ஹோம்சர்ச் பிரேயர் முடிந்து வருபவர்களில் சிலரும் நாகர்கோவிலைச் சுற்றியுள்ள பலரும் பன்னிக்கறி வாங்க குமிவார்கள். அதில் டாக்டர், வக்கீல், இஞ்சினியர் என சமூக அந்தஸ்தில் உள்ளவர்களின் தலைகள்தான் அதிகம் தென்படும். அவர்களுக்குப் பன்னி எதைத் தின்னு வளர்ந்துச்சி எனத் தெரியாது. காந்திநகர்காரர்கள்  பன்னிக்கறியை கட்டக்கால் இறைச்சி என்றுதான் சொல்லுவார்கள்.

    வழக்கம் போல கள்ளர் குளத்தில் குளித்துவிட்டு வீட்டுக்குப் போய் பழைய கஞ்சியில் சின்ன உள்ளியோ அல்லது நேற்று வைத்த குழம்பையோ வைத்துத் தின்றுவிட்டு சத்தியதாஸ் புளி விக்கப் போவார். ஜீவா சர்ச் தெருவில் உள்ள பள்ளிக்கூடத்துக்குப் போவான்.  கிறிஸ்து தொடக்கப்பள்ளி. ஊரில் அதை ஓட்டைப் பள்ளிக்கூடம் என்றுதான் எல்லோரும் சொல்லுவார்கள்.

       பள்ளிக்கூடத்தைச் சுற்றி நிற்கும் தென்னைமர மட்டைகள் விழுந்து ஓடுகள் உடைந்திருக்கும். அதனால்தான் அது ஓட்டை பள்ளிக்கூடம். காந்தி நகர், அம்பேத்கார் நகர், நேருநகரில்  உள்ள மாணவர்கள் தான் அந்தப் பள்ளியில் படிக்கிறார்கள். ஐந்தாம் வகுப்பு வரைதான் உண்டு.  அதன்பிறகு படிக்க ஹோம்சர்ச்  ஸ்கூலோ, டதி ஸ்கூலோ, ஸ்காட் ஸ்கூலோ, எஸ்.எம்.ஆர்.வியோ, எஸ்.எல்.பி.யோதான் போக வேண்டும்.  

     ஓட்டைப் பள்ளிக்கூடத்தில் யாரையும் பெயில் ஆக்கமாட்டார்கள். எதாவது பெற்றோர் சொன்னால்தான் பெயில் ஆக்குவார்கள். ஜீவா நன்றாகப் படிக்கிறவன். அதனால் தலைமையாசிரியர் ரோஸ்மேரி எதுக்குன்னாலும், ஜீவா என்று அழைத்துக் கொண்டிருப்பாள். ஜீவா புது நிறம். எப்போதும் சிரித்த முகம்.  யாரிடம் பேசினாலும் சிரித்துக் கொண்டே பேசுவான். ஐந்தாம் கிளாஸ் மாணவனுக்கான உயரம். நீலக்கலர் நிக்கரும், வெள்ளைச் சட்டையும்தான் யூனிஃபார்ம். அவன் போடும் துணிகளில் அழுக்கு இருக்காது. இமைக்காமல் நெடுநேரம் கவனிப்பான். அவனது உள்வாங்கும் திறனைக் கண்டு பாடம் நடத்தும் டீச்சர்கள் ஜீவாவைப் பார்த்தே பாடம் எடுப்பார்கள்.

    எப்போதும் போல ஒன்னாம் ரேங்க்தான் ஜீவா. பள்ளி முடிந்து யார் கடைக்குப் போகச் சொன்னாலும் போவது, பாத்திரம் கழுவ, குளிமுறிக்குத் தண்ணீரைச் சின்ன வாளியில் பிடித்து வைப்பது அவன் வேலை. சத்தியதாஸ் வரும் முன்னால் வீட்டைத் தூத்துப் போட்டு, குப்பைகளை அள்ளி சாக்கடையில் தட்டி, பாத்திரங்களையும் கழுவி வைத்து விடுவான். அப்போது  தெருவில் உள்ள எதாவது வீடுகளில் டிவி ஓடும் சத்தம் கேட்கும். அந்த வீடுகளின் அடைக்கப்பட்ட பாதிக் கதவுகளில் தொங்கிக்கொண்டு தலையைச் சாய்த்து வெளியே நின்று டிவி பார்ப்பான். 

    ‘கதவுல தொங்காதடே, வீட்டுக்குள்ள வந்து டிவியப் பாரு’ என்று யாராவது எப்போதாவது சொல்வதுண்டு. அப்படியே போய் டிவி பார்க்கும்போது வீட்டில் ஏதாவது திண்பண்டமோ காபியோ குடிக்கப் போகிறார்கள் என்றால் ‘ஏ ஜீவா, அன்னா ஒனக்க அம்மெ கூப்புடுகாலே, சத்தம் காதுல உழலயா? சட்டுன்னு ஓடிப்போ’ என்று சொல்வார்கள். வேகமாக எழுந்து ‘இன்னா வாரேம்மா’ன்னு கத்திக்கொண்டே ஜீவா ஓடுவான். வீட்டுக்கு வந்த பெறவுதான் அவன் அம்மா இறந்து போனது நினைவுக்கு வரும். மறுபடி டிவி பார்த்த வீட்டுக்குப் போனால் அங்கு கதவு உள்பக்கமாகப் பூட்டியிருக்கும். அமைதியாக வீட்டுக்கு வந்து  புளி மடக்கிக் கொடுக்க வைத்திருக்கும் பழைய பேப்பர்களை வாசித்துக் கொண்டிருப்பான்.

     ஏதாவது குழந்தைகள் அவர்களின் அம்மாவிடம் விளையாடிக் கொண்டிருந்தாலோ, கொஞ்சிக் கொண்டிருந்தாலோ அதைப் பார்க்கும் ஜீவாவுக்கு முகத்தில் சோகம் அப்பிக் கொள்ளும். பல நேரம் கதவைப் பூட்டிக்கொண்டு ‘அம்மா அம்மா’ என்று அழுவான். சில ராத்திரிகளில் அவன்  அப்படி என்று அழுதால் சத்தியதாஸ் அவனை இறுக்கி அணைத்துக் கொள்வார். 

     ஜெயாவின்  இறப்புக்கு முன்புவரை குடித்திருந்த சத்தியதாஸ் அதன்பின் குடிப்பதில்லை. வீட்டுக்கு வரும்போது நூறு கிராம் மிக்சரோ , காரசவ்வோ வாங்கிட்டு வருவார். ஆனால் ஜீவாவுக்கு விருப்பமெல்லாம் பால்ராஜ் அண்ணன் விக்கும் பஞ்சுமிட்டாய் மீதுதான்.

      இது ரோஸ்கலர் பஞ்சுமிட்டாய் இல்லை. வெள்ளைக்கலர் சோன்பப்டி. அதுதான் நாகர்கோவில்வாசிகளுக்கு பஞ்சுமிட்டாய் . அதையேதான் பாம்பே மிட்டாய் என்றும் சொல்வார்கள். 

     கட்டையாக, குண்டான உருவம். புதுநிறம். முகத்தில் எப்போதும் ஒரு தேடல். உதட்டில் கொஞ்சம் புன்னகை. எப்போதும் டக்இன் பண்ணி கையில் கோல்டன் கலர் வாட்சும், விரலில் மோதிரமும், கழுத்தில் செயினோடும்தான் தள்ளுவண்டியை பால்ராஜ் அண்ணன் தள்ளிக் கொண்டு போவார். உள்பனியன் போட்டிருப்பதால் செயின் வெளியே தெரியாது. அவர் பீடி, சிகரெட், குவாட்டரோ குடிப்பது கிடையாது. எந்த கெட்டப் பழக்கமும் கிடையாது. யாரிடமும் குரலை உயர்த்திப் பேசுவதும் கிடையாது. 

   பால்ராஜ்   அண்ணனுக்குக் கல்யாணமாகி ரெண்டு குழந்தைகள் உண்டு. பால்ராஜ் அண்ணனும், ஜீவாவின் அம்மாவும் தொடக்கப்பள்ளியில் ஒன்றாகப் படித்தவர்கள். ஜெயாவின் அப்பா தங்கராஜூம், பால்ராஜ் அண்ணனின் அப்பாவும் நண்பர்கள். இருவரும் சேர்ந்துதான் வடசேரி சந்தைமேட்டில் கை வண்டி இழுத்தார்கள். பால்ராஜ் அண்ணன் எல்லோரிடமும் அன்பாகப் பழகுபவர். இரக்க குணம் உள்ளவர் என்று ஊரில் உள்ள பெரியவர்கள் சொல்வார்கள். 

     பால்ராஜ் அண்ணன்  பன்னெண்டு வயசுலயே  குடும்பக் கஷ்டத்துல வேலைக்கிப் போய்விட்டார். வேலைன்னா தெருத்தெருவா ஐசு விக்கதுதான். சின்ன ஐசுப் பெட்டியப் பையில வச்சி தோளுலப் போட்டுட்டு கிலிக்கிட்டே ‘ஐஸ்ஐஸ்’ன்னு கத்திட்டுப் போவார். அவருக்கு வெட்டூர்ணி மடத்துக்குப் பின்னாடி இருக்கும் வாத்தியார்விளை தான். ஐஸ் விக்கப் போகும்போது சில பிள்ளைகள் ஐஸ் வாங்குவார்கள். அம்மா இல்லாததோ, அப்பா இல்லாததோ பால்ராஜ் அண்ணன் பின்னாடியே ‘ஐஸ் ஐஸ்’ன்னு கத்திட்டுப் போகும். அப்போது மனசு கேக்காம ஆளுக்கு ஒரு குச்சி ஐஸ் கொடுத்து விடுவார். அந்தப் பழக்கம்  பஞ்சுமிட்டாய் விற்க வந்த பிறகும் மாறவில்லை.

     பதினெட்டு வயசுக்குப் பிறகு பஞ்சுமிட்டாய் விக்க பால்ராஜ் அண்ணன் வந்துவிட்டார். காந்திநகர் நடுத்தெருவில் கடைசியில் போய் மோட்டார்பெறை தெருவில் மோட்டார் ரூமுக்கு எதிரே வடக்கு பார்த்த வாசல்  ஓட்டுவீட்டைத்தான் குடோனாக வாடகைக்கு எடுத்துப் பயன்படுத்தி வந்தார்.  வீட்டுக்கு வெளியே சாணி மொழுகிய திண்ணை. வீட்டின் வெளிப்பக்கச் சுண்ணாம்பு பூசிய சுவரில், சுண்ணாம்பு இளகி செம்மண் சுவர் காட்சி தரும். வீட்டின் முன்னால் ஒரு தென்னை மரமும், கொய்யா மரமும் நிற்கும். காலை பதினோரு மணிக்கெல்லாம் பால்ராஜ் அண்ணன் வந்து விடுவார். 

    வந்ததும் ஒரு சாரத்தைக் கட்டிக்கொண்டு மேலே  பனியனுமாகப் பஞ்சுமிட்டாய் செய்யும் வேலையைத் தொடங்குவார். வீட்டுக்குள் பெரிய விறகு அடுப்பு போட்டிருக்கும். அதில்தான் பெரிய இரும்புச் சட்டியில் டால்டாவைக் கிண்டி அதுக்குமேல் மைதாமாவைத் தட்டி நல்லா வறுத்து தனியா வைத்துவிட்டு, மறுபடி சட்டியைக் கழுவி தண்ணீ ஊத்தி நல்லா சூடாக்கி, அதுல சீனியைத் தட்டி சீனிப்பாவு காய்ச்சுவார்.  சீனிப்பாவுலேயே மூணு பருவம் உண்டு. பஞ்சுமிட்டாய்க்கு மிட்டாய் பருவத்தில் சீனிப்பாவு காய்ச்சுவார். அது நூல் மாதிரி வரும். அதை பெரிய வீதி அலுமினிய டிரையில் ஊத்துறதுக்கு முன்னாடி டிரை முழுக்க  டால்டாவால் தடவிவிடுவார்.  டிரேய் முழுசும் சீனிப்பாவு படர்ந்து விடாதபடி கொஞ்ச இடத்தில் கயிறு போட்டு அணை போடுவார். அதற்குள் சீனிப்பாவை ஊத்தும்போது சர்க்கரை பாவு மாதிரி தெரியும். அதற்குமேல் வறுத்த மைதாவையும் பொடிச்சி வைச்சிருக்கும் ஏலக்கா பொடியையும், கொஞ்சம் பைனாப்பிள் எசன்ஸையும் ஊத்துவார்.

   மைதா மாவை சேர்த்து சீனிப்பாவைப் பெரிய வட்டமாகப் பிடித்து விடுவார்கள். சீனிப்பாவின் சூட்டில் உள்ளங்கை பொத்து விடுவதுபோல் இருக்கும். ஆனாலும் நான்கைந்து பேர் சேர்ந்து இழுப்பார்கள். வளையம் போல பெருசாகிப் பெருசாகி போகும்போது, அதை எட்டுபோல வளைத்து மறுபடி ‘ ஓ’ போல டிரையில் போடுவார். மறுபடி மைதாமாவு சேர்த்துப் பிரட்டி சின்ன வளைய சீனிப்பாவை பெரிய வளையாக மாற்றுவார்கள்.

   சீனிப்பாவும், மைதாமாவும் சேர்ந்து கோல்டன் கலரில் மாறிவிடும். இழுக்க இழுக்க நூல்மாதிரி பக்குவம் வந்ததும், நேர்பாதியாக வெட்டி பால்ராஜ் அண்ணன் டிரையிலே உதறுவார். அது பொடிஞ்சி பொடிஞ்சி கொச்சங்கயிறு தும்புபோல விழும். அதை பெரிய கண்ணாடிக் குடுவையில் அள்ளி வைத்து காற்று போகாதபடி மூடி வைப்பார். டிரையில் இருக்கும் உதிரிமாவு பொடிகளை, பஞ்சுமிட்டாய் இழுக்க வந்தவர்களுக்கு ஆளுக்குக் கொஞ்சம் பேப்பரில் பொதிஞ்சி கொடுப்பார். லீவு நாட்களில் ஜீவா வீட்டுத்தெரு எட்டாம் வகுப்புக்கு மேல் படிக்கும் பையன்களும் பொண்ணுங்களும் பஞ்சுமிட்டாய் இழுப்பார்கள். லீவுநாட்களில் பால்ராஜ் அண்ணன்கூட பஞ்சுமிட்டாய் இழுக்க காந்திநகர் சிறுவர்களில் குறைஞ்சது பதினஞ்சி பேராவது குவிஞ்சி கிடப்பார்கள்.

 பஞ்சுமிட்டாய் இழுக்க பால்ராஜ் அண்ணன் ஆள் தேர்வு செய்வதே தனி அழகுதான். வரிசையாக ஆம்பளப் பயல்களும் பொம்பளப் பிள்ளைகளும் நிற்பார்கள். சாரத்தை மடித்துக் கட்டாமல் மேல்நோக்கி தூக்கி கட்டிக்கொண்டு எல்லோரையும் வரிசையாகப் பார்ப்பார். உயரம் அதிகமாகவும், பெரிய பையனாகவும் தெரிய அட்டென்ஷனில் உள்மூச்சு இழுத்துக் கொண்டே நிற்பார்கள். அதில் ஐந்து அல்லது ஆறு பேரைத் தேர்ந்தெடுப்பார். அவர்களின் முகத்தில் மகிழ்ச்சி மலர்ந்திருக்கும்.  தேர்ந்தெடுக்கப்படாத சில சிறுவர்கள் போய்விடுவார்கள். ஆனாலும் நான்கைந்து பேர் வீட்டுக்கு வெளித்திண்ணையில் உட்கார்ந்து இருப்பார்கள்.

    பஞ்சுமிட்டாய் இழுத்து முடித்ததும், உதிரி மாவுப்பொடியை இழுத்தவர்களுக்குக் கொடுத்து அனுப்புவார். அப்போது திண்ணையில் இருக்கும் சிறுவர்களைப் பார்த்து ‘இருந்துக்கடே’ என்று சொல்லிவிட்டு உள்ளேபோய் உதிரிப் பஞ்சுமிட்டாய் பொடிகளைக் கொஞ்சம் கொஞ்சமாக பேப்பரில் பொதிந்து வெளியே கொண்டு வந்து சிறுவர்களிடம் கொடுப்பார். அப்போது சிறுவர்களுக்கு சர்ச் தெருவில் இருக்கும் சிஎஸ்ஐ கோவில் இயேசுவை விட, நடுத்தெரு சுடலைமாடன் கோவில் சுடலைமாடனை விட, மோட்டார் பிறைத்தெரு சாஸ்தாவை விட உயரமாக பால்ராஜ் அண்ணன் தெரிவார்.

பள்ளிக்கூடம் இருக்கும் நாட்களில் நடுத்தெருப் பெண்களில் சிலர் பஞ்சுமிட்டாய் இழுக்கப் போவார்கள். ஜீவாவின் அம்மா ஜெயா இருக்கும்போது தினமும் பஞ்சுமிட்டாய் இழுக்கப் போவாள்.  அதனால் ஜீவாவுக்கு தினமும் உதிரி பஞ்சுமிட்டாய்ப் பொடி கிடைக்கும்.

பால்ராஜ் அண்ணன் சாயங்காலம் நாலரை அஞ்சு மணிக்குமேல் தள்ளுவண்டியில் பெட்ரோமாக்ஸ் லைட் வைத்துக் கட்டிக்கொண்டு பஞ்சுமிட்டாய் இருக்கும் கண்ணாடிக் குடுவையைத் தூக்கி வைப்பார். சின்ன சைஸ், பெரிய சைஸ் கிழித்து வைத்த தினத்தந்திப் பேப்பரை எடுத்து வண்டியில் வைத்து அதன்மேல் படிக்கல்லைத் தூக்கி வைப்பார். வண்டியின் கீழ்பக்கத்தில் மணியை மாற்றி அதன் கயிறை வண்டி தள்ளும் கைப்பிடியில் கட்டுவார். வண்டியில் சிறிய வெத்தலைப் பெட்டி டப்பாவை  வைப்பார். அதுதான் அவரது கல்லாப்பெட்டி. அதனருகே மிச்சமிருக்கும் பஞ்சுமிட்டாய் உதிரி மாவுப்பொடிகளை ஒரு கவரில் எடுத்து சுருட்டி வைப்பார். மறுபடி பேண்ட் சர்ட் போட்டு, டக்இன் பண்ணி காலரில் அழுக்கு படாதபடி கழுத்தில் கர்ச்சீப்பைச் சுற்றிக்கொண்டு வீட்டுக்கதவை பூட்டிவிட்டு, மெதுவாக வண்டியைத் தள்ளி சிஎஸ்ஐ சர்ச் முன் வந்து, திரும்பி சர்ச் தெரு வழியாக நடக்கத் தொடங்குவார். அப்போது மணி அடிக்க மாட்டார். சர்ச் தெருவில் உள்ள ஏதாவது சிறுவர்கள் பஞ்சுமிட்டாய் வாங்குவார்கள்

வண்டி அருந்ததியர் தெரு வழியாக கிருஷ்ணன் கோவில் பக்கமோ அல்லது குவாட்டர்ஸ் காலனி வழியாகவோ பயணிக்கும். இருட்டுவதற்கு முன்னால் கருக்கலிலே பெட்டர்மாஸ் லைட் கொளுத்துவார். காந்திநகர் தாண்டினாலே மணி அடித்துக்கொண்டு போவார்.

சில ஊர்களில் வண்டியைச் சுற்றியே சிறுவர்கள் வட்டமிட்டுக் கொண்டிருப்பார்கள். ஏதாவது சிறுவர்கள் பஞ்சுமிட்டாய் வாங்கினால் பஞ்சு மிட்டாய் வாங்க காசு இல்லாத சிறுவர்கள் பஞ்சுமிட்டாய் பார்த்தே நாக்கில் ஊறும் எச்சிலை அமிழ்த்தி, தொண்டைக்குக் கீழ் இறக்குவார்கள். இதையும் பால்ராஜ் அண்ணன் பார்த்துக் கொண்டிருப்பார். அவர்களுக்கு உதிரி பஞ்சுமிட்டாய் மாவுப்பொடிகளை கவரிலிருந்து அள்ளிக் கொஞ்சம் கையில் கொடுப்பார். அவ்வளவுதான் சிறுவர்களின் கால் தரையில் படாது.

கையில் இருக்கும் மாவை நக்கும்போது எச்சில் சுரந்துவிடும். அவருக்கு யாரும் நன்றி சொல்ல மாட்டார்கள். அவரும் அதை எதிர்பார்க்க மாட்டார். ‘எல்லாரும் நேரா வீட்லப் போய் படிங்க’ என்று சொல்லி அனுப்புவார். அந்த நேரம் சட்டை போடாமல்,  கிழிஞ்ச நிக்கரைப் போட்டுக்கொண்டு மூக்கை உறிஞ்சிக் கொண்டிருக்கும் சிறுவர்களுக்கும் பால்ராஜ் அண்ணன் சொந்தக்காரர் ஆகி விடுவார். அந்தத் தெருவில் இருந்து வெளியே வண்டி போனபின் தான் சிறுவர்களின் ஆட்டம் அடங்கும். ஒருவன் ‘மாமா, போயிட்டு வாங்க. டாட்டா’ என்று சொல்லுவான். இன்னொருத்தன் ‘தாத்தா, இனி என்னைக்கு வருவீங்க?’ என்று கேட்பான் . ‘நாளை கழிச்சு எங்க கோயில் கொடி ஏறுது. அப்போ வருவீயளா?’ என்று ஒரு சத்தம் கேட்கும். எல்லாத்துக்கும் சிரித்தபடியே ‘சரி சரி’ என்று சொல்லிவிட்டு அடுத்தத் தெருவுக்குக் கடந்து போவார்.     

அங்கும் மணி அடிக்கும் சத்தம் கேட்டால் அவ்வளவுதான், சிறுவர்களின் கூட்டம் கூடிவிடும். ‘அண்ணே, நா வண்டியத் தள்ளட்டுமா?’ என்று ஒருத்தன் கேட்பான். ‘மாமா நா மணி அடிக்கட்டுமா?’ என்று இன்னொரு சத்தம் கேட்கும். ‘பஞ்சு மிட்டாய்… பஞ்சு மிட்டாய்…’ எனச் சிறுவர்கள் வண்டியின் முன் கத்திக்கொண்டே போவார்கள். எல்லாத் தெருவைப் போல, ஊரைப் போல காசு இருப்பவர்கள் பஞ்சு மிட்டாய் வாங்கிக்கொண்டு வீட்டுக்குப் போவார்கள். மிட்டாய் வாங்க காசு இல்லாத சிறுவர்கள் பால்ராஜ் அண்ணனோடு நெருக்கமாக நிற்பார்கள்.

எல்லா ஊரிலும் பால்ராஜ் அண்ணனிடம் ஏதாவது ஒரு சிறுவன் ‘அண்ணே, இந்த எல்லா  பஞ்சுமுட்டாயும் எத்தர ருவா?’ என்று கேட்காமல் இருந்தது இல்லை. ‘அண்ணே, வளந்த பொறவு நானும் ஒங்ககூட பஞ்சுமிட்டாய் விக்க வரட்டுமா? என்று கேட்ட சிறுவர்களும் உண்டு. தெருக்களின் குறுக்கே ஒரு சின்ன ஓடை வந்தாலும், ‘அண்ணே, ஓட.. ஓட..’ என்று கத்தும் சிறுவர்களும் உண்டு. யாராவது தொடர்ந்து வந்து கொண்டிருந்தால் ‘ஏ மக்கா, என்னடே படிக்க? வீட்ல யார் யாரெல்லாம் இருக்கா? நல்லாப் படிக்கியா?’ என்று பால்ராஜ் அண்ணன் கேட்பார்.

 பெரும்பாலும் அம்மாவோ அப்பாவோ இல்லாத சிறுவர்கள்தான் அவரைச் சுற்றி வட்டம் அடிப்பது. கொஞ்ச வருஷம் முன்னாடி பால்ராஜ் அண்ணன் வண்டிக்கு முன்னாடி கத்திக்கொண்டு போன சிறுவர்கள் வளர்ந்தபோதும் பால்ராஜ் அண்ணன் தெருவில் எதிரே வந்தால் சிரித்தபடியே வருவார்கள். ‘ஏ நல்லா இருக்கியா? நல்லா படிக்கியா?’ என்றுதான் அவர்களிடம் பால்ராஜ் அண்ணன் கேட்பார்.

 யாரிடமும் ரொம்ப நேரம் நின்று வெட்டிக்கதை விடமாட்டார். திரும்பி பத்து மணிக்கெல்லாம் காந்தி நகர் வந்துவிடுவார். வண்டி நடுத்தெருவில் அடிபம்பு தாண்டி இறங்கும்போது மணி தானாகவே அடிக்கும். அப்போது ஜீவா  வீட்டுக்கு வெளியே வந்து பஞ்சுமிட்டாய் வாங்க காசு நீட்டுவான். அவனைப் பார்த்ததும் வண்டி நின்றுவிடும். ‘ஏ மக்கா, இன்னும் ஒறங்கலையா? என்று கேட்டுக்கொண்டே ஜீவா கொடுக்கும் காசைவிட அதிகமாக பஞ்சுமிட்டாய் பொதிஞ்சி கொடுப்பார். சில நேரம் கொடுத்தது போக, மீதி இருக்கும் பஞ்சுமிட்டாய் மாவுப் பொடிகளையும் கொடுப்பார். சீக்கிரம் உறங்கிய நாளைத்தவிர மற்ற நாட்களில் பஞ்சுமிட்டாய் வாங்கித் தின்றுவிட்டுதான் ஜீவா உறங்குவான்.

லீவு நாட்களில் பஞ்சுமிட்டாய் இழுக்க ஜீவாவும் போவான். ஆனால் அவன் ரொம்ப சின்னப் பையன் என்பதால், திண்ணையில் உட்கார்ந்து உள்ளே வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பான். கடைசியில் பஞ்சுமிட்டாய் மாவுப்பொடி கிடைக்கும். ஆனாலும் ஒரு நாளாவது பஞ்சுமிட்டாய் இழுத்துப் பார்க்க வேண்டும் என்கிற ஆசை ஜீவாவுக்கு இருந்து கொண்டே இருந்தது.

 தினந்தோறும் அப்பாவிடம் காசு வாங்கிவிட்டு அப்பா உறங்கினாலும் பால்ராஜ் அண்ணன் வண்டி வரும்வரை உறங்காமல் படுத்துக்கொண்டே இருப்பான். தொடர்ந்து வந்து கொண்டிருந்த பால்ராஜ் அண்ணன் திடீரென வரவில்லை. யாரிடம் கேட்பது என்றெல்லாம் ஜீவாவுக்குத் தெரியாது. ஒரு வாரம் ஆனபிறகும் பால்ராஜ் அண்ணன் வரவில்லை. இரண்டு மாதம் கழித்து தெருவில் இருந்த பெண்கள், ‘நம்ம பஞ்சுமிட்டாய் பால்ராஜுக்குச் சோமுல்லையாம். அதனாலதான் ஆள் வரல’ என்று பேசிக் கொண்டிருந்தார்கள். ஆனாலும் தினசரி பால்ராஜ் அண்ணன் வந்து விடுவார் என ஜீவா எதிர்பார்த்துக் காத்திருப்பான்.

அஞ்சாறு மாசம் கழிச்சி அடி பம்பில் தண்ணீர் அடித்துக் கொண்டிருக்கும்போது தண்ணீ பிடிக்க வந்த புனிதா அக்காவிடம், ‘பஞ்சுமிட்டாய் விப்பாவல, அந்த மாமா ஏன் இன்னும் வரல? என்று  கேட்டான்.

 ‘அந்த அண்ணனுக்கு மூளையில கட்டியாம். அதனால இனி வர மாட்டாராம். ஆஸ்பத்திரில சேர்த்திருக்காவளாம்’ என்று சொன்னாள்.

அடுத்த அரை வாளித் தண்ணீரைத் தூக்கிக்கொண்டு வீட்டுக்கு வெளியே வைத்துவிட்டு, அப்பாவின் கயிற்றுக் கட்டிலில் குப்புற விழுந்தான். கண்ணில் இருந்து கண்ணீர் வந்து கொண்டிருந்தது. படுத்துக்கொண்டே மூக்கை உறிஞ்சும்போது தலையணையில் இருந்த அப்பாவின் வியர்வை வாசமும் மூக்குக்குள் போனது. அப்படியே உறங்கிப் போனான்.

அப்பா வந்து எழுப்பி சோறு கொடுத்துவிட்டு மறுபடி ஜீவாவை உறங்க வைத்தார். ஆனாலும் பால்ராஜ் அண்ணன் வந்துவிடுவார் என்று ஜீவா நம்பிக்கொண்டு காத்திருந்தான்.

சில நாட்கள் உறங்காமல் நள்ளிரவு  தாண்டி அவரைப் பார்க்க முழித்திருப்பது உண்டு. திடீரென 12 மணிக்கு மேல் மணி அடிக்கிற சத்தம் கேட்டு, கதவைத் திறந்து பார்ப்பான். தெருவில் ஆள் நடமாட்டம் இருக்காது. இருட்டாக இருக்கும். அப்படி இன்னொரு முறை பார்க்கும்போது சத்தியதாஸ் பார்த்துவிட்டார். அது வெள்ளிக்கிழமை சுடலைமாடன் கோவிலிலிருந்து சாமி சாஸ்தா கோவிலுக்குப் போகும்போது சங்கிலி தரையில் கிடந்து இழுப்பது போல சத்தம் கேட்கும். அதைத்தான் ஜீவா பால்ராஜ் அண்ணன் வண்டி மணி சத்தம் என்று  நினைத்துக் கொண்டான்.

சாமிப் போக்குவரத்து உண்டு என்று காந்தி நகரில் சொல்வார்கள். ஆனால் சாமிப் போக்குவரத்தை யாரும் பார்த்தது கிடையாது. ஜீவாவை வீட்டுக்குள்ளே கூட்டிட்டுப் போய் ‘மக்கா, சாமி போயிட்டு இருக்க சத்தம்தான் கேட்டு இருக்கு. அப்ப நாம வெளியப் போவக்கூடாது. சாமி அடிச்சிடும்’ என்று அப்பா சொன்னார். அதன்பிறகு ஜீவா நள்ளிரவில் பயந்து கதவைத் திறப்பது கிடையாது. ராத்திரி ஒண்ணுக்கோ ரெண்டுக்கோ வந்தால் அப்பாவை எழுப்புவான். 

ஒரு வருஷம் தாண்டியது. தினமும் பள்ளிக்கூடம் போய்விட்டு வந்ததும், பால்ராஜ் அண்ணன் முட்டாய் வீட்டுக்குப் போய் பார்ப்பான். கதவு பூட்டி இருக்கும். வண்டியும் அங்கேயே நின்றிருக்கும். பஞ்சுமிட்டாய் திங்க வேண்டும் என்கிற ஆசை கூடிக்கொண்டே இருந்தது . வெளிக்கடைகளில் பஞ்சுமிட்டாய் கிடைக்காது.  தெருவில் பகலில் கொண்டு வரும் ரோஸ் கலர் பஞ்சுமிட்டாய் மீது ஜீவாவுக்கு ஈர்ப்பு இல்லை.  இனி பால்ராஜ் அண்ணன் வரமாட்டார் என்று ஜீவாவுக்குக் கொஞ்சம் கொஞ்சமாக புரிந்து விட்டது.

தினமும் பத்து மணிக்குப் பிறகு தூங்கத் தொடங்கினான். அன்றும் அதுபோலத்தான் படுத்து இருந்தான். கொஞ்ச நேரத்தில் அடிபம்பு பக்கத்தில் பால்ராஜ் அண்ணன் வண்டி மணி சத்தம் கேட்டது . பால்ராஜ் அண்ணன்தான் பஞ்சுமிட்டாய் கொண்டு வருகிறார் என்று ஜீவாவுக்குப் புரிந்துவிட்டது.

வேகம் வேகமாக எழும்பி, ‘எப்பா எப்பா’ என்று அப்பாவைப் பிடித்து இழுத்தான். அப்பாவும் உறக்கக் கலக்கத்தில் கட்டில் காலில் கழத்திப் போட்ட சட்டைப் பாக்கெட்டில் இருந்து இரண்டு ரூபாயை எடுத்துக் கொடுத்தார். வண்டி வீட்டுக்கிட்ட வருவது புரிந்துவிட்டது. ‘பஞ்சுமிட்டாய், நில்லுங்க நில்லுங்க’ என்று கத்திக்கொண்டே கதவைத் திறந்து ஓடினான். அப்படியே வண்டி முன்னால் அதிர்ச்சியில் நின்றான். அவன் கையிலிருந்த இரண்டு ரூபாய் நாணயம் நழுவி உருண்டு சாக்கடைக்குள் விழுந்தது. பால்ராஜ் அண்ணன் அதைப் பார்த்துக் கொண்டு நின்றார். ஜீவா பால்ராஜ் அண்ணன் முகத்தைப் பார்த்தான்.

அவர் முகம் பஞ்சடைந்து, கண்கள் குழிய சாம்பல்நிறச் சாரமும், கசங்கிய பழுப்பேறிய சட்டையுமாக  பார்க்கவே பரிதாபமாக இருந்தார்.   ‘லே மக்கா, எப்படிப் படிக்க?’ என்று கேட்கும்  அவர் பேச்சு நின்று விட்டிருந்தது. பக்கவாதம் வந்த அறிகுறி அவர் உடலில் தெரிந்தது.  மிகுந்த சிரமத்தோடு அவர் சூடான ஒரு கரண்டி நிலக்கடலையை பேப்பரில் வைத்துப் பொதிந்துதர, ஜீவா அதை வாங்கிக்கொண்டு விலகியதும் வண்டி நகர்ந்தது. பஞ்சுமிட்டாய் குடுவை இருந்த இடத்தில் பெரிய சில்வர் தட்டில் அவிச்ச நிலக்கடலை இருந்தது. அதன் சூட்டின் ஆவி பறப்பது பெட்டர்மாஸ் லைட் வெளிச்சத்தில் தெரிந்தது. நகர்ந்து செல்லும் வண்டியின் பின்னால், தாரை தாரையாக கண்களில் நீர்வழிய விக்கித்து நின்றிருந்தான் ஜீவா. 

***

ராம் தங்கம், இவர் நாகர்கோயிலில் வசிக்கிறார். சமீபத்தில் வெளியாகிய இவரது சிறுகதைத் தொகுப்பு ‘திருக்கார்த்தியல்’ நல்ல கவனம் பெற்றது, அது தவிர இவர் ‘பொன்னீலன் 80’ எனும் தொகைநூலின் தொகுப்பாசிரியரும் ஆவார். தொடர்புக்கு :- [email protected]

RELATED ARTICLES

22 COMMENTS

    • வட்டார வழக்கையும் அவர்களின் வாழ்வியலையும் தாய்மனதையும் வெளிச்சமிட்டுக் காண்பித்த நடையும் வண்டியின் ஓசையும் கதையை அழகாய் நகர்த்திச் செல்கிறது. மறைத்துத் தின்ன… உன் அம்மே கூப்பிடுதா என்ற சொல்லில் ஜீவா விழுந்தடித்து ஓடி கண்ணீர் விடும்போது வாசிப்பாளரையும் அழச்செய்து விடுகிறார். வாழ்விப்பவனுக்குத்தான் வாழ்வில் சோதனை வரும்போல. பால்ராஜ் அண்ணனுக்கு வாதநோய் வந்த நிலையில் ஜீவாவோடு சேர்ந்து எங்களின் கண்ணீர்த் துளிகளும்……. அதுதான் எங்கள் பரிசு.
      அருமையாய் கோவையாய்க் கொண்டுசெல்லும் நடை பாராட்டிற்குரியது. தொடர்ந்து எழுதுங்கள். வாசிக்கக் காத்திருக்கிறோம்.??

  1. கதையின் நேர்தியான நகர்த்தல் ராம்தங்கத்திற்கு கைவந்தகலை…சொல்ல வந்த செய்திக்கு பின்னால் வருகிற கதாபாத்திர அமைப்பு ,இருக்கும் பகுதியின் நிலைமை என ஒரு வாழ்வு நகர்வதை சிறப்பாக அமைத்திருக்கிறார்.

    அருமை !

  2. விளிம்பு நிலை மனிதர்காளின் வாழ்வியலை எழுதுவஹில் தொடர்ந்து வெற்றி பெறுகிறார் ராம் தங்கம். கதையின் சில இடங்களில் கண்களில் கண்ணீர் கட்டிவிட்டது… வாழ்த்துகள் ராம் தொடர்ந்து எழுதுங்கள்.

  3. விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்வியலை எழுதுவதில் தொடர்ந்து வெற்றி பெறுகிறார் ராம் தங்கம். கதையின் சில இடங்களில் கண்களில் கண்ணீர் கட்டிவிட்டது… வாழ்த்துகள் ராம் தொடர்ந்து எழுதுங்கள்.

  4. //காணாமல் போன அறிவிப்பு தினம்தோறும் வரும்போது ஜீவாவுக்கு ஒருவித பயம் தொற்றிக் கொள்ளும்.// 🙂
    தொடர்க.. நல்வாழ்த்துகள் 🙂

  5. கதையின் நேர்தியான நகர்த்தல் ராம்தங்கத்திற்கு கைவந்தகலை…சொல்ல வந்த செய்திக்கு பின்னால் வருகிற கதாபாத்திர அமைப்பு ,இருக்கும் பகுதியின் நிலைமை என ஒரு வாழ்வு நகர்வதை சிறப்பாக அமைத்திருக்கிறார்.

    அருமை !

  6. ஜீவா போன்று என் பள்ளியில் ஒரு பத்தாம் வகுப்பு குழந்தை படிக்கிறான். இதை படித்ததும் அவன் நினைவு வந்துவிட்டது. இந்த கொரோனா காலத்தில் என்ன செய்கிறானோ தெரியவில்லை

  7. கனத்த மனதுடன் கதையை வாசித்து முடித்தேன்.மூணாரில் கீரை விற்று…. திடீரென ஒருநாள் மரணித்த… பெயர் தெரியாத அண்ணாச்சியை பால்ராஜ் அண்ணாச்சி நினைவில் தந்தார்.இழந்தோரை நினைத்து விசும்பு கையில்…நாம் அனைவருமே ஜீவா தான்! வாழ்த்துக்கள் ராம் தங்கம் சார்!

  8. மிக சிறப்பாக விளிம்பு நிலை மக்களின் வலிகளை ராம், தனது கதாபாத்திரம் மூலம் ஆழமாக பேசுகிறார். ஜீவாவின் கண்ணீர் , மறைந்து போன பல பஞ்சுமுட்டாய்காரகளை நினைவு படுத்துகிறது..

    திருக்கார்த்தியல் தொடர்ந்து இது போன்ற ஆழமான கதைகள் தரும் ராமிற்கு வாழ்த்துக்கள்.

  9. Your comment is awaiting moderation

    மிக சிறப்பாக விளிம்பு நிலை மக்களின் வலிகளை ராம், தனது கதாபாத்திரம் மூலம் ஆழமாக பேசுகிறார். ஜீவாவின் கண்ணீர் , மறைந்து போன பல பஞ்சுமுட்டாய்காரர்களை நினைவு படுத்துகிறது..

    இவர் மொழியை கையாளும் விதம் சிறப்பு.

    திருக்கார்த்தியல் தொடர்ந்து இது போன்ற ஆழமான கதைகள் தரும் ராமிற்கு வாழ்த்துக்கள்.

  10. வாழ்க்கை எளிதானது அல்ல. அதுவும் எளிய மனிதர்கள் என்று சொல்லப்படுகிறவர்கள் வாழ்க்கை அத்தனை எளிதானது அல்ல. இழப்பிற்கு பழகிய அவர்கள் வாழ்வில் சின்னச் சின்ன சந்தோஷங்களும் எளிய என்ற சொல்லை விட பெரிய கொண்டாட்டத்தை கொடுக்கும் பலம் வாய்ந்தது என்பதையும், தாயின் இழப்பிற்கு பழகிக்கொண்ட இருவரின் மனமும், பால்ராஜ் அவரின் ஓட்டமும் கதைக்குள் உயிர்ப்பாய் இருந்தது.

    இறுதியாய் கடலை வியாபாரம் என்று வந்து நிற்கிற போது தான் வாசிக்கும் போது நமக்கும் சோகம் தொற்றிக்கொள்கிறது.

    சத்தங்களே நம்மை ஆள்கிறதோ என்று யோசிக்க வைத்திருக்கிறது கதை.

    வாழ்த்துக்கள்

  11. எளிய மனிதர்களின் வாழ்வின் நிகழ்வுகள் கண்முன்னால் காட்
    காட்சிபடுத்தியிருக்கிறார் நுண்ணிய அசைவுகளையும் அழகாய் தொட்டிருக்கிறார் ஏனோ ஓர் வலியை வாழ்க்கையில் கடந்துகொண்டேயிருக்கும் எளிய மனிதர்களின் வாழ்க்கையை படம் பிடித்த அழகாய் கதையும்..

  12. என்ன கிடைத்தாலும் இது என்ன பெரிய பிரமாதம் என்று அலட்சியம் காட்டும் குழந்தைக்கும் உதிர்ந்து கிடக்கும் இனிப்புப் பொடிகளை அதிசயமாகப் பெற்றுக் கொள்ளும் குழந்தைக்கும் இடையில் பயணிக்கும் அழகான கதை. சிறப்பு தோழர்

  13. இளம் ஏழை மனதின் சோகவலியை உன்னைப் போல் எவர் சொல்லக் கூடும் தம்பி..

  14. கதைச் சூழலை வர்ணிக்கும் முறை பஞ்சு மிட்டாய்க்கு பாகு காய்ச்சும் பதத்தில் கதைக் களத்திற்கு இட்டுச்செல்கிறது. சொல்லப்படாமல் விடும் மானசீக பந்தத்தில் மனசை லயிக்கச் செய்யும் பாத்திரங்கள் அழகு. ஜெயாவுக்கும் பால்ராஜுக்குமான அன்பு, ஜீவா பால்ராஜை ஏன் அவ்வளவு எதிர்பார்க்கிறான் என்பதன் வழியாக மனதைச் சேர்கிறது. ஜீவா அப்பாவின் கண்ணியமான நடத்தைகள், அவரை விட்டுக்கொடுக்கவும் நம்மை விடவில்லை. அழகான சரம் போல உணர்வுகளைத் தொடுத்துவந்து வாசகரிடம் கொடுத்து விலகுகிறார் நண்பன் ராம்தங்கம். சூடுவதா பூசைக்கா என்பது அந்தந்த மனம் சார்ந்தது.

    பலவீனமாகச் சொல்வதானால். முதலில் கதைக்கள் விவரனைகள் சிறுகதைக்கு சற்று அதிகம். பன்னிக்கறி கொண்டு சொல்ல முற்படும் அரசியல் இந்தக் கதைச் சூழலில் துருத்தி நிற்கிறது. பின் டி.வி. பார்க்கும் ஜீவாவை அம்மா அழைக்கிறார் என்றதும் அவன் வீடுவரை வந்து ஏமாறுகிறான் என்பது மிகை. இரண்டு மூன்று அடிகளில் அவனை உணரச் செய்திருக்கலாம் ப்ரிலியண்ட் பாய் அல்லவா அவன். தவிர இந்தக் குறிப்பிட்ட இடத்தில் நான் சுய பச்சாதாபத்திற்கு ஆளானேன். எனது பால்யங்கள் இந்த நிகழ்வினாலும் கனத்திருக்கிறது.

    ராம் தங்கத்திற்கு. அன்பும் பாராட்டுகளும்.

  15. அருமை. வட்டார வாழ்வியல் சார்ந்த நிறைய சம்பவங்களையும் மனதைவிட்டு அகலாத பல பாத்திரப் படைப்புகளையும் தாங்கி நிற்கும் கதை. பாராட்டுகளும் வாழ்த்துகளும் – ந.அன்பரசு, சென்னை.

  16. kadhai miga arumai….antha kulathangarai katchigalai…avlo vivaramaga….sollamal irunthirukalam….kadhai arambathil…konjam vivaripugal adhigam….adhai mattum thavirthirukalam

  17. மனித உறவு மிக மெல்லிசாய் பேசிப் போகும் கதை. உறவின் இறுக்கம் ஒன்றுக்கும் மேற்பட்ட காரணிகளால் கெட்டிப் படுகிற போது வலுவாகிறது. தாயில்லா குழந்தையின் வெறுமை கவிழும் அந்திப் பொழுதுகள், விரட்டப்பட்டு பின் அடைக்கப்பட்ட கதவுகளால் ஒளி மறிக்கப்படுகின்றன. பஞ்சுமிட்டாயிலிருந்து கடலை வியாபாரத்துக்கு மாறுவது நெகிழ்வான குறியீடு. நல்ல கதை ராம்.
    என் மனமார்ந்த வாழ்த்துகள்.

  18. இந்தக் கதையின் உரைநடை கொஞ்சம் கூட பிசிறே இல்லாமல் தன் போக்கில் நகர்கிறது. ஒரு இசைக்கோர்வை போல அது எங்கெங்கேயோ போகிறது. அதை விட்டிருக்கலாம் இதை சேர்த்திருக்கலாம் என்ற பேச்சுக்கே இடமில்லை. எடிட்டிங் நுழைய முடியாத கதைகளில் ஒன்றாக இந்தக் கதை அமைந்துவிட்டது.

    சிறுவர்களின் உலகமும் பெரியவர்களின் உலகமும் தர்க்கபூர்வமான உறவில்லாமல் தனித்தனியாக இயங்குவதையே நாம் மனித வாழ்வியலின் யதார்த்தம் என்று அழைக்கிறோம்.
    குழிமுறியில் பெரிதாக்க டப்பாவில் நீர் ஊற்றுவது, மூத்திர சந்து, கள்ளர் குளத்தைச் சுற்றி வெளிக்கிருப்பது, எலிகள், எலிப் பொறிக்குள் சிக்கிய எலிகளைக் கொல்ல முடியாமல் போவது என்று எல்லாமே இவனது பால்யத்தோடு கலந்தது தான். பஞ்சு மிட்டாய் பால்ராஜ் பால்யத்தில் அடுத்த அத்தியாயம். இனிப்பும் வண்ணமும் கண்கூசும் விளக்கொளியும் காணாமல் போய் வேர்க்கடலை தன் தட்டாகிறது. பஞ்சு மிட்டாய் எப்படி செய்யப்படுகிறது என்று ஏன் இவ்வளவு விவரமாக எழுத வேண்டும்? பால்ராஜுக்கு ஏன் கேன்சர் வந்தது? இது ஏதோ சினிமாக்களில் வரும் கேன்சர் இல்லை. எல்லாவற்றிற்கிடையிலும் தொடர்பு இருப்பது நமக்குத் தெரியாது. இல்லை என்றும் நமக்குத் தெரியாது. ஏன் அந்தச் சிறுவன் அம்மாவை இழந்து அனாதை ஆனான்? பால்ராஜ் ஏன் இப்படி ஆனான். என்ன துயரமான ஊர் இது? இந்தப் பீடத்தில் சமூகத்தில் இந்தச் சிறுவன் என்ன ஆவான்? நான் முதலில் குறிப்பிட்ட அந்த இயல்பு எனும் யதார்த்தம் எப்படியும் உருண்டோடி விடும்.
    இந்தக் கதையை எழுதியவரின் கைகளைப் பற்றிக் கொள்கிறேன். எனது தம்பி என் நெஞ்சாரத் தழுவிக் கொள்கிறேன். ❤️

  19. கதை நன்றாக இருக்கிறது. மனுஷ வாழ்க்கைக்குத்தான் எத்தனை முகங்கள். கணக்கே இல்லாமல்..

  20. எளிய மனிதர்களின் நேர்மை, வாழ் நிலை துயரங்கள், துயரங்களை எதிர்கொள்ளும் புன்னகை சிறுவன். கதை முடிந்தும் தொடரும் துயரம் கண்ணீராய்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular