Thursday, March 28, 2024
Homeslider1. தேடெய்தல்

1. தேடெய்தல்

  • முன்பொரு காலத்தில் ஒரு மந்திரவாதி – 01
  • கதை : பாபாகா ; ஓவியம் : கணபதி சுப்ரமணியம்

முன்பொரு காலத்தில், ஒரு மந்திரவாதி களைப்பாக உள்ளது என்று ஓர் இரவு, தூண் கொண்ட  திண்ணையில் தன் மூட்டையை தலைக்கு வைத்துக் கொண்டு உறங்க ஆரம்பித்தான்.

அப்பொழுது தூக்கத்தின் கடைசி விழுதலில் அவனுக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டது.

இத்தனை வீடுகள் இருக்கும்போது, ஏன் இந்த வீட்டை தேர்ந்தெடுத்தோம் என்று யோசிக்கையில்,

அந்த கணமே அவன் மூட்டையினுள் அவன் வைத்திருந்த வேறொரு மந்திரவாதியின் மண்டையோடு பேசத் தொடங்கியது.

‘இந்த வீட்டில் தான் நீ தேடும் அனைத்தும் உனக்கு கிட்டப் போகிறது’ என்று அவனை சுவாரஸ்யப்படுத்தியது.

அப்போதும் தூக்கம் கலைவதில் சம்மதம் இல்லாத மந்திரவாதி தலையைக் கூட நகர்த்தாமலேயே, ‘நான் என்ன தேடுகிறேன்? அது ஏன் இங்கு மட்டுமே தான் கிடைக்கும்?’ என்று முனகிக் கொண்டே கேட்டான்.

அப்போது அந்த வீட்டின் ஜன்னல் ஒன்று திறந்து கொண்டது..

Created with GIMP

உள்ளிருந்து ஒரு அம்மி உருளும் சத்தம் கேட்கத் தொடங்கியது.

நறுமணம் மிகுந்த ஒரு மூலிகையின் வாசனை அந்த சாளரத்தின் வழியே வீசியது.

தன் பதினாறு வயதில் அவன் காடொன்றில் அலைந்து கொண்டிருந்த போது, அதே வாசனை அடித்து அதன் மூலத்தை தேடிச் செல்கையில், விதவிதமான ஆயுதங்களின் பல அமைப்புகளாக தன் முட்களைக் கொண்ட செடிகள் நிறைந்த ஒரு சின்ன வனத்தை அடைந்தான்.

அந்தச் செடிகளின் நடுவில் பழிசண்டை.

ஒவ்வொரு காற்றடிப்பிற்கும் தங்களுக்குள்ளேயே போரென ஆடி, ஒருவரை ஒருவர் வெட்டி வீழ்த்திக் கொண்டிருந்தன அந்தச் செடிகளும் அவற்றின் இலைகளும்.

தூங்கிக் கொண்டிருந்த மந்திரவாதியை ஒரு நாய் தட்டி எழுப்பியது.

அழகாக இருந்த அந்த நாயை மந்திரவாதி உடனே கொஞ்சத் தொடங்கினான். பின்னர் அந்தத் திண்ணையிலேயே அவர்கள் இருவரும் படுத்துத் தூங்கினர்.

காலையில் எழுந்து செல்வதற்கு முன் அந்த மண்டையோட்டை பார்வையிட தனது மூட்டையிலிருந்து எடுத்தான்.

குடுகுடுவென்று அந்த வீட்டிலிருந்து பல கைகால் எலும்புகள் வந்தன. அவை வெளியே ஓடிவந்து அந்த மண்டையோட்டை அவனிடமிருந்து பிடுங்கிச் சென்றன.

Created with GIMP

வீட்டிற்குள் செல்லும்போது அந்த மண்டையோடு உல்லாசமாக சிரித்தது. இனி தன்னை வெல்ல யாருமில்லை என்று கொக்கரித்துக் கொண்டே வீட்டிற்குள் சென்றது.

அந்த வீட்டின் கதவுகளும் ஜன்னல்களும் தாழ் சத்தத்துடன் சாத்திக் கொண்டன.

தன் நாயை அழைத்துக்கொண்டு அந்த இடத்தை விட்டு மந்திரவாதி வேகமாக நீங்கினான்.

Description: scratch003_01.jpg
***

கருத்துகளுக்கு :

கதை : பாபாகா – [email protected]

ஓவியம் : கணபதி சுப்ரமணியம் – [email protected]

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular