Saturday, April 20, 2024
Homesliderதட்டப்பாறை - நாவல் பகுதி

தட்டப்பாறை – நாவல் பகுதி

(மோபின் திருவிழா காட்சி)

புதானின்னு (Abu tani) ஆதிகாலத்துல ஒரு வேட்டையாடி சமூகம் இந்த நிலப்பரப்புல இருந்தது. அபுன்னா தந்தைன்னும் தனின்னா மனிதன்னும் அர்த்தமாம். மனித இனத்தின் தந்தை abu tani. இதுல kani தான் tani ஆயிருச்சுன்னு நினைக்கிறேன். அதை அப்புறம் பாக்கலாம். இந்த அபுதனி கூட்டத்தச் சேர்ந்த வேட்டையாடி ஒருத்தனும் அவனோட கிபுங் நாயும் ஒரு மானைத் தேடி ஒடுறப்போ தகர்-தஜி கூட்டத்தார் கிட்ட போய் மாட்டிக்கிட்டான்.

உரால் மலையைச் சேர்ந்த ருஷியனைக் கொஞ்சம் சுரண்டினால் அவனுக்கு உள்ளே ஒரு தாதன் வெளிப்படுவான்னு ஒரு பழமொழி இருக்கு. இந்த தாதர் தான் தகர். அவனோட இன்னொரு கூட்டமான பாமிர் மலைகளில் வாழ்ந்த இனக்குழு தான் தஜி. தகர்-தஜி கூட்டத்துக்கு இடையே வேற ஒரு இனக்குழு ஆள் உள்ளே வந்ததை சம்மதிக்காம அபுதனியை சிறைபிடிச்சி வச்சிருப்பாங்க. அங்க தங்கி இருந்தவன், தகர்-தஜி கூட்டத்தார் விவசாயம் செய்றதை பார்ப்பான்.

அவங்களோட சேர்ந்து அவனும் விவசாயம் கத்துப்பான். ஒருநாள் அவனை விடுதலை செய்றப்போ அவனுக்கு அரிசி, தினை, மக்காச் சோள விதை கொடுப்பாங்க. அதை எடுத்திட்டு போய் தன்னோட கூட்டத்தார்கிட்ட காமிக்கிறதா “அபுதனியும் டிகோ அனியும்” ன்னு ஒரு மரபுக்கதை இந்த மண்ணுல இருக்கு.

ஐந்து தானியங்கள் என்கிற சீன புராணக் கதைகளின் படி விவசாயத்தை உலகிற்கு வெளிப்படுத்திய வேட்டையாடி அரசன் ஷென்னோங்கிற்கு கடவுள் ஐந்து தானியங்கள் வழங்குவார்.

ரெண்டு கதையும் கேட்டா ஏதோ ஒரு மேட்சிங் இருக்கிறதா தோனும். ஷென்னோங் தான் தேயிலையை கண்டுபிடிச்சவர்ன்னு ஆங்கில ஏடு கூறுது.

இதே நேப்பாள்ல பஹுன் (Bahun or Khas Brahmin) ன்னு ஒரு விவசாயக்குடி இருக்கு. அவனுக்கு மலை பிராமணன்னு பேரு. இந்த பஹுன் பத்தி அதிகம் தேடுனா விவசாயம் செய்த கேரள மலை பிராமணர்களான குறிசியர் (Kurichiyar) வரை போய்சேரும்.

குறிச்சியர் (குறும்பாடு) தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஆளுங்க. அதாவது ஜாதின்னு எல்லாம் ஒன்னும் கிடையாது. எல்லாரும் மலையில் விவசாயம் செஞ்ச காணிக்காரன் தான். முத்தி கொடுத்து மலைகளை திருத்தி வேளாண் தொழில் செஞ்சவன். பெரிய அண்ணன் (பெரிய மலையாளி), நடு அண்ணன் (கொல்லி மலையாளி), சின்ன அண்ணன் (பச்சை மலையாளி) ன்னு வாழ்ந்த கூட்டம்தான் திருச்சி மலையாளிங்கிற இனக்குழு. சரி வா விருந்துக்குப் போவோம்” என்று மனோவை அழைத்துக் கொண்டு அருணாச்சல பிரதேசத்தின் இத்தா நகரின் (Ittanagar) திக்ரோங் நதியோரம் வந்து சேர்ந்தார் ராகுல்.

“என்ன விசேஷம். ஊரே கூடி இருக்கு”

“இதுக்கு பேரு மோபின் திருவிழா. அதான் ஊரே விழாக்கோலம் பூண்டிருக்கு. அஞ்சு நாள் நடக்கும் இந்த அறுவடைக் கால உழவர்களின் கொண்டாட்டம்”

“மொபின் திருவிழான்னா”

“மொபின் ஆனே (Mopin Ane-goddess of forest) ங்கிற மலைத்தாய் செல்வத்தையும், வளத்தையும் தருவதாகவும், தீய சக்திகளை விரட்டி அமைதியும், அருளும், வளமும் தரும்னு நம்பும் பழங்குடி விழா. வா உள்ளே போய் பாப்போம்” என்று கூட்டத்திற்கும் நுழைந்தனர் இருவரும்.

புற்களால் ஆன தலைக்கிரீடம் செய்து விதவிதமான பச்சை நிற மாலைகள் அணிந்து அபுதானி பழங்குடிகள் அரிசியைப் பொடியாக்கி ஒருவர் மீது ஒருவர் பூசி விளையாடிக் கொண்டிருந்தனர். கருந்துளசி, ரோஜா, செம்பருத்தி, நந்தொட்டி, வாடாமல்லி, பச்சிலைகளைக் அழகாக கோர்த்து மாலையாக்கி மலைத்தாய்க்கு அணிவித்திருந்தனர். பரிசுத்தமான குங்கிலிய பிசினின் மணமே அப்பகுதிக்கு ஒரு விதமான தெய்வீகத்தன்மையைக் கொண்டு வந்திருந்தது.

அரிசி ஒரு பாத்திரத்தில், ஏழு கரித்துண்டு, ஏழு வெள்ளாம் பீர்க்கல், ஏழு ஈச்ச விதை, ஏழு மூங்கில் விதை, வெற்றிலையும், மிளகும் கொண்டு படையல் செய்யப்பட்டிருந்தது அந்த ஊர் மலையம்மன் முன்பு. ஊர்த்தலைவர் மூட்டுக்காணி தலைமையில் தங்கள் பாராம்பரிய உடையணிந்து போப்பிர் என்னும் நடனமாடி சடங்குப் பாடல்கள் பாடும் மக்களை ஆர்வமுடன் பார்த்தான் மனோ.

ஏறக்குறைய பொங்கலின் சாயலில் இருந்தது திருவிழா.

***

(ஒரு சந்திப்பின் போது…)

ன்று இரவு அவர்களுக்காகப் பிரத்யேகமாக ஒட்டன் துள்ளல் நடனம் ஆட திய்யன் மற்றும் புல்லையர்கள் சிலரை எடக்கல் சர்ச் ஆட்கள் மூலமாக ஏற்பாடு செய்திருந்தான் வர்கிஸ்.

ஏழைகளின் கதகளி என்று அழைக்கப்படும் ஒட்டன் துள்ளல் அல்லது பறையன் துள்ளல் பார்த்துக் கொண்டிருக்கும் போது “ஏன் கதகளி ஆடும்போது முகத்துல பச்சை நிறம் பூசுறாங்க தெரியுமா” என்று கேட்டுவிட்டு வர்கிஸ் கூறிய பதில் சற்று அதிர்ச்சி கலந்த ஆச்சர்யத்தை கொடுத்தது.

கொழும்பு இல்ல அது.. கொழ அம்ப, கொழம்பன்னு தான் சொல்லுவாங்க. கொழ அம்பன்னா பச்சை அம்மான்னு அர்த்தம், திருச்சி பச்சைமலைல தான் மலையாளி பழங்குடி அதிகம் இருக்கிற இடம். அங்க இருந்து நேர்கோடு இழுத்தா மத்தியப்பிரதேசப் பச்சைமலை வந்திரும்.

“பச்சமாமா” ன்னு தேடுனா அமேரிக்க இன்கா கதை வந்திரும். மாமான்னா அரபியில அம்மான்னு அர்த்தம். அரபியில பச்சைக்கு அஹலர் ன்னு பேரு. அஹீர் வேடர் குடி இங்க இருந்து போனது தான். பச்சைக்குன்னு நிறைய கதை இருக்கு. ஒருநாள் அதைப்பத்தி பேசுவோம். ஆதியனை பார்க்கக் கூடாதுன்னு சொன்னேன். ஆனா நாளையில இருந்து நாம பாக்கப்போற ரவுல, அஹீர், பில் எல்லாருமே மாடு கூட தொடர்புடையவங்க தான்.

ஏன் பாக்கக் கூடாதுன்னு சொன்னேன்னா அஹீர்-ங்கிறது அரபிச்சொல். கத்தியாவர், நவயதி (Nawayathi), மேமன், சிந்தி, ராஜ்புத், பெஸ்தோன்னு சிந்து சமவெளியைத் தாண்டினா எல்லாமே முஸ்லிம்ஸ்.” மெஸியான்னா (தேவதூதர்) ‘கால்நடை’ன்னு அரபியில அரத்தம்னு அங்கவரப் போயிரும்” என்றான் சிரித்த படி வர்கிஸ்.

“இதுக்கே நிறைய வேலை பார்க்க வேண்டியதிருந்தது. அஹீர்ங்கிற வார்த்தை வராம பார்த்துக்கிட்டோம். கௌலி, கோசி,கோப், ராவ் சாப், தௌவா, அகத், ஆயர், யாதவ், கோன், கோனார்ன்னு பலபேருல அஹீரை பிரிச்சி சர்வே செஞ்சோம். காரணம் மெசபடோமிய கடவுள் ஹத்தாத் (Hadad) தலையில காளைக்கொம்பு கொண்ட தலைப்பாகையோட தாடி வச்சிருப்பார். அவருதான் சுமேரிய சூரிய கடவுள் இஷ்கூர் (Iskur) கூட மேட்ச் ஆவார்.

இஷ்கூர் வம்சாவளி தான் இராமர் கடவுளாம். இது இல்லாம Zeus, Gaia, Yaan, Apis, Paandil எல்லாமே எருதை காட்டி கொடுத்திரும். Paandil – “பாண்டில்” அப்படின்னா எருதுன்னு சுத்தி வளச்சி நேரா அது எல்லாமே தமிழ்நாட்டுல வந்தி நின்னுரும். ஆதியனுக்கு எருவுலன்னு பேரு வேற இருக்கு”

“வாவ், இதைத் தேடித்தான் நான் பிரான்ஸ்ல இருந்து வந்திருக்கேன்”

“இதையா சீரியலா எடுக்கணும்னு நினச்சிருக்க”

“ஆமா”

“க்கும்.. இதுதான் எல்லாத்துக்கும் தெரியுமே. கிரேக்க புராணக்கதையில் சியுசு-ங்கிற கடவுள் இளவரசி ஈரோப்பாவை பாதுகாப்பா கடத்திச் செல்ல காளை மாடா மாத்தி தன்னோட முதுகுல சுமந்துகிட்டார்ன்னு வருது. எவ்வளவு ரிசெர்ச் நடக்குது தெரியுமா இந்தியால. வெளிய நடக்கிற அரசியல் எல்லாம் சும்மா. இந்தியாவோட அடையாளத்தையே மாத்த உள்ளுக்குள்ள பலவேலை நடந்திட்டு இருக்கு. இறைத்தூதர் நோவா காலத்துக்கு அப்புறம் வந்த ‘ஆது சமூகத்தார்’ தான் இவுங்க எல்லாருமே”

“அதுக்கு எல்லாம் ஆதாரம் இருக்கா”

“ஹ்ஹஹஹ.. நீ புதுசா ஹிஸ்டரி படிக்க வந்திருக்கியா, ஜோசுவா ப்ராஜெக்டோட டார்கெட்டே இந்தியாவும் ஆப்ரிக்காவும்னு சொல்லும் போதே புரிய வேண்டாமா. சரி ஆட்டத்தைப் பாரு. உயிர கொடுத்து ஆடிட்டு இருக்கான் மலைவாசி”

கூலிக்காக ஆடுகிறோம் என்ற எண்ணமெல்லாம் இன்றி துள்ளல் கலந்த ஆக்ரோஷத்துடன் தரையில் இருந்து தாவி ஆடிக்கொண்டிருந்தது பறையன் எனும் இயற்கை.

மறுநாள் ஆவென அகலக் கண்விரித்து எடக்கல் குகைகள் முழுக்கச் சுற்றிவிட்டு கரிந்தண்டன் ஆவி இன்றும் சுற்றுவதாக கருதப்படும் வயநாட்டு மலைப்பகுதியின் ஆலமரத்தைப் பார்த்து அங்கிருக்கும் பனியர்குடி மக்களை சந்தித்து அவர்கள் மதிக்கும் பளிச்சியம்மனுக்கும் வள்ளி என தமிழ்நாட்டில் அழைக்கப்படும் தெய்வத்திற்குமானத் தொடர்புகளை அது கொழும்பு குவேனி வரை தொட்டுச்செல்லும் வாய்மொழி தொடர்புகளை எல்லாம் வர்கிஸ் கூறியபடி வந்தான்.

கர்னாடகா நாகர்ஹோளே தேசியப்பூங்கா வந்தடைந்த போது அங்கிருக்கும் முக்ரி பழங்குடி (Mukri) மக்களை வர்கிஸ் அறிமுகம் செய்து வைத்தான்.

“நான் சொன்னேன்ல மிடில் ஈஸ்ட் வரைக்கும் தொடர்பு வந்திரும்னு. முக்ரின்னு என்சைக்ளோபீடியால தேடுனா குர்திஸ்தான் முஸ்லீம் வரைக்கும் போயிரும் இந்த பழங்குடி”

“அஜர்பைஜான், ஈரான்னு எல்லாம் வருது” என்று மொபைலில் நெட்டைக் கிண்டியபடி கூறிய டேனியலிடம்,

“இவனும் பாம்பாட்டி தான். கருநாகம் தான கருனாடகம். இவுங்கள்ளே ஹெப்பின்னு ஒரு குரூப் இருக்கு. அது முஸ்லீமா மாறுன உயர்ஜாதி” என்ற வர்கிஸின் பேச்சைக் கேட்டதும் கடக்கரைக்கு இருளன் கூறியது தான் நினைவில் வந்தது.

“ங்கொய்யால… சாதிக்கும் மதத்துக்கும் பின்னாடி நடந்தா பைத்தியம் தான் பிடிக்கும். அப்படி ஒரு இடியாப்ப சிக்கல் இந்தியால. நன்கு வேகவைத்த கறித்துண்டை எடுத்து உதறினால் கையில் நீண்ட எலும்பு மட்டும் மிஞ்சுவது போல புராணக் கதைகளை உதறினால் பரிசுத்த ஆதிக்குடியின் வாழ்வு வெட்ட வெளிச்சமாகத் தெரியும்” என்று அவர் கூறியதை நினைத்தபடி வந்தான்.

அங்கிருந்து தடியண்டமோல், கூர்க், புஷ்பகிரி, குமார பர்வத, சார்மடி மலை கடந்து ஹெப்பி அருவியில் குளித்து அங்கிருந்த ரிசார்ட்சில் அன்று இரவு தங்கி குளிருக்கு இதமாகச் சரக்கடித்து ஒரு ஜாலியான டிரிப்பாக இருந்தது.

இருளன் போல எந்தப் பழங்குடி வீட்டிலும் தங்க வைக்காததால் குளிர் தரை, சாமை ரொட்டி, மரக்கோதுமை, கேப்பை கூழ், வரகரிசி கஞ்சி என்றெல்லாம் இல்லாமல் ஹோட்டல் சாப்பாடும் சரக்கும் குளிருக்கு இதமாக ரிசார்ட்ஸ் பிளாங்க்கெட்டும் என சுகவாசியான நிழலாக இருந்தது மேற்குத்தொடர்ச்சி மலைப் பயணம்.

ஒருமுறை வர்கிஸ் உடன் பயணித்து காடு கடந்துவிட்டால், அடுத்து வரும்போது நமக்கு தோதுபோல பயணத்தை நடத்தலாம் என நினைத்துக் கொண்டான் டேனியல்.

மறுநாள் குதிரைமூக், காளி புலிகள் வனம், ஜம்போடி, ஹல்லூர் எனச் சுற்றி அடித்து அக்கா-தங்கச்சி அருவி(Akka-tangi falls)யில் குளித்து அன்று இரவு பதாமி குகைகள் (Badami caves) கொண்ட பகுதியான அகஸ்தியர் ஏரி(Akastiya lake)யை ஒட்டிய ஆயுர்வேதிக் ரிசார்ஸில் அறை எடுத்துத் தங்கினார்கள்.

அன்று இரவு கொண்டு வந்திருந்த கஞ்சாவை இருவருக்கும் சிகரெட்டில் சுருட்டிக் கொடுத்தான் வர்கிஸ். டேனியலுக்குப் பழக்கம் என்பதால் உடல் தாக்குப்பிடித்தது. கடக்கரை தான் ஜெயின்ட் வீல் உச்சியில் இருந்து தலைகுப்புற விழுந்தது போல கட்டிலில் விழுந்து கிடந்தான்.

மறுநாள் காலை பாதாமி குகைக்கோவில்களை சுற்றி வலம் வந்தனர். இந்து, புத்த, ஜைன மதத்திற்கான சிலை அடையாளங்கள் இருப்பினும் இந்த நிலத்தை தொலமி (Ptolemy) “பெட்ரீகல்-மிசிங்கி” pedregal(msingi) என அழைக்கிறார்.

Msingi என்றால் எதியோப்பிய ஸ்வைஹிலி மொழியில் “துவக்கம்” என்று பொருள். ஆனால் எதன் துவக்கம் என்றுதான் தெரியவில்லை என்றான் வருத்தத்துடன் வர்கிஸ் .

***

தட்டப்பாறை
முஹம்மது யூசுஃப்
புதிய வெளியீடு
யாவரும் பப்ளிஷர்ஸ்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular