Tuesday, April 16, 2024
Homeஇதழ்கள்2022 இதழ்கள்செல்வசங்கரன் கவிதைகள்

செல்வசங்கரன் கவிதைகள்

கால் மீது கால்

ரு துப்பாக்கி வெடிப்பதற்கு முந்தைய நிலையில்
தனது முந்தைய நிலையை இவ்வுலக உயிர்களை வைத்து
சோதித்துக் கொண்டிருந்தது
முந்தைய நிலையை வழியில் தென்பட்ட ஒருவரிடம் நீட்டியதும்
அவர் மிரண்டு ஒதுங்கினார்
உடனே அதை வைத்து எல்லாரையும் மிரட்ட ஆரம்பித்தது
எல்லாரும் ஒளிந்தார்கள் பம்மினார்கள் ஓடினார்கள்
கட்டிலுக்கடியில் மறைந்திருந்தவனை எழுப்பி திடீரென அவனிடம்
வெடிக்கும் நிலையை எள்ளி நகையாடுகிற வேலையைத் துவக்கியது
வெடிக்கும் நிலை முரட்டுத் தடியன்களை பரம ஞானியாக்கும்
ரசம் போன ஒரு கலை
அதுவொரு சைவ பட்சி காலி டப்பா மொண்ணையான கத்தி
அதை வைத்து ஒன்றையும் கழட்ட முடியாது
வேண்டுமென்றால் பக்த கோடிகளுக்கு வேண்டுமளவிற்கு
புளிச்சோறு ஆக்கித் தட்டலாம்
வெடிக்கும் நிலைக்கு கோபம் உச்சத்திற்கு ஏறியது
ஆவேசத்தில் ரத்தச் சிவப்பாக இருந்தது வெடிக்கும் நிலை
அருகிருந்த ஒருவனின் நெற்றி நடுவே அது துப்பாக்கியை வைக்க
துப்பாக்கி முனையைப் பிடித்து கெஞ்சிக் கொண்டிருந்தான் அவன்
கால்மீது கால்போட்டு உட்கார்ந்திருந்த முந்தைய நிலை
இதற்குப் பெயர் முந்தைய நிலை என்றது
வெடிக்கும் நிலைக்கு கோபம் மண்டைக்கேறி
மூன்று தோட்டாக்களை ஒன்றன்பின் ஒன்றாக
அவன் நெற்றியில் இறக்கியது
இப்படித்தான் இந்த உலகத்தில் துப்பாக்கிகளுக்கு
பைத்தியம் பிடிக்கிறது
இப்படித்தான் துப்பாக்கி வெடிப்பதற்கு முந்தைய நிலை முன்னால்
இந்த உலகம் மண்டியிட்டுக் கிடக்கிறது


கையோடு வந்த முகம்

முகத்தைக் கழுவும்போது முகம் கையோடு வந்துவிட்டதை
யாரும் நம்பமாட்டேன் என்றார்கள்
எனக்காக எனது முகம் இன்னொருமுறை
கையிலிருந்து முகத்திற்கு போய் திரும்ப கைக்கு வந்து காட்டியது
பாருங்களென கையில் உள்ளதை எடுத்துக் காட்டினாலும்
அது முகமே இல்லையென்றார்கள்
வாங்கிப் பாருங்களென்றாலும் யாரும் கையை நீட்டவில்லை
என் முகத்தை பத்திரமாக உள்ளங்கைகளில் வைத்துக் கொண்டேன்
எல்லாரும் விளையாடுவோம் என்றதும் சரியென
எல்லாரும் எல்லாருடைய முகத்தையும் நடுநாயகமாக வைத்து
விளையாட ஆரம்பித்தோம்
முகத்தைப் பார்த்து அணி பிரித்தார்கள்
முகத்தைப் பார்த்து நாற்பத்தைந்து ரன்கள் என்றார்கள்
முகத்தைப் பார்த்து பந்து மட்டை விளிம்பில் பட்டதாக கத்தினார்கள்
முகத்தைப் பார்த்து வெயில் இன்று அதிகமென சடைத்தார்கள்
நாளை விளையாடலாமென எல்லாருடைய முகத்தையும் பார்த்து
எல்லாரும் சொல்லிவிட்டு எல்லாரும் கலைந்து சென்றார்கள்
போகும் அவரவர் முகத்தை அவரவர் பத்திரமாக எடுத்து வீடு சென்றனர்
எல்லாமுமாக இங்கு முகமே உள்ளது
வழியில் என்னுடைய முகம் மாதிரியிருந்த
என்னுடைய கைகளை விரித்து பார்த்துக் கொண்டேன்


அக்குள்ஸ்

கைகளைத் தூக்கச் சொல்லி அக்குள் பளபளப்பில்
தலைமுடியைச் சீவி முகத்தைச் சரி பார்த்தனர்
முகம் சரிவர தெரியவில்லை என்றவர் தலையில் செமத்தியாக
ஒன்று விழுந்தது
அக்குள் மினுமினுப்பையெடுத்து ஒருவர் தன் கூலிங்கிளாஸிற்கு
அதை ஏற்றினார்
அக்குளின் வளைவில் மேலிருந்து கீழே சறுக்கி விளையாடினர்
அக்குளிலேயே முகம் புதைத்துக் கிடந்தவரின் பின்னந்தலையை இழுத்து
எல்லாரும் என்ன செய்கிறோம் நீ என்ன செய்கிறாய் என
ஒருவர் கோபம் கொண்டதில்
அக்குளை நாவால் தேய் தேயென தேய்த்துக் கொண்டிருந்தவரை
பார்த்த பின்னாடி
இரண்டு நல் உள்ளங்களையும் வாழ்க என வாழ்த்தி ஆசி வழங்கினார்
அக்குள் மடிப்பிடையே சிகரெட்டை சொருகிக் காட்டி
சிகரெட்டுகளை வாரி வழங்குகிற வைபோகமும் நடந்தேறியது
அக்குள் பள்ளத்தில் நொங்கு பதநீர் ஊற்றிக் குடித்தனர்
அக்குள் ரோமங்களை வெளியே காட்டாமல் எந்நேரமும்
அந்த இடத்தை பொக்கிஷமாக பாதுகாத்து வந்தவர்களை
இப்பொழுது என்ன செய்வதென்றே தெரியவில்லை
தெருவுக்குள் ஒரே அழிச்சாட்டியம் செய்து கொண்டிருந்தனர்
கேட்டால் அக்குள் தினம் என்கின்றனர்


செல்வசங்கரன் – விருதுநகரைச் சேர்ந்த இவர் அறியப்படாத மலர்-NCBH, பறவை பார்த்தல்-மணல் வீடு, கனிவின் சைஸ்(மணல் வீடு),சாலையின் பிரசித்தி பெற்ற அமைதி(மணல் வீடு), கண்ணாடி சத்தம்(காலச்சுவடு) என இதுவரை ஐந்து கவிதைத் தொகுப்புகள் வெளியிட்டுள்ளார். ஆதவன் படைப்புகளில் முனைவர் பட்டம் பெற்ற இவர் கல்லூரியில் தமிழ் பேராசிரியராகப் பணிபுரிகிறார்.
மின்னஞ்சல் – [email protected]

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular