Friday, March 29, 2024
Homeஇதழ்கள்2023 இதழ்கள்சாருக் செல்வராஜ் கவிதைகள்

சாருக் செல்வராஜ் கவிதைகள்

கடல் பற்றி எனது அல்லது கடலின் கூற்று:

டல் காமம் கொதிக்கும் உலை
அலை தோற்றுப்போன புணர்ச்சியின் தழுவல்
கரை இத்தனை யுகத்தீண்டல்களின் விறைக்காத மயிர்
ஒரு அலை உலுக்கியதில் உதிர்ந்தது போக
ஒரு அலை அரித்ததில் தேய்ந்து போக
மீதமுள்ளவை இம்மலர்கள், இம்மணல், இம்மக்கள்.
கடல் வெளித்தள்ளப்படாத மதநீர்
கடல் நாகரிகம் சுமக்கும் பனிக்குடத் திரவம்
அலை கரை தொட்டு கடல் திரும்ப பல நூற்றாண்டுகளும் ஆகும்
பாதங்களை பாறைகள் புதைத்து விட்டன, பாதங்களை அலைகள் மீட்டெடுக்கப் போராடுகின்றன
பாறைகளை ஒருநாள் கடல் தின்னும் பாதங்களையும் சேர்த்து.
கடல் தனது கருப்பையை தனது கைகளால் அறுத்து எறிந்தபோது
ஏனையோர் எல்லாவற்றையும் இழந்தனர்.
கடல் எதோ ஒன்றை நோக்கி முன்னும் பின்னுமாக அலைந்து சோர்வுற்றதன் விளைவாக
யுகங்களை நினைவிலிருந்து நுரைக்கிறது
நாங்கள் எங்கள் ஊரை காலி செய்யும்போது
கடல் தனது உப்பை இழக்கும்.

*

அப்பா மகனின் சுற்றென வரும்போது
தளும்பிய மூத்திர வாளியை
அவ்வாரத்தில் இரண்டாம் நாளும் தூக்கி நடந்தார்.
பால்யத்தில் விரும்பித் தின்ற மீனை மகன் பிடித்த அன்று
தேசங்களின் அதிகார வலையில் அவன் துடிதுடித்தான்.
சிறைக்கு ஐந்து பேர் எனப் பிரிக்கப்பட்ட போது
அப்பா இந்த தொழில் வேண்டாமென்று சொன்னது
எதற்கென்று தெரிந்தது.
முள்ளில்லாத மீன் துண்டு எதுவென சொன்ன உடல்
சோற்றையும்
வெறும் புளித்தணீரையையும் மாறி மாறி பார்த்தது.
உள்நாட்டு கைதிகள் நாயாகப் பார்க்கப்பட்ட போது
பிணைக்கைதிகளை நாய் பேயாக கூட பார்க்கவில்லை.
ஒரு தட்டில் வெறும் தண்ணீர் சேர்த்துதான் சாப்பிடச் சொல்வார்
கடல் என்பது நீர் அல்ல அது அதிகாரத்தின் பரவல்

*

அக்கா பதின்மத்தை கடந்து நின்றபோது
கல்யாணத்துக்கான சமிக்கைகள் வந்தன.
அக்கா ஊரையும் வீட்டையும் கடலையும்
ஓரளவுக்கு அறிந்தவள்
அவள் கடலுக்கு போகாத ஆணையே
வேண்டுமென்றபோது கரையங்கும்
ஒரு நிசப்தத்தை அவள் மார்பில் உணர்ந்தாள்.

*

குடும்பத்தில் முதன்முதலாக காலேஜ் முடித்தான்
அப்பா ஆற்றிலும் ஒடப்பிலும் கடலில் தூரமின்றியும்
வலை தள்ளுவார்.

மூத்த மகன் அம்மாவுக்கு குலச்சாமி
அவன் சரி என்றால் சரி இல்லை என்றால் இல்லை
தம்பிக்கும் தங்கைக்கும் அவன் சொல்தான் எல்லாம்
படிப்பிற்காகவும் குடும்பச் செலவுக்காகவும்
கடலுக்கு எப்போதாவது போய்வருபவன்.

அந்த முறையும் கடலுக்குப் போனான்

கடல் ஒரு சொல்லப்படாத பிரேத கிடங்கு
கடல் அலையின் ஓசை என்பது மனித மூச்சுகளின் ஓலம்
அந்த காலையில் கடலின் ஓசை
அவனின் தொண்டை எலும்புகள் உடைந்ததில் எழுந்த ஓசை
பிழைப்புக்கு எறிய படகு இவன் உடலை கடலோடும் கரையும் நசுக்கியதில்
செத்துப்போனான்,

நாக்கு தள்ளி நெஞ்சு சிவந்த உடலைக் கண்டு
ஓலமிட்டாள் அம்மா
நெஞ்சில் கை வைத்தப்படி கடலை
ஒரே மிடறில் சாராயம் போல் குடித்தார் அப்பா
மூத்தப்பிள்ளை குலச்சாமியை உடல்
அறுக்கப்பட்டு வெள்ளைத் துணியால் சுற்றிக்கொண்டு வந்தனர்.

பிரேதம் வீடு வரும்முன்னே பிரேதத்தை அப்புறப்படுத்த வேலைகள் நடந்த
அறுக்கப்பட்ட உடல் இரவு வீடு தங்கக்கூடாதாம்
ஊர் என்பதே அதிகாரத்தின் முதல் ஆசனம்
வந்த கையோடு சடங்கு முடிக்கப்பட்டு
மேளமும் கொட்டும் நகர்ந்தன
முதல் நாள் இரவு தானாகப் போனவனை
மறுநாள் ஏழு எட்டு பேர் தூக்கி சுமந்தனர்.

அந்த இரவின் இருளை
அப்பா கொள்ளிக்கட்டையால் மேலும் எரித்து இருளாக்கினார்.
கடல் என்பது நீங்க நினைக்கும் எதும் அல்ல
அது இருளடைந்த பாதைக்கான சாவித்துவாரம்
மகன் போனநாள் முதல் அம்மா அந்த வீட்டில்
விசேஷ நாள் என எதையும் அனுமதிப்பதில்லை.

அவன் புகைப்படச் சட்டகத்தில் இருக்கும்
சிறிய பல்புகளில் இருக்கும் வண்ணங்களைத் தவிர
பிரத்யேகமாக வாழ்வின் வேறெந்த வண்ணங்களையும்
இந்நாள் வரையிலும் நான் பார்த்ததில்லை

அம்மா அடிக்கடி இப்படி சொல்லுவாள்

எப்போவோ போய்ச்சேர வேண்டிய உயிர இழுத்து பிடிச்ச என் சாமி
இப்போ எங்கன ஒண்ட இடமில்லாம சுத்துதென்று தெரியலையே.,
அம்மா இன்னும் கனவிலும் கூட அந்த முகத்தைக் காணாது
நுரைக்கிறாள்.

*

எவ்வெளியும் இல்லாத அக்கடலில் அதிகாரத்தின் எல்லை தீர்க்கம்
வெறும் நுரைக்கட்டைகளால் ஆனது
அண்டை தேசத்தின் கொடியுயர்ந்த கப்பல் படகைச் சுற்றி வளைத்தபோது
உடல்கள் தங்களை மீறிய பயத்தில் மண்டியிட்டு நின்றன.

எல்லா மீன்களையும் கடலுக்கு கொடுத்தது போக
ஆளுக்கு ஒன்றென வாயில் திணிக்கப்பட்டது.

துப்பாக்கியின் முனைகள் பின்னந்தலையை குறிபார்த்து நின்றபோது
ஒவ்வொரு கட்டளையாகப் பிறப்பிக்கப்பட்டது

கடலில் குதி

முட்டி போடு

ஐஸ் கட்டியை தலையில் வை

இப்படியாக இருவரை அழைத்து புணர வைக்கப்பட்டனர்.
கடலென்பது சுவர்களற்ற சித்திரவதைக் கூடம்
அப்பா மகனின் துவாரத்தில் குறி நுழைத்தபோது
அப்பாவின் துவாரத்தில் ஐஸ்கட்டி நுழைக்கப்பட்டது

எல்லாவிதமான வதைகளும் முடிவுற்று படகு கரைதிரும்பும் முதல் நாள்
அப்பா செத்துப்போனார்

மகன் இறந்த உடலை பார்த்தபடியே கரை சேர்ந்தான்.

வீட்டில் அம்மா தெய்வத்தை கண் இல்லையா என்று சபித்துக்கொண்டிருந்தாள்.

கடலென்பது சபிக்கப்பட்ட வார்த்தைகளின் நீர்மக்காட்சி….

2

முன்று பகல் மூன்று இரவென மொத்தம் ஆறு கனாக்கள்

கனவுகளின் ஊடே வந்து போகிறது
ஆழ்மனதில் புதையுண்ட முகம்.
தொடர்ந்து ஓயாது
தியானத்தில் புரள்கிறது கண்கள்.
அவ்வளவு தீவிரத்துடன் நேசிக்கும் கண்களில்
ரத்தம் ஓட்டம் பெருக்கெடுக்கிறது.
அதில் மூழ்கி சாகத்துடிக்கிறது உயிர்.
உடைந்த கோப்பையில் கலந்த விசத்தை
பிரத்யேகமான காஃபிக்கொட்டை என்றாய்.
அதில் மணக்கத் தொடங்கியது உனது மனம்.
பூதாகரமான இரவை வயிற்றில் செரிக்கும் ஓசை கேட்டு
பறக்கிறது காக்கை.
எந்த அதிர்வுமின்றி சரிகிறது உடல்.

ஒரு பெண்ணிற்காக கொலை செய்ய நினைத்தவன்
அப்பெண்ணிற்காக அப்பெண்ணாலே கொலையாகிறான்.
தனது முதுகெலும்பால் செய்த கத்தியை அவளிடம் நீட்டுகிறான்.
பிறகு தனது தலையை அவனாக தெருத்தெருவாக
எடுத்துக்கொண்டு சுற்றிப் பார்க்கிறான்.
தாளாமல் பெய்கிறது மழை
கண்களில் ஒய்யாரமாக ஆடும் உருவத்தைக் கண்டு
சிரித்துக்கொண்டே இருக்கிறது கொலையானவனின் தலை.

திடீரென்று மலர்கிறது மலர்.
அதன் நடுவே சிகரெட்டை பற்றவைக்கத் தெரியாமல்
தடுமாறுகிறது அவ்வுடல்.
அதை பற்றவைக்கச் சொல்லிக் கொடுத்தேன்.
புகைக்க சொல்லிக் கொடுத்தேன்.
அவ்வுடலின் தொப்புளைச் சுற்றி
வளர்ந்தது புகையிலைகள்.
உடல் இரவு பகலென சதா புகைக்கத் தொடங்கியது.
உடல் என்னையும் சேர்த்து புகைக்கத் தொடங்கியது.
நான் புகையுண்டேன்.
புகையிலைகள் தீர்ந்த நாளன்று
நான் அவ்வுடலால் எரி சாராயம் ஊற்றி எரிக்கப்பட்டேன்.
பிறகு
தொடை எலும்பில் ஆன ஒரு சிகரெட்டில்
இன்னும் புகைகிறது அவ்வுடல்.

தனது நாய்க்காக அறுக்கப்பட உடலிகளில்
எனது உடலும் ஒன்று
ஆடைகளை நீயாகவே நெய்துகொள்வாய் என்கிறாய்.
பெருகும் கருணையில் உனது விருப்பமான ஆடையில்
எனக்கு ஊஞ்சல் கட்டித் தந்தாய்.
அந்த ஊஞ்சலில் எனது உடல் தலைகீழாகத் தொங்கியதில்
தலைகுப்புற விழுந்தது பட்டுப்புழுக்களின் இலை.
என் தோலை எடுத்து நீ செருப்பு தைத்துக்கொள்கிறாய்.

நிலவொளியில் தோய்ந்த புல்வெளியில்
பாதங்களின் சுவடு மிளிர்கிறது
காமத்தின் ஆழியில் நுழைந்தபோது
போகத்தின் வாயில் திறக்கபட்டதே அந்நாளிலே
நதியில் மூழ்கடிக்கப்பட்டேன்
உனது கரங்களில் மீனாகத் துடிதுடித்தேன்
நதியின் தனிமை ரகசியம் உடைந்து
இரு கரைகளும் வெள்ளக்காடானது.
உனது பாதங்களைப் பார்த்தவாறே செத்துப்போனேன்.
பிறகு உனது மடியில் இரவெல்லாம் புதைக்கப்படுகிறேன்.

உருண்டு கொண்டிருக்கும் பாறைகளுக்கு நடுவே
குகையினை கண்டுப்பிடித்தாய்.
ஆயிரம் கள்ளம் பொருந்திய இரவுகளை
பாறைகளில் தீட்டத் தொடங்கினோம்.
உனது உடலையும் ஆயுதத்தையும்
முழுமையாக முடிக்காத போது
என்னுடலில் குருதி தீர்ந்தது.
ஆத்திரத்தில் எனது இதயத்தை நீர்மமாக்கி
பாறையை முழுமைப்படுத்தினாய்
எனது உடலை சதா நீ அமரும் மரத்தில் புதைத்த
மறுகணமே நிகழ்ந்தது அற்புதம்.
அந்தப் பறவை காண்டாமிருகங்களிள் ஆரவாரத்துடன்
தனது கூட்டினை அடைந்தது…

***

சாருக் செல்வராஜ் – [email protected]

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular