கோலப்பனுடே ராவுகள்

3

பிரபு தர்மராஜ்

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மீது மிகுந்த அபிமானம் கொண்டவர் கோலப்பன் மாமா. நான் ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது மாமா ஒருநாள் என்னை விளித்து,

“மக்கா! கார்த்திக் தேட்டர்ல நேதாஜின்னு ஒரு படம்போட்டுருக்கானாம் ! சரித்திரப் படமாம் ! சாயந்தரம் பர்ஸ்டே (First Show) போவோம் வாறியா ?

இண்டர்வெல்ல ஐஸ்கிரீம் மூணண்ணம் வாங்கித் தருவியா மாமா?

அது வாயா இல்லன்னா வடச்சட்டியா? ஒரு மனுசனுக்கு ஒரு ஐஸ்கிரீம் பத்தாது ! இல்லியாடே?

நா வரல ! நீ போ !

கோவிக்காதடே! மாமா வாங்கித் தாரேம்னு சொல்லுகம்லா !

சரத்குமார் நேதாஜி சுபாஷ் சந்திர போசாக நடித்திருப்பதாகச் சொல்லிக் கொண்டவர் என்னை வண்டியில் அமர வைத்து வழி நெடுக கதை சொல்லிக் கொண்டிருந்தார்,

நம்ம நேதாஜி இருக்காருல்லா பெரிய வீரனாக்கும் ! சும்மாயா மாமன் ஒரு ஆளுக்க படத்த ஃப்ரேம் போட்டு நடு வூட்டுல மாட்டுவேன்?

வீரன்’னா எப்புடி மாமோய்?

அப்புடிக் கேளு ! வெள்ளக்காரங் கண்ணுலயே வெரல உட்டு ஆட்டுன மனுசனாக்கும் !

அவுரு கண் டாக்டரா மாமா ?

மாமா வண்டியை சடாரென நிறுத்தி தலையைத் திருப்பி என்னை ஒரு பார்வை பார்த்தார். நான் பக்கத்தில் நடந்து போய்க் கொண்டிருந்த அழகான பெண்ணொருத்தியைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

ஏல ! நா என்ன சொல்லுகேன் ! நீ என்னடே கேக்க ? நேதாஜி தனியா ஒரு படையே வச்சி வெள்ளக்காரனுவ கிட்ட பெகளம் வச்ச ஆளாக்கும் ! பூரா பெயலுவளும் பயந்து கெடந்தானுவ !

அந்தப் பெண் என்னைக் கடந்து சென்று கொண்டிருந்தாள்.

மாமாவுக்கு சலிப்பு. “இந்த வயிசுலயே இப்புடி திரியி ? பாக்கப் பார்வையிலயே அந்தப் புள்ள பத்துப்புள்ள பெத்துருவா போலுக்கே? வீட்டுல எனக்கு ஒரு மொவ இருக்கா ?”

ஒம்ம மொவள பாத்துட்டாலும்…. சக்கப் பழங்கெணக்கா !

என்னது ? சக்கப் பழமா ? இருல ஒனக்கு அவளக் கெட்டி வச்சி ஒன்னய பழி வாங்குகேன் !

கெட்டிட்டுத்தான் மறுவேலை ! வண்டிய எடும் ! லெட்டர் சீன்ல இருந்து பாத்தத்தான் படம் எடுபடும் !

வண்டியைக் கிளப்பினார். தியேட்டரில் கடுமையான கூட்டம். கவுண்டரில் மண்ணள்ளி வீசினால் மண் கீழே விழாது ! அவ்வளவு நெருக்கடி ! இன்னைக்கி படம் பாத்தது மாதிரிதான்.

மாமா என்னிடம் வந்து, தேட்டரு மேனேஜரு நம்ம ஃப்ரெண்டுதான் ! நாம  போயி மேனஜரை பாத்து டிக்கட்டு எடுத்துட்டு வந்துருகேன்! என்றவாறே நேராக நடந்து போனார். நானும் அவரது பின்னால் போனதை அவர் கவனித்திருக்கவில்லை.

உள்ளே போய் ஏதோ பேசினார். உள்ளிருந்து சத்தம் கேட்டது,

“மேல ஆப்பரேட்டர் ரூம்புல போயி டிக்கெட்டு கேளுமாம் ! டிக்கெட்டு இங்கயா விக்கி? கவுண்டருல போயி கேளும் ஓய்!”

மாமா வியர்வையைத் துடைத்தபடி வெளியே வந்து, ஏல இங்கல்லாம் நீ யா வந்த ? ஒன்னய அங்கல்லா நிக்கச் சொன்னேன் ?

அவரது முகம் காப்பிக் கப்பில் விழுந்த வெட்டுக்கிளி மாதிரி இருந்தது.

நான் மெதுவாக, டிக்கெட்டு கெடச்சா மாம்ஸு ?

அது வந்து மேனேஜரு தூங்கிக்கிட்டிருக்காராம் ! புதுப்பட  ரிலீசுல்லா ! ராத்திரிப் பூரா இந்தப் பயலுவ கட் அவுட்டு வச்சிருப்பானுவல்லா ! ரா முச்சூடும் பூதங்காத்துருப்பாருலா…? அதாங் கெடந்து ஒறங்குகாரு !

அது இருக்கட்டும் ! டிக்கெட்ட எங்க ?

அது… அது வந்து ! இது புது மேனஜராக்கும் நம்மள பரிஜயம் கெடையாதுல்லா !

உள்ளுக்கயிருந்து கவுண்டருல போயி கேளும் ஓய்னு சவுண்டு கேட்டு ?

ஆமா கவுண்டர்ல தானே டிக்கெட்டு கிட்டும் ?

அப்ப இங்க என்ன மயித்துக்கு வந்தீரு?

மேனேஜர் பிரெண்டுல்லா ? பாத்துட்டு போவோம்னு வந்தேன் !

அப்புறம் என்னத்துக்கு மேனஜரு தூங்குகாருன்னு சொன்னீரு?

இல்ல தூங்கிட்டே பதில் சொன்னாரு !

வேற என்ன சொன்னாரோ ?

கவுண்டர்ல போய் டிக்கெட் கேளுங்க கோலப்பன் ! நா ஆளு சொல்லி உடுதேன்’னு சொன்னாரு !

ஆனா எனக்கு அப்புடி கேக்கலியே ?

ஏல கோம்பப் பயல ! வெளிய நின்னு ஒட்டு கேட்டுருக்க இல்லியாடே ?

ஒட்டு கேக்கத வுடவும் தப்பு பொய் சொல்லுகது ! தெரியுமா ஓய் ?

மாமா பதில் பேசவில்லை. கவுண்டருக்குள் கடுமையான நெருக்கடி. சற்றும் யோசிக்காத மாமா சடாரென ஒரு அவசர நிலையைப் பிரகடனப்படுத்தினார். சற்றும் யோசிக்காமல் அந்தக் கம்பிகளின் மேல் ஆட்களின் தலைக்கு மேலாக நடக்கத் துவங்கினார்.

‘என்னடே மாமன் திடீரென கொரளி வித்தையெல்லாங் காட்டுகானே!’ என்ற வியப்பில் நான் ஆட்களின் கால்களுக்குள் புகுந்து ஊர்ந்து செல்ல ஆரம்பித்தேன். அப்போதுதான் அது நடந்தது.

கூட்டத்தில் மாமா ஒருவரது கீழ் தாடையில் கால் வைத்து நடந்ததில் அந்த ஆசாமி அரண்டு போய்க் கத்தி தன்னுடைய இடுப்பிலிருந்த பிச்சுவாக் கத்தியை எடுத்து மாமனைக் குறி பார்த்து வீசவே கத்தி குறி தவறி தரையில் தவழ்ந்து வந்து கொண்டிருந்த என் கையில் கிடைத்தது. நானும் மாமனைக் காப்பாற்றும் நோக்கில் அந்தக் கத்தியை எடுத்து வீசியவனின் கையில் சொருகினேன். அந்த அவசரத்தில் அவனது கையில் கொடுக்க முடியாததால் அந்தத் திடீர் ஏற்பாடு.

அவன் வலியில் கதறி சத்தம் போட்டான். நானும் மாமாவும் மின்னல் வேகத்தில் உடனடியாகக் குதித்து வெளியில் வந்து டீக்கடையில் ரெண்டு டீ சொல்லி விட்டு அமர்ந்து கொண்டோம். குத்து வாங்கியவன் ரத்த வெள்ளத்தில் வெளியில் வந்து தன்னைக் குத்தியவர்களைத் தேடினான். நாங்கள் அவனருகில்தான் அமர்ந்திருந்தோம்.

கவுண்டருக்குள் கோலப்பன் ஆகாய மார்க்கமாகச் சென்றதாலும், நான் பூமிக்குள் தரையோடு தரையாக ஊர்ந்து சென்றதாலும் அவனால் எங்களை அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை. ரத்தத்தைப் பார்த்தால் அலர்ஜியாகி மயங்கும் வியாதி அவனுக்கு இருந்திருக்க வேண்டும். மயங்கி விழுந்தான். நானும் மாமாவும் கொஞ்ச ஆட்களும் தூக்கிச் சென்று ஆட்டோவில் ஏற்றி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தோம்.

மாமா சொன்னார், “பட்டயத்தை எடுத்தவனுக்கு பட்டயத்தால் சாக்காலம் !”

மீண்டும் டிக்கெட் எடுத்து உள்ளே போனால் படத்தில் வெள்ளைக்காரனும் இல்லை.நேதாஜி சுபாஷ் சந்திரபோசும் இல்லை. சரத்குமார் வில்லன்களை அம்போவென விட்டுவிட்டு லிசா ரேவின் உதடுகளோடு போர் புரிந்தார். இது என்ன வகையான போராயிருக்கும் என்ற குழப்பம் எனக்கு எழுந்தது. மாமா என்னிடம் சொன்னார்,

இது நேதாஜிக்க சின்ன வயிசு கதையா இருக்கும் போலுக்கு?

ஆனாலும் நல்லாத்தா மாமா இருக்கா !

ஆருடே ?

அந்தப் புள்ள !

திரையில நிக்காளே அவளா ?

பின்ன நா என்ன முன் சீட்டுல நீரு கால வச்சிக்கிட்டு தேச்சிக்கிட்டு இருக்கீரே அந்தப் புள்ளயவா சொல்லுகேன் ?

மாமா திடுக்கிட்டார், ஏல இந்த இருட்டுக்குள்ள ஒனக்கு எப்புடிடே கண்ணு தெரியி ?

ஒமக்கு காலு தெரியும்போது எனக்குக் கண்ணு தெரியாதா ?

ஏல மரியாத இல்லாம பேசுனன்னா பொரட்டிப் புடுவெம் பாத்துக்கா !

இப்பந்தா ஒருத்தன் கத்திக்குத்து வாங்கிட்டு ஆசுத்திரிக்கி போயிருக்கான் ! ஞாவம் இருக்கா ஒமக்கு ?

மாமா என் வார்த்தைகளை உள்வாங்கிக் கொண்டார். படம் முடிந்து வரும்போது புரோட்டாவும் சால்னாவும் சாப்பிட்டு விட்டு வந்தோம்.

நான் அத்தையிடம் சொன்னேன், “எத்தே! செவம் படம் செரியில்ல! மாமா என்னவோ சரித்திரப் படம்னு சொல்லிக் கூட்டிட்டு போனாவ ! அங்க என்னடான்னா தரித்திரம் புடிச்ச மாதிரி பூரா புள்ளையளும் ஜட்டியும் பாடியும் போட்டுகிட்டு லாத்துகாளுவோ ! ஒன்னும் உருப்புடாது ! போதாக்கொறைக்கி மாமா காலக் கொண்டு முன்னாலருந்த புள்ளைக்க முதுகுல பெயிண்டு அடிச்சிக்கிட்டு கெடந்தாரு !என்று சொல்லிவிட்டு வீட்டுக்குப் போய்விட்டேன்.

அன்றிலிருந்து கோலப்பன் மாமா ஏன் திண்ணையில் உறங்கினார் என்பது எனக்குப் புரியவேயில்லை. புரியாத வயதல்லவா ?

இப்படித்தான் ஒருமுறை நான் எட்டாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்த வேளையில் கோலப்பன் மாமா ராணுவத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றார்.  அவர் ஒரு சிறிய அளவிலான “கோழி”. கொடியில் காயப் போட்டிருக்கும் சேலையைக் கூட அரைமணிநேரம் வைத்த கண் வாங்காமல் பார்க்கும் வழக்கம் அவருக்கு இருந்தது.

‘காஷ்மீர் அருகிலிருக்கும் பாராமுல்லா என்ற இடத்தில் அவர் பணி புரிந்ததாகவும், அந்த இடம் மிகவும் அழகாக இருக்குமென்றும், அதைவிட அங்குள்ள பெண்கள் ஆப்பிள் மாதிரி இருப்பார்கள்’ என்றும் பல கதைகளை எங்களிடம் அவர் அடித்து விடுவதுண்டு. நாங்களும் கூட ‘அங்குள்ள பெண்கள் ஆப்பிள் போலவே உருண்டையாக இருப்பார்களோ’ என்றெண்ணி நகர்ந்து விடுவோம். இந்தக் கதைகளின் நிமித்தம் நாங்கள் அவரை ‘பாரமுல்லா மாமா’ என்று பட்டப்பெயர் வைத்து அழைத்து வந்தோம். அவரும் சற்று பெருமையடைந்தார்.  

அவரது மகன் விடுமுறை நாட்களில் எங்களோடுதான் ஊர் சுற்றுவான். தோப்பிலுள்ள கிணற்றிலிருந்து பத்து குடம் தண்ணீர் இறைத்துத் தந்தால் எங்களுக்கு அம்மா பத்து ரூபாய் பரிசாகத் தருவது வழக்கம். நாங்களும் அந்தக் காசைக் கொண்டு போய் முத்து தியேட்டரில் ஆங்கிலப் படங்களைக் காணுவது வழக்கம். மூன்றாம் வகுப்பு டிக்கெட் விலை ரூ 2.15 பைசாக்கள்.  

அப்போது ‘கோஸ்ட்- தி எரோடிக் ஸ்டோரி’ என்றொரு படம் திரையிடவிருப்பதாகவும், அது ஒரு பயங்கரமான பேய்ப்படம் என்றும்   சொல்லிக் கொண்டார்கள். நான் வீட்டில் போய் அம்மாவிடம் ‘’கெணத்துல இருந்து தண்ணி எடுக்காண்டாமா?’’ என்று கேட்டதும், ‘எனக்கு என்ன சோக்கேடு?’ என்பது அம்மாவுக்கு புரிந்து விட்டது. எல்லா அண்டாவும் நெறஞ்சிட்டு ! ரெண்டு நாளு கழிச்சி கோருனாப் போதும்! என்று சொல்லி விட்டாள்.

பாட்டி ஒருத்தி பரலோகத்துக்கு பாஸ்போர்ட் எடுத்துவிட்டதால் அன்று ஊருக்குள் துஷ்டி வீடு. நிவர்த்தியே இல்லை ! படம் பார்க்கணும்! பைசா வேணும் ! என்ன செய்யலாம்? என்று யோசித்ததில் கோலப்பன் மாமா நியாபகத்திற்கு வந்தார். அவரது மகனிடம் சொல்லி அவரது பாக்கெட்டுக்கு வெடிவைத்து அமவுண்ட் தேற்றியதில் முதல் ஆளாய் தியேட்டரில் போய் நின்றாகி விட்டது.

டிக்கெட் எடுத்து உள்ளே போனால் டிக்கெட் கிழிக்கும் தாத்தா சொன்னார், லேய் சின்னப் பயக்கள்’லாம் இந்தப்படத்த  பாக்கப்புடாது ! வீடுகளுக்குப் போய்ச் சேருங்கடே !”

நாங்கல்லாம் பயப்புட மாட்டோம் பாட்டா ! நீரு டிக்கெட்ட மட்டுங் கிழிச்சா மதி!

என்று சொல்லிவிட்டு உள்ளே நுழைந்தால் அங்கே இருந்தவர்கள் எல்லாரும் முப்பது வயதுக்கு மேலுள்ளவர்கள். படம் போட்டார்கள். பேய்கள் கும்பலாய் வந்தன. மாற்றி மாற்றி அடித்துக் கொண்டன. ஒரு உள்ளாடை வாங்கக் கூட இயலாமல் மிகுந்த வறுமையில் வாடுகின்றன என்று நினைக்குமளவுக்கு இருந்தன அந்தப் பேய்கள். உடைகளை வெறுத்தாலும் கூட அழகான பேய்களாக அவைகள் இருந்த பட்சத்தில் எங்களுக்குப் பய உணர்வு வரவில்லை, மாறாக மட்டற்ற மகிழ்ச்சி மாத்திரமே எழுந்தது.

இடைவேளை விட்டார்கள். அப்போதுதான் நான் அவரைக் கண்டேன். அவர்தான் எங்கள் பாஸ்டர். கையில் பைபிள் வைத்திருக்கும் சூட்கேஸ் மற்றும் அங்கி அணிந்தவாறே எழுந்து வெளியில் சென்றார்.

கிழவியின் அடக்க ஆராதனையை முடித்துவிட்டு, கிழவியை குழிக்குள் கிடத்திவிட்டு, நேராகப் பாய்ந்து வந்து தியேட்டருக்குள் குதித்திருப்பார் என்று எண்ணுமளவுக்கு தன்னுடைய பிரசங்க அங்கியோடும், சாவுக்கு மட்டும் அணியும் கருப்பு கழுத்துப் பட்டையும் அணிந்த வண்ணம் வந்திருந்தார். இது ஒற்றைக்கண் பேய்கள் நடமாடும் படம் எனத்தெரியாமல் உண்மையான பேய்ப்படம் என்று நினைத்து வந்திருப்பாரோ என்று பேசிக்கொண்டோம். ‘அவர் எங்களைப் பார்த்து விடக்கூடாதே’ என்ற எண்ணத்தில் இடைவேளையில் நாங்கள் யாரும் வெளியே போகவில்லை.

‘படம் அற்புதமாக இருக்கிறதே!’ என்று வருந்தி பாஸ்டர் வீட்டுக்குப் போயிருக்கக்கூடும்’ என்று நாங்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே பாஸ்டர் உள்ளுக்குள் நுழைந்தார். கக்கூசுக்குள் வைத்து அங்கியைக் கழற்றி விட்டு சிவில் டிரெஸ்ஸில், கையில் ஒரு கோல்ட் ஸ்பாட் குப்பியோடு வந்தமர்ந்தார். எங்களுக்கு சிரிப்பு தாங்க முடியவில்லை. விதி யாரை விட்டது?

படம் துவங்கியதுதான் தாமதம், நாங்கள் கீச்சுக்குரலில் விளிக்க ஆரம்பித்தோம்,

ஓய் நாட்டையர் மாமோவ் !

ஓய் பரலோகமணி !

அங்கிய எங்கவோய் ?

கெழவிய பொதச்சேளே ! கெழவி என்ன சொன்னா ?

எங்கள் சத்தத்தைக் கேட்டு பக்கத்திலிருந்த ஆடியன்சுகள் கோபித்துக் கொண்டார்கள்.

எலே… நீங்க இப்புடி கூவுனா ஆளுவ படம் பாக்காண்டாமாடே? புரிய மாட்டேங்குல்லா ?

எண்ணே ! ஒங்களுக்கு சைனீஸ் மொழிலாம் தெரிமா? என்று நான் கேட்டதுதான் தாமதம் ஒருவன் அடிக்க வந்துவிட்டான். நாங்கள் பொத்திக் கொண்டு படம் பார்த்ததில் பாஸ்டர் தப்பினார். படம் முடியுமுன்னரே வெளியில் எழுந்தும் போய்விட்டார். படம் கொடுத்த கிளுகிளுப்பில் நாங்கள்தான் அவர் வெளிநடப்பு செய்ததைக் கவனிக்கவில்லை.

நாங்கள் படம் முடிந்து வந்தவுடன் பாராமுல்லா மாமா அவரது மகனைத் தூக்கிப் போட்டுத் துவைத்துவிட்டு, எங்களோடு சேர அவனுக்குத் தடை விதித்தார்.

ஆமா பெரிய குவைத் அதிபரு? அமெரிக்கா கூட சேரப்புடாதுன்னு சொல்லுகான் ! போலே தாயளி ! பத்து ரூவா எடுத்தது ஒரு குத்தமாடே? நம்மளயும் கேவலப்படுத்திட்டானே இந்த கோலப்பன் கொச்சங்கா மண்டையன்? அடேய் பாரமுல்லா கோலப்பா ! இனி நாந்தாண்டா ஒனக்கு பாரம் ! என்று கங்கணம் கட்டிக் கொண்டேன்.

தினமும் ரெண்டு ஷோ’க்கள் விகிதத்தில் அந்த ‘கோஸ்ட்’ படத்தை பத்துமுறை பாராமுல்லா பார்த்ததாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரித்தால் அது பொய்யான தகவல் என்பதும், சோத்துப் பொட்டலத்தோடு தியேட்டர் வாசலில் படுத்துக் கிடந்து, ஒருநாளில் நான்கு ‘ஷோ’க்கள் வீதம் ஆறு நாட்களில் 24 காட்சிகள் பார்த்திருக்கிறார் என்று தெரிந்தது.

இதை அவரது மனைவியிடம் போய் சொன்னால் கூட ‘அவள் என்ன தியேட்டரில் போய் பார்க்கவா போகிறாள்? என்று விட்டுவிட்டேன். அதுமட்டுமல்ல கோலப்பனின் மனைவி செல்லம்மாள் ஒரு காந்தாரி. வாய் வடசேரி வரைக்கும் நீளம். பாரமுல்லாவின் ஆகப்பெரிய பாரமும் அவள்தான். இந்தப் பாரமுல்லா கோலப்பனை வஞ்சம் தீர்க்க பிரபஞ்சம் வேறு வழியில் எங்களுக்கு அருளியது.

ஒருநாள் பாரமுல்லா குடும்பத்தோடு டவுனுக்கு போயிருந்த நேரத்தில் போஸ்ட்மேன் அவரது வீட்டின்முன் வந்து கோலப்பனைத் தேடவே ரெஜிஸ்டர் போஸ்ட் ஒன்றை எங்களிடம் தந்து அவரிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொண்டார். நான் வாங்கிப் பாக்கெட்டில் வைத்துக் கொண்டேன்.

பாரமுல்லா வீடு திரும்பியதை அறிந்து கொண்ட நான் அவரது வீட்டின் வாசலில் நின்று கொண்டு அவரைக் கூப்பிட்டேன். ஓய் கோலப்பரு ! வெளிய வாரும் ஓய் ! ஒமக்கு ஒரு சாமானம் வந்துருக்கு !

அவரது மனைவி வெளியே வந்து வந்து கேட்டாள்.

என்னலே காரியம்? வெளிய கெடந்து விளிச்சிக் கூவுத !  

இந்த ஏல வாலங்குத எடவாடெல்லாம் என்கிட்ட வேண்டாம் ! ஒனக்க வீட்டாளுக்கு ஒரு லெட்டரு வந்துருக்கு !

எங்கிட்ட கொண்டா ! நாங் குடுத்துக்கிடுதேன் !

மாமாகிட்டதான் குடுக்கணுமாம்! ரகசியம் ! மிலிட்டிரிகிட்ட இருந்து ரிஜிஸ்டர் போஸ்டுல வந்துருக்கு!

என்னைப் பார்த்துக் கொண்டே வீட்டுக்குள் பார்த்து குரல் கொடுத்தாள், “எப்பா இந்த பயல் என்னவோ ராணுவ ரகசியமாம் ! ஒம்மகிட்டதான் தருவானாம்! ஒரு எட்டு வந்து கேளும் !”

உள்ளேயிருந்து உருமிக்கொண்டே வெளியில் வந்தார் பாராமுல்லா.

என்னல விசியம் ? மொண்ணப் பயலே !

நான் சொன்னேன், இந்த லெட்டர ஒம்மகிட்ட ரெகசியமா குடுக்கணும்னு போஸ்ட் மேன் சொன்னாரு !

‘கொண்டா பாப்பம்’ என்றவாறே லெட்டரை வாங்கிப் பார்த்தவரின் முகத்தில் குழப்ப ரேகை. என்னிடம் கேட்டார், “எலேய் நீதான் நல்லா இங்கிலீசு வாசிப்பல்லா ! இந்த செவத்த படிச்சி சொல்லு ! எழவுல இந்தின்னாக்கூட நாம் படிச்சிருவேன் !” என்றார்.

என் மண்டைக்குள் காத்திருந்த நரி கடிதத்தைப் படிக்கத் துவங்கியது. அதாவது, “திரு.பாரமுல்லா அவர்களே ! உங்கள் மகன் இங்கு மிகவும் கஷ்டத்தில் உழல்கிறான். அவன் சொல்லச் சொல்ல நான் எழுதும் மடலாவது, அப்பா ! நீங்கள் ரிட்டயர்டு ஆகிப் போன பிற்பாடு காஷ்மீர் எங்களுக்கு கவலையின் நகரமாக மாறிப் போயிருக்கிறது. அம்மாவின் முகம் ஆப்பிள் போலவே வாடிப்போய் விட்டது. எங்கள் மூத்த தாயையும், சகோதரர்களையும் அழைத்துக் கொண்டு காஷ்மீருக்கே வந்துவிடுங்கள் அன்புத் தகப்பனே ! இப்படிக்கு, வி.பி.சிங்”

என்று நான் முடிக்கவும் பாரமுல்லா பரண்மீது தொங்கிக் கொண்டிருந்தார். முற்றத்தில் காயப்போட்டிருந்த விறகுக்கட்டை சத்தமாகப் பொளிந்து கொண்டிருந்தது.

“சாவு தாயோளி !” நான் வீட்டுக்கு வந்துவிட்டேன்.

மேலெங்கும் வழிந்த ஒத்தட எண்ணையோடு வேறு ஒரு மொழிபெயர்ப்பாளரின் உதவியோடு மொழிபெயர்க்கப்பட்டு உண்மை தெரிந்திருக்கிறது.

அந்தக் கடிதமானது இந்திய ராணுவத்தில் இருந்து பென்சன் விஷயமாக பாரமுல்லாவின் உயிர்த்திருப்பு குறித்த உறுதிக்காக தற்காலத்தில் எடுக்கப்பட்ட ஒரு குடும்ப போட்டோ அனுப்புமாறு வந்திருந்தது. வருடாவருடம் அதுமாதிரி வரக்கூடியதுதான் என்றாலும், இந்த ஆண்டு அதிசயமாக ஆங்கிலம் படித்து வைத்திருந்த சப்பாத்தி ஒருவன் கோலப்பனை ஒரு பெரிய மேதாவி  என்று நினைத்து அந்தக் கடிதத்தை ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறான்.

பாரமுல்லா நேராக எங்கள் வீட்டின் முன்வரவே அப்பா செடிக்குத் தண்ணீர் ஊற்றிக் கொண்டு நிற்பதைப் பார்த்து , ஓய் மச்சான் ! ஒம்ம மொவன் பாத்த வேலை தெரியுமா உமக்கு ?

பாரமுல்லாவின் கோலத்தைக் கண்ட எங்கள் அப்பா அவரிடம், “என்னவோய் ! வைக்கோலு லாரீல அடிபட்டுட்டீரா ? என்று கேட்கவே பாரமுல்லாவுக்குக் கண்ணீர் கட்டிவிட்டதில் கதை வெளியில் வந்தது. அப்பாவும் சிரித்துக் கொண்டே, “சின்னப் பயல்கிட்ட லட்டர் குடுத்தாம்லா ! அந்த போஸ்ட்மேன் மண்டப்பயல்’கிட்டப் போயி கேளும் !” என்று சொல்லி கோலப்பனை அனுப்பியிருக்கிறார்.

அப்பா நேராக என்னிடம் வந்து, அந்த பாரமுல்லாவ யாம்டே தண்டவாளத்துல படுக்க வச்சிருக்கு ! செவம் ஒனக்கு வேற வேலையே கெடையாதா ? என்று சலித்துக் கொண்டார். நான் லயன் காமிக்ஸில் டெக்ஸ்வில்லரின் “ பாதாளத்தில் ஒரு படுக்கையறை “ படித்துக் கொண்டிருந்தேன்.

அடுத்தநாள் பாரமுல்லாவும், அவரது மனைவியும் போஸ்ட் ஆபீஸில் போய் போஸ்ட்மேனிடம் சண்டை இழுக்கவே, போஸ்ட்மேன் இப்படிச் சொல்லியிருக்கிறார்.

“எண்ணே ! நா ஒங்ககிட்டதான் லெட்டர தரணும்னு நெனச்சிருந்தேன். நா அன்னிக்கி வரும்போது நீங்க அந்த பரிமளாக்கா’கிட்ட ரொம்ப ரகசியமா பேசிக்கிட்டிருந்தீய ! நாந்தான் எதுக்கு ஒங்கள தேவையில்லாம இடைஞ்சல் பண்ணணும்னு திரும்பி வந்துட்டேன். அடுத்த நாள் வரம்போ ஒங்க வீடு பூட்டிக் கெடெந்திச்சி…. முக்கியமான லெட்டர்லா ! அதான் கொடுத்தனுப்புனேன்…. போட்டுமாண்ணே ! என்று கேட்டுவிட்டு நடையைக் கட்டியிருக்கிறார்.

பரிமளாதான் அந்த ஊரின் தாகம் தீர்க்கும் தண்ணீர்க்குடம் ! இனிமேலும் பாரமுல்லாவின் பரிதாபத்தைக் கேளீரோ மாக்காள் !

***

,

3 COMMENTS

  1. ரொம்ப நாள் கழிச்சு வாய் விட்டு சிரிக்கும் படியான கதை வாசிக்க கிடைத்தது! யாவரும் குழுவிற்கும் எழுத்தாளருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்! ?

  2. சிரிப்புடனே படித்து முடித்தேன். உங்கள் நாகர்கோவில் பாசை எனக்கு சிறிதளவு தான் பரிச்சயமாக இருந்தது . ஒவ்வொரு வார்த்தைகளையும் புரிந்து கதையை ரசித்து படித்தேன். ஒரு சந்தேகம் .இது நிஜ கதையா அல்லது கதையா? சூப்பர். இப்போ அந்த பாரமுல்லா மாமா இருக்கிறார்களா அவர் இந்த கதையை படித்தால் உங்களை என்ன சொல்வார்?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here