Tuesday, March 19, 2024
Homeஇதழ்கள்2021 இதழ்கள்ஒரு விண்ணப்பம்

ஒரு விண்ணப்பம்

வணக்கம் நண்பர்களே..

முழுக்க முழுக்க தனிப்பட்ட காரணங்களால் இதழ் பதிவேற்றம் காண மிக மிக தாமதமாகிவிட்டது. படைப்புகளை அனுப்பி பொறுமையோடு காத்திருந்த படைப்பாளுமைகளுக்கு எமது நன்றி.

இணைய இதழ் என்பது காலத்தின் கட்டாயமாக என்பதைக் காட்டிலும் வரப்பிரசாதமாக என்று எடுத்துக்கொள்வதே சரியானது. நின்று போன எத்தனையோ சிற்றிதழ்கள் தன்னை தக்க வைத்திருக்கும் அல்லவா?

சோர்வு மிக்க இந்த ஆண்டில், படைப்பூக்கம் மிக்கவர்களாய் தங்களை ஈடுபடுத்திக் கொண்டவர்கள். இந்த காலத்தில் மிக முக்கியமான பணியை ஆற்றிவருகிறார்கள். அவ்வகையில் மணி எம்.கே. மணி, மயிலன் ஜி சின்னப்பன், சுஷில்குமார் இம்மூவரையும் சொல்ல வேண்டும், மூவரின் கதைகளும் நம் இதழில். ஏற்கனவே சொன்னது போல படைப்பூக்கத்திற்கான காலம் என்று மெய்பிக்கும் வகையில் கவிஞர்கள் பச்சோந்தி மற்றும் பாலைவன லாந்தர் ஆகிய இருவரும் தங்கள் படைப்புகளை வேறு ஒரு வடிவத்திலும் கொணர்ந்துள்ளார்கள். இருவரின் பங்களிப்பும் பாராட்டப்பட வேண்டியதே.

அதுதவிரவும் தனக்கேயான ரமேஷ் ரக்சன் பாணி கதையும், முற்றிலுமே எதிர்பாராத இளங்கோ முத்தய்யாவின் கதையும், ரெ.விஜயலெட்சுமியின் சிறுகதையும், முதல்கதையாக ஜெய சுதனும் பங்களித்திருக்கிறார்கள்.

ஒவ்வொரு இதழிலும் நரேன் மொழிபெயர்த்து வரும் மொத்த சிறுகதைகளையும் கவனித்து வந்தால் கதைகளின் தொடர்ச்சிக்காக அவர் செய்து வரும் அற்பனிப்பும் உழைப்பும் தெரியவரும்.

எப்போதும் போல் மீரா மீனாட்சியின் கவிதை, எப்போதும் போலற்ற வேல்கண்ணனின் கவிதை என, நா.பெரியசாமி, கார்குழலி, ஆனந்தகுமார், நந்தாகுமாரன் ஆகியோரின் கவிதைகள் இடம்பெற்றுள்ளன.

பெகாஸஸ் பற்றிப் பேசப்படும் காலத்தில் ஸ்நோடெனின் நூல் குறித்த கட்டுரையும் ரூபன் சிவராஜாவின் family man குறித்த கட்டுரையும் கொரோனா குறித்த கட்டுரையும், கணபதி சுப்ரமணியத்தின் புதிய நூலான ‘ஓவியம் காலம், வெளி, இசை & ஓவியம்’ குறித்த வேத நாயக்கின் கட்டுரை.

எழுத்தாளர் ஜெயந்தி சங்கரின் நேர்காணல், கவிஞர் மொழிபெயர்ப்பாளர் மதுமிதா அவர்கள் செய்து கொடுத்துள்ளார்.

தொடராக வந்து கொண்டிருக்கும் ரூபன் சிவராஜாவின் ஒடுக்கப்பட்டவர்களுக்கான அரங்கு தொடருடன், சிவகுமார் முத்தய்யாவின் டெல்டா ஊதாரி புதிய தொடராக இந்த மாதத்திலிருந்து… நான் முக்கியமாக சொல்ல வந்தது இதுதான்.

இந்த மாதத்திலிருந்து… இந்த இதழிலிருந்து இருமாத இதழாக வெளிவரும். இருண்ட காலத்திலிருந்து வெளிச்சம் நோக்கி பயணிக்கையில் எத்தனையோ விதத்தில் இடர்கள் குறுக்கே நிற்கையில் தொடர்ந்து செயல்படுவது மட்டுமே ஒரே இலக்கு. அதனால் இருமாத இதழாக இனி யாவரும் இதழ் வெளிவரும்.

மற்றபடி யாவரும் புதிய முகங்களுக்கும், பரீட்சார்த்தங்களுக்குமே அதிகம் முன்னுரிமை கொடுக்கும் என்பது உங்களனைவருக்கும் தெரிந்ததே. ஒவ்வொரு இதழிலும் கடந்த இதழைக் காட்டிலும் மேம்பட்டதாக இருத்தல் வேண்டும் என்கிற குறைந்தபட்ச விருப்பத்தோடு தான் நகர்ந்து வருகிறோம்.

உங்கள் கருத்துகளை பகிர்வது மட்டுமே எங்களை உற்சாகமாக நகர்த்தும்.. அதுவே எங்களது விண்ணப்பம்

மாறா அன்புடன்

ஜீவ கரிகாலன்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular