Friday, March 29, 2024
Homesliderஒரு தொல்‌ கானகச்‌ செய்தி

ஒரு தொல்‌ கானகச்‌ செய்தி

யவனிகா ஸ்ரீராம்

பர்ணா ராய்‌, தில்லி மருத்துவப்‌ பல்கலைக்கழகத்தில்‌ பாலியல்‌ மற்றும்‌ ஊட்டச்சத்துடனான உடல்‌ ஆரோக்கியமும்‌ பயிற்றுவிக்கும்‌ மனித வளத்துறைப்‌ பேராசிரியர்‌. உலகின்‌ பிரபல ஆங்கில நாளேடுகளில்‌ வெளிவந்துள்ள இவரது பாலியல்‌ பற்றிய கட்டுரைகள்‌ அதிக வரவேற்பைப்‌ பெற்றவை. “மனிதரில்‌ இனவிருத்திக்கான காமமும்‌ கேளிக்கைக்கான காமமும்‌” என்ற நூலுக்காக உலக சுகாதார நிறுவனத்தின்‌ விருதினைப்‌ பெற்றுக் கொண்டவர்‌. உலக மயமாதலில்‌ “பாலுறவுகளின்‌ விழ்ச்சி” என்ற ஆய்வு நூலையும்‌ “காமம்‌ ஒரு இயந்திரவியல்‌ தொழிற்சாலையின்‌ சமூக இயக்கம்‌” என்ற நூலை எழுதிய பெர்னார்டோ ரிச்சர்ட்ஸன்‌ என்ற அமெரிக்க “எதிர்கால உளப்பகுப்பாய்வு அறிஞருக்கு ஒரு மறுப்பு” என்ற நூலையும்‌ எழுதி மேலதிக விவாதங்களை உண்டாக்கியவர்‌. தனது நாற்பதாவது வயதினை நெருங்கிக்கொண்டிருக்கும்‌ இவர்‌. உலகின்‌ பல பாகங்களுக்கும்‌ தன்‌ ஆய்வுகளுக்காகப்‌ பயணிக்கிறார்‌. இவரை நேர்கண்டவர்‌ சுற்றுச்சூழல்வாதியும்‌ அடித்தள மக்கள்‌ பண்பாட்டு ஆய்வுக்காக பாட்டியாலா பல்கலைக்கழகத்தில்‌ முனைவர்‌ பட்டம்‌ பெற்ற டாக்டர்‌ குமாரதாஸ்‌ குப்தா.

ஆங்கிலத்திலிருந்து தமிழில்‌ சுருக்கப்பட்ட நேர்காணல்‌ இது.

விரிவாகக்‌ காண www.indianhumansexualexploitation.com, www.aestheticforwomanandman.com என்ற வலைத்தளங்களைப்‌ பயன்படுத்தலாம்‌. தமிழில்‌: இளங்கோவன்‌.

குப்தா: நல்லவகையான உடலுறவை ஆரோக்கியமான வலுவுடன்‌ அனுபவித்து வந்திருக்கும்‌ சமூகம்‌ அல்லது இனக்குழு தன்‌ எல்லா வரலாற்றுக்‌ காலங்களிலும்‌ புத்துயிர்ப்பையும்‌ வளர்ச்சியையும்‌ அடைந்து வந்திருக்கிறது என்ற உங்கள்‌ கூற்று பிரசித்தமானது. உங்கள்‌ இளம்பருவ நாட்களைப்‌ பற்றி நினைவு கூர்ந்துவிட்டு பிறகு ஆய்வுகளுக்குள்‌ செல்லலாம்தானே?

அபர்ணா: என்‌ இளம்பருவம்‌ பெரும்பாலும்‌ படிப்பறைகளில்‌ கழிந்ததாகத்தான்‌ ஞாபகம்‌. அதிக விளையாட்டுத்தனங்கள்‌ இல்லாத ஆனால்‌ அறிவார்ந்த நல்ல சூழலில்‌ வளர்க்கப்பட்டேன்‌. எனது பாட்டி கிராமத்துச்‌ செவிலி போன்றவர்‌. பிரசவம்‌ பார்ப்பதில்‌ திறமையானவர்‌. சுடுநீர்‌. சுத்திகரிக்கப்பட்ட சிறுகத்தி, ஆவியில்‌ வெளுத்த துண்டுத்துணிகள்‌ இவற்றைக்‌ கொண்டே எளிதில்‌ தாயிடமிருந்து குழந்தையை பத்திரமாக எடுத்துத்தருவார்‌. இன்றைய நவீன மருத்துவத்தைப்போல அக்காலங்கள்‌ பிள்ளைப்பேற்றினை ஒரு நோயாகக்‌ கருதவில்லை. மேலும்‌ அக்காலத்துப்‌ பெண்கள்‌ என்‌ பாட்டியிடம்‌ வந்து தங்களது குடும்பக்‌ கதைகளையும்‌ அதன்‌ புகார்களையும்‌ பகிர்ந்து கொள்வார்கள்‌. பாட்டி மிகப்‌ பொறுமையாக, நாசுக்காக படுக்கை முதல்‌ வாழ்வில்‌ சிக்கனமாக இருப்பது வரையிலான விஷயங்களையும்‌ அதோடு பாலியல்‌ பிரச்சனைகளையும்‌ எளிதாக விளக்கி அனுப்பிவைப்பார்‌. அப்படியான சூழலிலிருந்து இன்றைக்கு நான்‌ பாலுணர்வு சார்ந்த ஆய்வுகளுக்குள்‌ வந்து அதன்மூலம்‌ பலருக்கும்‌ வாழ்வைச்‌ சுலபமாக்கும்‌ பணியில்‌ ஈடுபட்டிருக்கிறேன்‌ எனில்‌, எனது பாட்டிதான்‌ அதற்கு முன்னோடி. குடும்பம்‌ என்ற அமைப்பு அடிப்படையில்‌ காமத்திற்கு அவ்வளவு ஞாயம்‌ செய்யவில்லை என்பது அப்போது எனது அபிப்பிராயமாக இருந்தது. அதனால்தான்‌ என்னவோ பள்ளிப்பருவத்திலேயே எனது சினேகிதிகள்‌ மற்றும்‌ அருகாமை உறவுப்‌ பையன்களிடம்‌ பாதுகாப்பான உடலுறவை நான்‌ மேற்கொண்டு வந்தேன்‌. கல்லூரிக்‌ காலங்களில்‌ விடுதிகளில்‌ பெண்கள்‌ என்ன செய்துகொள்வார்கள்‌ என்பதை அறியாதவர்கள்‌ இன்றும்‌ யாரும்‌ இருக்கிறார்களா எனத்‌ தெரியவில்லை. பிறகு எனக்கு அது பசித்த நேரம்‌ உணவு உண்பது போல்‌ சகஜமாகிவிட்டது. ஆயினும்‌ ஆண்களிடம்‌ இன்றுவரை எனக்கு ஒரு ஏமாற்றமே மிஞ்சி இருக்கிறது. இப்போது அதைப்பற்றி பேசிப்‌ பயனில்லை. திருமணமாகி பிரிந்து ஒரு குழந்தையும்‌ விடுதியில்‌ வளர்கிறாள்‌. மற்றபடி. இப்போது எனக்கு வேறு வேலைகள்‌ அதிகரித்துவிட்டன.

குப்தா: ஆதிகாலம்‌ முதல்‌ இனவிருத்திக்‌ காமத்திற்கு அப்பால்‌ அதிகமும்‌ கேளிக்கை சார்ந்த காமமே நிலவிவந்ததாகச்‌ சொல்லும்‌ நீங்கள்‌, அதற்கான ஒரு வரலாற்றுப்‌ பின்புலத்தை இங்கு சுருக்கமாக விவரிக்கமுடியுமா?

அபர்ணா: மிருக உணர்ச்சிக்குப்‌ பிந்தைய மனிதன்‌ என்கிற கருதுகோள்‌ தோன்றுவதற்கு முன்பே பழங்குடி வாழ்வின்‌ மாயங்களிலும்‌ சடங்குகளிலும்‌ புணர்ச்சியிலும்‌ ஈடுபட்டுக் கொண்டிருந்த மனிதர்களுக்கு குழந்தைப்‌ பிறப்பிற்கும்‌ உடலுறவிற்குமான தொடர்புகள்‌ தெரியாமலிருந்தது. தீய ஆவிகள்‌ அல்லது சுற்றுப்புறத்தில்‌ இருந்து ஏதோ ஒன்று பெண்களின்‌ வாய்வழியாக ஊடுருவி குழந்தை உருவாகி விடுவதாக அவர்கள்‌ நம்பினார்கள்‌. இன்றுகூட மனிதர்கள்‌ குழந்தை பிறந்தால்‌ ‘கடவுள்‌ கொடுத்த வரம்‌’ என்றுதானே தன்னை அறியாமல்‌ சொல்லிக்‌ கொள்கிறார்கள்‌. ஆக கேளிக்கைசார்‌ காமம்தான்‌ அவர்களுடைய இயல்பூக்கமாக இருந்திருக்கிறது. பிறகு அஸ்டெக்‌, மாயா போன்ற பெரும்‌ ஆதிக்க இனக்குழுக்கள்‌ உருவானதும்‌ அவர்கள்‌ தங்களது சந்ததிகளின்‌ வலிமைகளை அறிந்து கொண்டதும்‌ அவற்றைப்‌ பெருக்கிக் கொள்ளும்‌ பொருட்டே வேறுவேறான பல பழங்குடி ஆண்களைப்‌ பலியிட்டு அவர்களது பெண்களைக்‌ கவர்ந்து புணர்ந்து தங்கள்‌ தொகைகளைப்‌ பெருக்கிக்‌ கொண்டார்கள்‌. அது ஒரு கேளிக்கைச்‌ சடங்காகவே பெரு வெளியில்‌ நடந்தேறியது. அதன்பிறகு பெரிய சாம்ராஜ்ய நோக்கம்‌ கிரேக்கத்தில்‌ உருவானபோது பிரபுக்கள்‌ மற்றும்‌ அடிமைகள்‌ என்கிற மனித இரண்டக நிலையில்‌ அடிமைகளை பெரும்‌ வட்ட அரங்குகளில்‌ புணர்ச்சி செய்யச்‌ சொல்லி எந்த குற்றவுணர்ச்சியும்‌ அற்று ஆண்கள்‌. பெண்கள்‌, குழந்தைகள்‌ என கேலரிகளில்‌ அமர்ந்து அதை வேடிக்கை பார்த்து ரசித்தார்கள்‌. ஒருவிதமான Exhibitional Recreation நாளெல்லாம்‌ நடந்து வந்திருக்கிறது. அக்காலத்தில்‌ ஹிப்போகிராட்ஸ்‌ என்கிற திறமையான கேளிக்கை நிகழ்ச்சியின்‌ அரங்காளன்‌ சிங்கங்களையும்‌ பெண்களையும்‌, பெண்‌ x ஆண்களையும்‌ புணரவைத்து பிரபுக்களுக்கு உற்சாகத்தை ஊட்டினான்‌.

ஒருவருக்கொருவர்‌ சண்டையிட்டு இறுதியில்‌ மடியும் வரை போரிடும்‌ அடிமைகளின்‌ அக்கேளிக்கை கொடுரமாகத்தான்‌ இருந்தது. உண்மையைச்‌ சொன்னால்‌ அடிமைகளை ஏலம்‌ எடுத்து உபரி உடல்களாக பொதுவில்‌ அழிப்பது ஒரு கேளிக்கையாகவே இருந்தது. கிரேக்க யுத்தம்‌ முழுவதும்‌ அல்லது டிராயன்‌ போர்கள்‌ என்று சொல்லக்கூடிய அனைத்தும்‌ காமத்திற்கும்‌ பெண்களுக்கும்‌ இவ்வகையான கேளிக்கைக்குமாக ஒரு மையவெளியில்‌ நடந்தது என உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இது அரசதிகாரம்‌ அல்லது ஆண்மையத்தின்‌ தோற்றுவாய்‌ என்பதைவிட, இனவிருத்திக்கான காமத்துக்கு வெளியே கேளிக்கைக்கான காமத்திற்காக நடந்த அல்லது ஒருவகையில்‌ உச்சம்‌ பெற்றிருந்த நிலை என ஒரு தொன்ம வரலாற்றுவியலை பாலியல்‌ சார்ந்து நாம்‌ பின்தொடரவும்‌ முடியும்‌. சமூகமயமாக்கம்‌ அல்லது உடைமைமயமாக்கம்‌ எனும்‌ காலகட்டத்தில்தான்‌ சந்ததி என்கிற இனவிருத்திக்காமம்‌ புனிதம்‌ பெறுகிறது. ஏதேன்‌ தோட்டத்தில்‌ கேளிக்கையாக இருக்கும்படிதானே சொல்லி தேவனும்‌ ஆதாம்‌ ஏவாளைப்‌ படைக்கிறார்‌.

குப்தா: இன்றைய சமகாலத்திலும்‌ பழம்‌ கிரேக்கத்தின்‌ காமம்‌ சார்ந்த தன்மைகள்‌ அல்லது நாம்‌ இன்று கருதும்‌ நாகரீகம்‌ சாராத வன்முறைகள்‌ தொடர்கின்றன அல்லவா?

அபர்ணா: இருக்கத்தானே செய்கிறது. மனிதப்‌ பாலுறவை மனிதர்களே வேடிக்கை பார்க்கும்‌ இன்றைய பாலுறவுக்‌ காட்சிகள்‌ கேளிக்கை மையங்களில்‌ கண்முன்பாகவே நடக்கும்‌ புணர்ச்சிக்‌ கலைகள்‌ காபரே போன்றவை மனித நனவிலிக்குள்‌ உறங்கிக்கிடக்கும்‌ தொன்மத்தின்‌ எச்சங்கள்தான்‌. ஓவியங்கள்‌, சிற்பங்கள்‌ நடனக்கலைகள்‌ அனைத்திலும்‌ விரசபாவம்‌, சிருங்காரம்‌, மிகைப்படுத்தப்பட்ட பாலியல்‌ உறுப்புகள்‌ பலவாறான வித்தைகள்‌ மீண்டும்‌ மீண்டும்‌ உருவாக்கப்பட்டு வந்தவண்ணம்தானே இருக்கிறது. தனது சொந்த நிர்வாண உடலை கண்ணாடியில்‌ பார்த்து வந்தது தொடங்கி இன்றைய புகைப்பட கருவியுடன்‌ கூடிய நவீன அலைபேசிகளில்‌ இளம்‌ பெண்கள்‌. ஆண்கள்‌ முதலில்‌ தங்களது அந்தரங்க உறுப்புகளை படமெடுத்துப்‌ பார்த்தும்‌ ஒருவருக்கொருவர்‌ பரிமாறிக் கொள்கின்றனர்‌. இன்றைய குடும்பங்களில்‌ மளிகைச்‌ சாமான்கள்‌ வாங்குவது மாதிரி நீலப்பட வட்டுகள்‌ வாங்கப்படுகின்றன. போக, திருவிழாக்கள்‌. ஹோலிப்‌ பண்டிகைகள்‌ நடக்கும்போது காமம்‌ ஒரு சீற்றத்துடனும்‌ வன்முறையுடனும்‌ அக்கேளிக்கைக்குள்‌ ஊடுருவி இச்சையுடன்‌ திரிவதைப்‌ பார்த்துக் கொண்டுதானே வருகிறோம்‌. இத்தகையப்‌ பொதுவெளிக்குப்‌ பின்னால்‌ மதம்‌ அவர்களை குடும்பத்திற்கு அடியில்‌ பணியுமாறு அச்சுறுத்தி கலாச்சார கண்காணிப்போடு வன்முறைகளையும்‌ ஏவி ஆக இரண்டையும்‌ அவைகளை ஆட்டிப்படைக்கின்றன என்பதையும்‌ கவனத்தில்‌ கொள்ளவேண்டும்‌. சென்ற நூற்றாண்டில்‌ குறிப்பாக இந்தியாவில்‌ சில இனக்குழுக்களுக்கிடையே தங்கள்‌ வீட்டுப்‌ பெண்களை, விதவைகளை ஒரே ஒருநாள்‌ மட்டும்‌ பொதுவெளியில்‌ சென்று காமம்‌ அனுபவித்துவிட்டு திரும்பி அவர்களை விட்டுக்குள்‌ ஏற்றுக்கொள்ளும்‌ பழக்கம்‌ இருந்து வந்துள்ளது. யோசித்துப்‌ பார்த்தால்‌ இன்றுவரை பழங்குடிகளுக்கு அது ஒரு பொருட்டே அல்ல.

குப்தா: உண்மைதான்‌. ஆனால்‌ இத்தகைய கேளிக்கை சார்ந்த காமத்தால்‌ ஆப்ரிக்காவில்‌ இரண்டிற்கு ஒருவர்‌ வீதம்‌ எய்ட்ஸ்‌ நோய்‌ பரவிவருவதும்‌ இந்தியாவில்‌ அது தொடர்ந்த அச்சுறுத்தலாக இருப்பதும்‌ குறித்து நாம்‌ பேசவேண்டியிருக்கிறது.?

அபர்ணா: “உலகமயமாதலில்‌ பாலுறவுகளின்‌ விழ்ச்சி” என்ற எனது புத்தகத்தில்‌ இதுபற்றி மிக விரிவாக எழுதியுள்ளேன்‌. பாலுறவிற்கும்‌ ஒரு தொற்றுநோய்க்குமான ஒப்பந்தம்‌ அநேக உயிரிழப்புகளுக்குக்‌ காரணமாகிறது என்றால்‌ அது ஆய்வகங்களில்‌ நடக்கும்‌ உயிரியல்‌ சதி என்றுதான்‌ முடிவுகட்ட வேண்டியிருக்கிறது. எய்ட்ஸ்‌ நோயால்‌ உலகில்‌ பாதிப்பேர்‌ அழிந்துபோவார்கள்‌ என நம்பவைப்பது ஊடக முயற்சி மட்டுமல்ல. எதிர்கால மருந்துகளின்‌ சந்தைகளுக்காகவும் தான்‌ என்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

உண்மையில்‌ புற்றுநோய்கள்‌. ஊட்டச்சத்துக்குறைவு. மூளைச்செல்‌ அழிவு, இதயநோய்‌, நீரிழிவு. இயற்கைப்‌ பேரிடர்கள்‌ மற்றும்‌ விபத்துகள்‌, குண்டுவெடிப்புகள்‌ மூலமாகத்தான்‌ உலகில்‌ அதிகம்பேர்‌ இறந்துபோகிறார்கள்‌. மற்றபடி பாலுறவு நாட்டம்‌ இதற்குள்‌ வேட்கையுடன்‌ பலவகையில்‌ தப்பிப்பிழைத்து பரிணாமம்‌ அடைந்து கொண்டிருக்கிறது. அத்தகைய மனித வளத்தை, அதன்‌ காமத்தை வளமாக தக்கவைத்துக்கொள்ள வேண்டும்‌ என்பதைத்தான்‌ நான்‌ அழுத்தமாகக்‌ கூற முயற்சிக்கிறேன்‌.

குப்தா: நீங்கள்‌ இளமையில்‌ பாதுகாப்பாக உடலுறவு மேற்கொண்டதைப்‌ பற்றி குறிப்பிட்டீர்கள்‌. “பாலுறவு ஒரு சமூக எந்திரமயமான நிகழ்வுப்போக்கு” என்கிற ரிச்சர்ட்சனின்‌ புத்தகத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளீர்கள்‌. இரண்டையும்‌ எப்படி எடுத்துக்கொள்வது?

அபர்ணா: பாதுகாப்பான உடலுறவு என்பது ஆரோக்கியமான திருப்தியை உருவாக்கும்‌ இச்சையைக்‌ குறிக்கிறது. கேளிக்கையான உடலுறவிற்கு பன்மைப்பட்ட உடல்களை தேர்ந்துகொள்ளும்‌ ஒரு பெண்‌, இனவிருத்திக்கு ஆரோக்கியமான, வலிமையான ஒரு ஆணையே தேர்ந்தெடுப்பாள்‌ என்பது ஒரு இனவிருத்தி சார்ந்த உளவியல்‌ உண்மை. அதற்கான சமூக வாய்ப்புகள்தான்‌ பெண்களுக்கு இங்கு இல்லை. பயம்‌ காரணமாக உறையணியும்‌ இன்றைய பாலுறவு சகிக்க முடியாதது. புணர்ச்சிக்குப்பின்‌ கிழிந்துவிட்ட ரப்பர்‌ துணுக்குகளை ஒரு நாள்‌ முழுக்க குனிந்து எடுத்த தோழியின்‌ எரிச்சலூட்டும்‌ முகம்‌ ஞாபகத்திற்கு வருகிறது. எய்ட்ஸ்‌ போன்ற நோய்கள்‌ 1980-களுக்குப்‌ பிறகுதான்‌ மனித உயிர்களை ஆட்கொள்ளத்‌ தொடங்கியது என்பதே அதைச்‌ சந்தேகத்துக்குள்ளாக்குகிறது அதற்கு முன்னான பால்வினை நோய்களைக்‌ கட்டுப்படுத்த நாம்‌ பூஞ்சைக்‌ காளான்களைப்‌ பயன்படுத்தி வெற்றி காணவில்லையா?

உலகின்‌ உயிரியல்‌ சமன்பாடு தெரியாதவர்கள்தான்‌ இப்படி கதைவிட்டுக்‌ கொண்டிருப்பார்கள்‌. டினோசர்கள்‌ அழிந்துவிட்டன என்று நாம்‌ நம்புவது அது இருந்ததாகச்‌ சொல்லப்படுவதையும் சேர்த்துதானே. ரிச்சர்ட்சனுக்கு மறுப்பு என்பது அவர்‌ பாலுறவை தொழிற்சங்க செயற்பாடுபோல விமர்சிப்பதிலிருந்து தொடங்குகிறது. தேவைக்கான உற்பத்திப்‌ பொருளுக்கும்‌ மனித இயல்பூக்கமான காமத்திற்குமான முரண்பாட்டில்‌ குடும்பம்‌ சமூகம்‌ என்ற இரண்டு பாரிய தொழிற்சாலைகளின்‌ போட்டிமயமான மோதல்‌ நடக்கிறது என அவர்‌ எடுத்துக்காட்டுகிறார்‌. இயந்திரமும்‌ மனித உடலும்‌ ஒன்றுதான்‌. அவற்றில்‌ இருவேறு உற்பத்திகள்‌ நடக்கின்றன எனும்போது கேளிக்கை சார்ந்த காமத்தின்‌ வாய்ப்புகளை சந்தைமயமாக்கத்திற்குள்‌ தள்ளிவிடுகிறார்‌. அவர்‌ சொல்வதைப்‌ பார்த்தால்‌, உலகம்‌ முழுக்க முதலீடு சார்ந்த புணர்ச்சிதான்‌ நடக்கமுடியும்‌. மேற்சொன்ன இருவேறு உற்பத்திகள்‌ தங்களுக்குள்‌ ஒன்றையொன்று அழிக்கும்‌ செயல்பாடு என அவர்‌ மேலும்‌ தொடங்கும்போது நாம்‌ காமம்‌ என்கிற கிளர்ச்சியை, அதன்‌ வேட்கையை நிறுவனமயமாதலில்‌ இருந்து அமைப்பு சாரா உதிரித்‌ தன்மைக்கு அல்லது தன்னிலைக்கு உருவி எடுக்க வேண்டியிருக்கிறது.

குப்தா: குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும்‌. ஒரு சுற்றுச்சூழல்வாதி என்கிற முறையில்‌ நீங்கள்‌ சொல்லும்‌ காமத்திற்கான மறைவிடத்திற்குத்‌ தானே அல்லது சமூகமயமாதல்‌ என்கிற பெரும்‌ குடும்ப வழக்கிற்காகத்தானே நாம்‌ வனங்களையும்‌ பல்லுயிர்ப்‌ பெருக்கத்தையும்‌ அழித்து நாடு. நகரங்களை நிலைநாட்டினோம்‌. இன்றைய காமம்‌ சார்ந்த தனியுடைமைக்‌ குடும்பங்களின்‌ தேவைகளுக்காகத்‌ தான்‌ இத்தனை தொழிற்சாலைகளும்‌. விவசாய நிலங்களும்‌ மனித உறவிற்குள்‌ அடைக்கப்பட்டன. ஆக, ரிச்சர்ட்சன்‌ கூறுவதுபோல. இரண்டு வகையான இயந்திரமய போக்கில்தானே உலகப்‌ பரிவர்த்தனை நடக்கிறது?

அபர்ணா: இயந்திரங்கள்‌ இயந்திரங்களை உருவாக்குகின்றன. மனிதன்‌ ஒரு இயந்திரம்‌ என்றால்‌ மேற்சொன்னவை சரிதான்‌. ஆனால்‌ உடலுறவில்‌ இயந்திரத்தனமாக இருக்கக்கூடாது என்பது விதி உண்மையில்‌, இன்று பெண்களின்‌ யோனிக்குள்‌ ஆண்கள்‌ தங்கள்‌ உறுப்புகளைக்‌ கொண்டு சுயமைதுனம்தான்‌ செய்கிறார்கள்‌. தங்கள்‌ உச்சத்தைப்‌ பெற அவர்கள்‌ ஏன்‌ புணர்ச்சி நேரங்களை புனைவின்பமின்றி குறைத்துக்கொள்ளுகிறார்கள்‌ எனத்தான்‌ அவர்களைக்‌ குற்றம்சாட்ட வேண்டியிருக்கிறது. பாலியல்‌ விருப்பம்‌ அல்லது வேட்கை என்பது பெண்களைப்‌ பொறுத்தமட்டில்‌ ஒன்று, இரண்டு, மூன்று என மேல்நோக்கிச்‌ சென்று நாம்‌ எதிர்பார்க்கும்‌ ஒரு ஒழுங்கில்‌ உச்சநிலை அடைவதல்ல. அவள்‌ உடலில்‌ பாலியலின்‌ தொடுபுள்ளிகள்‌ ஆயிரமாயிரம்‌ உள்ளன. பாலுறவின்‌ போது ஆணுக்கு மேல்‌, நுனி, கீழ்‌ என கூர்மைப்படுத்தப்பட்டிருக்கும்‌ உச்சம்‌, பெண்ணைப்‌ பொறுத்தவரையில்‌ நடுவில்‌ கரைகளை மீறி வேகமெடுத்துப்‌ போகும்‌ அடி ஆற்றலுடன்‌ இருக்கிறது. அனைத்தையும்‌ கூடவே வேறு சிலதையும்‌ அடித்துக்கொண்டுப் போகும்‌ பன்மைப்பட்ட உச்சநிலைப்‌ புள்ளிகள்‌ பக்கவாட்டில்‌ தன்‌ அலைகளைச்‌ செலுத்துகின்றன. காமம்‌ அவளது உடலின்மேலே மாய்மை அடைகிறது. தயார்‌ செய்தல்‌, பேசுதல்‌ போன்றவற்றுக்கும்‌ திடீர்‌ தாக்குதலுக்கிடையே உச்சம்‌ பற்றிய புனைவு தொடங்கி அவளது மயிர்க்கால்கள் வரை விரவி தீண்டலுக்குத்‌ தயார் நிலையில்‌ இருக்கின்றன. மிகக்குறைந்த விருப்ப நேரத்தில்‌ ஒரு வலிமையான ஆனால்‌ இதமாக வலியூட்டக்கூடிய அல்லது மிகச்‌சுலபமான கூட்டுக்கலவி என அவள்‌ உடலின்‌ பரப்பின் மீது ஒரு காமம்சார்‌ நிறுவன இயக்கமே தேவைப்படுகிறது. அப்படியில்லாமல்‌ மையப்புணர்ச்சிக்கென தக்கவைக்கப்படும்‌ ஒரு ஒற்றை ஆண்‌ என்பது அவளின்‌ வாழ்நாள்‌ வேட்கையைச்‌ சுருக்கி பல்வேறு திறமைகளை மழுங்கடித்து உடல்ரீதியாகவும்‌ மனரீதியாகவும்‌ ஆரோக்கியமற்றவளாக ஆக்கிவிடுகிறது என்பதைப்‌ பெண்‌ என்கிற அளவில்‌ நான்‌ கண்டிருக்கிறேன்‌. ரிச்சர்ட்சனுக்கு எதுவும்‌ தெரியாமலிருக்காது. வேட்கையைப்‌ பொறுத்தவரையில்‌ பெண்‌ – கணவன்‌. மகன்‌, சகோதரன்‌ தந்தை போன்ற சமூகமயமாக்க பேதங்களை நனவிலியில்‌ கொண்டிருப்பவளாகத்‌ தெரியவில்லை. அச்சமடைதலின்‌ ஆழ்நினைவுகளில்‌ அவள்‌ பலமுறை கொல்லப்பட்டதும்‌ வன்முறைக்கு ஆளானதும்‌ தீவைத்துக்‌ கொளுத்தப்பட்டதும்‌ உறுப்புகள்‌ சிதைக்கப்பட்டதும்‌ மத பாவ புண்ணியங்களுக்கு. கடவுள்களின்‌ அச்சுறுத்தும்‌ சொல்லாடல்களுக்கு கல்லெறிகளுக்கு உள்ளானதும்‌ மனச்சிதைவின்‌ சங்கிலியில் பிணைக்கப்பட்டதுமான சமூகக்‌ கொடுரங்களின்‌ மையத்தில்‌ இறுக்கி வைக்கப்பட்டிருக்கிறாள்‌ என்ற பீதி அவள்‌ நனவிலியில்‌ புதைந்து கிடக்கிறது. அதனாலேயே பண்புப்பெயர்களின்‌ உறவுகள்‌ குறித்து அதற்காக அடக்கமுறும்‌ பாவனையை மேற்கொள்கிறாள்‌. இறுதியில்‌, தனது உடல்‌ குடும்பங்களுக்குள்‌ ஒடுக்கப்பட்டிருக்கிறது என்கிற நடைமுறை யதார்த்தத்திற்கு காலத்தில்‌ செவிமடுத்தும்‌ விடுகிறாள்‌. போக, புராதன பொது உடைமைப்‌ பெண்ணான அவளுக்குள்‌ ஆதிப்பாலியல்‌ எச்சங்கள்‌, கருஉற்பத்தி முறை தாண்டி, பிறகு அனைத்திற்கும்‌ வெளியே வேட்கையுடன்‌ தன்னிலை கொள்வது என்பது ஆண்களால்‌ ஒருபோதும்‌ பரிந்துரைக்கப்படவே முடியாத ஒரு தொல்‌ கானகச்‌செய்தி. அண்ட கோளங்களில்‌ உருவாகி பாலியல்‌ வகைமைகளை உடலின் பரப்பில்‌ வேட்கையாக உருவாக்கம்‌ செய்துகொள்ள உதவும்‌ பாலுறவை ரிச்சர்ட்சன்‌ இயந்திரங்களுக்கு மசகு பூசுவதுபோல குறுக்கிவிடுகிறார்‌.

குப்தா: ஒடுக்கப்பட்ட பெண்கள்‌ குறிப்பாக, இந்தியாவில்‌ தாழ்த்தப்பட்ட சமூகங்களில்‌ வாழும்‌ பெண்களை வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கும்‌ இந்திய சாதிய மனோபாவங்களை நாம்‌ எப்படி அணுக வேண்டியிருக்கிறது?

அபர்ணா: இந்திய உற்பத்தி உறவுகள்‌. நிலம்‌ மற்றும்‌ பொருளாதார எல்லைகள்‌ அனைத்துமே சாதிய அமைப்புக்குள்தான்‌ முடங்கிக்‌ கிடக்கிறது. ஒரு குறிப்பிட்ட சாதியினர்‌ தொழில்களைத்‌ தேர்ந்தெடுக்கும்போது பன்மைப்பட்ட கைமைகளையும்‌ விவசாயம்‌ என்று வரும்போது நிலத்தின்‌ மீதான பிதுரார்ஜிதத்‌ தன்மையையும்‌ கொண்டிருக்கிறார்கள்‌. நிலமற்ற தாழ்த்தப்பட்டவர்கள்‌ இவற்றுக்குள்‌ உள்வாங்கப்பட்டு, வெளியேற்றப்பட்டு வன்கொடுமைகளுக்கும்‌ ஆளாகிறார்கள்‌. இது இந்தியாவிற்குள்‌ மாபெரும்‌ விழிப்புணர்வாக மாற்றிப்‌ போராட வேண்டிய உள்காலனியப்‌ பிரச்சனை. உலகமயமாதலோடு இந்த உள்காலனிய மாற்றங்களையும்‌ இரண்டு வகையாக செயல்படுத்த நீண்ட தொடர்‌ போராட்டங்கள்‌ தேவைப்படுகிறது. இதற்குள்‌ பெண்ணுடல்‌ சமூக அந்தஸ்துடன்‌ மிக உயரிய நிலையில்‌ பாதுகாக்கப்படவேண்டும்‌. இந்த இடத்தில்‌ ‘யோனி பலம்‌ உலக நலம்’ என்று எழுதிய என்‌ ஸ்னேகிதியின்‌ கவிதை வரிகள்‌ நினைவிற்கு வருகிறது. எதிர்காலத்தில்‌ ஆண்கள்‌, பெண்களுக்காக அவர்கள்‌ பிறப்பு விகிதம்‌ குறைந்துவரும்‌ நிலையில்‌ தங்களுக்குள்‌ அடித்துக்கொண்டு சாவார்கள்‌ என்று நினைக்கிறேன்‌. இரண்டு பனித்துருவங்களுக்கு மத்தியில்‌ மெல்லப்‌ பரவும்‌ குளிர்ந்த காதல்‌ உணர்ச்சியை புத்துயிர்ப்பாக்கிக்‌ கொள்ளாமல்‌ ஏன்‌ இந்நிலங்கள்‌ வன்முறையாக்கிக்‌ கொள்கின்றன எனத்தான்‌ தெரியவில்லை. இரண்டு உலகப்போர்கள்‌. மற்றும்‌ விஞ்ஞானத்தின்‌ வழியின்‌ பேரழிவுகள்‌ பொருட்களின்‌ பெருக்கத்தால்‌ மனித மதிப்பு குறைவதாலும்‌ உலக மக்களிடையே பொதுவாகவே சாவு விருப்பம் அதிகரித்திருப்பதை இக்காலகட்டத்தில்‌ இனம்புரியாத அழுத்தமாக உணர முடிகிறது.

குப்தா: இன்றைய நவீனச்‌ சமூகத்திற்கும்‌ இயந்திரமயமான இயங்கியலுக்கும்‌ உள்ள வேறுபாடுகள்‌ தன்னிலையின்‌ காமம்சார்‌ உடலுக்கு வழங்கிவரும்‌ சேதிகளைப்பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம்‌. இந்தியாவைப்‌ பொறுத்தவரையில்‌ இத்தகைய காமம்‌ பற்றிய கலைப்‌ படைப்புகள்‌, கோவில்‌ சிற்பங்கள்‌, விளக்கங்கள்‌ கதையாடல்கள்‌ ஒரு காலத்தில்‌ அதிகமாகவே இருந்து வந்திருக்கிறது. ஆகவே இது தன்னளவில்‌ பாலியலின்‌ அனுபவத்தின்‌ தோற்றுவாயாகவும்‌ இருந்திருக்க வாய்ப்பிருக்கிறது. குடும்பம்‌, சாதி, தாண்டி அவற்றை வளர்த்தெடுக்க முடியாத சிக்கல்‌ என்னவாக இருக்கமுடியும்‌?

அபர்ணா: இடைக்காலத்தில்‌ அந்நிய ஆட்சிகளின்போது ஏற்பட்ட கலவரங்கள்‌, சீர்திருத்தங்கள்‌ மற்றும்‌ குடும்ப கட்டுப்பாடுகள்‌ போன்றவற்றுக்கு இடையே காமம்‌ மெதுவாக ஒடுக்கம்‌ கண்டிருக்கிறது என்றே நம்புகிறேன்‌. ஒரு காலத்தில்‌ இந்திய காம சாஸ்திரம்‌ எழுதிய வாத்‌ஸாயனார்‌ என்கிற மேதையை இன்றைய நெருக்கடியில்‌ தொலைத்து விட்டோம்‌. அவர்‌ மன்னர்களுக்காக கேளிக்கை புணர்ச்சிப்‌பிரதிகளைத்‌ தயாரித்தவர்‌ என்ற குறைபாடுடைய பார்வை இருக்கிறது. இன்றைய மேற்குலகில்‌ அவரது புணர்ச்சி விதிகள்‌ வெகுவாகக்‌ கடைபிடிக்கப்படுவதோடு பாட திட்டங்களுக்குள்ளும்‌ எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கின்றன. ஆனால்‌ இந்தியாவில்‌ அதை ஒரு ஆபாசப்‌பிரதி என்றே கட்டம்‌ கட்டி ஒரே சமயத்தில்‌ மேட்டுக்குடி மக்களுக்கு ஆதரவாகவும்‌ கீழ்மட்டத்தில்‌ குறிப்பாக உழைப்புச்‌ சக்திகளுக்கு அது மறைக்கப்பட்டும்விட்டது. இந்தியாவில்‌ இரண்டு நூற்றாண்டுகளாக ஆண்களுக்கான பாலியல்‌ மட்டுமே நியாப்படுத்தப்பட்டு பெண்களுக்கு இன்பம்‌ தரும்‌ கலையாக அறிமுகப்படுத்தப்படவில்லை. ஒரு பெண்ணுக்குக்கூட முழுதிருப்தி தராமல்‌ பல பெண்களை மணந்துகொண்ட ஆண்கள்‌ இங்குதான்‌ அதிகம்‌.
காதலும்‌ காமமும்‌ பேணப்படாத அகமணமுறையில்‌ சீரழிந்துவிட்ட இந்தியக்‌ கூட்டுக்குடும்ப, சாதிய பாலியல்களின்‌ கதை அறிவியல் பூர்வமற்றது. ஒருவகையில்‌ புலவர்களிடமும்‌ வணிகர்களிடமும்‌ கூலித்‌தொழிலாளிகளிடமும்‌ மற்றும்‌ நிலவுடைமை ஆணாதிக்கத்திடமும்‌ அதன்‌ வழியேயான அரசுடமையிடமும்‌ நம்பி ஒப்படைக்கப்பட்ட வீரியம் மிக்க பெண்களின்‌ மோசமான காதல்‌ தோல்விக்‌கணக்கு அளவிடமுடியாதது. அதற்குள்‌ ஒரு பாலியல்நீதி வைத்து எப்படிப்‌ பேச முடியும்‌?. நாம்‌ குறிப்பிடுவது மாதிரி முதலாளித்துவ வர்க்கத்திற்கு அடிமை ஆண்களையும்‌ பெண்களையும்‌ காமத்தின்‌ பேரளவு சுகிப்பின்றியே பெற்றுக்கொடுத்த ஒரு மறுவிளைச்சலைத்தான்‌ நாம்‌ மக்கள்‌ தொகை என்கிறோம்‌. அது இந்தியாவில்‌ கர்ப்பப்பை புரட்சி, மாறாக, கலவி இன்பத்திற்கான உச்சங்கள்‌ கூடிய ஆரோக்கியமான புத்துயிர்ப்பின்‌ சித்தாந்தம்‌ அல்ல. இக்காலங்களில்தான்‌ வாடகைத்‌ தாய்மார்கள்‌ அதிகரித்திருக்கிறார்கள்‌. வறுமை உள்ளிட்ட மூன்றாம்‌ உலகின்‌ பல பின்னணிகளும்‌ இன்றைய நவீன உயிரியல்‌ தொழில்நுட்பம்‌ வரையிலான புனைவுகள்‌ யாவும்‌ பண்பாட்டுத்‌ தளத்தில்‌ மோதிச்‌ சிதறுகின்றன. கீழைத்தேய ஆசியர்கள்‌ தாங்கள்‌ கண்டுபிடித்த பல நுட்பங்களை வசதியின்மை காரணமாக அனுபவிக்க முடியாமல்‌ அறிவுச்‌ சொத்தாக அதை மேலைச்‌ சமூகத்துக்கு விற்றுவிடுவது போலவே வாத்ஸ்யாயனாரின்‌ காமசாஸ்திரமும்‌ நம்‌ கைவிட்டுப்‌ போய்விட்டது.

குப்தா: பாலியல்பை மையமாக வைத்து மட்டுமே புரட்சிகரமான மாற்றங்களைக்‌ கொண்டுவர முடியும்‌ என்று நம்புவதைப்‌ போல்‌ இருக்கிறது உங்கள்‌ கூற்று.

அபர்ணா: இன்றைய நவீன உலகின்‌ மாற்றங்கள்‌ காமத்தின்‌ பண்பு மயமான அழகியலை நோக்கி கோட்பாட்டுத்‌ தளத்தில்‌ நகர்ந்திருக்கிறது. ஊடகங்கள்‌, வதிவிடங்கள்‌ மற்றும்‌ சாலைகள்‌ அனைத்தும்‌ அழகுறச்‌ செப்பனிடப்படுகின்றன. கடற்கரைகள்‌. பூங்காக்கள்‌, கேளிக்கை நிலையங்கள்‌, உணவு விடுதிகள்‌
போன்றவை மக்களின்‌ மனதில்‌ ஒரு பாலியல்‌ உருமாதிரிகளைத்‌ தூண்டி இருக்கின்றன. மேலும்‌ இப்படியான அழகியலும்‌ காமமும்‌ சாவு விருப்பமும்‌ நாடோடித்‌ தன்மைகளும்‌ அரசு சார்‌ வளங்களைக்‌ கோரிப்‌ பெற முயலுகின்றன. தனியார்‌ நிறுவனங்கள்‌ ஒருவித தரகுத்‌ தன்மையோடு மக்களின்‌ அடிப்படை
உணர்ச்சிகளான உணவு, உடை, இருப்பிடம்,காமம்‌ போன்றவற்றை சந்தைமயப்படுத்தி தீர்மானிப்பதில்‌ பெரும்‌ வலிமையாக மாறிவிட்டிருக்கின்றன. குடும்பத்திற்கு வெளியே மரபுசார்‌ பாலுணர்ச்சிகள்‌ அதீதப்‌ பெருக்கமடைந்து அதனுள்ளே முற்போக்காகவோ முறைசாராமலோ தகவமைந்தும்‌ இதனிடையே நடந்து வருகின்றன. இத்தகைய நிலையில்‌ எதன்‌ தலைமையிலும்‌ நீங்கள்‌ பூமியின்மீது நிலையான ஓரிடத்தில்‌ இருந்து ஒரு புரட்சியை மொத்தமாக சாதிக்க முடியாது. இன்று உலகமெங்கும்‌ மக்கள்‌ சதுக்கங்களில்‌ வந்து சத்தமிடுவதன்‌ மூலம்‌ நிகழும்‌ சம்பவங்கள்‌ அவர்களது பாலியல்‌ மற்றும்‌ ஆன்மீக நிலைப்பாட்டைக்‌ கடக்கும்‌ கேளிக்கைக்கான பொருள்வயமான தட்டுப்பாட்டைப்‌ பிரதிபலிக்கும்‌ முகமாகவே வெளிப்படுகிறது என்றே சொல்லலாம்‌. இப்படியான பல்லாயிரம்‌ பன்மைப்பட்ட புரட்சிகள்‌ உலகெங்கும்‌ வேறுவேறு காரணங்களுக்காக நடந்து கொண்டேதான்‌ இருக்கின்றன. முதலாளித்துவ அரசை அதன்‌ நிறுவனங்களை அல்லது ஏகாதிபத்தியத்தைத்‌ தாங்கள்‌ வாழும்‌ இடங்களிலேயே நெருக்கடிக்கு உள்ளாக்குவதன்மூலம்‌ அவர்களது தேவை பகிர்ந்தளிக்கப்படுவதை மக்கள்‌ உணர்ந்திருக்கிறார்கள்‌. அத்துடன்‌ அதிகாரங்களை வெளியேற்றி தங்களுக்கானதாகவும்‌ மாற்றியமைக்க முயலுகிறார்கள்‌. அமெரிக்கா மாதிரியான ஒற்றைமைய ஏகாதிபத்திய நிறுவனங்களுக்கு முந்தைய பனிப்போர்களுக்குப்‌ பின்பு உருவாகி இருக்கும்‌ பண்பாட்டு நெருக்கடி இது. ஆக, மூலதனம்‌ மக்களைக்‌ கைவிட்டு தனியாக நிலவமுடியாது என்பது இதன்‌ பாரதூரமான செய்தி. இதற்கிடையே தங்கள்‌ வாழ்விடங்களில்‌ இருந்துவரும்‌ மரபான உடைமைப்‌ பார்வைகளை முதலில்‌ உடலில்‌ இருந்தே அடையாளம்‌ காண்கிறார்கள்‌. சொத்துகள்‌ பொதுவுடைமை ஆகவேண்டுமெனில்‌ உடல்கள்‌ பொதுவுடைமை ஆகவேண்டும்‌. உடல்களின்‌ வித்தியாசங்கள்‌ வேட்கையின்‌ சுதந்திரத்தை முன் நிபந்தனையின்றி பகிர்ந்து கொள்ளும்போது உடைமைகளின்‌ குவிப்பு பொருளற்றதாகவிடும்‌ என்பது ஒரு கணிப்பு இத்தகைய பார்வையில்‌ காமம்‌ தன்‌ நிலையற்ற தன்மையாலும்‌ நிறுவனமயமாக்கப்படமுடியாத ஆற்றலில்‌ இருப்பதாகவும்‌ அதிகாரம்‌, வறுமை. மற்றும்‌ பல்வேறு அழிவு சக்திகளின்‌ இடையே தன்னைப்‌ புதுப்பித்துக்கொண்டு வருவதாலும்‌ அவை ஒரு புரட்சிகரமான பாத்திரத்தை அனைத்துத்‌ தளங்களிலும்‌ முறைசாராமல்‌ தூண்டி நிற்கும்‌ என்பதாகவே நீள்கிறது எனது ஆய்வுகள்‌. பிறகு பாலியல்‌ எப்போதும்‌ எல்லா கட்டமைப்புகளுக்கும்‌ வெளியேதான்‌ உள்‌ உந்தம்‌ கொள்கிறது. இந்தியாவில்‌ சமயமும்‌ ஆன்மீகமும்‌ பெண்ணுடலை ஆராதனை செய்வது அயோக்கியத்தனமானது. அவைகள்‌ பெண்ணின்‌ வேட்கையை உள்ளொளி தரிசனமரபில்‌ உயர்வு நவிற்சியாக அடைத்துவைக்கின்றன.

குப்தா: முறைசாராக் காமத்தை வன்முறையாக ஒரு ஒழுங்கிற்குள் கொண்டுவரும்போது தான் சமூகம், ஏற்றத்தாழ்வுகள், நீதியற்ற சூழல், உடைமை பெருக்கங்கள் உண்டாகிறது என்பதை விளக்கியிருக்கிறீர்கள்

அபர்ணா: காமமும்‌ மூலதனத்தைப்‌ போலவே நபர்‌ சாராதது என்பதால்‌ இவ்விரண்டுக்குமிடையே ஏற்படும்‌ மோதல்கள்‌ வழிதான்‌ எதிர்காலச்‌ சமுதாயம்‌ சில தீர்வுகளையும்‌ தோற்றுவாய்களையும்‌ நோக்கி நகரும்‌ என நம்புகிறேன்‌. அதற்கு ஆதாரமாக பெண்களே இருப்பார்கள்‌. பசுக்களை பீடபூமியிலிருந்து பிரிக்க முடியாது என்ற நீட்ஷேயின்‌ கூற்றைப்போலவே அனைத்து மாற்றங்களில்‌ இருந்தும்‌ பெண்களை பிரித்துவிட முடியாது.

குப்தா: நல்லது.

***

யவனிகா ஸ்ரீராம்

RELATED ARTICLES

1 COMMENT

  1. இரண்டாம் சுற்று யவனி. அருமை. நாவல் முயற்சி கைகூடிய வாழ்த்துக்கள். குமார தாஸ் குப்தாவை நேற்றுப் பார்த்தேன். உங்களைக் கேட்டதாகச் சொல்லச் சொன்னார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular