Friday, March 29, 2024
Homesliderஒடுக்கப்பட்டவர்களுக்கான அரங்கு – 8

ஒடுக்கப்பட்டவர்களுக்கான அரங்கு – 8

‘Rashomon’ விளைவு

Rashomon – 1950இல் வெளிவந்த ஜப்பானியத் திரைப்படம். இதன் இயக்குனர் Akira Kurosawa. ஐப்பானிய நிலப்பிரபுத்துவக் காலகட்டத்தின் கதைக்களம்.

சாமுராய் ஒருவனின் மனைவி கொள்ளையர்களால் வன்புணர்வுக்கு உட்படுத்தப்படுகிறாள். நீதிமன்ற வழக்கு நடைபெறுகிறது. இந்தச் சம்பவத்துடன் தொடர்புபட்ட முக்கிய நபர்கள் ஒவ்வொருவரின் கோணத்திலும் தனித்தனியாக மீள்காட்சிகளோடு கதை சொல்லப்படுகிறது. அதாவது குற்றவாளி, பாலியல் வன்புணர்வுக்கு உட்பட்டவர், கணவன், நேரடிச் சாட்சி என நான்கு பாத்திரங்களின் அனுபவக் கோணங்களினூடு கதை சொல்லப்படுகின்றது.

வானவில் அரங்கின் உத்திகளில் ஒன்று இந்தத் திரைப்படத்தின் பெயரால் அழைக்கப்படுகின்றது. அது வானவில் அரங்கின் வினைத்தாக்கம் மிக்க உத்தியாகப் பயன்படுத்தவும்படுகிறது. இந்த திரைப்படக் கதைசொல்லல் உத்தி நேரடியாக வானவில் அரங்கத்திற்குள் Boalஇனால் உள்வாங்கப்பட்டிருக்கின்றது.


இந்த உத்தியில் பல்வேறு திரைப்படங்கள் உலகெங்கும் வெளிவந்திருக்கின்றன. அண்மையில் வெளிவந்த ‘ Anveshanam ‘ மலையாளத் திரைப்படமும் இந்த உத்தியில் அமைந்ததே. குழந்தைகள் மீதான பெரியவர்களின் வன்முறையும் அந்த வன்முறைக்கான தண்டனையிலிருந்து தப்பிக்கொள்ளப் பெரியவர்கள் மேற்கொள்ளும் பிரயத்தனங்களும் இப்படத்தின் மையப்பேசுபொருள். காவல்துறை, மருத்துவத்தாதி, தாய், தகப்பன், நண்பர் என ஐந்து தரப்புக் கோணங்களில் நடந்திருக்கக்கூடிய சம்பவம் மீள்கதைசொல்லல் மூலம் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

வானவில் வடிவத்திற்கு பரந்துபட்ட ஆற்றுகை முறைமைகள் மற்றும் நுட்பமான உத்திகளை Boal பரிந்துரைத்திருக்கின்றார். ஒடுக்கப்பட்டோருக்கான அரங்கின் முன்னைய வடிவங்களிலிருந்து பல வழிகளில் மாறுபட்ட புறச்சூழல்களைக் கருத்திற்கொண்ட உத்திகள் இவை.

வானவில் அரங்க உத்திகள்:

• The ‘Normal mode’ – சாதாரண நிலை:
ஒரு சூழ்நிலை அல்லது அனுபவம் கட்டமைக்கப்பட்ட இயல்பான முறைமையில் வெளிப்படுத்தப்படும். யதார்த்தவாதம் ஒரு உத்தியாக பயன்படுத்தப்படுவதாக அர்த்தம் கொள்ள வேண்டியதில்லை. வாழ்வியல் சூழல் அல்லது அனுபவம் அல்லது நிகழ்வு ஒன்றின் யதார்த்தத்தை வெளிப்படுத்துகின்ற நிலை. இது ஒடுக்கப்பட்டோருக்கான அரங்கின் பாரம்பரிய வடித்தை ஒத்தது. இருவேறு விருப்புகள் மோதலுக்குள் செல்கின்றன. மோதல் ஒரு நெருக்கடியைத் தோற்றுவிக்கின்றது. நெருக்கடி புதிய வாய்ப்பினை அல்லது தீர்வைக் கண்டடைவதில் முடிவடைகிறது.

• The ‘Breaking the oppression’ ஒடுக்குமுறையைத் தகர்த்தல்:

இந்த உத்தி, சூழ்நிலையை மாற்றுவதற்கு முனைவதாகும். மாற்றம் சாத்தியம் இல்லையெனில் அதனை ஆற்றுகையாக மேடையேற்றுவதில் பயனில்லை என்பதற்கமைய இவ்வுத்தி எது நிகழ்ந்தது என்பதை விடுத்து எது நிகழ்ந்திருக்க வேண்டும் என்ற அடிப்படையில் சூழ்நிலையை மீள் உருவாக்கம் செய்கிறது.

• The ‘stop and think’- நிறுத்திச் சிந்தித்தல்
இது பேசப்படாத எண்ணங்களையும் உணர்வுகளையும் கண்டடையும் முனைப்புச் சார்ந்தது. அரங்கின் ‘ஜோக்கர்’ (நெறியாளர்) ‘ஸ்ரொப்’ கட்டளையைப் பயன்படுத்தி நடிகர்கள் தவிர்க்கும் அல்லது பேசாது கடந்து செல்லும் விடயங்களில் கவனம் செலுத்த வைப்பார். அதன் மூலம் முன்னர் புரிந்துகொள்ளத் தவறிய விடுபட்ட விடயத்தைக் காணவும் புரிந்துகொள்ளவும் மாற்றம் நோக்கிச் சிந்திக்கவும் வழிகோலப்படும்.

• The ‘softly softly’ – மென்நிலை
இந்த உத்தியானது, உணர்வுக் கொந்தளிப்புக்குப் பதிலாக பிரதிபலிப்பினை ஊக்குவிப்பது. இதன் மூலம் பார்வையாளர்களை ஆற்றுகையாளர்களாக அரங்கத்திற்குள் பங்கேற்கச் செய்தல். அதாவது Spect actorsஐ Actor ஆக பங்குபெறச் செய்தல்.

• The ‘lightning forum’ – மின்னல் அரங்கு
ஒரு சிக்கலுக்கு வெவ்வேறு சாத்தியமான தீர்வுகளை விரைவாகக் கண்டடைய அனுமதிக்கிறது.

• The ‘agora’ – அகோர நிலை
அகமுரண்பாடுகளை வெளிப்படுத்தப் பயன்படுத்தப்படுகிறது. ஆற்றுகையாளர்கள் வெவ்வேறு விருப்பங்களின் பிரதிநிதிகளாக அல்லது protagonist இன் அங்கமாக இருந்து உரையாடல் அல்லது மோதலில் ஈடுபடுகின்றனர்.

• The ‘fair’ mode – நியாய நிலை
பல வகையான மெருகூட்டல்களுக்கு இடமளிக்கின்ற உத்தி. இதன் முக்கிய நோக்கங்களில் ஒன்று மட்டுப்படுத்தப்பட்ட பார்வையாளர்களைக் கொண்டிருத்தல். அதனால் ஆற்றுகையாளர்கள் பதற்றமற்றிருப்பர்.

• The ‘three wishes’ – மூன்று விருப்பங்கள்
விருப்பங்களுக்கேற்ப சூழல்கள் முதன்மைப்பாத்திரத்தினால் மாற்றத்திற்கு உட்படுவதை அனுமதிக்கிறது இந்த உத்தி. முதன்மைப்பாத்திரம் உறுதியான விருப்பங்களை இன்னமும் கொண்டிருக்கவில்லை என்பதோடு குறிப்பிட்ட சிக்கல் ஒன்றிலிருந்து அவர் விடுபட விரும்புகிறார் என்பது இவ்வுத்தி மூலம் வெளிப்படுத்தப்படும்.

 The ‘disassociation’ – துண்டித்தல்
அக-உரையாடல் அல்லது அக-உணர்வு வெளிப்பாட்டினையும், புற-உரையாடலையும் விருப்பங்களின் செயற்பாடுகளையும் ஆற்றுகையின் படிநிலைகளில் வேறுபடுத்துகின்றது -பிரிக்கின்றது. முதலில் ஆற்றுகையாளர்கள் தத்தமது பாத்திரங்களின் அகவயப்பட்ட எண்ணங்களை ஒரேநேரத்தில் குரற்பயிற்சி செய்வர். பின்னர் ஒருவரோடொருவர் பேசிக்கொள்வர். இறுதியில் பேசிக்கொள்ளாமல் ஆற்றுகை செய்வர்.

 The ‘playing to the deaf ’ – செவிப்புலனற்றோருக்காக ஆற்றுகை:
இந்த உத்தி முழுக்காட்சியையும் வார்த்தைகளின்றி ஆற்றுகை செய்வதைக் குறிக்கின்றது. இது அதிகம் உரையாடலில் தங்கியிருக்கும் காட்சிகளை கூர்மைப்படுத்துவதற்கான வழிமுறையாகும்.

மேற்சொன்ன பெரும்பாலான அனைத்து உத்திகளும் மேம்படுத்தல் (மெருகூட்டல்) செயற்பாடுகளுடன் தொடங்கும். முதன்மைப்பாத்திரம் பார்வையாளர்களுடன் (Spect actors) இணைந்து காட்சியை ஆற்றுகை செய்வார். இச்செயல்முறையில் உணர்வுபூர்வமாகத் தாம் செய்யும் பாத்திரத்துடன் ஒன்றிப்போகும் திறனுடையவர்களாக ஆற்றுகையாளர்கள் இருத்தல் வேண்டும். அதாவது பாத்திரத்துடன் தம்மை அடையாளப்படுத்தும் வகையில், பார்வையாளரின் மனதில் அதிர்வுகளை ஏற்படுத்தும் வகையில் ஆற்றுகையை நிகழ்த்த வேண்டும்

உருவகங்கள்
இந்த உத்திகள் பலவற்றில் உருவகங்களும் பயன்படுத்தப்படுகின்றன. ஆற்றுகையாளர்கள் சிலை அல்லது ஓவியமாக ஒரு சூழ்நிலையை வடிவமைப்பர். அந்த உருவகங்கள் மூலம் நிலவுகின்ற ஒடுக்குமுறைச் சூழல் அல்லது அடைய விரும்புகின்ற விடுதலையின் ‘மாதிரி’ காட்சிப்படுத்தப்படும். அக-ஒடுக்குதலுக்குள்ளான பங்கேற்பாளர்கள் உருவகங்களை வடிவமைப்பர். தாம் சுய-ஒடுக்குதலுக்கு உள்ளாகியிருந்ததை அல்லது ஒடுக்குமுறைக்கு முற்றுப்புள்ளி வைத்த தருணத்தை உருவகங்கள் மூலம் வெளிப்படுத்துவர். அதுவொரு இலட்சிய நிலையின்பாற்பட்ட உருவகமாக இருக்காது. கற்பனையான அல்லது நடைமுறைச் சாத்தியம்மிக்க இலக்குகளைக் கொண்ட விருப்பங்களை (Desires) பிரதிபலிப்பதாக அமையும் என்கிறார் Boal.

உளவியல் துறைக்கும் நாடகத்துறைக்குமான பாலம்

மனித உளவியலையும் மனிதர்கக்கிடையிலான உறவுநிலை சார்ந்த உளவியலையும் ஆராய்வதற்கும் இந்த உத்திகள் பயனுடையவை. அந்த வகையில் உளவியலாளர்களின் கவனத்தையும் இது ஈர்த்துள்ளது. 1989இல் psycho dramaவின் தந்தை என விளிக்கப்படும் Jacob Moreno -நூற்றாண்டு விழவை முன்னிட்டு அம்ஸ்டர்டாமில் நடைபெற்ற உளவியல் மாநாட்டில் Boal, வானவில் அரங்கு பற்றி உரையாற்றியதாகத் தகவல்கள் கூறுகின்றன. வானவில் அரங்கின் குறிப்பிடத்தக்க சில உத்திகளை உளவியல் துறைக்கும் நாடகத்துறைக்குமான பாலம் எனச் சொல்லலாம். இருப்பினும் உள ஆற்றுப்படுத்தலுக்குரிய உத்திகள் மனிதர்களைச் சமூக மயப்படுத்தும் நேரடியான நோக்கினைக் கொண்டிராது. மனிதர்கள் தனிப்பட்ட ரீதியில் தமக்குள் எத்தகைய சாதகமான மாற்றங்களைக் கொண்டுவரமுடியும், சடங்குபூர்வமானதும் சட்டகபூர்வமான நடைமுறைகளிலிருந்து எவ்வாறு வெளிவரமுடியும் என்பவை பற்றியது உளவியல் அணுகுமுறை.

உளவியல்துறைக்கு அப்பால் நாடக, திரைப்பட எழுத்துரு மற்றும் அவற்றின் பாத்திர உருவாக்கத்திற்கும் வானவில் உத்திகள் பயன்படக்கூடியன. அதேபோல் இலக்கிய, நாடகப் பிரதிகளில் பாத்திரங்களின் குணாதிசயங்களை பகுப்பாய்வு செய்யவும் இதன் உத்திகளைக் கைக்கொள்ள முடியும். எடுத்துக்காட்டாக இப்சனின் நாடகப் பாத்திரங்கள் பெரும்பாலும் மனிதர்களுக்கிடையிலான உறவு, அதிலும் ஆண்-பெண் உறவு, சமூக உறவு சார்ந்தவை. குறிப்பாக முதன்மைப் பாத்திரங்கள் சிக்கலானதும் நுணுக்கமான பரிமாண இயல்புகளைக் கொண்டவை. இரட்டை நோக்குடைய வார்த்தைகளை உதிர்க்கின்ற பாத்திரங்கள். இப்சனின் பாத்திரங்களைப் புரிந்துகொள்வது கடினமானது. அந்தப் பாத்திரங்கள் நேரடியாகப் பேசுகின்ற அர்த்தங்களைத் தாண்டி உள்அர்த்தங்களை உற்று உணர வேண்டும். இத்தகு இலக்கியப் பிரதிகளின் பாத்திரங்களைப் உற்றுணரவும் பகுப்பாய்வு செய்யவும் வானவில் உத்திகள் பயன்படக்கூடியன.

மனித இயல்பின் பல்பரிமாண வெளிப்பாடு
மனித இயல்புக்குள் இருக்கக்கூடிய அனைத்து விதமான நுணுக்கமான பக்கங்களையும், குறிப்பாக ஒடுக்கப்படுகின்ற, தளைகளுக்குட்பட்டிருக்கின்ற பக்கங்களை வானவில் உத்திகளின் மூலம் வெளிக்கொணர முடியும். ஆரம்பத்தில் முதன்மைப்பாத்திரத்தின் குண இயல்பில் மேவிநிற்கின்ற, குறிப்பிட்ட சூழலில் ஆதிக்கம் செலுத்துகின்ற இயல்பின் பக்கங்கள் வெளிப்படும். அடுத்தடுத்த படிநிலைகளில் மெருகூட்டலுக்கும், சூழ்நிலைகளுக்குப் பொருத்தமான உத்திகள் உள்ளீடு செய்யப்பட்டு அரங்கம் நகர்த்தப்படும் போது குண இயல்பின் ஏனைய பக்கங்கள் வெளிப்படும்.

Boal இதனை சூரிய வெண்ணொளி மழைத்துளிகளை ஊடறுத்துச் செல்லும் போது ஏழு நிறங்களும் தோன்றும் ஒளியியல் நிகழ்வுக்கு ஒப்பிடுகிறார். அதாவது முதன்மைப்பாத்திரத்திடம் ஆதிக்கம் செலுத்துகின்ற குண இயல்பு எதிர்-பாத்திரம், துணைப் பாத்திரங்களுடன் முட்டிமோதி வெளிப்படும் போது பல்பரிமாணமுடைய குணஇயல்புகள் பிரதிபலிப்பதற்கு வழிகோலப்படுகின்றது என்பதாகும்.

தொடரும்.. (இந்த தொடரை முழுமையாக வாசிக்க..)


ரூபன் சிவராஜா – தொடர்ந்து அரசியல் கட்டுரைகளை எழுதி வரும் இவர் கட்டுரைகள் போக கவிதை, பாடல்களும் எழுதி வருகிறார். வசிப்பது நார்வேயில். இவரது முதல் நூல் – அதிகார நலனும் அரசியல் நகர்வும் அண்மையில் வெளியானது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular